1 நவம்பர், 2010

Hisss


பிட்டே இல்லாத பிட்டு படத்தைப் பார்த்து நொந்ததுண்டா?

சென்னைவாசிகளுக்கு இந்த அனுபவம் அடிக்கடி 'கெயிட்டி' தியேட்டரில் கிடைத்திருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு சமீபத்தில் 'சிந்து சமவெளி' வாயிலாக இந்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அந்த கொடூரத்தின் சுவடு மறைவதற்கு முன்பாகவே இப்போது மல்லிகா ஷெராவத் மூலமாக 'ஹிஸ்'ஸில் சேம் பிளட். "ஏகப்பட்ட பிட்டு, அள்ளிக்கோங்க" என்று போஸ்டரில் கடைவிரித்து, திரையில் குழந்தைகளுக்கான படம் கொடுக்கும் பாசிஸ குணம் கொண்ட இயக்குனர்கள் மீது யாராவது நல்லுள்ளம் கொண்ட வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடுத்தால் நன்று.

இந்த கந்தாயத்தை ஹாலிவுட்டில் இருந்து பெண் இயக்குனர் ஒருவர் வந்து இயக்கித் தொலைக்க வேண்டுமா என்று புரியவில்லை. தமிழிலேயே இராம.நாராயணன் இதைவிட மிகச்சிறந்த 'பாம்பு' படங்களை உலகத்தரத்தில் இயக்கியிருக்கிறார். படத்தில் கதை இல்லை. திரைக்கதை இல்லை. பாடல்கள் இல்லை. நல்ல இசை இல்லை. நல்ல நடிப்பும் இல்லை. இதெல்லாம் இல்லை என்பதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். போஸ்டரில் போட்ட 'சீன்கள்' கூட இல்லையென்பதைத்தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நம்மூர் இயக்குனர்களெல்லாம் கோயிஞ்சாமிகள் போலவும், ஹாலிவுட் இயக்குனர்கள் அறிவு ரோபோக்கள் என்றும் திரைப்பட விழாக்களில் பேசும் ஆட்கள் இனியாவது திருந்தவேண்டும்.

இச்சாதாரி பாம்பு ஒன்றின் பழிவாங்கல்தான் கதையாம். கிழிஞ்சது லம்பாடி லுங்கி. இவ்வளவு அருவருப்பாக பாம்பை பிரெசண்ட் செய்ய முடியுமா என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார் இயக்குனர். நேரடி நிர்வாணக் காட்சிகள் ஏராளமாக இருந்தாலும், அவையெல்லாம் கலைத்தன்மையோடு (?)  இயக்கப்பட்டுத் தொலைத்திருப்பதால், எதுவுமே எழுந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ஐ மீன், ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அல்லது வேறு ஏதேனும் அதிரடி உணர்ச்சியோ எழவில்லை. இந்த அழகில் 10,000 BC ரேஞ்சுக்கு படத்தின் ஓபனிங் சீங்கை சிறப்பான மொக்கைத்தன்மையில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் இசையமைப்பாளர் அனேகமாக இதற்கு முன்பாக அரசுத் தொலைக்காட்சியின் இழவுச் செய்திகளுக்கு வயலின் வாசித்தவராக இருந்திருக்கக் கூடும். இயக்குனர் பரபரப்பாக படம் பிடித்ததாக நினைத்த காட்சிகளில் கூட பின்னணியில் ஒப்பாரி வைக்கிறார். படத்தின் மொன்னைத் தன்மையை மீறி இர்பான் கான் மட்டும் கொஞ்சம் உருப்படியாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் திவ்யா தத் நல்ல சந்தனக் கட்டை. கட்டையை கான் உருட்டும் காட்சிகள் ஏதேனும் இருக்கக்கூடும் என்கிற எதிர்ப்பார்ப்பை முதல் பாதியில் இயக்குனர் ஏற்படுத்துவதாலேயே, இரண்டாம் பாதிக்கு தியேட்டரில் நான்கைந்து பேர் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பார்ப்பை அணுகுண்டு போட்டு தகர்க்கும் வண்ணம் மிக மிக லேசான அரைகுறை இருட்டு 'பிட்டு' ஒன்றை படம் முடிவதற்கு பத்து நிமிஷம் முன்பு போடுகிறார்கள். கோயிந்தா கோயிந்தா.

