19 நவம்பர், 2012

முகம் மாறும் தமிழ் சினிமா

சிந்தனைகள், தொழில்நுட்பம், திறமை, அணுகுமுறை, வியாபாரம் ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் சினிமாவில் புது வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது

திரையரங்குகளில் திருவிழாக்கோலம். படம் பார்த்தே ஆக வேண்டும் என்று நீண்டவரிசையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் . குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் மக்கள் வெள்ளம். படம் பார்த்த குழந்தைகள் மீண்டும் அதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். படத்தில் ஹீரோ திரையில் தோன்றியதில் தொடங்கி, படத்தின் இறுதிக்காட்சிவரை கைதட்டல், விசில், ஆரவாரம்.எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன இம்மாதிரி காட்சிகளைப் பார்த்து?

வெகுநாட்களுக்குப் பிறகு சில மாதங்களுக்குமுன் இவற்றைப் பார்க்க முடிந்தது.

காணாமல் போன சூப்பர் ஸ்டார்ஸ்

இத்தனை உற்சாகமும் குதூகலமும் ஏற்படுத்திய இந்தப் படம் ரஜினியோ, கமலோ அல்லது வேறு சூப்பர் ஸ்டார்களோ நடித்த படமல்ல. படத்தின் நாயகன் சிக்ஸ்பேக் உடற்கட்டு கொண்ட ஆணழகனுமல்ல. பின் யார்?

நாம் அன்றாடம் தொல்லையாக நினைக்கும் ‘ஈ’தான் ஹீரோ. தமிழ்/தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட ‘நான் ஈ’ திரையில் பாய்ந்திருக்கும் புது வெள்ளத்தின் ஓர் அடையாளம். தியாகராஜ பாகவதர் காலத்தில் துவங்கிய ஹீரோக்களின் சகாப்தம், காலம் காலமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-சூர்யா என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. கதாநாயக பிம்பத்தின் வழிபாடு அதிகமுள்ள தென்னிந்திய சினிமாவில் மிகச்சிறிய பூச்சியான ‘ஈ’தான் ஹீரோ என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இயக்குனர் ராஜமவுலியின் துணிச்சலான முயற்சிக்கு மக்கள் கொடுத்த பேராதரவு புதிய சிந்தனைகளை அவர்கள் வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சான்று. புதிய, துணிச்சலான முயற்சிகளை புதுமுக இயக்குனர்கள் மேற்கொள்ளத் தூண்டுகோலாக இப்படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது.

ஹீரோ என்பதற்கான இலக்கணங்கள் மாறிவிட்டன. ஹீரோ என்றால் அழகிய முகவெட்டு, ஸ்டைலான நடை உடை பாவனைகள் இருக்க வேண்டும் என்ற நிலைமாறி வருகிறது. ‘சுப்பிரமணியபுரம்’ போன்ற படங்கள் வந்தபோதே மீண்டும் இயக்குனர்களின் படங்களுக்கான பருவம் துவங்கி விட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் முன்னெடுத்த இந்தப் போக்கினை, பின் சேரன், தங்கர்பச்சான், கரு. பழனியப்பன் போன்ற இயக்குனர்கள், ஏன் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள்கூட வளர்த்தெடுத்தார்கள். இப்போது ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்காமல், இயக்குனர்களே மேக்கப் போட்டு நாயகர்களாகி விடுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இயக்குனராக அறிமுகமாகி, நடிகர்களாகவும் சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் தடம் பதித்தார்கள். சசிக்குமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ ஏ, பி, சி என்று மூன்று வட்டாரத் திரையரங்குகளிலும் வெற்றி பெற்றது.

பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட், நட்சத்திரப் பட்டாளம் இதெல்லாம் அவசியப்படாமல் சிறிய பட்ஜெட்டில் சின்சியராக எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புதுமுக ஹீரோவான உதயநிதி ஸ்டாலின் நடித்த, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருப்பதைக் கவனிக்கலாம். அதே நேரத்தில் தமிழ் சினிமாவின் வசூல் ராஜாக்களாக அறியப்பட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் வணிகரீதியாக தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வி வருகின்றன.
சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ஜெயிப்பது மட்டுமல்ல, சினிமாவின் வழக்கமான கதை சொல்லும் முறையை உடைத்தெறிந்திருக்கின்றன. ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’ போன்ற படங்கள் ஓர் உதாரணம். கதை சொல்லாமல் சம்பவங்களைத் தொகுத்து, காட்சியனுபவங்களை ரசிகர்களுக்கு கடத்தும் இந்தப் புதிய அணுகுமுறைக்கு விமர்சகர்களும், ரசிகர்களும் ‘சபாஷ்’ சொல்கிறார்கள்.

"வழக்கமான ஃபார்முலா படங்களின் மீது எனக்கே பெரும் சலிப்பு இருக்கிறது. என் படம் புதுசாகத் தெரியவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு செய்யவில்லை. உள்ளடக்கத்துக்காக அது பேசப்பட வேண்டுமென்று மட்டுமே நினைத்தேன். ஒரு ஹீரோவுக்காக படத்தை யோசிப்பது எனும்போது தரம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. படத்தின் உள்ளடக்கம்தான் ஹீரோ, பட்ஜெட் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டும். ஒரு படைப்பாளி முதலில் தீர்மானிக்க வேண்டியது எதை எடுக்கப் போகிறோம் என்பதைத்தான்" என்கிறார், ‘மதுபானக்கடை’ படத்தின் இயக்குனரான கமலக்கண்ணன். சினிமா பின்னணியில் இல்லாமல், விளம்பரப்பட உலகில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் இவர்.

