31 அக்டோபர், 2011

கார்ட் கூட கற்பு மாதிரி!

சில நாட்களாக செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். கூரியர் பாய்ஸ் உதவியோடு கிரெடிட்/டெபிட் கார்ட் தகவல்களை திருடும் கும்பலை கண்டுபிடித்து போலிஸார் முட்டிக்கு முட்டி தட்டிவருகிறார்கள். இந்த நூதன மோசடி நம்மூருக்குதான் புதுசு. டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தனியொருவனால் நிகழ்த்தப்பட்டு, நாலு கோடி ரூபாய்க்கும் மேலாக ஆட்டை போடப்பட்டது.


குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘சைபர் க்ரைம்’ தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது, அதில் வெளிவந்த ஒரு அத்தியாயம் இது. பிற்பாடு இத்தொடர் கிழக்குப் பதிப்பகத்தில் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க : https://www.nhm.in/shop/978-81-8493-266-9.html


இளமை ஊஞ்சலாடும் இருபதுகளின் மத்தியில் தான் ரவிக்குமாருக்கு வயசு இருக்கும். ஜம்மென்று உடுத்திக் கொண்டு அசெண்ட் காரில் ஏறி எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவன் அணிந்த ஆடையை இன்னொரு முறை அணிவானா என்பது சந்தேகம். ரவி வருவதற்கு முன்பே தூரத்திலிருந்து பாரின் பர்ப்யூம் வாசம் ஆளை தூக்கும். வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஹோம் தியேட்டரை ஹைடெசிபலில் அலற விடுவான். ஒவ்வொரு அறையிலும் ஒரு எல்.சி.டி. டிவி. கழுத்தில், கையில், விரல்களில் தங்கமயம். மொத்தத்தில் டெல்லிக்கே ராஜா என்பது போல சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

இத்தனைக்கும் அவன் என்ன வேலை செய்துகொண்டிருந்தான் என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது. கேட்பவர்களிடம் எல்லாம் சிட்டி பாங்க், பார்க்ளேஸ் பாங்க் போன்ற சில பெரிய வங்கிகளில் அதிகாரியாகப் பணியாற்றியதாக சொல்வான். ‘வேலையை ரிசைன் பண்ணிட்டு பைனான்ஸ் கன்சல்டண்டா ஒர்க் பண்ணுறேன். நல்ல சம்பாத்தியம் வருது’ என்றும் சொல்லி வைத்திருந்தான்.

ஒருநாள் அவனுடைய கழுத்தா மட்டையில் நாலு போடு போட்டு போலீஸ் இழுத்துக் கொண்டு போய், ஜீப்பில் ஏற்றியபோது தான் தெருவாசிகளுக்கு தெரிந்தது. ‘பையன் ஏதோ ஏடாகூடமா பிசினஸ் செஞ்சிருக்கான்!’. ஏதோ ஓரிரு லட்ச திருட்டு என்று நினைத்து ரவியை விசாரித்த டெல்லி போலீஸ் அசந்துப் போனது. யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் சுருட்டியிருக்கிறான். ‘கில்லாடிப் பய புள்ளடா நீ!’ என்று மனசுக்குள் பாராட்டிவிட்டு கோர்ட்டு முன்பாக ரவிக்குமாரை நிறுத்தியிருக்கிறார்கள். ரவியிடம் ஏமாந்தவர்கள் ஒவ்வொருவராக டெல்லி போலிஸை அணுகி புகார் கொடுத்துவிட்டு ஒப்பாரி வைத்து செல்கிறார்கள்.

அப்படி என்னதான் செய்து இந்த வயதிலேயே தனிமனிதனாக நாலு கோடி ரூபாய் சம்பாதித்திருப்பான்? கத்தியை காட்டி வழிப்பறி செய்தால் கூட ஐநூறு, ஆயிரம் தான் ஒரு தபா ஆட்டையில் இறங்கினால் தேறும். கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டினால் ஒழிய இவ்வளவு லம்பாக கிடைக்காது. ரவி கத்தியை தீட்டுவதற்குப் பதிலாக தன்னுடைய புத்தியைத் தீட்டினான்.

இந்த மோசடி போலிஸுக்கு புதுசு. ஏன் பிரபல திருட்டுப் பயல்களுக்கு கூட புத்தம்புதுசு. ‘ச்சே நமக்கு இது தோணாமப் போச்சே?’ என்று கேப்மாறிப் பயல்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். இந்தியாவே இதுவரை கண்டிராத நூதனவகை மோசடி இது.

ஏ.டி.எம். கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களில் ஏதாவது ஒன்றை கட்டாயம் உபயோகித்திருப்பீர்கள். இந்த கார்ட் வங்கியிலிருந்து உங்கள் கைக்கு எப்படி வந்தது என்று நினைவிருக்கிறதா? நிச்சயமாக வங்கி ஊழியர் உங்களிடம் நேரில் கையளித்திருக்க மாட்டார். வங்கியிலிருந்து கூரியர் மூலமாக உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து தனியார் வெளிநாட்டு வங்கிகள் வரை கூரியர் மூலமாக கார்டினை வீட்டுக்கு அனுப்புவதுதான் இன்றுவரை நடைமுறை.

சில வங்கிகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்றிருந்த ரவிக்குமாருக்கு இந்த கூரியர் மேட்டர் ரொம்பவும் பிடித்துப் போனது. திடீரென்று ஏதாவது ஏரியாவில் இருக்கும் கூரியர் ஆபிஸுக்கு போவான். தன்னை ஒரு வங்கி அதிகாரியாக கம்பீரமாக அறிமுகப்படுத்திக் கொள்வான்.
“இந்த ஏரியாவில் என்னோட கஸ்டமர்களுக்கு வரவேண்டிய கிரெடிட் கார்டெல்லாம் ஒழுங்கா வந்துசேரலைன்னு கம்ப்ளையண்ட் வந்திருக்கு. யார் யாருக்கெல்லாம் கார்ட் டெலிவரி பண்ணிங்கன்னு லிஸ்ட் காமிங்க. இல்லேன்னா போலிஸ்லே கம்ப்ளையண்ட் பண்ணி முட்டிக்குக்கு முட்டி தட்டிடுவேன்” என்று டெலிவரி பையன்களை மிரட்டலாக ஏய்ப்பான். டெலிவரி பயல்கள் பயந்துப் போய் கிரெடிட் / டெபிட் / ஏடிஎம் கார்ட்கள் டெலிவரி செய்த அட்ரஸ்களை எல்லாம் அட்சரம் பிசகாமல் ஒப்பித்து விடுவார்கள். எல்லா அட்ரஸையும் அய்யா ஒரு டயரியில் நோட் செய்துக் கொள்வார்.

