3 ஜூன், 2014

இடியாப்பச்சிக்கல் கதைகள்

சுரேஷ்
ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை சாத்திவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்தான் சுரேஷ். இம்மாதிரி தனிமையை அனுபவித்து எவ்வளவு நாள் ஆகிறது? கல்யாணமாகி நான்கு மாதங்கள்தான். கவிதா கர்ப்பம் என்று காலையில்தான் உறுதி ஆனது. இந்நேரத்தில் கண்காணாத வடநாட்டில் ஏதோ பாடாவதி பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் தண்டனையாக வந்திருந்தது. எட்டு ஆண்டுகளாக மாடு மாதிரி எவ்வளவு உழைத்தாலும் நன்றியே இல்லாமல் நடந்துகொள்ளும் எம்.டி. யை கொலைசெய்தால் என்ன? கோயிலில் வரக்கூடாத நினைப்புதான். ஆனால் வந்துவிட்டது.
செல்போன் அடித்தது. ‘sandhiya calling’. “சுரேஷ்! இதுக்குமேலே பொறுத்துக்க முடியாது. ஏதாவது பண்ணு”. சந்தியா சுரேஷின் காதலி. அவனுடைய எம்.டி. ராமமூர்த்தியின் மனைவியும் கூட.

சந்தியா
சுரேஷின் callஐ கட் செய்தாள். “ம்ஹூம். கல்யாணமே பண்ணிக்கிட்டிருக்கக் கூடாது” எப்போதோ நடந்த கல்யாணத்துக்கு இன்று வருத்தப்பட்டாள் சந்தியா. ராமமூர்த்தி நல்லவன்தான். அன்பானவன். நினைத்தே பார்க்கமுடியாத வசதியான வாழ்க்கையை கொடுத்திருக்கிறான். ஆனால் அவனை பார்க்கும்போதெல்லாம் மரவட்டையைப் பார்ப்பதுமாதிரி அருவருப்பாக இருக்கிறது. கட்டாயத்துக்கு அவனோடு குடும்பம் நடத்தி.. ச்சே.. என்ன பிழைப்பு இது? காதலித்தவனை கைபிடிக்க முடியாததைவிட பெரிய அவலம் பெண்ணுக்கு வேறென்ன இருக்க முடியும்?
நர்ஸ் அவள் சிந்தனைகளைக் கலைத்தாள். “பாஸிட்டிவ் வந்திருக்கு சந்தியா. யெஸ் யூ ஆர் பிரெக்ணண்ட். கங்க்ராட்ஸ்”
நொடிக்கு நொடி வெறுத்துக் கொண்டிருக்கும் கணவனின் வாரிசு அவளது வயிற்றில். அவளே கொஞ்சமும் எதிர்பாராத ட்விஸ்ட். முதன்முறையாக ராமமூர்த்தியின் மீது ஏனோ அவளுக்கு காதல் பிறந்தது.

ராமமூர்த்தி
‘அப்பாவாகப் போகிறாய்’ என்று எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்தே தரைக்கு மேலே ரெண்டு அடி மேலேயே பறந்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்விலிருந்தான் ராமமூர்த்தி. அடுத்தவாரம் அவளுடைய பிறந்தநாள் வேறு. அசத்திவிட வேண்டும். ஈ.சி.ஆர். ரோடில் இழைத்து இழைத்து ஒரு வீடு கட்டியிருந்தான். அவளுக்கு தெரியாமலேயே அவளுக்காக கட்டியிருந்த இந்த ‘வசந்தமாளிகை’தான் பிறந்தநாள் பரிசு. அவளோடும், பிறக்கப்போகும் குழந்தையோடும் அம்மாளிகையில் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்தால் இப்போதே கஞ்சா அடித்தது மாதிரி நெஞ்சு படபடக்கிறது. ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ செல்போன் ரிங்டோனியது. சந்தியா. சனியன், இவள் வேறு. “ராமு, நீ அப்பாவாகப் போற”. அப்படியே ஷாக்கானான். காலையில் கவிதாவின் எஸ்.எம்.எஸ் தந்த மொத்த மகிழ்ச்சியும் அலையில் அடித்துக்கொண்டு போனமாதிரி இருந்தது.

கவிதா
“இதுக்காக என்னை குத்தம் சொல்றீயே? அவன் மட்டும் யோக்கியம்னு நெனைச்சியா?” காஃபிஷாப்பில் இருந்தார்கள் கவிதாவும், லதாவும்.
“சத்தம் போட்டு பேசாதடி. எல்லாரும் நம்பளையே பார்க்கிறாங்க” என்றாள் லதா. இவளும், அவளும் ஒண்ணாவதிலிருந்தே இணைபிரியாத் தோழிகள். உடல் இரண்டு. உயிர் ஒன்று என்பது மாதிரி.
“என்னோட மேரேஜ் லைஃப் ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கிறது மாதிரிதான் எல்லாரும் நெனைச்சுக்கிட்டிருக்கீங்க. ஆக்சுவலா சுரேஷ் ஒரு சைக்கோ. டிசைன் டிசைனா என்னை கொடுமைப்படுத்தறான். கல்யாணத்துக்கு முன்னாடி சந்தியான்னு ஒருத்தியை லவ் பண்ணியிருக்கான். இன்னும் அந்த அஃபயர் கண்டினியூ ஆகிட்டிருக்கு. இதனாலே பாதிக்கப்பட்ட நானும், அவளோட ஹஸ்பெண்டும் யதேச்சையா சந்திச்சோம். ஒருத்தருக்கு ஒருத்தர் இயல்பா ஈர்த்துக்கிட்டோம். இதுலே என்ன தப்பு?” என்றாள் கவிதா.

லதா
கவிதாவின் துக்கம் இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்ததற்காக கடுமையாக வருந்தினாள் லதா. ‘பாவி மக. அவ்ளோ க்ளோஸா இருக்குற எங்கிட்டேயே மறைச்சுட்டாளே?’
கவிதாவை மகாராணியாய் வளர்த்தார் அவரது தந்தை. நல்ல வேலையில் இருக்கிறான் என்று சுரேஷுக்கு தன் சக்திக்கு மீறி ஆடம்பரமாய் திருமணம் செய்து அனுப்பினார். ஆனால் இந்த படுபாவி சுரேஷ் தாலி கட்டிவிட்டான் என்பதற்காக எவ்வளவு சித்திரவதைகளைதான் அவள் எதிர்கொள்வாள். கவிதாவுக்கு ராமமூர்த்திதான் கரெக்ட். எப்பாடு பட்டாவது இருவரையும் சேர்த்துவிட வேண்டும். குறுக்கிலிருப்பது சுரேஷும், ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவும்தான். கருமம், இருவருக்கும் கள்ளக்காதல் வேறு. இவர்கள் செத்தொழிந்தாலும் பரவாயில்லை. பூமிக்கு பாரம் குறையும். ரமேஷுக்கு போன் அடித்தாள். லதாவின் காதலன். அதேநேரம் ப்ரொபஷனல் கில்லரும் கூட.

