6 மே, 2013

‘துளு’ சினிமாவின் மறுமலர்ச்சி!


பாறையில் விதைக்கப்பட்ட விதை முளைத்து மரம் ஆனால் சாதனைதானே? கன்னட சினிமாவே கால்காணி நிலத்தை வைத்துக்கொண்டு தத்தக்கா… பித்தக்கா… என்று தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டியூண்டு இண்டஸ்ட்ரிக்குள்ளும் அமீபா சைஸில் உருவான இன்னொரு இண்டஸ்ட்ரி முளைத்து வருவது அதிசயம். அவ்வாறு வீறுகொண்டு எழுந்துக் கொண்டிருப்பது ‘துளு’ சினிமா. தென் கர்நாடகாவிலும், கேரளாவின் சில இடங்களிலும் திராவிட மொழியான ‘துளு’ இன்னமும் வாழ்கிறது. மங்களூர், உடுப்பி, காசர்கோடு பகுதிகளில் துளு பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

இந்திய சினிமாவுக்கு வயது நூறு என்றாலும் துளு சினிமா இன்னும் இளைஞன்தான். நாற்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. 1971ல் வெளிவந்த ‘என்ன தங்காடி’தான் துளுவில் வெளிவந்த முதல் திரைப்படம். பத்து, பதினைந்து தியேட்டர்களில் ஒரு படத்தை திரையிட முடிந்தாலே இன்றும் அது சாதனைதான். வருடத்துக்கு ஒன்று, இரண்டு திரைப்படங்கள் வந்தாலே ஆச்சரியம். இன்னும் மொத்தமாக நாற்பது படங்கள் கூட வரவில்லை. கன்னட சினிமாவில் பணிபுரிபவர்கள் பெத்த மனசு வைத்து அவ்வப்போது துளுவிலும் பங்காற்றுகிறார்கள் (தகவலுக்காக : உதயம் NH4 திரைப்படத்தின் நாயகி அஷ்ரிதா கூட துளுதான்).

இருந்தும் சில குறிப்பிடத்தக்க மைல்கற்களை துளு சினிமா எட்டியிருக்கிறது. இம்மொழியில் தயாரிக்கப்பட்ட ‘செப்டம்பர் 8’ இருபத்தி நான்கு மணி நேரத்தில் மொத்தமாக தயார் செய்யப்பட்டு உலகசாதனை படைத்தது. ஆசிய திரைப்படவிழாவான ஓசியன் சினிஃபேனில் ‘சுடா’ என்கிற துளு திரைப்படம், சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ’பங்காரு பட்லர்’ என்கிற திரைப்படம் நிறைய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை குவித்திருக்கிறது.
                               
மிகச்சிறுபான்மை மொழியான தங்கள் மொழியிலும் படங்களை எடுத்து ஆத்மதிருப்தி பட்டுக்கொண்டாலும், என்னதான் விருதுகளை குவித்தாலும் மற்ற மொழிப்படங்களை மாதிரி வணிகரீதியாக காசு பார்க்க முடியவில்லையே என்று துளுக்காரர்களுக்கு நீண்டநாள் ஏக்கம் இருந்தது. 2011ல் வெளிவந்த ‘ஓரியார்டோரி அசல்’ அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தது. பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படம் ஒன்றரை கோடிக்கும் மேலாக வசூலித்து, துளுவில் படமெடுத்தால் துண்டைப்போட்டுக் கொண்டுதான் போகவேண்டும் என்கிற நிலையை மாற்றியமைத்திருக்கிறது. ‘துளுவின் வெற்றிகரமான முதல் சினிமா’ என்று அங்கிருக்கும் விமர்சகர்கள்(!) கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். பெங்களூர், மும்பை மாதிரி பெருநகரங்களிலும், இப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. விருது வாங்குவதற்கும், பெயர் பெருவதற்கும்தான் துளு சினிமா என்கிற நிலை இனியில்லை. துளுவர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், மலையாளர்கள், கொங்கணிகளும் இப்படத்தின் வெற்றியில் மகிழ்ந்தார்கள். ஆயிரம் மாச்சரியங்கள் இருந்தாலும் நம் பங்காளிக்கு ஒரு கவுரவம் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஓரியார்டோரி அசல்’ நாடகமாக மேடையில் ஏறியபோது துளுவர்கள் எப்படிப்பட்ட பரவசத்தை அடைந்தார்கள் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அந்த நாடகத்தை எழுதி இயக்கிய விஜயகுமார் கோடியால்பெய்ல் ஓவர்நைட் நட்சத்திரமாக மின்னினார். நாடகத்துக்கு கிடைத்த ஆதரவைக் காட்டிலும், அது சினிமாவாக எடுக்கப்பட்டால் பன்மடங்கு கிடைக்கும் என்று அவர் எண்ணினார். தயாரிப்பாளர்கள் அப்படி எண்ணவேண்டுமே?

director
இத்தனை ஆண்டுகளாக ஸ்க்ரிப்ட்டை புள்ளைத்தாய்ச்சி மாதிரி சுமந்துக்கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரின் வீட்டு வாசலாய் அலைந்ததுதான் மிச்சம். பணத்தைக் கொண்டு போய் கிணற்றில் போடச் சொல்கிறாயா? என்று விரட்டி அடித்தார்கள். கலைச்சேவைக்கு காசு செலவழிக்க எல்லாருக்குமா மனமிருக்கும். விஜயகுமார் சோர்ந்துவிடவில்லை. சிறுகச்சிறுக சேர்க்கும் டி.என்.எஸ்.சி. பேங்க் சிட்டுக்குருவியாய் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தார். நிறைய கடன் வாங்கினார். (அவருடைய படத்தைப் பாருங்கள், டொக்கு விழுந்துப்போய் பரிதாபமாக இருக்கிறார்). ஒரு கோடி ரூபாய் சேர்ந்ததும், தில்லாக பூஜையும் போட்டுவிட்டார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு எல்லாமே அவர்தான். ஸ்டார்ட், கட் சொல்லத் தெரியாது என்பதால் இயக்கத்தை மட்டும் ராஜசேகர் என்பவரிடம் கொடுத்துவிட்டார்.


