8 நவம்பர், 2012

66-A : ஏன் எதிர்க்க வேண்டும்?


இந்தியாவில் சட்டங்களை எழுதுபவர்கள் மற்றும் திருத்துபவர்களின் சட்ட அறிவைக் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளின் சட்டங்களை வாசித்தவர்கள். இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பதையெல்லாம் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு நம் சமூகம் குறித்த சரியான புரிதல் இருக்கிறதா என்பதுதான் நம்முடைய சந்தேகம். ஒரு புதிய சட்டத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்களை மிக சுலபமாக பழிவாங்க முடிந்தால் அந்த சட்டமோ, சட்டத் திருத்தமோ எவ்வளவு அபத்தமானது.. ஆபத்தானது?

பெங்களூரில் மாலினி என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டார்இவர் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். இவருக்கும், இவரது காதலருக்கும் ஏதோ தகராறு. வாய்ச்சண்டை போட்டு காதலர் பிரிந்துச் சென்றதும் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் இட்டார். “மகிழ்ச்சியான நாள் இன்று. கேர்ள்ஃப்ரண்டை பிரிந்துவிட்டேன். சுதந்திரநாள் வாழ்த்துகள்”. மாலினி தற்கொலை செய்துக் கொண்டார். காதலரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இந்த தற்கொலைக்கு தூண்டுதல் என்று காவல்துறை கருதிஅவர்மீது இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்அனேகமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோடுவேறு சில தண்டனைகளும் கிடைக்கலாம்.

அடிக்கடி இந்தியாவில் சைபர் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் சைபர் சட்டத்தின் தண்டனை ஒப்பீட்டளவில் அதிகம். ஐ.டி. சட்டம் 66-ஏவின் படி causing annoyance or inconvenience electronically என்று குறிப்பிடப்படும் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் மேலும் சில ஆண்டுகள்) வழங்கப்படுகிறது. இதில் annoyance என்று சொல்லப்படுவதற்கு என்ன வரையறை என்கிற தெளிவு இல்லை. கலைஞரை யாராவது திட்டினால் நான் irritate ஆவேன். அவ்வாறு திட்டியவரின் மீது 66-ஏவின் படி வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றால் இது என்ன நீதி?

‘துப்பாக்கி திரைப்படம் மொக்கை’ என்று எனக்கு தோழர் கார்க்கி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அதை நம்பி நாலு பேருக்கு நானும் ஃபார்வேர்ட் செய்கிறேன். இதனால் இளையதளபதி விஜய் மன உளைச்சல் அடைந்தால், அவர் கார்க்கி மீதும் என் மீதும் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை காவல்துறையும், நீதித்துறையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் செல்வாக்கும், அதிகாரமும் விஜய்க்கு உண்டல்லவா? மேலும் இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டவரை கைது செய்ய வாரண்ட் அவசியமில்லையாம்.

66- என்னவோ இண்டர்நெட்டில் ஈடுபடும் காமன்மேன்களை மட்டும்தான் அடக்கும் என்று நினைத்தோ என்னவோ ஊடகங்கள் போதுமான எதிர்ப்பைத் தெரிவிப்பதில்லை. ஒருவகையில் குஷியாக கூட இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவாக பத்திரிகைகளில் எழுதப்படுவதற்கு ‘அவதூறு வழக்கு’கள் தொடுக்கப்படுவது வழக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ‘அவதூறு வழக்கு’ இன்று நாடு முழுக்க பிரபலமாகியிருக்கிறது. அவதூறு வழக்கு என்பது கிட்டத்தட்ட விசாரணைக் கமிஷன் மாதிரி. பெரியதாக செய்கூலி, சேதாரம் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மீது மட்டும்தான் 66-ஏ பாயுமென்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.