ரமேஷ்
இதுவரை பணத்துக்காகதான் கொலைகளை செய்திருக்கிறான் ரமேஷ். முதன்முறையாக தன்னுடைய காதலிக்காக தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத இரண்டு பேரை கொல்லவேண்டும். லதா ரொம்ப பிடிவாதமாக இருக்கிறாள். இந்த வேலையை எடுத்துக் கொள்வதில் அவனுக்கு ஒப்புதல் இல்லை. பேசாமல் இந்த வேலையை கிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டால் என்ன?
கிருஷ்ணனை தேவி தியேட்டர் வாசலில் சந்தித்தான். “மச்சான். என்ன ஏதுன்னு கேட்காதே. ரெண்டு ஆட்டை அறுக்கணும். டீடெய்ல்ஸ் இந்த கவர்லே இருக்கு”
“வேற அசைன்மெண்டுக்கு ஒத்துக்கிட்டிருக்கேண்டா. வேணும்னா அதை நீ செஞ்சுடறியா? இதுவும் ரெண்டு ஆடுதான்”. பண்டமாற்று மாதிரி வேலையை மாற்றிக் கொண்டார்கள். கிருஷ்ணன் ஒரு கவரை கொடுத்தான். “உள்ளே போட்டோ, டீடெய்ல்ஸ் எல்லாமிருக்கு”

கிருஷ்ணன்
வெயிலில் பைக் ஓட்டிய களைப்பில் சோர்வாக வந்து சேர்ந்தான் கிருஷ்ணன். ஃபேன் ஸ்விட்சை போட்டான். கரெண்ட் கட். ரமேஷ் கொடுத்த கவரை பிரித்துப் பார்த்தான். இருபத்தைந்து வயது மதிப்புள்ள பெண்ணின் படம். சந்தியா என்று பெயர் எழுதியிருந்தது. அழகாக இருந்தாள். அதனாலென்ன? இதையெல்லாம் பார்த்தா ‘தொழில்’ நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்த படத்தை எடுத்தான். சுரேஷ். விழிகள் பிதுங்கி வெளியே விழுந்துவிடுமளவுக்கு அதிர்ச்சி. இவனை போய் ஏன் கொல்லவேண்டும்?
சுரேஷுக்கு போன் அடித்தான். ஸ்விச்ட் ஆஃப். ரமேஷுக்கு முயற்சித்தான். அதுவும் ஸ்விச்ட் ஆஃப்.. ரிங் போய்க்கொண்டே இருந்தது. உடனே செல்வியைப் போய் பார்க்க வேண்டும். தன்னைவிட சுரேஷை நன்றாகப் புரிந்தவள் அவள்தான். செல்வி கிருஷ்ணனுடைய தங்கை. சுரேஷ் அவனுடைய தம்பி.

செல்வி
செல்வி ஒரு பாசமலர். இரண்டு அண்ணன்கள். சிறுவயதிலேயே அம்மாவும், அப்பாவும் விபத்தில் காலமாகி விட்டார்கள். அனாதையாக மூன்று பேரும் நடுத்தெருவில் நின்றபோது, சமூகத்துக்கு அவர்கள் மீது எந்த இரக்கமுமில்லை. அவர்களாகவே வளர்ந்தார்கள். பெரியவன் கிருஷ்ணன் ‘நிழலான’ தொழில்களில் ஈடுபட்டான். சின்னவன் சுரேஷ் ஓரளவுக்குப் படித்து சொல்லிக் கொள்ளும்படியான வேலையில் சேர்ந்தான். கிருஷ்ணனின் சட்டத்துக்குப் புறம்பான வேலைகள் அவனை உறுத்தியது. விட்டுவிட்டு வந்துவிடும்படி சொல்லி, கிருஷ்ணன் கேட்காமல் கடைசியில் செல்வியையும், கிருஷ்ணனையும் விட்டு தனியாக பிரிந்துப் போய்விட்டான்.
அப்படிப்பட்ட சுரேஷை கொல்ல சொல்லி கிருஷ்ணனிடமே இப்போது வேலை வந்திருக்கிறது. கொல்லுமளவுக்கு யாருக்கு சுரேஷ் மீது வன்மம் இருக்கும்? அன்பு மூலமாகதான் சுரேஷை காப்பாற்ற வேண்டும்.

அன்புசெழியன்
அன்புசெழியன் காவல்துறை இன்ஸ்பெக்டர். செல்வியின் காதலன். அடிக்கடி கிருஷ்ணனை கைது செய்ய போகும்போது செல்வியைப் பார்த்து காதலாகி கசிந்துருகி விட்டான். கிரிமினலின் தங்கையாக இருந்தாலும் சேற்றில் மலர்ந்த செந்தாமரை. அவளுடைய அண்ணன் சுரேஷை கொல்ல சொல்லி அசைன்மெண்ட் எடுத்த ரமேஷை பிடித்து உதைத்தால்தான் பின்னணி வெளிவரும்.
கடைசியாக கிருஷ்ணனை சந்தித்த ரமேஷ் எங்குபோனான் என யாருக்குமே தெரியவில்லை. அவன் கொல்ல ஒப்புக்கொண்ட கவிதாவும், ராமமூர்த்தியும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அப்படியிருக்க ரமேஷின் கதி?
திடீரென ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஒருவன், முதுகில் சுமந்து வந்த பையில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு தலையை எடுத்து டேபிளில் வைத்தான். ரமேஷின் தலை. “எம் பேரு ரவிச்சந்திரன்” என்று அவன் பேசத்தொடங்கினான்

ரவிச்சந்திரன்
லதாவை உயிருக்கு உயிராக காதலித்தான் ரவிச்சந்திரன். காதல் என்றால் அம்பிகாபதி-அமராவதி ரேஞ்சுக்கு தெய்வீகக்காதல். எப்படியும் லதாவை கைபிடித்து விடலாம் என்று ரவி நம்பினான். ஏனெனில் லதாவின் உயிர்த்தோழி கவிதா வேறு யாருமல்ல. ரவியின் சொந்த தங்கைதான். கவிதா சொன்னால் லதா கேட்பாள் என்று அவளிடம் சிபாரிசுக்கு போனான். ஆனால் லதா, ரமேஷ் என்று ஒருவனை காதலிப்பதாக கவிதா சொல்ல, மனசு உடைந்தான். காதல் தோல்வி அவனை கொலைவெறியனாக மாற்றியது. தனக்கு கிடைக்காத லதா ரமேஷுக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தான்.
அவனைக் கொல்ல இது மட்டுமே காரணமில்லை. இன்னொரு காரணம் சித்ரா. இவள் யாரென்றால்?

சித்ரா
ராமமூர்த்தியின் ஆபிஸ் ரிசப்ஷனிஸ்ட் சித்ரா. சுறுசுறுப்பானவள். இவள் இல்லாமல் ஆபிஸே இயங்காது. அலுவலகத்தில் பணிபுரியும் சுறுசுறுப்பான எக்ஸ்க்யூடிவ்வான சுரேஷை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள் அவளது ரூமில் தூக்கில் தொங்கினாள். தற்கொலை என்று போலிஸ் கேஸை ஊற்றி மூடினாலும், அது திட்டமிடப்பட்ட கொலை என்று சித்ராவின் அப்பாவுக்கு தோன்றியது. அவர் விசாரித்துப் பார்த்ததில் தேசவிரோதமான அலுவலக ரகசியம் ஒன்று சித்ராவுக்கு தெரிந்ததாகவும், அது போலிஸுக்கு போவதற்கு முன்பாக அவளை கொல்ல கூலிப்படை அமைக்கப்பட்டதாகவும் கண்டுபிடித்தார். அவர் ஒரு வாத்தியார். தன்னுடைய விசுவாசமான முன்னாள் மாணவனிடம் இதை சொல்லி அழுதார். அந்த மாணவன்தான் ரவிச்சந்திரன். சித்ராவை கொன்ற கூலிப்படைத் தலைவன் வேறு யாருமல்ல. ரமேஷ்தான்.

