30 மார்ச், 2013

ராஜூமுருகன்

ஒன்றரை ஆண்டுகாலமாக ‘வட்டியும் முதலும்’ ஆனந்தவிகடனில் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே நினைத்தேன். இன்னும் இலக்கியவாதிகள் யாரும் ராஜூவுக்கு எதிராக ‘ரவுசு’ ஆரம்பிக்கவில்லையே என்று. நண்பர் அபிலாஷ் ஆரம்பித்திருக்கிறார். 

அபிலாஷுக்கு என்றல்ல. பொதுவாக இலக்கியவாதிகளுக்கே உரித்தான ஒரு பொதுக்குணத்தை அவதானிக்க முடிகிறது. வெகுஜனங்களால் பரவலாக ஆதரிக்கப்படும் ஒரு விஷயம் அபத்தமானதாகதான் இருக்கவேண்டும் என்கிற தீர்மானத்துக்கு வெகுவிரைவில் வந்துவிடுகிறார்கள். ஒருவேளை இவர்கள் மனதளவில் ரசிக்கும் ஒன்றை வெகுஜனங்களும் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தால், தங்கள் தனிப்பட்ட ரசனையை தியாகம் செய்து நேரெதிர் விபரீத நிலைப்பாடுக்கும் சென்றுவிடுகிறார்கள்.

நண்பர் அபிலாஷ் சூது வாது தெரியாதவர் என்பதால் வெளிப்படையாக இவ்விஷயத்தை பொதுவில் வைத்திருக்கிறார். இலக்கிய நண்பர்கள் சிலர் பொருமலாக தனிப்பட்ட பேச்சுகளில் இதே விஷயத்தை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்கள். இதே நண்பர்களில் சிலர் முன்பாக விகடன், குமுதம் இதழ்களுக்கு கதையோ, கட்டுரையோ அனுப்பி நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ‘எட்டாத திராட்சை புளிக்கும்’ கதைதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

பொதுவாக ராஜூமுருகனின் (குறிப்பாக வட்டியும் முதலும்) எழுத்துகளைப் பற்றி வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, ‘ஆழமற்ற மேலோட்டமான வணிக எழுத்து’ என்பதுதான்.

எழுத்து என்பது ஆழமாகதான் இருந்துத் தொலைக்க வேண்டும் என்று யார் வரையறுத்தது. ஒரு வெகுஜன பத்திரிகையின் வாசகர் எல்லோரும் பட்டம் படித்தவர்களாக இருக்கவேண்டும் எப்படி எதிர்ப்பார்க்க முடியும். தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்தவனுக்கும் புரியும்படியான எழுத்துநடையை பின்பற்றுவதில் என்ன குற்றம் இருந்துவிட முடியும். சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஒரு செய்தியையோ, கட்டுரையையோ தினத்தந்தி நடையில் எழுதிப்பாருங்கள். எளிமையைப் பின்பற்றுவது எவ்வளவு கடினம் என்பது தெரியும், புரியும். ஆழமற்ற ஓர் அல்ப விஷயத்தை கூட அலங்கார மொழியில் வெளிப்படுத்துவது இலக்கியம் என்று ஆகிவிட்ட சூழலில், ஆழமான விஷயத்தைக்கூட அரிதாரமின்றி, நேர்மையாக தன்னை வாசிப்பவனுக்கு பேச்சுமொழி மாதிரியான அரட்டை நடையில் முன்வைப்பது அபத்தமாகதான் அறிவுஜீவிகளின் கண்களுக்கு புலப்படும். திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா?
ராஜூமுருகனின் எழுத்து வடிவத்தை சக பத்திரிகை நண்பர் ஒருவர் பீம்சிங்கின் படங்களோடு ஒப்பிடுவார் (பாசிட்டிவ்வான நோக்கில்தான்). தமிழ் சினிமாவில் பீம்சிங்காக இருப்பதுதான் கஷ்டம். ஒரு படத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்வார். எல்லா கதாபாத்திரங்களையும் முதல் பாகத்தில் அறிமுகப்படுத்துவார். அடுத்த பாகத்தில் அப்பாத்திரங்களுக்கு இடையே இடியாப்பச் சிக்கலை உருவாக்குவார். கடைசியாக அவரே உருவாக்கிய சிக்கலை காதை சுற்றி மூக்கைத் தொட்டு எப்படியோ அவிழ்ப்பார். சுபம். இந்த சூத்திரம் கேட்பதற்கு எளிமையானதாக இருக்கலாம். அதனால்தான் பீம்சிங் ஒரு mediocre இயக்குனராக பார்க்கப்பட்டார். ஆனால் பீம்சிங்குக்கு பிறகு வேறொரு பீம்சிங் தமிழ் சினிமாவில் உருவாகவே இல்லை. உருவாகவும் முடியாது என்பதுதான் அவரது சாதனை.

