1 நவம்பர், 2012

அம்மா

தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா கூட்டத்தொடர் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஏர்போர்ட் பேட்டி, அவரது கட்சியினர் சிலர் தேமுதிகவின் அம்மா கோஷ்டியாக உருவெடுத்திருப்பது என்று வழக்கத்தைவிடவும் சுவாரஸ்யமாகவே நடப்புகள் இருக்கிறது.

ஓ.பி.எஸ்., செ.கு.தமிழரசன், சரத்குமார் போன்றோர் மிகச்சிறப்பாக மன்றத்தில் பேசிவருகிறார்கள். ஓ.பி.எஸ்.சின் பேச்சு பதினாறு நிமிடங்களுக்கு சொல்லருவியாய் பொழிந்தது. அந்த சொற்பொழிவில் பத்து நிமிடங்களுக்கு ‘அம்மா’ என்கிற சொல்லே ஆக்கிரமித்திருந்ததை திமுக சட்டமன்றத் தலைவர் ஸ்டாலின் குறையாக சொல்லுகிறார்.

அதுபோலவே கவிமழையாய் பொழிந்த, அம்பேத்கரிய இயக்கத்தின் செ.கு.தமிழரசனின் புரட்சி முழக்கத்திலும் ‘அம்மா’ என்கிற சொல் அளவுக்கதிமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஃபேஸ்புக்கில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் சட்டமன்ற உறுப்பினரான சிவசங்கர்.


இதற்கே மலைத்துப் போய்விட்டால் எப்படி? இனிமேல்தான் தேமுதிக அம்மா கோஷ்டியினர் களமிறங்கப் போகிறார்கள். அவர்களது ‘அம்மா’ துதியில் ஓ.பி.எஸ், செங்கோட்டையன் போன்ற அனுபவஸ்தர்களே வெட்கி, நாணி தலைகுனியக்கூடிய சூழல் உருவாகத்தான் போகிறது. அப்போது இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஏற்கனவே 91-96 அம்மாவின் பொற்கால ஆட்சியிலும் நான்கைந்து காங்கிரஸ் கைப்புள்ளைகளை பிடித்து இம்மாதிரி ‘போற்றி’ பாடவைத்த வரலாற்றுப் பெருமை அதிமுக ஆட்சிக்கு உண்டு.

மேலும் ‘அம்மா’ என்கிற சொல்லின் பெருமையை நாம் அனைவரும் இப்போது உணர்ந்தாக வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்காவில் மாடுகள் கூட ‘அம்மா’ என்றுதான் சொல்கின்றன. அமெரிக்கா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இதுதான் நிலை. ஐக்கிய நாடுகள் சபைக்கு டெசோவின் தீர்மானத்தை அளிக்க அமெரிக்காவுக்குப் போயிருக்கும் ஸ்டாலின் அங்கே இந்த உண்மையை உணர்வார். தாய்மையின் பெருமையை பறைசாற்றும் ‘அம்மா’ என்கிற சொல்லை ஆயிரம் முறை என்ன.. லட்சம் முறை, கோடி முறை சொன்னாலும் போகிற வழிக்கு புண்ணியம்தான்.

சுயமரியாதை சுடர்களாக வாழும் பொதுவுடைமை இயக்கத்தின் தா.பாண்டியனும், திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோவும், எந்த சித்தாந்தப் பின்னணி என்பதே தெரியாமல் தலைவராகி விட்ட மாவீரன் செந்தமிழன் சீமானும் இந்த அம்மா புகழ்பாடும் கலாச்சாரத்தை விமர்சித்ததுண்டா? அவர்களுக்கு இருக்கும் நாகரிகம் திமுகவின் சட்டமன்றத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டாமா?

ஒன்றை மட்டும் இறுதியாகவும், உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறோம். கோயில்களில் கூட இறைவன் பெயரைச் சொல்லிதான் லட்சார்ச்சனை செய்கிறார்கள். மாறாக வைரவிழா காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க நம்முடைய சட்டமன்றத்தில் கோடியார்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ’அம்மா’ என்கிற சொல்லை இந்த ஐந்து வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு கோடி முறையாவது, சட்டமன்ற நடவடிக்கைப் பதிவேட்டில் பதிந்தே தீருவது என்கிற தீவிர லட்சியத்தோடு ஓ.பி.எஸ்.ஸின் சீரியத் தலைமையில் நம் சட்டமன்ற உறுப்பினர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