ராகவன்
இதுவரை வந்த எந்த கேரக்டர்களோடும் தொடர்பில்லாத மனிதர். ஆனால் அந்த கேரக்டர்களை உருவாக்கியவரே இவர்தான். மெகாசீரியல் ரைட்டர். தாய்க்குலத்தின் பேராதரவோடு பரபரப்பாக ஓராண்டு காலமாக ஓடிக்கொண்டிருந்த ‘நிர்மலா’ மெகாசீரியலின் சில காட்சிகளைதான் இதுவரை நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஏனோ தெரியவில்லை. இன்னும் ஐந்து எபிசோடுகளோடு சீரியலை முடித்துக் கொள்ளுங்கள் என்று சேனல் உத்தரவிட்டு விட்டது. என்ன செய்யலாம் என்று சீத்தலைச் சாத்தனார் மாதிரி பேனாவை எடுத்து மண்டையில் குத்திக் கொண்டிருந்தார்.
காலிங் பெல் கிர்ரியது. கதவைத் திறந்தார்.
சுரேஷ், சந்தியா, ராமமூர்த்தி, கவிதா, லதா, ரமேஷ், கிருஷ்ணன், செல்வி, அன்புசெழியன், ரவிச்சந்திரன், சித்ரா (இவள்தான் செத்துட்டாளே?) ஆகியோர் கும்பலாக நின்றிருந்தார்கள்.


(நன்றி : தினமலர் வாரமலர்)

26 மே, 2014

ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்

பெற்றோரின் இளம் வயது ரொமான்ஸை பிள்ளைகள் காணும் சந்தர்ப்பம் நம் சமூகத்தில் குறைவு. நமக்கு நன்கு நினைவு தெரிகிறபோது அப்பாவுக்கு காதோரத்தில் நரையும், பின் தலையில் சொட்டையும் விழுந்துவிடுகிறது. தளர்ந்துபோன அம்மா மூட்டுவலியால் அவதிப்படுகிறார். இரத்த அழுத்தம் சோதிக்க அடிக்கடி மருத்துவரிடம் போகிறார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருவரும் இணக்கமாக பேசிக்கொள்வதை காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் ’சுள்’ளென்று எரிந்துவிழும் காட்சிகளைதான் அதிகம் காண நேரும். இளம் வயது அம்மாவும், அப்பாவும் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொண்டு மரத்தை சுற்றி ‘டூயட்’ பாடுவதை அவர்கள் பெற்ற குழந்தைகள் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள். இந்த அழகான கற்பனையைதான் திரையில் ஓட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார். தமிழில் ‘அலை’ என்றொரு மொக்கைப் படத்தை எடுத்தவர். அடுத்து மாதவனை வைத்து அவர் இயக்கிய ‘13-பி யாவரும் நலம்’, நீண்டகாலத்துக்கு பிறகு தமிழில் வெளிவந்த வெற்றிகரமான பேய்ப்படம். தெலுங்கில் இவர் இயக்கிய ‘இஷ்க்’, இந்த தலைமுறையின் இதயத்தை திருடாதே. தொடர் தோல்வியால் துவண்டுப் போயிருந்த நடிகர் நிதினுக்கு கம்பேக்.

அக்கினேனி குடும்பத்தைச் சார்ந்த நாகார்ஜூனாவுக்கு ஓர் ஆசை. அப்பா நாகேஸ்வரராவ் நாடறிந்த நடிகர். தேவதாஸை மறக்க முடியுமா? சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த தெலுங்கு திரையுலகத்தை, அன்னபூர்ணா ஸ்டுடியோ மூலமாக ஹைதராபாத்துக்கு ‘ஷிப்ட்’ செய்தவர் அவர்தான். நாகார்ஜூனாவும் வெற்றிகரமான நடிகராக தென்னிந்தியாவில் அறியப்பட்டாயிற்று. அக்கினேனேனி குடும்பத்தில் அவரது இரண்டாம் மனைவியாக இணைந்த அமலாவும் பெரிய நடிகை. அடுத்த தலைமுறையாக அவரது மகன் நாக சைதன்யாவும் ஆறேழு படங்களில் நடித்துவிட்டார். இளையமகன் அகிலும் தடாலடி என்ட்ரிக்காக வரிசையில் காத்து நிற்கிறார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்தடுத்து மூன்று தலைமுறையாக ஆந்திராவில் கலைச்சேவை செய்யும் அக்கினேனி குடும்பத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஒரு படம். இதில் மூன்று தலைமுறை நடிகர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும்.

தன்னுடைய இந்த கனவுப்படத்துக்கு இயக்குனர்களிடம் ’ஸ்க்ரிப்ட்’ கேட்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட பேர் கதை சொன்னார்கள். எல்லாமே சாதாரணமானதாக நாகார்ஜூனாவுக்கு தோன்றியது. அப்போது ‘இஷ்க்’ பெரிய ஹிட். எனவே விக்ரம்குமாரிடமும் கதை சொல்ல சொன்னார். அவர் சொன்ன லைன் நன்றாக இருக்கவே, டோலிவுட்டின் எஸ்.பி.எம்.மான ராகவேந்திராராவிடம் இந்த கதையை எடுக்கலாமா என்று நாகார்ஜூனா ஆலோசித்தார். “ரொம்ப சிக்கலான கதையா இருக்குப்பா. கொஞ்சம் சிம்ப்ளிஃபை பண்ணி பண்ணச் சொல்லு. நல்லா வரும்” என்றார் அவர்.

ஓராண்டு உழைப்புக்கு பிறகு விக்ரம்குமார் திரைக்கதையாகவே சுமார் இரண்டரை மணி நேரம் விவரித்த கதை நாகார்ஜூனாவுக்கு அப்படியே ஓக்கே. “அப்பா கிட்டேயும் சொல்லிடுங்களேன்”. தொண்ணூறு வயது நாகேஸ்வரராவ் பொறுமையாக கதை கேட்டார். ஒவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்ப சொல்லச் சொல்லி மனதுக்குள் ஏற்றிக்கொண்டார். சொல்லி முடிக்க விக்ரமுக்கு ஆறு மணி நேரம் ஆயிற்று. “எல்லாம் சரியா வந்திருக்கு. ஆனா காமெடி குறைச்சல். சீரியஸான சிக்கலான கதை. காமெடியா சொன்னாதான் எடுபடும். நான் பெரிய ஆளுன்னுலாம் நினைக்காம என்னையும் காமெடியன் ஆக்கிடு. என் பேரன் சைதன்யா சகட்டு மேனிக்கு என்னை நாஸ்தி பண்ணுறமாதிரி சீன் ரெடி பண்ணு” என்றுகூறி ஸ்க்ரிப்ட்டை ஓக்கே செய்தார். படத்துக்கு டைட்டில் வைத்தவரும் நாகேஸ்வரராவ்தான். அக்கினேனி குடும்பம் ஒட்டுமொத்தமாக இணைந்து ‘நாம்’ என்று சொல்வதைப் போன்ற பொருள் வரும்படி ‘மனம்’ என்று பெயர் வைத்தார். தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அமிதாப் படத்தில் ஒரு காட்சியாவது வரவேண்டும் என்று நாகேஸ்வரராவ் கண்டிஷனே போட்டார். பொருத்தமான வேடம் எதுவும் இல்லையென்றாலும் தன் மருமகள் அமலா, இன்னொரு பேரன் அகில் ஆகியோரையும் திரையில் காட்டியாக தெரிந்தாகவேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்.

தமிழில் முன்பு ‘பிராப்தம்’ என்று சாவித்திரி தயாரித்த திரைப்படம், சிவாஜியின் நடிப்பில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. அந்த கதையையே கொஞ்சம் பட்டி தட்டி கமர்ஷியல் டிங்கரிங் செய்தால் ‘மனம்’ ரெடி.

