25 ஜனவரி, 2017

சைலேந்திரபாபு

செம்மொழி மாநாட்டுக்கு கோயமுத்தூர் போயிருந்தபோது, அங்கே கமிஷனராக இருந்த சைலேந்திரபாபுவுக்கு சினிமா ஹீரோவுக்கான இமேஜ் இருந்ததை நேரில் கண்டேன். ஜீப்பில் அவர் வரும் வழியில் எல்லாம் மக்கள் சாலையோரமாக நின்றுக்கொண்டு அவரைப் பார்த்து மகிழ்ச்சியாக கையசைக்கிறார்கள். இவரும் புன்னகைத்தவாறே சல்யூட் செய்தவாறே போய்க் கொண்டிருக்கிறார்.

சைலேந்திரபாபு எங்கே போனாலும் இளைஞர்களின் அன்பை வெகுவிரைவில் பெற்று விடுவார். மற்ற போலிஸ் அதிகாரிகளை போல இல்லாமல், இளைஞர்களோடு இளைஞனாய் பழக முயற்சிப்பதே இதற்கு காரணம்.

அவர் சென்னையில் பணியாற்றியபோதே தூரத்தில் இருந்து கவனித்திருக்கிறேன். பொதுக்கூட்டங்களில் பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிடுவதற்காக வருவார். உயரதிகாரிகளின் வழக்கமான பந்தாவெல்லாம் காட்டாமல் கான்ஸ்டபிள் மாதிரி களத்தில் இறங்கி தன் கைகளையே லத்தி மாதிரி பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்துவார்.

‘புதிய தலைமுறை’ இதழில் புதியதாக தொடர்கள் கொண்டுவர ஐடியாக்கள் கேட்டிருந்தார் ஆசிரியர் மாலன். ‘Memoirs of a Action Hero’ என்றொரு ஒருவரி ஐடியா கொடுத்திருந்தேன். ‘யாரை எழுதவைக்கலாம்?’ என்று ஆசிரியர் கேட்டதற்கு, யோசிக்காமல் ‘சைலேந்திரபாபு’ என்றேன். சிறுவயதிலிருந்தே அவர் எனக்கு ஹீரோ. அவரைப் பற்றி செய்தித்தாள்களில் அவ்வளவு வாசித்து impress ஆகியிருந்தேன்.

‘எழுதுவாரா?’ என்று கேட்டார் ஆசிரியர். ‘கேட்டு பார்ப்போம் சார். சில புத்தகங்கள் எழுதியிருக்காரு. நல்லா விக்குது’ என்றேன். அதோடு மறந்துவிட்டேன்.

ஆனால்-

எங்கள் ஆசிரியர் அதை நினைவில் நிறுத்தி வைத்து, சில மாதங்கள் கழித்து சைலேந்திரபாபுவிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி என்னையும் ஐ.ஜி.ஆபிசுக்கு வரச்சொல்லி இருந்தார்.

‘நீங்க எங்க பத்திரிகைக்கு ஒரு தொடர் எழுதணும்’ என்று மாலன் சார் கேட்டதுமே மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.  ‘இவரு உங்களோட கோ-ஆர்டினேட் பண்ணிப்பாரு. எங்களோட சீனியர் ரிப்போர்ட்டர்’ என்று என்னை அறிமுகம் செய்தார்.

என்னைப் பற்றி நிறைய கேட்டார். போலிஸ்காரர் அல்லவா? துருவித்துருவி விசாரித்தார். நான் கேட்காமலேயே அவரைப் பற்றி சொன்னார். அவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர் என்கிற விஷயம் ஆச்சரியமாக இருந்தது. நான் அவரை சந்தித்தபோதுகூட முனைவர் பட்டத்துக்காக நிறைய படித்துக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு ஒரு வாரம் கழித்து சைலேந்திரபாபுவை பார்க்கப் போனேன். அவர் சொல்ல, நான் எழுத்தாக்கம் செய்வதாக ஏற்பாடு. தொடருக்கு ‘எழுந்திரு, விரைந்து’ என்று மாலன் சார் தலைப்பு கூட வைத்து விட்டார். கொஞ்சம் விடலைத் தோற்றத்தில் இருந்ததாலோ என்னவோ சைலேந்திரபாபுவுக்கு ‘ஒழுங்காக எழுதுவேனா?’ என்று என் மீது சந்தேகம் இருந்திருக்கக்கூடும். ‘இதுவரை பத்திரிகைக்கு எழுதியதில்லைங்க. சரியா வருமா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். ‘நான் வேணும்னா ஒரு அத்தியாயம் எழுதிக் கொடுக்கறேன் சார். சரியா வருதுன்னு நெனைச்சீங்கன்னா எழுதுங்க’ என்றேன்.

Discpline அவருக்கு மிகவும் முக்கியம். அதைவிட தன்னுடைய வேலையை தானே செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர். ஐஜி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியாக இருந்தாலும், சின்ன சின்ன வேலைகளைகூட அவரே செய்தால்தான் அவருக்கு திருப்தி. ‘தாகமா இருக்கா? தண்ணீ வேணுமா?’ என்று கேட்டு அவரே எழுந்துப்போய்தான் வாட்டர் பாட்டில் எடுத்து வந்து தந்தார். தன்னுடைய உதவியாளர்களை பெல் அடித்து அழைக்கவில்லை. ‘முதல் அத்தியாயமாக உங்களுடைய இந்த பண்பையே எழுதுவோம்’ என்றேன். ஒப்புக்கொண்டு, அவர் சர்வீஸில் சந்தித்த ஒரு இளைஞனைப் பற்றி சொன்னார்.

அலுவலகத்துக்கு வந்து மடமடவென்று ‘மானே தேனே’ சேர்த்து எழுதிப் பார்த்தேன். சும்மா விர்ரென்று வந்திருப்பதாக பட்டது. பிரிண்டவுட் எடுத்துக் கொண்டு அன்று மாலையே அவர் அலுவலகத்துக்கு ஓடினேன். ‘பக்கா, பிரில்லியண்ட்!’ என்றார். என் மீது அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ‘அடுத்த வாரம் வாங்க. நாலஞ்சு சாப்டர் எழுதி வெச்சுக்கலாம். நான் வேலை விஷயமா வெளியூர் போக வேண்டியிருக்கு’ என்றார்.

அவர் சொன்ன மாதிரியே அடுத்த வாரம் போனேன். மேலும் சில விஷயங்கள் சொன்னார். ஐந்து அத்தியாயம் தேறிவிடும் என்றதுமே திருப்தியானார். ‘எனக்கு இந்த ரூல்ஸெல்லாம் தெரியலை. ஐபிஎஸ் இதுமாதிரி பத்திரிகையில் தொடர் எழுதலாமா? இறையன்பு எல்லாம் எப்படி எழுதுறாரு. யார் கிட்டேயாவது பர்மிஷன் வாங்கணுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. ‘இறையன்பு சாருக்கு போன் போட்டு கேட்டு சொல்லட்டுங்களா?’ என்றேன். ‘வேணாம். வேணாம். நானே பார்த்துக்கறேன். நான் ஓக்கேன்னு சொன்னதுமே விளம்பரம் கொடுங்க’ என்றார்.

மீதி அத்தியாயங்களை எழுதி தயார் செய்து காத்திருந்தேன். அடுத்த சில வாரங்களுக்கு அவரிடமிருந்து அழைப்பு இல்லை. நானாக அழைத்துக் கேட்டேன். ‘கொஞ்சம் தயக்கமா இருக்கு கிருஷ்ணா. இப்போ தொடர் வந்துச்சின்னா பிராப்ளம் ஆக வாய்ப்பிருக்கு. ஏன்னா, சில விஷயங்களை சில பெயர்களை சொல்லி சொன்னாதான் சரியா இருக்கும். சர்வீஸ்லே இருக்குற நான் அப்படி செய்யுறது சரிவராது. சாரி!’ என்றார்.

அவருடைய அப்போதைய நிலைமை புரிந்தது. ஆனால், எனக்கு ஓர் அருமையா தொடர் மிஸ் ஆகிவிட்டதே என்று ஆதங்கம். அந்த தொடரை அவர் எப்போதாவது எழுத நினைத்தால், என்னை அழைப்பார் என்று இன்றுவரை காத்துக் கொண்டிருக்கிறேன். அல்லது அவர் ஓய்வு பெறுகிறார் என்கிற தகவல் கிடைத்தால், நானே அவரை தொடர்பு கொண்டு கேட்பேன்.

இன்றுவரை அச்சு மை காணாமல் என்னுடைய ஜிமெயில் ஃபோல்டரில் உறங்கிக் கொண்டிருக்கும் ‘எழுந்திரு, விரைந்து’ தொடரின் முதல் அத்தியாயத்தை மட்டும் இங்கே பிரசுரம் செய்கிறேன் (இதில் வில்லங்கமாக எதுவுமில்லை என்பதால் சைலேந்திரபாபு சாரிடம் அனுமதி கேட்காமலேயே பதிப்பிக்கிறேன்).

சல்யூட்

ஒரு ஊரில் பெரிய பணக்காரர் இருந்தார். தங்கமும், வைரமும், வைடூரியமாக செல்வச்செழிப்பு. மனநிம்மதியை தவிர அனைத்தும் அவரிடம் இருந்தது. அப்போது அவர் இருந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். அவரிடம் தன்னுடைய பிரச்சினையை சொன்னார். தானும் மற்றவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுமாறு கேட்டார்.

கனமான மூன்று கற்களை பையில் போட்டு அவரிடம் கொடுத்து, முதுகில் சுமந்து தன்னோடு வருமாறு கேட்டுக் கொண்டார் மகான். கற்களின் கனம் தாங்காமல் மகானின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவரால் வரமுடியவில்லை.

“ஒரு கல்லை தூக்கிப் போட்டுவிட்டு, இரண்டு கல்லை சுமந்துவா” என்றார் மகான். முன்பை விட வேகமாக நடக்க முடிந்தது. ஆனாலும் கொஞ்ச தூரம் சென்றதும் முதுகிலிருந்த சுமை அழுத்த விரைவில் களைப்பு அடைந்தார்.

