6 ஆகஸ்ட், 2010

பாதுகாப்பானதா ரயில் பயணம்?

பிப்ரவரி 13, 2009, வெள்ளிக்கிழமை.

பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ். இந்திய ரயில்வேத் துறை விபத்தின்றி செயல்பட மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெருமிதம் ஒளிர்ந்தது. . நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவரான லாலுவின் பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் தொனியைக் கொண்டிருந்தது. அவருடைய பெருமிதத்துக்கும், சவாலுக்கும் காரணமிருந்தது. கடந்து போயிருந்த 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் பெரிய அளவில் ரயில் விபத்து ஒன்றுகூட நாட்டில் நடைபெற்றிருக்கவில்லை. ஆனால்-

அவரது உரை முடிந்த சில மணி நேரங்களில் புவனேஸ்வருக்கு 120 கிலோ மீட்டர் வடக்கே அந்தப் பெரிய விபத்து நிகழ்ந்தது. இந்திய ரயில்வேயின் பெருமைக்குரிய ரயில்களில் ஒன்றான கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸின் 14 பெட்டிகள் தடம்புரண்டன. ஹவுராவிலிருந்து வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பிய அந்த ரயில், இரவு 7.50 அளவில் விபத்துக்குள்ளானது.. சம்பவ இடத்திலேயே 14 பேர் மரணம். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்கள்.

அந்த விபத்து ஒரு தொடக்கம்தான். அதைத் தொடர்ந்து, கடைசியாக அண்மையில் ஜூலை 19 அன்று, மேற்குவங்காளத்தின் சைந்தியாவில் நடந்த உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் விபத்துவரை மொத்தமாக 13 பெரிய விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. .

2010ன் தொடக்கமே இந்திய ரயில்வேக்கு மோசமானதாக அமைந்தது. புத்தாண்டின் இரண்டாம் நாளில், உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே பனி காரணமாக மூன்று விபத்துகள். மறுநாளும் கூட அருணாச்சல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. அம்மாதத்திலேயே மேலும் மூன்று விபத்துகள். நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 11 விபத்துகள். இதற்கு முன் எப்படி என்று பார்த்தோமானால் ஆண்டுக்கு 5 பெரிய விபத்துகள் என்பதுதான் அதிகபட்சம். இந்திய ரயில்வே தனது வரலாற்றில் இவ்வருடம் விபத்துக்களின் எண்ணிக்கையில் சாதனை – மன்னிக்கவும் – வேதனை படைத்திருக்கிறது!

விபத்துகளால் ஏற்படும் பொருளிழப்பைக் கூட விட்டுவிடலாம். மனித உயிரிழப்புக்கு எதைக்கொண்டு ஈடு செய்ய இயலும்? தொடர்ச்சியாக நடந்துவரும் ரெயில் விபத்துகள், மற்றும் விபத்துக்களைக் குறிவைத்து நடத்தப்படும் நாசவேலைகளின் காரணமாக, இனி ரயில் பயணங்கள் பாதுகாப்பானவைதானா? என்ற கேள்வியை ஒவ்வொரு ரயில் பயணியும் தனக்குள்ளே கேட்டுக்கொள்ளும் சூழல் இன்று நிலவுகிறது.

இப்படி அடிக்கடி விபத்துகள் ஏற்பட என்ன காரணம்?


ஊழியர்கள்

2003ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ்குமார் . பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். அதில் “விபத்துகள் மூன்றில் இரண்டு ஊழியர்களின் தவறுகளால் நிகழ்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழியர்கள் தவறு செய்ய அவர்களது பணிச்சுமையும் ஒரு காரணமாக இருக்கலாம். உலகெங்கும் டிரைவர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் (வாரத்துக்கு 36 மணி நேரம்) என்றிருக்கையில், ஒரு இந்திய ரயில்வேயின் டிரைவர் குறைந்தபட்சம் 10 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. டிரைவர்கள் மட்டுமல்ல, டிராஃபிக் ஊழியர்களும், கார்டுகளும், கேட்மேன்களும் கூட 12 மணிநேரம் வேலைவாங்கப்படுவது சகஜமாக இருக்கிறது.

மற்ற வேலை மாதிரி இல்லை ரயில்வே வேலை. ஒரு ஊழியர் தொடர்ச்சியாக 12 மணி நேரம் வேலை பார்த்தால், அவரை விடுவிக்க இன்னொரு ஊழியர் வந்தாக வேண்டும். வரவேண்டிய ஊழியர் ஏதோ தனிப்பட்ட காரணங்களால் வர இயலவில்லை என்றால் அப்படியே விட்டு விட்டு போக முடியாது. ஏற்கனவே வேலை பார்த்த ஊழியர், அடுத்த 12 மணி நேரமும் சேர்த்து 24 மணி நேரமும் விழித்திருக்க வேண்டிய நிலை. ரயில்வே பணியாளர்களிடம் பேசியபோது 36 மணி நேரங்கள் தொடர்ச்சியாக விழித்து வேலை பார்ப்பதெல்லாம் சகஜம் என்கிறார்கள்.

ஆள்பற்றாக்குறை

ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க காலியாக இருக்கிற பணியிடங்களை நிரப்பினாலே போதும். இந்திய ரயில்வேயில் 89,000 காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 20,000 பணிகள் பாதுகாப்பு தொடர்பானவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் காலியிடங்கள் இதைவிட அதிகம் என்கிறார் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் யூனியனின் (டிஆர்.இ.யூ) செயல் தலைவரான இளங்கோவன். “தோராயமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 ஆயிரம் இடங்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருப்பவை.” என்கிறார். தனது கூற்றுக்கு ஆதாரமாக ரெயில்வே அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசியதைக் குறிப்பிடுகிறார்.