அடுத்ததாக கோட்டு, டை காஸ்ட்யூமில் ஹூண்டாய் ஆக்சண்ட் கார் எடுத்துக் கொண்டு கார்ட் டெலிவரி ஆன வீடுகளுக்குப் போவார். “நான் பேங்கோட கஸ்டமர் சர்வீஸ்லே இருந்து வர்றேன். உங்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டெலிவரி ஆன கார்ட்லே கோட் ப்ராப்ளம் இருக்கு. சரியா ஒர்க் ஆகாது. வேற கார்ட் மாற்றி இரண்டு மணி நேரத்துலே எடுத்துக்கிட்டு வர்றேன்!” வெள்ளைக்காரன் கூட இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசமாட்டான். கார்ட் வந்த கவரோடு வாங்கிக் கொள்வான் ரவி. சிலரிடம் பின்நம்பர் கூட கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறான். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் நம் இந்திய மனப்பான்மை மோசடி ஆசாமிகளிடம் மட்டும் கன்னா பின்னாவென்று ஏமாந்துத் தொலைக்கிறது.

வங்கி அதிகாரியே வீட்டுக்கு வந்து கஸ்டமர் சர்வீஸ் செய்கிறாரே என்று புளங்காங்கிதப்பட்டு, எதுவும் யோசிக்காமல் கார்டை திக்கைத்தனமாக ரவியிடம் கொடுத்துவிடுவார்கள். அடுத்த இரண்டு நாட்களில் அந்த கார்ட் கன்னாபின்னாவென்று டெல்லி ஷாப்பிங் மால்களில் பல லட்சம் ரூபாய்களுக்கு தேய்க்கப்பட்டிருக்கும். ஏடிஎம்களில் அதிகபட்ச பணமும் எடுக்கப்பட்டிருக்கும். இரண்டு மணி நேரத்தில் மாற்றுக் கார்ட் வரும் என்று நம்பியவர்களுக்கு நாமம்தான் மிச்சம். அடுத்த மாதம் செய்யாத செலவுக்கு ஆயிரக்கணக்கில் வங்கியிடமிருந்து பில் வரும். இதுபோல ஏமாந்தவர்கள் கடந்த ஒரு வருட காலமாக போலிஸிடம் ஆங்காங்கே புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

குப்தா என்பவர் முன்ஜாக்கிரதை முத்தண்ணா. புதியதாக வங்கிக் கணக்கு தொடங்கிய உடனேயே வங்கிப் பரிமாற்றங்கள் அவ்வப்போது தன்னுடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் வகையில் காசு கட்டி எஸ்.எம்.எஸ். சர்வீஸ் செட் செய்து வைத்திருந்தார். அந்த வங்கியிலிருந்து அவருக்கு ஒரு கிரெடிட் கார்ட் வந்தது. கிரெடிட் கார்ட் வந்த இரண்டு மணி நேரத்தில் ஹூண்டாய் ஆக்செண்ட் காரில் நம்ம ரவியும் வந்தார்.

அதே டயலாக்.

“நான் பேங்கோட கஸ்டமர் சர்வீஸ்லே இருந்து வர்றேன். உங்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டெலிவரி ஆன கார்ட்லே கோட் ப்ராப்ளம் இருக்கு. சரியா ஒர்க் ஆகாது. வேற கார்ட் மாற்றி இரண்டு மணி நேரத்துலே எடுத்துக்கிட்டு வர்றேன்!”

முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்தாலும் ரவியின் டிப்டாப் தோற்றத்தில் குப்தாவும் ஏமாந்துவிட்டார். கார்ட், ரசீது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் ரவியிடம் ஒப்படைத்தார். இரண்டு மணி நேரத்தில் மாற்று கார்ட் வரும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வடிவில் சுனாமி வ்ந்தது. “உங்கள் கார்டில் நாற்பதாயிரம் ரூபாய் இன்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் செலவழிக்கப்பட்டிருக்கிறது”

“ஆஹா மாப்பு. வெச்சிட்டான்யா ஆப்பு” என்று அலறிவிட்ட குப்தா, சில நிமிடங்களில் பதட்டம் குறைந்து என்ன ஆகியிருக்கும் என்று பகுத்தறிவோடு யோசித்துப் புரிந்து கொண்டார். இது கூரியர் டெலிவரி செய்த பயலின் வேலையாகவே இருக்கும் என்று சந்தேகம் கொண்டு போலிஸில் புகார் செய்தார். ஒரு வருடமாக வலைவீசி கிரெடிட் கார்ட் கில்லாடியை தேடிக்கொண்டிருந்த போலிஸுக்கு குப்தா கூறிய இந்த ‘கூரியர் ரூட்டு’ புது ரூட்டை திறந்து வைத்தது. ஏற்கனவே புகார் செய்தவர்களையும் மீண்டும் விசாரித்து சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனங்களை அதட்டி, மிரட்டியதில் ரவியின் பக்கா மாஸ்டர் ப்ளான் தெரியவந்தது.

எலிக்கு மசால் வடை வைப்பது மாதிரி பொறியாக, அடுத்தடுத்து டெலிவரிக்கு தயாராக இருந்த கிரெடிட் கார்ட்களை வைத்து, ரவி என்ற பெருச்சாளியை டெல்லி போலீஸார் கையும், கார்டுமாக பிடித்தார்கள். பிடிபட்ட ரவியிடம் பல பேரின் கிரெடிட் கார்ட்கள், பல்வேறு வங்கிகளில் வேலை பார்ப்பதாக நிரூபிக்க ஏழு வங்கிகளின் அடையாள அட்டை மற்றும் போலி பிளாஸ்டிக் ஏடிஎம் அட்டைகள் என பலவும் கைப்பற்றப்பட்டன.

