6 ஜனவரி, 2014

‘நாவல்’பழ சீசன்

மீண்டும் நாவல்களின் காலம். சென்னை புத்தகக் காட்சியின் புண்ணியத்தால் மார்கழி என்பது இனி இசைக்கான மாதம் மட்டுமல்ல. இலக்கியத்துக்கான மாதமும் கூட. புத்தக வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள், வாசகர் சந்திப்பு என்று சென்னை அமளிதுமளிப்படுகிறது. இவ்வாண்டு புதிய எழுத்தாளர்களின் வருகை, பெரிய எழுத்தாளர்களின் சாதனை என்று இலக்கியம், இஞ்சி கடித்தாற்போல சுறுசுறுப்பாகியிருக்கிறது.

பின்வருவது இவ்வருடத்துக்கான நாவல்கள் குறித்த முழுமையான தொகுப்பு அல்ல. வானத்தில் வட்டமிடும் ஏராளமான கழுகுகளை விட்டு விலகி, ரொம்ப உயரத்துக்கு பறக்க பயந்துக்கொண்டு தனியே பறக்கும் ஒரே ஒரு கழுகின் குறுகிய பார்வை.

ஜெயமோகன் ராசியான கை. வெள்ளை யானை மூலமாக பிள்ளையார் சுழி போட்டார். அதிகாரப்பூர்வமான புத்தக வெளியீட்டுக்கு முன்பாகவே ஐநூறுக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று அபார சாதனை புரிந்திருக்கிறது. மற்றவர்களின் போற்றுதலும், தூற்றுதலும் ஜெயமோகனுக்கு புதிதல்ல. வெள்ளை யானையை முடித்த கையோடு என் பணி, பணி செய்து கிடப்பதே என்று அடுத்த அசுர சாதனைக்கு தயாராகி விட்டார். உலக இலக்கிய வரலாற்றிலேயே முதன்முறையாக அடுத்த பத்தாண்டுகளுக்கு தினமும் தன்னை ‘கமிட்’ செய்துக்கொண்ட முதல் எழுத்தாளர் ஜெயமோகன்தான். வருடத்துக்கு ஒன்று என்கிற கணக்கில் பத்து பாகங்களில் (சராசரியாக ஐநூறு பக்கங்கள்) மகாபாரதத்தை தினமும் ஒரு அத்தியாயமாக எழுதத் தொடங்கிவிட்டார். ஐம்பத்தி இரண்டு வயதில் இப்படியொரு இமாலயப் பணியை ‘ஜஸ்ட் லைக் தட்’டாக தொடங்கும் தைரியம் வேறு யாருக்குமில்லை. எழுத்துதான் இலட்சியம், வாழ்க்கை, பயணம், புடலங்காய் என்று பேசுபவர்கள் மானசீகமாக அவரது காலில் விழுந்து வணங்க வேண்டும். ஜெயமோகன் ஓர் எழுத்து எந்திரன்.

புதிய எழுத்தாளர்களின் வருகை ஓர் அலையாக கிளம்பியிருக்கிறது. தான் பாட்டுக்கு இந்த அலையை ஏற்படுத்திவிட்டு, தினமும் நைட்ஷோ படம் பார்க்கும் மசாலா எண்டெர்டெயினராக மேடை மேடையாக ஏறிக்கொண்டிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாண்டின் குறிப்பிடத்தக்க அறிமுக எழுத்தாளராக விநாயக முருகனை அறிமுகம் செய்திருக்கிறார். ‘ராஜீவ்காந்தி சாலை’ வெளிவருவதற்கு முன்பாகவே சாருவின் கடுமையான விமர்சனம், அந்நாவலின் விற்பனையை சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீக்கடையில் விற்பதைப் போல சூடாக்கியிருக்கிறது. நொடிக்கு நொடி குவியும் ஆன்லைன் ஆர்டர்களும், நேரில் வந்து ஆவலாக கேட்கும் வாசகர்களுக்கும் பதில் சொல்லி விற்பனையாளர்களால் மாளமுடியவில்லை. பிளாக் டிக்கெட் மாதிரி நாவல் இன்னமும் ரெண்டு மூன்று மடங்கு எக்ஸ்ட்ரா ரேட்டுக்கு விற்கப்படாதது ஒன்றுதான் நடக்கவில்லை. “எப்பவுமே பிரெஸ்ஸில் ராஜீவ்காந்தி சாலையையே ஓட்டிக்கிட்டிருந்தா, மத்த புக்குங்களை நான் எப்போதான் பிரிண்ட் பண்ணுறது?” என்று சந்தோஷமாக அலுத்துக் கொள்கிறார் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன். வழக்கம்போலவே இணையத்தில் புழங்குபவர்கள் நாவலை படிக்காமலேயே நக்கல் அடித்துக் கொண்டிருந்தாலும், ‘ஒரிஜினல்’ வாசகர்கள் ரா.கா.சாலையை கொண்டாட தொடங்கிவிட்டார்கள்.