“இன்னொரு கல்லையும் தூக்கி போடு”

இப்போது பணக்காரரின் முதுகில் இருந்தது ஒரே ஒரு கல்தான். முன்பை விட வேகமாக நடக்க முடிந்தது. ஆனால் இப்போதும் ஒருகட்டத்தில் சுமைதாங்காமல் களைப்படைந்தார். மீதியிருந்த ஒரு கல்லையும் மகான் தூக்கிப்போட சொல்ல, எந்த சிரமமுமின்றி பணக்காரர் வெறும் பையை எடுத்துக்கொண்டு அவரோடு செல்லவேண்டிய இடத்துக்கு நடந்துவந்தார்.

மகான் சொன்னார். “பணமோ, கல்லோ. எதை சேர்த்து வைத்தாலும் அது சுமைதான். சுமைகளற்ற பயணமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம்”

கல்லூரிப் பருவத்தில் வாசித்த ஜென் கதை. இந்த கதை வேறு வடிவில் Spring, Summer, Fall, Winter என்றொரு கொரிய திரைப்படத்திலும் வருகிறது. இயக்குனர் கிம்-கி-டுக் இயக்கிய படம். நீங்களும் பார்த்திருக்கலாம். பசுமரத்தாணி போல நெஞ்சில் என்றும் நிற்கும் கதை இது. அவ்வப்போது நினைவுக்கு வரும். என்னிடம் இருக்கும் சுமைகள் என்ன, என்னவென்று யோசித்து அவைகளை களைய அவ்வப்போது முற்படுவேன்.

சமீபத்தில் கச்சத்தீவு சென்றிருந்தேன். காவல் பணி நிமித்தமாக. கடலோர காவல் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கிறேன். இலங்கை, இந்தியா இரு நாட்டு மக்களும் அந்தோணியார் கோயில் திருவிழாவுக்காக ஆயிரக்கணக்கில் குழுமியிருக்கிறார்கள். அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. கண்ணில் படும் ஒவ்வொரு மனிதரையும் எங்களது கண்கள் ‘ஸ்கேனர்’ போல ஊடுருவும். பொதுவாக முதல் பார்வையிலேயே தெரிந்துக் கொள்வோம். இவர் சாதாரணமானவரா அல்லது ஏதேனும் வில்லங்கம் செய்ய வாய்ப்புள்ளவரா என்று. சந்தேகப் படுபவர்களை மட்டும்தான் தனியாக விசாரிப்போம். எங்களது விசாரிப்புக்கு அவர் சொல்லும் பதிலிலேயே எங்களுக்கு விஷயம் புரிந்துவிடும். காவல் பணியில் இருப்பவர்களின் மனதைவிட சிறப்பாக கணக்குபோடும் கம்ப்யூட்டர் இன்னமும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காவல்பணியில் எவ்வளவு மனிதர்களை பார்த்திருக்கிறேன். எவ்வளவு மறக்க முடியாத சம்பவங்கள். எவ்வளவு நினைவுகள்?

அப்போதுதான் திடீரென்று எனக்கு மேலே சொன்ன கதை நினைவுக்கு வந்தது. சட்டென்று வெளியில் தெரிவதைப் போன்ற சுமைகள் எதுவும் என்னிடமில்லை. நினைவுகளை சுமையென்று சொல்லலாமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் மனதில் தங்கிய நினைவுகளை இறக்கிவைத்தால் தேவலை என்றொரு எண்ணம். புதிய தலைமுறையிடம் சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தாம் கற்றதை மற்றவர்களோடு பகிர்வதை விட விருப்பமான செயல் வேறென்ன இருக்க முடியும்?

கற்பித்தல் மட்டுமல்ல கற்பதும் கலைதான். நான் கற்றதை உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் கற்றதை எனக்கு சொல்லுங்கள். எனக்கும் உங்களுக்குமான பிரத்யேக உரையாடலுக்கு இத்தொடர் பயன்படட்டும்.

கடலோர மீனவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமீபத்தில் நடந்தது. அதன் பொருட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமாரிக்கு சைக்கிள் பயணம். இந்திய கடற்படை வீரர்களோடு, கடலோர காவல் பணியில் இருக்கும் காவலர்களும் பங்கேற்றார்கள்.

வெயில் சுட்டெரிக்கவில்லை. இருந்தாலும் கொஞ்சம் கடினமான பயணம்தான். கன்னியாகுமரியை குறிவைத்து சைக்கிளை மிதமாக மிதித்துக் கொண்டிருக்கிறோம். கடலூர் வருகிறது. ஊரின் பெயர் பலகையை கண்டதுமே அந்த இளைஞனின் முகமும் நினைவுக்கு வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் வீடியோ காட்சிகளாய் மனதில் ஓடுகிறது.

அப்போது கடலூரில் எஸ்.பி.யாக பணி புரிந்துக் கொண்டிருந்தேன். அம்மாவட்டத்தில் சாராயம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம். இரவு பகலாக சாராயம் காய்ச்சுபவர்களையும், விற்பவர்களையும் துரத்திப் பிடிப்பதுதான் வேலை. சினிமாக்களில் போலிஸை காட்டுவது மாதிரி ஆக்‌ஷன் காட்சிகள் பலவும் எங்கள் நிஜவாழ்விலேயே நடந்திருக்கிறது. ஆற்றுப் படுகைகளில் காய்ச்சுவார்கள். காவல்துறையினரின் தடிகளால் உடையாத சாராயப் பானைகளே அங்கே எந்த கிராமத்திலும் இல்லை.

இம்மாதிரியான சூழலில்தான் அங்கிருந்த ஒரு கிராமத்தில் அந்த இளைஞனை சந்தித்தேன் (ஊரும், பெயரும் வேண்டாமே. இப்போது அவர்களுக்கு இது சங்கடத்தைத் தரலாம்). சிவில் என்ஜினியரிங் டிப்ளமோ படித்திருந்தான். அந்த ஊரிலேயே அதிகம் படித்தவன் அவன்தான் என்று தெரிந்தது. படித்து விட்டோம். நகருக்கு இடம்பெயர்ந்து ஏதேனும் வேலையில் சேர்ந்து சம்பாதித்து, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று அவன் எண்ணவில்லை. சாராய அரக்கனிடம் மாட்டிக்கொண்ட தன்னுடைய ஊரை காப்பாற்ற நினைத்தான்.

சாராயம் காய்ச்சுபவர்களையும், விற்பவர்களையும் குறித்து அவ்வப்போது எங்களுக்கு தகவல் கொடுப்பான். ஒருகட்டத்தில் போலிஸ் இன்ஃபார்மர் என்பதையே தன்னுடைய தொழிலாக எடுத்துக் கொண்டான். இன்ஃபார்மர்களுக்கு அவரவர் தரும் தகவலின் அடிப்படையில் ஊக்கத்தொகை மாதிரி வழங்குவோம். அவனுடைய படிப்புக்கு ஏற்ற வருமானம் இல்லையென்றாலும், சமூகப் பணியையும் சேர்த்து செய்கிறோம் என்கிற திருப்தியில் எங்களோடு இணைந்து பணியாற்றினான். அவனுடைய உதவியோடு வெற்றிகரமாக பல கிராமங்களில் கள்ளச்சாராயத்தை ஒழித்தோம்.

பணிநிமித்தமாக சில முறை சந்தித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து பெரிய பழக்கமில்லை. ஆனால் பார்த்ததுமே பச்சக்கென்றுன் மனதில் ஒட்டிக்கொள்கிற உருவம். பழகுவதில் அவனுடைய பாங்கு அலாதியானது. நேர்த்தியாக உடை அணிவான். காவல்துறையிலேயே சேர்ந்து பணியாற்ற அவனுக்கு ஆர்வமிருந்தது என்று நினைக்கிறேன்.

ஒருநாள் அதிகாலை வேளையில் அந்த அகாலமான செய்தி வந்தது. ‘அவன்’ கொல்லப்பட்டு விட்டான். தங்களது குற்றநடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவலர்களோடு இணைந்து செயல்படுகிறான் என்று அவனை படுகொலை செய்துவிட்டார்கள் சமூகவிரோதிகள். மனது கேட்கவில்லை. அவனது மரணத்துக்கு நேரில் மரியாதை செலுத்த கிளம்பினேன்.

எளிமையான வீடுதான். அரைகுறையாக கட்டி பாதியில் விடப்பட்டிருந்தது. என் நினைவு சரியென்றால் கூரைப்பகுதி வேலை மட்டும் பாக்கியிருந்தது. விசாரித்ததில் அந்த வீடு முழுக்கவே அவனுடைய உழைப்பில் உருவானது என்றார்கள். வேறொருவரின் உதவி துளி கூட இல்லையாம். செங்கல்லை கூட அவனே சூளையில் சுட்டு உருவாக்கியிருக்கிறான். கதவு, சன்னல்களை அவனே மரம் வாங்கி இழைத்திருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவனே கட்டுவானாம். முடிப்பதற்குள் உயிர் போய்விட்டது. இந்த வீட்டினை கட்டுவது மட்டுமில்லாமல் அவனுடைய அன்றாட வாழ்வில் அவனுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் அவனே செய்துக் கொள்வானாம். உழைப்புக்கு அஞ்சாத இப்படிப்பட்ட ஒருவன் இத்துணை இளம் வயதிலேயே இறந்துவிட்டானே என்று எனக்கு துயரம் தாங்கவில்லை.

அந்த இளைஞனிடம் நான் கற்றதுதான் நம்முடைய சிறுசிறு பணிகளை கூட நாமே செய்துக்கொள்ள வேண்டும் என்பது. நம்முடைய வேலைகளை நாமே செய்து முடித்துக் கொள்ளும்போது கிடைக்கும் நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை.

பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், திருவாசகம் போன்றவற்றுக்கு எளிய நடையில் உரை எழுதி நமக்கு அளித்த சுவாமி சித்பவானந்தாரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ராமகிருஷ்ண குருகுல மரபை சேர்ந்தவர். அவருடைய அறையில் கழிப்பறை, வாஷ்பேஸின் போன்றவற்றை கூட அவரேதான் சுத்தம் செய்வாராம். வரவேற்பறை, படுக்கையறை போன்றவற்றை பெருக்குவதில் தொடங்கி தன் தொடர்பான எந்த வேலையையும் செய்ய சிஷ்யர்களையோ, பணியாட்களையோ அனுமதிக்க மாட்டார். நாம் எப்படி வாழவேண்டுமென்று மகான்கள் வாழ்ந்துக் காட்டியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இக்கலாச்சாரம் உண்டு. ஆனால் இங்கே கூலிவேலை பார்ப்பவர் கூட தன் வீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேறொருவரை கூலிக்கு அமர்த்துகிறார். அலுவலகங்களில் கடைநிலை ஊழியராக பணியாற்றுபவர் கூட தன் வீட்டு வேலைகளை செய்ய பணியாளரை அமர்த்துக் கொள்கிறார். எல்லோருமே யாரையோ சார்ந்து வாழ்கிறோம். சமீபமாக ஏற்பட்டிருக்கும் கலாச்சார மாற்றம் இது.

நம்முடைய கை, கால் உறுதியாக இருக்கும் வரை தன் கையே தனக்குதவி என்று வாழ பழகவேண்டும். உடல் மட்டுமல்ல, நம்முடைய உள்ளமும் உறுதியானது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். இப்போதிலிருந்து முடிந்தவரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துப் பாருங்களேன். உங்கள் வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.


(விரைவோம்)

18 ஜனவரி, 2017

ஒரு கைதியின் டைரி

செப்டம்பர் 22, 1978. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். முதன்முதலாக அவரை திரையில் நடிகராக அவரே கண்ட நாள். அன்றுதான் ‘Pranam Kareedhu’ படம் வெளியானது. அதற்கு முன்பாகவே ‘Punadhirallu’ என்கிற படத்தில் நடித்திருந்தாலும், அது ஓராண்டு தாமதமாகவே வெளியானது.

ஜூன் 10, 1988. சிரஞ்சீவியின் 100வது படமான ‘கைதி நெம்பர் 786’ (தமிழில் ‘அம்மன் கோயில் கிழக்காலே’) வெளியானது. பத்தே ஆண்டுகளுக்குள் நூறு படம் நடித்தவர், அடுத்த ஐம்பது படங்கள் நடிக்க இருபத்தெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். யெஸ், இப்போது வெளியாகியிருக்கும் ‘கைதி நெம்பர் 150’தான் அவரது 150வது படம். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த ‘சங்கர்தாதா ஜிந்தாபாத்’ வெளியாகி மிகச்சரியாக பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையில் தன்னுடைய மகன் ராம்சரண் நடித்த ‘மகதீரா’, ‘ப்ரூஸ்லீ’ படங்களில் கவுரவ வேடங்களில் தோன்றினார்.

சிரஞ்சீவியின் 150வது படத்துக்கு ‘கைதி நெம்பர் 150’ என்று பெயர் வைத்திருப்பதில் ஒரு சுவாரஸ்யமான சென்டிமெண்ட் உண்டு. 100வது படத்திலும் அவர் ‘கைதி’யாக இருந்திருப்பதை கவனியுங்கள். ஆரம்பக் காலங்களில் சிரஞ்சீவிக்கு சிறு சிறு வேடங்கள்தான் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த வாய்ப்புகளை பெறவே அவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

முதல் படமான ‘Pranam Kareedhu’ வாய்ப்புகூட சுதாகருக்கு கிடைத்ததுதான். சுதாகரும், சிரஞ்சீவியும் சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டே ஒன்றாகவேதான் வாய்ப்பு தேடினார்கள். சுதாகருக்கு தமிழில் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஹீரோவாகவே அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. எனவே தன்னை நாடிவந்த தெலுங்குப்பட வாய்ப்புகளுக்கு சிரஞ்சீவியை சிபாரிசு செய்தார்.

1955ல் மொகல்தூரு என்று ஆந்திர வரைப்படத்தில் கூட இடம்பிடிக்க முடியாத அந்தஸ்தில் இருக்கும் சிறு கிராமத்தில் பிறந்தவர் சிரஞ்சீவி. அவருடைய இயற்பெயர் சிவசங்கர வரபிரசாத். அப்பா, அரசுப்பணியில் இருந்தார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே இவருக்கு ‘சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்’ ஆக இருக்க விருப்பம். நாலு பேருக்கு மத்தியில் தான் பளிச்சென்று தெரியவேண்டும், தன்னைப் பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காகவே எங்கு பாட்டுச் சப்தம் கேட்டாலும் டேன்ஸ் ஆட ஆரம்பித்தார்.

அப்போது வெளிவந்திருந்த ‘கேரவன்’ இந்திப்படத்தில் ஹெலன் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்த ‘Piya tu ab to Aaja’ பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடலை பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப தியேட்டருக்கு போவாராம். ஹெலன்தான் சிரஞ்சீவிக்கு டான்ஸ் குரு. இந்தப் பாடல் ரேடியோவில் எங்கு ஒலிபரப்பானாலும், அந்த இடத்தில் அப்படியே ஆட ஆரம்பித்து விடுவாராம். பிற்பாடு படங்களில் சிரஞ்சீவியின் நடனம் சிறப்பாக இருக்கிறது என்று யாராவது பாராட்டினால், சிரித்துக்கொண்டே ‘ஹெலனுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்பார். முறைப்படி அவர் நடனம் கற்றுக்கொண்டதில்லை.

‘நடனம் ஆடத் தெரிகிறது, நடிப்பை கற்றுக் கொண்டால் சினிமாவுக்கு போய்விடலாம்’ என்று நண்பர்கள் சொல்லவே, சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவருக்கு கல்லூரி முதல்வராக இருந்தவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி (ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா). படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே தெலுங்குப் படங்களில் சிறிய வேடங்கள் கிடைத்தது. கல்லூரி முதல்வர் அனுமதிக்க, வரிசையாக நடித்துத் தள்ளிக்கொண்டிருந்தார்.

அதிர்ஷ்ட தேவதை ஆரம்பத்திலேயே சிரஞ்சீவியை ஆசிர்வதித்திருக்க வேண்டும். ஏனெனில், அவர் நடித்த முதல் படத்தின் பிரிவ்யூ காட்சியை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் பாபு, நம்முடைய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் போன்றோர் பார்த்தார்கள். “இந்தப் பையனோட கண்ணு ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு” என்பதுதான் பாலச்சந்தர், சிரஞ்சீவி பற்றி அடித்த முதல் கமெண்ட். தங்கள் படங்களில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் இருவரும் சிரஞ்சீவிக்கு சொல்லி அனுப்பினார்கள். ‘அவர்கள்’ படத்தை தெலுங்கில் ‘இதி கதை காது’ என்று பாலச்சந்தர் எடுத்தபோது, தமிழில் ரஜினி செய்திருந்த வேடத்தை சிரஞ்சீவிக்கு கொடுத்தார். கமல்தான் அங்கும் ஹீரோ.

சிறிய கதாபாத்திரங்களும், வில்லன் வேடங்களுமே சிரஞ்சீவிக்கு தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருந்தன. பாலச்சந்தர் இயக்கிய ‘47 Rojulu’ (தமிழில் ‘47 நாட்கள்’ என்று ரிலீஸ் ஆனது) சிரஞ்சீவியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது. இந்தப் படத்தில் அவர் ஆண்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார். தமிழிலும் ‘காளி’, ‘ராணுவவீரன்’ போன்ற ரஜினி படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்தார். தன்னுடைய ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் ஜூனியர் என்பதால், இவரை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பயன்படுத்துவதை ரஜினி விரும்பினார்.

செகண்ட் ஹீரோ, வில்லன் என்று நடித்துக் கொண்டிருந்தாலும் சிரஞ்சீவியின் ஆக்ரோஷமான நடிப்பு, தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, இவர் இளைஞராக இருந்தார் என்பது அவர்களுக்கு ஆகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஏனெனில், எண்பதுகளின் தொடக்கத்தில் ஐம்பதை தாண்டிய தெலுங்கு ஹீரோக்களே அளவுக்கதிகமான மேக்கப்பில் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். இளமையான செழுமையான ஹீரோயின்களோடு கலர் கலராக அவர்கள் டூயட் பாட, படம் பார்க்கும் ரசிகர்கள் ஆற்றாமையால் மாய்ந்துப் போனார்கள். இந்தக் கொடுமையில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆபத்பாண்டவனாக சிரஞ்சீவி தெரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு சிரஞ்சீவியை ஹீரோவாக போட்டு படம் எடுப்பது வசதியாக இருந்தது. முதலுக்கு மோசமில்லை என்பதையும் தாண்டி கணிசமான லாபத்தை பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த அமாவாசைக்கு ஒரு தொகையை அங்கே இங்கே வாங்கி பூஜையை போட்டு விட்டால், அடுத்த அமாவாசைக்கு படம் ரிலீஸ். சிரஞ்சீவியால், ஒரே மாதத்தில் கையில் லம்பாக பணம் புரண்டது தயாரிப்பாளர்களுக்கு.

இப்படியே போய்க்கொண்டிருந்த சிரஞ்சீவியின் கேரியரில் 1983ஆம் ஆண்டு அடித்தது செம ஜாக்பாட்.
யெஸ், அவரது நடிப்பில் ‘கைதி’ என்கிற படம் சூப்பர்ஹிட் ஆகி சிரஞ்சீவியை முன்னணி நட்சத்திரமாக மாற்றியது. இத்தனைக்கும் அரதப்பழசான பண்ணையாரை எதிர்க்கும் கிராமத்து இளைஞன் கதைதான். ஆக்‌ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ், டான்ஸ் என்று அத்தனை ஏரியாக்களிலும் சிரஞ்சீவி பட்டையைக் கிளப்ப, தெலுங்கின் மாஸ்டர்பீஸ் படங்களின் பட்டியலில் இணைந்தது ‘கைதி’.

