30 ஜனவரி, 2012

மனிதநேயக் கலைஞன்

இசைஞானி இளையராஜாவைப் பற்றி டிரம்ஸ் கலைஞர் சிவமணி எழுதுகிறார் :

அவரைப் பற்றி எழுத நான் யார்?

இந்தக் கேள்வியை எனக்குள் நானே இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு இசைக்கலைஞன். அவரோ இசைக்கே அரசர். அவரைப் பற்றிக் கட்டுரை எழுதக் கலைஞன் என்ற தகுதி மட்டுமே போதுமா? ராஜா அண்ணனைக் குறித்து யோசிக்கும்போதே பல்வேறு அனுபவங்களும், நிகழ்வுகளுமாக, என் இதயம் புயல் அலையில் ஆடும் ஓடம் போலத் தத்தளிக்கிறது

அவருக்கும் எனக்குமான உறவு என்பது இசையோ, தொழிலோ மட்டுமல்ல என்பதை அழுத்தமாக உணர்கிறேன். அவர் என்னுடைய குரு. என்னை ஆன்மீக வழியில் செலுத்திய சித்தர். கோடி சாமிகள் என்கிற மாபெரும் மகானை நான் அடையக் காரணமாக இருந்தவர். என் வாழ்வின் பாக்கியம் ராஜாவால் வந்தது. அவர் எனக்கு குருநாதர் மட்டுமல்ல. அண்ணனும் கூட.

இளையராஜாவுக்கு அப்போதெல்லாம் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தவர் நோயல். அவரது வேலை ராஜாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். நோயலின் மறைவுக்குப் பிறகே நான் ராஜாவோடு பணியாற்ற ஆரம்பித்தேன். நோயலின் இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர் பாணியிலேயே நானும் வாசிப்பேன். எனவே, ராஜாவுக்கு என்னுடைய இசையும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை. "பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தைத் தேவர்கள் உண்டார்கள்" என்று படித்திருக்கிறோம். இளையராஜாவோடு பணியாற்றும் போது எனக்கும் அமிர்தம் உண்ட உணர்வு ஏற்படும்.

அவர் ரெக்கார்டிங் செய்யும் அழகைக் காண எத்தனையோ கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது. அவர் வயலின் அரேஞ் செய்த பிறகு பொழியும் இசையைக் கேட்கும்போது, என் கண்களில் கண்ணீர் கொட்டுவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. ஏன், இளையராஜாவின் இசை ஜீவனுள்ள இசை என்று சர்வதேச அளவில் இசைமேதைகள் பேசுகிறார்கள் என்பதை அப்போதுதான் உணர முடியும். பணக்காரன் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசையை எத்தனை முறை கேட்டுப் பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இசையில் மட்டுமல்ல. நட்புகளை, உறவுகளைப் பேணுவதில் அவர் ராஜாதான். சிவா என்றுதான் என்னை அன்பாக அழைப்பார். வேலை பார்க்கும்போது எவ்வளவுக்கு எவ்வளவு சீரியஸாக வேலை வாங்குகிறாரோ, அதே சீரியஸ்னஸ்சை மற்ற நேரங்களில் அன்பைப் பொழியும்போதும் காட்டுவார்

’47 நாட்கள்’ என்றொரு படத்திற்கு இசையமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வர அன்று ஏதோ காரணத்தால் தாமதமாகி விட்டது. மதிய நேரம், எனக்கோ பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. ஸ்டுடியோவில் இருந்த ராஜாவின் கம்போசிங் ரூமில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. டேபிளில் வாழை இலை விரிக்கப்பட்டு இருந்தது. 'உட்காரு சிவா! சாப்பிடு!' என்றார். எப்படித்தான் என் பசி அவருக்குத் தெரிந்ததோ? இதனால் தான் அவரை சித்தர் என்கிறேன். ஞானி என்கிறேன். ‘இல்லண்ணே..! எஸ்.பி.பி. வந்துட்டாருன்னா ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆயிடும்' என்று தயங்கினேன். நான் தயங்கியபடியே எஸ்.பி.பி.யும் வந்து விட்டார்.

உடனே ரெக்கார்டிங் ரூமில் இருந்த இஞ்சினியர்கள் இருவரையும் ஃபோன் செய்து அழைத்தார் ராஜா. அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக்கொண்டே இருந்தார்.