ரவியைப் போன்ற நூதன மோசடி ஆசாமிகளிடம் ஏமாறாமல் தப்பிப்பது மிகப்பெரிய விஷயம். இவனிடம் ஏமாந்தவர்கள் அனைவருமே படித்தவர்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள். இவர்களின் நிலைமையே இப்படியென்றால் படிக்காத கிராமத்து மனிதர்களிடம் எவ்வளவு மோசடி செய்யமுடியும்? மொபைல் போன் மாதிரி ஏடிஎம் / டெபிட் கார்ட்களும், கிரெடிட் கார்ட்களும் இன்றைய தேதியில் மானாவரியாக எல்லோருக்கும் விசிட்டிங் கார்ட் மாதிரி வங்கிகளால் அள்ளி அள்ளி வழங்கப்படுகின்றன.

இந்த அட்டைகளையும், அதற்கான ரகசியக் குறியீட்டு எண்ணையும் அந்தரங்கத்தை காப்பது மாதிரி எண்ணிப் பாதுகாக்க வேண்டும். “இந்தா கார்ட். தெரு முனையிலே இருக்கிற ஏடிஎம்முலே நாலாயிரம் எடுத்தாந்துடு. பின்நம்பர் தெரியுமில்லே? ஜீரோ ஜீரோ ஜீரோ ஏழு” என்று பொது இடத்தில் கார்டை வைத்து கத்துபவரை மாதிரி முட்டாள் வேறு யாருமில்லை.

இந்தப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கார்டு உபயோகிக்கும் அவரவருக்கே நிச்சயம் தெரியும். தொடர் எழுதி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் ‘கார்டு பத்திரம். அதைவிட பின்நம்பர் ரொம்ப பத்திரம்!’. அசால்டா இருந்துக்காதீங்க. அவ்ளோதாம்பா.

நேரடிக் குற்றங்களை விட இண்டர்நெட் மூலமாக கார்டுகளை வைத்து ரம்மி மாதிரி விளையாடும் சைபர் குற்றங்கள் படா மோசம். மின்வர்த்தகம் இப்போது இந்தியாவில் பெரியளவில் வளர்ந்து வருகிறது. எல்லா மின்வர்த்தக தளங்களும் பாதுகாப்பானவையா என்று கேட்டால் இல்லையென்ற பதிலே வரும். கிரெடிட் / டெபிட் கார்டுகள் மூலமாக இண்டர்நெட்டில் ஏதாவது பொருள் வாங்கவோ, சினிமா டிக்கெட் புக் செய்யவோ நினைத்தால் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல், கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் நம்பர் என்று எல்லா எழவுகளையும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. நாம் இந்த தகவல்களை கொடுக்கும் இணையத்தளம் நம்பகத்தன்மை இல்லாததாக இருந்தால் நம் கதி அதோகதிதான்.

முடிந்தவரை இண்டர்நெட்டில் கார்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு வழியே இல்லை பயன்படுத்தி தொலைத்தே ஆகவேண்டும் என்றாலும் தகவல்களை தரும் படிவத்தில் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் (Save password மாதிரி) ஏதாவது இருந்தால் அதை மறக்காமல் முடக்கி விடுங்கள். மறந்து விடாமல் இருக்க கிரெடிட் கார்ட் எண் மற்றும் இண்டர்நெட் பாஸ்வேர்ட் போன்றவற்றை மெயிலில் வைத்துக் கொள்ளும் வழக்கம் சிலருக்கு உண்டு. அவ்வளவு ஞாபகமறதி இருப்பவர்கள் கிரெடிட் கார்டு மாதிரியான ஆபத்தான வஸ்துவை வைத்திருக்கவே தகுதியற்றவர்கள்.

யார் கேட்டாலும் கார்ட்களின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்துவிடாதீர்கள். கார்டை ஜெராக்ஸ் எடுக்கும் வேலையே வேண்டாம். உங்கள் கார்ட் எண்ணும் கார்டுக்கு பின்னால் இருக்கும் சி.வி.வி. (card verification value) எண்ணும் யாருக்கேனும் தெரிந்தால் போதும். உங்கள் அக்கவுண்டில் செமையாக கும்மு கும்முவென்று கும்மி விடலாம்.

“இந்த லிங்கை க்ளிக்குங்க. ஐநூறு ரூபாய் ப்ரீ” என்று மெயில் வந்தால் ஐநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஆப்பு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வங்கிகளிலிருந்து வரும் மெயில்கள் இதுபோல ப்ரீ ஆபர் எல்லாம் கொடுக்காது. எதுவாக இருந்தாலும் அவர்களது சைட்டுக்கே நேரடியாக வரச்சொல்லி விடுவார்கள். மெயில்களில் கண்டதை க்ளிக்கும் பழக்கம் இருந்தால் அதை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

போன் மூலமாக உங்கள் கிரெடிட் கார்ட் பற்றி யாராவது வங்கிப் பெயர் சொல்லிப் பேசினாலும் கூட உஷாராக இருங்கள். ஒன்றுக்கு இரண்டாக விசாரித்து விட்டே பேசுங்கள். வங்கி ஊழியராகவே கூட இருக்கும் பட்சத்தில் உங்கள் பின் நம்பர், சிவிவி நம்பர் போன்றவற்றை சொல்ல வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

மாதாமாதம் கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி ஸ்டேட்மெண்ட் சரியாக வருகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்டேட்மெண்டில் நீங்கள் செய்யாத செலவு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று பார்த்து உறுதி செய்துக் கொள்வது மிகவும் அவசியம். கார்ட் தொலைந்துப் போகும் பட்சத்தில் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை முடக்குதல் முக்கியமானது.

கார்ட் கூட கற்பு மாதிரி. கவனமாக இருந்தால் கவலைகள் இல்லை.

29 அக்டோபர், 2011

காணவில்லை!

பேரன்பும், பெருங்கோபமும் கொண்டு எரிமலையாய் போஸ் கொடுக்கும் மேற்கண்ட படத்தில் இருக்கும் நபரை மே13ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை. இந்த தேதிக்குப் பிறகு ஒரே ஒரு நாள் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூவர் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய ஈழத்தாய் டாக்டர் புரட்சித்தலைவிக்கு பாராட்டுவிழா நடத்தியபோது மட்டும் மேடையில் கண்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.