மல்லிகா ஷெராவத். பாவமாக இருக்கிறது அம்மணியைப் பார்த்து. இந்தப் படத்தை ரொம்பவும் நம்பி, ட்விட்டரில் ஆஹா, ஓஹோவென எழுதிக் கொண்டிருந்தார். படத்தின் பிரமோஷனுக்காக சில திரைவிழாக்களில் பாம்பை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார். பாவம் வசனமே இல்லை. தொடை தெரிய ஓடி ஓடி களைத்திருப்பார். படத்தின் ரிசல்ட் அவருக்கு மேலும் களைப்பும், சலிப்பும் தரக்கூடும். இதெல்லாம் கூட பரவாயில்லை. அம்மணி பாம்பு ஒன்றோடு உடலுறவு கொள்ளுவது போன்ற 'நேச்சுரலான' காட்சி வேறு வருகிறது. இனி இந்தியின் எந்த இளம் ஹீரோவும், இவரோடு ஜோடி சேர்ந்து நடிக்க கொஞ்சம் யோசிக்கவே செய்வார்கள்.

ஹிஸ் - இந்தப் பாம்பு படமெடுக்காது. மகுடியை மூடிக்கிட்டு போங்க சார். போயி பொழைப்பைப் பாருங்க.

30 அக்டோபர், 2010

கோபுரங்கள் சாய்வதுண்டு!

சில நாட்களுக்கு முன்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த சம்பவம் இது. இரவு 9 மணியளவில் திடீரென்று சுனாமி திரண்டு வந்தது போல பெருத்தச் சத்தம். என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் ஓடுகிறார்கள். தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிக்காக விரைந்தோடி வருகிறார்கள். இந்த கலவரமான காட்சிக்கு காரணம், ஒரு செல்போன் டவர்.

சுமார் 70 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் அது. 15 வருடங்களுக்கு முன்பாக நிறுவப்பட்டது. போதிய பரமாரிப்பு இல்லாததால், துருப்பிடித்து வலுவிழந்ததாக சொல்லப்படுகிறது. நல்ல வேளையாக இச்சம்பவத்தியில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. இதுபோல செல்போன் டவர்கள் விழுவது நமக்கு புதிதுமல்ல. ஏற்கனவே சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விழித்துக்கொண்டு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. இப்பிரச்சினையின் அனைத்து அம்சங்கள் தொடர்பாக செல்போன் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு காவல்துறை ஆணையாளர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். முன்னதாக மாநில அளவிலான சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றினிலும் இப்பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்றால் எவ்வளவு முக்கியமான பிரச்சினை இதுவென்று புரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 30,000 செல்போன் டவர்கள் இருக்கின்றன. சென்னை மாநகரில் மட்டுமே 8,000. இந்திய அளவில் 3,30,000 டவர்கள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் மட்டுமே 1,30,000 கூடுதல் டவர்கள் உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட பெரிய எண்ணிக்கையில் இந்த கோபுரங்கள் உயர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் நம் நாட்டில் செல்போனின் பயன்பாடு என்பது அசுரத்தன வளர்ச்சி கொண்டதும், அரசால் தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட 65 கோடி இணைப்புகள் இப்போது இருக்கிறது. மாதத்துக்கு ஒன்றரை கோடி எண்ணிக்கையிலான புதிய சிம்கார்டுகள் விற்கப்படுகின்றன. 100 சதவிகித மக்களிடமும் செல்போனை கொண்டுச் சேர்த்துவிட வேண்டும் என்ற இலக்கோடு செல்போன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

செல்போன் டவரை தொழில்நுட்ப மொழியில் Base Transceiver Station (BTS) என்கிறார்கள். இரும்புக் கம்பிகளால் பிணைக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், ஆண்டெனா, டீசல் ஜெனரேட்டர், சில எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் – இவை பழுதுபடாமல் இயங்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு அறை. இவைதான் ஒரு பி.டி.எஸ். ஸ்டேஷன். செல்போன்களில் பரிமாறிக் கொள்ளப்படும் மின்காந்த அலைகளை வாங்கியும், அனுப்பும் பணிகளை இந்த ஸ்டேஷன் செவ்வனே செய்து வரும். உயரமான இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம் 'சிக்னல்'களை பக்காவாக புரிந்துகொண்டு செயல்படும்.