“பசியோட வேலை பார்க்கக் கூடாது. இப்போ உன்னாலே ரெக்கார்டிங் லேட்டுன்னு யாரும் சொல்லிட முடியாது. ஏன்னா ரெக்கார்டிங் பண்ண வேண்டிய இஞ்சினியர்கள் கூட நான் பேசிகிட்டு இருந்தேன். அதனால், என்னாலேதான் லேட்டு." என்றார். மனித நேயம் அருகிக் கொண்டிருக்கும் உலகில், ராஜாவுக்குள் இருக்கும் இந்த ஈரம்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது. சக மனிதர்கள் மீதான இந்தப் பண்பும், அன்பும் அரிதிலும் அரிதானது.

கலைஞர்களே பிரமிக்கும் கலைஞர் அவர். ரீ-ரெக்கார்டிங்கின்போது சில நொடிகளே வரும் அருமையான பிட் ஒன்றினைக் கொடுப்பார். அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அந்த சில நொடி பிட்டுகளையே நான் ஐந்து பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வாசித்துப் பழகுவேன். இதுபோலச் செய்வது ஒரு தியானத்துக்கு ஒப்பானது. இசைக்கு இதைப் போன்ற ஆன்மீகப் பலம் நிறைய உண்டு.

இளையராஜா பேசுவது, சிலருக்கு சில நேரங்களில் புரியாது. அவரது பேச்சில் நேரடி அர்த்தத்தை எதிர் பார்த்தால் அப்படித்தான். அவர் ஒரு யோகி. உன்னிப்பாக கவனித்தோமேயானால், அவரது பேச்சில் பன்முக அர்த்தங்கள் பொதிந்திருக்கும். வாழ்வுக்கு உபயோகமான கருத்துகள் அடங்கியிருக்கும். இவரைப் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றும், பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது என் பெற்றோர் செய்த புண்ணியமாகத் தான் இருக்கும்.

ஒரு முறை வாழ்த்து அட்டை ஒன்றில் இவ்வாறாக எழுதி எனக்குக் கொடுத்தார். "உன்னை இன்னொருவனால் உருவாக்க முடியாது. நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்."

அண்ணன் என்ன சொன்னாரோ, அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு : யுவகிருஷ்ணா

(நன்றி : புதிய தலைமுறை)

இப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது!

'நண்பன்’ திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் திருட்டு டிவிடி ஜனவரி 1 அன்றே மார்க்கெட்டுக்கு வந்து விட்டது. அதிர்ந்துப் போன இயக்குனர் ஷங்கர் போலிஸ் கமிஷனிரிடம் புகார் கொடுக்க வருகிறார்...

இப்படியொரு அதிரடி தொடக்கத்துடன் ஒரு நாவல் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது. அந்த நாவலின் பெயர் ‘அழிக்கப் பிறந்தவன்’. விலை ரூ. 50. சென்னை கே.கே.நகரில் உள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸில்’ கிடைக்கும் இந்த நாவல், நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் சக்கைப்போடு போட்டிருக்கிறது.

திருட்டு டிவிடி எப்படி தயாராகிறது.. எப்படி கடைக்குச் செல்கிறது.. என்பதில் தொடங்கி பர்மா பஜாரில் இயங்கும் நிழல் உலக வாழ்க்கையை இன்ச் பை இன்ச்சாக தோலுரித்துக் காட்டும் இந்த நாவலை எழுதியிருப்பவர் யுவகிருஷ்ணா. ’வசந்தம்’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான இவரது முதல் நாவல் இதுதான் என்பது ப்ளசண்ட் சர்ப்ரைஸ்.