இன்று அச்சில் வரும் எல்லா ஊடகங்களுமே இணைய வடிவையும் கொண்டிருக்கிறது. அவ்வகையில் எந்த ஒரு பத்திரிகையின் மீதும், தொலைக்காட்சி சேனல் மீதும் 66-ஏ-வை பாயவைக்க முடியும். any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device என்றுதான் சட்டம் கூறுகிறது. இந்த communication device என்கிற பதம் வெறுமனே இணையத்துக்கு மட்டுமல்ல. டிவி, மொபைல்போன் ஆகியவற்றுக்கும் கூட பொருந்தும் இல்லையா? எனவே 66-ஏ என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களுக்கும் கூட அச்சுறுத்தல்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கட்டுரை எழுதியதற்காக அந்த பத்திரிகையின் நிருபரில் தொடங்கி ஆசிரியர், பதிப்பாளர் அத்தனை பேரும் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிற வகையில் 66-ஏ-வை எதிர்க்க அனைவருமே (ஊடகங்களும் சேர்த்துதான்) கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.

தவறாமல் வாசிக்கவும் : 66-ஏ குறித்த அய்யா தருமியின் பதிவு

5 நவம்பர், 2012

யார் ஜெயிப்பது நல்லது?


அமெரிக்கா தனது அதிபரை நவம்பர் 6ம் தேதி தேர்தெடுக்கிறது.யார் அதிபர் ஆனால் இந்தியாவுக்கு நல்லது?

நவம்பர் 6ம் தேதி அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படப் போவது அமெரிக்க அதிபர்தான் என்றாலும், அவர் அடுத்த நான்காண்டுகளுக்கு உலகின் பல முக்கியமான விஷயங்களைத் தீர்மானிப்பவராக இயங்குவார் என்பதுதான் வரலாறு? ஒபாமா, ரோம்னி இந் இருவரில் யார் வந்தால் இந்தியாவிற்கு நல்லது?  

அவுட் சோர்சிங் :

பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அலுவல்கங்களில் நடக்க வேண்டிய பணிகளையும், விற்பனை தொடர்பான ஃபாலோ அப் பணிகளையும் செலவைக் குறைப்பதற்காக அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இதில் கணிசமான பணிகள் இந்தியாவில் உள்ள பிபிஓ கம்பெனிகளுக்கு கிடைக்கின்றன. நம் இளைஞர்கள் பலருடைய வேலை வாய்ப்புக்கள் இதைச் சார்ந்திருக்கின்றன. அதே போல் பல மென்பொருள் வேலைகளும். இந்த விஷ்யத்தில் இந்த ஒருவரின் நிலை என்ன?

அவுட்சோர்சிங் பணிகளால் அமெரிகாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய  வேலைளை கணிசமாக இந்தியா அள்ளிக்கொண்டு போகிறது என்கிற ஒபாமாவின் அலட்டலுக்கு அமெரிக்காவிலேயே பெரிய ஆதரவில்லை. அதனால் ஒபாமாவே இந்த விஷயத்தை ஒரு அளவுக்கு மேல் பிரமாதப்படுத்தமாட்டார்.

ரோம்னியைப் பொறுத்தவரை  தொழில் வர்த்தகப் பின்புலத்தில் வந்தவர் என்பதால், இந்தியாவுடனான இப்போதைய அமெரிக்க வணிக உறவை ஆதரிப்பவராகவே அவர் இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமே கூட பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக அவரது நிறுவனம் நிறைய ‘அவுட்சோர்ஸ்’ பணிகளை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் பணிகள் குறித்த ஒபாமாவின் கருத்துக்கு நேரெதிரான கருத்து கொண்டவராகவே ரோம்னியை சித்தரிக்கிறார்கள்.

வணிகம் :

அவுட்சோர்சிங் குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் இந்தியர்களுக்கு எதிரானது என்கிற பார்வை  காரணமாக, இந்திய ஊடகங்கள்  ஒபாமாவால் இந்தியாவுக்கு பிரயோசனமில்லை என்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான வணிக உறவு வழக்கத்தை விடவும் அதிகமாகவே பலப்பட்டிருக்கிறது என்று டெமாக்ரடிக் கட்சியினர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான முதல் இந்திய விஜயத்தின் போது, அவர் நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களை தன்னோடு அழைத்துவந்து இந்தியாவுக்கு ஏராளமான தொழிற்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்

ரோம்னி அமெரிக்காவின் டாலர் மதிப்பு சர்வதேச அளவில் வீழ்ந்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதற்கெல்லாம் சீனாவின் வியாபாரக் கொள்கைகள் காரணமாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்.
யார் அடுத்த அதிபரானாலும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சீனாவா, இந்தியாவா என்று வரும்போது பல அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவையே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களே வெறுத்தாலும் அவர்கள் பொருளாதாரத்தைச் சீனா தன் கைக்குள் வைத்திருக்கிறது எனபது இன்னொரு யதார்த்தம்.