தெற்கு ரயில்வேயில் மட்டுமே பாதுகாப்பு தொடர்பான பணிகளில் 6000 காலியிடங்கள். டிராக்மேன் உள்ளிட்ட ‘டி’ பிரிவு பணியிடங்கள் 35,000 காலியாக இருக்கின்றன..
ஒருகாலத்தில் 20 லட்சம் ஊழியர்கள் இருந்த ரயில்வேயில் இன்று 13 லட்சம் பேர்தான் பணியாற்றுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன

தண்டவாளங்கள்

தண்டவாளங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் நிலைமை கவலை தருவதாகவே இருக்கிறது.. விழுப்புரம் அருகே ரெயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஈரோடுக்கு அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டது. சென்னைக்கு அருகே பட்டாபிராம் என்ற இடத்தில் சிமெண்ட் ப்ளேட் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோவை அருகே அடுத்தடுத்து ரெயில்களை கவிழ்க்க தொடர் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சதித்திட்டங்கள் ஒருபுறம் இருக்க தண்டவாளத்தில் விரிசல் காணப்படுவதும் ரயில் பயணங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் 32க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு கடந்த ஜூலை 22, விடியற்காலை ஒரு மணியளவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே நிகழ்ந்த சம்பவத்தை சொல்லலாம் பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்துக்கு மேலே பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று ரயிலில் கடுமையான அதிர்வு ஏற்பட, ரயிலின் டிரைவர் உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தற்காலிகமாக அது சரிசெய்யப்பட்டு, வந்துகொண்டிருந்த ரயில்கள் மிக குறைவான வேகத்தில் அவ்விடத்தை கடந்தன. விரிசலுக்கு நாசவேலையெல்லாம் காரணமில்லை. வெல்டிங் செய்யப்பட்டதில் ஏற்பட்ட பழுதுதான் காரணமாம்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று சரக்கு ரயில்களில் ஏற்றப்படும் அளவுக்கு அதிகமான சுமை. ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தைச் சந்தித்து வந்த இந்தியன் ரயில்வே முதல் முறையாக லாலு அமைச்சராக இருந்த போது லாபம் ஈட்டியது. அதற்குக் காரணம் சரக்குப் போக்குவரத்து. அப்போதிருந்து ரயில்வே நிர்வாகம் சரக்குப் போக்குவரத்தின் மீது கவனத்தைத் திருப்பியது. நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிக அளவு எடை வேகன்களில் ஏற்றப்படுவதாகச் சொல்லப்படுகிறது. விளைவு தண்டவாளத்தில் விரிசல்.

இந்தப் பிரசினையை ஆராய்ந்து ரயில்வே வெளியிட்ட ஆய்வறிக்கை சரக்கு ரயில்களுக்குத் தனிப்பாதை என்ற தீர்வை முன்வைத்தது. ரயில்வே அமைச்சகமும் இந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டு 2007-08 பட்ஜெட்டில் தனி இருப்புப்பாதை திட்டத்தை அறிவித்தது. ஆயினும் இதனை நிறைவேற்றுவதில் அது முனைப்புக் காட்டவில்லை

விரிசலுக்கான மற்றொரு காரணம், ஒன்றன் பின் ஒன்றாகக் குறைந்த இடைவெளியில் செல்லும் அதி வேக ரயில்கள். கடந்த சில ஆண்டுகளில் 82 விரைவு ரயில்கள் அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த அதி வேக ரயில்களின் வேகத்தைத் தாங்கும் சக்தி தற்போதுள்ள தண்டவாளங்களுக்கு இல்லை.2020க்குள் பயணிகள் வண்டிகளின் வேகம மணிக்கு 130 கிலோ மீட்டரிலிருந்து 200 கிலோ மீட்டர் வரை இருக்குமாறு அதிகரிப்பதைத் தனது லட்சியமாக அறிவித்திருக்கிறது ரயில்வே. தண்டவாளங்களைப் பலப்படுத்தாமல் அல்லது மாற்றாமல் இதைச் செய்தால் அது தற்கொலை முயற்சியாக முடியும்.

ரோந்துப் பணியை மேற்கொள்வதன் மூலம் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது சதி வேலைகள் நடந்திருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறையால் இந்தப் பணி சரியாக நடப்பதில்லை.

மனித வளம் குறைவாக இருக்கும் நாடுகளில் இது போன்ற பணிகளை மேற்கொள்ள அல்ட்ராசானிக் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. நமது ரயில்வேயில் அண்மைக்காலத்தில்தான் (2000க்குப் பிறகு) இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் நுட்பம்

’நகரும் அருங்காட்சியகங்கள்’ (Museum on the move) என்று வெளிநாட்டவர் நமது ரயில்களைக் கேலி செய்வதுண்டு. அதற்குக் காரணம் அவை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக இந்த நேரம் (Real Time) எந்த ரயில் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய GIS, GPS. என்ற இரண்டு சிஸ்டம்கள் உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. GIS கணினி சார்ந்தது. GPS செயற்கைக் கோள் சார்ந்தது, இவற்றை ரயில் என்ஜின்களில் பொருத்திவிட்டால் தான் சென்று கொண்டிருக்கும் தண்டவாளத்தில் வேறு ஏதேனும் ரயில் வந்து கொண்டிருக்கிறதா, நின்று கொண்டிருக்கிறதா என்பதை ரயில் ஓட்டுபவர் கண்டு கொள்ள முடியும். மூடூபனிக்காலத்திலும் சிக்னல்கள் தெளிவாகத் தெரிய LED விளக்குகளைப் பயன்படுத்தலாம். .

இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை முன்வருமாயின் விபத்துக்களை மட்டுமல்ல, நிர்வாகக் குளறுபடிகள் பலவற்றையும் கூட தவிர்க்கலாம்.

அரசியல் அக்கப்போர்

ரயில் போக்குவரத்துத் துறையை விபத்தின்றி நடத்த வேண்டிய பொறுப்புக் கொண்ட அமைச்சர் மம்தா பானர்ஜி இது போன்ற பிரசினைகளையோ, தீர்வுகளையோ பற்றிப் பேசாமல், விபத்துகளை அரசியலாக்கி வருகிறார். அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் நடைபெற்றிருப்பதால், “எதிர்க்கட்சிகளின் சதி”யென்று மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்டுகளின் மீது பாய்கிறார். லாலு அமைச்சராக இருந்த காலத்தில் நிர்வாகம் சரியில்லை என்று வெள்ளை அறிக்கை சமர்ப்பித்ததில் தொடங்கி மம்தாவின் ரயில்வே நிர்வாகம் என்பது அவரது அரசியலையொட்டியே நடைபெறுகிறது

ஒரு விபத்து நடந்தாலே தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடும் லால்பகதூர் சாஸ்திரி காலத்து அரசியல் மரபு இன்று இல்லை. ஆயினும் சுதந்திரம் பெற்றதிலிருந்தே எந்த ரயில்வே அமைச்சரின் நிர்வாகக் காலத்திலும் இவ்வளவு எண்ணிக்கையிலான விபத்துகள் நடந்ததில்லை என்பதை மம்தாபானர்ஜி முதலில் உணர்ந்தாக வேண்டும்.