”புதுப்படங்களை யாரும் பார்ப்பதற்கு முன்பாக நாம் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும்தான். எனக்கும் இருந்தது. ‘இன்னும் தியேட்டரில் ரிலீஸே ஆகாத புதுப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. பார்க்கிறாயா?’ என்று நண்பன் ஒருவன் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நான் பார்த்த படம்தான் கார்த்திக் நடித்த ‘சுந்தர பாண்டியன்’. படம் வெளிவருவதற்கு முன்பாக திருட்டு விசிடி வந்துவிட்டதால், அப்படம் திரையரங்குக்கே வரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சினிமா நிறுவனத்தில் வேலை பார்த்தபோதுதான், திருட்டு விசிடி சமாச்சாரம் ஒரு சினிமாத் தொழிலையும், அத்தொழில் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதை நேரடியாக உணர்ந்தேன். எங்கள் நிறுவனம் பெரும் முதலீடு செய்து கையகப்படுத்திய ஒரு பெரிய படம், திருட்டு சிடி வந்துவிட்டதால், மிகப்பெரிய நடிகர் நடித்திருந்தும் ஓபனிங் கூட கிடைக்காமல் படுத்துவிட்டது.

இக்காலக்கட்டத்தில்தான் திருட்டு சிடி எந்த வழியிலெல்லாம் தயாராகிறது, எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன். இந்த உலகம் விஸ்தாரமானது. உலகளாவியது. அவ்வப்போது காவல்துறையால் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் ரோட்டில் விற்பனை செய்யக்கூடிய அப்பாவிகள்.ஐம்பதுக்கும், நூறுக்குமாக உழைப்பவர்கள். மாஸ்டர் காப்பி போடும் ‘பாஸ்’கள் மாட்டுவதேயில்லை என்பதை தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிப்பவர்கள் உணரமுடியும்.

இப்படிப்பட்ட அப்பாவிகளில் உலகத்தைதான் நாவலில் களமாக்கியிருக்கிறேன். நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று அடிக்கடி பார்ப்பதற்கும், பஜாரின் பழைய கதைகளை தெரிந்துகொள்வதற்கும் ஒரு மாத காலம் செலவிட்டேன்.

சினிமாத் தொழிலை அழிக்கப் பிறந்த திருட்டு டிவிடியைதான் ’அழிக்கப் பிறந்தவன்’ என்று சுட்டியிருக்கிறேன்” என்கிறார் யுவகிருஷ்ணா.

(நன்றி : தினகரன் வசந்தம் 29.01.2012 இதழ்)

28 ஜனவரி, 2012

கீழ்க்கட்டளை தனலஷ்மி!

பேரும், ஊரும் கிக்காக இருக்கிறதே என்று அவசரப்பட்டு ஜொள்ளுவிட வேண்டாம். கீழ்க்கட்டளை தனலஷ்மி பெண்ணல்ல. தியேட்டர். இப்படிக்கூட சொல்லிவிடமுடியாது. எங்கள் ஊர் மொழியில் கொட்டாய். நகரத்தில் வளருபவர்கள் சினிமா பார்க்க நல்ல தியேட்டருக்கு போயிருப்பீர்கள். கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர்த்து பலருக்கு கீழ்க்கட்டளை தனலஷ்மி மாதிரியான தியேட்டர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் குழந்தை பருவத்தில் இருந்தபோது தனலஷ்மி மடிப்பாக்கம் பாதாளவிநாயகர் கோயிலுக்கு எதிரில் தான் இருந்தது. இதெல்லாம் தற்காலிக தியேட்டர்கள். தனலஷ்மி போன்ற ’சி க்ளாஸ்’ தியேட்டர்களுக்கு ஐந்து ஆண்டுகள் லைசென்ஸ் கொடுப்பார்கள். லைசென்ஸ் முடிந்ததுமே அதிர்ஷ்டம் இருந்தால் புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையேல் சர்க்கஸ் கூடாரம் போல காலிசெய்து விட்டு போகவேண்டியது தான்.

தரை, பெஞ்ச், சேர் என்று மூன்று வகுப்பு டிக்கெட்டுகள் கிடைக்கும். தரை மணல் பரப்பப் பட்டிருக்கும். பெஞ்ச் என்றால் சவுக்கு கம்புகளுக்கு மேல் பலகை ஆணியால் அடிக்கப்பட்டிருக்கும். சேர் என்பது மடக்கக்கூடிய இரும்பு சேர். இருப்பதிலேயே காஸ்ட்லி சேர் தான். ரெண்டே ஷோ தான். பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ. பர்ஸ்ட் ஷோ என்பது மாலை ஆறு முப்பது மணி. செகண்ட் ஷோ என்பது நைட்டு பத்து மணி. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் மூன்று மணிக்கு மேட்னி காட்சி உண்டு.