அயலுறவு :

ஒபாமா, ரோம்னி இருவருமே தேர்தல் பிரச்சாரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். இந்தியா அமெரிக்காவின் நம்பகமான நாடுகளில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அயல்நாட்டு கொள்கை பற்றிய விவாதத்தில் இருவரும் மிகக்கவனமாக இந்தியாவைப் பற்றி தவறாக ஏதும் பேசிவிடக் கூடாது என்று தவிர்த்திருக்கிறார்கள்.

ஆனால் ஆப்கானிஸ்தான், ஈர்ராக் ஆகிய நாடுகளிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளும் போது அமெரிக்கா என்ன நிலை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்து பல விஷயங்கள் தீர்மானமாகும்.  ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் போது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற டம்மி அரசாங்கத்தை அமெரிக்கா அங்கு விட்டுச் செல்லுமானால் அதை பாகிஸ்தான் இந்தியாவிற்க்கு எதிராகப் பயன்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. அதே போல் இந்தியாவின் கைப்பாவைகளை ஆட்சியில் அமர்த்திவிட்டுப் போகுமானால் அது பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலைப் பாதிக்கும் என பாகிஸ்தான் நினைக்கிறது. இதை எப்படி அமெரிக்கா பாலன்ஸ் செய்யப் போகிறது என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.

இன்னொரு விஷ்யம் ஈரான். இந்தியா, ஈரானிலிருந்து கச்சா கச்சா எண்ணெய் பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறது,. ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த ஒரு திருப்தியான உடன்பாட்டுக்கு ஒபாமாவின் இந்திய வருகையின்போது இருநாடுகளும் வந்தன. ஆனால் சில காலமாக ஒபாமாவின் கறார்த்தனத்தால் நாம் விரும்பிய அளவு எதிர்ப்பார்க்கும் அளவு எண்ணெயை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யமுடியவில்லை. இந்த பற்றாக்குறையால் இந்தியாவில் எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க இயலாத விஷயமாகி விட்டது.  ஈரானிய எண்ணெயை மற்ற நாடுகளுக்கு விற்கும் விவகாரத்தில் ஒபாமாவை விட தான் கறாராக இருக்கப் போவதாக ரோம்னி அறிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட வகையில் நமக்கு கெட்ட சகுனம். ரோம்னி இஸ்ரேலின் ஆதரவாளர். இஸ்ரேலின் நலன்களுக்காக இரான் தாக்கப்பட வேண்டும் என்ற நிலையை அவர் எடுத்தால் அது நம் நிலையை இன்னும் சிக்கலாக்கும்.

விசா விவகாரங்கள் :

கடந்த நான்காண்டுகளில் ஒபாமா அரசு H1B விசா வழங்கும் விஷ்யததில் முன்பிருந்த அரசுகளைவிடத் தாராளமாக நடந்து கொள்வதற்கில்லை. ஆனால் இந்திய அறிவியலாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க அவரது கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. கல்விக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களையும், அங்கேயே விசாவில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காகவும் பயன்தரும் வண்ணமாக குடிபெயர்வு விதிகளை தளர்த்துவேன் என்று ஒபாமா வாக்குறுதி தருகிறார். ரோம்னியைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். ரோம்னி தனது பிரசாரத்தின் போது வெளியிட்ட ஒரு கருத்து இந்தியர்க்ளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சட்ட ரீதியாக குடியேறியவர்களின் துணைவர், குழந்தைகளுக்கு வழங்கப்ப்டும் விசா எண்ணிக்கைகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்த இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். எச்1பி விசா குறித்த புதிய கொள்கைகளை அவர் முன்வைத்தால் மட்டுமே, அதைக் குறித்துத் தெளிவாக முடிவுக்கு வரமுடியும்

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் :