உலக நாகரிக வரலாற்றில் எந்தவொரு சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ இத்தகைய சாதனை நடைபெற்றதாக வரலாற்றில் குறிப்புகள் ஏதுமில்லை. அவ்வகையில் இது உலக சாதனை ஆகிறது. அமெரிக்க செனட்டில் ‘மம்மி’ என்று ஆயிரம் முறை கூட சொல்லியிருக்க மாட்டார்கள். கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்களே முன்வந்து தங்கள் புத்தகத்தில் தற்கால சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை பதித்து சிறப்பு செய்வார்கள். ஒலிம்பிக்கில் வேண்டுமானால் யார் அதிகமுறை ‘அம்மா’ என்று உச்சரிப்பது என்று போட்டியைக் கொண்டு வாங்களேன் பார்ப்போம். தங்கம், வெள்ளி, வெண்கலம், பித்தளை, அலுமினியம் என்று அத்தனைப் பதக்கங்களையும் நமது சட்டமன்ற உறுப்பினர்களே அள்ளிவந்து, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ஆனாலும் ஒரு சின்ன குறை இருக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தங்களை பெற்ற தாயை, தாய் என்று அழைக்காமல் ‘அம்மா’ என்று தவறுதலாக அழைக்கிறார்கள். தங்கத்தாரகை புரட்சித்தலைவியை
 தவிர வேறு யாரையாவது ‘அம்மா’ என்று அழைப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்கிற புதிய சட்டத்திருத்தத்தை நடப்பு சட்டமன்றத்திலேயே ஓ.பி.எஸ். முன்மொழிந்து, சரத்குமார் வழிமொழிந்து உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று சட்டமன்றத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். மேலும் அமிர்தானந்தமாயி போன்ற பெண் சாமியார்கள் இனியும் தங்களை ‘அம்மா’வென்று விளம்பரப்படுத்தும் பட்சத்தில், மக்களை மோசடி செய்ததாக கருதி, அவர்களின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சாதனைகள் படைக்கப்படுவது பிற்காலத்தில் உடைக்கப்படுவதற்கே. அம்மா பிறரின் சாதனைகளை உடைப்பவரல்ல. அவர் முந்தைய ஆட்சிக்காலம் செய்த சாதனைகளை, அவரேதான் அடுத்த ஆட்சி அமையும்போதும் முறியடிப்பார் என்பது இந்தியாவே உணர்ந்த பேருண்மை. இந்த ஆட்சிக்காலத்தில் செய்யப்படும் இந்த கோடியார்ச்சனை சாதனையை விஞ்சிய சாதனையும் கூட, அடுத்த அம்மா ஆட்சிக்காலத்தில் மட்டுமே நடைபெறும்.


சாதனைகளுக்கே சால்ட் கொடுக்கும் சாகசத்தலைவி அல்லவா நம் சமூகநீதி காத்த வீராங்கனை?

6 கருத்துகள்:

  1. பெயரில்லா2:05 PM, நவம்பர் 01, 2012

    கார்த்தி சிதம்பரம் பற்றி (ஊழல்காரர் என்பதுபோல) வெறும் 16 ஃபாலோயர்களுக்கு ட்வீட் செய்த சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ளார். அவர் ட்வீட் வெகு சாதாரணம்! 'காட் ரிப்போர்ட்ஸ்' என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர தன் கருத்தாகக் கூட அல்ல. இப்படியே போனால் நாளை குறுஞ்செய்திகளையும் நோண்டலாம்! மண்ணுமோகன் என்று எழுதும் யாரும் கைது செய்யப்படலாம் (சுவாமி, மோடிக்கெல்லாம் விதிவிலக்கு). மண்ணுமோகன் என்று ஒரு பத்து நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 வருஷம் ஜெயில்! கண் மண் (இது வேறு மண்!) தெரியாமல் காரை ஓட்டி ஆளை அடித்துக் கொன்றுவிட்டால் சிறை 2 வருடம் மட்டுமே! அதே ஆளைப்பற்றி ட்வீட் செய்தால் 3 வருஷமாம்! இதைக் கண்டித்தும் எழுதுங்கள்.

    சரவணன்

    பதிலளிநீக்கு
  2. நீங்களும் இங்கே அம்மா என்று பலமுறை சொல்லியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  3. இலைக்காரரே உங்க பதிவு பிரமாதம். கண்டிப்பா அடுத்த கேஸ் உங்க மேல தான்

    பதிலளிநீக்கு
  4. அம்மா என்றால் தாய். தாய் அன்பு உயர்வானது .தாய் தன் பிள்ளை தவறு செய்தால் கண்டிப்பவராக இருந்தாலும் தண்டனை கொடுக்க மனம் வராது. பழி வாங்கும் தாய் கிடையாது. பலர் மற்றவர்களை மரியாதை நிமித்தமாக 'அம்மா' என்று அழைப்பார்கள்.நீங்கள் விரும்பினாலும் உங்களுக்கு தண்டனை கிடைக்காது . தேவைபட்டால் ஒரு 'சபாஷ்' பட்டம் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  5. "தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தங்களை பெற்ற தாயை, தாய் என்று அழைக்காமல் ‘அம்மா’ என்று தவறுதலாக அழைக்கிறார்கள். தங்கத்தாரகை புரட்சித்தலைவியை தவிர வேறு யாரையாவது ‘அம்மா’ என்று அழைப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் "

    :) :)

    பதிலளிநீக்கு