படம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் "வினாயகனே.. வினை தீர்ப்பவனே..!" என்று உச்சஸ்தாயியில் பாட்டு போடுவார்கள். அந்த சத்தத்தை கேட்டபின்பே அவசர அவசரமாக வீடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கொட்டாய் நோக்கி வருவார்கள்.

கூரை அப்போதெல்லாம் தென்னை ஓலைகளில் வேயப்பட்டிருக்கும். அதனால் தான் அதை கொட்டாய் என்பார்கள். ஸ்க்ரீன் ரொம்ப சுமாராக அழுக்காக இருக்கும். ஸ்க்ரீனுக்கு பின்னால் ஒரே ஒரு ஸ்பீக்கர் இருக்கும். ஒளி மோசமென்றால், ஒலி ரொம்ப படுமோசமாக இருக்கும். இதுபோன்ற கொட்டாய்களுக்கு அருகிலிருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் ரொம்ப பாவம். இரவுகளில் தூங்கவே முடியாது.

தனலஷ்மி மடிப்பாக்கத்தில் இருந்தபோது மிகக்குறைவான படங்களே பார்த்திருப்பதாக நினைவு. ஆயிரத்தில் ஒருவன், பூந்தளிர் படங்களை அங்கே பார்த்தது லேசாக நினைவிருக்கிறது. எனக்கு நன்கு நினைவு தெரிந்தபோது அந்த கொட்டாய் இடிந்து பாழடைந்து கிடந்தது.

எப்போதோ ஒருமுறை நான் தூங்கிய பிறகு ஒரு முறை அப்பாவும், அம்மாவும் தங்கையை தூக்கிக் கொண்டு செகண்ட் ஷோ போயிருக்கிறார்கள். என்னை பக்கத்தில் இருந்த பெரியப்பா வீட்டில் தூங்கவைத்திருக்கிறார்கள். நடு இரவில் முழித்துக் கொண்டு, செம கலாட்டா செய்ய, பெரியப்பா என்னை தூக்கிக் கொண்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். "குழந்தை அழுகிறது, உடனே புரொஜெக்டர் ரூமுக்கு வரவும்" என்று அப்பாவின் பெயர் போட்டு ஸ்லைடு காட்டினார்களாம். அந்த மாதிரியான Facility எல்லாம் அப்போது இருந்திருக்கிறது. இன்றைய மல்டிப்ளக்ஸில் கூட இந்த வசதி இருப்பதாக தெரியவில்லை.

நான் ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படிக்கும் போது தனலஷ்மி கீழ்க்கட்டளையில் மீண்டும் புதுப்பொலிவோடு திறக்கப்பட்டது. புதுப்பொலிவென்றால் வேறு ஒன்றுமில்லை ஓலைக்கூரைக்கு பதிலாக தார்பாய். மற்றபடி அதே தரை, பெஞ்ச், சேர் என்ற நவீனவகுப்பு டிக்கெட்டுகள். டாய்லெட் எல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஒரு மறைப்பு மட்டும் இருக்கும்.

கீழ்க்கட்டளைக்கு போன தனலஷ்மியில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அப்பா அழைத்துக் கொண்டு போனால் சேர். நண்பர்களோடு போனால் தரை டிக்கெட். பாயும்புலி, சகலகலா வல்லவன், சட்டம் ஒரு இருட்டறை, நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, திருவிளையாடல் என்று வகைதொகையில்லாமல் ஏராளமான படங்கள். செகண்ட் ஷோ பார்க்கத்தான் ரொம்ப பிடிக்கும். செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது மறக்காமல் டிக்கெட்டை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நைட் ரவுண்ட்ஸ் வரும் போலிஸ்காரரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கவேண்டியிருக்கும்.

தனலஷ்மியில் புதுப்படம் என்பதெல்லாம் சான்ஸே கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களை தான் போட்டுத் தொலைப்பார்கள். ஓரளவுக்கு புதுப்படம் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது - பார்க்க வேண்டுமென்றால் நங்கநல்லூர் ரங்கா, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி மற்றும் மதிக்கு தான் போக வேண்டும்.

