22 ஜூலை, 2017

ரஜினி - கமல்


ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்தபோது இருவரும் எதிரெதிர் துருவமாக வளர்ந்து நிற்கிறார்கள். தனித்தனியாக தாங்கள் வளருவதற்காக இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்றார்கள்.

அவ்வப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பரபரப்பாக ஏதாவது எழுதும். ரஜினியோ, கமலோ அதை கண்டுகொண்டதே இல்லை.

பிறவி கமல் ரசிகனான எனக்கு ரஜினியோடு அவர் சேர்ந்து நடிப்பதில் விருப்பமே இருந்ததில்லை. ஏனெனில், ரஜினிக்கு நடிக்கவே தெரியாது என்று உறுதியாக இருந்தேன். தொண்ணூறுகளில் கொஞ்சம் ரசனை மேம்பட்ட காலத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான நடிகராக மனசுக்குள் உட்கார்ந்தார். இருவரது ஸ்டைலும் வேறு வேறு. இருவரையும் தனித்தனியாக தனித்தனி மனநிலைகளில் ரசிக்க முடியும் என்கிற முதிர்ச்சி ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் எழுபதுகளின் இறுதியில் இருவரின் ரசிகர்களுக்கும் கிடைத்த ஃபுல் மீல்ஸ் விருந்து கிடைக்குமே என்று மனசு ஏங்கத் தொடங்கியது.

என்னுடைய தலைமுறைக்கு கிட்டாத விருந்து அது. இன்றுவரை எட்டா விருந்தும்கூட.

போகட்டும்.

ஓரளவுக்கு ‘விக்ரம் வேதா’ அந்த விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கமல்ஹாசன் – விக்ரமாதித்தன், ரஜினிகாந்த் – வேதாளம் என்கிற ஐடியாவே பரவசப்படுத்துகிறது. ரஜினியும், கமலும் இப்போதைக்கு இணைய சாத்தியமில்லை என்பதால் – இணைந்தாலும் வயது காரணமாக இருவருக்குமான பழைய கெமிஸ்ட்ரி உருவாக வாய்ப்பில்லை என்பதாலும் - நடிப்புப் பாணியில் அவர்களை முடிந்தளவுக்கு பிரதிபலிக்கக்கூடிய விஜய் சேதுபதி – மாதவன் இணையை தேர்ந்தெடுத்ததும்கூட நுணுக்கமான தேர்வுதான்.

ஆனால்-

இந்த அட்டகாசமான ‘ஐடியா’வை, ரசிகன் conceive செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் புத்திசாலித்தனமாக இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எடுத்துவிட்டதால், ஆஹாஓஹோவென்று கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ‘விக்ரம் வேதா’, ஓக்கே என்கிற லெவலில் நின்றுவிட்டது.
மாதவன், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில்கூட அப்படியே கமலை உரித்து வைத்திருக்கிறார். குறிப்பாக இன்ஸ்பெக்டர் சைமன் இறந்துவிட்ட தகவலை, சைமனின் மனைவியிடம் சொல்லும் காட்சி. விஜய் சேதுபதி, நடையில் தொடங்கி சிரிப்பு வரை அச்சு அசல் ‘பைரவி’ காலத்து ரஜினியேதான். எனினும் இவர்கள் இருவரும் ரஜினி – கமலை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பதை ரஜினி – கமல் ரசிகர்களே உணரமுடியாதபடி ஏன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ‘விக்ரம்’, ‘வேதா’ என்கிற பெயர்கள்கூட அந்த காலத்து கமல், ரஜினி கதாபாத்திரங்களின் பெயர்களை ஒட்டியே இருக்கின்றன. சின்ன சின்ன ரெஃபரன்ஸ் கொடுத்து ரசிகனுக்கு தங்கள் ஐடியா இதுதானென்று புஷ்கரும், காயத்ரியும் மெனக்கெட்டு புரிய வைத்திருந்தால் தியேட்டர்களில் திருவிழாவே நடந்திருக்கும். சிம்பிள். படத்துக்கு டைட்டிலேகூட ‘ரஜினி – கமல்’ என்று வைத்திருக்கலாம்.