இருபது ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கில் கதைகள் எழுதியிருந்தாலும், கே.என்.சிவராமன் ஒரு முழுநீளத் தொடரை முதன்முதலாக கடந்த ஆண்டுதான் ‘குங்குமம்’ இதழில் ‘கர்ணனின் கவசமாக’ எழுதி முடித்தார். தொடர் முடிந்த கையோடே அவர்களது இன்-ஹவுஸ் பதிப்பகமான சூரியன் பதிப்பகம் நாவலாக வெளியிட்டுவிட, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது கர்ணனின் கவசம். இந்திரா சவுந்தரராஜனின் கதைக்கருவை சுஜாதா எழுதினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்நாவல். ‘சயன்டிஃபிக் த்ரில்லர்’ என்கிற புதிய ஜானரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் சிவராமன். பரபரவென ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வேகத்தில் நகரும் கதை, புதிய தலைமுறை வாசகர்களை பரவலாக ஈர்த்திருக்கிறது.

ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களாக எழுதப்பட்டு பல்லாயிரக்கணக்கில் லைக்குகளையும், பலநூறுக் கணக்கில் கமெண்டுகளையும் பெற்ற அராத்துவின் ‘தற்கொலை குறுங்கதைகள்’ நாவலாக வெளிவந்திருக்கிறது. இதற்கும் புண்ணியம் கட்டிக்கொண்டது மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம். ராஜீவ்காந்தி சாலையை எந்தளவுக்கு எதிர்த்தாரோ, அதே தீவிரத்தன்மையோடு இந்நாவலை ஆதரித்தார் சாரு. “இந்த வருடம் என்னுடைய நூல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே அராத்துவின் நூலை என்னுடைய நூலாக, என் வாசகர்கள் எடுத்துக் கொள்ளலாம்” எனுமளவுக்கு அவரது பெருந்தன்மை அமைந்தது. ஆனால் இதை என்னால் நாவலாக வாசிக்க முடியவில்லை. சிறுகதை நூல் என்றோ, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களின் தொகுப்பு என்றோ வந்திருந்தால் இந்த நெருடல் கிடைத்திருக்காது. ஃபேஸ்புக்கில் வந்தபோது பெருமளவு ரசித்த நம்மால், முழுமையாக ஒரே தம்மில் வாசிக்கும்போது நிறைய இடங்கள் ரிபீட் ஆகி, எக்கோ அடித்துக் கொண்டிருப்பதான உணர்வு. முன்னுரையில் digimodernism என்றெல்லாம் முப்பது பக்கத்துக்கு சாரு ஜல்லியடித்திருந்தாலும், அவரே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘ஸீரோ டிகிரி’யின் இன்னோவேட்டிவ் ஃபார்மேட்டை அடித்துக்கொள்ள இன்னும் எவரும் பிறக்கவில்லை. இதையெல்லாம் மீறியும் ‘தற்கொலை குறுங்கதைகள்’ லைட் ரீடிங்குக்கான முக்கியமான ஆக்கம். பெட்ரூமில் காதலி ஃபேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருக்க, அவளோடு ஃபோர்ப்ளே செய்துக் கொண்டே, கட்டிங் போதையில், மாணிக்சந்தை குதப்பிக்கொண்டு, கையில் சிகரெட் புகைய ஒரு பேரிலக்கியத்தை வாசிக்கும் கிறுகிறுப்பை, போதையை த.கு கொடுக்கிறது. போலவே சாம்நாதனின் ‘களவு, காதல், காமம்’. அட்டகாசமாக வரவேண்டிய நாவலை அவசர அடியாக முடித்திருக்கிறார். ஆனால் எழுத்துநடையில் கவனிக்கப்பட வேண்டியவர். அடுத்து பொறுமையாக ஒரு முழுமையான நாவலை எழுதக்கூடும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இவர்கள் இருவருமே சாரு வாசகர் வட்டத்தில் இருந்து இவ்வருடம் உருவான எழுத்தாளர்கள். தன் வாசகர்களையும் எழுத்தாளர்களாக வளர்த்தெடுக்கும் விதத்திலும் சாருவே தமிழிலக்கியத்துக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

காலச்சுவடின் நாவல்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தரமான உள்ளடக்கம் என்று அவர்களின் ஆசிரியர் குழு சான்று தரும் நூல்களை மட்டுமே வெளியிடுவார்கள். இந்த சீஸனில் அவர்களது பங்கு ஆறு நாவல்கள். யுவன் சந்திரசேகரின் நினைவுதிர் காலம், பெருமாள் முருகனின் பூக்குழி, சுகுமாரனின் வெல்லிங்டன் மூன்றும் முக்கியமானவை. மற்ற மூன்று நூல்கள் குறித்து விமர்சனங்கள் வந்தபிறகு கண்டுகொள்ளலாம் என்றிருக்கிறேன். ‘கொல்வதெழுதல்’, ’உம்மத்’, ‘அஜ்னபி’ என்று தலைப்புகளே டெர்ரராக இருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஊட்டி தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தளம். இந்த ஊரை அறியாத தமிழனே இல்லையென்றாலும், தமிழிலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத ஊர் எனும் அடிப்படையில், ஊட்டியை களமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் ‘வெல்லிங்டன்’ முக்கியத்துவம் பெறுகிறது. கிட்டத்தட்ட அறுபது வயதை நெருங்கும் சுகுமாரன், இதுவரை கவிதைகள் மற்றும் அவரது மொழிப்பெயர்ப்புகள் வழியாகவே அறியப்பட்டிருக்கிறார். நீண்டகால பத்திரிகையுலக அனுபவமும் கொண்ட சுகுமாரனின் முதல் நாவல் இது.