இதுபோன்ற கொட்டாய்களில் அதிகமாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களே ஓடிக்கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர் படத்துக்கு கவுண்டரில் கூட்டம் அலைமோதி க்யூவுக்காக பொருத்தப்பட்டிருக்கும் சவுக்கு கொம்புகளை உடைத்து விடுவார்கள். வாத்தியார் ஸ்க்ரீனில் வரும் காட்சியெல்லாம் விசில் பறக்கும். லாட்டரி டிக்கெட்டுகளை கிழித்து ஸ்க்ரீன் முன்னால் பறக்க விடுவார்கள். தரை டிக்கெட் வகுப்பில் வரும் ஆண்கள் பொதுவாக மப்பில் இருப்பார்கள் என்பதால் அடிதடிக்கு அந்த ஏரியாவில் பஞ்சமிருக்காது.

முன்னால் உட்கார்ந்திருப்பவன் கொஞ்சம் உயரமாக இருந்தால் ஸ்க்ரீன் மறைக்கும் என்பது நியூட்டனின் விதி. அவனை கொஞ்சம் குனியச் சொன்னால் நல்லவனாக இருந்தால் குனிந்து விடுவான். கொலைவெறியனாக இருந்தால் அடிதடி தான். இந்தப் பிரச்சினையெல்லாம் எதுக்கு நாம் கொஞ்சம் உயரமாகிவிடுவோம் என்ற எண்ணத்தில் தரையிலிருக்கும் மணலை கொஞ்சம் உயரமாக குவித்து அதன்மேல் உட்கார்ந்தால்.. நமக்கு பின்னால் இருக்கும் இரத்தவெறியனிடமிருந்து கொலைமிரட்டல் வரும். இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து தான் படம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும்.

ஊர்த்தலைவரோ அல்லது முக்கிய பிரமுகரோ படம் பார்க்க வந்தால் அவருக்காக ஸ்பெஷலாக படம் போடுவதை நிறுத்தி வைப்பார்கள். ஓடத் தொடங்கிய படத்தையே முக்கிய பிரமுகருக்காக திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து ஓட்டிய சம்பவங்களும் நடந்ததுண்டு. முக்கிய பிரமுகர்களுடன் வரும் பிகரை சைட் அடிப்பதற்காகவே சில தரை டிக்கெட் பார்ட்டிகள் பெஞ்ச் அல்லது சேர் டிக்கெட்டுகளுக்கு அடாவடியாக செல்வதும் உண்டு.

இதெல்லாம் அந்தக் காலம். இப்போது கீழ்க்கட்டளை தனலட்சுமியின் தோற்றமே மாறிவிட்டது. நகரமயமாக்கப்பட்ட எங்கள் பகுதி தனலட்சுமியையும் விட்டுவைக்கவில்லை. நகரத்தின் தேவைக்கேற்ப தன் ஒப்பனையையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டுவிட்டது தனலஷ்மி. சில ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமிக்கு சில நண்பர்களுடன் சென்றேன். படத்தின் பெயர் குத்து.

தரை டிக்கெட்டு இப்போதும் இருக்கிறது. ஆனால் சிமெண்டு தரை. தார்ப்பாய் வேயப்பட்ட கூரையில்லை. பாதுகாப்பான ஆஸ்பெஸ்டாஸ் ஷீட். ஏகப்பட்ட பேன் ஓடுகிறது. டாய்லெட் எல்லாம் கொஞ்சம் (ரொம்ப கொஞ்சம்) டீசண்ட் ஆகியிருக்கிறது. அதையெல்லாம் விட அதிர்ச்சி. "சார் பால்கனி டிக்கெட் வேணுமா?" என்ற கேள்வி தான். ம்ம்ம்... பால்கனி தனலஷ்மிக்கும் வந்துடிச்சி. அதை பால்கனி என்று சொல்லமுடியாது. பால்கனி மாதிரி.

ஒளி, ஒலி தரம் இப்போது பரவாயில்லை. முன்பைப் போல அடிதடி, வெட்டு குத்தெல்லாம் இல்லை. மக்களுடைய Attitude மாறியிருக்கிறது. ஓரளவுக்கு புதுப்படங்களாக போடுகிறார்கள். தியேட்டருக்குள் பீடி பிடிப்பதெல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் செய்திருக்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கூம்பு ஸ்பீக்கரில் சாமி பாட்டு போடுவதில்லை. கரெண்ட் கட் ஆனாலும் கூட ஜெனரேட்டர் உதவிகொண்டு படத்தை தொடர்கிறார்கள். தியேட்டரில் சைடு ஸ்பீக்கர் எல்லாம் வைத்திருப்பது கொட்டாய் வரலாற்றிலேயே அதிகபட்ச தொழில்நுட்ப வளர்ச்சி.