’விபத்தில்லா ரயில்வே. தவறில்லா கருவிகள்’ என்பதே தனது லட்சியமென்று அறிவித்து, இந்த இலக்கை 2020க்குள் அடைய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் பேசிவருகிறது. அதை அடைய வேண்டுமானால் தவிர்க்கப்பட வேண்டியது அரசியல் அக்கப்போர். செய்யப்பட வேண்டியது ஆக்கபூர்வமான சீரமைப்பு.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

ஏழையின் உயிர் என்றால் அத்தனை அலட்சியமா?

நான் அடிக்கடி சென்னைக்கு வேலைநிமித்தமாக வந்து செல்பவன். திட்டமிடப்படாத பயணம் என்பதால் பெரும்பாலும் ‘அன்ரிசர்வ்ட்’ பெட்டிதான். ரயில் நிலையங்களுக்குள் நுழையும்போது கவனித்திருக்கிறேன் பணக்காரர்கள் பயணிக்கக்கூடிய பெட்டிகள் பெரும்பாலும் நிலையத்துக்குள் நுழைந்ததுமே ஏறுவதற்கு வசதியாக . ரயிலின் மத்தியிலும், ஏழைகள் பயணிக்கும் அன் ரிசர்வ்ட் பெட்டிகள் முதலிலும், கடைசியிலுமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. போர்ட்டர் வைத்து சுமைகளை கொண்டு வரக்கூடிய வசதி படைத்தவர்களுக்கு நிலையத்தில் நுழைந்ததுமே பெட்டி தயாராக இருக்கும். சுமைகளை தானே சுமந்து செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பல மீட்டர் தூரம் நடந்து சென்று முதல் பெட்டியிலோ, கடைசி பெட்டியிலோ ஏறவேண்டும்.

விபத்துக்கள் நடக்கும் போதும் அதிகம் பாதிக்கப்படுபவை முத்லிலும் கடைசியிலும் இருக்கும் பெட்டிகள்தான். என்றுமே இந்தியாவில் ஏழைகள் உயிர் மட்டும் மிக மலிவு! .

தினசேகரன், போத்தனூர்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2:

கடந்த இருபதாண்டுகளில் ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் சராசரி எண்ணிக்கை: வருடத்துக்கு 186.

கடந்த 9 மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் : 233 பேர்


எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :

இந்திய ரயில்வேயின் மொத்த இருப்புப்பாதை 64,000 கி.மீ

நவீன பாதுகாப்பு கருவிகள் கண்காணிக்கும் தூரம் சுமார் 1,700 கி.மீ மட்டுமே!


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

“அவர்கள் (மார்க்சிஸ்ட்கள்) மாநிலத்தின் வளர்ச்சியைத் திட்டமிடுவதிலை.ரயில் தண்டவாளங்களின் இணைப்பை அகற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில ‘தோழர்’கள் அதை அறிவியல்ரீதியாகத் திட்டம தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்”
-மம்தா பானர்ஜி

“அமைச்சரின் கவனம் முழுவதும் வேறெதிலோ (மே.வங்க அரசியலில்) இருக்கிறது. நாடு அதன் பலனை அனுபவிக்கிறது”
-சீதாராம் யெச்சூரி

(நன்றி : புதிய தலைமுறை)

5 ஆகஸ்ட், 2010

உல்டா!

‘உல்டா’ என்றொரு அழகிய தமிழ் சொல்லாடலை என்னுடைய பதின்ம வயதுகளில் அடிக்கடி கேட்டு சிலாகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது வித்தியாசமான காட்சிகள் சினிமாத் திரையில் தெரிந்தால், அப்படியே இங்கிலீஷ்லேருந்து ‘உல்டா’ பண்ணிட்டாண்டா என்று ஸ்பாட்டிலேயே கண்டுபிடித்து ரசிகர்கள் நொங்கெடுத்து விடுவார்கள்.

இதுமாதிரியெல்லாம் நொங்கெடுக்க ‘உல்டா’ ஒன்றும் தீண்டாமை மாதிரி பாவச்செயல் அல்ல. ‘உல்டா’ என்றொரு தொழில்நுட்பம் இல்லாது போயிருந்தால் விஜயகாந்த் இங்கே புரட்சிக்கலைஞர் ஆகியிருக்கவே முடியாது. தென்னாட்டு மைக்கேல் ஜாக்சனாக பிரபுதேவா உயர்ந்திருக்க முடியாது. கமல்ஹாசன் காட்ஃபாதர் ஆகியிருக்க மாட்டார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்காது.

90களில் இதுபோல ’உல்டா’க்களை கண்டறிந்து கட்டுரை எழுதுவது இதழியலின் அத்தியாவசியத் தேவையாகக்கூட இருந்ததுண்டு. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாட்டு ஹிட் ஆனபோது, மெட்ரோப்ரியா கூட குமுதத்தில், அப்பாடல் எந்த ஆங்கிலப் படத்திலிருந்து பிட் அடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். ‘உல்டா’ காட்சிகளை அமைப்பதில் வல்லவரான இயக்குனர் வசந்தே கூட வெறுத்துப் போய் ‘உல்டா’ என்ற பெயரில் ஒரு அருமையான சிறுகதையை விகடனில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அமெரிக்க லத்தீன் இலக்கிய ரசனை கொண்ட என்னுடைய வாசகர்களே! மேற்கண்ட மூன்று பாராகிராப்புகளின் மூலமாக நான் உங்கள் மனதுக்குள் புகுந்து, உங்கள் மனோவோட்டத்தை மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை இன்னேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஆயிரக்கணக்கான இலக்கியங்களை படைத்து சோர்வு அடைந்துவிட்டிருப்பது உங்களுக்கு தெரியும்.

சோர்வடைந்தும் தொடர்ச்சியாக பிரிண்டிங் மிஷின் மாதிரி நான் படைப்புகளை படைத்துக்கொண்டே போவதற்கு நான் காரணமல்ல என்பதை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். என்னுள் மார்க்குவேஸும், டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும், இன்னும் ஏகப்பட்ட இலக்கிய அஸ்கு புஸ்குகளும் பேயாய் இறங்கி, புயலாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் என்னால் மட்டும் உலகின் தலைச்சிறந்த எழுத்தாளன் ஆகமுடிந்திருக்கிறது, உங்களால் ஏன் முடியவில்லை என்று தீவிரமாக ரூம் போட்டோ, பாம் போட்டோ யோசித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் நானில்லை. நான் நினைத்தாலும் அழித்துவிடமுடியாது என்னுடைய பிரபலத்துக்கு காரணமென்ன? ஏனெனில் நான் நீங்களில்லை.