பொன்னுலகம் வெளியிட்டிருக்கும் ‘தறியுடன்’ குறிப்பிடத்தகுந்த இன்னொரு முக்கியமான நாவல். நக்ஸல்பாரி தோழர்களின் வாழ்க்கைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தமிழிலக்கியத்தில் போதுமான தரவுகள் எதுவுமில்லை. பாரதிநாதன் எழுதியிருக்கும் தறியுடன் அந்த குறையைப் போக்கியிருக்கிறது. தலையணை சைஸ் நாவல்தான். விலை ரூ.650 என்று நினைக்கிறேன். தமிழக அரசின் – காவல்துறையின் தடை மாதிரி சர்ச்சைகள் ஏதுமில்லையென்றால், தறியடி புத்தகக்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.

உயிர்மை வெளியீட்டில் எஸ்.செந்தில்குமார் எழுதியிருக்கும் ‘காலகண்டம்’ இன்னுமொரு முக்கியமான நாவலாக படுகிறது. பொற்கொல்லர்களின் வாழ்க்கையை களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதிகம் பேசப்படாத மனிதர்களை, இடங்களை, தொழில்களை குறித்த நாவல்கள் வர ஆரம்பித்திருப்பது, நாவல்களுக்கு பரவலான இடத்தை வாசகர்களிடம் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

முந்தைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், வனசாட்சி என்று ஹாட்ரிக் ஹிட் அடித்த தமிழ்மகனின் நாவல் எதுவும் இந்த வருடம் வரவில்லை என்பது ஏமாற்றமே. வாசகர்களிடையோ, விமர்சகர்களிடையோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ‘கால்கள்’ தமிழின் தனித்துவமான நாவல். உடனடியாக இன்னொரு நாவலை ஆர்.அபிலாஷ் எழுதியிருக்க வேண்டும். தரமான உரைநடையாளரான அவரும் திரும்ப கவிதைக்கு திரும்பிவிட்டது நமக்கு இழப்புதான்.

சந்தேகமேயில்லாமல் இந்த வருஷத்தின் ஹீரோ எஸ்.ராமகிருஷ்ணன்தான். தன்னுடைய வழக்கமான ஏரியாவான அகச்சிக்கல், உளவிசாரணையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஃப்ரெஷ்ஷான ஐடியாவோடு ‘நிமித்தம்’ மூலம் களமிறங்கியிருக்கிறார். உயிர்மை வெளியீடு. நாற்பத்தியேழு வயதான தேவராஜுக்கு பகுதிநேரமாக காது கேட்காது. குடும்பத்திலும், சமூகத்திலும் உதவாக்கரையாக முத்திரை குத்தப்படும் அப்பாவி. அப்படி, இப்படியென்று அலைக்கழிக்கப்பட்டு நாற்பத்தேழு வயதில்தான் அவனுக்கு திருமணம் ஆகிறது. வாழ்வில் தன்னை கடந்துச் சென்ற, தனக்கு முக்கியமானவர்களாக பட்ட அனைவருக்கும் திருமணத்துக்கு ‘அழைப்பிதழ்’ வைக்கிறான். யார், யாரெல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு வழிமேல் விழிவைத்து அவன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவுதான் நிமித்தத்தின் மொத்த கதையும். இந்நூலை அறிமுகப்படுத்தி பேசும்போது மனுஷ்யபுத்திரன் லேசாக தழுதழுத்ததாக பட்டது. இவ்வாறாக முன்னெப்போதும் அவர் உணர்ச்சிவசப்பட்டதாக நினைவில்லை. இது தேவராஜின் கதை மட்டுமல்ல. நாற்பத்தேழு ஆண்டுகளாக தேவராஜை சுற்றி நடந்த விஷயங்களின் கதை. மொழிப்போர், எமர்ஜென்ஸி, ஈழம், மண்டல் கமிஷனென்று தேவராஜ் நிமித்தம் இந்த வரலாற்றையே கேப்ஸ்யூலாக்கி தந்திருக்கிறார் எஸ்ரா. நிமித்த நாயகன் தேவராஜைப் போலவே, எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் வயது நாற்பத்தியேழுதான். இது யதேச்சையாக அமைந்ததா அல்லது குறிப்பாக நாற்பத்தியேழுதான் வேண்டுமென்று எழுதினாரா என்று தெரியவில்லை. பரபரப்பான விற்பனை மட்டுமல்ல, ஏராளமான விருதுகளையும் வாங்க இரண்டு கைகளையும் எஸ்.ராமகிருஷ்ணன் தயாராக வைத்திருக்க வேண்டும்.

3 ஜனவரி, 2014

உய்யாலா ஜம்பாலா

டோலிவுட்டுக்கு இது பொற்காலம். அவர்கள் எதை எடுத்தாலும் ஒர்க்கவுட் ஆகிவிடுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ சிறிமல்லி செட்டு’ என்கிற கிராமத்துப் பின்னணியை கொண்ட ப்ளாக் பஸ்டரில் துவங்கிய பயணம், அதே வில்லேஜ் ஜானரில் வெளிவந்திருக்கும் ‘உய்யாலா ஜம்பாலா’வின் சூப்பர்ஹிட்டில் முடிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் இளையராஜாக்களும், பாரதிராஜாக்களும் கொடிகட்டிப் பறந்த ஏரியா. இன்றோ தமிழில் பருத்திவீரன்களும், சுப்பிரமணியபுரங்களும், மதயானைக்கூட்டங்களும்தான் கிராமம் என்றாகிவிட்டது.