ம்ம்ம்... என்னதானிருந்தாலும் அந்தக் காலத்து தனலஷ்மி மாதிரி வருமா?

27 ஜனவரி, 2012

செய்தி, துயரம், மரணம்!

செய்தித்தாள் வாசிப்பது என்பது இயந்திரத்தனமான சம்பிரதாயமாக மாறிவிட்டது. ‘சதக் சதக்’ ‘கதறக் கதற’ மாதிரியான வார்த்தைகள் பழகிவிட்டன. இச்சொற்கள் முன்பு கொடுத்த உணர்வுகளை இப்போது தருவதில்லை. செய்தி என்பது இன்றைய தேதியில் வெறும் தகவலை மட்டும் சுமந்துவரும் வஸ்துவாக மாறிவிட்டது. இது செய்தியை தரும் ஊடகங்களின் கோளாறா அல்லது வாசிப்பவன், எச்செய்தியாக இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய மனோபாவத்துக்கு மாறிவிட்டானா என்கிற மிகப்பெரிய விவாதத்துக்கான புள்ளி.

அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு செய்தி அன்றைய தினத்தையே முழுவதுமாக பாதித்துவிடும். இன்று காலை தினகரன் நாளிதழில் வாசித்த ஒரு செய்தி உடனடியாக கண்களில் நீர் கோர்க்கச் செய்தது.

நீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் முப்பது வயதான பாண்டியன். ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பங்குபெற்ற குடியரசுத்தின கொண்டாட்டத்தின் இறுதியில் பாண்டியனின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

ஒற்றைக்காலில் பைக்கில் நின்றவாறே வந்து மக்களுக்கு சல்யூட் அடிக்கிறார் பாண்டியன்.

அடுத்து பாய்ந்து, பறந்து வந்து கால்களால் ஓடுகளை அனாயசமாக உடைக்கிறார்.

கடைசியாக பதிமூன்று பேரை கடந்து பறந்துவருவது நிகழ்வில் அவரது கடைசி சாதனை. புவியீர்ப்புக்கு சவால் விட்டு அச்சாதனையையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

பாண்டியனின் சாகசங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைக்க, துரதிருஷ்டவசமாக இதுவே அவரது வாழ்வின் இறுதி சாதனையாகவும் முடிந்துவிட்டது. பதிமூன்றாவது ஆளை பறந்து கடக்கும்போது கை தவறுதலாக பட்டு, இவர் விழவேண்டிய மெத்தை நகர்ந்துவிட்டது. கழுத்து எலும்பு உடைந்து, மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தநாளம் அறுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டார் பாண்டியன்.

பாண்டியனின் மனைவி பெயர் சந்தியா. இத்தம்பதியினருக்கு நான்கு வயது ஆண் குழந்தையும், பதினோரு மாத பெண் குழந்தையும் உண்டு. பாண்டியனின் சாகசத்தை நேரில் காண அவரது மனைவியும் கைக்குழந்தையோடு வந்திருந்தார். சம்பவம் மொத்தத்தையும் அவர் நேரில் பார்த்தார்.

நொடியில் நடந்துவிடும் இதுபோன்ற விபத்துகள், பலியாகும் அப்பாவி உயிர்கள், விளைவாக வாழ்க்கை முழுக்க பாதிக்கப்படும் குடும்பம், குழந்தைகள்... கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

25 ஜனவரி, 2012

வேட்டை – கமர்சியல் கோட்டை

‘பப்பரப்பா’ பாட்டு தொடங்கும்போது ரைட் ஸ்க்ரீன் முழுக்க க்ளோசப்பில் காட்டப்படும் அமலாபாலின் பேரழகு தொப்புளை காண்பதற்காகவே இன்னொரு முறை சூரியன் தியேட்டரில் ஐம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும், இருபது ரூபாய் பைக் டோக்கனுக்கும், இருபத்தைந்து ரூபாய் வாயில் வைக்க சகிக்காத கண்ணறாவி காஃபிக்கும் அழலாம் போலிருக்கிறது.