கதை நடப்பதாக சொல்லப்படும் கோடியால்பெய்ல் பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. ‘ரியாலிட்டி வேண்டும். எனவே நோ செட்டிங்ஸ்’ என்று அவர் சொன்னாலும், செட்டிங்ஸ் போடவும் ஆர்ட் டைரக்டருக்கு பணம் கொடுக்கவும் அவரிடம் காசு இல்லை என்பதுதான் உண்மை. படத்தின் ஹீரோ சின்னத்திரையில் ஃபேமஸான லிங்கா ஷெட்டி. ஹீரோயின் ரம்யா பர்ணா. கொடுத்த காசுக்கு மேலேயே நடிக்கத் தயாராக இருந்தார்கள். துளு நாடகத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் விஜயகுமாருக்கு கைகொடுக்க முன்வந்தார்கள். நவீன் படில், அரவிந்த் போலார், ராஜேஷ் பந்த்வால் போன்றோர் கிட்டத்தட்ட ஃப்ரீயாகவே நடித்தார்கள் என்று தகவல். கன்னட சினிமா ஆட்களான ரேகாதாஸ், லட்சுமிதேவி, சத்யஜித், ரேமண்ட் டிசவுசா போன்றவர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். கன்னடத்தில் பிரபலமான இசையமைப்பாளரான குருகிரண் கவுரவ வேடத்தில் தோன்றினார்.

thulu2
துளு நாடகங்களுக்கு மறுமலர்ச்சி தந்த ‘ஓரியார்டோரி அசல்’, துளு சினிமாவுக்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் நம்பிக்கை. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு படமெடுத்த விஜயகுமாருக்கு, படம் வெளியானபின்பு நல்ல அறுவடை. கடன்காரர்களுக்கு என்னென்ன சாக்கு சொல்லவேண்டும் என்று திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தவருக்கு, அதற்கெல்லாம் அவசியமே படாமல் பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டியது. ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேலே லாபமாம். இன்னமும் தினமும் தன் கையை தானே கிள்ளிப் பார்த்து, தான் வாழ்வது கனவுலகில் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் விஜயகுமார்.


படத்தின் கதை ரொம்ப சிம்பிள். வீட்டு ஓனருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்குமான பிரச்சினைகள். ஒரே காம்பவுண்டில் பல வீடுகள் வசிக்கும் முறையை ‘வட்டாரம்’ என்போம் இல்லையா (திருச்சியில் ‘ஸ்டோர்’ என்பார்களாமே?), அம்மாதிரி வட்டார வீடு ஒன்றில் நடக்கும் தினப்படி சம்பவங்கள்தான் கதை. முழுக்க முழுக்க விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை. வாடகைக்கு வசிக்கும் மூன்று குடும்பங்கள். அதில் ஒரு பையன் வீட்டு ஓனரின் பெண்ணையே எப்படியோ உஷார் செய்துவிடுகிறான். சில பல குழப்படிகளுக்கு பிறகு சுபம்.

thulu3
துளுவர்களின் ஏற்றம், தாழ்வு என்று அனைத்தையுமே மறைமுகமாக இப்படம் சுட்டிக் காட்டுகிறது. அம்மொழியை பேசுபவர்கள் இன்று சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன என்னவென்று அடையாளம் காட்டுகிறது. தங்களைப் பற்றிய கண்ணாடியாக இப்படம் அமைந்திருப்பதால், வெறிகொண்டு வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் துளுவர்கள். இப்படத்தை தொடர்ந்து துளுவில் மூன்று, நான்கு படங்கள் வந்துவிட்டன. நிறைய படங்கள் தயாரிப்பிலும் இருக்கிறது. இப்போதைய துளு படங்களின் டிரெண்ட் காமெடிதான். இந்த வெற்றி கர்நாடகாவில் பேசப்படும் மற்றைய சிறுபான்மை மொழிகளான கொடவா, பேரி போன்ற மொழிகளிலும் சினிமா எடுக்க தெம்பு கொடுத்திருக்கிறது.


சிறுகுழந்தைகள் கூட்டாஞ்சோறு விளையாடுவது மாதிரி படமெடுக்கிறார்கள். சுவைத்துப் பார்த்து, குறைகளை மறைத்து அவர்களது மனம் மலர பாராட்டலாம்.
                                     thulumovie1

(நன்றி : cinemobita.com)

2 மே, 2013

நெ.5, 2nd லைன் பீச்


எண்பதுகளில் இருந்த எல்லா இளைஞர்களையும் போலதான் சுந்தரும். ப்ளஸ் டூ முடித்திருந்தார். மேற்கொண்டு பட்டம் படிக்குமளவுக்கு வசதியில்லை. டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கற்றுவிட்டு அரசுப்பணியில் சேர்வதுதான் லட்சியம். அது நிறைவேறும் வரை தற்காலிகமாக எங்காவது வேலை பார்க்க வேண்டுமே? சென்னை அமைந்தகரையில் இருந்த ஒரு நிறுவனத்தில் ஸ்டெனோவாக பணிக்கு சேர்ந்தார். மிகக்குறைவான சம்பளம். இடுப்பை ஒடிக்கும் வேலை. மூன்று ஆண்டுகள் மாங்கு மாங்குவென்று டைப் அடித்தார்.