மே 13க்கு முன்பாக ‘மீனவனை அடித்தால், மாணவனை அடிப்பேன்’ என்று இவர் அடித்த பஞ்ச் டயலாக் மிக பிரபலம். மே 13க்குப் பிறகாக மீனவனை சிங்களவன் அடித்தால், பதிலுக்கு கொசுவை மட்டுமே அடித்து, இவர் காலம் தள்ளுவதாக பி.டி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன.

மூவர் தூக்குத்தண்டனை நேரத்தில் காஞ்சிபுரத்தில் செங்கொடி உயிர்த்தியாகம் செய்தபோது, ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள மேற்கண்ட நபர் காஞ்சிக்குச் சென்றார். அங்கே திடீரென்று காங்கிரஸ் கொடி எரிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததும் ‘தள்ளு தள்ளு’ என்று கூட்டத்தை தள்ளிக்கொண்டு, எரியும் கொடிக்கு முன்பாக இந்திய தேசியத்தை சாடி வீரவசனம் பேசச் சென்றார். இவர் வேகமாக சென்றுக் கொண்டிருந்தபோதே, அடிபொடி ஒருவர் “அண்ணே அதிமுக கொடியையும் சேர்த்து எரிக்கிறாய்னுங்க...” என்று தகவல் கொடுத்த, அடுத்த நொடியே கோபத்தோடு, புயல்வேகத்தில் சென்னைக்குத் திரும்பினார் என்று நமது காஞ்சி மாநகர செய்தியாளர் காஞ்சனமாலா தெரிவித்திருக்கிறார். எனவே செங்கொடி இறுதி ஊர்வலத்திலும் சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்கள் யாரும் பார்த்ததாக சாட்சிகள் இல்லை.

இப்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்று மத்திய அரசுடன் இணைந்து, மேற்கண்ட நபர் நித்தமும் வணங்கும் ஈழத்தாய் புரட்சித்தலைவியின் தமிழக அரசாங்கமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் இந்த தமிழின ஈழநல புரட்சிக் கோரிக்கையை பாராட்டி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மீண்டும் நடத்தப்போகும் பாராட்டு விழாவில் மேற்படி நபர் மீண்டும் தென்படலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

28 அக்டோபர், 2011

வேலாயுதம்

இஸ்லாமியத் தீவிரவாதிகள். அவர்களுக்கு உதவும் அம்மாஞ்சி தமிழக உள்துறை அமைச்சர் என்று படத்தின் ஆரம்பம் காமாசோமாவென்று விஜயகாந்த், அர்ஜூன் படங்களின் பாதிப்பில் தொடங்கும்போதே வயிற்றிலிருந்து தொண்டைக்கு கிளம்புகிறது ஒரு கிலிப்பந்து. அடுத்து ஒரு நேர்மையான பத்திரிகையாளராக ஜெனிலியா. நேராகப் போய் அயோக்கியர்களின் கோடவுனில் நடக்கும் அட்டூழியங்களையெல்லாம் ஈஸியாக படம் பிடித்துவிடுகிறார் என்று அடுத்தடுத்து கிலி மேல் கிலி. சுறா பார்ட் டூ மாதிரியிருக்கே என்று நொந்துப்போய் சாயும் நேரத்தில், நல்லவேளையாக சீக்கிரமாகவே இளையதளபதியை அறிமுகப்படுத்தி கிலியை கிளுகிளுப்பாக்குகிறார்கள்.

நீண்டநாள் கழித்து விஜய்க்கு காமெடி செல்ஃப் எடுத்திருக்கிறது. கோழி பிடிப்பது, கிணற்றிலிருக்கும் நீரை காலி செய்வது, தியேட்டரில் பாசமலரின் ‘ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்’ சீனுக்கு ஒன்ஸ்மோர் அடித்துக் கொண்டேயிருப்பது என்று தங்கச்சிக்காக அவர் செய்யும் கோமாளித்தனங்கள் அத்தனையும் காமெடி கும்மி. ஆனால் இந்த சீன் ஒவ்வொன்றையும் ட்ரெயின் பயணத்தில் ஒருவர் தனித்தனி பிளாஷ்ஃபேக்காக சொல்லிக் கொண்டு வருவதுதான் மொக்கை.

சீட்டு பணம் வாங்க ஊரில் பாதி பேரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருவதும், இங்கே காமெடித் திருடன் சந்தானத்தோடு சேர்ந்து கும்மாளம் போடுவதுமாக விஜய் நீண்டநாள் கழித்து ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். விஜயை விட சந்தானத்துக்கு ரசிகர்கள் அதிகம் போலிருக்கிறது. அவர் முகத்தைக் காட்டினாலேயே சிரிக்கிறார்கள். பேசத் தொடங்கினாலேயே விசில் அடிக்கிறார்கள். கவுண்டமணி பாணி இரட்டை அர்த்த காமெடிகளில் கலக்குகிறார் மனிதர். குறிப்பாக ‘காமப் பிசாசு’ மேட்டர் செமை....

ஹன்சிகாவுக்கு கேரக்டர்தான் சப்பை. ஆளு கொழுக் மொழுக்கென்று வாட்டர்பெட் மாதிரி கிக்காக இருக்கிறார். விஜய்க்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, ரேப் செய்ய நினைக்கும் காட்சியில் அவரது தொப்புள் சிறப்பாக நடித்திருக்கிறது. அது இயற்கையான தொப்புள் தானா அல்லது ஸ்பெஷலாக லண்டனில் ஆர்டர் செய்து செய்த மெழுகுத் தொப்புளா என்கிற சந்தேகம் வருகிறது. மற்றபடி ஹன்சிகாவின் ஹேர்ஸ்டைல் சூப்பர். உதடுகள் சூப்பரோ சூப்பர். நடிப்புதான் கொடுமை. வேறென்ன சொல்ல?

முதல் காட்சியில் தொடங்கிய மொக்கைக் கதையை அவ்வப்போது லேசுபாசாக காட்டினாலும், விஜய்யின் கொட்டம் தூள் கிளப்புவதால் இடைவேளை வரை பிரச்சினையில்லாமல் படம் பார்க்க முடிகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிக்குப் பிறகு இளையதளபதி ஒரு மாஸ் எண்டெர்டெயினர்.