ராஜூமுருகன் ‘வட்டியும், முதலும்’ மூலமாக வெகுஜன நடைக்கும், இலக்கிய நடைக்கும் இடையிலான ஓர் இடைநிலை போக்கினை உருவாக்கியிருக்கிறார். முன்பாக க.சீ.சிவக்குமாரிடம் இதற்கு ஒப்பான ஒரு நடை இருந்தது. வாசிப்பதற்கு எளிமையாக இருப்பதால் இதை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும் என்பதில்லை. இந்நடையை தேடிக்கண்டு அடைவதற்குள் தாவூ தீர்ந்துவிடும். ராஜூவைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகள் பலவும் ‘மியாவ்’ என்றுதான் குரலெழுப்புகின்றன என்கிற அம்சத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அபிலாஷின் பதிவில் ஒரு விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கிறேன். ‘தேய்ந்த ரெக்கார்ட்’ மாதிரி ‘வட்டியும் முதலும்’ ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார். எனக்கும்கூட இப்போது வாசிக்க கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. ஆனால் இதுவும் கூட சினிமா மாதிரிதான். பாகவதரின் ஹரிதாஸ் தேய்ந்த ரெக்கார்டாகதான் மூன்று வருடங்கள் ஓடியது. வாசகர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு வெகுஜனப் பத்திரிகையுமே ஒரு தொடரை நீட்டிக்கத்தான் விரும்புமே தவிர, முடித்துக்கொண்டு அடுத்த புதுத்தொடருக்கு ‘ரிஸ்க்’ எடுக்காது.

வட்டியும், முதலுமுக்காக ராஜூ அவரது வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறார். இப்போது கிடைத்திருக்கும் பிரபலம் என்பது இத்தொடருக்கானது என்று மட்டும் நினைத்தால் அது முட்டாள்தனம். பல ஆண்டுகளாக இதே துறையில் சலிக்காமல் தோண்டிக்கொண்டே இருந்திருக்கிறார். இப்போதுதான் ஊற்று வந்திருக்கிறது. வாழ்த்துவோம்!

29 மார்ச், 2013

இதுவும் கல்யாணம்தான்!

அமைந்தகரையில் கல்யாணம். அமெரிக்க மாப்பிள்ளைக்கு லீவு இல்லை. அதனால் என்ன.. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்திவிடலாம். இண்டர்நெட்தான் இருக்கே?
மணக்கோலத்தில் பூனம் சவுத்ரி நியூயார்க்கில் மதச்சடங்குகள் செய்யும் அந்த அறையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு லேப்டாப். இண்டர்நெட்டில் ஸ்கைப் சாட்டிங் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தன்வீர் அகமது பங்களாதேஷில் ஒரு கல்யாண மண்டபத்தில் உறவினர் புடைசூழ அமர்ந்திருக்கிறார். கல்யாணம் செய்துவைக்கும் மதகுருமார் மந்திரங்களை ஓதுகிறார். அங்கும் ஒரு லேப்டாப், ஸ்கைப் சாட்டிங். அவ்வளவுதான். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சட்டப்படி பங்களாதேஷில் பதிவும் செய்யப்பட்டு விட்டது.

தகவல் தொழில்நுட்பத்தின் லேட்டஸ்ட் புரட்சி இந்த ‘ப்ராக்ஸி திருமணங்கள்’. மணமகனுக்கும், மணமகளுக்கு பல்லாயிரம் மைல் இடைவெளி இருக்கலாம். கல்வி, வேலை என்று பல காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வாழவேண்டிய கட்டாயம். இதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போகமுடியுமா என்ன?