படம் நெடுக விரவியிருக்கும் புத்திசாலித்தனமும், பர்ஃபெக்ட்னெஸ்சுமே வெகுஜன ரசிகர்களிடமிருந்து படத்தை அந்நியப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. ஷங்கர் மாதிரி வெற்றிகரமான இயக்குநர்கள் வேண்டுமென்றே படத்தில் சில faultகளை, லாஜிக் மிஸ்டேக்குகளை திணிப்பதுண்டு. அவற்றை ரசிகனே கண்டுபிடித்து, இயக்குநரைவிட தான் புத்திசாலி என்று அவனுடைய ஈகோவை அவனே திருப்திபடுத்திக் கொள்வதற்காக செய்யப்படும் குறும்பு விளையாட்டு அது. ‘விக்ரம் வேதா’, அதிகபட்ச சாத்திய மிலிட்டரி ஒழுங்குடன் இருப்பதே, படத்தின் ஆகப்பெரிய பலவீனம்.

இயக்குநர்கள் அடிப்படையில் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும். ரசிகர்களும் தங்களுடைய wave lengthக்கு இணையாக இருப்பார்கள் என்கிற அவர்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கதே. இருந்தாலும், ஓவியா ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அளவுக்கே தமிழனின் அறிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க ஏகத்துக்கும் இறைக்கப்பட்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே, தத்தமது பங்கை பக்காவாக செய்திருப்பதால் பிரதானப் பாத்திரங்களான விக்ரம் – வேதா மீது குவிய வேண்டிய ஈர்ப்பு சிதறுகிறது. உதாரணத்துக்கு வரலட்சுமி பாத்திரம். அவர் இல்லாமலேயே இந்த கதையை சொல்லியிருக்க முடியும். இருப்பினும் அந்த பாத்திரத்தை வைத்துவிட்டதாலேயே அவருக்கென்று வலிந்து சில காட்சிகளை உருவாக்கி, அதை கதையோடு ஒட்டவைக்க முயற்சித்திருப்பது போன்றவை, பார்வையாளனுக்கு ஒரே டிக்கெட்டில் ஒன்பது படத்தை பார்ப்பது போன்ற ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு குற்றவாளியை ஒரு போலிஸ் அதிகாரி பிடிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறை மாட்டும்போதும் ஒரு புதிரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறான் குற்றவாளி. அந்த புதிர் முடிச்சுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அந்த அதிகாரி அவிழ்த்துக் கொண்டே வருவதுதான் கிளைமேக்ஸ். இதுதான் ஐடியா. இதைதான் புஷ்கர்-காயத்ரி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையை சொல்வதற்கு காதை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.

நான்லீனியர் வகை கதை சொல்லல், கேட்பவனுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய உத்தியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே கதைக்கு கூடுதல் சுமையாக அமைந்துவிடக்கூடாது. ‘விக்ரம் வேதா’வில் அப்படி அமைந்துவிட்டது.

எல்லாவற்றையும் மீறி இது நல்ல படம். Hardcore சினிமா ரசிகன் ரசித்து ரசித்து சுவைக்க ஏராளமான ஐட்டங்களை கொண்டிருக்கும் படம். ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி ஃபேஸ்புக்கில் நீண்டகாலத்துக்கு பேசப்படும்.

19 ஜூலை, 2017

தேசத்துரோகிகளா ஜனரஞ்சக எழுத்தாளர்கள்?

“அந்த நாள் அப்படியே நினைவிருக்கிறது. 1985, ஜூன் 24. அன்று என் தந்தையார் மறைந்த நாள். அலுவலகத் தோழர்களோடு அமர்ந்து திவச உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

வாசலில் நிழலாடியது. கையில் ப்ரீப்கேஸ். கண்களில் கூலிங் கிளாஸ். சஃபாரி அணிந்த அவர், ‘ஐ ஆம் ராஜேஷ்குமார் ஃப்ரம் கோயமுத்தூர்’ என்று அறிமுகம் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

அப்பாவே நேரில் வந்து ஆசிர்வதிப்பதாக நினைத்து சிலிர்த்தேன்!”