இடைவேளைக்குப் பிறகு வழக்கமான சுறாத்தனம். விஜய் அடிக்கிறார். அனைவரும் அடிவாங்குகிறார்கள். மீண்டும் மீண்டும் அடிக்கிறார். மீண்டும் மீண்டும் அடிவாங்குகிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் பத்து, பண்ணிரெண்டு ஃபைட்டு இருக்கும் போலிருக்கிறது. இந்த கொடூரங்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல க்ளைமேக்ஸ். பாடிகார்ட் சல்மான் பாணியில், தளபதி சட்டையைக் கழற்றிவிட்டு எதிரிகளை பந்தாடுகிறார். சிக்ஸ் பேக்குக்கு பதிலாக மார்புக்கு கீழே ஒன்றோ, இரண்டோ பேக்குதான் தளபதிக்கு இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் சிலர் ‘வாட் எ மேன்?’ என்று புல்லரிப்பதைப் பார்க்கும்போது படையப்பா ‘பேர் பாடி ஃபைட்’ நினைவுக்கு வருகிறது. முதல் பாதி முழுக்க காமெடியில் கலக்கி எடுத்தவர்கள், இரண்டாம் பாதியில் சீரியஸாக எதை செய்தாலும் அவல காமெடியாகவே முடிவது கொடுமை.

விஜய் திரைத்துறைக்கு வந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகிறது. சில படங்களில் திறமையான நடிப்பாற்றல் தனக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டவும் செய்திருக்கிறார். குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை அவருக்கென்று பெரிய ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். வசூல் மன்னர் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படிப்பட்ட நடிகர் இன்னமும் இதுபோன்ற வீணாய்ப்போன ஸ்க்ரிப்டுகளிலேயே தன் திரையுலக வாழ்க்கையை ஏன் தொலைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்த சூர்யா, ஜீவா என்று பல நடிகர்களும் வித்தியாசமான பாத்திரங்களில், வித்தியாசமான கதையமைப்புகளில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, இன்னமும் வேலாயுதம் மாதிரி பழைய ஃபார்முலா படங்களிலேயே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு என்ன? விஜய் தனது அடுத்தக் கட்டத்தை நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

வேலாயுதம் – அணில் வெடி இடைவேளை வரை அபாரம்!

அப், டவுன்!

“அப்”

சீரான லயத்தோடு நாற்பத்தியெட்டு ஜோடி கரங்களும் உயர்ந்தன.

“டவுன்”

இம்முறை ராணுவ ஒழுங்கு வேகத்தில், அதே கரங்கள் இறங்கின.
மீண்டும் ‘அப்’, மீண்டும் ‘டவுன்’. மீண்டும் சீரான லயம், மீண்டும் ராணுவ ஒழுங்கு. இப்படியே ஏழெட்டு முறை.

ரேகா டீச்சருக்கு ‘அப், டவுன்’ சொல்லுவது பிடித்தமான விஷயம். மாணவ, மாணவியர் ஒரு சேர கையை தூக்குவதும், ஒரு சேர கையை இறக்குவதும் பார்ப்பதற்கு அழகான காட்சி. அதே நேரம் இவர்கள் தனது கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்கள் என்பதும் ஒருமாதிரியான குரூர மகிழ்ச்சியை டீச்சருக்கு தருகிறது.

இந்த வயதில் மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். ஆசிரியருக்கு கீழ்படிவது என்பது அவசியமான குணம் என்பதும் டீச்சரின் எண்ணம்.
‘அப், டவுன்’ சம்பிரதாயத்தால் ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை வளர்ப்பது ஒரு பலன். வகுப்பு ஆரம்பிக்கும்போது கலகலவென்று பேசிக்கொண்டிருக்கும் மாணவர்களின் சலசலப்பை அடக்க முடிவது இன்னொரு பலன். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

“என்ன டீச்சர், நர்சரி ஸ்கூல் டீச்சர் மாதிரி இன்னமும் ‘அப், டவுன்’ சொல்லிக்கிட்டிருக்கீங்க?” குழுவாக சாப்பிடும்போது ஒருமுறை கேட்டார் ட்ரில் மாஸ்டர் நடராசன்.

அப்போது ரேகா டீச்சர் சொன்ன விளக்கம்தான் போன பாராகிராப்பில் நீங்கள் படித்த ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் பலன்கள்.

“அதுக்குன்னு பத்தாங்கிளாஸ் பசங்களுக்கு கூட ‘அப், டவுன்’ சொல்லணுமா டீச்சர், அவங்கள்லாம் வளர்ந்துட்ட பசங்க இல்லையா.. பசங்களுக்கு மீசை வளர்ந்துடிச்சி. பொண்ணுங்க தாவணி போட்டுக்கிட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்குன்னு சுயமரியாதை இருக்குமில்லே?”

“இல்லே சார். பசங்களை பசங்களா வெச்சிருக்கணும். இல்லேன்னா நம்ம தலைக்கு மேல ஏறி விளையாடுவாங்க”

இந்த நடராசன் மாஸ்டருக்கு இதே வேலையாகப் போகிறது. சுயமரியாதை, அது, இதுவென்று பள்ளியில் இவர் ஒரு கலகக்கார ஆசிரியர். பசங்களுக்கு ஓவராக செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருக்கிறார். படிக்கிற பசங்களுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி, அது, இதுவென்று நாசமாக்கிக் கொண்டிருக்கிறார். ஒழுக்கம், படிப்பு – இது ரெண்டுமே இவருக்கு ஆகாது. எனவே ட்ரில் மாஸ்டரை மற்ற ஆசிரியர்களுக்கு பிடிக்காதது மாதிரி, ரேகா டீச்சருக்கும் பிடிக்காது.