மத்தியத் தொலைத்தொடர்புத் துறையின் ஒயர்லெஸ் திட்டக்குழுவிடம் (Wireless Planning Committee) அனுமதி பெற்றே இத்தகைய ஸ்டேஷன்களை அமைக்க முடியும். இவற்றை அமைக்க சில விதிமுறைகளும் உண்டு. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் செல்போன் டவர்கள் அமைக்க அனுமதியில்லை. மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்க கூடாது. அருகில் ஏதேனும் கட்டடம் இருந்தால் அவற்றில் இருந்து 3 மீட்டர் தள்ளியே கோபுரம் அமைக்கப்பட வேண்டும். கோபுரம் இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வராதவண்ணம் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அடிப்படையில் இதுமாதிரியாக இன்னும் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. செல்போன் டவர் கட்டுமானம் தொடர்பாகவும் கூட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும், தொடர்ச்சியான பராமரிப்பு குறித்த ஆலோசனை விதிகளும் கூட உண்டு.

சர்வதேச ஆணையத்தின் விதிமுறைப்படி குடியிருப்பு மனைகளில் இருந்து 60 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

ஆனாலும், இவையெல்லாம் முறையாக கடைப்பிடிக்கப்படாத இடங்களில்தான் பிரச்சினை. முறையாக கடைப்பிடிக்கப்படுவது அபூர்வம் என்பதுதான் வேதனை. பொதுத்துறை செல்போன் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தான் விதிமுறைகளில் கொஞ்சம் கறாராக இருக்கிறது.

பொதுவாக ஒரு செல்போன் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஸ்டேஷன் அமைக்க முடிவெடுத்தால், அங்கிருக்கும் ஏதாவது கட்டிட உரிமையாளரை தொடர்பு கொள்கிறது. குத்தகை அடிப்படையில் கிடைக்கும் இடத்தை வளைத்துப் போடுகிறது. வாடகைக்கு இடத்தைக் கொடுத்தால் கிடைக்கும் வருமானத்தை விடவும், பன்மடங்கு தொகை கூடுதலாக கிடைப்பதால் நகரங்களில் செல்போன் டவர் நம் இடத்தில் அமைக்கமாட்டார்களா என்று ஏங்குவோர் பெருகி வருகிறார்கள். செல்போன் டவருக்கு இடம் வாடகைக்கு விடப்படும் என்று குறிப்பிட்டு, பத்திரிகைகளில் விளம்பரம் தருமளவுக்கு நிலைமை இருக்கிறது.

கட்டிடங்களில் செல்போன் டவருக்கு இடம் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு தனி வரி வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றம் தீர்மானம் கூட நிறைவேற்றியது. ஆயினும் இதுபோன்ற டவர்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விதிகள் எதையும் விதிக்கவில்லை. மாநில அளவிலேயே இவற்றைக் கட்டுப்படுத்த முறையான சட்ட திட்டங்கள் இல்லை.

ஏதோ ஒரு இடம் கிடைத்தவுடன் ஒப்பந்த அடிப்படையில் டவர் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிடம் டவர் அமைக்கும் பணியை செல்போன் நிறுவனங்கள் ஒப்படைக்கின்றன. பல செல்போன் நிறுவனங்கள் டவர் பராமரிப்பையும் கூட வெளியாட்களிடம் ஒப்படைப்பதுண்டு. இதுபோன்ற கட்டுமானத்தின் போது, போதிய பாதுகாப்பு சாதனங்களின்றி ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதை சகஜமாக காண முடிகிறது. கடந்த ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே டவர் அமைத்துக் கொண்டிருந்தபோதே, அது சரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கூட நடந்தது.