கூடுதல் சம்பளத்துக்கு வேறு ஒரு வேலை கிடைத்தது. ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் என்பதால்  சென்னை துறைமுகத்துக்கு அருகில் இம்மாதிரி நிறைய நிறுவனங்கள் உண்டு. இயல்பிலேயே சுந்தருக்கு இருந்த சூட்டித்தனம் அந்த அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. விரைவிலேயே அலுவலகத்தில் ‘ஆல்-இன்-ஆல்’ ஆனார். காலையில் முதலில் வந்து அலுவலகத்தை திறப்பதும் அவர்தான். இறுதியாக கதவை மூடிவிட்டுச் செல்வதும் அவர்தான். அம்பத்தூரில் வீடு. அம்மா கட்டிக் கொடுக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ரயில் ஏறினார் என்றால் அலுவலகம்தான் அனைத்துமே. சுந்தர் இல்லாமல் அணுவும் அசையாது என்கிற நிலைமை அலுவலகத்தில். ஆபிஸ்பாய் வேலையில் தொடங்கி அதிகாரி வேலை வரைக்கும் அவரே இழுத்துப்போட்டு செய்தார். பலநாள் அலுவலகத்திலேயே தங்கி இரவுமுழுக்க வேலை பார்க்கவேண்டியும் வரும். லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் ஆதி முதல் அந்தம் வரை பிடிபட்டது. ஆங்கிலமும் வசப்பட்டது.

ஃபீல்டில் சுந்தரின் புகழ் பரவியது. போட்டி நிறுவனம் ஒன்று தன்னுடைய நிறுவனத்துக்கு அவரை உரிய கவுரவத்தோடு அழைத்தது. மேலாளராக போய் சேர்ந்த இடத்தில் அங்கு பணிபுரிபவர்களில் ஆறு பேர் நண்பர்கள் ஆனார்கள். உமாபதி, முனிரத்தினம், உதயகுமார், கருணாநிதி, கண்ணன், ரமேஷ். டீமாக அனைவரும் இணைந்து பணியாற்ற பணியில் அடையவேண்டிய உயரத்தை அடைந்தார்கள். ஒருகட்டத்தில் சுந்தருக்கு யோசனை வந்தது. ஏழு பேருமே திறமைசாலிகள். நாம் ஏன் இன்னொரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டும், சொந்த நிறுவனம் ஆரம்பித்தால்?

அனைவருமே நடுத்தர வர்க்கம். கையில் இருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்புகளை முதலீடாக போட்டார்கள். முந்தைய பணியில் பிடிக்கப்பட்ட பி.எஃப். தொகையையும் முதலீடுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். வாடகைக்கு இடம்பிடித்து ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கும்போதுதான் தெரிந்தது, லைசென்ஸ் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. அதிலும் லைசென்ஸ் பெறுபவருக்கான குறைந்தபட்சத் தகுதி பட்டம். இவர்களில் ஒருவர்கூட பட்டதாரி அல்ல. தற்காலிகமாக வேறு ஒரு நிறுவனத்தின் சப் ஏஜெண்ட் போல நிறுவனத்தை தொடங்கினார்கள். அதாவது வேலை இவர்கள் பார்ப்பார்கள். வேலை பார்ப்பதற்கான லைசென்ஸ் அந்த நிறுவனத்துக்கு இருக்கும். ஒட்டுமொத்த வர்த்தகத்தில் ஒரு பர்சண்டேஜ் அந்நிறுவனத்துக்கு போகும்.

கம்பெனிக்கு என்ன பெயர் வைப்பது? பொதுவாக பெற்றோர் பெயரைதான் வைக்கிறார்கள். ஓர் எழுத்தாளரின் பெயரை வைத்தால் என்ன என்று சுந்தருக்கு யோசனை. ஆரம்பத்தில் சிறுபத்திரிகைகளில் கவிதை எழுதிக்கொண்டிருந்தவர் சுந்தர். ஒரு கட்டத்தில் இலக்கியச் செயல்பாடுகள் பணியை பாதிக்கிறது என்பதால் வாசிப்போடு நிறுத்திக்கொண்டார். அவருக்கு பிடித்த எழுத்தாளரான நகுலனின் பெயரையே நிறுவனத்துக்கும் சூட்டினார். நகுலன் லாஜிஸ்டிக்ஸ். வேறு எங்காவது ஓர் எழுத்தாளரின் பெயர் நிறுவனத்துக்கு சூட்டப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. 2003ல் இந்நிறுவனம் இப்படித்தான் உருவானது.

ஏழு பேரும் முதலாளிகள் என்றாலும் தொழிலாளர்களும் அவர்களே. மாதாமாதம் சம்பளம் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். வருடத்துக்கு ஒருமுறை கணக்குப் பார்த்து லாபத்தை பிரித்துக் கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனம் வளரத் தொடங்கியது. சொந்தமாக லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களில் ஒருவரே பட்டம் படித்தார். நகுலன் லாஜிஸ்டிக்ஸ் அருகிலேயே லிங்குசெட்டித் தெருவில் இன்னொரு கிளை தொடங்கியது. சென்னை ஏர்போர்ட், தூத்துக்குடி, பெங்களூர், மும்பை என்று நிறைய கிளை அலுவலகங்களோடு வளரத் தொடங்கியது. இன்று லாஜிஸ்டிக்ஸ் துறையில் இயங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று நகுலன் லாஜிஸ்டிக்ஸ்.

இடப்பற்றாக்குறை காரணமாக சமீபத்தில் புது அலுவலகத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். முகவரி : நெ.5, 2nd லைன் பீச், சென்னை-1. துறைமுகம் அருகில் சுந்தர் முதலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார் இல்லையா? அதே முகவரிதான். இருபது வருடங்களுக்கு முன்பு எந்த முகவரியில் தொழிலாளியாக இரவும், பகலுமாக வேலை பார்த்தாரோ, இன்று அதே முகவரியில் முதலாளியாக தனி கேபினில் அமர்ந்திருக்கிறார்.

“திட்டமிட்டெல்லாம் இந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை. யதேச்சையாக அமைந்த விஷயம்தான். ஆனால் இதே இடம் அமைந்தது எனக்கும் ஆச்சரியமாகதான் இருக்கிறது” என்கிறார் சுந்தர்.