ன்று ரேகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக ஏற்பாடு. காலை பள்ளிக்குச் சென்ற டீச்சர், தலைமை ஆசிரியர் அனுமதியோடு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டாள். அம்மாவும், அக்காக்களும் சமையலில் மும்முரமாக இருக்க.. அப்பா, அண்ணன், தம்பி மூவரும் வீட்டுக்கும், ரோட்டுக்குமாக பரபரப்பாக இருந்தார்கள். வீடு முழுக்க உறவுகள் மயம். ரேகாவை வழக்கத்துக்கும் மாறாக கூடுதல் மேக்கப் போட்டு சிங்காரித்துக் கொண்டிருந்தார்கள். இது நாலாவது வரன். இந்த இடமாவது அமையணும் என்று அப்பாவுக்கு டென்ஷன்.

ஐந்தரை மணிவாக்கில் மாப்பிள்ளை வீட்டார் பந்தாவாக காரில் வந்திறங்கினார்கள். சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ரேகா. மாப்பிள்ளை களையாகவே இருந்தார். கழுத்தில் தடியான செயின். கையில் பிரேஸ்லேட். விரல்களில் மோதிரங்கள். கொஞ்சம் வசதியான இடம்தான் போலிருக்கிறது.

இரு குடும்பத்தாரின் குசல விசாரிப்புகள் முடிந்தது.

“ரேகா, காப்பி எடுத்துக்கிட்டு வாம்மா” – அப்பாவின் அழைப்புக்காகவே காத்திருந்தவள், கையில் காப்பி டம்ப்ளர்கள் நிரம்பிய தட்டை எடுத்துக் கொண்டு, அன்னநடை நடந்து வந்தாள்.

“எல்லாருக்கும் கொடும்மா” – தலை குனிந்தவாறே ஒவ்வொரு டம்ப்ளராக எடுத்து எல்லோருக்கும் கொடுத்தாள்.

“உட்காரும்மா” – கீழே விரிக்கப்பட்ட பாயில் உட்கார்ந்தாள்.
“என்னம்மா படிச்சிருக்கே?” – மாப்பிள்ளை வீட்டு பெருசு ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று ஆரம்பித்தது.

“பி.எஸ்.சி”

“என்ன வேலை பார்க்குறே?” – இது கொஞ்சம் வயதான பெண்குரல்.

“கவருமெண்டு ஸ்கூல்லே டீச்சர்”

“கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க அண்ணி. அண்ணன் பார்க்கணுமில்லே?” மாப்பிள்ளையின் தங்கை.

மெதுவாக நிமிர்ந்தாள்.

“இவன்தான் மாப்பிள்ளை. நல்லா பார்த்துக்கோம்மா” மாப்பிள்ளையின் அம்மாவாக இருக்க வேண்டும்.

ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“போதும். உள்ளே போம்மா”

மெதுவாக உள்ளறைக்கு நகர்ந்தாள்.

வெளியே பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது.

“மாப்பிள்ளைக்கு சாண்ட்ரோ கார் வாங்கித் தரணும்”

“சரிங்க”

“பொண்ணுக்கு 75 சவரன் நகை போட்டுடுங்க. மாப்பிள்ளைக்கு 10”

“சரிங்க”

“கல்யாணம் நல்லா கிராண்டா இருக்கணும்”

”சரிங்க”

டிமாண்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, அப்பா ‘சரிங்க, சரிங்க’ என்று பூம்பூம் மாடாய் தலையாட்டிக் கொண்டே இருந்தார்.

ரேகா டீச்சருக்கு இப்போது ‘அப், டவுன்’ நினைவுக்கு வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான், இப்போது அப்பா. எப்போதும் யாரோ ‘அப், டவுன்’ சொல்ல, எப்போதும் யாரோ கீழ்ப்படிந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

22 அக்டோபர், 2011

எம்.ஜி.ஆர். ரசிகன்

பொன்னுசாமியும், அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அப்பா திமுகவில் இருந்தபோதுகூட பொன்னுசாமியோடு நெருங்கிய நட்போடே இருந்துவந்தார். இருவரையும் இணைத்த விஷயம் எம்.ஜி.ஆர். வெறித்தனமான ‘வாத்யார்’ ரசிகர்கள் அவர்கள்.

திமுகவில் ஒன்றியப் பிரதிநிதியாக இருந்தபோதே கூட, அப்பாவின் எம்.ஜி.ஆர். வெறி எந்த அளவுக்கு இருந்தது என்றால், தீபாவளிக்கு தீபாவளி எனக்கு தலைவர் கெட்டப் செய்து அழகு பார்க்குமளவுக்கு இருந்தது. ஒரு தீபாவளிக்கு கவுபாய் டிரஸ் + தொப்பி (வேட்டைக்காரன்), மறு தீபாவளிக்கு பெரிய காலர் வைத்த சஃபாரி (நல்ல நேரம்), இன்னுமொரு தீபாவளிக்கு இன்ஸ்பெக்டர் டிரஸ் (காவல்காரன்) என்று குட்டி எம்.ஜி.ஆராகவே – கிட்டத்தட்ட குட்டிக் கோமாளி மாதிரி - ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். பெரிய சைஸ் கூலிங் கிளாஸ் போனஸ். கருமம். ஷூ கூட கருப்பு சிவப்பு என்று இருவண்ணத்தில்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவருக்கு பிடித்த பாட்டே ‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்’தான். மகனுக்கு மட்டும் என்றில்லாமல், அவரும் கூடவே கூலிங் கிளாஸ், அரும்பு மீசை(?), ஃபுல் மேக்கப் என்று எம்.ஜி.ஆர் கெட்டப்பில்தான் திரிவார்.

அப்பா லெவலுக்கு கெட்டப் வெறியெல்லாம் பொன்னுசாமிக்கு இல்லையென்றாலும், அவருக்கு இணையான எம்.ஜி.ஆர் பக்தர்தான் இவரும். மடிப்பாக்கத்தில் இன்றிருக்கும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் சிலையை நிறுவியவர் பொன்னுசாமிதான்.

86 உள்ளாட்சி மன்றத் தேர்தல் அது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரே உள்ளாட்சித் தேர்தலும் அதுதான். எனக்கு நன்கு நினைவு தெரிந்து நடந்த தேர்தல். அப்பா ஒரு வில்லங்கப் பிரச்சினையால் அதிமுகவுக்கு வந்த புதிது.

எங்கள் ஊராட்சி மன்றத்துக்கு நின்ற முக்கிய வேட்பாளர்கள் ஈ.பொன்னுசாமி, தெய்வானை தெய்வசிகாமணி. மற்ற வேட்பாளர்கள் எல்லாம் உப்புமா.