எண்ணெய் காணாத தலையும் மழிக்கப்படாத முகமும் மடித்துக் கட்டிய கைலியுமாக ஹீரோக்கள் தரையிறங்கி வந்து விட்டார்கள். ஆனால் இன்னமும் நாயகிகளை கவர்ச்சிப் பதுமைகளாக, கதாநாயகர்களோடு வெளிநாட்டு லொக்கேஷன்களில் இடுப்பை வெட்டி வெட்டி டூயட் பாடுபவர்களாகவே வைத்திருக்கிறது தமிழ் சினிமா. டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, சாவிதிரி, விஜயக்குமாரி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, ராதிகா ஏன் ஸ்ரீ தேவி காலம் வரைகூட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளே சினிமாவாகியிருக்கின்றன. இப்போதும் தொலைக்காட்சிகளில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெகாத் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சமகாலத் தமிழ் சினிமா கதாநாயகிகள் மீது இன்னும் கடைக்கண் வைக்கவில்லை. அரிதிலும் அரிதாக சில முயற்சிகள் துவங்கியிருக்கின்றன என்பது உண்மைதான். பெண் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஆரோகணம்’ திரைப்படத்தில் நாயகன் இல்லை. கதையின் மையம் நாயகியை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு பட்ஜெட் படம் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு முழுதாகக் கிடைக்கவில்லை.

அசத்தும் தொழில்நுட்பம்

படத்தின் உள்ளடக்கம் மாறியிருப்பது மட்டுமின்றி, தொழில்நுட்பரீதியாகவும் தமிழ் சினிமா பல படிகள் முன்னேறியிருக்கிறது. முன்பெல்லாம் சிறப்பாகப் படமெடுக்கும் படங்களை, ‘ஹாலிவுட் தரம்’ என்று பத்திரிகைகள் பாராட்டும் . இப்போது ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் கலைஞர்களையே தமிழ்ப் படங்களுக்கும் பணியாற்ற அழைக்கிறார்கள்.
இவ்வாண்டு தொடக்கத்தில் வெளிவந்த, ‘அம்புலி’ திரைப்படம் தொழில்நுட்பரீதியாக தமிழுக்கு மைல்கல். தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படம் இது. அதாவது பைனாக்குலரில் ஒரு காட்சியைக் காண்பதைப்போன்ற அனுபவத்தை திரையில் நீங்கள் உணரலாம். இரட்டை இயக்குனர்களான ஹரிஷங்கர், ஹரிஷ்நாராயணன் இணைந்து இயக்கினார்கள். இவர்கள் முன்னதாக இயக்கிய, ‘ஓர் இரவு’ இந்தியாவின் முதல் ‘வ்யூ பாய்ண்ட்’ திரைப்படம். அதாவது கதாபாத்திரத்தின் பார்வையில் கேமரா கோணம் இருக்கும்.

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையேயான தொழில்நுட்ப இடைவெளி வெகுவாக சுருங்கிவிட்டது" என்கிறார் ஹரிஷ்நாராயணன்.

அம்புலி’க்காக ‘ஹாரிபாட்டர்’ திரைப்படத்தில் பணிபுரிந்த ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அழைத்து உடன் பணியாற்றினோம். ‘நீங்களே எங்களுக்கு இணையாகத்தானே பணியாற்றுகிறீர்கள்’ என்று நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களை அவரே பாராட்டினார். தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக தொழில்நுட்பம் விரைவாக உலகமெங்கும் பரவுகிறது. ஆனால் படத்தின் உள்ளடக்கரீதியாக அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இந்த வித்தியாசம் கலாச்சாரம் தொடர்பானது. இது தொழில்நுட்பத்தை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடியதாக இல்லை" என்று விளக்கினார் ஹரிஷ்நாராயணன்.

டிஜிட்டல் கேமராவின் வருகை, படமாக்கத்தில் ஒரு புலிப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. ‘வழக்கு எண் 18/9’ போன்ற திரைப்படங்கள், டிஜிட்டல் கேமராவின் பலன்களை நன்கு பயன்படுத்தியிருக்கின்றன. ஃபிலிமில் எடுக்கும் காலதாமதத்தை டிஜிட்டல் கேமராக்கள் தவிர்க்கின்றன. அனிமேஷன் நுட்பங்களுக்கு அணுக்கமாக இருக்கிறது, படமாக்கல் தொடர்பான செலவுகளை மிச்சப்படுத்துகிறது, சிரமங்களை தவிர்க்க முடிகிறது.

டிஜிட்டல் சினிமா தொடர்ந்து முன்னோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னை செழுமைப்படுத்திக்கொண்டே வருகிறது. கண்ணை மூடி திறப்பதற்குள்ளாக எல்லாம் மாறிப்போச்சுன்னு சோல்லுவாங்களே... அந்த மாதிரி, ஒரு தூக்கம் போட்டுவிட்டு வந்து பார்த்தால் எல்லாம் மாறிவிடுகிறது இங்கே. தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறது. அதன் சாத்தியங்கள் படைப்பாளிகளுக்கிருந்த பல தடைகளை உடைத்துப் போடுகிறது. பொருளாதாரம் சார்ந்த சுமைகள் குறையத் துவங்கிருக்கின்றன. குறைந்த முதலீடுகளில் தரமான திரைப்படங்களை உருவாக்கிட முடியும் இப்போது" என்று டிஜிட்டல்மயமானதின் பயன்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

எலெக்ட்ரானிக் இசை

டிஜிட்டல் தொழில்நுட்பம் இசையிலும் செயல்பட ஆரம்பித்ததன் பலன், இளைஞர்களுக்கு சாதகமாக அமைந்தது. யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், விஜய் ஆண்டனி, கே எனப் பல இளைஞர்கள் அடுத்தடுத்து தமிழ் திரையிசை உலகில் நுழைந்திருக்கிறார்கள். இன்று தமிழ் இசையமைப்பாளர்களின் சராசரி வயது 25தான் இருக்கும் என்றால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இசை அமைப்பாளர்களைப்போல இளம் பாடகர்களும் கவிஞர்களும் வரத்தான் செய்கிறார்கள். என்றாலும் நிலைத்து நிற்க அவர்கள் பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.