அந்த ‘கைதி’க்கு நன்றி செலுத்தும் விதமாகதான் தன்னுடைய நூறாவது படம், நூற்றி ஐம்பதாவது படத்தின் டைட்டில்களில் எல்லாம் ‘கைதி’யை கொண்டுவருகிறார்.

சினிமா குடும்பங்களின் ஆதிக்கம் மிகுந்த தெலுங்கு சினிமாவை, எவ்வித சினிமாப் பின்னணியுமில்லாத எளிய குடும்பத்தில் பிறந்த சிரஞ்சீவி கைப்பற்றி செய்த சாதனைகள் யாரும் நம்ப முடியாதவை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வெளியுலகத்தை காட்டியவர் இவர்தான். ‘டபுக்கு டபான் டான்ஸு’ என்று தெலுங்குப்பட நடனக் காட்சிகள் கிண்டலடிக்கப் பட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றிக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

பழைய பண்ணையார் கதைகளை அழித்தொழித்து, ப்ரெஷ்ஷான கதைக்களன்களை அறிமுகப்படுத்தினார். ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை, விதவிதமான லொக்கேஷன்களுக்கு அழைத்துச் சென்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்தார். வில்லன் மூன்று அடிகள் அடித்தபிறகு, ஹீரோவுக்கு மூக்கில் ரத்தம் வந்தபின்புதான் திருப்பி அடிக்க வேண்டும் என்கிற ஆதிகாலத்து ஸ்டண்ட் கந்தாயங்களை கடாசி எறிந்து, ஆக்‌ஷன் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று ஸ்க்ரீனில் ரணகளமாக்கி காட்டினார்.

இதற்காக சிரஞ்சீவி கமர்ஷியல் ஏரியாவில் மட்டுமேதான் காண்சன்ட்ரேட் செய்தார் என்று முடிவெடுத்து விடாதீர்கள். ஆந்திர அரசின் நந்தி விருதுகள், மத்திய அரசின் தேசிய விருதுகளையும் அவரது படங்கள் குவிக்கத் தவறவில்லை. தமிழில் கமர்ஷியலுக்கு ரஜினி, கலையம்சத்துக்கு கமல் என்று பாகம் பிரித்துக் கொண்டு சினிமாவை முன்னேற்றினார்கள். அதே காலக்கட்டத்தில் தெலுங்கிலோ இரண்டு சுமைகளையுமே சிரஞ்சீவி சேர்த்து சுமந்தார். இந்தியிலும் சில படங்கள் நடித்தார். தமிழில் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ‘ஜெண்டில்மேன்’ படத்தின் இந்திப் பதிப்பில் சிரஞ்சீவிதான் ஹீரோ.

‘கைதி’யில் அவருக்கு கிடைத்த நட்சத்திர அந்தஸ்துக்குப் பிறகு, திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தார். அடுத்த இருபது ஆண்டுகள், மெகாஸ்டாரின் ஆட்சிதான் ஆந்திராவில். அவரது படங்கள் வெற்றி பெறும் போதெல்லாம் அடக்கமாக இருப்பார். தோல்வி அடையும் போதெல்லாம் வீறுகொண்டு எழுவார்.

1991ல் சிரஞ்சீவியின் ‘கேங் லீடர்’, தெலுங்கு சினிமாவின் அத்தனை வசூல் சாதனைகளையும் உடைத்தது. உடனடியாக அவரது ‘கரண மொகுடு’ (தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ படத்தின் ரீமேக்), ‘கேங் லீடர்’ படைத்த சாதனைகளை முறியடித்து, தெலுங்கு சினிமாவின் முதல் பத்து கோடி ரூபாய் வசூல் திரைப்படமாக அமைந்தது. அப்போதெல்லாம் சிரஞ்சீவி படைக்கும் சாதனைகளை சிரஞ்சீவியேதான் உடைப்பார்.

சிரஞ்சீவியின் சாதனைகளுக்கு எல்லாம் சிகரமாக அமைந்தது 1992-ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் ‘ஆபத் பாண்டவடு’ படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம். ஒண்ணேகால் கோடி. இந்தியாவிலேயே, ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை எட்டிய முதல் நடிகர் சிரஞ்சீவிதான். அப்போது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனே எழுபத்தைந்து லட்சமோ என்னவோதான் வாங்கிக் கொண்டிருந்தார். அவ்வகையில் இன்று கோடிகளை குவிக்கும் எல்லா மொழி ஹீரோக்களுமே சிரஞ்சீவிக்குதான் நன்றிக்கடன் பட்டவர்கள்.

தொண்ணூறுகளின் மத்தியில் தெலுங்கு சினிமாவில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டது. புதிய இயக்குநர்கள், இளம் நடிகர்கள் வரவு அதிகமாக இருந்த அந்த காலக்கட்டத்தில் சிரஞ்சிவி ஃபார்முலா படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தன்னுடைய வழக்கமான ஃபைட்டர் தன்மையை வெளிப்படுத்தி ‘ஹிட்லர்’ (1997) மூலமாக மீண்டும் மெகாஸ்டார் இமேஜை தக்கவைத்தார். சிரஞ்சிவீயின் ‘இந்திரா’ (2002), தெலுங்கு சினிமாவின் முதல் முப்பது கோடி வசூல் படமாக அமைந்தது. நம்மூர் ‘ரமணா’வை ‘டாகூர்’ என்று ரீமேக் செய்து, பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு எடுத்துக் காட்டினார். இரண்டாயிரங்களின் மத்தியில் சில சறுக்கல்கள், சில சாதனைகள் என்று கலந்துகட்டி அவரது கேரியர் அமைந்தாலும், ‘மெகா ஸ்டார்’ இமேஜ் உச்சத்தில் இருந்தபோதே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.
பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மெகாஸ்டாரை முழுநீள ஹீரோவாக ‘கைதி நெம்பர் 150’ படத்தில் தரிசிக்கப் போகிறார்கள் அவரது ரசிகர்கள். சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தெலுங்கு சினிமாத் துறைக்கே இது கொண்டாட்டமான சங்கராந்தி. படத்தைப் பற்றி நாம் எதுவும் புதுசாக சொல்ல வேண்டியதில்லை. நம்ம விஜய் நடித்த ‘கத்தி’யின் தெலுங்கு ரீமேக். இவரது உடம்பில் ரத்தம் ஓடுகிறதா, மசாலா ஓடுகிறதா என்று ரசிகர்கள் சந்தேகிக்கும் வண்ணம் கரம் மசாலா ஹிட்டுகளை கசாப்புக் கடை பாய் மாதிரி போட்டுத் தள்ளும் வி.வி.விநாயக்தான் இயக்குநர். நம்ம ‘கத்தி’ அங்கே மேலும் கூர்மைப் படுத்தப்படும் என்று உறுதியாகவே நம்பலாம்.

சினிமா குடும்பப் பின்னணி கொண்ட வாரிசுகள்தான் வெல்ல முடியும் என்கிற நிலைமையை மாற்றியமைத்தவர் அல்லவா? எனவேதான் சிரஞ்சீவியின் வெற்றியை எப்போதும் எல்லோரும் விரும்புகிறார்கள். அதை சாமானியனின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு சுவையான முரண் என்னவென்றால், எந்த கலாச்சாரத்தை எதிர்த்து நின்று சினிமாவில் சிரஞ்சீவி வென்றாரோ, இப்போது அவரது குடும்பமும் அதையேதான் செய்துக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவியின் அடுத்த தலைமுறையில் உருவாகிய இளம் நடிகர்கள்தான் இப்போது தெலுங்கு சினிமாவின் சரிபாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்குமான இந்த முரண்தான், பார்வையாளர்களாக நம் வாழ்வின் ஆகப்பெரிய சுவாரஸ்யமே.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

20 டிசம்பர், 2016

காதல் வழியும் கோப்பை

எச்சரிக்கை : நான் எழுத்தாளன் கிடையாது
 வாசிக்கப் பிடிக்குமே தவிர்த்து, கதைகள் எழுதுவதில் சொல்லிக் கொள்ளும்படி விருப்பம் எதுவுமில்லை. தமிழில் வலைப்பதிவு, வலைப்பூ என்றெல்லாம் சொல்லப்படும் blogகள் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் தினமும் ஏதாவது பதிவு எழுதி தொலைக்க வேண்டிய (இப்போது ஃபேஸ்புக்கில் டெய்லி நாலு ஸ்டேட்டஸ் போட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதை போல) துர்பாக்கிய நிலையில் கிறுக்க ஆரம்பித்தேன்.

தனி நபர்களின் வலைப்பூக்களை திரட்டி அனைவருக்கும் காட்டுவதற்கு அப்போது நான்கைந்து வலைத்திரட்டிகள் இருந்தன. அதில் ஒரு வலைத்திரட்டி மாதாமாதம் சிறுகதைப் போட்டிகள் நடத்தும். சிறுகதை மாதிரியுமில்லாத / கட்டுரை மாதிரியுமில்லாத ஒரு கதையை ஒரு இருநூறு/இருநூற்றி ஐம்பது வார்த்தைகளில் பதிவாக போட்டு, போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.

நம்பவே மாட்டீர்கள். எனக்கு முதல் பரிசே கொடுத்துவிட்டார்கள்.

அதன்பிறகு ஊக்கம் பெற்று அவ்வப்போது எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். வெகுஜன வார இதழ்களில் எப்போதாவது நாலு / ஐந்து பக்கம் எதையாவது fillup செய்ய வேண்டுமென்றால், ‘யுவகிருஷ்ணா கிட்டே ஏதாவது கதை மாதிரி கேளு’ என்று கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.