அலட்சியம்தான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. விதிமுறை மீறல்கள் என்பது செல்போன் டவர் விஷயத்தில் மிகத்தாராளமாக நடக்கிறது. தமிழக நகரங்களில் இருக்கும் செல்போன் டவர்களை குத்துமதிப்பாக பார்த்தாலே எந்த விதிக்கும் பொருந்தாவகையில் அமைக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். ஆயிரம் விளக்குப் பகுதி புகழ் பெற்ற அப்போலோ மருத்துவமனை அருகிலேயே கூட ஒரு செல்போன் டவர் உயர்ந்து நிற்கிறது. விதிமுறைகள் என்பது வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. கட்டிடங்களின் உயரத்தில் போதுமான வலுவின்றி ஏனோதானோவென்று முளைத்துவிட்ட கோபுரங்களை கண்டாலே வயிற்றில் அமிலம் சுரக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியமென்று யார் சொன்னது?

பராமரிப்பின்றி சாய்வது, அதனால் ஏற்படும் விபத்துகள் என்று கண்ணுக்குத் தெரிந்த பாதிப்புகள் ஒருபுறமிருக்க மருத்துவரீதியான கதிர்வீச்சு அபாயம்தான் இன்னும் மோசமானது. சமீபகாலமாக அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், பொதுநலனில் அக்கறை கொண்ட தனியார் நிறுவனங்கள் பலவும் உடல்ரீதியாக இந்த டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கவலையோடு பார்க்கிறார்கள்.

குடியிருப்புப் பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கூட ஒன்று தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதுமிருக்கும் செல்போன் டவர்களில் வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. அந்தப் பணியும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.

"இடைவிடாமல் செல்போன் உபயோகிப்பதும், செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இக்கதிர்வீச்சால் நரம்புக் கோளாறுகள் மனிதர்களுக்கு உருவாகும் என்பது வெளிநாடுகளில் ஆய்வுகளோடு நிரூபிக்கப் பட்டிருக்கிறது" என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோட்டா.

டெல்லியில் விஜயாபட் என்ற பெண்மணிக்கு மூளைக்கட்டி நோய் ஏற்பட்டது. இந்நோய் அவருக்கு ஏற்பட காரணம், அவர் வசித்த பகுதி செல்போன் டவர் ஒன்றுக்கு நெருக்கமாக இருந்ததுதான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். புற்றுநோய், இதயக்கோளாறு, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த கதிர்வீச்சால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

செல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் மின்காந்த கதிர்வீச்சு 50 மீட்டர் தொலைவுக்கு மைனஸ் 30 டி.பி. அளவு இருக்கலாம் என்று ஒரு நிர்ணயம் இருக்கிறது. இந்த அளவையும் விட குறையும் பட்சத்தில் அது ஆபத்தானது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் இந்தியாவின் பல நகரங்களில் செல்போன் டவர்களில் மைனஸ் 12, மைனஸ் 10 டி.பி. அளவுகளுக்கு கதிர்வீச்சு இருக்கும் அபாயம் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்தே செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருக்கிறது என்பதற்கான சான்றிதழை, கதிர்வீச்சு அளவீடு நிலையத்தில் இருந்து பெறவேண்டும். இச்சான்றிதழை நவம்பர் 15ஆம் தேதிக்குள் தொலைத்தொடர்பு அமலாக்கம், மனிதவள மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத செல்போன் டவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னையிலேயே கூட தமிழக முதல்வர் கலைஞர் வசிக்கும் பகுதி, கதிர்வீச்சு காரணமாக பாதுகாப்பற்ற பகுதியாக இருப்பதாக டெஹல்கா பத்திரிகை கோஜெண்ட் என்ற நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயல்லிதா வசிக்கும் பகுதி கதிர்வீச்சு அபாயமற்ற பகுதியாக அந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது ஒரு சுவையான ஆச்சரியம்.