வரலாற்றில் கூட இம்மாதிரி ‘ப்ராக்ஸி’ திருமணங்கள் சட்டப்படி நடந்திருக்கின்றன. ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி அண்டோனியா என்கிற பெண் 1770 ஏப்ரலில் லூயிஸ் அகஸ்தே என்கிற பிரெஞ்சு இளைஞரை, அவரவர் நாட்டில் இருந்தபடியே திருமணம் செய்துக் கொண்டார்கள். சில அரசியல் காரணங்களால் வெளிப்படையாக இருவரும் இணைந்து மணக்கோலம் காணமுடியவில்லை. லூயிஸ் வேறு யாருமல்ல. பிரான்ஸை ஆண்ட மன்னர் லூயிஸ்XVIதான். மேரிதான் பட்டத்து ராணி என்பதையும் சொல்லவேண்டியதில்லை. அரசக்குடும்பத்திலேயே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயத் திருமணம் நடந்தேறியிருக்கிறது. டெலிகிராம் மூலமாக கூட திருமணங்கள் சில ஐரோப்பாவில் பதிவாகியிருக்கின்றன.

இந்த பிராக்ஸி திருமணங்கள் அமெரிக்காவில் சகஜம். இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் எங்காவது போர்முனையில் இருப்பார்கள். அங்கிருந்தே தங்கள் ஊரில் இருக்கும் காதலிகளை அவர்கள் கைப்பிடிக்க இம்மாதிரி திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இப்போது புலம் பெயர்ந்து வாழும் ஆசிய கண்டனத்தினரும் தங்கள் செண்டிமெண்டுகளை கைகழுவி இத்திருமணங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அயல்நாடுகளில் திருமணத்துக்கு ஆகும் செலவு, அவர்களை இம்முறைக்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.

இம்மாதிரி திருமணங்களை நியூயார்க்கில் நடத்தி வைக்கும் இமாம் முகம்மது கயூம், “ஆசியநாடுகளில் இருந்து இங்கு வந்து பணிபுரிபவர்கள், கல்வி கற்பவர்கள் நிறைய பேர் இப்போது இம்மாதிரியான திருமணத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களுடைய துணையை உறுதி செய்துக்கொள்ளும் திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது” என்கிறார். மேற்கண்ட பூனம் – தன்வீர் திருமணத்தை நடத்திக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால் திருமணம் சட்டப்படி பங்களாதேஷில்தான் பதிவு செய்யப்பட்டதாம். அமெரிக்காவின் சில மாகாணங்கள் இத்திருமணங்களை பதிவு செய்துக் கொள்வதில்லை.

’பிராக்ஸி மேரேஜ் நவ்’ என்று ஒரு நிறுவனமே அங்கு இயங்குகிறது. வருடத்துக்கு நானூறு முதல் ஐநூறு திருமணங்களை இண்டர்நெட்டிலேயே வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறார்களாம். பதிவு செய்வது மாதிரி பின்னணி விஷயங்களையும் சட்டப்படி செய்துக் கொடுக்கிறார்கள். ஏழு வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஜார்ஜ் ஆண்ட்ரூஸ், “ஆரம்பத்தில் இராணுவத்தினருக்காக ஆரம்பித்த சேவை இது. இப்போது மற்றவர்களும் நிறைய பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார். அவருக்கு என்ன? ஒவ்வொரு திருமணத்தின் போதும் லம்பாக ‘ஃபீஸ்’ வாங்கிவிடுகிறார்.

ஆனால் இம்மாதிரி திருமணங்கள் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியாக போகிறது. திருட்டுத்தனமாக குடியுரிமை பெற நிறைய போலி திருமணங்கள் நடைபெற ஆரம்பித்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் ‘பிராக்ஸி திருமணம்’ செய்திருந்தால், பலத்த விசாரணைகளுக்கு பிறகே, பல விஷயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு குடியுரிமை வழங்குகிறார்கள்.