உய்யாலா ஜம்பாலாவின் ஒருவரி ரொம்ப பழசு. ‘ஒரு ஊரிலே அழகான ஒரு பையன், அவனுக்கு சூப்பரா ஒரு மாமா பொண்ணு’. அவ்ளோதான். உங்களுக்கு மாமாப்பொண்ணு இருந்திருந்தால் இந்த ஒன்லைனரின் கவர்ச்சியை உணர்ந்துகொள்ள முடியும் (நயன்தாரா ரேஞ்சுக்கு ஒரு மாமாப்பொண்ணு எனக்கு வாய்த்தும் ஜஸ்ட் மிஸ்). பரபரவென த்ரில்லருக்கு நிகரான பரபரப்பில் இந்த லைனை திரைக்கதை அமைத்திருப்பதில்தான் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் மாண்டேஜ் காட்சிகள் அநியாயத்துக்கு கலக்கல். பிறந்ததிலிருந்தே அழுதுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை, அவனுக்கு மாமன் மகள் பிறந்தபிறகு – அதை அடிக்கடி விளையாட்டுக்கு சீண்டி – சிரிக்க ஆரம்பிக்கிறான். வளர்ந்ததும் கூட இருவரும் கீரியும் பாம்பும்தான். அவளை வெறுப்பேற்றுவதற்காகவே வேறு ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்குமாறு இவன் பழிப்பு காட்டுகிறான். அவளோ இவனை வெறுப்பேற்ற, ஒரு டுபாக்கூரை காதலிக்கவே தொடங்கி விடுகிறாள். கதையை கேட்க கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும் காட்சிக்கு காட்சி சிரிப்பு வெடிதான். அத்தை பையனும், மாமன் பொண்ணும் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ் என்பது போகோ டிவி பார்க்கும் குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும்.

படத்தில் காட்டும் கிராமத்தின் சித்தரிப்பு ரொம்ப முக்கியமானது. பொதுவாக தெலுங்கு கிராமங்களில் வேட்டியை ஒரு மாதிரி கீப்பாச்சி மாதிரி கட்டிக்கொண்டு அலையும் பெருசுகள், எப்பவுமே கோழி அடித்து குழம்பு வைக்கும் பெண்கள், தாராளமாக மாராப்பை காட்டிக்கொண்டு அலையும் ஹீரோயின், டூயட்டில் கூட கத்தியும் ரத்தமுமாகவே காணப்படும் ஹீரோவென்று இல்லாமல் சமகால கிராமத்தை எந்த சினிமாத்தனமும் இல்லாமல் சித்தரிக்க இயக்குனர் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்.

முழுக்க புதுமுகங்கள் இடம்பெற்று இவர்கள் பெற்றிருக்கும் வெற்றி, பஞ்ச் அடித்தே காலம் தள்ளும் சூப்பர் ஸ்டார்களை அசைத்துப் பார்க்கும் என்பது உறுதி. சினிமாவில் content is the king என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது உய்யாலா ஜம்பாலா.

ஹீரோவாக நடித்திருக்கும் ராஜ் தருண், ஒரு என்ஜினியரிங் மாணவர். இருபத்தோரு வயதாகிறது. டைரக்டர் ஆகவேண்டும் என்பது லட்சியம். ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் பங்கேற்றிருக்கிறார். தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போனபோது, எங்களுக்கு டைரக்டர் எல்லாம் இருக்காங்க. நீ வேணும்னா படத்துலே நடி என்றிருக்கிறார். நடிப்பில் ஆர்வம் இல்லை, டைரக்‌ஷன்தான் லட்சியம் என்று இவர் மறுத்ததுமே, சரி எங்க படத்திலே அசிஸ்டெண்டா வேலை பாரு என்று சொல்லியிருக்கிறார்கள். யாருக்கோ நடிப்பு சொல்லித்தர சொல்லி சில சீன்களை இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். உண்மையில் அது இவர் நடிக்க வேண்டிய சீன்கள். அசிஸ்டெண்ட் டைரக்டர் என்று அல்வா கொடுத்து, கதற கதற இவரையே ஹீரோவாக்கி விட்டார்கள். நடித்தது மட்டுமின்றி திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இப்படத்தில் எல்லா துறைகளிலும் வேலை பார்த்திருக்கிறார் ராஜ் தருண்.

ஹீரோயின் அவிகாவுக்கு பதினாறு வயது. இந்தியில் டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக சக்கைப்போடு போட்டவர். தகுந்த வயசு வந்ததும் திரைத்துறை வாய்ப்புகளுக்கு கதவைத் தட்டியிருக்கிறார். கிடைத்ததெல்லாம் துண்டு துக்கடா வேடம்தான். லோபட்ஜெட் படத்துக்கு மினிமம் சம்பளத்தில் ஹீரோயின் தேவை என்பதால் இவரை ஒப்பந்தம் செய்தார்கள். ஆஸ்கருக்கு தகுதி பெறுமளவுக்கு பின்னி பெடல் எடுத்துவிட்டார். க்ளாமர் அப்பீலே சுத்தமாக இல்லை. ஆனால் ஒவ்வொரு இளைஞனும் கல்யாணம் செய்துக்கொண்டால் இப்படியான ‘லட்சணமான’ பெண்ணைதான் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்குமளவுக்கு ட்ரீம் கேர்ள். கீழ்நெற்றியில் பிளவுபடாமல் ஒட்டிய புருவங்கள் முகத்துக்கு கூடுதல் பொலிவு.