படிப்பு என்பது பணம் சம்பாதிப்பதற்கான பாதை என்றொரு மாயை இருக்கிறது. பட்டம் கூட இல்லாமல் நிறுவனம் ஆரம்பித்த ஏழு பேர் இன்று பல நூறு பேருக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

(நன்றி : புதிய தலைமுறை)

30 ஏப்ரல், 2013

பலே ‘பச்சன்’

bachchanசந்தேகமே வேண்டாம். சுதீப், கர்நாடகாவின் அஜித். அடித்துப் பிடித்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததில் மட்டுமல்ல, வள்ளல் குணத்திலும் அச்சு அசலாக அஜித். கன்னட சினிமாவின் பாரம்பரிய குடும்ப நடிகர்கள் பிரபுத்துவ மனப்பான்மையோடு இண்டஸ்ட்ரியை அணுக, சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், மிகச்சாதாரண தொழிலாளியாகவே தன்னை முன்வைக்கிறார். கன்னட சினிமா அடுத்தக் கட்டத்துக்கு நகரவேண்டும் என்கிற லட்சியத்தில் உழைப்பவர். சற்றும் சுயநலமில்லாதவர் என்று இவரது எதிரிகள் கூட ஒப்புக் கொள்கிறார்கள். நாற்பது வயதுதான் ஆகிறது. பதினாறு வருடங்களில் அசுரவேகத்தில் ஐம்பது படங்களை தாண்டிவிட்டார்.

அடிப்படையில் மெக்கானிக்கல் என்ஜினியர். அப்பா ஹோட்டல் நடத்தி வந்தார். கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்பதுதான் சுதீப்பின் சிறுவயது லட்சியம். ராகுல் ட்ராவிட்டின் நண்பர். பிஸினஸ்மேனான அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் வேப்பங்காய். கிரிக்கெட்டுக்கு அடுத்து சுதீப்புக்கு ரொம்பவும் பிடித்தது சினிமா. எனவே சினிமாவில் நுழைகிறேன் என்று அடம்பிடித்தார். சுதீப் அம்மா செல்லம். அம்மாவும் அப்பாவை வற்புறுத்த ‘எக்கேடாவது கெட்டுத் தொலை’ என்று தண்ணீர் தெளித்து விட்டார்.

ஆரம்பத்தில் டிவி சீரியலில் நடிக்கத்தான் சான்ஸ் கிடைத்தது. உதயா டிவியில் ஒளிபரப்பான ‘பிரேமதா காதம்பரி’ சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் நல்ல பெயர். இந்த பெயரை பயன்படுத்தி பெரிய திரைக்குள் நுழைய எடுத்த முயற்சிகள் ஆரம்பத்தில் படுதோல்வி. அவருக்கு வாய்ப்பு கிடைத்த இரண்டு படங்களும் பாதியிலேயே பொட்டிக்குள் முடங்கின. சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் முட்டி மோதி முயற்சித்துக் கொண்டே இருந்தார். ’தயவ்வா’ படத்தில் ஒரு துண்டு வேடம். இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 1999ல் அடுத்த வேடம் கிடைத்தது. இதுவும் துண்டு கேரக்டர்தான். படத்தின் பெயர் ‘ப்ரத்யார்த்தா’. சின்ன கேரக்டராக இருந்தாலும் சுதீப்பின் ஆர்வமும், அலட்டல் இல்லாத குணமும், அசராத உழைப்பும் இயக்குனர் சுனில்குமார் தேசாயை கவர்ந்தது. அவர் அடுத்து இயக்கிய ‘ஸ்பர்ஷா’வில் சுதீப்தான் ஹீரோ.
                                   sudeep1
ஸ்பர்ஷாவைத் தொடர்ந்து சுதீப் நடித்த ‘ஹூச்சா’ அவரை எங்கோ கொண்டு சென்றது. ’சீயான்’ விக்ரம் என்று இங்கே சொல்வதைப் போல, கர்னாடகாவில் ‘கிச்சா’ சுதீப் என்பார்கள். அதாவது சேதுதான் ‘ஹூச்சா’வாக ரீமேக் ஆனது. அவ்வாண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதும் சுதீப்புக்கு கிடைத்தது.

அப்படியே பிடித்துவிட்டார் இந்த ரூட்டை. வாலி, சிப்பிக்குள் முத்து, தில் என்று சரமாரியாக தமிழ்பட ரீமேக்குகளில் நடித்து ஹிட்டு ஹிட்டென ஹிட்டடித்தார். முதன்முதலாக அவர் தயாரித்து இயக்கிய படமும் நம்மூர் ஆட்டோகிராப்தான். தெலுங்கு, மலையாளத்தில் ஹிட்டடித்த படங்களை ரீமேக் செய்வதாக இருந்தால், முதலில் சுதீப்பின் கால்ஷீட் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறார்கள் அந்த ஊர் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். உச்சமாக தமிழில் செம கல்லா கட்டிய ‘சிங்கம்’ படத்தின் உரிமையை வாங்கி ‘கெம்பே கவுடா’வாக நடித்து இயக்கினார் சுதீப். கர்நாடகா சினிமாவின் வசூல் எல்லை பரப்பளவை ஒரே படத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விரிவாக்கினார்.

sudeep
ராம்கோபால் வர்மாவுக்கு சுதீப்பின் உயரம் மற்றும் கூர்மையான கண்கள் மீது காதல். இந்திக்கு அழைத்துச் சென்றார். அங்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி இல்லையென்றாலும், ராம்கோபால் வர்மாவின் தீவிர ரசிகரான ராஜமலிவுக்கு சுதீப் மீது மரியாதை பிறந்தது. தெலுங்கில் ‘ஈகா’வாகவும், தமிழில் ‘நான் ஈ’யாகவும் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த படம் தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சுதீப்பை நிலைநிறுத்தியது. தற்காலிகமாக கன்னட சினிமாவை மறந்தார். 2011ல் வெளிவந்த விஷ்ணுவர்த்தனாவுக்கு பிறகு, சிலமாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘வரதநாயக்கா’வில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். சுதீப் ஹீரோவாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படம் என்பதே ‘பச்சனின்’ தனிச்சிறப்பு.