‘காதல் வழியும் கோப்பை’ என்கிற இந்த முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் அப்படி அவசரத்துக்கு டைப்பப்பட்டவைதான். இதுவரை சிறுபத்திரிகையில் ஒரே ஒரு கதைதான் எழுதியிருக்கிறேன். அதுவும்கூட என் மீது பெரும் நம்பிக்கை வைத்து அண்ணன் வாசுதேவன் ‘அகநாழிகை’யின் முதல் இதழில், ‘கிளி ஜோசியம்’ என்கிற கதையை வெளியிட்டார். ‘அகநாழிகை’ தொடர்ச்சியாக வெளிவராமல் போனதற்கு எவ்வகையிலும் அந்த கதை காரணமல்ல.

ஏதோ தன்னடக்கத்தாலோ அல்லது சுயகழிவிரக்கத்தாலோ நான் எழுதிய கதைகளை நானே தரம் குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் எழுதிய கதைகளின் தரம் என்பது அதன் வாசிப்பு சுவாரஸ்யத்தை நோக்கமாகக் கொண்டு அமைந்தவை. அடிப்படையில் நான் பத்திரிகையாளன் என்பதால், புனைவு எழுத முயற்சித்தாலும் ஒருமாதிரி ரிப்போர்ட்டிங் பாணி வந்துவிடும். வெகுஜன வாசகர்களை நோக்கியே எழுதப்படுபவை என்பதால், வாசிப்பவர்களின் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அபாயம் நிச்சயம் நேராது. படைப்பூக்கம், வாழ்வியல் தரிசனம், கவித்துவத் தருணம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் அவலம், இத்யாதி இத்யாதி இலக்கிய விபத்துகள் எதுவும் என் கதைகளை வாசிப்பவர்களுக்கு நேராது என்பதற்கு மட்டும் உறுதி தருகிறேன். மிகக்குறைந்தபட்ச உத்தரவாதமாக இந்த கதைகளை படிக்கும் யாருக்கும் பைத்தியம் பிடிக்காது, தற்கொலை எண்ணம் அறவே வராது என்பதை சவாலாகவே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
பொதுவாக இந்த கதைகளை இணைய இதழ்களில் / வார இதழ்களில் எழுதும்போது பெரும்பாலும் பாராட்டுகளையே பெற்றிருக்கிறேன். யாரும் விமர்சித்ததில்லை. இலக்கியம் என்கிற அந்தஸ்தை கோரும்போதுதான் விமர்சனம் என்கிற வன்முறையை சந்திக்க நேர்கிறது. கதை காரணமாக அல்லாமல் அதை எழுதியவன் நான் என்பதால் ஓரிருவர் திட்டியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரே ஒரு சுமாரான கதைகூட எழுத வக்கற்றவர்கள் என்பதால், அவர்களுடைய வசவுகள் எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று எனக்கு நானே ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டேன்.

சீரியஸாக எதையேனும் எழுத முயற்சித்தாலும் கூட என்னுடைய தனித்துவமான இயல்பான விடலைத்தனம் அதை குலைத்து விடுகிறது. என்னுடைய இந்த பண்பினைகூட, நான் எழுதிய முதல் நாவலான ‘அழிக்கப் பிறந்தவன்’ வாசித்துவிட்டு ஜெயமோகன்தான் கண்டுபிடித்துச் சொன்னார். நான் எப்படி இருக்கிறேன் என்பதை நானே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எப்படிப்பட்ட மக்கு பிளாஸ்திரியாக இருக்கிறேன் பாருங்கள். எனக்கு புனைவு ஆற்றல் கொஞ்சம் குறைவு என்பதால் பார்த்த/கேட்ட/கேள்விப்பட்ட விஷயங்களை கதைகளாக மாற்ற முயற்சித்திருக்கிறேன். ‘முகம்மது பின் துக்ளக்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்‌ஷன் கற்றுக் கொள்ள முயற்சி’ என்று சோ, தன்னுடைய பெயரை போட்டார். அதுபோல ‘கதை எழுத முயற்சி’ என்று இந்த தொகுப்பினை எடுத்துக் கொள்ளலாம். எனக்கு கதை எழுதத் தெரியும் என்று நானே நம்பாதபோது, என்னை எழுத்தாளன் என்று நம்பி தொடர்ச்சியாக ஊக்குவித்துக் கொண்டிருப்பவர் அண்ணன் கே.என்.சிவராமன். இவரைப் போலவே யெஸ்.பாலபாரதிக்கும் என் மீது நிறைய நம்பிக்கை உண்டு. இவர்களைப் போன்ற அண்ணன்கள் இல்லையேல் நான் இல்லை.

‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர். பதிப்பு என்பதை பிசினஸாக பார்ப்பவரல்ல. அவருக்குள்ளும் ஒரு விடலை உண்டு. “ஏன் இதையெல்லாம் புக்கா போடக்கூடாதா? போட்டா படிக்க மாட்டாங்களா?” என்று வீம்புக்காகவே நிறைய புத்தகங்களை பதிப்பித்தவர். ‘சரோஜாதேவி’ என்கிற என்னுடைய கட்டுரைத் தொகுப்பை அப்படிதான் பதிப்பித்தார். தன்னுடைய நண்பர்களை கவுரவப்படுத்தவே பல புத்தகங்களை பதிப்பிக்கும் தாராளமயவாதி அவர். யுவகிருஷ்ணாவின் நூலை பதிப்பித்தால் லாபம் வரும் என்றெல்லாம் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல், நட்பு கருதி மட்டுமே “ஏதாவது புக்கு கொடுங்களேன்” என்று கேட்கக் கூடியவர். இந்த நூலையும் நட்பு அடிப்படையில்தான் கொடுத்திருக்கிறேன், அவரும் பதிப்பிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, “நான் உங்களோட புக்கை போட்டுட்டேனா, நீங்க எனக்கு ஜென்ம விரோதி ஆயிடுவீங்க’ என்று சவால் விட்டார். அவருடைய கடந்தகால அனுபவங்கள் அப்படி. இன்று அவரை ஃபேஸ்புக்கில் திட்டிக் கொண்டிருக்கும் பல இளம் எழுத்தாளர்களும், ஒரு காலத்தில் ‘என்னோட புக்கை போடுங்க’ என்று அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவர்கள்தான். அந்த பழைய வரலாறு தொடர்பான ஆவணங்களுக்கு இன்றும் ஆதாரமாக இருக்கக்கூடிய போட்டோக்களை பார்த்தாலே தெரியும். அதிமுக அமைச்சர்கள் மாதிரி பணிவாக மனுஷ்யபுத்திரனோடு போஸ் கொடுத்திருப்பார்கள். நான் எந்த காலத்திலும் ‘எழுத்தாளர்’ என்கிற அந்தஸ்தை ‘பதிப்பாளர்’ என்கிற முறையில் அவரிடம் கோரவே மாட்டேன். மனுஷ்யபுத்திரனுக்கு நண்பன் என்பதைவிட அதெல்லாம் பெரிய கவுரவமில்லை. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை பிரசுரிக்கிறார் என்பதால் அவருக்கு நன்றி எதுவும் சொல்லப் போவதில்லை. வேண்டுமென்றால் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாலு பேர் கூடுதலாக அவரை திட்டுவதற்குதான் இந்த புத்தகம் பயன்படப் போகிறது.

ரைட்டு. கதைகளுக்கு வருவோம். கதை என்று நினைத்து நான் எழுதிய பல கதைகள் தேறவே தேறாது என்கிற சுயதணிக்கை செய்து, அப்படி இப்படி பீராய்ந்து தேற்றிய கதைகள்தான் இவை. ஒரு பக்கக் கதைகளை தவிர்த்திருக்கிறேன். ‘தினகரன் வசந்தம்’ இதழில் எழுதிய ‘நீலவேணி’ என்கிற தொடர்கதையை இந்தத் தொகுப்பில் ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை. அது கொஞ்சம் நீளமான கதையென்று தொகுக்கும்போது தோன்றியதா என்றும் எனக்கு நினைவில்லை.

இவற்றில் சில கதைகள், எனக்குள் சில பசுமையான நினைவுகளை மலரவைக்கின்றன.

விகடன் குழுமம், ‘டைம்பாஸ்’ இதழுக்கு முன்னோட்டமாக ‘யூத்ஃபுல் விகடன்’ என்றொரு இணையத் தளத்தை தொடங்கியபோது, அதில் ஆரம்பக் கட்டத்தில் நிறைய எழுதினேன். ‘காதலித்த கதை’, ‘நாய் காதலன்’, ‘இன்டர்நெட் ரோமியோ’ போன்றவை அதில் எழுதியவைதான்.

‘புதிய தலைமுறை’ இதழ் கதைகளை வெளியிடுவது கிடையாது. அனேகமாக அந்த வார இதழில் நான் மட்டும்தான் கதை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த கதை ‘புரட்சியும் பூர்ஷ்வாவும்’.

நண்பர் மை.பாரதிராஜா, ‘சூர்யக்கதிர்’ இதழைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொது நிறைய கதைகளை வாங்கி வெளியிட்டிருக்கிறார். “தலைவா, ஒரு மூணு பேஜ் பார்சல் பண்ணுங்க” என்று கேட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பார்சல் செய்துவிடுவேன்.