தமிழின் முன்னணி பத்திரிகைகளும், தெலுங்கு பத்திரிகைகளும், கன்னட, மலையாள, அரபி, ஹீப்ரு, லத்தீன், ஜெர்மானிய, பிரெஞ்சு, அல்பேனிய, ஆப்ரகாமிய மற்றும் மூவாயிரத்து சொச்ச மொழிகளில் வெளிவந்துக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும், அம்மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் என்னுடைய எழுத்துகளை ‘உல்டா’ அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உல்டா தொடர்பான இதுபோன்ற மின்னஞ்சல்கள் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சமாவது வருவதால், கூகிள் நிறுவனம் என்னுடைய மின்னஞ்சலுக்கான இடத்தை ஒரு லட்சம் ஜிகா பைட்டாக உயர்த்தியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூட அடையமுடியாத உயரமிது.

இதைப்போலவே என்னைப்போன்ற நோபல்தன்மை கொண்ட மாற்றுமொழி சமகாலப் படைப்பாளிகளுக்கும் அவர்களது படைப்பை நான் உல்டா அடிப்பது தொடர்பாக, அவரவரது ரசிகர்கள் அவரவர்க்கு மின்னஞ்சல் மழை பொழிந்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் நானாக முடியாது என்றாலும் அவர்களும் எழுதுகிறார்கள் என்றவகையில் அவர்களை மதிக்கிறேன்.

இதுவரையில் இப்பதிவில் பதியப்பட்ட 280 வார்த்தைகளை வாசித்ததில் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். இதுதான் உண்மை. பேருண்மை. இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமோ, வெட்கமோ, அருவருப்போ, ஆனந்தமோ, அகஞானமோ, புறத்தேடலோ, வேறு எந்த கருமாந்திரமோ தேவைப்படவில்லை. “உல்டா இன்றி அமையாது உலகு”

4 ஆகஸ்ட், 2010

கிண்டியில் கண்டது!

காலில் செருப்பில்லை. கனவுகள் மிதக்கும் கண்கள். மகனையோ, மகளையோ கையில் பிடித்துக்கொண்டு தயக்கத்தோடு நுழையும் பெற்றோர். முகங்களில் எதிர்ப்பார்ப்பும், கவலையும் சரிவிகிதத்தில். அண்ணா பலகலைக்கழக கேம்பஸ் இன்ஜினியரிங் கவுன்சிலிங் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் முகங்கள் மட்டுமே மாறுகிறது. காட்சிகளும், உணர்வுகளும் அதேதான்.

இம்முறை நுழையும்போதே கல்விக் கண்காட்சி கண்ணுக்குப் படுகிறது. கல்லூரிகள் வரிசையாக ‘ஸ்டால்’ அமைத்து மாணவர்களை அசத்துகிறார்கள். ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும் மாணவ மணிகளே வருக வருக’வென ப்ளக்ஸ் பேனர்கள். ‘முன்பின் தெரியாதவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டாம்’ என்று ஆங்காங்கே பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கைப் பலகை.

மரத்தடிகளில் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனாயசமாக விரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். நம்மூரில் பணம் புழங்கும் சீசன் இரண்டே இரண்டுதான். ஒன்று தீபாவளி. மற்றொன்று பள்ளி, கல்லூரி திறக்கும் ஜூன், ஜூலை. பணம் புழங்கும் இடமென்பதால் யாராவது சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்து யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் போலிஸார் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ‘ரவுண்ட்ஸ்’ வருகிறார்கள்.

கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஒரு விவசாயி. 1161 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மகள் ஆனந்தியோடு வந்திருக்கிறார். “வங்கிக்கடன் வாங்கும் எண்ணம் எதுவுமில்லீங்க. வாங்கினாலும் நாமதான் திருப்பிக் கட்டியாவணும். பொண்ணு மேற்படிப்புக்குன்னு ஏற்கனவே திட்டமிட்டு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கேன். அதை வெச்சு சமாளிச்சுப்பேன்” என்று வங்கிக்கடன் பெற தயக்கம் காட்டுகிறார்.

இந்த தயக்கமே அவசியமற்றது. நான்கு லட்ச ரூபாய் வரை கடன்பெற பிணை (செக்யூரிட்டி) எதுவும் வங்கிகள் இப்போது கேட்பதில்லை. கடன்பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கி இருக்கிறார்கள். வளாகத்திலேயே ஸ்டால்கள் அமைத்திருக்கும் வங்கிகள் விவரங்களை கேட்பவர்களுக்கு விலாவரியாக முகம் சுளிக்காமல் திரும்ப திரும்ப விவரிக்கிறார்கள். இங்கே விவரங்களை கேட்பவர்கள், ஊருக்குத் திரும்பி வங்கியின் அந்த ஊர்கிளை நிர்வாகியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம். அரசு, கல்விக்கடன் விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாராளமயக்கொள்கை காட்டிவருகிறது.

கவுன்சிலிங்குக்கு வரும் மாணவ-மாணவிகளில் (அவர்களின் பெற்றோரும் கூட) நிறைய பேர் பெரும்பாலும் முதன்முறையாக சென்னையைப் பார்க்கிறார்கள். கிராமப்புற வெள்ளந்தித்தனம் அசலாக வெளிப்படுகிறது. ‘அக்கம் பக்கத்துலே கடை கண்ணியே இல்லியே? பட்டணத்துலே இருக்கறவங்க ஆத்திர அவசரத்துக்கு ஒரு சோடா குடிக்கக்கூட பஸ் ஏறி ரொம்ப தூரம் போவணுமோ?’ என்று பட்டணக்காரர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கிண்டி காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அருகில் குடியிருக்கும் ஒரே நபர் மாட்சிமை தாங்கிய கவர்னர் பெருமகனார் மட்டும்தான். எனவேதான் இங்கே கடை, கண்ணிக்கு வாய்ப்பேயில்லை.

ஊரில் பஸ் ஏறி நேராக கோயம்பேடுக்கு வருபவர்கள், பஸ் நிலையத்திலேயே குளித்துவிட்டு பெட்டி, படுக்கையோடு கேம்பஸுக்கு வந்துவிடுகிறார்கள். காலையிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துவிடுவதால் எங்கும் தங்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. மாலைக்குள் குறைந்தது 3500 பேரின் எதிர்காலம் கவுன்சிலிங்கில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. விரும்பிய கல்லூரியும், படிப்பும் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக இரவே ஊருக்கு கிளம்பிவிடுகிறார்கள்.