இந்தியாவின் நெம்பர் ஒன் தொழிலதிபரான நாகேஸ்வரராவ் (படத்தில் நாகார்ஜூனா) யதேச்சையாக இறந்துப்போன தன்னுடைய தந்தையின் அசலான உருவத்தில் இருக்கும் ஓர் இளைஞனை (நாக சைதன்யா – படத்தில் இவர் பெயர் நாகார்ஜுனா) விமானப் பயணத்தில் சந்திக்கிறார். அவரை அப்பாவென்று அழைத்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். அப்பா மறுபடியும் பிறந்திருக்கிறார் என்றால், அம்மாவும் பிறந்திருக்க வேண்டுமே என்று அம்மாவை தேடுகிறார். அம்மாவான சமந்தாவையும் கண்டடைகிறார். இருவரையும் காதலிக்க வைத்து மகிழ்ச்சியாக வாழவைக்க வேண்டுமென பிரயத்தனப்படுகிறார். ஆனால் போன ஜென்மத்து நினைவுகள் வந்துவிடுவதால், அப்போது சைதன்யா மீது பெரும் கோபம் கொண்டிருந்த சமந்தா, இந்த ஜென்மத்திலும் தொடர்கிறார். இதற்கிடையே நாகார்ஜூனாவுக்கு ஒரு பெண் டாக்டரை கண்டதுமே இதயம் ‘லவ்டப்’ என்று ஆட்டோமேடிக்காக அடித்துக் கொள்கிறது. டாக்டரான ஸ்ரேயாவுக்கும் அதே ‘லவ்டப்’தான். இருவரும் முன்பின் ஒருவரையொருவர் அதுவரை பார்த்துக் கொண்டதில்லை. ஸ்ரேயா பணியாற்றும் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தொண்ணூறு வயது பெரியவர் சைதன்யாவுக்கு (நாகேஸ்வரராவ்) இவர்கள்தான் இளம் வயதிலேயே இறந்துபோன தன்னுடைய அம்மாவும், அப்பாவும் என்று தெரிந்துவிடுகிறது. இவர்களை சேர்த்துவைக்க அவர் மெனக்கெடுகிறார்.

இரண்டு தம்பதியினருக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை. எண்பதுகளில் நாகார்ஜூனாவின் அப்பா சைதன்யாவும், அம்மா சமந்தாவும் கார் விபத்தில் இறக்கிறார்கள். அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நாகேஸ்வரராவின் தந்தை நாகார்ஜூனாவும், தாய் ஸ்ரேயாவும் அதேபோன்ற கார்விபத்தில் மரணமடைகிறார்கள். இரு விபத்துமே நடந்த இடம் மணிக்கூண்டு அமைந்திருக்கும் ஒரு டிராஃபிக் சிக்னல்தான்.

இந்த ஜென்மத்திலும் அதே ஜோடிகள் அதே இடத்தில் மரணமடையப் போகிறார்கள் என்பதற்கான அடையாளங்களை பரஸ்பரம் நாகார்ஜூனாவும், நாகேஸ்வரராவும் உணர்கிறார்கள். தங்கள் பெற்றோரை காப்பாற்றுவதற்காக, விதியை வெல்ல முயற்சிக்கிறார்கள். உணர்ச்சிப்பூர்வமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.

கதையை கேட்டால் தலை சுற்றும். இந்த கிறுகிறுப்பு எதுவுமின்றி கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்து இயக்கியிருப்பதில்தான் விக்ரம்குமாரின் வெற்றியே அடங்கியிருக்கிறது. க்ளைமேக்ஸில் ஆக்சிடெண்ட் நடக்கும் தேதி பிப்ரவரி 14, 2014. ஆனால் நிஜத்தில் ஜனவரி 22, 2014 அன்றே நாகேஸ்வரராவ் காலமாகி விட்டார். க்ளிஷேதான். ஆனால், லைஃப் ஈஸ் ஆல்வேஸ் ஸ்ட்ரேஞ்சர் தன் ஃபிக்‌ஷன்.

அக்கினேனி குடும்பத்தின் ஆதிக்கம்தான் படம் முழுக்க என்றிருந்தாலும் அசத்தியிருப்பவர்கள் சமந்தாவும், ஸ்ரேயாவும். ஆறு வயது குழந்தையின் அம்மாவாக, கணவருடன் கருத்துவேறுபாடு வந்தபிறகு வேதனை காட்டும் குடும்பத்தலைவியாக, சுட்டியான கல்லூரி மாணவியாக, முன் ஜென்மத்து நினைவுகள் வந்ததும் சைதன்யாவின் மீது வெறுப்பு, வளர்ந்த குழந்தை நாகார்ஜூனா மீது தாயன்பு என்று சமந்தாவின் முழுத்திறமையும் வெளியாகியிருக்கிறது. நீண்ட காலமாக திரையில் முகம் காட்டாத ஸ்ரேயா, 1930களின் கிராமத்துப் பெண்ணாக பின்னியிருக்கிறார்.

சைதன்யாவை விட ஐம்பதை கடந்த அவரது அப்பா நாகார்ஜூனாதான் இன்னும் இளமையாக தெரிகிறார். நாகேஸ்வரராவுக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் மறைந்த ஜாம்பவான் திரையில் தெரிவதே நமக்கெல்லாம் போனஸ்தான். அக்கினேனி – ஐரிஷ் ஜாயிண்ட் வென்ச்சரான அகில் அட்டகாசமாக இருக்கிறார். ஆந்திராவுக்கு அடுத்த மகேஷ்பாபு ரெடி.

ஒருவேளை சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் ‘மனம்’ தமிழில் சாத்தியமாகி இருக்கலாம். விக்ரம்பிரபு, பிரபு, சிவாஜி என்று காம்பினேஷனே கலக்கலாக இருந்திருக்கும். தெலுங்கைவிட தமிழில் மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கும்.. ம்... ஆந்திராக்காரர்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக கொண்டாடுகிறார்கள்.

24 மே, 2014

கோச்சடையான்

தியேட்டரே அலறுகிறது. செம மாஸ். விசிலடித்து விசிலடித்து வாயே விசிலாகி விட்டது என்றெல்லாம் ஏற்றி விடுவார்கள். எதையும் நம்பாதீர்கள். செம கடி. சிகரெட் பிடிக்காதீர்கள் என்கிற வாசகத்தோடு ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்லைடை தியேட்டரில் போட்டால் கூடத்தான் விசிலடிக்கிறார்கள். ரஜினி படமென்று கூறி மீண்டும் குசேலன் மாதிரி கழுத்தறுத்திருக்கிறார்கள்.

ஆசியாவின் முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படத்தைவிட நிக்கில்டன் சேனலில் வரும் நிஞ்சா ஹட்டோரி சூப்பராக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒருவேளை நிஜ ரஜினியையே வைத்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவை இயக்கியிருந்தால் வேற ரேஞ்சுக்கு போயிருக்கலாம். அறிமுக இயக்குனர் சிம்புதேவனுக்கே ஒரு வரலாற்றுப் படத்தில் ரிஸ்க் எடுக்கும் தில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாருக்கு ஏன் அச்சமென்று தெரியவில்லை.

பிரும்மாண்டமான கிராஃபிக்ஸ் செட்டிங்ஸ் ஓக்கே. ஆனால் பொம்மையில் உருவாக்கப்பட்ட மாடல் ஆட்கள்தான் படுத்துகிறார்கள். ரஜினி சில சீன்களில் பரவாயில்லை. பெரும்பாலான காட்சிகளில் பரிதாபமாக இருக்கிறார். நல்லவேளை த்ரீடி அனிமேஷனில் தன்னை பார்க்காமலேயே நாகேஷ் செத்துப்போய் விட்டார். நாசர், சரத்பாபு, ஷோபனா உள்ளிட்டோரின் பொம்மைகளெல்லாம் அய்யோவென்றிருக்கிறது. கற்பனைக்கு எட்டாத போர்க்கள காட்சிகளை காட்டும்போது பிரமிப்பு ஏற்படுவதற்கு பதிலாக, இதெல்லாம் பொம்மைகள்தானே என்று சலிப்புதான் தோன்றுகிறது.

புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும்போதே அதை ரொம்ப டம்மியாக கொண்டுவந்தால், அந்த தொழில்நுட்பம் மீதே ரசிகர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கமல்தான் சரிபட்டு வருவார். வெகுஜன ரசிகனுக்கு புரியாதவாறு அறிவுஜீவித்தனமாக எதையாவது செய்து கையை சுட்டுக் கொண்டாலும் கலக்கலாக புது டெக்னாலஜியை எஸ்டாப்ளிஷ் செய்வார்.

இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று டைட்டிலில் போடுகிறார்கள். முன்பெல்லாம் டிடியில் போடும் சேர்ந்திசை, மெல்லிசை ரேஞ்சுக்கு பாடல்கள் இருக்கிறது. பின்னணி இசையும் ஏனோதானோ. ஒருவேளை இசையமைத்தது ஆஸ்கர் நாயகனின் ஃபேக் ஐடியோ என்னவோ?

படத்தின் பெரிய ஆறுதல் ரஜினி மற்றும் நாசரின் பின்னணிக் குரல். வயசானாலும் சிங்கங்கள் காடு அலறும் கர்ஜனையாகதான் உறுமுகின்றன. போலவே கே.எஸ்.ரவிக்குமாரின் அருமையான கதை, திரைக்கதை, வசனம். பக்காவான பஞ்ச் டயலாக்குகளை பொம்மைக்கு எழுதி வீணடித்துவிட்டாரே என்று ஆதங்கமாக இருக்கிறது. பிளாஷ்பேக்கை ஏன் தீபிகா பொம்மையிடம், ரஜினி பொம்மை சொல்கிறதோ தெரியவில்லை. ஊருக்கே தெரிந்த கோச்சடையான் பொம்மையின் கதை, தீபிகா பொம்மைக்கு மட்டும் தெரியாதா என்ன?

வாழ்ந்துகொண்டிருக்கும் ரஜினியை வைத்து இதுமாதிரி கந்தர்கோலம் செய்திருப்பதைவிட, மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆரை கிராஃபிக்ஸில் கொண்டு வந்திருந்தால், வாத்தியாரை திரையில் காணும் திருப்தி மட்டுமாவது மிஞ்சியிருக்கும்.

பெட்டர் லக் அட் லிங்கா!

21 மே, 2014

ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக, நான் முன்பு பணியாற்றிய நாளிதழில், முன்பு கலகக்காரர் என்று தவறாக நினைத்துவந்த எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“மோடியை மதவாதி என்று இந்திய புத்திஜீவிகள் சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை”
காலம் ஒரு மோசமான வில்லன். எமனுக்கு காலத்தை குறிக்கிற விதமாக காலன் என்று பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம். பாழாய்ப்போன நினைவுசக்தி மட்டும் நமக்கு இல்லாமல் போனால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று யோசித்தேன். “வெள்ளைக் காக்கா பறக்கிறது” என்று நம் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளர் சொல்கிறாரென்றால், “ஆமாம். வானத்தில் பறக்கும் காக்கா, கொக்கு மாதிரி வெள்ளையாகதான் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அதை நம்பவும் ஆரம்பித்திருப்பேன். எழவு. எல்லாவற்றையும் மறக்கக்கூடிய மனநோய் எனக்கு வந்து தொலைக்கவில்லையே? இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டை மறந்து, அந்நாளைய நினைவுகளை தலைமுழுக முடியவில்லையே?

மிகச்சரியாக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த கலகக்கார எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வாசித்துவிட்டு சூடான அறிவுகெட்டவர்களில் நானும் ஒருவன். ஒருவேளை அன்று சூடாகியிருக்காவிட்டால், இன்று நரேந்திர மோடியின் வெற்றியை தி.நகர் தாமரை இல்லத்தில் ‘பாரத்மாதா கீ ஜே’ கோஷம் போட்டு, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து நானும் கொண்டாடியிருக்கலாம். வளர்ச்சியின் நாயகன் மோடியை பாராட்டி பேஸ்புக்கில் எழுதி ‘லைக்’ அள்ளியிருக்கலாம். அரசியல் சமரசங்களுக்கு உட்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆதரவாளனின் உள்ளம் நாணல் மாதிரிதான். மிக சுலபமாக வளையும். ஆனால் இதுபோன்ற கட்சி சார்பற்ற எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின், செயற்பாட்டாளர்களின் கருத்துதான் அவனது உள்ளத்தை வலுவாக்கி, ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்துக்கு ஆதரவான வலுவான சிந்தனைகளை உருவாக்கும்.

எழுத்தாளர் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘நரேந்திர மோடியும், நாஜி ஜெர்மனியும்’. கட்டுரை இவ்வாறாக ஆரம்பிக்கிறது.
“நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அமளி துமளி பற்றி சமீபத்தில் இரண்டு பேர் மிகவும் கவலைப்பட்டிருக்கின்றனர். ஒருவர் சோ. இவரது கவலைகள் பற்றி எனக்கு அக்கறை இல்லை”
எழுத்தாளர் பிற்பாடு இதே சோ நடத்தும் துக்ளக்கில்தான் நிறம்மாறி எழுதினார் என்பது வரலாற்று சோகம்.