சரி. ராஜா அண்ணாமலைபுரம் டவர் சாய்ந்த விஷயத்துக்கு வருவோம். இதுபோல அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்காக செல்போன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுக்குழு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பார்வை மங்கிக் கொண்டிருக்கும் போதாவது சூரிய நமஸ்காரம் செய்ய முன்வந்திருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

இது மட்டுமன்றி, செல்போன் டவர் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை அரசு உருவாக்கி, அவை முறையாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை உள்ளாட்சிகள் கண்காணிக்கும் வகையில் சட்டம் ஏதேனும் கொண்டுவரலாம். விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களை, தயவுதாட்சணியமின்றி நீக்கிவிடவும் அரசு முன்வரவேண்டும்.

ஆங்காங்கே ஒன்றிரண்டாக சரியும் கோபுரங்களின் ஆபத்தைதான் நாம் நேரடியாக பார்க்கிறோம். நமக்கு அருகிலேயே, கண்களுக்கு தட்டுப்படாமல் நம் உடலை சரித்துக் கொண்டிருக்கும் டவர்கள் கம்பீரமாக நிமிர்ந்துதான் நிற்கின்றன.

(நன்றி : புதிய தலைமுறை)

29 அக்டோபர், 2010

வலையுலக ப்ரைவஸி!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. பதிவுலகுக்கு புதியவனாக, ஆர்வக்கோளாறோடு அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். சந்திப்பில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர் என்னைப் பற்றி கொஞ்சம் 'பர்சனலாக' விசாரித்தார்.

"கல்யாணம் ஆயிடிச்சா?"

அப்போது நான் புதுமாப்பிள்ளை. அந்த ஜோரில் "ஆயிடிச்சி சார்!"

"லவ் மேராஜா? அரேஞ்ச்ட் மேரேஜா?"

"அரேஞ்ச்ட் மேரேஜ்தான் சார்!"

"பொண்ணு சொந்தமா? அசலா?"

"கொஞ்சம் தூரத்து சொந்தம் சார். என்னோட ஒண்ணு விட்டு அண்ணனோட ஒண்ணு விட்ட மச்சினிச்சி!"

அவ்வளவுதான் நடந்தது விவாதம். அடுத்த ஓரிரு நாட்களிலேயே "சாதி மதத்தை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் சொந்த சாதியில்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்" என்று பெரியவரால் என்னைச் சுட்டி ஒரு பதிவில் எழுதப்பட்டது.

"அய்யிரு யாரும் பொண்ணு தரலை. என் சாதிக்காரன் தான் எனக்கு பொண்ணு தந்தான். எந்த அய்யிராவது பொண்ணுதர ரெடியா இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி" என்று சூடாகப் பதில் அளித்தேன்.

இப்போது நண்பர் ராஜனின் முறை.

பதிவர் சந்திப்புகளிலும், சுக-துக்க விழாக்களிலும் பகிர்ந்துகொள்ளும் 'பர்சனல்' தகவல்கள் பொதுவாக பதிவர் வட்டத்தில் பரிமாறக் கொள்ளப் படுவதில்லை. செந்தழல் ரவி, பாலபாரதி, அதிஷா, சுகுணாதிவாகர், வரவரையான், முத்து (தமிழினி), குழலி, கோவி.கண்ணன் உள்ளிட்ட பல நண்பர்களுக்கு என்னைப் பற்றிய 'பர்சனல்' தகவல்கள் தெரியும். அவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். இவர்களில் சிலர் என் இல்ல விழாக்களுக்கும் வந்ததுண்டு. சுகுணாதிவாகரின் திருமணம், செந்தழல் ரவி இல்ல நிகழ்ச்சி, கோவி.கண்ணன் இல்ல புதுமனைபுகுவிழா போன்ற தனிப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆயினும் தனிப்பட்ட விஷயங்களை நட்புக்கு மரியாதை தந்து யாரும் பொதுவில் வைத்ததில்லை. இது ஒரு வலையுலகப் பண்பாடாகவே அனுசரிக்கப் படுகிறது.

இப்போது ராஜனின் திருமணம் எப்படி நடந்தது, மண்டபத்துக்கு பணம் கட்டியது யார், அய்யிரு மந்திரம் ஓதினாரா என்றெல்லாம் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விஸ்தாரமாக அலசப்படுகிறது. அடுத்தவர் வீட்டு விவகாரங்களை - அதுவும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களை பொதுவில் வைத்து பேசுவது கேவலமாக இல்லையா?