நெகிழ்ச்சியாக தன்னுடைய ஆரம்பகால நினைவுகளோடு பேச ஆரம்பிக்கிறார் ‘பாக்கெட் நாவல்’ ஜி.அசோகன். தமிழ் மாத நாவல் உலகின் முடிசூடா மன்னனாகிய இவர், கடந்த முப்பத்தி இரண்டு வருடங்களாக இத்துறையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்கெட் நாவல்’ பத்திரிகையின் 350வது இதழ் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே நம்மிடம் பேசினார்.

“அப்பா, பத்திரிகையுலகில் மிகவும் பிரபலம். ‘வாலிபம்’ எல்.ஜி.ராஜ் என்றால் எல்லாருக்குமே தெரியும். ஃப்ரீலான்ஸ் ஓவியர். ‘ராணி’ பத்திரிகையின் முதல் அட்டைப்படத்தை வரைந்தவர் அவர்தான். நிறைய பத்திரிகைகள் நடத்தினார். அப்போதெல்லாம் பத்திரிகையாளன் வீட்டு அடுப்பில் பூனைகள் உறங்குவது வழக்கம்தான்.

நாங்கள் நான்கு சகோதரர்கள். மூன்று சகோதரிகள். அடிப்படைக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும். மீதி விஷயங்களை வாழ்க்கை அனுபவத்தில்தான் கற்கவேண்டும் என்பது அப்பாவின் முடிவு.

அப்படிதான் நானும் அந்தகால எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு அப்பாவின் சீடனாக அவரது பத்திரிகை வேலைகளுக்கு துணையாக வந்துவிட்டேன். அவரது ஓவியங்களை எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு போவதும், சன்மானம் வாங்கி வருவதுமாக இருந்ததால் இயல்பாகவே எனக்குள் பத்திரிகைகள் மீது ஈடுபாடு வந்துவிட்டது...” கண்சிமிட்டுகிறார் ஜி.அசோகன்.

“எப்போது ‘பாக்கெட் நாவல்’ ஆரம்பித்தீர்கள்?”

“1981ல் அப்பா காலமாகி விட்டார். அவர் நடத்திக் கொண்டிருந்த பத்திரிகையை நான் ஆசிரியராகி தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகை ஆசிரியராகும்போது என் வயது இருபதுதான். சில வருடங்களிலேயே மாத நாவல் நடத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்பா, அப்போது நிறைய டைட்டில்ஸை ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் ‘பாக்கெட் நாவல்’. 1971 வாக்கில் இந்த டைட்டிலில் சில மாத நாவல்களையும் கொண்டு வந்திருக்கிறார்.

அதையே மீண்டும் தூசு தட்ட முடிவெடுத்தேன். வெகுஜன இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் கடிதம் எழுதி கதை கேட்டேன். மகரிஷி, வாஸந்தி, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். ராஜேஷ்குமார் நேராகவே சென்னைக்கு வந்துவிட்டார். சில எழுத்தாளர்களை அவரவர் வசிக்கும் ஊருக்கே போய் சந்தித்து கதை கேட்டேன். அதுவும் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் கதை வாங்க பட்டுக்கோட்டைக்கே போயிருந்தேன். பல எழுத்தாளர்கள் என்னை ஊக்குவித்தாலும், சிலரிடம் கசப்பான அனுபவங்களும் கிடைத்தன.
1985, நவம்பர் மாதம் ‘பாக்கெட் நாவல்’ முதல் இதழைக் கொண்டு வந்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஆகியோரின் படத்தைதான் இந்த 350வது இதழின் அட்டைப்படமாக கொண்டு வந்திருக்கிறேன். இதைவிட வேறெப்படி என்னால் நன்றியை தெரிவிக்க முடியும்?”

“இத்தனை ஆண்டுகளாக ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது போல சலிக்கவில்லையா?”