சிவகாமி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியிலிருந்து வந்திருக்கிறார். மகள் கிருத்திகா 1147 மதிப்பெண் எடுத்திருக்கிறார். “எந்த கோர்ஸூ கெடைச்சா என்ன? எம்பொண்ணு என்ஜினீரிங் படிக்கோணும். அவ்ளோதான்” என்று பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதுமின்றி சொல்கிறார். குரோம்பேட்டையில் உறவினர்கள் வீடு இருப்பதால், ஆண் துணை ஏதுமின்றி சென்னைக்கு ரயில் ஏறியிருக்கிறார்கள் அம்மாவும், மகளும். இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்னையைச் சுற்றிப் பார்த்து ஊருக்கு திரும்புவதாக திட்டம்.

கை நடுங்கிக் கொண்டே படிவங்களை பூர்த்திச் செய்கிறார்கள் மாணவர்கள். “ஒருவேளை தப்பாயிடுமோ?”. நகரங்களில் படித்தவர்களுக்கு இதுமாதிரி தயக்கமெல்லாம் ஏதுமில்லை. அவர்களுக்கு இந்த கவுன்சலிங் கலாச்சாரம் அன்னியமானதாகத் தெரியவில்லை. அண்ணனோ, பக்கத்து வீட்டு அக்காவோ ஏற்கனவே வந்திருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று அவர்களை விசாரித்து அறிந்து தெம்பாக வருகிறார்கள். பாவம், கிராமப்புற மாணவர்கள்தான் முதன்முதலாக பார்லிமெண்ட் கட்டடத்துக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் எம்.பி. மாதிரி தயக்கத்தோடு அஞ்சுகிறார்கள்.

கடந்த ஆண்டு பொருளாதார மந்தம் காரணமாக ஐ.டி.துறைக்கு மவுசு குறைந்து இருந்ததாக ஒரு பார்வை தென்பட்டது. இப்போது மீண்டும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் மீண்டு எழுந்திருப்பதால் மாணவர்கள் பலருக்கும் ஐ.டி.யே சரணம். அடுத்ததாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக் துறைகளுக்கு போட்டா போட்டி நடக்கிறது.

பல்லாயிரக் கணக்கில் திரண்டு வருபவர்களுக்கு வசதிகள் பரவாயில்லை. கேண்டீனில் தங்குதடையின்றி உணவு கிடைக்கிறது. ஆங்காங்கே சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர்வசதி. வேறு என்ன வேண்டும்?

அஞ்சாதே!

கவுன்சலிங் என்பது என்ன?

மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க வகை செய்வதே கவுன்சலிங்.

கவுன்சலிங் எப்படி நடக்கிறது?

• கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக ரொக்கம் அல்லது வரைவோலையாக (டி.டி) கவுன்சலிங் கட்டணம் கட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே வங்கி இருப்பதால் டி.டி. எடுப்பது சுலபம். ஆனால் நீண்ட வரிசை நிற்கும். எனவே ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டி.டி. எடுத்து வந்துவிடுவது நல்லது.

• பணம் கட்டிய வரிசையே உங்களை ஒரு கூடத்துக்கு அழைத்துச் செல்லும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை பிரிவு பிரிவாக பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்களை கவுன்சலிங்குக்கு ஒலிபெருக்கியில் அழைப்பார்கள்.

• மிகப்பெரிய அரங்கம் ஒன்றில் கவுன்சலிங் நடைபெறும். உள்ளே மாணவரோடு, பெற்றோரில் ஒருவர் மட்டுமே உடன் செல்லலாம். கவுன்சலிங் கூடத்தில் நுழைந்ததும், உங்கள் வருகையைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் கவுன்சலிங் முடியும் வரை உள்ளே நுழைந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை.

• மிகப்பெரிய திரையில் காட்டப்படும் காலியிடங்களில் மூன்று பாடப்பிரிவுகள் மற்றும் மூன்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கலந்தாய்வின் போது மாணவர்கள் தெரிவு செய்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட இயலாதது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

• சான்றிதழ் சரிபார்க்கும் இடத்தில் உண்மையான சான்றிதழைக் காட்ட வேண்டும். ஜெராக்ஸ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

• இறுதியாக நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்த கல்லூரி பாடப்பிரிவுகளில் ஒன்றை, கணினியின் முன் அமர்ந்திருக்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

• கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டுப் படிவமும், மீதம் செலுத்த வேண்டியத் தொகைக்கான வங்கிப் படிவமும் வழங்கப்படும். பணத்தை அன்றே செலுத்தலாம். அல்லது கல்லூரிக்குச் சென்றும் செலுத்தலாம்.

• ஒரு சிறிய மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும்.

கவுன்சலிங்கில் வெற்றி பெற...

சில முன் தயாரிப்புகளோடு போனால் – அதாவது ஹோம்வொர்க் செய்தால் – கவுன்சலிங் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.

1. என்ன படிப்பு, எந்த கல்லூரியில் என்பதை முன்கூட்டியே எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமை, ஆர்வம், மனோபாவம், சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் படிப்பினைத் தேர்ந்தெடுங்கள். எல்லோரும் என்ன படிக்கிறார்களோ அதையே நாமும் படிப்போம் என்றோ அல்லது வெறும் வேலை வாய்ப்பு அடிப்படையில் மட்டுமோ என்றோ தேர்ந்தெடுக்காதீர்கள். நான்கு வருடத்தில் வேலைச்சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

2. கல்லூரியை தெரிவு செய்வதற்கு முன்பாக அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், தொழிற்துறையோடு அக்கல்லூரி வைத்திருக்கும் உறவு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://www.annauniv.edu/ இணையத்தளத்தில் இவ்விவரங்களை விலாவரியாக காணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் படிக்க விரும்பும் துறையில் கடந்த செமஸ்டரில் எத்தனை பேர் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்தத் துறையில் அக்கல்லூரி எப்படி என்பதை ஓரளவுக்கு புரிந்துக் கொள்ளலாம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று விரும்பினால், அங்கே உள்ள படிப்புகளில் எது சிறந்தது என்பதை கண்டுபிடியுங்கள்.


3. நீங்கள் விரும்பும் படிப்பு அல்லது கல்லூரி கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் உங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பங்களை முன்னதாகவே தெரிவுசெய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரேங்க், கட்-ஆஃப், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை உத்தேசமாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டின் ரேங்க் லிஸ்ட் கட்-ஆஃப் பட்டியலைக் கொண்டு ஒரு ஐடியா கிடைக்கும். ஆனால் இது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்குமென்று சொல்ல முடியாது. வருடத்திற்கேற்ப சிலபல காரணிகளால் மாறக்கூடும். இதைக் கண்டுபிடிக்க சில இணையத்தளங்கள் உதவும். உதாரணம் : http://collegesintamilnadu.com/Counseling/TNEA_Cutoff_Search.asp. உங்கள் மொத்த மதிப்பெண், விரும்பும் படிப்பு, இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவரா என்ற விபரங்களைக் கொடுத்தால் இந்த இணையதளங்கள் எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதைச் சொல்லும். ஆனால் இதெல்லாம் உத்தேசமாக ஒரு ‘ஐடியா’வுக்குதான்.