வாலியும், வைரமுத்துவும் அமைத்த களத்தில்தான் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமா இசையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக குத்துப்பாட்டு கலாசாரம் கோலோச்சியது. பாடல் வரிகளில் ஆங்கிலக் கலப்பும் அவசியமென்றார்கள். தவிர்க்க முடியாமல் நாங்களும் இதையெல்லாம் எழுத வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. அதே வாலி-வைரமுத்து கால நிலைமை மீண்டும் திரும்பியிருக்கிறது" என்று தற்போதையச் சூழலை விவரிக்கிறார் கவிஞர் பா.விஜய்.

தமிழ் சினிமாவில் மீண்டும் துவங்கியிருக்கும் கவிதைப்பாதை, அடுத்த தலைமுறை நவீனமொழிநடைக் கவிஞர்களை ஊக்கப்படுத்துகிறது. மதன் கார்க்கி குறிப்பிடத்தக்க பாடலாசிரியராக வளர்ந்து வருகிறார். இசையின் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் மொழியை சமகாலக் கவிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

நட்சத்திர அரங்குகள்

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்காக ஆவலோடு காத்திருப்பதைப் போல திரையரங்குகளில், ‘பொட்டி’க்காகக் காத்திருந்த காலங்கள் ஒன்றுண்டு. குறித்த நேரத்தில் ‘பொட்டி’ வராமல் போனதில் கொதிப்படைந்த ரசிகர்கள், தியேட்டரையே அடித்து நொறுக்கி கலவரமெல்லாம் நடந்த காலம் உண்டு. பொட்டி என்பது படத்தின் ஃபிலிம் சுருள் கொண்ட தகரப்பெட்டி.

இப்போது நவீனத் தொழில்நுட்பம் இந்தத் தகரப்பெட்டிகளைப் பரணுக்கு அனுப்பி விட்டது. ரீல் என்ற ஃபிலிம் சுருளே கிடையாது. திரைப்படம் டிஜிட்டல் ஆகிவிட்டதால் சேட்டிலைட் மூலமாகவும், ஹார்டு டிஸ்க் மூலமாகவும் திரையிடும் நவீன புரஜெக்டர்கள், சிறுநகரங்களில் இருக்கும் அரங்குகளுக்குக்கூட வந்துவிட்டன.
டிஜிட்டல் நுட்பம் காரணமாக ஒளி மட்டுமல்ல, ஒலியின் தரமும் கூடியிருக்கிறது. டால்பி, டிடிஎஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தபிறகு திரையில் தெரியும் காட்சிகளின் இடத்துக்கு நாமே நேரில் செல்வதற்கு இணையான அனுபவத்தை தருகிறது. அரங்கு முழுக்க ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டு, காட்சிகளுக்கேற்ப ஒலி தனித்தனியாக வருகிறது. சமீபத்தில் வெளியாகிய த்ரில்லர் திரைப்படமான, ‘பீட்ஸா’ 7.1 சர் ரவுண்ட் ஒலியமைப்பில் படம் பார்ப்பவர்களை திகில் படுத்துகிறது. முதல் வரிசையில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகனின் இதயத்துடிப்பை வேகப்படுத்தும் சத்தம் இனி திரையில் இருந்துதான் வருமென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. புரஜெக்டர் ரூமில் இருந்தும் ‘டமால்’ என்று சத்தம் வரும்.

பாலிவுட்டைப்போல கோலிவுட்டிலும் மல்ட்டிப்ளக்ஸ் கலாச்சாரம் உருவெடுத்து இருப்பது சமீபகாலப் போக்கு. நல்ல சூழலில் படம் பார்க்கும் அனுபவம்தான் திருட்டு டிவிடி மாதிரியான இத்தொழிலுக்கு எதிரான விஷயங்களைத் கட்டுப்படுத்த உதவும். மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமும் அதிகம் என்பதால், தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் லாபமும் விரைவில் கிடைக்கிறது. தமிழகத்தில் அடுத்த சில வருடங்களில் மல்ட்டிப்ளக்ஸ் என்று சொல்லக்கூடிய நவீன திரையரங்குகள் நிறைய தோன்றும்" என்கிறார், டிஸ்னி-யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்மண்டல தலைமைப் பொறுப்பிலிருக்கும் தனஞ்செயன்.

சென்னையில் அபிராமி மல்ட்டிப்ளக்ஸ் போன்ற திரையரங்குகள் செவன் ஸ்டார் வசதி என்று குறிப்பிடும் சில வசதிகளை உருவாக்கியிருக்கின்றன. அதாவது போனிலோ, இண்டர்நெட்டிலோ குடும்பத்தோடு படம் பார்க்க வருகிறோம் என்று தகவல் கொடுத்துவிட்டால் போதும், அவர்களே காரில் வந்து அழைத்துச் சென்று, திருப்தியாகப் படம் பார்த்து, வீட்டுக்குத் திரும்புவது வரை பார்த்துக் கொள்வார்கள். என்ன, காசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.