உகாதி போனஸாக கன்னடர்களுக்கு கிடைத்த ‘பச்சன்’ கோடி, கோடியாக குவித்துக் கொண்டிருக்கிறது. முதன்முதலாக ஒரு கன்னடப்படம் இருநூறு தியேட்டர்களில் வெளியாகிறது. ஓவர்சீஸிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பச்சன். இயக்குனர் சஷாங்கின் முந்தைய படங்களான மொக்கின மனசு, கிருஷ்ணன் லவ் ஸ்டோரி ஆகியவை சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் தானென்றாலும், பச்சன் யாருமே எதிர்ப்பார்க்காத பம்பர் ஹிட். சுதீப்பின் மேஜிக் இது என்று சாண்டல்வுட்டே திருவிழாக்கால மகிழ்ச்சியில் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவைதான் அணுகினார்கள். கன்னட சினிமா பட்ஜெட் நயனுக்கு ஒத்துவரவில்லை. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதை போல பாவனா. அதனால் ஒன்றும் நஷ்டமில்லை.

சுதீப் ஒரு தொழிலதிபர். மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென வாழ்கிற நாயகி பாவனாவின் மீது தீவிரக்காதல். சுரங்க சுரண்டல் மாஃபியா ஒருவனால் பாவனாவுக்கு பிரச்சினை. இப்படியாக சாதாரணமாக போகும் பழிவாங்கும் கதைதான். ஆனால் சுவாரஸ்யமான ட்விஸ்ட்டுகள், எதிர்ப்பார்க்க முடியாத திருப்பங்கள், பரபரவென நகரும் திரைக்கதை என்று சஷாங்கின் திறமையான இயக்கம் இப்படத்தை மாஸ் எண்டெர்டெயினராக மாற்றியிருக்கிறது.
                                 sudeep2
ரீமேக் உரிமையை வாங்க இந்தி, தெலுங்கு, தமிழ் என்று போட்டாபோட்டி. கர்நாடக அரசியலையே கலைத்துப்போட்ட ‘பெல்லாரி’ சுரங்க சுரண்டல் தனிமனிதன் ஒருவனை எப்படி பாதிக்கிறது என்பதுதான் களம். சஸ்பென்ஸ் த்ரில்லராக அடுத்து என்னவோ என்று கைகளைப் பிசைந்துக்கொண்டே படம் பார்க்கும் ரசிகனுக்கு ‘வீக்’கான க்ளைமேக்ஸை அமைத்திருப்பதுதான் படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட். இந்திப்படமான ‘அக்னிபத்’தின் லேசான பாதிப்பு திரைக்கதையில் இருப்பதாலோ என்னவோதான் அமிதாப் பச்சனுக்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக ‘பச்சன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்களோ என்னவோ.

முதல்வார வசூலே எட்டு கோடியை எட்டிவிட்டது. விமர்சகர்களும், ரசிகர்களும் ஒரே குரலில் பேசுவது குறிஞ்சி பூப்பதைப் போல அதிசயம்தான். ‘பச்சன்’ விஷயத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தேறி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை வந்த சுதீப்பின் படங்களில் இதுதான் பெஸ்ட் என்று ஊரே குலவையிடுகிறது.

(நன்றி : cinemobita.com)

23 ஏப்ரல், 2013

காந்தியத்துக்கு ஜே!


ஏப்ரல் வந்தாச்சி. கோடை வந்தாலே நம்மிடம் சகமனிதர்கள் யாரும் பேசுவதில்லை. குரைக்கிறார்கள். நாமும் பதிலுக்கு குரைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. யாரை சொல்லியும் குற்றமில்லை. சூரிய பகவானின் அக்னிவிளையாடல். கேஷுவல் என்றால் டைட்டாக ஜீன்ஸும், டீ-ஷர்ட்டும் (பெண்களும் கூடத்தான்), ஃபார்மல் என்றால் முழுக்கைச் சட்டையை முரட்டுப் பேண்டில் இன் செய்து, பெல்ட் மாட்டி, ஷாக்ஸ் அணிந்து மேலே ஷூவும் சொருகிக் கொள்வதால் விளையும் எரிச்சலான விளைவு இது. வியர்வை கசகசக்கும் கோடைகாலத்தில் சினேகபாவம் மனிதர்களிடம் குறைவதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஒயிட் & ஒயிட்டில் வேட்டி-சட்டையை யூனிஃபார்ம் ஆக்கிக்கொண்ட அரசியல்வாதிகளை பாருங்கள். சட்டசபையில் காவலர்களால் வெளியேற்றப்படும் நேரத்திலும் கூட கூலாக சிரிக்கிறார்கள். Dress does the matter.

மகாத்மா காந்தியின் டிரெஸ் கோட் என்பது வெறும் அரசியல் காரணங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டுக்கு இயல்பாகவே பொருந்தும் உடை கதர்தான். கதர் அணிவதற்கு வரலாற்று, பொருளாதார, அரசியல், சமூக, உளவியல் மற்றும் கலாச்சார நியாயங்கள் ஏராளம் நம்மிடம் உண்டு. காதிபவன்களில் கதர் கிடைக்கிறது. கோஆப்டெக்ஸ் கடைகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் அருமையான கைத்தறி உடைகள் கிடைக்கிறது. ஆனாலும் குளிர்நாடுகளில் வெள்ளைக்காரர்கள் அணியும் உடைதான் ஃபேஷன் என்று நம்புவதால் கைத்தறியை கைவிட்டுவிட்டோம். கைத்தறி உடையை அணிவதற்கு நமக்கிருக்கும் மனத்தடை நீங்கும் பட்சத்தில் உடை விஷயத்தில் கோடையை எதிர்கொள்வது சுலபம்.

திடீரென்று எப்படி கைத்தறிக்கு மாறமுடியும், வேறு மார்க்கமில்லையா என்று கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உதவக்கூடும் :

· இறுக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். காற்று சுலபமாக உங்கள் உடலுக்குள் ஊடுருவட்டும்.

· முழுக்கை சட்டைகளை கோடை முடியும் வரை தவிர்க்கலாம்.

· டீஷர்ட்டாக இருந்தால் காலர் வைக்காத ஓபன்-நெக் சர்ட்டை தேர்ந்தெடுப்பது நல்லது.

· ஜீன்ஸ் வேண்டவே வேண்டாம். பெண்களும் கொஞ்சநாட்களுக்கு லெகின்ஸை தவிர்க்கலாம்.