 
நிறைய இஸ்லாமியத் திருமணங்கள்தான் இம்முறையில் நடைபெறுகின்றன. ஏனெனில் ‘குரான்’ சாட்சியாக திருமணம் செய்துக் கொள்பவர்கள் கடவுளுக்கு விசுவாசமாக தங்கள் உறுதியை ஏற்கிறார்கள் என்கிறார் ஜமைக்கா முஸ்லீம் சென்டரை சேர்ந்த இமாம் ஷம்ஷி அலி. “ஸ்கைப் மட்டுமல்ல. கூகிள் ஹேங்-அவுட் மூலமாகவும் திருமணம் நடக்கிறது” என்று கூடுதல் தகவலையும் தருகிறார்.

இந்த திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழம் சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ‘கலிகாலம்’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம் என்கிற சொல்லின் அர்த்தத்தையே இது கேலிக்குரியதாக்குகிறது என்றும் ப்ராக்ஸி திருமணங்களுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

இருபத்தோரு வயது பூனம் சவுத்திரியும், முப்பத்தோரு வயது தன்வீர் அகமதும் திருமணம் முடிந்தவுடன் கேக்குகளை கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் முன்பாக ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்கிறார்கள். முன்னதாக பூனமின் அத்தை ஒருவர் இதேமாதிரிதான் இண்டர்நெட்டெல்லாம் வருவதற்கு முன்பாக டெலிபோன் மூலமாக திருமணம் செய்துக் கொண்டாராம்.

டெலிபோனில், இண்டர்நெட்டில் காதலிப்பதே கஷ்டமென்று நம்மூரில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அங்கே குடும்பமே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 மார்ச், 2013

மக்கள் ஃபீலிங்ஸ் – அதிரடி சர்வே

மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி ஆட்சி நடத்துகிறார்?
  • நன்றாக 
  • மிக நன்றாக
  • மிக மிக நன்றாக 

தமிழின துரோகியான கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி? 
  • மோசம் 
  • படுமோசம் 
  • படுபடுமோசம் 

ஈழத்தமிழர், இந்தியத்தமிழர், மலேசியத்தமிழர், சிங்கப்பூர் தமிழர், தென்னாப்பிரிக்க தமிழர் மற்றும் உலகத்தமிழர்களுக்கு எல்லாம் விடிவெள்ளியாக காணப்படும் தமிழர் யார்?
  • வை. கோபால்சாமி 
  • வைக்கோ 
  • கலிங்கப்பட்டி வையாபுரி கோபால்சாமி 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா?
  • மாட்டேன் 
  • மாட்டவே மாட்டேன் 
  • கண்டிப்பாக மாட்டேன் 

அரசியல்சாரா தலைவர்களில் யார் தேர்தல் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் 
  • இயக்குனர் சீமான் 
  • நடிகர் சீமான் 
  • செந்தமிழன் சீமான் 

இந்த சர்வேயில் பங்குபெற உங்களது வாக்குகளை பின்னூட்டத்தில் அளிக்கலாம். வாக்களித்தவர்களின் பெயரை சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்போம். அவருக்கு பரிசாக “நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடல் காலர்ட்யூனாக வைத்துக்கொள்ள ‘ஏர்டெல்’லில் லக்கிலுக் ஆன்லைன் டாட் காம் சார்பாக காசு கட்டப்படும். ஆறுதல் பரிசு பெறுபவர்களுக்கு அதே பாடல் ரிங்டோனாக அனுப்பி வைக்கப்படும்.

25 மார்ச், 2013

நொச்சி வந்தாச்சி

அரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் ‘நொச்சி’.

நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சி செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்தைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே கூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டல பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும் கொடை நொச்சி செடி.