அமெரிக்கா வாழ்இந்தியர்கள் எவை எவற்றை முதன்மையானப் பிரச்னைகளாக கருதுகிறார்கள் என்பதை அடையாளம் காண்பதில் இரு வேட்பாளர்களுமே கொஞ்சம் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். வணிகம், குடி பெயர்தல், இந்திய தேசிய பாதுகாப்பு, அணுக்கொள்கை என்று ஏராளமான பிரச்னைகளில் அமெரிக்காவின் அணுக்கத்தை இந்தியர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவேதான் சமீபமாக அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் தாமாக முன்வந்து இந்தியர்கள் இணையும் போக்கு அதிகரிக்கிறது. அனீஷ் சோப்ரா, கால் பென் போன்றோர் ஒபாமாவின் நிர்வாகத்தில் பணியாற்றுகிறார்கள். பாபி ஜிண்டால், நிக்கி ஹாலி போன்றோர் ரிபப்ளிகன் கட்சியின் ஆளுநர்கள். இவர்களைப் போலவே நிறைய அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆளுகையில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

கடைசிக்கட்ட நிலவரத்தின் படி ஒபாமா மீண்டும் வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று பெரும்பாலான அமெரிக்காவாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். இவர்களில் நாலில் மூவர் ஒபாமாவுக்கு ஓட்டளிக்கப் போவதாகவே கணக்கெடுப்புகள் வாயிலாகத் தெரிந்திருக்கிறது.

இறுதியாக  
யார் வெல்வார்கள் எனப்து முக்கியமில்லை. கற்பனைகள் ஏதுமின்றி எதிர்காலத்தை எதிர்கொள்ளப் பழகுவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

3 நவம்பர், 2012

ஸ்கைஃபால்


ஒருவழியாக தான் ஏற்றுக்கொண்ட ஜேம்ஸ் பாத்திரத்துக்கு நியாயம் வழங்கியிருக்கிறார் டேனியல் கிரேக். சமீப வருடங்களாக வந்த பாண்ட் சீரியஸ் படங்கள் ஜேம்ஸின் தனித்துவ ஸ்டைலையும், குணாதிசயங்கலையும் குலைப்பதாக பாண்ட் ரசிகர்கள் குறைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஸ்கைஃபால்’ அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது.

ஜேம்ஸுக்கு பொன்விழா என்பதால் மிகக்கவனமாக ஸ்கைஃபாலை கையாண்டிருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் பிசகினாலும் ஜேம்ஸின் வரலாற்றில் தன்னுடைய பெயர் மோசமாக பதியப்பட்டுவிடும் என்கிற அச்சமும், கவனமும் அவரை சரியான பாதையில் செலுத்தியிருக்கிறது.

சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்றோரே தங்களை சாதாரண மனிதர்கள், தங்களுக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, லொட்டு, லொசுக்கெல்லாம் உண்டு என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காலம் இது. யதார்த்த ஹீரோவாக அறிமுகமாகிய ஜேம்ஸ் வருடாவருடம் கூடிக்கொண்டே போகும் ரசிகர்களின் அதீத எதிர்ப்பார்ப்பு காரணமாக ஃபேண்டஸி ஹீரோவாக தரைக்கு ஒரு அடிமேலாகவே சில காலமாக சாகஸம் செய்துக் கொண்டிருந்தார். இழுத்துப் பிடித்து 007ஐ அவரது வழக்கமான பாதைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சாம் மெண்டாஸ்.

பொதுவாக ஜேம்ஸ் படங்களில் அவரது மிலிட்டரி இண்டெலிஜென்ஸ் அமைப்பே மனிதகுலத்துக்கு எதிரிகளான வில்லன்களிடம் ஆதிக்கம் செலுத்தும். எம்.ஐ.6-ன் ஏஜெண்ட்களை பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள். 007 மாதிரியான ஏஜெண்ட்கள் அவர்களை துரத்தி துரத்தி சூப்பர் சேஸ் அடிப்பது பாண்ட் சீரியஸ் படங்களில் தவிர்க்கமுடியாத அம்சம். ஸ்கைஃபாலில் தலைகீழ். வில்லனான சில்வா (இவரும் எம்.ஐ.6ன் முன்னாள் ஏஜெண்ட்தான்) மிலிட்டரி இண்டெலிஜென்ஸை முற்றிலுமாக குலைத்து, அந்த அமைப்பையே கிட்டத்தட்ட நிர்மூலமாக்கி விடுகிறார்.