· லெதர் ஜாக்கெட் மாதிரியான உடைகளை மறந்துவிடுங்கள். சிந்தெடிக் மெட்டீரியல் உடைகளையும் தவிருங்கள்.

· பெண்களை பொறுத்தவரை காட்டன் சல்வார் கமீஸ்தான் கோடைக்கு பொருத்தமான உடை.

· பார்க்க கொஞ்சம் சுமாராகதான் இருக்கும். இருந்தாலும் ஆண்கள் ஜிப்பா முயற்சிக்கலாம்.

· காட்டன் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்றவை கோடைவிடுமுறையில் வீட்டில் லூட்டி அடிக்கும் வாண்டுகளுக்கு பொருத்தமானவை.

இந்த கோடையிலிருந்தாவது யாரை பார்த்தாலும் குரைக்காமல், புன்னகைக்க முயற்சிப்போம்.

(நன்றி : புதிய தலைமுறை)

18 ஏப்ரல், 2013

‘பாட்ஷா ’- மசாலா மைல்கல்!


இளையதளபதி விஜயை அசிஸ்டெண்ட் கமிஷனர் உடையில் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். மார்பில் அணிந்திருக்கும் பேட்ஜில் எம்.ஜி.ராமச்சந்திரன், ஐ.பி.எஸ் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. “எம்.ஜி.ஆருங்கிறது, வெறும் பேரு இல்லடா... வரலாறு” என்று க்ளைமேக்ஸில் கம்பீரமாக பஞ்ச் பேசினால் எப்படியிருக்கும்.. தியேட்டரில் அதகளமாகி விடாதா..


ஆந்திராவில் இப்போது ரணகளம். தியேட்டர் தோறும் திருவிழாக்கோலம். ஐ.பி.எல்லுக்கு பட்டை நாமம். போலிஸ் அதிகாரியாக ஜூனியர் என்.டி.ஆர்., அவரது பேட்ஜில் இடம்பெறும் பெயர் என்.டி.ராமாராவ், ஐ.பி.எஸ்.,


தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாட்ஷா’தான் என்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பத்து ஐந்து கோடி செலவு என்று தகவல். பின்னே.. தென்னிந்திய சூப்பர் ஸ்டாரின் ஆல்டைம் அல்டிமேட் ஹிட் படத்தின் டைட்டிலை வைத்து டொக்கு படமா எடுக்க முடியும்? டைட்டிலின் வெயிட்டுக்காக இயக்குனர் சீனு வைத்யாலா பிரேம்-பை-பிரேமாக செதுக்கித் தள்ளியிருக்கிறார். முந்தைய ப்ளாக்பஸ்டர் இண்டஸ்ட்ரி ஹிட்டான ‘தூக்குடு’ ஏற்றிவிட்ட எதிர்ப்பார்ப்புகளையும், பூர்த்தி செய்யவேண்டும். சிரஞ்சீவி குடும்பம் கடந்தாண்டு மீண்டும் துளிர்விட்டு விட்டதால், மீண்டும் நந்தமூரியின் குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஜூனியர் என்.டி.ஆருக்கும் ஒரு மாஸ்டர்பீஸான படத்தை கொடுத்தாக வேண்டும். டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தவருக்கு ரிசல்ட்டு சரவெடி. நான்கே நாட்களில் அனாயசமாக ஐம்பது கோடி வசூல் என்றால் சும்மாவா? இந்தியாவில் மட்டுமின்றி ஓவர்சீஸிலும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சீனு வைத்யாலாவின் மேஜிக்கை. நூறு கோடியை அசால்ட்டாக எட்டிவிடும். அடுத்த மைல் கல்லான, நூற்றி ஐம்பது கோடியை தொடுமா? என்றுதான் டோலிவுட் இண்டஸ்ட்ரியில் பெட் கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
                                                     seenu
சீனு வைத்யாலா தெலுங்கு இண்டஸ்ட்ரியில், ஸ்டைலான மேக்கிங்குக்கு பேர் போனவர். கொரிய மசாலாப் படங்களின் தாக்கம், இவரது ப்ரேம் போகஸிங்கில் இருக்கும். அவரது முதல் படமான ‘நீ கோசம்’ பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக் கொண்டாலும், தனித்தன்மையான இயக்கத்துக்காக பேசப்பட்டது. அடுத்த படமான ‘ஆனந்தம்’ காமெடி கும்மி. தொடர்ச்சியாக வெங்கி, தீ, துபாய்சீனு, ரெடியென்று சகட்டுமேனிக்கு ஹிட்ரேட். ரெடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, திருஷ்டி பட்டுவிட்டது. கிங், ரெயின்போ, நமோ வெங்கடேசா, என்று கல்லாப்பெட்டியில் அடுத்தடுத்து ஓட்டை. 

முடங்கிப் போனவரை தட்டியெழுப்பியவர் மகேஷ்பாபுதான். “என்னால் இனிமேல் வெற்றிப்படம் தரமுடியுமாவென்று சந்தேகமா இருக்கிறது” என்று புலம்பியவரை, “உங்களால் முடியும். பொறுமையாக ஸ்க்ரிப்ட் ரெடி செய்யுங்கள். நான் காத்திருக்கிறேன்” என்று தைரியமூட்டினார் மகேஷ். அந்தப் படம்தான் மெகாஹிட் ‘தூக்குடு’. முன்பாக மகேஷ்பாபுவுக்கு சொல்லிக் கொள்ளும்படி ஹிட் இல்லை. தெம்பு பிறக்க ஓவர்நைட்டில் அடுத்த இன்னிங்ஸுக்கு ரெடி ஆனார்கள் மகேஷ்பாபுவும், சீனுவும். பூரியோடு இணைந்து மகேஷ்பாபு பிசினஸ்மேனாக பின்னிப் பெடலெடுக்க, இப்போது சீனுவின் சிக்ஸர் பாட்ஷாவில்.