“இதென்ன புதுச்செடி?” என்று ஆச்சரியப்படாதீர்கள். வேலியோரங்களிலும், கிராமச்சாலைகளின் இருபுறங்களில் புதராக வளர்ந்த நொச்சிச் செடிகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். வெண்ணொச்சி, கருநொச்சி என்று இதில் இரண்டு வகை உண்டு. வெண்ணொச்சி சுமார் முப்பதடி வரை மரம் மாதிரி வளரக்கூடிய தன்மை கொண்டது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். ஆற்றங்கரையோரங்களில் புதர் மாதிரி வளரும். இதன் கிளைகள் ஒல்லியானதாக இருந்தாலும் வலிமையானவை. முன்பெல்லாம் வகுப்பறைகளில் மாணவர்களை மிரட்ட ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்பு பெரும்பாலும் நொச்சிப் பிரம்பாக இருக்கும். கிராமங்களில் இதன் இளம் கிளைகளை கொண்டு கூடை பின்னுவார்கள். இந்த கூடையில் வைக்கப்படும் பொருட்களை பூச்சிப்பொட்டு நெருங்காது. வயற்காடுகளுக்கு வேலியாக நொச்சி வளர்ப்பதுண்டு. வலிமையான வேலியாக கால்நடைகளிடமிருந்து பயிரை காக்கும். வெள்ளாடு கூட நொச்சி இலைகளை சாப்பிட விரும்புவதில்லை. நொச்சித்தழைகளை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்கக் காலத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழமன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணை வீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.

நொச்சியின் எல்லா பயன்பாடுகளை காட்டிலும் அதன் மருத்துவக்குணங்களே சிறப்பானதாக இருக்கிறது. இன்றும் கிராமங்களில் கொசுக்களையும், பூச்சிகளையும் விரட்ட நொச்சி இலைகளை எரித்து புகை போடும் பழக்கம் நீடிக்கிறது (நொச்சி இல்லாத இடத்தில் வேம்பு). சிறுநகரங்களில், ஈக்கள் மொய்க்கக்கூடிய பழங்களை விற்கும் வியாபாரிகள், இலைகளோடு கூடிய நொச்சிக்குச்சிகளை விசிறி அவற்றை விரட்டுவதை கவனித்திருக்கலாம். நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சுக்கு பதிலாக அடைத்து பயன்படுத்தினால் கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்காலத்து வைத்தியம். நொச்சி இலையை சாறெடுத்து கட்டிகளின் மீது தடவிவர கரைந்துவிடுமாம். எதற்கெல்லாம் தைலம் பயன்படுத்துகிறோமோ அந்த உபாதைகளுக்கு எல்லாம் நொச்சி இலை சாறை தைலத்துக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். குடிநீருக்கு வெட்டிவேர் பயன்படுத்துவதைப் போல நொச்சி வேரையும் பயன்படுத்தலாம். நொச்சிவேர் போட்டு நீர் காய்ச்சி குடித்தால் வயிற்றில் பூச்சித்தொல்லை தீரும். இவ்வாறாக நம்முடைய பாட்டிவைத்திய முறைகளில் இன்னும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நொச்சி தீர்வளிக்கிறது. நாட்டு மருத்துவர்கள் தயார் செய்யும் பல மருந்துகளில் நொச்சி கட்டாயம் இடம்பெறுகிறது. 
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நொச்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு, ஓடை, காடுகளில் கிடைக்கும் நொச்சிச் செடிகளை பெயர்த்தெடுத்து வந்து வளர்க்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள் நொச்சி வளர்க்க விரும்பினால், அருகிலிருக்கும் வனத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை உதவிக்கு நாடலாம். சில தனியார் நர்சரிகளிலும் நொச்சிச்செடி வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டோமானால், ஏற்பாடு செய்து தருவார்கள். அரசு சித்த மருத்துவ வளாகங்களில் நொச்சி வளர்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் நொச்சி வளர்ப்புத் திட்டம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில், இதற்கு வணிக அந்தஸ்தும் கிடைத்துவிடக்கூடும். யாருக்குத் தெரியும்? இப்போது கேட்பாரற்று ஆங்காங்கே வளரும் நொச்சியைக்கூட பயிர் செய்யக்கூடிய நிலைமை வந்தாலும் வரும்.