மடிப்பாக்கத்தில் நீண்டகாலம் திமுக கிளைச்செயலாளராக இருந்த தெய்வசிகாமணியும் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்தான். இருந்தாலும் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லை என்கிற காரணமே பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்க அப்பாவுக்கு போதுமானதாக இருந்தது. தெய்வசிகாமணி ஏதோ அரசுப் பணியில் இருந்தார். எனவே அவரது மனைவியை வேட்புமனு தாக்கல் செய்யவிட்டு ‘ப்ராக்ஸி’யாகப் போட்டியிட்டார்.

இப்போது மாதிரி ‘சப்பை’யாகவெல்லாம் அப்போது தேர்தல் நடக்காது. ஒரிஜினல் தேர்தல் ஃபீலிங்க்ஸ் எல்லாம் 91 தேர்தலிலேயே போயாச்சி. கிட்டத்தட்ட ஒரு மாத அனல் பறக்கும் பிரச்சாரம். மடிப்பாக்கத்தில் அப்போது 800, 900 ஓட்டு வாங்கினாலே ஜெயித்துவிடலாம். வாக்காளர்கள் சொற்பமான ஆயிரங்களில்தான் இருந்தார்கள்.

பிள்ளையார் கோயில் அருகில் பொன்னுசாமிக்கு எலெக்‌ஷன் ஆபிஸ். ஆபிஸ் என்றால் மேலே ஒரு கூரை. மூன்றுபுறமும் தென்னை ஓலை வேய்ந்த சுவர். சுவரொட்டிகளும், பிட்நோட்டீஸ்களுமாய் இறைந்துக் கிடக்கும். குட்டியாக ஒரு மேடை. அதில் ஒரு மைக். நான்கைந்து சேர்கள். அவ்வளவுதான்.

பிரச்சாரத்துக்கு நேரவரையறை எதுவும் கிடையாது. இரவு 12 மணி வரையில் கூட சத்தமாக மைக்கில் பேசிக்கொண்டிருக்கலாம். பொன்னுச்சாமிக்கு சரியாக பேசவராது. திமுகவின் முன்னாள் அதிரடிப் பேச்சாளர் என்பதால் அப்பா அவருக்கு ஒத்தாசையாக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் தினமும் சாயங்காலம் ஆபிஸுக்கு பர்மிஷன் போட்டுவிட்டு அப்பா சீக்கிரமாக வந்துவிடுவார். நேராக எலெக்‌ஷன் ஆபிஸுக்கு போய் உட்கார்ந்துக் கொண்டு, நாக்குவறழ மைக்கில் பேசிக்கொண்டிருப்பார். “ஆகவே. ஊருக்கு உழைக்கும் உத்தமர் நண்பர் ஈ.பொன்னுசாமி அவர்களுக்கு அணில் சின்னத்தில் வாக்களிப்பீர்” என்று இரவு பத்து மணிக்கு கூட அப்பாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

பொன்னுச்சாமி எதிர்ப்பார்த்த அளவுக்கு தேர்தல் அவ்வளவு சுலபமாக இல்லை. தெய்வசிகாமணியின் பிரச்சாரம் தூள் பறந்தது. அவருக்கு தரப்பட்ட சின்னம் கத்தரிக்கோல். எல்லா குடும்பங்களுக்கும் தலா ஒவ்வொரு கத்தரிக்கோலை பரிசளித்து ஓட்டுக் கேட்டு அசத்திக் கொண்டிருந்தார். பொன்னுச்சாமி தன்னிடமிருந்த நகை, நட்டை எல்லாம் அடகுவைத்தே தேர்தல் செலவுகளை சமாளித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, பிரச்சாரத்துக்கு அப்பாவை அழைத்துச்செல்ல பொன்னுச்சாமி வீட்டுக்கு வந்திருந்தார். “அவங்க கத்தரிக்கோல் கொடுத்தாங்க. நீங்க எப்போ அணில் கொடுக்கப் போறீங்க மாமா?” என்று அவரிடம் கேட்டேன். சிரித்தவாறே, “ஜெயிச்சதும் உனக்கு ஒரு பெரிய அணில் பொம்மை வாங்கித் தர்றேண்டா செல்லம்” என்றார்.

மடிப்பாக்கத்துக்கு அப்போது படித்த பார்ப்பனக் குடும்பங்கள் குடியேறிக் கொண்டிருந்த காலம் அது. பெரும்பாலும் வங்கிகளில் பணிபுரிபவர்கள். அரசுப் பணிகளில் இருப்பவர்கள். பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்தவர்கள். இவர்களை குறிவைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் புற்றீசலாக உருவாகிக் கொண்டிருந்தன. இந்த கலாச்சார மாற்றத்தை உற்றுக் கவனித்த தெய்வசிகாமணி அதிரடியாக ஒரு பிரச்சாரமுறையை கையெடுத்தார். கான்வெண்ட் படிக்கும் குழந்தைகள் சிலரைப் பிடித்து, ஆங்கிலத்தில் அவர்களை ஓட்டு கேட்க வைத்தார். “வோட் ஃபார் தெய்வானை தெய்வசிகாமணி. தே வில் டூ....” என்று மடிப்பாக்கம் தெருக்களில் ஆங்கிலம் ஆறாய் ஓடத்தொடங்கியது.

இந்தப் பக்கம் இருந்தவர்களோ பாமரர்கள். இந்த அதிரடிப் பிரச்சார டெக்னிக்கை தாக்குப்பிடிக்க முடியவில்லை. பதிலுக்கு குழந்தைப் பிரச்சாரப் பீரங்கிகளை இவர்களும் உருவாக்கத் தொடங்கினார்கள். முதல் பீரங்கி நான்தான். அப்பா எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து மைக்கில் பேசினேன். “அன்பார்ந்த மடிப்பாக்கம் வாழ் வாக்காளர்களே! வாரிக் கொடுக்கும் வள்ளல் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் அன்புத்தம்பியாம் ஈ.பொன்னுச்சாமி...” என்று தொடங்கி கிட்டத்தட்ட மூன்று நிமிடத்துக்கு உரை போகும்.