‘Q is dead’

சமீப ஆண்டுகளில் திரையரங்குகளில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான புரட்சியாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை குறிப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் சத்யம் சினிமாஸ் இந்த முறையை அறிமுகப் படுத்தியபோது, ‘Q is dead’ என்று அறிவித்து, விளம்பரப்படுத்தியது. அதாவது இனிமேல் யாரும் சினிமா டிக்கெட்டுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என்பது பொருள். முதல் நாள், முதல் காட்சிக்கு இரும்புக் கிராதிகளால் பிணைக்கப்பட்ட சிறைச்சாலை மாதிரியான டிக்கெட் கவுண்டர்கள் இன்று பெருமளவில் ஒழிந்துவிட்டன. தீபாவளிக்கு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குப் போகும் ரசிகன், சென்னையிலிருந்தே ஆன்லைன் மூலமாக அந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியாக,‘துப்பாக்கி’ படத்துக்கு முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் முன்பதிவு வந்துவிட்டதால், ‘பிளாக்’ டிக்கெட் விற்பவர்கள் என்கிற இனமே கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.
திரையரங்குகள் மல்ட்டிப்ளக்ஸ்களாக மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம் டிக்கெட் கட்டணம் 120 ரூபாயாக மாறிவிட்டது. பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் இனி சினிமாவில் மதிப்பில்லை. சிறுநகரங்களில் இருக்கும் தியேட்டர்களில்கூட டிக்கெட் கட்டணம் ஐம்பது ரூபாய்க்கும் மேலாக நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் பெரிய படங்கள் வரும் சூழலில் 200 ரூபாய் என்றுகூட வெளிப்படையாகவே நிர்ணயிக்கிறார்கள். சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஒரு சராசரிக் குடும்பம் படம் பார்க்க, ஒரு முழு ஆயிரம் ரூபாய் நோட்டை செலவழிக்க வேண்டியிருக்கிறது.

நாளை நமதே

இவை எல்லாவற்றையும் விட தமிழ் சினிமாவில் பாயும் புது வெள்ளம் ஒன்றுண்டு. சின்னத்திரையில் குறும்படங்களை இயக்கியவர்களுக்கு வெள்ளித்திரை தனது அகலமான கதவை திறந்து வைத்ததோடு இல்லாமல், சிகப்புக் கம்பளமும் விரித்து வரவேற்றிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் அல்ல. சினிமா படமெடுக்க வேண்டுமென்று ஊரைவிட்டு ஓடிவந்தவர்கள் அல்ல. சாஃப்ட்வேர் புரோகிராம்மர்கள், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் பணியாளர்கள் என்று கலந்துகட்டி இருக்கிறார்கள். திரைமொழியை தொடர்ச்சியாகப் படங்கள் பார்ப்பதின் மூலமாக கற்றுக் கொண்டவர்கள்.

பாலாஜி, ‘காதலில் சொதப்புவது எப்படி?’ என்கிற குறும்படம் மூலம் பேசப்பட்டவர். அதையே நீட்டி, முழுநீளத் திரைப்படமாகவும் எடுத்து இயக்குனர் ஆகியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ், த்ரில்லர் திரைப்படமான சக்கைப்போடு போடும் ‘பீட்ஸா’ படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். நளன் எனும் குறும்பட இயக்குனரும் அடுத்து வெள்ளித்திரையில் நுழைந்திருக்கிறார்.

சாதாரண ரசிகர்களாக இதுவரை இருந்த இந்தப் புதியவர்களின் வருகை, சினிமாவின் வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

15 நவம்பர், 2012

ட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்!

நாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணி
இடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

சைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா? முடக்கவா?
- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்


அரசு இயந்திரம்: சாமானியர்களுக்கா? பிரபலங்களுக்கா?
- சையது, சேவ் தமிழ்சு இயக்கம்


இணைய உலகிலும் கருத்துரிமைக்கு சாவுமணி அடிக்கும் அரசு!
- ராதிகா கிரி, ஊடகவியலாளர்


விவாதங்கள் நடத்துவது: கருத்தை மாற்றவா? காயப்படுத்தவா?
- கஜேந்திரன், ஊடகவியலாளர்


சமூக வலைத்தளங்கள் தொடர்பான இப்பிரச்சினையில் தங்களது பார்வைகள்
- யுவகிருஷ்ணா, கார்ட்டூனிஸ்ட் பாலா, நிர்மலா கொற்றவை, உண்மைத்தமிழன்


எதிர்கொள்வது எப்படி - கலந்துரையாடல்
----------------------------
அனைவரும் வருக
----------------------------

14 நவம்பர், 2012

துப்பாக்கி

Wait is over.