இயற்கைக் காடுகளை அழித்து கான்க்ரீட் காடுகளை ஏகத்துக்கும் உருவாக்கியதற்கு நாம் இன்னும் என்னென்ன விலைகளை தரப்போகிறோமோ? தற்போது கொசுவை ஒழிக்க நாம் பயன்படுத்தி வரும் கெமிக்கல் முறைகளை எதிர்க்கும் திறன் கொசுக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விட்டிருக்கிறது. எனவே இயற்கை ஏற்கனவே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஏற்பாடுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். என்ன இருந்தாலும் உலகம் உருண்டைதானே... வாழ்க்கை வட்டம்தானே?

(நன்றி : புதிய தலைமுறை)

23 மார்ச், 2013

சிங் vs கவுர்

தமிழ் படங்களுக்கான ஓவர்சீஸ் கலெக்‌ஷன் ஈழத்தமிழர்களை நம்பியிருக்கிறது. போலவே இந்திப் படங்களுக்கு பஞ்சாபிகள். நாம் என்னதான் சர்தார்ஜி ஜோக்குகள் சொல்லி அவர்களை நக்கலடித்துக் கொண்டிருந்தாலும் உலகம் முழுக்க பரவலாக காலூன்றியிருக்கிறார்கள் சிங்குகள். குறிப்பாக ஐரோப்பாவில் இந்தியர்கள் என்றாலே பஞ்சாபிகள்தான் எனும் வகையில் வணிகத்தில் கோலோச்சுகிறார்கள்.

இதைப் புரிந்துகொண்ட இந்தித் தயாரிப்பாளர்கள் அவர்களை குறிவைத்து கதைகளை உருவாக்க அயல்நாடுகளில் இந்திப்படங்கள் சக்கைப்போடு போட்டு வசூலை வாரி குவித்தன. பஞ்சாபியர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு ‘சிங்’ கேரக்டர் ஒவ்வொரு படத்திலும் உருவாக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கதையே பஞ்சாபில் நடப்பதைப்போல ‘சன் ஆஃப் சர்தார்’ மாதிரி படங்களும் வந்து நூறுகோடி வசூலை எட்டி சாதனை புரிந்தது. சற்று தாமதமாகவே முழித்துக்கொண்ட பஞ்சாபியர்கள், எதற்கு இந்திப் படங்களுக்கு குனியவேண்டும்.. நம் மொழியிலேயே நம்மாட்களுக்கு படங்கள் எடுக்கலாமே என்று சில ஆண்டுகளாக வரிசையாக படமெடுத்துத் தள்ளுகிறார்கள்.
                                              
1936லேயே முதல் பஞ்சாபிப்படம் கொல்கத்தாவில் தயாரானது. ‘ஷீலா’ என்கிற பெயரில் தயாரான அப்படம் லாகூர் மாகாணத்தில் வெளியானது (அப்போது ஒன்றுபட்ட இந்தியா). அப்படம் வெற்றியடைய அடுத்தடுத்து நிறைய படங்கள் பஞ்சாபி மொழியில் உருவாக்கப்பட்டன. 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது பஞ்சாபில் பாதி பாகிஸ்தானுக்கு போனது. அப்போது பஞ்சாபி சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள். அவர்கள் லாகூருக்கு இடம்பெயர்ந்து ’லாலிவுட்’ எனப்படக்கூடிய பாகிஸ்தான் திரையுலகை உருவாக்கினார்கள். நம்மூர் பஞ்சாபில் திரைமுயற்சிகள் குறைந்து, ஒரு கட்டத்தில் இந்திப்படம் பார்த்து மனசை தேற்றிக் கொண்டார்கள்.
                                                     s
எப்போதாவது அத்திப்பூத்தாற்போல பஞ்சாபி படங்கள் அரங்குக்கு வரும். தோராயமாக பார்க்கப்போனால் எழுபதுகளில் வருடத்துக்கு ஒன்பது படங்கள், எண்பதுகளில் எட்டு, தொண்ணூறுகளில் ஆறு, ஏழு என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. இரண்டாயிரங்களில் இந்திப் படங்கள் வெளிநாடுகளில் வசூலை அள்ளும்போது பொங்கியெழுந்த பஞ்ச்வுட் என்கிற பஞ்சாபி சினிமா சீறிப்பாய தொடங்கியது. 2002ல் மன்மோகன்சிங் (பிரதமர் அல்ல, இவர் இயக்குனர்) இயக்கத்தில் பாடகர் ஹர்பஜன் மான் நடித்த ‘ஜீ ஆயேன் நூ’ இமாலய வெற்றியை அடைய பஞ்சாபிய சினிமா மீண்டும் ஆட்டைக்கு வந்தது. ஹர்பஜன் – மன்மோகன் காம்பினேஷன் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களாக சுட்டுத் தள்ளினார்கள்.