வழக்கமான பாண்டும் இந்தப் படத்தில் இல்லை. முதல் காட்சியிலேயே துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி உயிர்பிழைத்து வருகிறார். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார். அவரால் குறிபார்த்து சுடமுடியவில்லை. கொஞ்சம் ஓடினாலே மூச்சு வாங்குகிறது. எம்.ஐ.6 கலைக்கப்படும் என்கிற சூழலில் மேடம் ‘எம்’ வேறுவழியில்லாத நிலையில் கருணை காட்டி, பணிக்கு தகுதியில்லாத ஜேம்ஸை சேர்த்துக் கொள்கிறார். மேடமின் நம்பிக்கையை மட்டுமின்றி உயிரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். ஏனெனில் கிட்டத்தட்ட சைக்கோவான வில்லனுக்கு மேடமை போட்டுத்தள்ள வேண்டும் என்று பழிவெறி.

வில்லன் சில்வாவாக நடித்திருக்கும் ஜேவியர் பார்டெமே மொத்தப் பாராட்டுகளையும் அள்ளிக்கொண்டு போகிறார். இவரது பாத்திரப் படைப்பு ஜோக்கரை நினைவுபடுத்தினாலும், ஸ்டைலில் கிழித்திருக்கிறார். எடுத்தவுடனேயே உளவுப்படையிடம் சிக்கிக் கொள்கிறாரே, இவ்வளவு சப்பையா என்று நினைக்கும்போது அவர் எடுக்கும் விஸ்வரூபம் அட்டகாசம்.
முந்தையப் படங்களில் எல்லாம் எவ்வளவு இக்கட்டான சூழல்களிலும் ஜேம்ஸின் முகத்தில் ஒரு குறுநகை தவழ்ந்துக் கொண்டேயிருக்கும். குறிப்பாக பெண்களை பார்க்கும்போது கவர்ச்சிகரமான சிரிப்பை உதிர்ப்பார். ஸ்கைஃபாலில் ஒரு காட்சியில் கூட ஜேம்ஸ் சிரித்ததாக நினைவில்லை. ஆரம்பத்தில் இருந்தே டென்ஷன், டென்ஷன், டென்ஷன்தான். எனவே அவருக்கு ஹீரோயினோடு ‘குஜால்’ செய்யவும் நேரமின்றி போகிறது. ஜேம்ஸ் படங்களின் சிறப்பம்சமான ‘பிட்’டை மட்டும் ரசிக்கும் ரசிகர்களுக்கு இது பேரிழப்பு.

போலவே ஜேம்ஸுக்கு எப்போதுமே வித்தியாசமான ஆயுதங்களை உளவு அமைப்பு வழங்கும். இந்த ஆயுதங்களை ஜேம்ஸ் கையாளும் லாவகம் ரசிகர்களை குஷிப்படுத்தும். எம்.ஐ.6 அமைப்பே இருத்தலியல் நெருக்கடியில் இருப்பதால் அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்காததாலோ என்னவோ, இருப்பதை வைத்து ஜேம்ஸ் சிறப்பாக சமாளித்திருக்கிறார் (படத்துக்கு ஃபைனான்ஸ் செய்த எம்.ஜி.எம்-முக்கும் நிதி நெருக்கடி என்பது கதையோடு சம்பந்தப்படாத வேறு விஷயம்).

தான் பிறந்த ஸ்காட்லாந்துக்கு ஜேம்ஸ், எம்-முடன் போவது, அங்கே ஜேம்ஸின் பெற்றோருடைய கல்லறை, ‘அனாதைக் குழந்தைகள்தான் உளவாளியாக சிறந்தவர்கள்’ என்கிற எம்-முடைய கருத்து, உணர்வுப்பூர்வமான இறுதிக்காட்சி என்று ‘அழுகாச்சி’ காட்சிகள் ஏராளம். டேனியல் கிரேக்கை காதலிக்கும் இளம்பெண்கள் படம் முடியும்போது கர்ச்சீப்பால் கண்ணை துடைத்துக்கொண்டே வெளியே வருகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் ஸ்கைஃபாலில் இயான்ஃப்ளெமிங்கின் ஜேம்ஸ் மீண்டும் பிறந்திருக்கிறார். அடுத்த தலைமுறை ஜேம்ஸ் பாண்ட் சீரியஸ் படங்களின் போக்கை தீர்மானிக்கிறது என்கிற வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. உலகமே காறித்துப்பிய ‘கோல்டன் ஐ’யை தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள் ஆசிய ரசிகர்கள். அத்தகைய மசாலா ஸ்கை ஃபாலில் கிடைக்காது என்பதால் ஓரளவுக்கு இவர்கள் ஏமாற்றம் அடையக்கூடும். இதுவரை இப்படம் வெளியான நாடுகளில் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் நெ.1 ஆக சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. விமர்சகர்களும் ஒருமனதாக கொண்டாடுகிறார்கள். எனினும் அடுத்த வாரம் அமெரிக்காவில் வெளியாகும்போதுதான், இந்த புது ஜேம்ஸ்பாண்ட் வசூல்ரீதியாகவும் வேலைக்கு ஆவாரா என்பது தெரியும்.