தமிழில் தனுஷ், நஸ்ரியாவை வைத்து படமெடுத்தால் ப்ளாக் பஸ்டர் உறுதி. ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் தயாரிப்பாளர் கொட்டியழ வேண்டிய சம்பளத்தால், படம் ஐநூறு நாள் ஓடினாலும் லாபம் நிற்காது. முன்பெல்லாம் சப்ஜெக்ட்டுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்றமாதிரி நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சம்பளம் அட்ஜஸ்ட் செய்துக்கொண்டு நடிப்பார்கள் என்பார்கள். இப்போதெல்லாம் வரிசையாக நாலு ப்ளாப் படம் கொடுத்த ஹீரோ கூட, புதியதாக ஒப்பந்தம் ஆகும் படத்துக்கு முந்தையப் படத்தை விட செம பர்சண்டேஜ் சம்பளம் ஏற்றிவிடுகிறார்.

நான்ஸ்டாப் எண்டெர்டெயின்மெண்டுக்கு தயாராக இருப்பவர்கள் ‘உய்யாலா ஜம்பாலா’வை மிஸ் செய்துவிட வேண்டாம். ஏனெனில் இது தெலுங்கு சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் மூவியும் கூட.

30 டிசம்பர், 2013

ஆ.ராசா எனக்கு அக்கா மகன்!

வருடத் தொடக்கமாக இருக்குமென்று நினைவு. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அந்த டீக்கடையில் அமர்ந்து, அண்ணன் சிவராமனோடு பேசிக்கொண்டிருந்தேன். கடை வாசலில் திடீரென்று விசில் சப்தம். “தெனந்தோறும் ரிச்சா ஓட்டி பொழைக்கிறேன்” கணீரென கானாவோடு கடைக்குள் நுழைந்தார் அந்த விசிலவன்.

கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார். இடையில் மட்டும் ஜட்டியா அல்லது டவுசரா என்று இனங்கண்டு கொள்ள முடியாத உடை. குள்ளமென்று சொல்ல முடியாது. நடுத்தரமான உயரம். நல்ல கருப்பு. எண்ணெய் காணாத தலை.

எங்களுக்கு அருகில் வந்து அமர்ந்தார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ஓடு ராஜா” வாத்யார் பாட்டை அச்சு அசலான டி.எம்.எஸ். குரலில் பாட ஆரம்பித்தார். “அந்த காலத்துலேயே என்னாமா பாடியிருக்காரு பாரு. அசீத், விசய்க்கெல்லாம் இப்படி பாடுறதுக்கு வக்கிருக்கா?” என்று ஆரம்பித்தார்.

“நல்லா பாட்டுலாம் பாடுவேன். டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., சிதம்பரம் ஜெயராமன்னு எல்லாரு வாய்ஸும் நம்ம தொண்டைலே வரும்” சொல்லிவிட்டு “வாராய், நீ வாராய்” என்று லேசாக நாக்கை மடக்கி, சுத்தமான ராகத்தில் பாடினார்.

இடையில், “மாஸ்டர் ஒரு டீ!”

“பழைய பாக்கி என்னாச்சி?”

“டேய், வாத்யார் இல்லைன்னா மலையாளத்தானுங்கள்லாம் இங்கே வந்து இந்த அதட்டல் போடுவீங்களா? ஒழுங்கா டீயை கொடுர்றா. எஸ்.ஐ. வந்ததுமே எல்லாத்தையும் செட்டில் பண்ணிடறேன்”

“அதெல்லாம் கிடையாது. பழசுக்கு பதில் சொல்லிட்டு, புதுசா டீ கேளு” மாஸ்டரும் விடுவதாக இல்லை. சிவராமன் தன் கணக்கில் அவருக்கு ஒரு டீ சொன்னார்.

“எங்கே வேலை பார்க்குறீங்க? இங்கன உங்களையெல்லாம் பார்த்ததே இல்லையே?” என்று பேச ஆரம்பித்தார்.

“என்னை இங்கே எல்லாரும் எம்.ஜி.யாருன்னு கூப்பிடுவாங்க. வாத்யார்னு அவ்ளோ வெறி. ஒரு பாட்டு விடாம மனப்பாடமா பாடுவேன். பாடிக்காட்டறேன் பார். இந்த பாட்டு வந்தப்போ, நீங்கள்லாம் அம்மாவோட வவுத்துக்குள்ளே கூட இருந்திருக்க மாட்டீங்க....”

“அச்..ச்..சம் என்ப்பது மடையடாஆஆ.... அஞ்சாமை திராவிடர் உடமையடா.... ஆஆஆஅ... அஞ்சாமை திராவிடர் உடமையடா... டொக்.. டொக்.. டொக்.. டொக்...”

டீ வந்ததுமே கல்ப்பாக அடித்தார். மந்திரிகுமாரி டயலாக் ஒன்றை அப்படியே ஏற்ற, இறக்கத்தோடு படித்தார். “கலிஞ்சரு மாதிரி எழுதுறதுக்கு எவன் இருக்கான்? தமிழு.. தமிழு.. அருவி.. சொற்பொழிவு... பொன்முடி பார்த்திருக்கியா? பாவேந்தர் வசனம். அப்படியே காதல் கொட்டும்” அந்தப் படத்திலிருந்தும் ஒரு டயலாக்கை எடுத்துவிட்டார்.