4. கவுன்சலிங் தொடங்கிய பின்பு ஒவ்வொரு நாள் இரவும் http://www.annauniv.edu/tnea என்ற இணையத் தளத்தில் எந்தக் கல்லூரியில், எந்தப் பிரிவில் எவ்வளவு இடம் நிரம்பியிருக்கிறது போன்ற தகவல்களை உடனுக்குடன் ஏற்றி வைப்பார்கள். இதைத் தொடர்ந்துக் கவனித்து வந்தாலே, உங்கள் முறை வரும்போது என்ன நிலை இருக்கும் என்பதை ஓரளவு யூகித்து தெரிந்துக் கொள்ளலாம்.

இத்தனைக்குப் பிறகும் நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்? சிம்பிள். கிடைத்ததை விரும்ப ஆரம்பியுங்கள்!

(நன்றி : புதிய தலைமுறை)

3 ஆகஸ்ட், 2010

வாய்தாராணியா நம் தங்கத்தாரகை?

சிங்காரச் சென்னை என்று அறிவிக்கப்பட்டு திராவிடத் திம்மிகளின் கொடுங்கோல் கோர ஆட்சியில் சீரழிக்கப்பட்டு வரும் பாவப்பட்ட சென்னைநகர வாசிகளாக நீங்களிருக்கும் பட்சத்தில் இந்த ஃப்லெக்சு பேனர்களை கண்டிருக்கலாம். “வாய்தாராணி ஜெயலலிதாவை கண்டித்து திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!”.

உலகமே போற்றும் உத்தம அம்மாவின் பெயரை அமெரிக்காவே தனது வீதிகளுக்கு சூட்டி பெருமைப்பட்டு வருகிறது. ஆனால், கொடநாடு தவிர்த்து வசிக்கும் உள்ளூர் திம்மிகளுக்குதான் அம்மாவின் பெருமையும், அருமையும் தெரியவில்லை. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சும்மாவா சொன்னார்கள்?

முதலில் அம்மா ஏன் வாய்தா வாங்குகிறார் என்று விளக்கிவிடுகிறோம்.

எந்த சட்டத்தையும் (மதமாற்ற தடை சட்டம் உட்பட) ஒழுங்காக நடைமுறைப்படுத்த துப்பில்லா திம்மியின் ஆட்சியில் வழக்காடுமன்றங்களில் நீதி கேலிக்கூத்தாக ஆகிவருகிறது என்பதை அம்மா பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் தீட்டியிருக்கிறார். ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட திம்மியின் ஆட்சியில் அம்மா மீது நடைபெறும் வழக்கு எப்படி நியாயமானதாக இருக்கும். அம்மாவே ஒருவேளை அவருக்கு தெரியாமல் குற்றம் செய்திருந்தாலும் கூட அந்த குற்றத்தை எடுத்துக்காட்டி திறமையாக வழக்காட திம்மியின் வக்கீல்களுக்கு யோக்கியதை இருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படியேதேனும் குற்றம் நடைபெற்றிருந்தால் அம்மாவின் திறமையான வழக்கறிஞர்கள் திறம்பட வாதாடி அம்மாவுக்கே தண்டனை வாங்கித்தரும் ஆற்றல் பெற்றவர்கள். இதுபோல நியாயமாக, நேர்மையாக வழக்கு நடைபெறுவதுதான் ஜனநாயகத்துக்கும், நீதிபரிபாலனத்துக்கும் அழகு.

அம்மா ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் என்று திம்மி அரசால் போடப்பட்ட கலர் டிவி வழக்கு, சுடுகாட்டு ஊழல் வழக்கு என்று பலவழக்குகளில் திம்மியின் திக்கை வக்கீல்களின் திறமைக் குறைவால் அம்மா கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லோருமே வெளிவந்துவிட்டனர். வெளிவந்தவர்கள் அதற்கு நன்றிக்கடனாக நேராகப் போய் திம்மியின் கட்சியிலேயே சேர்ந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலம் இடிஅமீன் ஆட்சியில் நடந்ததாககூட உகாண்டு நாட்டின் வரலாற்றில் சான்று இல்லை.

இப்போது அம்மாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கிலும் திம்மியின் வக்கீல்கள் கோட்டைவிட்டால், அம்மாவே போய் திம்மி கட்சியில் சேர்ந்துவிடவேண்டிய கொடூரச்சூழல் உருவாகிவிடாதா? அவ்வாறு நடந்துவிட்டால் இந்த நானிலம் தாங்குமா? மக்கள் நாண்டுக்கிட்டு மாண்டுவிட மாட்டார்களா? வாய்தாராணி என்று புரட்சித்தாயை, அல்குவைதா ராஜாக்கள் ஏசுவது நியாயம்தானா?

எனவேதான் இந்த திம்மியின் ஆட்சியில் நீதி கேலிக்குரிய பண்டமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் அம்மா வாய்தாக்களுக்கு மேல் வாய்தாவாக வாங்கிவருகிறார். இவ்வாறு வாய்தா வாங்கி தாமதப்படுத்துவதின் மூலமாக விரைவில் மலர இருக்கும் அம்மா ஆட்சியில் வழக்கினை திறம்பட நடத்தி நீதித்தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் கருப்புத்துணியை அவிழ்க்க அம்மா திட்டமிட்டிருக்கிறார். உலகமே போற்றும் உத்தம அம்மா இப்படியெல்லாம் வாய்தா வாங்கி நீதியைக் காக்கவில்லை என்றால்தான் அது ஆச்சரியம்.

மாறாக அவசரக்கொடுக்குத்தனமாக திம்மியின் இளையமகனான தளபதித்திம்மி ஒரு ஆர்ப்பாட்டத்தை சட்டவிரோதமாக நடத்த முன்வந்திருப்பதாக ப்ளெக்ஸ் பேனர்களை தீயசக்திகள் ஆங்காங்கே மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன பின்னணி என்னவென்று அம்மாவின் விசுவாசியான ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் அவர்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு, எண்பது கோடி ஹிந்து பெருமக்களின் ஒரே புனிதப் பத்திரிகையாம் ஸ்ரீதுக்ளக்கில் விரைவில் கட்டுரை எழுதுவார்.