“எப்படி சலிக்கும்? விரும்பிதானே இந்த வேலையை செய்கிறேன். ‘பாக்கெட் நாவல்’ கொண்டு வந்த காலத்தில் சந்தையில் சுமார் ஐம்பத்தோரு மாத நாவல்கள் எனக்கு போட்டியாக இருந்தன. அவர்களோடு போட்டியிட்டு முன்னணிக்கு வந்ததே சுவாரஸ்யமான பயணம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பிரபலமான எழுத்தாளர்களான பாலகுமாரன், சிவசங்கரி உள்ளிட்டோர் எனக்குதான் முதன்முதலாக மாத நாவல் எழுதினார்கள். அதற்கு முன்பாக அவர்கள் இதழ்களில் எழுதும் தொடர்கள்தான் புத்தகமாகும்.

‘பாக்கெட் நாவ’லைத் தொடர்ந்து ராஜேஷ்குமாருக்கு என்றே ‘கிரைம் நாவல்’, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு என்றே ‘எ நாவல் டைம்’ (பின்னர் பாலகுமாரன் இதில் எழுதினார்), ‘குடும்பநாவல்’ என்று வரிசையாக மாதநாவல்களை தொடங்கினேன்.

மாதநாவல்கள் மட்டுமின்றி வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்கும் ‘ஜாப் கைடுலைன்ஸ்’ மாத இதழ், பங்குமார்க்கெட் தகவல்களை தரும் ‘பங்கு மார்க்கெட்’ வார இதழ், ‘சினிமாலயா’ என்கிற சினிமா மாதப் பத்திரிகை, ‘சக்தி காமிக்ஸ்’ என்கிற காமிக்ஸ் பத்திரிகை, ‘சுபயோகம்’ என்கிற ஜோதிடப் பத்திரிகை என்று ஏகத்துக்கும் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கியவை நான் நடத்திய, நடத்தும் பத்திரிகைகள்தான்”

“மாத நாவல்களில் பெரிய வெற்றியை நீங்கள் எட்டியதற்கு என்ன காரணம்?”

“யார் நாவலை அனுப்பினாலும் வாசித்துவிட்டுதான் போடுவேன். பிரபலமான எழுத்தாளர் கொடுத்த கதையாக இருந்தாலும், வாசகர்களுக்கு தேவையான சுவாரஸ்யம் அதில் இல்லையென்றால், ‘வேறு கதை கொடுங்க’ என்று தைரியமாக கேட்பேன்.

எங்கள் பத்திரிகைகளை பெரிய பதவிகளில் இருப்பவர்கள் நிறைய பேர் வாசிக்கிறார்கள். குறிப்பாக காவல்துறையினர், நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள். கிரைம், அவங்க சப்ஜெக்ட் ஆச்சே? அதனால்தான் கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதுவே என்னுடைய வெற்றிக்கு காரணம்.

ஒன்று தெரியுமா? ‘வேறு நாவல் கொடுங்க’ என்று நான் சொன்னபோதும் கோபப்படாமல் வேறு கதையை பிரபலமான எழுத்தாளர்கள் கூட கொடுத்திருக்கிறார்கள். வாசகர் பார்வையிலேயே இப்படி நான் கேட்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும்தான் 350 இதழ்களை நான் கொண்டு வரக் காரணம்”

“அடிக்கடி இலக்கிய நாவல்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறீர்களே..?”

“எங்களுடைய ‘குடும்ப நாவல்’ வாசகர்களுக்கு இலக்கியமும் தேவைப்படுகிறது. சுந்தரராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’, க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’, ஹெப்சிபா ஜேசுதாஸனின் ‘புத்தம் வீடு’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ உள்ளிட்ட இலக்கிய நாவல்களை நாங்கள் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு. மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை கொடுத்து சம்பந்தப்பட்ட படைப்புகளுக்கு அனுமதி வாங்கி, உரிய சன்மானம் கொடுத்துதான் வெளியிடுகிறோம்.