தேசத்துரோகியான ஒரு காவல்துறை அதிகாரியை, நேர்மையான உளவுத்துறை அதிகாரியான விஜய் விசாரணை செய்கிறார். அவருடைய அலுவல்ரீதியான துப்பாக்கியையும், ஒரு இல்லீகல் துப்பாக்கியையும் டேபிள் மீது எடுத்து வைக்கிறார். உளவுத்துறை அதிகாரி ஏதாவது ‘பஞ்ச்’ டயலாக் அடித்துவிடுவாரோ என்கிற மரண அச்சத்தில், தேசத்துரோகி இல்லீகல் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். க்ளைமேக்ஸிலும் நேர்மையற்ற ஒரு மிலிட்டரி அதிகாரி, இதே பஞ்ச் டயலாக் பயத்தில் இதே போல தற்கொலை செய்துக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் சிவாஜியின் ‘ஆபிஸ் ரூம்’ காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

வழக்கமான விஜய் ஃபார்முலா படமல்ல இது என்பதற்கு இக்காட்சிகளே அத்தாட்சி. திருப்பாச்சி காலத்தில் தனக்கே தனக்கென்று உருவான தனித்துவ ஃபார்முலாவை உடைக்கும் துணிச்சலான முயற்சியை ‘நண்பன்’ ஒப்புக்கொண்டபோதே விஜய் தொடங்கிவிட்டார். துப்பாக்கியில் இது முழுமை பெற்றிருக்கிறது. எவ்வளவு நாளைக்குதான் தமிழ்நாட்டிலேயே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருப்பது என்கிற அலுப்பு அவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். துப்பாக்கி தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்கிற செய்தி தேனாக காதில் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படலாம். கேரளாவிலும் ஹிட். இந்திய தேசிய உணர்வுகொண்ட திரைப்படம் என்பதால் எஃப்.எம்.எஸ்.ஸிலும் கதறக் கதற கல்லா கட்டப்போகிறது. இந்த தீபாவளி ‘தள’தீபாவளி.

இளையதளபதிக்கு வருடா வருடம் வயது குறைந்துக்கொண்டே போகிறது. மிக விரைவில் அவர் குழந்தை நட்சத்திரமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்மார்ட்டில் கில்லி, ஆக்‌ஷனில் போக்கிரி என்று துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் ஷோ. முழுநீஈஈஈள திரைப்படமென்றாலும், இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தளபதியை ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டே இருக்கமாட்டோமா என்று படம் முடிந்ததும் ஏக்கம் பிறக்கிறது.

ஏழாம் அறிவு மொக்கையாகி விட்டதால், துப்பாக்கியின் திரைக்கதையை சிரத்தையெடுத்து செதுக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக் மரண மாஸ். ஒரு காட்சியில் நாயை ஸ்க்ரீனில் பார்த்து தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. இராம.நாராயணனின் முந்தைய  நாய், குரங்கு, பாம்பு ரெக்கார்டுகளை எல்லாம் இக்காட்சியில் அசால்ட்டாக உடைத்து எறிந்திருக்கிறார் முருகதாஸ். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ஹீரோவுக்கும், இயக்குனருக்குமே ஒதுக்கப்பட்டு விட்டதால், பிரும்மாண்டமான ஸ்க்ரிப்டுக்கு கருக்காக செலவு செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் பிரதிபாகாவேரி மாதிரியான பெரிய கப்பல் வெடிக்கும்போது, ஊசிப்பட்டாசு வெடிப்பதைப் போல ஃபீலிங். போலவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஏனோதானோவென்று இருக்கிறது. நேற்று வந்த நாளைய இயக்குனர்களே இந்த மேட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும்போது, தமிழின் சுபாஷ்கய்யான முருகதாஸ் இன்னமும் ரமணா, கஜினி காலத்திலேயே தேங்கிப் போய் கிடக்கிறார்.
ஹீரோயின் காஜல். வழக்கம்போல தொட்டுக்க ஊறுகாய்தான். இருந்தாலும் மணம், குணம், நெடி நிரம்பிய காரமான மிளகாய் ஊறுகாய். எப்போதும் ‘ஹாட்’டாக சுர்ரென்று இருக்கிறார். முதல் இரவில் புதுக்கணவன் உதடை கடித்து வைத்துவிடுவானோ என்று பதட்டப்படும் புதுப்பொண்ணை மாதிரியே எல்லா சீனிலும் பரபரவென்று ரியாக்‌ஷன். முத்தத்துக்கு தயாராகி உதடுகளை தயார்படுத்தும் அழகுக்காகவே காஜலுக்கு பாரதரத்னா வழங்கலாம். இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா?’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் ‘ஒரிஜினல் டெவலப்மெண்ட்’தான் என்பதை இறுதியில் ஊர்ஜிதம் செய்துக்கொள்ள முடிந்தது. சந்தேகம் கிளப்பிய தோழரை 66-ஏவில் உள்ளே தள்ளலாம்.

வாராது வந்த மாமணியாய் இளையதளபதி ஓர் ஒரிஜினல் ஹிட் அடிக்கும்போது திருஷ்டிப் படிகாரமாய் ஹாரிஸ் ஜெயராஜ். ‘கூகிள் கூகிள்’ (இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) பாடலைத் தவிர்த்து, வேறெதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூகிள் பாடலில், ஷங்கர் ஸ்டைலில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். விஜய் படமாச்சே என்று, க்ளைமேக்ஸுக்கு முன்பு குத்து, குத்துவென ஒரு குத்துப்பாட்டை எதிர்ப்பார்த்தால், ஒரு சோகையான டூயட். மெலடியான தேசபக்திப் பாடலும் (ஜேசுதாஸ்?) படம் முடிந்தபிறகே வருகிறது. எவ்வளவு மரணமொக்கையான விஜய் படமென்றாலும் பாடல்கள் மட்டும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும். துப்பாக்கியில் பாடல்களும், பின்னணி இசையும் பரிதாபம். முருகதாஸின் ரமணாவுக்கு இசைஞானியின் பின்னணி இசை நினைவுக்கு வந்து ஏங்கவைக்கிறது.