நாம் சந்தேகப்படும் பின்னணியும் ஒன்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக தலைமையே தாங்க துப்பில்லாத ஒருவர் எப்படி தளபதி ஆவார் என்று நம் சமூகநீதி காத்த வீராங்கனை போர்க்குரல் எழுப்பியிருந்தார். ஏனெனில் திம்மி கட்சியின் ஆர்ப்பாட்டமோ, பாராட்டுக் கூட்டமோ எது நடந்தாலும் ‘தலைமை : உதவிப்பேராசிரியர்’ என்று அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தளபதி என்று அவர்களால் விதந்தோதப்படும் நபரோ டம்மிபீஸாக ஒரு ஓரம் உட்கார்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருப்பார். இந்த அடிப்படையில்தான் நம் தெய்வத்தாய் அப்படியொரு போர்க்குரலை எழுப்பவேண்டிய அவசியமேற்பட்டது.

தெய்வத்தாயின் போர்க்குரல் கண்டு அஞ்சிய கூட்டம் அவசர அவசரமாக தாங்கள் தளபதி என்று சொல்லக்கூடியவர் தலைமை தாங்கும் ஆற்றல் பெற்றவர் என்று பொய்யான மாயைத் தோற்றத்தை மக்கள் மனதில் கட்டியெழுப்பவே இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மைனாரிட்டி திம்மிகள் அரசு செய்துவரும் இந்த அநியாயங்களை எல்லாம் அடுத்த ஆண்டு வரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த ஆண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளும் பொறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்தும் மீண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளும்....

திம்மிகளின் இந்த அராஜகங்களை எல்லாம் எதிர்த்து இணையத்தில் பதிவுபோட்டு பதிவர்களான நாம் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்த வேண்டும். இதற்கு இணைய அம்மா பேரவை தலைவரான கோவி.கண்ணனார் தலைமை தாங்க வேண்டும். இடதுசாரித் தோழர்களும், தமிழ்த்தேசிய சொந்தங்களும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

அண்ணா நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க. தம்பி நாமம் வாழ்க. தங்கச்சி நாமம் வாழ்க.

2 ஆகஸ்ட், 2010

மொழி!

விமான அறிவியலின் பிரபலமான கோட்பாடு ஒன்று உண்டு. ‘கனமான உடம்பும், மிக லேசான இறக்கைகளும் கொண்ட கருவண்டால் இயந்திரவியல் தர்க்கத்தின்படி பறக்கவே இயலாது’. இந்த கோட்பாடு அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால் கருவண்டுகளுக்கு தெரியாது. எனவே அவை எப்படியோ பறந்துகொண்டுதான் இருக்கிறது.

பாலவித்யாலயா குழந்தைகளும் அப்படித்தான். அறிவியல் கருத்துபடி பிறவியிலேயே செவிக்குறைபாடு கொண்ட குழந்தைகள் வாய்பேச இயலாது. இந்தக் கருத்து அக்குழந்தைகளுக்கு தெரிவதற்கு முன்னரே பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இக்கருத்தை பாடத்தில் பயிலும்போது “நிஜமாவா?” என்ற கேள்வியோடு சிரித்துக்கொண்டே ஆச்சரியப்படுகிறார்கள்.

குழந்தை இயற்கை தரும் வரம். என்ன கோபமோ தெரியவில்லை. சிலருக்கு மட்டும் முழுமையான வரத்தை இயற்கை நமக்கு வழங்கிவிடுவதில்லை. செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது இவ்வகையில்தான். ‘மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று நாம் வாளாவிருந்துவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் அதோகதிதான்.

’மொழி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கதாநாயகி ஜோதிகா வாய்பேச இயலாதவராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அக்கதாபாத்திரத்தின்படி பார்த்தோமானால் அவர் வாய்பேச இயலாதவர் அல்ல. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர் என்பதால், ‘மொழி’யை பேசிப்பழக வாய்ப்பில்லாமல் ‘சாடை’ மொழி பேசுபவராக மாறிவிடுகிறார். இதுதான் எல்லோருக்குமே நடக்கிறது. வாய்பேச இயலக்கூடிய ஒருவர், செவித்திறன் குறைபாட்டால் வாழ்க்கை முழுக்க பேசாமலேயே வாழ்வது எவ்வளவு பெரிய அவலம்? பேச்சுமொழியற்றவர்கள் கல்வி கற்க இயலாமல் வாழ்வை தொலைப்பது சகிக்க இயலாத துயரம் இல்லையா?

2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி செவித்திறன் குறைபாடுள்ளோர்களில் 68 சதவிகிதம் பேர், மொழித்திறன் இல்லாததால் பள்ளிக்கே சென்றதில்லை. இவர்களில் 19.5 சதவிகிதம் பேர் மட்டுமே ஆரம்பப்பள்ளிக்கு செல்கிறார்கள். 7.6 சதவிகிதம் பேர் மட்டுமே நடுநிலைக்கும், 2.5 சதவிகிதம் பேர் மட்டுமே உயர்நிலைக்கும், 1.1 சதவிகிதம் பேர் மட்டுமே மேல்நிலைக்கும் போகிறார்கள். பட்டம் பெறுபவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே.

பாலவித்யாலயா இந்த துயரத்தையும், அவலத்தையும் போக்குகிறது. அ, ஆ, இ, ஈ-யும், ஏ, பி, சி, டி-யும் கற்றுத்தரும் வழக்கமான பள்ளியல்ல இது. செவித்திறன் குறைந்த குழந்தைகளுக்கு மொழியை சொல்லித்தரும் பள்ளி. குழந்தை தமிழ் படிக்க வேண்டுமா அல்லது ஆங்கிலம் படிக்க வேண்டுமா என்று பெற்றோர் தேர்வு செய்துக் கொள்ளலாம். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஒரே ஒரு மொழியில் கல்வியை பட்டம் வரை பெறலாம் என்று அரசு சலுகை தந்திருக்கிறது. மொழி மற்றும் பேச்சுத்திறனை கற்றுக்கொண்டால் மற்ற குழந்தைகளைப் போல கல்வியில் இவர்கள் எத்தகைய உயரத்தையும் எட்டலாம்.

பாலவித்யாலயாவின் நாற்பதாண்டு சேவையின் மூலமாக இன்று டாக்டரேட் முடித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், நிர்வாகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள், ஆர்க்கிடெக்டுகள் மற்றும் ஏராளமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள்.