2 நவம்பர், 2012

முட்டைக்கு மொட்டை அடிப்பது


சென்னை விமானநிலையத்தில் விஜயகாந்த் நடந்துகொண்ட முறை அநாகரிகமானது. பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்றால் எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றிருக்கலாம். மாறாக தன்னுடைய கட்சிக்காரர்களை நடத்துவதைப் போல பத்திரிகையாளர்களை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதே நேரம், புரட்சித்தலைவியை இதேபோல விமானநிலையத்தில் மடக்கி, குறுக்கிட்டு, இதே பத்திரிகையாளர்கள் பேச ‘தில்’ இருக்கிறதா என்று பொதுமக்கள் ஊருக்குள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ கணக்காக, கொஞ்சம் கிராமத்து மனிதர் மாதிரியாக வெள்ளந்தியாக பழகுகிறார் என்பதற்காக மனைவியோடு கைபிடித்துச் சென்றுக் கொண்டிருந்தவரை குறுக்கிட்டு எகனைமொகனையாய் பேசியதை என்னவென்று சொல்ல?

குறிப்பிட்ட பத்திரிகையாளர் (அவர் தற்போதைய அரசு ஆதரவு பத்திரிகையாளர் என்பதில் சந்தேகம் வேண்டாம்) விஜயகாந்திடம் சென்று அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், முதல்வரை சந்தித்ததைப் பற்றி கருத்து கேட்கிறார். விஜயகாந்துக்கு விடையளிக்க விருப்பமில்லை. பதிலுக்கு ஊரெல்லாம் கரெண்டு இல்லை. இதைப்பத்தி போயி ஜெயலலிதாகிட்டே என்னன்னு கேளு என்று பதில் அளித்திருக்கிறார். புத்திசாலித்தமான பத்திரிகையாளர் பதிலுக்கு ‘ரிஷிவந்தியத்தில் மட்டும் கரெண்டு இருக்கா?’ என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார். கோபத்துக்கு பேர் போன விஜயகாந்துக்கு கோபம் வந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ரிஷிவந்தியம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது? ரிஷிவந்தியத்துக்கும் ஜெயலலிதாதான் முதல்வர். இந்த ஆட்சியின் மின்சார வாரியம்தான் அந்த ஊருக்கும் மின்சாரம் கொடுக்க வேண்டும்.


இதையடுத்துதான் ரசபாசம் ஆகியிருக்கிறது. குறிப்பிட்ட பத்திரிகையாளரை விஜயகாந்த் ஏகவசனத்தில் ‘நாயே’ என்று விளித்திருக்கிறார். உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் கொடுக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகையாளர்களும் விஜயகாந்துக்கு எதிராக நூதனப் போராட்டம் ஒன்றினை அறிவித்திருக்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருகவென்று கேட்டுக் கொள்கிறோம்.

ஆட்சிக்கு வந்தபோது வாராவாரம் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் முதல்வர் மட்டுமின்றி அமைச்சர்களும், உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், அதிகாரிகளும் கூட பத்திரிகைகளிடம் எதைப்பற்றியும் பேச விரும்புவதில்லை. எதிர்தரப்பினரின் கருத்துகளை வாங்கிவிட்டு, அரசு தரப்பாக பத்திரிகைகளே பேசித்தொலைக்க வேண்டிய அபாக்கியமான நிலைமை.