வில்லன் வெயிட் என்பதால் ஹீரோ அதைவிட வெயிட்டாகிறார். கடைசியில் ‘என்னை அடிச்சியே கொல்லு’ என்று விஜய் சவால்விட, வில்லனுக்கு பக்கத்தில் இருப்பவர் ‘வேணாம். ஏதோ தந்திரம் செய்றான். அவனை உன்னாலே அடிக்க முடியாது’ என்று தரும் பில்டப்தான் ஒரிஜினல் ஹீரோயிஸம். இத்தனை காலமாக விஜய் பக்கம் பக்கமாக பேசிய பஞ்ச் டயலாக்குகள் எவ்வளவு வீண் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.

இஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ஜல்லிதான். என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் பரபரப்பான திரைக்கதை, விஜய்யின் பெர்ஃபாமன்ஸ் என்று ’போர்’ அடிக்காமல் துப்பாக்கியை பார்க்க முடிகிறது. பொதுவாக விஜய் படங்களை குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள். இப்படம் இளைஞர்களை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ‘வயலன்ஸ்’ கொஞ்சம் அதிகமென்றும் தோன்றியது. முந்தைய விஜய்யின் வயலண்ட் படங்களிலெல்லாம் ஆக்‌ஷன் ரசிக்கவைக்கும், திகில்படுத்தாது. துப்பாக்கியில் வெளிப்படும் ரத்தமும், புல்லட் சத்தமும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. விஜய் படத்துக்குதான் கொஞ்சம் புதுசு.

துப்பாக்கி : குறி கச்சிதம்

9 நவம்பர், 2012

புயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்


நவம்பர் 1966.

1966. நவம்பர் 3. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அன்று விடுமுறை தினமா அல்லது புயல் காரணமாக விடுமுறை விட்டிருந்தார்களா என்று நினைவில்லை.

புயல் சென்னையை தாக்கப் போகிறது என்று பரபரப்பு. நாளிதழ்கள் மட்டுமே அப்போது செய்திகளை அறிய ஒரே வழி. விடுதி அறையில் ரேடியோ இல்லை. நண்பர்களோடு அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஓங்கி வளர்ந்த மரங்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. விளம்பர ஹோர்டிங் பலகைகள் காற்றுக்கு
த் தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன.

மாடிக்குப் போய் மழையைப் பார்க்கலாம் என்று திடீர் ஆசை. பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. அசுர காற்றும் தன் பங்குக்கு தாண்டவமாடியது. அறை சன்னல்கள் படபடவென்று அடித்துக் கொண்டன. காற்றின் வேகம் தாங்காமல் சில சன்னல்கள் பிய்த்துக்கொண்டும் பறந்தன. வெளிச்சமுமில்லை. எதைப் பார்த்தாலும் ஒரு மாதிரியாக ‘க்ரே’வாகவே தெரிந்தது. இருந்தாலும் புயலை ‘லைவ்’வாக பார்க்கும் எங்கள் ஆசையை எதுவுமே தடுக்கவில்லை.

உயரமான அலைகளோடு ஒரு கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்ததை கடலில் பார்த்தோம். க
ப்பலையும் விட உயரமாக அலைகள் சீறின. காற்று அக்கப்பலை கரைக்குத் தள்ளிக்கொண்டு வந்தது. கப்பலோ மீண்டும் கடலுக்குள் செல்ல அடம் பிடித்தது. இந்தத் தள்ளு முல்லு நீண்டநேரம் நடந்தது. வென்றது இயற்கையே. துறைமுகத்துக்குத் தெற்கே செத்துப்போன திமிங்கிலத்தை மாதிரி கரை தட்டி நின்றது அந்தக் கப்பல்.

அதே நேரம் SS Damatis என்கிற பெரிய கப்பல் ஒன்று புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே மெரீனாவில் கரை தட்டியது. மூன்றாவதாக ஒரு கப்பலும் தென்சென்னை கடற்பகுதியில் கரை ஒதுங்கியது.

பிற்பகல் புயல் வலுவிழந்தது. ஆனாலும் காற்று பலமாகவே வீசியது. மெரீனாவில் கரை ஒதுங்கிய கப்பலைப் பார்க்கப் போனோம். சூறைக்காற்றால் மணல் பறந்து ஊசியாக எங்கள் உடம்பில் குத்தியது. எங்களது விடுதித் தோழர் ஒருவரிடம் கேமிரா இருந்தது. அவர் கப்பலை படம் எடுத்தார். Damatis கப்பல் ஒரு பக்கமாக மணலுக்குள் புதைந்து மாட்டிக் கொண்டிருந்தது.

பிற்பாடு அந்த கப்பலை அங்கிருந்து முழுமையாக அகற்ற முடியாமல், அதனுடைய இரும்பு பாகங்கள் கடலுக்குள்ளேயே நீட்டிக் கொண்டிருந்தன. கடலில் குளிப்பவர்கள் அடிக்கடி அப்பகுதியில் இரும்பு கிராதிகளுக்கு இடையே சிக்கி மரணமடைவார்கள். இந்நிலை நீண்டகாலத்துக்கு நீடித்தது.

அப்போதெல்லாம் சென்னைப் பல்கலைக்கழக கட்டிடத்தில் நாங்கள் தேர்வு எழுதும்போது, புயலில் சிக்கிய அந்த கப்பலின் அமானுஷ்யமான தோற்றம் அடிக்கடி நினைவுக்கு வந்து திகில்படுத்தும்.