rabba300

2010ல் மட்டும் பதினாறு படங்கள் வெளியானது. ஜிம்மி ஷெர்கீல் நடித்த ‘மெல் கராதே ரப்பா’ எல்லா சாதனைகளையும் உடைத்து பத்து கோடிக்கு மேல் வசூலித்தது. பஞ்சாபில் இவ்வளவு பெரிய பிசினஸ் செய்த முதல் படம் இதுதான். நாப்பத்தி இரண்டு வயதாகும் ஜிம்மி ஷெர்கீல் இப்போது அந்த ஊரின் சூப்பர் ஸ்டார். கடந்த ஆண்டு மட்டுமே இருபது படத்துக்கும் மேலே வெளியாகியிருக்கிறது. என்.ஆர்.ஐ. பஞ்சாபிகளை கவரும் விதமான கதை, காட்சியமைப்பு என்பதுதான் சமீபகால பஞ்சாபி படங்களின் தன்மை. கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாபி படங்களின் பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே போக பாலிவுட்டுக்குப் போன பஞ்சாபிகள் தங்கள் தாய்மண்ணுக்கே திரும்பவர தொடங்கினார்கள். ஜூஹிசாவலா இப்போது பஞ்சாபி படங்களில் நடிக்கிறார். எதிர்காலத்தில் குஷ்பு, சிம்ரன் போன்றவர்கள் நடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்வாசனை கமழும் படங்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எது எப்படியாயினும் காதல்-காமெடி வகைகளில் படங்களை எடுப்பதுதான் அவர்களது பர்ஸ்ட் சாய்ஸ்.sing569
சமீபத்தில் வெளியான சிங் vs கவுர் படத்தைப் பற்றி எழுதவந்து ஓபனிங் கொஞ்சம் நீண்டுவிட்டதற்கு மன்னிக்கவும். ஏனெனில் இந்த பஞ்சாபிப் படங்களை பற்றி பேசும்போது லேசாக இந்த பின்னணியை தெரிந்துவைத்துக் கொள்வதும் அவசியம். பத்து, பதினைந்து கோடியெல்லாம் பெரிய கலெக்‌ஷனா என்றால் பஞ்சாபியில் யெஸ் தான் சொல்லவேண்டும். கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டெல்லாம் வளர்ந்த பிள்ளைகள். பஞ்ச்வுட் தவழும் குந்தை.

பஞ்ச்வுட்டில் முதன்முறையாக ஒரு தென்னிந்திய படநிறுவனம் படம் தயாரித்திருக்கிறது என்பதுதான் சிங் vs கவுரைப் பற்றி நாம் தெரிந்துவைத்துக் கொள்வதற்கான நியாயமாக இருக்கிறது. தயாரிப்பாளர் வேறு யாருமில்லை. ‘வசந்தமாளிகை’ தயாரித்த நம்ம பக்கத்து ஊர் ராமாநாயுடுதான். அங்குள்ள உள்ளூர் தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து தயாரித்த இப்படத்தோடு ஒட்டுமொத்தமாக நம் சன்பிக்சர்ஸ் கணக்காக ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸும் களமிறங்கியது. நாலு கோடி ரூபாய் செலவில் பிரும்மாண்டமாக உருவான படம் என்பதே இப்படத்துக்கு உலகெங்கும் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியது.