அக்காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக நடந்துவந்த அமளிதுமளிகள் நியாயம்தானென்று வலுவான வாதங்களை வைத்து கட்டுரை தொடர்கிறது.
“ஒரு அரசு ஊழியர் நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரை வேலையை விட்டுத் தூக்க முடியும். சட்டம் அத்தனை கடுமையாக உள்ளது. ஆனால், குஜராத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். (இன்றைய தேதியில் எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டியுள்ளது). ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அகதிகளாயிருக்கின்றனர். சொந்த ஊரில் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலைமை!
இக்பால் ஜாஃப்ரி ஒரு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அவர் வீட்டில் ஒரு கும்பல் நுழைந்திருக்கிறது. அவர் வீட்டுக்கு பாதுகாப்பாக அங்கே வேன்களில் இருந்த போலீஸ்காரர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. எம்.பி.யின் கண் முன்பாகவே அவரது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டுள்ளனர். பிறகு இக்பால் ஜாஃப்ரியின் தலை வெட்டப்பட்டு அவரது உடலும் துண்டாடப்பட்டிருக்கிறது.
கலவரக்காரர்களெல்லாம் வெறும் ரவுடிகளோ காலிகளோ அல்ல. மத்திய தர வர்க்கத்தினர். கையில் செல்போன்களுடன் கலவரத்தை ஒருங்கிணைத்திருக்கின்றனர். முஸ்லீம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட லாரிகளுடன் வந்து கொளுத்தியிருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!
'கோத்ரா ரயில் பெட்டியில் 69 பேர் உயிரோடு எரிக்கப்பட்டதற்கான எதிர்வினையே இது' என்கிறார் மோடி. ஆனால், இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது. கோத்ரா சம்பவம் திடீரென்று நடந்த ஒன்று. ஆனால், அதற்கு பிறகு நடப்பதெல்லாம் அரசாங்கத்தின் உதவியோடு நடக்கும் திட்டமிட்ட படுகொலை.
நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைதான் ஞாபகம் வருகிறது.
ஒரு சம்பவம். மதிய வேளையில் ஒரு தம்பதி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஐம்பது பேர் கொண்ட கும்பல் ஸ்கூட்டரை நிறுத்துகிறது. கும்பலின் கைகளில் வாள், அரிவாள், திரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்கள். ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபரின் பெயரைக் கேட்கிறது கும்பல். அந்த நபர் ஏதோ ஒரு இந்து பெயரைச் சொல்கிறார். கும்பலுக்கு நம்பிக்கையில்லை. 'பேண்ட்டைக் கழற்று'. அடுத்த கணம் அந்த நபரின் மீது பாய்கிறது திரிசூலம்.
அவர் பெயர் முன்னா பாய். வயது 28. சந்தர்ப்பவசமாகப் பிழைத்துவிட்டதால் இப்போது மருத்துவமனையில் கிடக்கிறார். ஆனால், அவர் மனைவி மும்தாஜ் பானுவுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அந்தக் கும்பல் அவரை நிர்வாணமாக்கி அவரது பிறப்புறுப்பில் தொடர்ந்து கத்தியால் குத்திக் கொன்றுவிட்டது.
மற்றொரு இடம். 5000 பேர் கொண்ட கும்பல். அவர்களுக்கு நடுவே ஒரு பெண். அத்தனை பேருக்கும் எதிரே அப்பெண் பலராலும் தொடர்ந்து வன்புணர்ச்சி செய்யப்பட்டு தீயில் தூக்கியெறியப்படுகிறாள்.
இந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து சென்னை திரும்பிய என் நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம்: சுற்றிவர பெட்ரோல் கேன்களுடன் கலவரக்காரர்கள். நடுவில் உயிர்ப் பீதியில் நண்பர். 'நீ யார்? பேர் என்ன?' என்று கேட்டிருக்கின்றனர். பெயரை சொல்லியிருக்கிறார் நண்பர். அவர் களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. வழக்கம்போல் பிறப்புறுப்பை பரிசோதித்த பிறகே அவரை விட்டுச் சென்றிருக்கிறது கும்பல். இதைக் கேட்டதும் நான் நடுங்கிப் போனேன். ஏனென்றால் மருத்துவக் காரணங்களுக்காக நான் Circumcision செய்து கொண்டவன். நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தால்... நினைத்தாலே குலை நடுங்குகிறது.
இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கான சம்பவங்கள். எல்லாவற்றுக்கும் சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. சில ஆவணப்படங்கள் கூட எடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கமிஷனை சேர்ந்தவர்களும் நேரில் பார்த்துவிட்டு இதைத்தான் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
நான்கு தினங்கள் ஒரு பொந்தில் ஒளிந்து கிடந்து தப்பித்து தில்லிக்கு அகதியாக ஓடிவந்துள்ள ரேஷ்மா பென் என்ற பெண் சொல்லியிருக்கும் சம்பவம் இது:
''முதலில் அவர்கள் ஒரு பத்து வயதுப் பெண்ணை கற்பழித்தார்கள். பிறகு எனக்குத் தெரிந்த கெளஸர் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை மாற்றி மாற்றி ஒரு கும்பல் கற்பழித்தது. பிறகு அவள் வயிற்றை அரிவாளால் வெட்டினார்கள். வெளியில் வந்து விழுந்த குறைமாதக் கருவை எரியும் தீயில் தூக்கிப் போட்டார்கள். பிறகு அவளையும் கண்டதுண்டமாக வெட்டித் தீயில் போட்டார்கள்.''
தப்பிப் பிழைத்து ஓடிவரும் அகதிகள் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கிறது. பெண்களின் வயிற்றைக் கத்தியால் கிழித்து எரியும் துணிப் பந்தை அதற்குள் திணிப்பது; கத்தியால் முஸ்லீம்களின் நெற்றியில் 'ஓம்' போடுவது... இதையெல்லாம் முன்னின்று நடத்துவது எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள். உதவி செய்வது போலீஸ்.
எங்கு பார்த்தாலும் கரிக்கட்டையாய் எரிந்து கிடக்கும் சிறுவர்களின் உடல்கள், தலை துண்டிக்கப்பட்ட உடல்கள், எரிந்து போன வாகனங்கள், வீடுகள், கடைகள், மசூதிகள்...
குவியல் குவியலாக மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
நிலைமையை நேரில் கண்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத பயங்கரம்'' என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், பிரதம மந்திரிக்கோ, கலவரம் துவங்கி ஒரு மாதம் வரை நேரில் வர நேரமில்லை. இடையில் கவிதை எழுத வேண்டிய அவசரமான இலக்கியப் பணி. என்ன செய்ய?
ஒரு மாதம் கழித்து வந்து பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அழுதேவிட்டார்.
ஆனால், மறுநாள் கோவாவுக்கு சென்றவர் பால்கோவா சாப்பிட்டது போல் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து முஸ்லீம்களைப் பற்றியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். ''இந்த முஸ்லீம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அமைதியாக வாழ விரும்புவதில்லை!''
இரண்டு மாதங்களாகியும் இன்னும் குஜராத்தில் கலவரங்கள் அடங்கினபாடில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி துமளி. இந்த அமளியால் வீணாகும் பணத்தைப் பற்றியும், பாராளுமன்றத்தின் புனிதத்தைப் பற்றியும் கவலைப்படும் தமிழ்நாட்டு விமர்சகர்கள்”
வாசிக்கும்போதே ஓத்தா, ங்கொம்மா என்று வெறிவருகிறது இல்லையா. எழுதியவருக்கு எவ்வளவு வெறி இருந்திருக்கும்? எனவேதான் அதே வெறியோடுதான் எழுத்தாளர் குஜராத்தை, நாஜி ஜெர்மனியோடு ஒப்பிட்டு எழுதுகிறார்.
“குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையைப் பார்த்தால் எனக்கு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. ஹிட்லரை உலக நாடுகள் ராஜினாமா செய்யச் சொல்லியா கோரிக்கை விடுத்தன? குஜராத்தின் இப்போதைய நிலைமை நாஜி ஜெர்மனியுடன் மட்டுமே ஒப்பிடக் கூடியது என்பதில் சந்தேகமேயில்லை”
தான் வாழும் சமூகத்தில் நடந்த சமகால கொடுமைகளை ஓர் எழுத்தாளன் தட்டிக் கேட்பதைவிட அவனுக்கு வேறெதுவும் பெரிய கடமை இல்லை. மிகச்சரியாகவே அந்த எழுத்தாளர் தன் கடமையைச் செய்திருந்தார். எனவேதான் அவரை rebel என்று நம்பி, புதியதாக இலக்கியம் வாசிக்க வந்திருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அவரை தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடினோம். மன்னிக்கவும். சொம்பு தூக்கினோம். அதனால்தான் எழுத்தாளர் இப்போது நம்மை நோக்கி, “உங்களுக்கு சொம்பு தூக்கும் கலாச்சாரம் மட்டுமே தெரியும்” என்று விமர்சிக்கிறார். அவரது இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. எனவே அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அன்று தங்க சொம்பாக இருந்தீர்கள். கவுரவமாக தூக்கினோம்.

ஆனால், அதே எழுத்தாளர் நாஜி ஜெர்மனிக்கு ஒப்பாக குறிப்பிட்ட நரேந்திரமோடியின் ஆட்சியை, ”குஜராத் மக்கள் மதவேறுபாடு இல்லாமல் மோடியை நேசிக்கிறார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம் மக்களும் மோடிக்கு ஓட்டு போட்டிருப்பார்களா? முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு வலுவான அரசை கொடுக்க முடியுமா?” என்று ஈயச்சொம்பாக மாறி கேள்வி கேட்கும்போதும், உங்களை தூக்கிக்கொண்டு திரிந்தால் வரலாறு மறந்த மொக்கையல்லவா நான்? நீங்கள் எழுதிய ‘ஆஸாதி.. ஆஸாதி.. ஆஸாதி’யை ஒருவரி விடாமல் பலமுறை வாசித்த உங்கள் வாசகன் எப்படி மொக்கையாக முடியும்?