பிறந்த குழந்தையிலிருந்து, இரண்டரை வயதுக்குள் இருக்கும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மொழிகற்க பாலவித்யாலயாவில் சேரலாம். பிறந்து 52 நாட்களே ஆன குழந்தை கூட இங்கே சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இங்கே கற்றுக்கொள்ள வேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும்தான். இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படி பால் கொடுப்பது, அவர்களோடு எவ்வகையில் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்ற விஷயங்களை அம்மா, அப்பாவுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுக்கிறார்கள். அதிகபட்சமாக ஐந்து வயது வரை ஒரு குழந்தை இங்கே மொழியை கற்கும். பின்னர் மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்து கல்வி கற்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலவித்யாலயாவுக்கு வந்த மூன்று வயது ஹரிணி இப்போது நன்றாக வாயாடுகிறாள். ’ஹாய்’ சொல்கிறாள். காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டதையும், அம்மா சட்னியில் கொஞ்சம் உப்பு குறைவாக போட்டுவிட்டதையும் பற்றி சளசளவென சலம்புகிறாள். அவளோடு பேசிவிட்டு விட்டு விடைபெறும்போது தெரியாத்தனமாக ‘சாடை’ மொழியில் டாட்டா காட்டுகிறோம். “இங்கிருக்கும் குழந்தைகளோடு தயவுசெய்து சைகை மொழி பேசாதீர்கள். ஹியரிங் எய்டு போன்ற கருவிகளின் துணையோடு இப்போது அவர்களுக்கு ஓரளவு ஒலியை உணர்ந்துக் கொள்ள முடியும். உங்கள் உதட்டசைவை அவதானித்து, லிப் ரீடிங் முறையில் நீங்கள் பேசுவதையும் அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்கிறார் பள்ளியின் முதல்வர் வள்ளி அண்ணாமலை.

முதலில், இங்கே சேர்க்கப்படும் குழந்தைகளின் செவித்திறன் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டு, தகுந்த ‘ஹியரிங் எய்ட்’ பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு ஹியரிங் எய்டின் முழுப்பலனையும் குழந்தை பெற வல்லுனர்கள் வழி செய்கிறார்கள்.

பின்னர் முன்பே சொன்ன பெற்றோருக்கான பயிற்சி. குழந்தை பள்ளிப் பருவத்தை முடிக்கும்வரை பெற்றோர்தான் குழந்தைக்கேற்ற உதவிப் பணியாளராக மாறியாக வேண்டும்.

இதற்குப் பின்னரே குழந்தைக்கு கேட்கும் திறன், மொழி, பேச்சு மற்றும் அறிவுத்திறன் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவற்றை கற்றுத்தேறும் குழந்தைகள் ப்ரீ-கேஜி (பள்ளி முன்பருவக் கல்வி) நிலைக்கு உயர்கிறார்கள். இங்கே மற்ற திறன்களோடு மொழியை படிப்பது, எழுதுவது மற்றும் கணக்கு போடுவது ஆகியவற்றை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மொத்தமே அவ்வளவுதான். பாலவித்யாலயாவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் பயிற்சி பெறும் குழந்தைகள் நேரடியாக சாதாரணப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துவிடலாம். மற்ற குழந்தைகளோடு சாதாரணமாகப் பேசவும், பழகவும், விளையாடவும் ஏற்றமுறையில் ஏற்கனவே அவர்கள் தயாராகி விட்டிருப்பார்கள். அவர்களது எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் இனி கவலைப்பட வேண்டியதில்லை.

இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்பதை சொல்ல மறந்துவிட்டோமே? “முழுக்க இலவசம். ஐந்து பைசா செலவழிக்க வேண்டாம். ஹியரிங் எய்ட் வாங்குவது மற்றும் பராமரிப்பதை மட்டும் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பேச்சுத்திறனையும், மொழித்திறனையும் வளரச்செய்து அவர்களை சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைய தகுதியுள்ளவர்களாக ஆக்கும் நோக்கத்தில் பாலவித்யாலயா டிரஸ்ட் இப்பள்ளியை நடத்துகிறது” என்கிறார் டாக்டர் மீரா சுரேஷ். இவர் இப்பள்ளியின் கவுரவ துணை முதல்வர்.

இப்போது எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற சிறப்புப் பள்ளிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஆயினும் நாற்பதாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்ட பாலவித்யாலயாதான் அனைத்துக்கும் முன்னோடி. அரசு தொடங்கும் பள்ளிகள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்கும் அந்தஸ்தில் பாலவித்யாலயா இருக்கிறது.

சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம். ஆலோசனை பெறலாம். வெளியூரில் இருந்து வந்து சென்னையிலேயே தங்கி, தங்கள் குழந்தைகளுக்கு இங்கே மொழியைக் கற்றுத் தரும் பெற்றோர்களும் உண்டு. அதிகபட்சமாக 200 குழந்தைகள் வரை இங்கே படிக்கலாம். குழந்தைகளை சேர்க்க குறிப்பிட்ட காலமெல்லாம் கிடையாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இத்துறையில் ஆசிரியப் பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஒரு டிப்ளமோ பயிற்சியையும் பாலவித்யாலயா நடத்துகிறது. 12ஆம் வகுப்பு தேறியவர்கள் இந்த டிப்ளமோவை படிக்கலாம். ஒரு வருட படிப்புக்கு தோராயமாக ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆங்காங்கே அரசு ஆதரவோடு இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டிருப்பதால் வேலைவாய்ப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

பாலவித்யாலயா அலுவலகத்தில் பேசிவிட்டு வெளியே வரும்போது சில குழந்தைகள் வாசலில் இருக்கும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வயது ரித்திகா நமது புகைப்பட கலைஞரைப் பார்த்து, “Uncle want me to take photograph?” என்று ஆங்கிலத்தில் கேட்டவாறே அட்டகாசமாக போஸ் கொடுக்கிறாள். ரோஜா என்றால் ரோஜாதான் என்பதைப் போல குழந்தைகள் என்றால் குழந்தைகள்தான்!


தொடர்புக்கு :
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை மவுனச்சிறைகளில் அடைக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் யாருக்காவது செவித்திறன் குறைபாடு இருப்பதாக தெரிந்தால் உடனே பாலவித்யாலயாவை தொடர்பு கொள்ளுங்கள்.

பாலவித்யாலயா
18, 1வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.
தொலைபேசி : 044-24917199 ஃபேக்ஸ் : 044-24982598
மின்னஞ்சல் : hear@balavidyalaschool.org
இணையத்தளம் : www.balavidyalaschool.org

(நன்றி : புதிய தலைமுறை)