இதுதவிர கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம்’ மாதிரியான க்ளாசிக்குகளையும் பாகம் பாகமாக மாதந்தோறும் வெளியிட்டிருக்கிறோம்.

வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தின் மீதும் ஈடுபாடு உண்டு. இந்த உண்மையை இலக்கியத்தில் இருப்பவர்களாக சொல்லிக் கொள்பவர்கள்தான் உணராமல் இருக்கிறார்கள். வெகுஜன வாசகர்கள் மீது தீண்டாமை அனுசரிக்கிறார்கள்.

அதிலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களை இலக்கியவாதிகள், தேசத் துரோகிகளாகவே பார்க்கிறார்கள். இம்மாதிரி இடைவெளி தீவிர இலக்கியத்துக்கும், வெகுஜன இலக்கியத்துக்கும் ஏற்பட்டு விட்டதால்தான் புதியதாக வெகுஜன எழுத்தாளர்கள் உருவாவது குறைந்திருக்கிறது.

தீவிர இலக்கியம் என்னும் சீரிய இடத்துக்கு வாசகர்களை ஏற்றிவிடும் ஏணியே வெகுஜன இலக்கியம்தான். அது உதாசீனப்படுத்தப் பட்டால் எதிர்காலத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் மட்டுமே இருப்பார்கள். வாசகர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அவரவர் எழுதியதை அவரவரே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்”

“புதியதாக எழுத வருபவர்களில் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்..?”

“பெண் எழுத்தாளர்கள் அனைவரையுமே குறிப்பிடலாம். கீதாராணி, ஆர்.சுமதி, பரிமளா ராஜேந்திரன், ஜி.ஏ.பிரபா உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆண் எழுத்தாளர்களில் ஜி.ஆர்.சுரேந்திரநாத், சுப.தனபால் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தொடர்ச்சியாக எழுதியும் வருகிறார்கள்.

இன்னும் நிறைய புதிய எழுத்தாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நிறைய கதைகள் பரிசீலனையில் இருக்கின்றன”

“இத்தனை ஆண்டுகளில் மறக்கமுடியாத அனுபவம் ஏதாவது..?”

“ஒருமுறை பட்டுக்கோட்டை பிரபாகரோடு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபாகரின் அப்பா எங்கள் இருவரையும் அழைத்து, ‘தொழில் ரீதியாக உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், நீங்கள் இருவருமே எனக்கு மகன்கள்தான். தனிப்பட்ட முறையில் உங்கள் நட்பு சிதையக் கூடாது’ என்று கூறி எங்களிடம் வாக்கு கேட்டார். அதிலிருந்து பிரபாகரிடம் மட்டுமல்ல. அத்தனை எழுத்தாளர்களிடமும் எதிர்ப்பார்ப்பில்லாத நட்பினை தொடர்கிறேன்”

“அடுத்து?”

“எங்கள் நாவல்களை இப்போது ‘நாவல் ஜங்ஷன்’ என்கிற இணையத்தளத்தில் பதிவேற்றுகிறோம். அயல்நாடுகளில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கானோர் வாசிக்கிறார்கள். குறிப்பாக பழைய கிளாசிக் நாவல்கள் இந்தத் தளத்தில் சக்கைப்போடு போடுகிறது.

நீண்டகாலமாகவே அரசியல் விமர்சன பத்திரிகை ஒன்று கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. ‘கும்கி’ என்கிற மாத இதழின் மூலம் அந்த எண்ணம் விரைவில் நிறைவேறப் போகிறது.

பழம்பெரும் எழுத்தாளரும், காமிக்ஸ் உலகின் ஜாம்பவானுமாகிய முல்லை தங்கராசன் அவர்களின் அத்தனை படைப்புகளுக்கும் உரிமை வாங்கி வைத்திருக்கிறேன். வரிசையாக அவற்றை வெளியிடப் போகிறேன்” 

(நன்றி : குங்குமம்)

11 ஜூலை, 2017

திட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!

அதிகாலை இரண்டு மணி.

பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.

திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே பாண்டியராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.