நெக்-டூ-நெக் தேர்தல் அது. ரிசல்ட் வரும் வரை எல்லோருக்குமே டென்ஷன்தான். இப்போது போல காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து அரை மணி நேரத்தில் முன்னணி நிலவரமெல்லாம் தெரியாது. மறுநாள் அதிகாலை ரெண்டு மணிக்குதான் ரிசல்ட் தெரிந்தது. பொன்னுசாமி அறுநூத்தி சொச்சம் ஓட்டு வாங்கி அமோகமாக ஜெயித்திருந்தார். அடுத்து வந்த வேட்பாளருடன் வாக்கு வித்தியாசம் இருநூற்று சொச்சம் என்பதாக நினைவு. காலையில் எழுந்தபோது ‘பொன்னுசாமி ஜெயிச்சிட்டாரு’ என்று அப்பா சொன்னபோது கிடைத்த மகிழ்ச்சியை எதனுடன் ஒப்பிடுவது?

அவர் தலைவர் ஆனதற்குப் பிறகு சுலபமாக அவரை அணுகுவது குறைந்தது. காலையில் டீக்கடையிலேயே அவரோடு அப்பா உள்ளிட்டவர்கள் உட்கார்ந்து அரசியல் பேசிவிடுவார்கள். அதற்குப் பிறகு அவரைப் பார்க்க முடியாது. நாளாக நாளாக தலைவருக்கும் மக்களுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதற்கு தலைவரை குறை சொல்லிப் பிரயோசனமில்லை. நகரமயமாகி வரும் எந்த கிராமத்திலும் இயல்பாக ஏற்படும் மாற்றம்தான் இது.

இடையில் எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, ஜானகி அணிக்குப் போனார் (அப்பாவும்). மீண்டும் அதிமுக இணைந்தபோது வேறு வழியின்றி, புரட்சித்தலைவியை ஏற்றுக்கொண்டார். இன்றும் கூட போஸ்டர்களில், சுவர் ஓவியங்களில் எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் தரும் டிபிக்கல் கட்சிக்காரர் பொன்னுசாமி. அதுவும் தொப்பி போட்ட எம்.ஜி.ஆர் அல்ல. டைட்டான அரைக்கைச் சட்டை போட்ட ‘தெய்வத்தாய்’ காலத்து எம்.ஜி.ஆர். பொன்னுசாமி சார்பாக வரையப்படும் சுவர் ஓவியங்களில் எம்.ஜி.ஆர் ஸ்டைலாக கீசெயின் கடிப்பார். பேனாவைப் பிடித்து சிந்திப்பார். இப்படியாக விதவிதமான கிரியேட்டிவ். எம்.ஜி.ஆரை அணுஅணுவாக ரசிக்கும் ஒரு ரசிக மனோபாவம் எத்தனை வயதானாலும் பொன்னுசாமிக்கு சற்றும் குறையவேயில்லை.

86ல் அதிமுக தமிழக அளவில் பல்பு வாங்கியதால், 91ல் அம்மா ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. 96ல் கலைஞர் மீண்டும் நடத்தினார். பத்து ஆண்டுகள் கழிந்து மீண்டும் பொன்னுசாமி போட்டியிட்டார். இம்முறை நேரடியாக அரசுப்பணியை துறந்து களமிறங்கினார். இம்முறை நகை நட்டெல்லாம் வைத்து போட்டியிடுமளவுக்கு நிலைமை மோசமில்லை. நல்ல வசதியாகவே இருந்தார் பொன்னுசாமி. கடந்த முறை போல இல்லாமல் எளிதாகவே வென்றார் பொன்னுசா. ஆனால் 2001, 2006 தேர்தல்களில் பொன்னுசாமி படுதோல்வி அடைய வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இப்போது தெய்வசிகாமணி இல்லை, வேறு போட்டியாளர்கள். 2001லாவது இரண்டாவது இடம். 2006ல் மூன்றாவதுதான் வரமுடிந்தது.

அவர் அதிகாரத்திலிருந்து அன்னியப்பட்டு பத்து ஆண்டுகள். இப்போது மடிப்பாக்கம் ஊராட்சி, மாநகராட்சியோடு இணைந்து விட்டது. 187 மற்றும் 188 என இரண்டு வார்டுகளாக பிரிக்கப்பட்டுவிட்டது. 188ல் அதே பொன்னுசாமி முதன்முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பொன்னுசாமி வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்று பரவலாக பேசிக்கொண்டார்கள். ஏனெனில் அவர் போட்டியிட்டது சிட்டிங் டி.எம்.கே. பிரெசிடெண்ட் உடன்.

நேற்று 187வது வார்டு ரிசல்ட் காலையிலேயே வந்துவிட்டது. இதுதான் எங்கள் வார்டு. எதிர்ப்பார்த்த ரிசல்ட்தான். 188 மட்டும் இழுத்துக்கொண்டே போனது. திரும்ப திரும்ப நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருவழியாக மதியத்துக்கு மேல் தெரிந்தது. பொன்னுசாமி அமோகமாக இரண்டாயிரத்து ஐநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். முதுமை, உடல்நலிவு, மகனின் தற்கொலை என்று ஏகப்பட்ட அலுப்புகளோடு வாழும் அவருக்கு இந்நேரத்தில் இந்த வெற்றி அவசியமானதுதான். 86 ரிசல்ட்டு கேட்டபோது கிடைத்த அதே மகிழ்ச்சியும், நிம்மதியும் இப்போதும் கிடைத்தது. இத்தனைக்கும் இப்போது பொன்னுசாமியோடு எங்களுக்கு அவ்வளவு தொடர்பில்லை. அவர் இன்னமும் எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதே அவரது வெற்றியை விரும்ப எனக்கு போதுமான காரணமாக இருக்கிறது.

அவர் முதன்முதலாக ஜெயித்து இந்த வருடத்தோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. ஜெயித்தவுடன் வாங்கித்தருகிறேன் என்று அன்று வாக்களித்த அணில் பொம்மையை இன்றுவரை வாங்கித்தரவேயில்லை. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சி என்பது மாதிரி, அரசியல்வாதியின் வாக்கும் அன்றோடு போச்சு போலிருக்கிறது.