ஹீரோவாக நடித்த முப்பத்தியோரு வயது ஜிப்பி கிராவெல் அடிப்படையில் ஒரு பாடகர். பஞ்சாபி சினிமாவில் நடிப்பவர்கள் பெரும்பாலும் பாடகர்களாகவும் இருந்தாக வேண்டும். பாடத்தெரியாதவர்களை பஞ்சாப் ரசிகர்கள் மதிப்பதில்லை. மேலே குறிப்பிட்டிருக்கும் வசூல்சாதனை சரித்திரம் படைத்த படமான ‘மெல் கராதே ரப்பா’வில் அறிமுகம் ஆனவர் இவர். பஞ்சாபில் அதிகம் விற்கக்கூடிய இசை ஆல்பங்கள் ஏராளமானவை இவரது கைவண்ணம்தான். பாப்கார்னை வாயில் போடுவது மாதிரி பரபரவென்று நான்கு படங்கள் நடித்து (நான்குமே சூப்பர்ஹிட்), இது ஐந்தாவது படம். பஞ்சாபின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ என்று இவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பாலிவுட்டின் நூறுகோடி ஹீரோ அக்‌ஷய்குமார் அடுத்த படமொன்றில் தன்னோடு நடிக்க இவரை அழைத்திருக்கிறார்.
                               

ஹீரோ விரும்பாத ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஊர் கட்டாயப்படுத்துகிறது. இந்த தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு கனடா பெண்ணை காதலிப்பதாக சும்மாவாச்சுக்கும் டூப் அடிக்கிறார். நம்பகத்தன்மைக்காக இண்டர்நெட்டில் இருந்து அப்பெண்ணின் போட்டோவை பிரிண்ட் எடுத்தும் காட்டுகிறார். அந்த பெண்ணை நேரில் அழைத்துவரவேண்டும் என்று அம்மாவும், உறவினர்களும் கட்டாயப்படுத்த கனடாவுக்கு போகிறார். கனடாவில் அப்பெண்ணை இரண்டு மூன்று முறை கொலைவெறி தாக்குதலில் இருந்து காக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு பாடிகார்டாகவே ஆகிவிடுகிறார். ஊரில் இருந்து ‘அழுத்தம்’ வர வேறு வழியின்றி பொய்சொல்லி இந்தப் பெண்ணை ஊருக்கு அழைத்து வருகிறார். அடுத்தடுத்து பொய் சொல்வதும், அந்த பொய்யை மெய்யாக்க பாடுபடுவதுமாக படம் முழுக்க கிரேஸிமோகன் பாணி காட்சிகள். முதல் பாதி முழுக்க காமெடி, ஆக்‌ஷன் என்று களைகட்ட, இரண்டாம் பாதியில் அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகள்.

காமெடி-ரொமான்ஸ் படமாக வருமென்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு சிங் vs கவுர் மரண மசாலா ஆக்‌ஷன் படமாக வந்து ஆச்சரியமூட்டியது. பஞ்சாபில் ‘தபாங் சிங்’, ‘ரவுடி சிங்’ என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கல்லா கட்டுகிறார்கள். ராமாநாயுடுவின் தயாரிப்பு என்பதாலோ என்னவோ நிறைய தெலுங்கு மசாலா வாசனை. குத்துப்பாட்டு, டேன்ஸ், காமெடி, காதல், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் என்று பர்பெக்ட்டான காக்டெயில்.  

singh-vs-kaur1 copy

இப்படம் பஞ்சாபி சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது என்று அந்த ஊர் ஊடகங்கள் கொண்டாடுகிறது. சினிமாத் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட ஆட்கள் இனி பஞ்சாபி படங்களிலும் முதலீடு செய்ய பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. உள்ளூர், வெளியூர் என்று ரிலீஸ் ஆன அத்தனை சென்டர்களிலும் வசூல் சுனாமி. இப்படம் வெளியானபோது கூடவே வெளியான இந்தியின் சூப்பர்ஹிட் படமான ‘கை போ சே’ பஞ்சாபில் வசூலில் அடிவாங்க இப்படமே காரணம். ஐரோப்பாவில் ‘கோ ஃபார் ஜிப்பி’ என்று புதுகோஷமே ஜிப்பிகிராவெலுக்காக உருவாக்கப்பட்டு விட்டது.

முன்பே சொன்னதுபோல பஞ்ச்வுட்காரர்கள் தவழும் குழந்தைகள். வளரும் வரை ரசிப்போம். வளர்ந்தபின்னர் விமர்சிப்போம்.

(நன்றி : http://cinemobita.com)