தமிழ், ஆங்கிலம், சீனம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா என்று எல்லா மொழிகளிலுமே ஏறத்தாழ நூற்றி சொச்சமுறை படமாக்கப்பட்டுவிட்ட பயந்த அண்ணன், வீரம் செறிந்த தம்பி கதையை லட்சத்து சொச்சமாவது முறை படமாக்கியிருக்கும் லிங்குசாமியை, நண்பன் பாணியில் பேண்ட் அவுத்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து ‘தலைவா கலக்கிட்டே!’ என்றுதான் பாராட்டித் தொலைக்க வேண்டும்.

‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுன்னு சொன்னாங்க. மூணு ஹீரோ இருக்காங்களே பாஸூ’ என்று கூட படம் பார்த்த தோழரிடம் சொன்னபோது, ‘முட்டாள். அது ஹீரோயின், பேரு சமீராரொட்டி’ என்று கடிந்துக் கொண்டார். ஹீரோயினைக் கண்டதுமே ரசிகனுக்கு காதல் எழும்ப வேண்டும். அட்லீஸ்ட் தரையிலிருந்து காலாவது அரை இஞ்சுக்கு பரவசத்தில் மேலெழும்பவேண்டும். சமீராவைக் கண்டதுமே பக்கத்துவீட்டு விடலைப் பையனைக் கண்டது மாதிரி எரிச்சல்தான் மண்டிக்கொண்டு வருகிறது. இந்த அழகில் அம்மணிக்கு அஞ்சு செகண்டுக்கு ஒருமுறை குளோசப் வேறு. திட்டு திட்டான மேக்கப்பில் சமீராவை ஜூம் செய்துப் பார்த்த நீரவ்ஷாவுக்கு சிக்கன் குனியா வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏமி லேது.

மிகச்சரியாக பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக லவ்வர் பாயாக அறிமுகமான மாதவனைப் பார்த்தால் ‘அங்கிள்’ என்றுகூட சொல்லத் தோன்றவில்லை. அடுத்த ஆண்டு ‘தாத்தா’ என்றே கூப்பிடலாம் போல. குட்டி கமல்ஹாசன்னு பேரு எடுத்தா மட்டும் போதாது பாஸூ. காதல் இளவரசனை பாருங்க. அறுபது வயசானாலும் இளவரசனாகவே இருக்கிறார். இவரைவிட மருதமலை வடிவேலுக்கு போலிஸ் யூனிஃபார்ம் பாந்தமாக இருந்தது. ஆர்யாவின் அதே ஸ்டீரியோ டைப் நடிப்பு. முகத்தில் வராத உணர்ச்சிகளை டப்பிங்கில் சரிகட்டும் உலகின் ஒரே நடிகராக இவர்தான் இருக்கவேண்டும்.

தூத்துக்குடியில் தினம் தினம் தீபாவளிதான் போல. படம் ஆரம்பித்ததில் தொடங்கி எங்காவது யாராவது பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இருளான வானத்தைக் காட்டினாலே வானவேடிக்கைதான்.

மிக மிக பலவீனமான அல்லது ஆயிரம் முறை சலித்து, லட்சம் முறை அரைத்த அதே மாவை வைத்துக்கொண்டு சூடான சுவையான இட்லியை சுட்டுக் கொடுத்திருக்கிறார் லிங்கு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முழம் முழமாக காதில் பூ சுற்றி, ஒன்றரை சவரனுக்கு கம்மல் வாங்கி குத்தினாலும் சுவாரஸ்யமான படமாக்கலில் லிங்கு கிங்கு.

படத்தின் பட்ஜெட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகம் வைத்து ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு பெரும் தொகைக்கு தள்ளிவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஒருவேளை நியாயமான விலைக்கு விற்றிருந்தால், படத்தை வாங்கியவருக்கு கோடி கோடியாக கொட்டியிருக்கும். மாறாக வாங்கிய ரேட்டை நினைத்துப் பார்த்தால் இந்த கம்பெனியின் கதியும் தெருக்கோடிதானா என்று நினைக்க வேண்டியிருக்கிறது.