ஆனந்த விகடனில் முதன்முதலாக ‘அசோகர் கல்வெட்டு’ என்கிற சிறுகதையை எழுதினேன். ஹாசிஃப்கான் முதன்முதலாக ஒரு கதைக்கு சித்திரம் போட்டது அந்த கதைக்குதான் என்று ஞாபகம்.
ஒரு நள்ளிரவு 12 மணிக்கு ‘சூடாமணி சிறுகதைகள்’ வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் தாய்மை தொடர்பான ஒரு கதையை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னை நானே தாயாக உணர்ந்தேன் (எழுத்தாளன்னா இப்படியெல்லாம் உட்டாலக்கடி விடணும்). யதேச்சையாக அந்த கதை எழுதப்பட்ட வருடத்தைப் பார்த்தால் 1963ல் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியானது என்கிற குறிப்பு இருந்தது. ஐம்பது ஆண்டுகள் கழித்து வாசித்து நான் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தேன். அதை அப்படியே 2013க்கு ரீமேக் செய்து எழுதினேன். ஒன்றரை மணி வாக்கில் எழுதி முடித்தபிறகுதான் மனசு கொஞ்சம் ஆசுவாசமானது. யதேச்சையாக பார்த்தபோது விகடன் ஆசிரியர் ஆன்லைனில் இருந்தார். “உங்க பத்திரிகையில் ஐம்பது வருஷம் முன்னாடி வந்த கதையோட இன்றைய வெர்ஷன்” என்று சும்மா அவருக்கு தட்டிவிட்டேன். படித்துவிட்டு, “டேய் உனக்கு இப்படி லேடீஸ் மாதிரி கூட எழுதவருமாடா?” என்று கேட்டவர், “இதை நான் எடுத்துக்கறேன்” என்றார். அண்ணன் கேட்டால் மறுக்க முடியுமா? அப்படியே கொடுத்துவிட்டேன். கிட்டத்தட்ட ஓராண்டு கழித்துதான் அந்த கதை பிரசுரமானது. ‘தாய்வாசம்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷலான கதை. எனக்கு எப்படி எழுத வராதோ, நான் எப்படி எழுத விரும்பமாட்டேனோ அப்படி எழுதப்பட்ட கதை. இக்கதையின் முடிவில் வரும் ‘நாடகம்’ வேண்டுமென்றே வலிந்து சொருகப்பட்டது. என்னுடைய சொந்த அனுபவமும் கதையில் உண்டு. நான் ஆச்சரியப்படும் அண்ணன் ஒருவரையும் ஒரு கேரக்டராக (அவரது சொந்தப் பெயருடனேயே) கதைக்குள் நுழைத்திருந்தேன்.

ஒருமுறை மனுஷ்யபுத்திரனிடம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாகவே ஒரு தொடர்கதை எழுதுவதாக சவால் விட்டேன். தினம் ஒரு பத்தி என்று ஒரு மாதத்துக்கு ஸ்டேட்டஸாகவே போட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு மேல் முடியவில்லை. அந்த கதையை பிற்பாடு ‘பாம்பு புகுந்த காதை’யாக கொஞ்சம் நீண்ட கதையாக எழுதி முடித்தேன்.

ஒருவேளை இந்த நூலை நீங்கள் வாங்கிப் படிக்கப் போகிறீர்கள் என்றாலும் இதெல்லாம் தேவையில்லாத தகவல்கள்தான். இருந்தாலும் எனக்கு நானே சும்மா ரீவைண்ட் செய்துக்கொள்ள இதையெல்லாம் எழுதித் தொலைக்க வேண்டியதாக இருக்கிறது.
டிசம்பர் 23, 2016 அன்று நூல் வெளியாகிறது.

இப்போதே இணையத்தில் நண்பர்கள் கதிரேசனும், குகனும் அட்வான்ஸ் புக்கிங் செய்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வாங்கியேதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தப் போவதில்லை. வாங்குவதாக இருந்தால் வாங்குங்கள். மேலே குறிப்பிட்ட மாதிரி இந்த நூலை வாசிப்பதால் உங்களுக்கு விபத்து கிபத்து எதுவும் நேர்ந்துவிடாது. அதேபோல வாசிக்காமல் மிஸ் செய்துவிட்டாலும் யாரும் தலையை வாங்கிவிடப் போவதில்லை.


நண்பர் கதிரேசன் சேகர் மூலம் தொலைபேசியில் வாங்க அழைக்கவும் 8489401887. VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....


பின்குறிப்பு : நூலின் பின்னட்டையில் எழுதப்பட்ட வாசகங்களை கண்டு அஞ்சிவிடாதீர்கள். மனுஷ்யபுத்திரன் என்னை பாராட்டி கவிதை எழுதியிருக்கிறார்.

13 டிசம்பர், 2016

சென்னையும் மரங்களும்


வர்தா புயலின் கோரத்தாண்டவத்துக்கு பிறகுதான் ‘சென்னையில் இத்தனை மரங்களா?’ என்று ஃபேஸ்புக்கில் அத்தனை பேரும் ஆச்சரியப்படுகிறார்கள். ரோட்டில் நடக்கும்போதும் மொபைலில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டே போனால் இப்படிதான். மரங்கள் மட்டுமல்ல மனிதர்கள் இருப்பதும் கூட தெரியாது.

வெளியூரிலிருந்து வருபவர்கள் சென்னையை பாலைவனம் என்று விமர்சிக்கும்போது சுருக்கென்று குத்தும்.

எந்த நகரத்துக்கு போனாலும் சென்னை மாதிரிதான் இருக்கிறது, அப்புறம் ஏன் சென்னையை மட்டும் இப்படி தனித்துக் குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

பல்லாவரம், பரங்கிமலை உச்சியில் ஏறிப் பார்த்தால் சென்னை என்னவோ பசுமையானதாகதான் எனக்குத் தோன்றுகிறது.

இத்தனைக்கும் ஆசியாவிலேயே ஒரு நகருக்கு மத்தியில் மிகப்பெரிய காடு இருக்கிறது என்றால், அது சென்னையில்தான்.

நவம்பர், டிசம்பர் மாலை வேளைகளில் கிண்டி, வேளச்சேரி பக்கமாக போனால் ஏதோ மலைவாசஸ்தலத்தில் இருப்பதைப் போன்ற சில்லிப்பை உணரலாம்.

எனக்கு நினைவு தெரிந்த அண்ணாசாலை இருபுறமும் மரங்கள் சூழ பசுமையாக எங்கும் நிழலாகவே இருந்தது.

குறிப்பாக சைதாப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை வரை அவ்வளவு மரங்கள். கே.கே.நகர் சாலைகளில் வெயில் தரையிலேயே படாத வண்ணம் நிழல்குடை.

2000ங்களின் தொடக்கம் வரை திருவான்மியூர் பக்கம் சாலையோரங்களில் நிறைய பனைமரங்கள். இப்போதும் மடிப்பாக்கம் ஏரிக்கரையோரம் நிறைய பனைமரங்களை பார்க்கலாம். வேளச்சேரி, மடிப்பாக்கமெல்லாம் வயலும், மடுவும், சிற்றாறுகளும், காடுகளுமாகதான் இருந்தது.

செல்லம்மாள் காலேஜ் அமைந்திருக்கும் ஹால்டா சிக்னல் பகுதியில் பேருந்துகள் 30 கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஏனெனில் ஆங்காங்கே ‘மான்கள் குறுக்கிடும்’ போர்டு, வனத்துறையால் வைக்கப்பட்டிருக்கும்.

தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி சென்னையில் நடக்கும் வரை வேளச்சேரி சாலையின் இருபுறமும் மரங்களும், புதர்களுமாக அத்தனை பசுமையாக இருந்தது.

சென்னையில் ஒரே ஒரு சந்தனமரம் இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே கவர்னர் மாளிகை வளாகத்தில் காம்பவுண்டை ஒட்டி இருந்தது. அதற்கு தனியாக பாதுகாப்ப்பு சுவரெல்லாம் கட்டியிருந்தார்கள். ஆனால், இரவோடு இரவாக எவனோ ஏணி வைத்து ஏறி வெட்டிக்கொண்டு போய்விட்டான். ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
இப்போதும்கூட அவ்வளவு மோசமென்று எனக்குத் தோன்றவில்லை. அடையாறு, தரமணியெல்லாம் பசுமையாகதான் இருக்கிறது. சிட்டுக்குருவியை காணோம், தூக்கணாங்குருவியை காணோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஓரளவு உண்மைதான். ஆனாலும் இன்னமும் மீன்கொத்தியையெல்லாம் கூட நான் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

சென்னைக்கு புயல்கள் புதிதல்ல. ஆனாலும், இத்தனை மரங்கள் ஒட்டுமொத்தமாக வீழ்வதை பிறந்ததிலிருந்து சென்னைவாசியாக இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன்.

ஏனெனில், மேலே நான் சென்னையின் பழைய மரங்களாக குறிப்பிட்டவை அரசமரம், ஆலமரம், வேம்பு, புளியமரம், பூவரசம், கொடுக்காபுளி, அசோகாமரம், மாமரம், வேலிகாத்தான், ஒதியமரம் உள்ளிட்ட நம் உள்ளூர் சரக்குகள்.
தற்போது வீழ்ந்திருப்பவை பெரும்பாலும் fast growing tress என்று சொல்லப்படும் மேற்கத்திய இறக்குமதிகள். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் NGOக்களாலும், தலைவர்களின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சிகளாலும், அப்துல்கலாம் ரசிகர்களாலும் வைக்கப்பட்டவை.

பார்ப்பதற்கு மரம் போன்று தெரிகிறதே தவிர, இவையெல்லாம் கடல்பாறை செடிகளுக்கு இணையான உறுதியோடுதான் இருந்திருக்கின்றன என்பது வர்தா காற்றில் தெரிந்துவிட்டது. சாலையில் விழுந்த மரக்கிளைகள் மீது வண்டிகள் ஏறினால், கிளைகள் எல்லாம் உடையாமல் கூழாகின்றன என்றால் என்ன அர்த்தம்? இதைப் போய் மரமென்று சொல்லலாமா?

ஒரு வேப்பமரமும், அசோகமரமும் புயலை எதிர்கொள்ளும் தன்மையே அலாதியானது. பெரும் காற்று அடிக்கும்போது தன்னுடைய எடையை குறைத்துக்கொள்ள வேகமாக சிலிர்த்துக் கொண்டு சிறுகிளைகளை அதுவாகவே முறித்துக் கொள்ளும். இதனால் ஒட்டுமொத்த மரமும் வேரோடு வீழாமல் ‘தந்திரமாக’ தப்பித்துவிடும். இந்த புத்திசாலித்தனம் இல்லாத fancy மரங்கள் தேமேவென்று வேரோடு ஏதோ கார் மீது சாய்ந்து செய்தித்தாள்களுக்கு போஸ் கொடுக்கின்றன.