“என்னய்யா இந்த நேரத்துலே?”

“உங்க கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சார்”

அப்போது ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யராஜ் நெருப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் சின்ன சின்ன தடங்கல் நடந்தாலும், அவருக்கு அப்போது அசோசியேட்டாக இருந்த பாண்டியராஜனை பிடித்து காய்ச்சி எடுத்துவிடுவார். அன்றும் அப்படிதான் தேர்ட் டிகிரி லெவலில் பாக்யராஜ் திட்டியிருந்தார். அது சம்பந்தமாகதான் தன்னை பாண்டியராஜன் பார்க்க வந்திருப்பார் போலிருக்கிறது என்று பாக்யராஜ் நினைத்தார்.

“நீங்க என்னை இன்னிக்கு ரொம்ப அசிங்கமா திட்டுனீங்க இல்லே?”

“ஆமாய்யா. எனக்கே மனசு கஷ்டமா போயிடிச்சி. நான்தான் திட்டுறேன்னு தெரியுது இல்லே. நான் திட்டாதமாதிரி வேலை பார்க்க வேணாமா?”

“இல்லைங்க சார். நீங்க திட்டுனதுக்காக உங்களுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்ல வந்தேன்”

“திட்டுனதுக்கு தேங்க்ஸா? அதுவும் இந்த அகால வேளையிலே?” பாக்யராஜ், ஆச்சரியமாக கேட்டார்.

“ஆமாம் சார். நீங்க என்னை திட்டுனதை புரொடியூஸர்களான மாணிக்கவாசகமும், சண்முகராஜனும் பார்த்திருக்காங்க. இவன்தான் பாக்யராஜு கிட்டே நிறைய திட்டு வாங்கியிருக்கான். அப்போன்னா விஷயமுள்ள பையனாதான் இருக்கணும்னு சொல்லி, என்னை டைரக்ட் பண்ணச் சொல்லி காசு அட்வான்ஸ் கொடுத்திருக்காங்க சார்”

“ஆஹா. என் திட்டுலே இப்படியொரு நன்மை நடக்குதா? இனிமே எல்லாப் பயலையும் காச்சு மூச்சுன்னு திட்டி தீர்த்துடறேன். பாண்டி, உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. நீ நல்லா வருவே” ஆசிர்வதித்து அனுப்பினார் பாக்யராஜ்.

மறுநாள் தயாரிப்பாளர்களிடம் ‘கன்னிராசி’ கதையை சொன்னார் பாண்டியராஜன். அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, “ஹீரோவா பிரபுவை போட்டா நல்லாருக்கும்” என்று ஆலோசனையும் சொன்னார்கள்.

பிரபுவுக்கு கதை சொல்ல ‘அன்னை இல்லம்’ விரைந்தார் பாண்டியராஜன். அப்போது பிரபுவின் சித்தப்பா சண்முகம்தான் கால்ஷீட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கதை சொல்லாமல், பிரபுவின் கால்ஷீட்டை வாங்க முடியாது.

பாண்டியராஜன் குள்ளம் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். அப்போது மிகவும் ஒல்லியாகவும் இருப்பார். வயது இருபத்தைந்து ஆகியிருந்தாலும், பார்ப்பதற்கு +2 படிக்கும் பையன் மாதிரிதான் இருப்பார்.

சண்முகம் இவரை ஏற இறங்க பார்த்தார். நடிகர் திலகம் பாணியிலேயே, “நீதான் டைரக்டரா? நீதான் கதை சொல்லப் போறீயா? சொல்லு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த சோபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

பாண்டியராஜன் கதை சொல்ல ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திலேயே சண்முகம் தூங்கிவிட்ட மாதிரி தெரிந்தது. தூங்கிவிட்டார் போல என்று இவர் கதையை சொல்வதை நிறுத்தினால், சைகை செய்து மேலே சொல்லு என்கிறார். இவர் தர்மசங்கடத்துடன் தாலாட்டு பாடியதை போல கதை சொல்லி முடிக்கிறார்.