“படம்னா படம்.. அது ரத்தக்கண்ணீருதான். அடியே காந்தா...” எம்.ஆர்.ராதா வாய்ஸில் பேசினார்.

“சினிமான்னா அம்புட்டு ஆசை. வாத்யாருன்னா இவ்ளோ (கைகளை அகல விரித்துக்காட்டி) உசுரு. அதாலேதான் அப்பவே மெட்ராசுக்கு வந்தேன். ரிச்சா ஓட்டுனேன். எழுபத்திரெண்டிலே கலைஞ்சர் ஃப்ரீயா ரிக்ச்சா கொடுத்தாரு. வாத்யாரு ரெயின்கோட், ஷூவெல்லாம் வாங்கித் தந்தாரு. லவ் மேரேஜி. வைஃபுக்கு நடக்க வராது. விதவைங்க, ஊனமுற்ற பெண்களை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நல்லா இருக்குற இளைஞர்கள் தயாரா இருக்கணும்னு பெரியார் பேசினாரு. நான் அவரை ஃபாலோ பண்ணேன். நாந்தான் இப்படியிருக்கேன். என் பசங்க நல்லாதான் இருக்காங்க. வியாசர்பாடிலே வீடு. வீடு கிடையாது குடிசை”

வரிசைக்கிரமமாக இல்லாமல் விட்டு விட்டு பேசினார். இடையிடையில் பாடத்தொடங்கி விட்டார். “தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்.... வாத்யார் படத்துலே சூப்பரா கார் ஓட்டுவார். ஒரு சீக்ரட் சொல்றேன் கேட்டுக்கோ. நெஜத்துலே அவரு கார் ஓட்டுனதே இல்லை”

“இன்னொரு டீ சாப்புடலாமா?” சிவராமன் கேட்டார்.

“வாணாம். நா சொல்றதை கேளு. ஆ.ராசா தெரியுமா? அப்படி சொன்னா தெரியாது. ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னு சொன்னாதான் தெரியும். என் அக்கா மவன்தான். வேணும்னா யாரையா கேட்டு பாரு. நா சொல்றேன். என் மருமவன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது. அவ்ளோ பணம் சம்பாதிக்கிற ‘தெரவசு’ இருந்தா, ராசாவோட சொந்த பந்தமெல்லாம் ஏன் இப்படி இருக்கப் போறோம்? அநியாயமா பலி போட்டுட்டானுங்க”

எனக்கு ஆச்சரியம் அளவற்றுப் போனது. வெயிட்டான ஒரு ‘ஸ்டோரி’ ரெடியென்று பரபரப்பானேன். திடீரென்று ஏதோ ஒரு அறச்சிக்கல். இவரைப் போய் எதற்கு எக்ஸிபிஷன் ஆக்க வேண்டும் என்று தோன்றியது.

“இப்போ என்னண்ணா பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

“தோ.. இந்த ஸ்டேஷனுலேதான் வேலை பார்க்குறேன். பெருக்குறது, துடைக்கிறதுலே தொடங்கி எல்லா வேலையும் நான்தான். அய்யாமாருங்க டெய்லி துட்டு கொடுத்துடுவாங்க. ‘சரக்கு’ செலவு போவ மீதி காசு வூட்டுக்கு. இந்த ஸ்டேசனுக்கு வராத வி.ஐ.பி.ங்களே இல்லை. ஐஜிக்கெல்லாம் என்னை நல்லாத் தெரியும். வயசாயிடிச்சி. எனக்கு இன்னா வயசிருக்கும்னு நெனைக்கிறேன். எழுவது கிராஸ் பண்ணிட்டேன்னு நெனைக்கிறேன். ரிச்சா ஓட்டமுடியாது. ஆட்டோலாம் வந்ததுக்கப்புறம் ரிக்ச்சாவுக்கு கஸ்டமரும் கிடைக்கிறதில்லே”

சொல்லிவிட்டு மவுனமாக இருந்தார். நாங்களும் எதுவும் பேசவில்லை. மவுனத்தை உடைக்கும் விதமாக “காலங்களில் அவள் வசந்தம்” என்று பி.பி.எஸ்.ஸை பிரதியெடுத்து பாட ஆரம்பித்தார்.

“உலகத்துலேயே சந்தோஷமான மனுஷனை எங்காவது பார்த்திருக்கியா? இப்போ பார்த்துட்டே. நாந்தான் அது. ஸ்டேஷன்லே தேடுவாங்க. கெளம்புறேன். டீ வாங்கிக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்” பகபகவென சிரித்தவாறே சொல்லிவிட்டு கிளம்பினார்.

“அசல் திராவிடன்” என்றார் சிவராமன்.

பிற்பாடு இவரைப் பற்றி வெளியில் விசாரித்தேன். எங்கள் அலுவலக வாசலில் டீக்கடை வைத்திருப்பவர் பெரம்பலூருக்கு பக்கத்தில் குன்னத்தூர்காரர். அதிமுககாரர். அண்ணன் ஆ.ராசா பற்றி நிறைய பேசுவார். “நீ பார்த்தது அ.ராசாவோட தாய்மாமன்தான்னு நெனைக்கிறேன். மயிலாப்பூர் ஸ்டேஷனில்தான் இருக்காரு. வியாசர்பாடி ஊடுன்னு சொன்னதெல்லாம் கரெக்டுதான்” என்றார் அவர்.

இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் முகம்கூட சரியாக நினைவில்லை. ஆனால் இந்த ஆண்டு நான் சந்தித்த மனிதர்களிலேயே சிறந்த மனிதர் அவர்தான்.

23 டிசம்பர், 2013

என்றென்றும் பிரியாணி

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் திரைவிமர்சனம் எழுதும் ‘எந்தரோ மாகானுபவலு’ யாரென்று தெரியவில்லை. உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் வரும் விமர்சனங்களைப் போலவே இலக்கியத் தரத்தோடு எழுதுகிறார். மொக்கை, சுமார் என்று இந்து எழுதும் விமர்சனங்களை வாசிக்கும் மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டு “அப்படின்னா படம் நல்லாதான் இருக்கும்” என்று அரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள். நேற்று இரவுக் காட்சிக்கு மடிப்பாக்கம் குமரனில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ ரேஞ்சில் அலை அலையாக, குடும்பம் குடும்பமாக ‘பிரியாணி’க்கு கூட்டம்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா?’, ‘நீதானே என் பொன் வசந்தம்?’ வரிசையில் மற்றுமொரு ஃபீல்குட் மூவி ‘என்றென்றும் புன்னகை’. சினிமா சமூகத்துக்கு தீமை என்று பிரச்சாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியின் தயாரிப்பு. யெஸ், படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனின் தந்தை வேறு யாருமல்ல. அக்கட்சியின் தலைவரான ஜி.கே.மணிதான். ஒரு அரசியல் வாரிசு தயாரித்திருக்கும் இப்படத்தை இன்னொரு வாரிசான ‘ரெட் ஜெயண்ட்’ உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய சூழலில் திமுகவும், பாமகவும் அரசியல் களத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் திரையரங்குகளில் கூட்டணி அமைத்து வெற்றிக்கொடி ஏற்றுகிறார்கள்.

ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒரு முறைதான் தமிழில் படங்கள் ஹிட் ஆகுமென்ற நிலைமை மாறியிருக்கிறது. டிசம்பர் 20 தமிழ் சினிமாவுக்கு ஆடி அமாவாசை. ஒரே நாளில் ரெண்டு ஹிட்டு.

தமிழ் சினிமாவை அழிக்க வந்த கோடரிக்காம்பு திருட்டு டிவிடி கூட அல்ல. சென்சார் போர்ட்தான். இவர்கள் தணிக்கை செய்கிறார்களா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்களா என்றே தெரியவில்லை. பிரியாணியில் “இந்தப் பாட்டுக்குதாண்டா எல்லாரும் காத்திக்கிட்டிருக்காங்க” என்கிற கார்த்தியின் அறிமுகத்தோடு வரும் பாட்டு ‘மிஸ்ஸிஸிப்பி’. அந்தப் பாட்டை சேட்டிலைட் சேனல்களில் ‘கட்’ செய்துவிட்டுதான் ஒளிபரப்புவோம் என்று தயாரிப்பாளர்களிடம் வெள்ளை பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டுதான் ‘யூ/ஏ’ சான்றிதழ் தந்திருக்கிறார்கள். பாட்டு மோசமென்று தணிக்கைத்துறை கருதினால், அதை ‘கட்’ செய்ய சொல்லி தொலைக்க வேண்டியதுதானே? அதென்ன அதை திரையரங்குகளில் ஒளிபரப்பலாம். டிவிக்களில் ஒளிபரப்பக்கூடாது என்று வெட்டி நிபந்தனை? தமிழ்ப் படங்களை தணிக்கை செய்பவர்கள் இந்தி, தெலுங்குப் படங்களையெல்லாம் பார்க்கிறார்களா இல்லையா? தமிழ் திரையுலகினர் முதலில் போராடவேண்டியது ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு’ என்று செயல்படும் தணிக்கைத்துறையினரின் போக்கை எதிர்த்துதான்.

வருட இறுதியில் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் பைக் டோக்கன் போடுகிறவரும், கேண்டீன் விற்பனையாளரும் தொடர்ச்சியாக ‘பிஸி’யாகவே இருக்கிறார்கள். தகராறு, இவன் வேற மாதிரி, பிரியாணி, என்றென்றும் புன்னகையென்று வரிசையாக செம கல்லா. போதாக்குறைக்கு ‘தூம்-3’யின் தமிழ் டப்பிங் வேறு அதிரிபுதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் வருட தொடக்கத்திலேயே ‘வீரம்’, ‘ஜில்லா’வென்று உத்தரவாதமான வசூல் சுனாமி. கங்கிராஜுலேஷன்ஸ் தமிழ் சினிமா!
இணைய சம்பிரதாயப்படி “பிரியாணியில் பீஸ் இல்லை” என்று வழக்கம்போல இணைய விமர்சகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் மொக்கையான ‘வேர்ட்ப்ளே’ ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பாவம் அறிவுக் குருடர்கள். மாயாவாக வரும் மண்டி தாக்கரின் மெகா சைஸ் செஸ்ட் பீஸும், லெக் பீஸும் அவர்களது கண்களுக்கு தெரியவேயில்லை. ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா’வுக்கு பிறகு ரசிகர்களுக்கு சிறப்பான எழுச்சி, புரட்சி.