சமரசங்களுக்கு இடையே கொஞ்சமேணும் கொள்கையைப் பாவிக்கும் சூழலில்தான் பலரும் இருக்கிறோம். ஏனெனில் இதே கொள்கையோடு எங்கள் அப்பன், ஆத்தா இருக்கவில்லை. எங்கள் கொள்கை எங்கள் குடும்பங்களுக்கு புதியது. அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

ராஜன் விஷயத்தில் பெரியவர் செய்திருக்கும் பெருந்தொண்டால், இனி பதிவர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மற்ற பதிவர்களை அழைக்க கொஞ்சம் அச்சப்படுவார்கள். அதிலும் 'பெரியவர்' கலந்துகொள்கிறார் என்றால், அழைத்தவர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் அடுத்த சில நாட்களுக்கு இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 'ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பான அம்சம். ராஜன் திருமணம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.

27 அக்டோபர், 2010

பொய் சொல்லலாமா நெடுமாறன் அய்யா?


அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் பேட்டி ஒன்றினை சமீபத்தில் படிக்க நேர்ந்தது :

கேள்வி: இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?

பதில் : சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. 

அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார். 

அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.

ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே! 

அய்யா சொல்வதின் அடிப்படையில் பார்த்தோமானால், 'டெசோ' மாநாட்டின் விளைவாகவே, போராளிக் குழுக்களுக்குள்ளாக ஈழத்தில் மோதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் மாநாடு முடிந்தப்பிறகே 'டெலோ' இயக்கத்துக்கு ஆயுதங்களை கொடுத்து புலிகளுடன் மோதும்படி 'ரா' தூண்டிவிட்டதாக நெடுமாறன் சொல்கிறார். அதையடுத்தே விடுதலைப்புலிகளை சுட்டார்கள். லிங்கத்தினை கொடூரமாக சபாரத்தினம் கொலை செய்தார். புலிகளின் தாக்குதல் பதிலுக்கு நடந்தது என்று கதையையும் சொல்கிறார்.

எப்படி ஒரு மனிதரால் இப்படி அடுக்கடுக்காக பொய்களை அள்ளிக் கொட்ட முடியுமென்று தெரியவில்லை. ஒருவேளை ஈழத்தாயின் அருட்தொண்டராக மாறிப்போனதால் ஏற்பட்ட மாற்றம் இதுவாவென்று தெரியவில்லை.

இப்போது 'டெசோ'வை நெடுமாறன் இழுப்பதற்கு காரணம், கலைஞர் டெசோவின் தலைவராக இருந்தார் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

டெசோ மாநாடு மதுரையில் 4-5-1986 அன்று நடந்தது. இம்மாநாட்டின் நோக்கம். வெறுமனே தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க இருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதை தெரிவித்து, தமிழர்களுக்கு ஆதரவு தேடுவதே ஆகும். ஆயினும் கடைசிவரை இந்நோக்கம் நிறைவேறவேயில்லை. அதற்கு யார் காரணமென்ற உள்விவகாரங்களில் இப்போது நாம் நுழைய வேண்டியதில்லை.

அம்மாநாட்டில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர்கள் : பாஜக சார்பில் அடல்பிகாரி வாஜ்பாய், லோக்தளம் சார்பில் பகுகுணா, தெலுங்குதேசம் சார்பில் என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள், அஸ்ஸாம் கனபரிஷத், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ்-எஸ், ஜனதா உள்ளிட்ட ஏனைய தேசியநீரோட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கான தங்கள் ஆத்ரவினை வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ஈரோஸ், உள்ளிட்ட ஈழத்தமிழ் போராளி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டுக்குப் பிறகே 'ரா' அமைப்பால் தூண்டிவிடப்பட்டு போராளிக் குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டதாக நெடுமாறனின் பேட்டி வாயிலாக அறியமுடிகிறது. உண்மையில் மாநாடு முடிந்து மூன்று நாட்களில், 7-5-1986 அன்று சபாரத்தினம் கொல்லப்படுகிறார். நெடுமாறன் சொல்லும் 'ரா' தூண்டுதல், டெலோ இயக்கங்களுக்கு ஆயுதம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல், ஆள்கடத்தல், புலிகள் சார்பாக லிங்கம் தூதுவராக அனுப்பப்பட்டு சபாரத்தினத்தால் கொல்லப்படுதல், பதிலுக்கு விடுதலைப்புலிகள் தாக்குதல், சபாரத்தினம் கொல்லப்படுதல் ஆகிய சம்பவங்கள் வெறும் மூன்று நாட்களில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரிதும் வளராத 1986ஆம் ஆண்டு நடைபெற்றதாக சொல்கிறார். இதைத்தான் ஊரில் சொல்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் எருமை கூட ஏரோஃப்ளேன் ஓட்டுமென்று.