சண்முகத்திடம் நீண்ட அமைதி. பாண்டியராஜனோ, ‘இது வேலைக்கு ஆகாது. நிச்சயமாக பிரபுவோட கால்ஷீட் கிடைக்காது’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.

சண்முகத்திடம் இருந்து குரல் வருகிறது. “அப்புறம்?”

“அவ்ளோதான் சார். கதை முடிஞ்சிடிச்சி”

“சரி. நீ போ. நான் புரொடியூஸர் கிட்டே பேசிக்கறேன்”

தன்னுடைய கதை சண்முகத்துக்கு பிடிக்காமல்தான் தூங்கிவிட்டாரோ அல்லது அவருக்கு தூக்கம் வருமளவுக்கு நாம் கதை சொல்லியிருக்கிறோமோ என்று பாண்டியராஜனுக்கு குழப்பம்.

மறுநாள் புரொடியூஸர் பாண்டியராஜனை கூப்பிட்டார்.

“என்னய்யா செஞ்சிருக்கே?”

“சார்”

“நீ சொன்ன கதையை ஒரு சீன் கூட மாத்தாம அப்படியே படம் புடிக்கிறதா இருந்தா பிரபுவோட கால்ஷீட்டை கொடுக்கிறேன்னு சண்முகம் சார் சொல்லிட்டாரு. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிப் போச்சி”

அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது. வேண்டுமென்றே தன்னை விளையாட்டுக்கு சீண்டியிருக்கிறார் சண்முகம் என்பதை புரிந்துக் கொண்டார் பாண்டியராஜன்.

பல்வேறு சிரமங்களுக்கு பிறகு ‘கன்னிராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டது.

இருந்தாலும் பாண்டியராஜனை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அவருக்கு அட்வான்ஸ் தர வந்தவர்கள் எல்லாம் 101, 201 என்றே உப்புமா டைரக்டர்களுக்கு கொடுப்பது மாதிரி கொடுக்க வந்தார்கள். எப்படியோ சிரமப்பட்டு அடுத்த படத்துக்கு புரொடியூஸரை பிடித்துவிட்டார்.

ஒரு படம் ஓடினால்கூட டைரக்டருக்கு மரியாதை இல்லை. நடிகரைதான் மக்கள் மதிக்கிறார்கள் என்று அவருக்கு தோன்றியது. எனவே ‘ஆண் பாவம்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அவரே நடித்தார்.

1985. கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு படம் ரிலீஸ். சென்னை நகரம் முழுக்க தன்னுடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டரை தானே நேரில் போய் ஒட்டிக் கொண்டிருந்தார் பாண்டியராஜன். உதயம் தியேட்டரில் முதல் காட்சி ஆரம்பிக்கப் போகிறது. தியேட்டர் வாசலில் கூலிங்கிளாஸெல்லாம் போட்டு பந்தாவாக வந்து நின்றார் இவர். போஸ்டரை பார்த்தவர்களுக்கு கூட இவர்தான் ஹீரோ என்பதே தெரியவில்லை. ‘கஷ்டப்பட்டு போஸ்டர் அடிச்சதெல்லாம் வீணாப்போச்சி போலிருக்கே? கடைசிவரைக்கும் ஒரு பய நம்மளை அடையாளம் கண்டுபிடிக்கலையே?’ என்று நொந்துப் போனார்.

முதல் காட்சி முடிந்து கூட்டம் வெளியே வந்தது. “ஏய், படத்துலே சின்ன பாண்டியா நடிச்சவரு அவருதாண்டா” என்று கத்தியபடியே இவரை கூட்டம் சூழ்ந்தது. ஆளாளுக்கு கைகுலுக்குகிறார்கள். பாராட்டுகிறார்கள். இவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். பாண்டியராஜனால் இதை நம்பவே முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பாக தனிமரமாக அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது அவரை சுற்றி அவ்வளவு ரசிகர்கள். ஆர்வமிகுதியில் அவரை தோள்மீது தூக்கி தியேட்டர் வளாகத்தில் ஊர்வலமாக ஓடுகிறார்கள்.