(
நன்றி : டாக்டர் ஆர். சங்கரன், http://sankaran4412.blogspot.in)


2012. அக்டோபர்

2012. அக்டோபர் இறுதி நாள்.  அடைமழை. ‘நிலம்’ புயல் வெறித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. புயலால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, கடமையே கண்ணென்று அலுவலகத்தில் இருந்தேன். ட்விட்டர் மூலமாகதான் மழை பெய்கிறதா, காற்று அடிக்கிறதா என்பதை தெரிந்து கொண்டிருந்தேன்.

மூன்று மணி வாக்கில் நண்பர் நரேன் கைபேசியில் அழைத்தார். “என்னய்யா ரிப்போர்ட்டர் நீ. கப்பல் ஒண்ணு பெசண்ட் நகரில் கரை ஒதுங்கிக் கிடக்குது. நீ பாட்டுக்கு ஆபிஸ்லே கம்முன்னு உட்கார்ந்திருக்கேன்னு சொல்றீயே” என்று உசுப்பிவிட்டார்.

ரோஷத்துடன் இரு சக்கர வாகனத்தை உதைத்து, பெச
ன்ட்நகர் நோக்கிக் கிளப்பினேன். புயல் காற்று, பெருமழை இதுவெல்லாம் மக்களை எவ்வகையிலும் அச்சப்படுத்தவில்லை என்பதைப் போக்குவரத்து நெரிசல் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இயற்கைச் சீற்றங்கள் என்றால் முன்பெல்லாம் மக்கள், கூடுகளில் தஞ்சம் புகும் பறவைகள்  போல வீடுகளில் முடங்கிக் கிடப்பார்கள். மழையோ, வெயிலோ தன் கடமை பணி டிராபிக் ஜாமில் முடங்கிக் கிடப்பதே என்று இப்போதெல்லாம் எந்நேரமானாலும் சாலைகளில் தவம் கிடக்கிறார்கள். சென்னை நகரம் சாதாரண நாட்களிலேயே ரொம்ப அழகு. அதிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சென்னை ரொம்ப ரொம்ப அழகு. போதாக்குறைக்கு இப்போது புயல்மழை வேறு.

இப்படிப்பட்ட
ச் சூழலில் பைக்கில் செல்வது கிட்டத்தட்டத் தற்கொலை முயற்சிதான். பெசன்ட் நகர் கடற்கரையை நெருங்கியபோதுதான் தெரிந்தது, என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. அரசு எவ்வளவுதான் புயல் பற்றி எச்சரித்தாலும், புயலை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவலில் குடும்பம், குடும்பமாக ஆட்டோவில் கடற்கரைக்கு வரும் கூத்தை என்னவென்று சொல்லி ஜீரணித்துக் கொள்வது?

போதாக்குறைக்கு கப்பல் ஒன்று கரை ஒதுங்கி விட்டது. சொல்லவும் வேண்டுமா? ஆளாளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போனை போட்டு, “மச்சான், இங்கே ஒரு கப்பல் கரை ஒதுங்கிக் கிடக்குது. வர்றீயா?” என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடலை பார்த்தால் கிட்டத்தட்ட சுனாமி மாதிரி சீறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கோ வேடிக்கை பார்க்கும் வெறி.


கரை ஒதுங்கி நின்ற கப்பல் கருப்புச் சாத்தான் மாதிரி தோற்றத்தில் பயமுறுத்தியது. பெயர் மட்டும் சாந்தமாக வைத்திருக்கிறார்கள். ’பிரதிபா காவேரி’யாம். ஆயில்/கெமிக்கல் டேங்கர் வகை கப்பல் இது. நல்லவேளையாக கப்பலில் ‘சரக்கு’ எதுவுமின்றி காலியாக இருந்ததால் பெரிய பிரச்சினை இல்லை. புயலில் தடுமாறி, அலைமோதி வந்து கடலோரமாக செருகிக் கொண்டிருக்கிறது. கரையிலிருந்து கடலுக்குள் நூறு, நூற்றி ஐம்பது மீட்டர் தூரத்தில் கப்பல். சில சிப்பந்திகளுக்கு உள்ளே காயம் பட்டிருக்கிறது. அலைமோதிக்கொண்டிருந்த கடலில் தீரமாக சில மீனவ இளைஞர்கள் படகு ஓட்டி, காயம்பட்டவர்களை
க் காப்பாற்றி அழைத்து வந்து, ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

தொலைக்காட்சி சேனல்கள் கேமிராவும், கையுமாக குவிந்துவிட்டாலும் படமெடுப்பது மிகச்சிரமாக இருந்தது. ஆளையே தள்ளும் காற்றுக்கு கேமிரா தாக்குப்பிடிக்குமா? அப்படியும் சில துணிச்சலான டி.வி.க்கள் ‘லைவ்’ செய்ய ஆரம்பித்தன.

“சொல்லுங்க சார். நீங்க என்ன பார்த்தீங்க”

“நான் கரையோரமா வந்துக்கிட்டிருந்தேனா... அப்போ திடீர்னு கப்பல் கரையை நோக்கி அப்படியே தடுமாறி வந்துக்கிட்டிருந்திச்சி...”


பாவம் மக்கள். எந்த சேனலை வைத்தாலும் இதே “நீங்க என்ன பார்த்தீங்க?”தான்.