மாநாட்டு உரையிலேயே கலைஞர், டெலோவுக்கும் புலிகளுக்குமான சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டுமென்று பேசியிருக்கிறார். மாநாட்டுக்குப் பிறகாக 'ரா'வால் தூண்டப்பட்டு அவர்கள் மோதிக்கொள்வார்கள் என்று கலைஞர் ஜோசியம் பார்த்து பேசினாரா என்பதையும் நெடுமாறன் பேட்டியில் சொல்லியிருக்கலாம்.

உண்மையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே புலிகளுக்கும், டெலோவுக்குமான சண்டை நடந்துவந்தது. மாநாட்டு உரையில் வாஜ்பாய், என்.டி.ஆர் போன்றோர் கூட இந்த சண்டையை குறிப்பிட்டு போராளிக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று ஆலோசனை சொல்லியிருந்தனர். இதெல்லாம் நன்கு தெரிந்தும், எப்படி வாய்கூசாமல் இப்படி நெடுமாறன் பேட்டி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் டெசோவுக்கு செயலாளராக இருந்தவரே இந்த பழ.நெடுமாறன் தான்.

83ஆம் ஆண்டே ஈழப்போராளிகளை ஒருங்கிணைப்பதில் கலைஞர் முட்டுக்கட்டை போட்டதாக இந்த நெடுமாறன் சொல்கிறார். அது தெரிந்தும் 86ஆம் ஆண்டு டெசோவில் கலைஞர் தலைமையில் இவர் ஏன் செயல்பட்டார் என்பதை பேட்டியெடுத்த பத்திரிகையாளராவது கேட்டிருக்கலாம். அல்லது கேட்காமலேயே பழ.நெடுமாறன் அடுத்த வெடிகுண்டையும் வீசியிருக்கலாம்.

ஆரம்பத்திலிருந்தே 'ரா'வை கலைஞர் பாதுகாக்கிறார் என்று சொல்கிறார் நெடுமாறன். 86ல் ராஜீவின் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டது. 'ரா' ராஜீவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழக எம்.ஜி.ஆர். அரசு, ராஜீவுக்கு முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வாரி வாரி வழங்கியது (இன்றைய கலைஞர் அரசைப்போல). உச்சபட்சமாக இலங்கை - இந்திய ஒப்பந்த விவகாரத்திலும் கூட. நெடுமாறனோ எய்தவன் இருக்க, அம்பை நோகிறார். இந்த பச்சைப் பொய்களுக்குப் பின்னால் இவரது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாக இருக்கமுடியும். எம்.ஜி.ஆர் மாண்டுவிட்டார், கலைஞர் உயிரோடு இருக்கிறார் என்ற காரணத்துக்காக ஒருவரை புனிதராகவும், மற்றவரை அயோக்கியராகவும் சித்தரிப்பது என்னமாதிரியான சித்துவிளையாட்டு? எம்.ஜி.ஆர்.தான் போராளிக் குழுக்களுக்கு உண்மையான, பிரதிபலன் பாராமல் ஆதரவளித்தவர் என்று நெடுமாறன் நம்பியிருந்தால் அவர் பின்னால் போயிருக்க வேண்டியதுதானே? ஏன் கலைஞரின் பின்னால் அணிவகுத்து நின்றார். ஏனெனில் எம்.ஜி.ஆரின் புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் அப்போது நெடுமாறனுக்கு தெரியும்.