முன்பெல்லாம் வனத்துறையின் நர்சரிகளில் போய் மரங்கள் கேட்டால் நீலகிரி, வேம்பு மாதிரி மருத்துவக் குணங்கள் நிரம்பிய மரங்களை தருவார்கள். இப்போது இந்த அதிவேக வளர்ச்சி மரங்களை தந்துத் தொலைக்கிறார்கள். அதன் விளைவுதான் நகரெங்கும் இருந்த மரங்கள் வீழ்ந்துக் கிடக்கும் காட்சி.

ஒரு கிரவுண்டு மனையில் அரை கிரவுண்டுக்கு வீடு கட்டி நான் வசிக்கிறேன். அமெரிக்க சேட்டிலைட்டுகளால் கூட எங்கள் வீட்டை கண்காணிக்க முடியாத அளவுக்கு 2400 சதுர அடிக்கும் வெயிலே விழாத அளவுக்கு எங்கள் வீட்டை மரங்கள் சூழ்ந்திருக்கின்றன.

என்னுடைய வீட்டில் ஒரு அசோகமரம் இருக்கிறது. 1993ஆம் ஆண்டு வைக்கப்பட்ட அந்த மரத்துக்கு வயது 23. ஆனால், நம் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் வெறும் இரண்டே வயதான ஒரு fast growing மரத்தின் அளவுதான் வளர்ந்திருக்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டு வேலியோரமாக சுயம்புவாக வளர ஆரம்பித்த ஒதியமரம் இன்னும் கூட மரமாக உருவெடுக்கவில்லை.

நம் உள்ளூர் மரங்கள் அத்தனையுமே இப்படிதான். மிக மெதுவாக வளரும். ஆனால், அதனுடைய முதுகெலும்பு மிகவும் வலிமையானது. சுழற்காற்றினைகூட சுலபமாக எதிர்கொள்ளக் கூடியது. ஒரு வேம்பு, மரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர குறைந்தது நான்கு ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால், இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அது நமக்கு நிழல் தந்து, குளிர்ச்சியான காற்று தந்து, பறவைகளுக்கு இருப்பிடம் தந்து வாழ்ந்துக்கொண்டே இருக்கும்.

வர்தா புயல் நமக்கு ஒரு படிப்பினை கொடுத்திருக்கிறது. நம்முடைய நாட்டுக்கட்டை மரங்கள்தான் நமக்கு ஏற்றது. குல்மொஹர் வகையறாக்கள் வெறும் அழகுக்குதானே தவிர, ஆபத்துக்கு உதவாது.

வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி ஆகியவைதான் சாலைகளில் வைக்கக்கூடிய மரங்கள்.

வீடுகளில் நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ போன்ற மரங்களை வளர்க்கலாம்.

உங்கள் வீட்டுக்கு நிறைய பறவைகள் வருகை தரவேண்டும் என்று விரும்பினீர்களேயானால் கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி போன்ற மரங்களை வளருங்கள்.

பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை ஆகியவை வளர்த்தால் அழகிய பூக்களை பெறலாம்.

அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று உங்களில் சிலர் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.

மரம் வளர்ப்பு : இரு மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

உங்களுக்கு நேரமிருந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த கட்டுரையையும் வாசிக்கலாம் : பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

8 டிசம்பர், 2016

Crisis Management @ அப்போலோ

 விளம்பரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமான சொல், ‘Crisis Management’. குறிப்பாக விளம்பரத் துறையில் மக்கள் தொடர்புப் பணிகளை செய்யக்கூடிய பணியாளர்கள் (public relations) அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சொல்.

மக்கள் தொடர்பு இன்றைக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய வர்த்தகமாக மாறியிருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு நடிகரை/நடிகையை பிரபலப்படுத்த பி.ஆர்.ஓ என்பவர் இருக்கிறார் இல்லையா? அதுபோல நிறுவனங்களை பிரபலப்படுத்த பி.ஆர். ஏஜென்ஸிகள் உண்டு. இந்த ஏஜென்ஸிகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு கூலி கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் மக்கள் மத்தியில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்க தேவையான அனைத்து வேலைகளையும் மறைமுகமாக செய்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் செய்தித் தாள்களிலோ இணையத்தளங்களிலோ வாசிக்கும், டிவிக்களில் பார்க்கும் நிறுவனங்களை குறித்த / பிரபலங்களை குறித்த பல செய்திகள், பெரும்பாலும் செய்தியாளர்களால் எழுதப்படுபவை அல்ல. அவை இதுபோன்ற பி.ஆர். ஏஜென்ஸியின் காப்பிரைட்டர்களால் எழுதப்படும் அறிக்கைகள். நான் இதுபோன்ற ஒரு பி.ஆர். ஏஜென்ஸியில் பணியாற்றியிருக்கிறேன். இன்றைய தமிழகத்து கல்வித்துறை அமைச்சர், முன்பு வைத்திருந்த நிறுவனம் ஒன்றுக்கு மக்கள் தொடர்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

ஒரு நிறுவனத்தையோ / பிரபலத்தையோ நல்லவிதமாக பிரபலப்படுத்தக் கூடியது மட்டுமல்ல பி.ஆர். ஏஜென்ஸிகளின் வேலை. அந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ, அதன் தயாரிப்புக்கோ, அந்த நிறுவனம் தொடர்பான அதிகாரிகளுக்கோ, உரிமையாளருக்கோ மக்களிடையே பெயர் எதிர்மறையாக ஏற்படக்கூடிய சூழலில், அதை மாற்றக்கூடிய பணிகளை செய்வதே crisis management.

இந்த crisis managementக்கு நமக்கு தெரிந்த நல்ல உதாரணம், கூடங்குளம் அணு உலை. கூடங்குளத்தில் மக்கள் போராட்டம் வெடித்தபோது, ஊடகங்கள் தொடர்ச்சியாக அதை பதிவு செய்துக் கொண்டிருந்தன. திடீரென்று அணு மின்சாரத்தின் தேவை எவ்வளவு அத்தியாவசியம் என்று பல ஊடகங்களும் ‘யூ’ டர்ன் அடித்ததில் சென்னையின் பிரபலமான ஏஜென்ஸி ஒன்றுக்கு முக்கியப் பங்கு உண்டு. கூடங்குளம் அணு உலை குறித்த நேர்மறையான செய்திகள் அதிகமாகவும், போராட்டம் குறித்த கவனம் நீர்க்கப்பட்டதிலும் மிகத்திறமையான crisis management மேற்கொள்ளப்பட்டது. அந்த ஏஜென்ஸியின் நடவடிக்கைகளை வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்கு ‘நிழல்’ தன்மை ஏராளமாக உண்டு.

திறமையாக கையாளப்பட்ட crisis managementக்கு இன்னொரு நல்ல உதாரணம் கோகோ கோலா. எழுபதுகளின் இறுதியில் இந்தியாவில் முடக்கப்பட்ட கோலா, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மீண்டும் சந்தைக்கு வந்தது. இன்றுவரை விற்பனையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

2003 ஆகஸ்ட் மாதம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை ஒன்றில் குளிர்பானங்களில் குறிப்பிடத்தக்க அளவு பூச்சி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தையில் விற்கப்பட்ட குளிர்பானங்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்தது. குறிப்பாக அப்போது மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த பெப்ஸி, இந்தப் பிரச்சினையால்தான் தன்னுடைய மவுஸை முற்றிலுமாக இழந்தது. இன்றுவரை பெப்ஸியால் பழைய சந்தையை பிடிக்கவே முடியவில்லை.

ஆனால்-

கோகோ கோலா இதை திறமையான crisis management நடவடிக்கைகள் மூலமாக சமாளித்தது. உடனடியாக தன்னுடைய விளம்பரங்களில் கோலா பாதுகாப்பானது என்பதை புரியவைக்கும் வாசகங்களை இணைத்தது. தங்களுடைய ஃபேக்டரிகளுக்கு பொதுமக்களை நேரில் அழைத்துச் சென்று, கோகோ கோலா எவ்வளவு பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறது என்பதை காட்டி, அவர்களது testimonial விளம்பரங்களை வெளியிட்டது. சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துக் கொண்டிருந்த அமீர்கானுக்கு கோடிகளை கொட்டி, அவர் வாயாலேயே கோகோ கோலா குடித்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்று சொல்லவைத்தது.

தன்னுடைய பழைய பெயரையும், சந்தையையும் மீட்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலம் கோகோ கோலா போராடியது. அப்போது அவர்களது crisis management theoryயாக எடுத்துக் கொள்ளப்பட்ட 3P’s இன்று உலகம் முழுக்கவே விளம்பரத்துறையினருக்கு ஒரு பாடமாக ஆகியிருக்கிறது.

Price Value, Preference, Pervasive penetration ஆகியவையே அந்த மூன்று P. அதாவது இந்த காலக்கட்டத்தில் நிறுவனத்துக்கு நஷ்டமே ஏற்பட்டாலும்கூட மக்கள் வாங்கக்கூடிய மலிவான விலை, மக்கள் தாகம் எடுத்தால் முதலில் நாடக்கூடிய குளிர்பானமாக கோகோ கோலோவை முன்னிறுத்துவதற்கான நடவடிக்கை, கோலோ கிடைக்காத இடமே இல்லை என்கிற நிலையை உருவாக்குவது போன்ற பணிகளில் பெருமளவு ஆற்றலை கோகோ கோலோ நிறுவனம் செலவிட்டது. மக்களுக்கு ‘பூச்சி மருந்து’ என்கிற சொல்லே மறந்துப்போன நிலை ஏற்பட்ட பிறகே ‘open happiness’ என்று நார்மல் மோடுக்கு வந்தார்கள் கோகோ கோலாவினர்.

ஓக்கே. இப்போது ‘அப்போலோ’வுக்கு வருவோம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமாக அப்போலோ கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் அடையாளமே அதன் விஐபி பேஷண்டுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சிகிச்சை பெற வருவோரால் ஏற்படுத்தப் பட்டது.

இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிகளில் ஒருவராக கருதப்படும் தமிழக முதல்வர், அப்போலோவின் பேஷண்ட் என்பது அந்நிறுவனத்தின் branding தொடர்பான பெருமைதான். மறுப்பதற்கில்லை.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல்வர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுமே அப்போலோ வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பு வரை சரிதான்.