கேமிரா செல்போனை யார்தான் கண்டுபிடித்ததோ என்று நொந்துகொண்டேன். தாஜ்மகாலுக்கு முன்
நிற்கும் தோரணையில் மக்கள் ஆளாளுக்கு கப்பல் முன்பாக நின்று தங்கள் செல்போனில் தங்களையே படம் பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

“கப்பலுக்குள்ளாற உசுருக்கு நிறைய பேர் போராடிக்கிட்டிருக்காங்க, ஏதோ எக்ஜிபிஸன் பார்க்குற மாதிரி எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்துட்டானுங்க...” என்று ஒட்டுமொத்தமாக மக்கள், மீடியா என்று எல்லோரையும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெண். கரையோரமாக கடலுக்கு நெருக்கமாக இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறவர். இன்னும் சில நேரங்களில் புயல் கரையை கடக்கும்போது, இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் அவருக்கு உயிரின் அருமை தெரிந்திருக்கிறதோ என்னமோ.

(நன்றி : புதிய தலைமுறை)

8 நவம்பர், 2012

66-A : ஏன் எதிர்க்க வேண்டும்?


இந்தியாவில் சட்டங்களை எழுதுபவர்கள் மற்றும் திருத்துபவர்களின் சட்ட அறிவைக் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளின் சட்டங்களை வாசித்தவர்கள். இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பதையெல்லாம் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு நம் சமூகம் குறித்த சரியான புரிதல் இருக்கிறதா என்பதுதான் நம்முடைய சந்தேகம். ஒரு புதிய சட்டத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்களை மிக சுலபமாக பழிவாங்க முடிந்தால் அந்த சட்டமோ, சட்டத் திருத்தமோ எவ்வளவு அபத்தமானது.. ஆபத்தானது?

பெங்களூரில் மாலினி என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டார்இவர் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். இவருக்கும், இவரது காதலருக்கும் ஏதோ தகராறு. வாய்ச்சண்டை போட்டு காதலர் பிரிந்துச் சென்றதும் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் இட்டார். “மகிழ்ச்சியான நாள் இன்று. கேர்ள்ஃப்ரண்டை பிரிந்துவிட்டேன். சுதந்திரநாள் வாழ்த்துகள்”. மாலினி தற்கொலை செய்துக் கொண்டார். காதலரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இந்த தற்கொலைக்கு தூண்டுதல் என்று காவல்துறை கருதிஅவர்மீது இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்அனேகமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோடுவேறு சில தண்டனைகளும் கிடைக்கலாம்.

அடிக்கடி இந்தியாவில் சைபர் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் சைபர் சட்டத்தின் தண்டனை ஒப்பீட்டளவில் அதிகம். ஐ.டி. சட்டம் 66-ஏவின் படி causing annoyance or inconvenience electronically என்று குறிப்பிடப்படும் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் மேலும் சில ஆண்டுகள்) வழங்கப்படுகிறது. இதில் annoyance என்று சொல்லப்படுவதற்கு என்ன வரையறை என்கிற தெளிவு இல்லை. கலைஞரை யாராவது திட்டினால் நான் irritate ஆவேன். அவ்வாறு திட்டியவரின் மீது 66-ஏவின் படி வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றால் இது என்ன நீதி?

‘துப்பாக்கி திரைப்படம் மொக்கை’ என்று எனக்கு தோழர் கார்க்கி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அதை நம்பி நாலு பேருக்கு நானும் ஃபார்வேர்ட் செய்கிறேன். இதனால் இளையதளபதி விஜய் மன உளைச்சல் அடைந்தால், அவர் கார்க்கி மீதும் என் மீதும் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை காவல்துறையும், நீதித்துறையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் செல்வாக்கும், அதிகாரமும் விஜய்க்கு உண்டல்லவா? மேலும் இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டவரை கைது செய்ய வாரண்ட் அவசியமில்லையாம்.

66- என்னவோ இண்டர்நெட்டில் ஈடுபடும் காமன்மேன்களை மட்டும்தான் அடக்கும் என்று நினைத்தோ என்னவோ ஊடகங்கள் போதுமான எதிர்ப்பைத் தெரிவிப்பதில்லை. ஒருவகையில் குஷியாக கூட இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவாக பத்திரிகைகளில் எழுதப்படுவதற்கு ‘அவதூறு வழக்கு’கள் தொடுக்கப்படுவது வழக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ‘அவதூறு வழக்கு’ இன்று நாடு முழுக்க பிரபலமாகியிருக்கிறது. அவதூறு வழக்கு என்பது கிட்டத்தட்ட விசாரணைக் கமிஷன் மாதிரி. பெரியதாக செய்கூலி, சேதாரம் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மீது மட்டும்தான் 66-ஏ பாயுமென்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.

இன்று அச்சில் வரும் எல்லா ஊடகங்களுமே இணைய வடிவையும் கொண்டிருக்கிறது. அவ்வகையில் எந்த ஒரு பத்திரிகையின் மீதும், தொலைக்காட்சி சேனல் மீதும் 66-ஏ-வை பாயவைக்க முடியும். any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device என்றுதான் சட்டம் கூறுகிறது. இந்த communication device என்கிற பதம் வெறுமனே இணையத்துக்கு மட்டுமல்ல. டிவி, மொபைல்போன் ஆகியவற்றுக்கும் கூட பொருந்தும் இல்லையா? எனவே 66-ஏ என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களுக்கும் கூட அச்சுறுத்தல்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கட்டுரை எழுதியதற்காக அந்த பத்திரிகையின் நிருபரில் தொடங்கி ஆசிரியர், பதிப்பாளர் அத்தனை பேரும் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிற வகையில் 66-ஏ-வை எதிர்க்க அனைவருமே (ஊடகங்களும் சேர்த்துதான்) கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.

தவறாமல் வாசிக்கவும் : 66-ஏ குறித்த அய்யா தருமியின் பதிவு