கலைஞர் மே 2009ல் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கடந்தகால வரலாற்றினை தவறாக திரித்துப் பேசுவது எவ்வகையில் அரசியல் நேர்மையாகாது. 89ல் கூட அமைதிப்படைக்கு கலைஞர் கொடுத்த மரியாதை என்னவென்று ஊருக்கே தெரியும். ராஜீவ் கொலைப்பழி தம்மேல் விழுந்தபோது கூட விழுந்தபோது கூட திமுக எவ்வகையிலும் யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை.

83ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தபோது இங்கே இந்தியாவில் அதைத் தட்டிக் கேட்க என்ன நாதி இருந்தது? எந்தவித கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படாத நிலையில், மூன்றுமாதம் கழித்து செப்டம்பர் 83ல் தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டுவந்தவர் கலைஞர்தான். நெடுமாறனுக்கு சந்தேகமிருந்தால் சட்டமன்றப் பதிவேட்டினைப் பார்க்கட்டும். அதன்பிறகே எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பாகி, இந்திராவுக்கு தகவல் தெரிவித்து ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது என்பதும் வரலாறு. இன்றைய கலைஞர் 'ரெட்சிப்' சொருகப்பட்ட ரோபோவாக ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறார் என்பதற்காக, பழைய கலைஞரையும், அவரது உண்மையான அக்கறையையும் மறைத்து, மாறுபட்ட விதமாக சொல்வது நெடுமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. ஏனெனில் அந்தகாலத்து கலைஞரை நெடுமாறனும் ஏற்றுக் கொண்டார். அவர் தலைமையில் 'டெசோ' அமைப்பிலும் செயல்பட்டார்.

பழ.நெடுமாறன் மாதிரியான இரட்டைநாக்கு கொண்டவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என்று அடையாளப்பட்டிருப்பது தமிழினத்துக்கு சாபக்கேடு. வரலாற்றில் நன்கு பதிவாகியிருக்கும் சம்பவங்களை சுயநலத்துக்காக வாய்க்கு வந்ததுபோல வளைத்துக் காட்டியவர்களால்தான் ஈழப்பிரச்சினை இழுபறியானது. இங்கே பாஜக ஜெயிக்கும், அதிமுக ஜெயிக்கும் என்று தவறான தோற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அங்கிருப்பவர்களுக்கு தந்ததால்தான் அனைத்தும் நிகழ்ந்தது. கடைசியில் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது. இப்போதும் இவர்கள் திருந்தாமல் எஞ்சியிருக்கும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மாண்டவர்கள் மீது அரசியல் பிழைப்பு நடத்தி வருவது கேவலமானது.

இவர்களையும் நம்பும் சொற்பமான ஆட்களை நினைத்தால் பரிதாபம்தான் படவேண்டும்.

26 அக்டோபர், 2010

வலைப்பதிவர்களிடம் ஒரு அவசர உதவி!

1. ஏன் வலைப்பதிவு எழுதுகிறீர்கள்?

2. வலைப்பதிவுலகில் உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் யார்? யார்? (ஜெயமோகன், சாருநிவேதிதா, விஜய்மில்டன் மாதிரி) - முடிந்தால் அவர்களது வலைப்பூ முகவரியையும் தரவும்.

3. வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த அம்சம்? பிடிக்காத விஷயம்?

4. வலையுலகில் ஏதேனும் மறக்கமுடியாத சுவையான சம்பவம்

5. ஏனெல்லாம் உங்களுக்கு உங்கள் வலைப்பூ பயன்படுகிறது?


- ஒரு சிறப்புக் கட்டுரைக்காக இந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. தயவுசெய்து உடனடியாக இந்த விவரங்களை yuvakrishna@gmail.com முகவரிக்கு அனுப்பவும். 'வித்தியாசமான' விஷயங்களையும், அனுபவங்களையும் நிச்சயம் உலகறியச் செய்யலாம். போட்டோ வெளியாவது குறித்த தயக்கம் இல்லாதவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
லக்கிலுக்