அப்படியும் ஏதோ இலைமறை காய்மறையாக எழுதினாலும் முதல்வரோ, அமைச்சர்களோ பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகளை அம்புமாதிரி தொடர்ச்சியாக எய்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிகாரத்துக்கு எதிராக விமர்சனம் வைக்கும் காமன்மேன்கள் மீதும் இப்போது வழக்குகள் பாய ஆரம்பித்திருக்கிறது.

இப்படியிருக்கும் பிரகாசமான தமிழக பத்திரிகைச் சுதந்திரச் சூழலில் விஜயகாந்துக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அவசியம்தான். நமது உரிமையை நிலைநாட்ட இதைக்கூட செய்யவில்லை என்றால் எப்படி. நம்மை சீண்டினால் என்னாகும் என்பதை உலகம் உணரவேண்டாமா. குறைந்தபட்சம் பத்திரிகையாளர்கள் என்று ஒரு இனம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதையாவது மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா. நான்கூட பேசாமல் கையில் ‘ரெட்டை எலை’ பச்சை குத்திக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். ஐம்பது வயதுக்கு பிறகு ராஜ்யசபா சீட்டாவது கிடைக்கும்.

1 நவம்பர், 2012

அம்மா

தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா கூட்டத்தொடர் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஏர்போர்ட் பேட்டி, அவரது கட்சியினர் சிலர் தேமுதிகவின் அம்மா கோஷ்டியாக உருவெடுத்திருப்பது என்று வழக்கத்தைவிடவும் சுவாரஸ்யமாகவே நடப்புகள் இருக்கிறது.

ஓ.பி.எஸ்., செ.கு.தமிழரசன், சரத்குமார் போன்றோர் மிகச்சிறப்பாக மன்றத்தில் பேசிவருகிறார்கள். ஓ.பி.எஸ்.சின் பேச்சு பதினாறு நிமிடங்களுக்கு சொல்லருவியாய் பொழிந்தது. அந்த சொற்பொழிவில் பத்து நிமிடங்களுக்கு ‘அம்மா’ என்கிற சொல்லே ஆக்கிரமித்திருந்ததை திமுக சட்டமன்றத் தலைவர் ஸ்டாலின் குறையாக சொல்லுகிறார்.

அதுபோலவே கவிமழையாய் பொழிந்த, அம்பேத்கரிய இயக்கத்தின் செ.கு.தமிழரசனின் புரட்சி முழக்கத்திலும் ‘அம்மா’ என்கிற சொல் அளவுக்கதிமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஃபேஸ்புக்கில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் சட்டமன்ற உறுப்பினரான சிவசங்கர்.


இதற்கே மலைத்துப் போய்விட்டால் எப்படி? இனிமேல்தான் தேமுதிக அம்மா கோஷ்டியினர் களமிறங்கப் போகிறார்கள். அவர்களது ‘அம்மா’ துதியில் ஓ.பி.எஸ், செங்கோட்டையன் போன்ற அனுபவஸ்தர்களே வெட்கி, நாணி தலைகுனியக்கூடிய சூழல் உருவாகத்தான் போகிறது. அப்போது இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஏற்கனவே 91-96 அம்மாவின் பொற்கால ஆட்சியிலும் நான்கைந்து காங்கிரஸ் கைப்புள்ளைகளை பிடித்து இம்மாதிரி ‘போற்றி’ பாடவைத்த வரலாற்றுப் பெருமை அதிமுக ஆட்சிக்கு உண்டு.

மேலும் ‘அம்மா’ என்கிற சொல்லின் பெருமையை நாம் அனைவரும் இப்போது உணர்ந்தாக வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்காவில் மாடுகள் கூட ‘அம்மா’ என்றுதான் சொல்கின்றன. அமெரிக்கா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இதுதான் நிலை. ஐக்கிய நாடுகள் சபைக்கு டெசோவின் தீர்மானத்தை அளிக்க அமெரிக்காவுக்குப் போயிருக்கும் ஸ்டாலின் அங்கே இந்த உண்மையை உணர்வார். தாய்மையின் பெருமையை பறைசாற்றும் ‘அம்மா’ என்கிற சொல்லை ஆயிரம் முறை என்ன.. லட்சம் முறை, கோடி முறை சொன்னாலும் போகிற வழிக்கு புண்ணியம்தான்.