ஆனால்-

அதன் தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ வெளியிட்ட பத்திரிகைக் குறிப்புகள் முழுக்க முழுக்க ஆர்வக்கோளாறாகவே அமைந்து விட்டது. ஒருவேளை முதல்வர் முழு உடல்நலத்தோடு திரும்பி இருப்பாரேயானால் அது அப்போலோவின் சாதனையாக பார்க்கப் பட்டிருக்கும்.

முதல்வரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில் சில சட்டவல்லுநர்களின் உதவியோடு அப்போலோ வெளியிட்ட அறிக்கைகள், சமூக ஊடகங்களில் கிண்டலடிக்கப்பட காரணமாக அமைந்தனவே தவிர, அது அப்போலோவின் பெயரை ‘நல்லவிதமாக’ மக்கள் மத்தியில் பரப்ப உதவவில்லை.

போதாக்குறைக்கு அப்போலோவின் தலைவர் ரெட்டி அவர்கள், “முதல்வர் எப்போது விருப்பப் படுகிறாரோ, அப்போது அவரே டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம்” என்று பத்திரிகையாளர்களை அழைத்து சொன்னது, அப்போலோவின் இமேஜை அசைத்துப் பார்ப்பதாக அமைந்துவிட்டது.

இதுபோல பத்திரிகைக் குறிப்புகள் தரவேண்டும், பேட்டி தரவேண்டும் என்றெல்லாம் அப்போலோவுக்கு எந்த கட்டாயமும் இல்லை. அவர்கள் தமிழக அரசுக்கும், பேஷண்டின் உறவினர்களுக்கும் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ‘தமிழக முதல்வரே எங்களிடம்தான் சிகிச்சை பெறுகிறார்’ என்று பில்டப் தர முயற்சித்து, தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இங்கே சிகிச்சை பெறவில்லை என்றாலும்கூட அப்போலோவின் அருமை பெருமைகள் ஒன்றும் குறைந்து போய்விடப் போவதில்லை.

தங்களுடைய பிராண்ட் மேனேஜர்களையோ, பி.ஆர்.ஓ.க்களையோ கலந்தாலோசித்து இருந்தால் இத்தகைய குளறுபடிகளை அப்போலோ நிர்வாகம் தவிர்த்திருக்க முடியும். மேலும், முதல்வருக்கு கார்டியாட்டிக் அரெஸ்ட் ஆனதற்கு மறுநாள் அப்போலோ தலைவரின் மகள் ட்விட்டரில் வெளியிட்ட ‘கிரேவ்’ ட்விட், அம்மருத்துவமனையின் பெருமையை முற்றிலுமாக சீர்குலைப்பதாக அமைந்துவிட்டது. உணர்ச்சிப்பூர்வமான அந்த சூழலில் அப்போலோ, அமைதியை கடைப்பிடித்திருக்க வேண்டும்.

மேலும்-

முதல்வரின் மரணத்தை அப்போலோ தன்னுடைய பத்திரிகைக் குறிப்பாக கொடுத்தது முட்டாள்த் தனத்தின் உச்சம். தமிழக முதல்வர் காலமானதை தமிழகத்தின் ஆளுநரோ அல்லது அரசோ மக்களுக்கு தெரிவிக்கட்டுமே... அந்த கடமை அவர்களுக்குதானே இருக்கிறது? தன்னுடைய ஃபெய்லியரை எந்த நிறுவனமானது ஊடகங்களுக்கு முன்பாக இப்படி பட்டவர்த்தனமாக தானே முன்வந்து ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?

டிசம்பர் 6ஆம் தேதி விடியற்காலை இரண்டு மணியளவில் தமிழக முதல்வரின் பூவுடலை தாங்கிய ஆம்புலன்ஸ், அப்போலோவில் இருந்து வெளியேறுகிறது. மறுநாளே காலை ஆறு மணிக்கு நாடறிந்த பத்திரிகையாளரான சோ ராமசாமி, இதே அப்போலோவில் இருந்து பிணமாக ஆம்புலன்ஸில் வெளியேறுகிறார். திரும்பத் திரும்ப டிவியில் காட்டப்பட்ட இந்த இரு விஷூவல்களும் சாதாரண மக்கள் மத்தியில் துக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

‘அப்போலோவுக்கு போனாலே அவ்ளோதான்’ என்று வழக்கமான பாமரத்தனத்தோடு தெருமுனைகளில் நின்று பேசிக்கொள்கிறார்கள். அப்போலோவின் இமேஜ், இதுபோல சாதாரணர்களிடம் ஆட்டம் காண்பதை அப்போலாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் இந்த அவப்பெயரை போக்க புதியதாக சுவாரஸ்யமான ‘அம்மா கதைகள்’ உருவாக்கி, ஆங்கில நாளேடுகளில் மெர்ஸி என்கிற நர்ஸின் படத்தைப் போட்டு crisis management செய்கிறார்கள்.

ரொம்ப சிறுபிள்ளைத்தனமான முயற்சி. இந்தக் கதைகளின் தர்க்க ஓட்டை, உடைசல்கள் அப்பட்டமாகவே தெரிகின்றன. அந்தளவுக்கு ஆக்டிவ்வாக இருந்த அம்மா, தன்னை வெளியுலகத்துக்கு வெளிப்படுத்திக் கொள்ளவே முயற்சித்திருப்பார். ‘நான்’, ‘எனது தலைமையிலான அரசு’, ‘என்னுடைய’ என்று எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் சுயமோகியான ஜெயலலிதா, அப்போலோ கதைகளின் படி நார்மலாக இருந்திருந்தால், எழுபத்தைந்து நாட்கள் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் என்று மக்கள் கேட்கமாட்டார்களா?
ஜெயலலிதாவின் வாய்ஸ் என்று வாட்சப் குழுமங்களில் பரப்பப்பட்ட குரல், சட்டமன்ற வேட்பாளர்களுக்கான படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து உள்ளிட்ட விஷயங்களையே அதிமுகவினர் உட்பட யாரும் நம்பவில்லையே?

மேலும் தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகள் வாயிலாக ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம், டிஸ்சார்ஜ் தேதி என்று நாளோரு செய்தியும் பொழுதொரு வண்ணமுமாக அதிமுகவினரை உற்சாகப்படுத்த வைட்டமினாக கொடுத்த தகவல்கள் அத்தனையும் முழுக்க பொய்த்து அவர்கள் கடுமையான மனவுளைச்சலில் இருக்கும்போது இந்திய புதிய முயற்சி எப்படி வெற்றிபெறும்?

அப்போலோவின் அச்சம் தேவையற்றது. அப்போலோவில் என்னென்ன மருத்துவ வசதிகள் இருக்கின்றன, அது எவ்வகையில் மற்ற மருத்துவமனைகளைவிட சிறந்தது என்பதெல்லாம் அப்போலோவின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு தெரியும். இதுபோல பாமரத்தனமான பரவும் சென்டிமெண்டான வதந்திகளால் அவர்கள் தங்கள் மருத்துவமனையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கும் நீண்டகால ஆயுள் கிடையாது.

உதாரணத்துக்கு, மியாட் மருத்துவமனை தன்னுடைய சோதனைக் காலத்தை எப்படி எதிர்கொள்கிறது என்று அப்போலோ நிர்வாகம் பார்க்கலாம். ஒரு காலத்தில் பிரதமரே டெல்லியில் இருந்து வந்து அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்கிற அளவுக்கு பெருமை வாய்ந்த மருத்துவமனையாக இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மழை வெள்ளத்தில் அடையாறு பாய்ந்து அத்தனை பெருமைகளையும் குலைத்தது. மியாட், உடனடியாக தன்னுடைய விளம்பர வேகத்தை குறைத்துக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு மியாட் என்கிற பெயரை உச்சரித்தாலே, மக்களுக்கு அந்த சோகம் நினைவுக்கு வந்துவிடும் என்று கருதி அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் முற்றிலுமாக சில ஆண்டுகளில் மறைந்து சகஜமாகும் நிலையில் மீண்டும் மியாட், விஸ்வரூபம் எடுக்கும். அதுவரை பதுங்கி, பாய்வதற்கான சூழலை எதிர்நோக்கிக் கொண்டே இருக்கும். சமீபமாக மீனாட்சி மிஷன், டாக்டர் குருசங்கர் தலைமையில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு தன்னை தமிழகத்தின் முக்கியமான மருத்துவக் கேந்திரமாக அடையாளப்படுத்தி வளர்த்துக் கொள்வதை இங்கே கவனிக்கலாம்.

‘ராசியில்லாத டாக்டர்’ மாதிரி சென்டிமெண்டெல்லாம் எளிய மக்களிடம்தான் செல்லுபடி ஆகும். ஜெயலலிதா மற்றும் சோவின் மரணமெல்லாம் இன்னும் சில காலத்திலேயே மறந்துவிடும். அப்போது அப்போலோவில்தான் அவர்கள் ட்ரீட்மெண்ட் எடுத்தார்கள் என்பதையெல்லாம் யாராவது நினைவுப்படுத்தினால்கூட உடனடியாக recall செய்துக் கொள்ள முடியாத அளவுக்கு வேறு வேறு விஷயங்கள் அவர்களது மூளைகளில் திணிக்கப்பட்டு விட்டிருக்கும்.

ஆகையால்-

அப்போலோ இப்போது சும்மா இருந்தாலே போதுமானது. அதனுடைய வழக்கமான சிறப்பு எவ்வகையிலும் பாதிக்கப்பட்டு விடாது. நிகழ்ந்த சேதாரத்தை சரிசெய்ய ‘Damage control’  என்று நினைத்துக் கொண்டு ‘அப்போலோ’ என்கிற பிராண்டின் பெயரை திரும்பத் திரும்ப நினைவுப்படுத்திக் கொண்டிருந்தால் ஜெ.வும், சோ-வும் கூடவே நினைவுக்கு வந்துக் கொண்டேதான் இருப்பார்கள். அதுதான் அப்போலோவுக்கு ஆபத்தும்கூட.