மூன்றாம் முறையாக குஜராத்தில் மீண்டும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம் எழுத்தாளர் 2008ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’. நீதி, நேர்மை, சமத்துவம் போன்ற ஜனநாயகத்தின் ஆதாரப் பண்புகளை இழந்துவரும் இந்திய மக்களின் மனம் மசோகிஸ்ட் மனோபாவமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று கவலை கொண்டிருந்தார். யாரை ஹிட்லர் என்று அப்போதெல்லாம் கடுமையாக விமர்சித்தாரோ, அவரையே இன்று ’உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர்’ என்று ஒப்புக் கொள்கிறாரென்றால், அவரே மசோகிஸ்ட் மனோபாவத்துக்கு மாறிவிட்டாரோ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் என்று குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு தேசிய, உலகளாவிய அரசியல் இலக்கிய சிந்தனைகளை, ஆளுமைகளை, கலைகளை அறிமுகப்படுத்தியவர் சாருநிவேதிதாதான். இந்த நன்றியை சாகும்வரை மறக்க மாட்டேன். விஜய், அஜீத் ரசிகர்கள் மாதிரி நடந்துகொள்ளும் சாருவின் சமீபத்திய சொம்புகளுக்கெல்லாம் இந்த பெருமித உணர்வு கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் சாரு காத்திரமான கட்டுரைகளை படைத்து ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இதுவரை அவரை எங்கும் பொதுவெளியில் விட்டுக் கொடுத்து பேசியதில்லை. இப்படியொரு கட்டுரை எழுதநேருமென கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் ’எப்படியிருந்த நீங்கள், இப்படி ஆகிவிட்டீர்களே’ என்று சுட்டிக் காட்ட வேண்டியது காலத்தின் அவசியமாகி விட்டது. அவரது நிஜமான வாசகன் என்கிற முறையில் இது என்னுடைய கடமையும் கூட. இந்திய தத்துவ விசாரம், குடும்ப முரண்கள், தனிநபர் அகச்சிக்கல்கள் என்று மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்த தமிழிலக்கியத்தில், வடிவநேர்த்தியிலும் சிந்தனைத்தளத்திலும் புதிய வடிவங்களை உருவாக்கி புலிப்பாய்ச்சல் நடத்தியவர் சாரு. இன்னமும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாசகன் என்கிற முறையில் அவரது நூல்கள் அத்தனையையும் காசு கொடுத்து வாங்கி வாசித்தவன்நான். அவரோடு முரண்படக்கூடிய சுதந்திரத்தையும் அவரது எழுத்துகள்தான் எனக்கு கொடுத்தது.

நீங்கள் எழுதியதையெல்லாம் வாசித்துதானே சாரு நாங்கள் இப்படி ஆனோம்? இன்று இந்துத்துவம் வென்றிருக்கலாம். ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருந்த மதவாத மிருகம் கண் விழித்திருக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள பலரும் நினைக்கலாம். ஆனால் சராசரிகளோடு மாறுபட்டு விதிவிலக்காக நிற்க வேண்டியது செயற்பாட்டாளர்களின் கடமை. முதன்முறையாக மதவாத சக்திகள் இந்தியாவில் பெரும்பான்மையாக ஆட்சியை கைப்பற்றியபோது அவர்களோடு யாரெல்லாம் இருந்தார்கள், மதச்சார்பற்ற இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்கள் என்பதை வரலாறு பதிந்து வைத்துக்கொள்ளப் போகிறது. வேதனையாகதான் இருக்கிறது. அந்த கருப்புப் பட்டியலில் நீங்களும் இடம்பெறுகிறீர்கள் சாரு. ஆபத்து அறியாமல் மோடி வென்றுவிட்டார் என்று கெக்கே பிக்கே என சிரித்துக்கொண்டு ஸ்டேட்டஸ் போட்டு விளையாடும் இணையமொக்கைகளோடு நீங்களும் சேர்ந்துவிட்டீர்கள் சாரு. உலக இலக்கியத்தை விடுங்கள். தமிழிலக்கிய உலகிலேயே எதிர்காலத்தில் நீங்கள் யாராய் அறியப்படப் போகிறீர்களோ என்கிற கவலைதான் என்னை ஆக்கிரமிக்கிறது.

பி.கு : மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சாருநிவேதிதா எழுதியிருந்ததாக வரும் பத்திகள் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஆஸாதி ஆஸாதி ஆஸாதி’ நூலில் இருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது. முதல் கட்டுரையில் தமிழ் விமர்சகர்கள் என்று சாரு குறிப்பிடுவது சோ தவிர்த்த இன்னொருவரை சுட்டி. அவர் வெங்கட் சாமிநாதன். குறிப்பிட்ட இந்த இரு கட்டுரைகளையும் முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்தால் அனுப்பி வைக்கிறேன்.

15 மே, 2014

முதலாளித்துவத்தை எப்படி புரிந்துகொள்வது?

இது நடந்து பத்து, பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். அப்போது சகோதரியின் திருமணத்துக்காக நிறைய கடன் வாங்கியிருந்தேன். சம்பளத்தின் பெரும்பகுதி அலுவலகத்தில் வாங்கிய லோனில் கழிந்துக் கொண்டிருந்தது. வெளியே வட்டிக்கு வாங்கிய கடன், நகை அடகு வைத்தது என்று கழுத்து நெறிபட்டுக் கொண்டிருந்தது. எனவே கூடுதலாக சம்பாதிக்கும் பொருட்டு, வலிந்து நானாக ‘ஓவர்டைம்’ செய்துக் கொண்டிருந்தேன். எட்டு மணி நேர வேலைக்கு போக மீதி நேரம் செய்யும் வேலையெல்லாம் ஓ.டி.யில் ஒன்றரை மடங்கு கூடுதல் சம்பளமாக கிடைக்கும். தொடர்ச்சியாக முப்பத்தியாறு மணி நேரமெல்லாம் கண்விழித்து ஓ.டி. செய்திருக்கிறேன்.

ரொம்ப அலுப்பாக இருந்த ஒரு நாளில் இரவு ஒன்பது மணிக்கு கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன். எம்.டி. அவரது அறைக்கு அழைத்தார். எம்.டி., பிரெசிடெண்ட், சேர்மேன் என்று இன்று நிறைய பெயர்கள் சொல்லி அழைத்தாலும் முதலாளி முதலாளிதான். ஒரு பெரிய ஃபைலை கையில் கொடுத்தார். “நாளைக்கு காலையிலே பத்தரை மணிக்கு பிரசண்டேஷன். எல்லாத்தையும் ரெடி பண்ணிடு”. புரட்டிப் பார்த்த எனக்கு உலகமே தலைகீழானது. ஒரு வார உழைப்பை கோரும் வேலையை ஒரே இரவில் முடித்தாக வேண்டும்.

நேராக ஒர்க் ஸ்டேஷனுக்கு வந்தேன். இலக்கில்லாமல் கீபோர்டுகளை தட்டினேன். இது ஒரு எளியவழி. ஒரு வேலையை எப்படி தொடங்குவது என்று தெரியாவிட்டால், இம்மாதிரி கன்னாபின்னாவென்று கீபோர்டை தட்டிப் பாருங்கள். எங்கோ ஒரு பொறி கிளம்பி, வேலையை எளிதாக முடிக்க ‘ஐடியா’ தோன்றும்.

அன்று பொறியோ, நெருப்போ கிளம்பவில்லை. “...............பசங்க. தூங்கவே விட மாட்டானுங்க”, என்று முதலாளியின் அம்மாவுடைய கற்பை கேள்விக்குள்ளாக்கும் அந்த வசைச்சொல்லை சத்தமாக சொல்லிவிட்டு, பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சக ஊழியரைப் பார்த்தேன். திகில் படத்தில் வரும் ஹீரோயின் மாதிரி விழிபிதுங்க, முடியெல்லாம் நட்டுக்கொள்ள பீதியாக காட்சியளித்தார். சட்டென்று திரும்பிப் பார்த்தால் எம்.டி. நின்றுக் கொண்டிருந்தார்.