கதை எழுதுபவர்கள் முதல் வரியிலேயே கதையை துவக்கிவிட வேண்டும் என்பது இளம் எழுத்தாளர்களுக்கு சுஜாதாவின் அறிவுரை. ‘பிரியாணி’ பர்ஸ்ட் ஃப்ரேமிலேயே தொடங்கிவிடுகிறது. பின்னர் கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக கொஞ்சம் ‘ஸ்லோ’ செய்தாலும், விரைவாகவே டாப் கீர் போட்டு விரைகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

ஆரம்பத்தில் இது ஒரு காமெடி கதையென்கிற தோற்றத்தைத் தந்தாலும், போகப்போக ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவலுக்கான அத்தனை ‘திடுக்’ திருப்பங்களோடும் த்ரில்லிங்காக பயணிக்கிறது. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய நடிகரான நாசரை எவ்வளவு பாடு படுத்தவேண்டுமோ, அவ்வளவு பாடு படுத்தியிருக்கிறார் இயக்குனர். அவரை ப்ரிட்ஜுக்குள் பிணமாக முடக்கியதில் தொடங்கி, பிரேம்ஜி அமரனை இமிடேட் செய்து நடிக்கவைப்பதென்று அராஜகம், அதகளம்.

எப்படியோ கார்த்திக்கும் ஒரு மாமாங்கம் கழித்து சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு ஹிட். மங்காத்தா மாதிரி இல்லையென்று குறைப்பட்டுக் கொள்கிறவர்கள், ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். மங்காத்தாவில் ஹீரோ அஜித். யுவன்ஷங்கர் ராஜாவின் நூறாவது படமென்று சொல்லிக் கொள்ள பின்னணி இசையிலோ, பாடல்களிலோ சாட்சியங்கள் எதுவுமில்லை. அறிமுகப் படத்திலேயே இதைவிட சிறப்பான இசையை தந்தவர் யுவன். டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட் வரை டைட்டான பக்கா எண்டெர்டெயினர்.
ஐ.அஹமத் மீடியாவில் முக்கியமான ஆள். டிவி, ரேடியோ நிகழ்ச்சிகளில் நல்ல அனுபவம். பண்பலை வானொலியான ரேடியோ சிட்டியை தமிழகத்தில் நிறுவியவர். ‘திங் எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் பார்ட்னர். யூடிவி மாதிரி பெரிய நிறுவனங்களில் கிரியேட்டிவ் டைரக்டராக இருந்தவர்.

எல்லோரைப் போலவும் இவருக்கும் சினிமா ஆசை. ‘வாமனன்’ என்கிற படத்தை இயக்கினார். “தன் வாழ்நாளின் மாஸ்டர் பீஸ்” என்று இப்படத்தைதான் ஹீரோ ஜெய் முன்பு ஒருமுறை சொல்லி, அவரது மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். நல்ல மேக்கிங் என்று வாமனன் பெயர் வாங்கியிருந்தாலும், கல்லாப்பெட்டி மட்டும் நிரம்பவில்லை. அந்த குறையைப் போக்க ‘என்றென்றும் புன்னகை’ எடுத்திருக்கிறார்.

பானுமதி, சாவித்ரி, குஷ்பு, சிம்ரன் வரிசையில் த்ரிஷாவும் ஏன் இடம்பெறுகிறார் என்கிற கேள்விக்கு விடை இப்படத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஃபீல்டில் இருந்தாலும் அந்த மூஞ்சூறு முகத்தில்தான் இன்னமும் எவ்வளவு அழகு, இளமை, உணர்ச்சிகள். நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்ட ஜீவாவேகூட காம்பினேஷன் காட்சிகளில் த்ரிஷாவிடம் படுதோல்வி அடைகிறார்.

ஜீவாதான் ஹீரோ. ஆனால் ஹீரோக்குரிய இலக்கணங்கள் எதுவும் அவரிடமில்லை. வாழ்க்கை குறித்த எதிர்மறையான நம்பிக்கை. பெண்கள் என்றாலே பேய்கள் எனும் அவநம்பிக்கை. அளவுக்கதிகமான ஈகோ. கட்டுக்கடங்காத திமிர் என்று முற்றிலும் எதிர்மறையான பாத்திரம். ‘sorry’ என்கிற வார்த்தையை உச்சரிக்கவே மாட்டேன் என்று வீம்பு. படத்தின் எண்ட் கார்ட் போடும்போது ‘ஐ லவ் யூ’ சொல்லுவதில் மட்டுமே சமரசமென்று தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய பாத்திரப் படைப்பு. ஜீவாவின் கேரியரில் ஒரு முக்கியமான படம்.

சமீபமாக நொண்டி அடித்துக் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஃப்ரெஷ் ஆகியிருக்கிறார். பாடல்களில் இளமையும், இனிமையும் தாலாட்டுகிறது. போலவே சந்தானமும். “எங்கியாவது லேடீஸ் செருப்பைப் பார்த்தாகூட ஏறிடுவான்” மாதிரி பச்சையான டயலாக்குகள் இருந்தாலும், அது ஆபாசமாக தெரியாத அளவுக்கு சிறப்பான படமாக்கம். கிரேட் ஷோ. வாழ்த்துகள் அஹமத்!