badshah2 copy
சீனுவின் பெரிய பலம் அவர் உங்களையும், என்னையும் போல மிகச்சாதாரணமான சினிமா ரசிகர் என்பதுதான். ஒரு வெகுஜன சினிமா மிக சுலபமாக அவரை திருப்திபடுத்திவிடும். நாம் எம்.ஜி.ஆரை அணு அணுவாக ரசிப்பதைப் போல, சீனு என்.டி.ஆரை ரசிக்கிறார். தெலுங்கு சினிமாவின் அரை நூற்றாண்டு மசாலாநெடி அவரது மூளைக்குள் நன்றாக ஏறிவிட்டிருக்கிறது. எந்த காட்சிக்கு ரசிகன் விசில் அடிக்க வேண்டும், எதற்கு கைத்தட்டவேண்டும், எப்போது கண்கலங்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்படுத்தக்கூடிய வாகான சுக்கான் அவரது கையில் இருக்கிறது. நகைச்சுவை, காதல், ரகளையான பாடல், இடுப்பொடிக்கும் நடனம், செண்டிமெண்ட், ரத்தவெறி ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் இதையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்து கல்ப் அடித்தால் ஸ்யூர் ஹிட் என்பது அவருக்கு தெரியும். ரஜினி படங்களில் வருவதைப் போல நிறைய கேரக்டர்கள் இவரது படங்களில் இருக்கும். இதன்மூலம் ஏராளமான நட்சத்திரங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். ரசிகனுக்கு ட்ரீட் தரமுடியும். இவரது படங்கள் கொஞ்சம் நீளம் என்பதுதான் இவர் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனம். சுவாரஸ்யமான காட்சிகளை கோர்த்தால், நீளம் ஒரு ப்ளஸ் பாயிண்ட்தான் என்று வாதிடுகிறார். நாராயணாவும், பிரம்மானந்தமும் இவரது பெரிய பலம். ஹீரோக்களையும், சினிமா இண்டஸ்ட்ரியையும் இவர்களை வைத்து வேண்டுமட்டும் நக்கலடித்துக் கொள்வார்.


kajal
தூக்குடுவின் டூப்பர் ஹிட் ஜூனியர் என்.டி.ஆருக்கு சீனுவோடு படம் செய்ய ஆசையை ஏற்படுத்தியது. ஒரேமாதிரியாக டெம்ப்ளேட் பாத்திரங்களிலேயே நடித்து, நடித்து அவருக்கும் அலுத்துவிட்டது. எத்தனை காலத்துக்குதான் வில்லன்களை துரத்தி, துரத்தி அருவாளால் கொத்து பரோட்டா போடுவது.. ஸ்டைலாக துப்பாக்கியை சுழற்றி சுடவேண்டுமென்று அவருக்கும் ஆசையிருக்காதா? இதுவரை நாம் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர் பாட்ஷாவில் இல்லை. கெட்டப்பில் தொடங்கி, பாடிலேங்குவேஜ் வரைக்கும் ரொம்ப புதுசு. முழுமையாக தன்னை இயக்குனரிடம் ஒப்படைத்துவிட்டார் ஜூ.என்.டி.ஆர்.


ஆந்திர தேவுடு என்.டி.ஆரின் மூத்தமகன் ஹரிகிருஷ்ணா. இவருக்கு அஃபிஷியலாக இல்லாமல், தனியாவர்த்தனமாக ஆடிய இன்னிங்ஸில் பிறந்தவர்தான் ஜூனியர் என்.டி.ஆர். ஹரிகிருஷ்ணாவும் அப்பா வழியில் திரைத்துறை, அரசியல் என்று முக்கியமான பிரமுகர்தான்.  ஜூனியர் பிறந்தவுடனேயே ஹரிகிருஷ்ணா, அம்மா ஷாலினியை பிரிந்துவிட்டார். நந்தமூரி குடும்பத்தோடு, எந்த தொடர்புமில்லாமல் ஜூனியரை தன்னந்தனி மனுஷியாக வளர்த்து வந்தார் ஷாலினி. மகனுடைய முறையற்ற செயல்மீது கோபமிருந்தாலும், தாத்தா என்.டி.ஆருக்கு பேரன் ஜூனியர் மீது அவ்வளவு ஆசை. தேடிப்பிடித்து மீண்டும் சேர்த்துக் கொண்டார். ஆனாலும் என்.டி.ஆரை தவிர்த்து அவரது குடும்பத்தில் மீதமிருந்தவர்கள் நந்தமூரி வாரிசாக ஜூனியர் என்.டி.ஆரை ஒப்புக்கொள்ள தயங்கினார்கள்.

1991ல் வயதான காலத்தில் மீனாட்சி சேஷாத்ரியை ஹீரோயினாக போட்டு என்.டி.ஆர் எடுத்த ‘பிரும்மரிஷி விஸ்வாமித்ரா’ படத்தில் ஜூனியர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது எட்டு. அதிலிருந்து ஹீரோ மெட்டீரியலாகவே, அவர் வளரத் தொடங்கினார். நடனம், சண்டை, நடிப்பு என்று பள்ளிப்பாடத்தைக் காட்டிலும், திரைப்பாடத்தைதான் அதிகமாக கற்றார். குச்சுப்புடி நடனத்தில் ஜூனியர் ஒரு ஜீனியஸ். உலகெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