சுயமரியாதை சுடர்களாக வாழும் பொதுவுடைமை இயக்கத்தின் தா.பாண்டியனும், திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோவும், எந்த சித்தாந்தப் பின்னணி என்பதே தெரியாமல் தலைவராகி விட்ட மாவீரன் செந்தமிழன் சீமானும் இந்த அம்மா புகழ்பாடும் கலாச்சாரத்தை விமர்சித்ததுண்டா? அவர்களுக்கு இருக்கும் நாகரிகம் திமுகவின் சட்டமன்றத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டாமா?

ஒன்றை மட்டும் இறுதியாகவும், உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறோம். கோயில்களில் கூட இறைவன் பெயரைச் சொல்லிதான் லட்சார்ச்சனை செய்கிறார்கள். மாறாக வைரவிழா காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க நம்முடைய சட்டமன்றத்தில் கோடியார்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ’அம்மா’ என்கிற சொல்லை இந்த ஐந்து வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு கோடி முறையாவது, சட்டமன்ற நடவடிக்கைப் பதிவேட்டில் பதிந்தே தீருவது என்கிற தீவிர லட்சியத்தோடு ஓ.பி.எஸ்.ஸின் சீரியத் தலைமையில் நம் சட்டமன்ற உறுப்பினர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

உலக நாகரிக வரலாற்றில் எந்தவொரு சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ இத்தகைய சாதனை நடைபெற்றதாக வரலாற்றில் குறிப்புகள் ஏதுமில்லை. அவ்வகையில் இது உலக சாதனை ஆகிறது. அமெரிக்க செனட்டில் ‘மம்மி’ என்று ஆயிரம் முறை கூட சொல்லியிருக்க மாட்டார்கள். கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்களே முன்வந்து தங்கள் புத்தகத்தில் தற்கால சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை பதித்து சிறப்பு செய்வார்கள். ஒலிம்பிக்கில் வேண்டுமானால் யார் அதிகமுறை ‘அம்மா’ என்று உச்சரிப்பது என்று போட்டியைக் கொண்டு வாங்களேன் பார்ப்போம். தங்கம், வெள்ளி, வெண்கலம், பித்தளை, அலுமினியம் என்று அத்தனைப் பதக்கங்களையும் நமது சட்டமன்ற உறுப்பினர்களே அள்ளிவந்து, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ஆனாலும் ஒரு சின்ன குறை இருக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தங்களை பெற்ற தாயை, தாய் என்று அழைக்காமல் ‘அம்மா’ என்று தவறுதலாக அழைக்கிறார்கள். தங்கத்தாரகை புரட்சித்தலைவியை
 தவிர வேறு யாரையாவது ‘அம்மா’ என்று அழைப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்கிற புதிய சட்டத்திருத்தத்தை நடப்பு சட்டமன்றத்திலேயே ஓ.பி.எஸ். முன்மொழிந்து, சரத்குமார் வழிமொழிந்து உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று சட்டமன்றத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். மேலும் அமிர்தானந்தமாயி போன்ற பெண் சாமியார்கள் இனியும் தங்களை ‘அம்மா’வென்று விளம்பரப்படுத்தும் பட்சத்தில், மக்களை மோசடி செய்ததாக கருதி, அவர்களின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சாதனைகள் படைக்கப்படுவது பிற்காலத்தில் உடைக்கப்படுவதற்கே. அம்மா பிறரின் சாதனைகளை உடைப்பவரல்ல. அவர் முந்தைய ஆட்சிக்காலம் செய்த சாதனைகளை, அவரேதான் அடுத்த ஆட்சி அமையும்போதும் முறியடிப்பார் என்பது இந்தியாவே உணர்ந்த பேருண்மை. இந்த ஆட்சிக்காலத்தில் செய்யப்படும் இந்த கோடியார்ச்சனை சாதனையை விஞ்சிய சாதனையும் கூட, அடுத்த அம்மா ஆட்சிக்காலத்தில் மட்டுமே நடைபெறும்.


சாதனைகளுக்கே சால்ட் கொடுக்கும் சாகசத்தலைவி அல்லவா நம் சமூகநீதி காத்த வீராங்கனை?