எப்படி ’ரியாக்ட்’ செய்வதென்று தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் அலுவலகத்தில் இருந்து ஓட்டமும், நடையுமாக கிளம்பினேன். கீழே தேநீர்க்கடைக்கு போய் என் எதிர்காலத்தை சிந்திக்க ஆரம்பித்தேன். கடன் பட்டார் நெஞ்சம் எப்படி கலங்குமென்று அன்றுதான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். தேநீரின் இனிப்பும், புகைமூட்டமுமான அச்சூழலில் “எது நடந்தாலும் நன்மைக்கே” என்கிற கீதையின் உபதேசத்தை ஏற்றுக்கொண்டு அலுவலகப்படி ஏறினேன். பக்கத்து சீட்டு ஊழியர், “எம்.டி. நாலஞ்சி வாட்டி போனில் கூப்பிட்டாரு” என்றார். அடிவயிற்றில் மீண்டும் அச்சப்பந்து எழுந்தது.

அமைதியாக போய் அவர் முன்பாக நின்றேன்.

“கிச்சு கண்ணா வாடா” அன்பொழுக அழைத்தார். சுனாமியை எதிர்ப்பார்த்துச் சென்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.

“சாப்பிட்டாச்சா? வேலை ரொம்ப டைட்டா இருக்கோ? ஒருவாரமா முகத்துலேயே டென்ஷன் தெரியுது. பிரச்சினையில்லை. உதவிக்கு ப்ரீலான்ஸுக்கு யாராவது கிடைக்கிறாங்களான்னு பாரு”

“ஓக்கே சார்”

“பீர் அடிக்கிறியா? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்” சொல்லிவிட்டு “ராஜா... ராஜா...” என்று ஆபிஸ்பையனை அழைத்தார்.

“அதெல்லாம் வேணாம் சார். வேலை நிறைய இருக்கு”

ராஜா வந்தான். “ஆபிஸ்லே எல்லாருக்கும் என்னென்ன வேணும்னு கேட்டு நல்ல ஃபுட் வாங்கிட்டு வா” என்று சொல்லி, நான்கைந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தார். டேபிள் டிராயரை திறந்தார். எதையோ எடுத்து என்னவோ கிறுக்கினார். கிழித்து என்னிடம் தந்தார். செக். என்னுடைய ஒரு மாத சம்பளம் அதில் எழுதப்பட்டிருந்தது.

“முன்னாடியே கொடுக்கணும்னு நெனைச்சேன். மறந்தே போயிட்டேன். ஹார்ட் ஒர்க்கர்ஸை எப்பவுமே நம்ம கம்பெனி நல்லா கவனிக்கும். உங்கிட்டே செல்போன் இல்லை இல்லையா. நல்ல போன் ஒண்ணு வாங்கிட்டு பில்லை அக்கவுண்ட்ஸில் கொடுத்துடு. செட்டில் பண்ணிடறேன்” என்றார்.

சில நிமிட நேரத்துக்கு முந்தைய என் செய்கைக்கு வெட்கப்பட்டுக் கொண்டு, வேதனைப்பட்டுக் கொண்டு குற்றவுணர்ச்சியோடு நகர்ந்தேன். “ச்சே... நம்ம முதலாளியைப் போய் அப்படி பேசிட்டோமே....”. அன்றிரவு எந்திரன் சிட்டி ரோபோ மாதிரி அசுரவேகத்தில் அனாயசமாக வேலை பார்த்தேன்.

அப்போதைக்கு என்னை ‘ஹேப்பி’ செய்த எம்.டி. அடுத்த இரு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவரது ‘கெத்’தை காட்ட ஆரம்பித்தார். எவ்வளவுதான் பர்ஃபெக்டாக வேலை செய்தாலும், அதில் ஏதோ ஒரு குறையை கண்டுபிடித்து எல்லார் முன்பாகவும் கத்துவார். ஆனால் தனிமையில் பேசும்போது லீவே போடாமல் அலுவலகத்துக்கு வரும் என் சின்சியாரிட்டியை பாராட்டுவார். நேரம் காலம் பார்க்காமல் உழைப்புக்கு தயாராக இருக்கும் என்னுடைய தன்மையை கொண்டாடுவார். அந்த ஆண்டு சம்பள உயர்வு, ஓபி அடிப்பவர்களுக்கு எல்லாம் ஓஹோவென்று விழ எனக்கு பெயருக்கு ஏதோ ஒரு சொற்பத்தொகைதான் போடப்பட்டது.

இதுதான் முதலாளித்துவம்.

இதே மாதிரி –ஆனால்- வெவ்வேறான அனுபவம் பல்வேறு நிறுவனங்களிலும் எனக்கு கிடைத்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் லட்சக்கணக்கான பக்கங்களில் முதலாளித்துவத்தை தியரிட்டிக்கலாக விளக்குகிறார்கள். ஆனால் உங்களுக்கு இம்மாதிரி கிடைக்கும் தனிப்பட்ட அனுபவங்களில்தான் முதலாளித்துவத்தின் முழுவீச்சை உணரமுடியும். எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற நம்பிக்கையை ஒரு நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது. காண்ட்ராக்ட் காலம் முடிந்த நிலையில் ஒப்பந்தத்தை அவர்கள் நீட்டிக்கவில்லை. அந்நிலையில் ஒரு சிறு உதவிக்காக வைஸ் பிரெசிடெண்டுக்கு அனுப்பியிருந்த மடலுக்கு எப்படி பதில் வந்தது தெரியுமா. “நீங்கள் எங்கள் ஊழியராக இல்லாதபோது நாங்கள் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்?”

“சாப்பிட்டீர்களா?” என்று விசாரித்த முதலாளிகள் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறார்கள். “தூங்கினீர்களா?” என்று இதுவரை யாருமே கேட்டதில்லை. அப்படி கேட்ட முதலாளி யாருக்காவது வாய்த்திருக்கிறார்களா? – இந்த கேள்விக்கான பதிலை சொல்ல சிந்திக்கும்போதுபோது, மேலதிகமாக உங்கள் நினைவுக்கு வரும் சம்பவங்களின் அடிப்படையில் உங்களுக்கு ஓரளவுக்கு ‘முதலாளித்துவம்’ புரிபடலாம்.

உங்களை இரண்டே இரண்டு கேட்டகிரியில்தான் அடைக்க முடியும். ஒன்று நீங்கள் கம்யூனிஸ்டாக இருப்பீர்கள் (அது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்). அல்லது நீங்கள் முதலாளியாக இருப்பீர்கள் (அதுவும் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்). உலகமயமாக்கல் மிக புத்திசாலித்தனமாக இந்த இருவர்க்க நேரெதிர் வேறுபாட்டினை நாமே அறியாதவகையில் ஏராளமான அடுக்குகளை இடையில் ஏற்படுத்தி உருவாக்கியிருக்கிறது. இதுவரை நாம் அறிந்ததிலேயே வெகு சிறப்பான நரித்தந்திர சோசியல் என்ஜினியரிங் கட்டுமானம் உலகமயமாக்கல்தான். மனிதவள மேலாண்மை என்கிற சொல்லைவிட பெரிய ஏமாற்றுவேலையோ, புரட்டோ வேறு எதுவுமில்லை. முழுக்க முழுக்க முதலாளிகளின் நிர்வாக வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் இவை.

முதலாளிகள் முதலாளிகளாக இருப்பதற்கு அவர்களுடைய தர்மப்படி சில நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை நான் முதலாளியாக மாறினால் அது எனக்கும் புரிபடலாம்.