பதினெட்டு வயதில் ’நின்னு சூடலானி’ என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். படம் படு ப்ளாப். அறிமுகப்படமே தோல்விப்படமாக நடித்தவர் நந்தமூரி வாரிசாக இருக்கமுடியாது என்று அனைவரும் எள்ளி நகையாட, தாத்தாவின் வாரிசு என்பதை நிரூபிக்க மெனக்கெட்டார் ஜூனியர். இவரைப்போலவே, தன் திறமையை நிரூபிக்க வெறியாய் பழிகிடந்த இன்னொருவரோடு இணைந்தார். அவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. ‘ஸ்டூடண்ட் நெ.1’ கன்னாபின்னா ஹிட். அழகிலும், திறமையிலும் அப்படியே மனதேவுடு என்.டி.ஆரை உரித்து வைத்திருக்கிறாரே என்று ஆந்திராவே ஜூனியரை ஆராதிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து அவரது படங்கள் சொல்லிக்கொள்ளும்படி ஓட, என்.டி.ஆருக்கு ரசிகராக இருந்தவர்களின் பேரன்கள் ஜூனியர் என்.டி.ஆரின் பின் அணிவகுத்தார்கள். இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிவிட்ட அவரை, வேறுவழியின்றி நந்தமூரி குடும்பமும் அவரை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மாமாவும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னுடைய உறவினரின் பெண்ணை கட்டிக்கொடுத்து ஜூனியர் என்.டி.ஆரை தன் பக்கமாக வைத்துக் கொண்டார். ஏனெனில் தேர்தலில் ஜூனியர் என்.டி.ஆரின் பிரச்சாரம் தெலுங்கு தேசத்துக்கு அத்தியாவசியமான கவர்ச்சி அம்சமாக ஆகிவிட்டது. யார் ஏற்றுக்கொண்டாலும், ஒருமாதிரியாக முறுக்கிக் கொண்டிருந்தவர் சித்தப்பா பாலகிருஷ்ணாதான். பாட்ஷாவின் ஹிட் அவருடைய மனதையும் மாற்றிவிட்டது. “அவன் என்னோட மகன்” என்று பெருமையோடு சொல்லி மீசையை முறுக்கி விட்டுக் கொள்கிறார்.

ntr
ஜூனியர் என்.டி.ஆரின் கிரவுட் மாஸ் என்பது திரையில் அவர் ஆடும் நடனத்திலோ, ஆக்‌ஷன் காட்சிகளாலோ நிகழ்ந்ததல்ல. உதாரணத்துக்கு சமீபத்திய சம்பவத்தையே சொல்லலாம். பாட்ஷா திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு ஹைதராபாத்தில் நடந்தது. ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குழுமிவிட பயங்கர நெரிசல். கூட்டத்தில் சிக்கி ரசிகர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். விழாவுக்கு காரில் இருந்து இறங்கிய ஜூனியர் என்.டி.ஆரின் முகம் சிவந்திருந்தது. கருப்புச்சட்டை அணிந்திருந்தார். மேடையில் பேசும்போது, “இறந்தவன் என்னுடைய தம்பி. இன்று எனக்கு துக்க தினம். கொண்டாட்டம் தேவையா?” என்றுகூறி விடுவிடுவென நடந்தார். அதோடு விழாவும் ஓவர். மறுநாள் இறந்த ரசிகனின் குடும்பத்தை நேரில் சந்தித்து லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்கினார். “அவன் செய்யவேண்டிய கடமைகளை, இனிமே நான் முன்நின்று செய்வேன். எதுவா இருந்தாலும், என்னை தொடர்பு கொள்ளுங்க” என்று குடும்பத்திடம் வாக்குறுதியும் தந்தார். பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட அவரது திரைவாழ்வில் இதுமாதிரி ஏராளமான நெகிழ்ச்சி அனுபவங்கள் உண்டு. ஆந்திரதேசம் அவரை ‘ஜூனியர் தேவுடுவாக’ பார்க்கப்படுவதில் ஆச்சரியமென்ன?


ரைட், பாட்ஷாவுக்கு வருவோம்.

“எனக்கு என்னோட தாத்தா பேருவெச்சது, செத்ததும் என்னோட சமாதியிலே எழுதறதுக்கு இல்லடா.. சரித்திரத்தில் எழுதறதுக்கு” – வேறு யார் இந்த பஞ்ச் டயலாக்கை பேசினாலும் சிரிப்பு வந்துவிடும். ஜூனியர் என்.டி.ஆர் என்பதால் சிலிர்த்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள். வில்லன்களை நொறுக்குவதற்கு முன்பாக “மேட்ச்சும் என்னோடது. பிட்ச்சும் என்னோடது” என்கிறார். அரைகுறையாக தெலுங்கு தெரிந்த நமக்கே நம்மையறியாமல், விசில் பீறிட்டுக் கொண்டு வருகிறது என்றால், ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள்? படம் முழுக்க ஜூ.என்.டி.ஆரின் மாஸ் அப்பீல் நிகழ்த்தும் மேஜிக் அபூர்வமாக திரையில் நிகழக்கூடிய அற்புதங்களில் ஒன்று. இம்மாதிரி இன்னொரு படம் அவருக்கு அமையுமா என்பதே சந்தேகம்தான். க்ளைமேக்ஸுக்கு முன்பாக தாத்தாவை இமிடேட் செய்து அவர் ஆடும் ஜூகல்பந்தி நடனத்துக்கு ஒப்பான ஒரு காட்சியை சீனு வைத்யாலாவே நினைத்தாலும், இனி சிந்திக்க முடியாது.

இப்படத்தை தமிழில் எடுக்க ஒரு நிறுவனம் இப்போதே உரிமை வாங்கி வைத்திருக்கிறது. அனேகமாக விஜய் ஹீரோவாக இருக்கலாம். கொஞ்சம் உழைத்து நேட்டிவிட்டியை கொண்டுவந்துவிட்டால், இன்னொரு போக்கிரிதான். இந்திக்கும் எப்படியும் போகும். உறுதியாக இருநூறு கோடி வசூலும் நிச்சயம். வளவளவென்று படத்தைப் பற்றி வேறெதுவும் சொல்லி பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. இது கேட்டுத்தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமும் அல்ல. பார்த்து அனுபவிக்க வேண்டியது. தமிழகத்தில் தமிழ் படங்களுக்கு இணையாக நிறைய திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ‘ஃப்ரம் த டைரக்டர் ஆஃப் தூக்குடு’ என்கிற முத்திரையோடு. ஓபனிங் வீக்கெண்டில் சென்னையிலும், கோவையிலும் அத்தனை காட்சிகளும் ஹவுஸ்ஃபுல். ஒரே ஒரு எச்சரிக்கை. பாட்ஷா ஒரு மேஜிக் என்பதால், லாஜிக் மட்டும் பார்க்காதீர்கள்.
                                    seenu1
 (நன்றி : cinemobita.com)