உள்ளே ‘ஆண் பாவம்’ அடுத்த காட்சி ஆரம்பித்தது.

வைரமுத்துவின் வைரவரிகள் இளையராஜா குரலில் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.

“இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்த சினிமாதான்
எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்த சினிமாதான்
கட்சி வளர்த்ததும்
ஆட்சி பிடிச்சதும்
இந்த சினிமாதான்...”

(நன்றி : ‘பழைய பேப்பர்’ தொடர் - தினகரன் வெள்ளிமலர்)

4 ஜூலை, 2017

கட்டுரை எழுதுவது எப்படி?

‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.

அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.

ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.

‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.
--------------------

கட்டுரைகள் எழுதுவது எப்படி?
by மாலன்

1. கட்டுரையின் மையம் -focus- என்பதை எழுதத் துவங்கும் முன்னரே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் கட்டுரை எழுதும் பணி ஒப்படைக்கப்படும் போது அதைக் குறித்துக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணமாக இந்தித் திணிப்புப் பற்றிய கட்டுரையை பல்வேறு விதங்களில் எழுதலாம். இந்திப் போராட்டங்களின் வரலாற்றைப் பற்றி எழுதுவது ஒரு வகை. நாம் current affairs பத்திரிகை. அதில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. வரலாற்றுக் கட்டுரைகளாக வருமிடங்களைத் தவிர மற்ற இடங்களில் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

செய்தித் தாளிலிருந்து தலைவர்கள் அறிக்கைகளைத் தொகுத்து எழுதுவது ஒரு வகை. ஆனால் அது அரைத்த மாவு.

இந்தத் திணிப்பின் காரணங்கள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மையப்படுத்தி எழுதுவதே சுவையும் பயனும் தரும். அப்படி எழுத விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சிந்தனையும் உழைப்பும் இல்லாமல் சிறந்தவை உருவாவதில்லை

2. மையத்தைத் தீர்மானித்த பிறகு அதற்கான தரவுகளைத் திரட்ட வேண்டும். உதாரணத்திற்கு இந்திக் கட்டுரைக்கே வருவோம். அந்த ஆணையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் என்ன? அது என்று வெளியிடப்பட்டது போன்ற தகவல்களைத் திரட்ட வேண்டும்.

3. தரவுகளைத் திரட்டிய பின் அவை அனைத்தையும் மொத்தமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்டுரையில் முன் வைக்கப்படும் கருத்திற்கு ஏற்ப உரிய இடத்தில் தரவுகளிலிருந்து தேவையானவற்றை மட்டும் பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டும்.

4. தரவுகளைத் திரட்டும் போது புதிய கோணங்களோ, புதிய செய்திகளோ கிடைக்கலாம். அப்படி ஏதும் கிடைக்குமானால் அது மையப்புள்ளியிலிருந்து மாறுபட்டதாக இருக்குமானால் அதை ஆசிரியரிடம் விவாதித்து தெளிவு பெற வேண்டும்

5. கட்டுரைகளை எழுத உட்காரும் முன் அதனுடைய வடிவம் –format- என்ன என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கும் என்ற அடிப்படை விதியை நினைவில் கொள்க. பொருளாதரம், அறிவியல், அரசிடமிருந்து பயனர் பெறுவதற்கான விதிகள் போன்ற எளிதில் விளங்கிக் கொள்ள இயலாத, செய்திகளை கேள்வி பதில் வடிவில் எழுதலாம். உலர்ந்த விஷயங்களை வாசிக்க சுவாரஸ்யமாக கதை வடிவில் எழுதலாம். நச்சென்று முகத்தில் அறைவது போன்ற விஷயங்களை கடித வடிவில் எழுதலாம். விவாதத்திற்குரிய விஷயங்களை முழுவதும் உரையாடலாக எழுதலாம். எல்லாக் கட்டுரைகளும் பள்ளிக் கூட வியாசங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை

6. எப்படிக் கதைக்கு முதல் வரி முக்கியமோ அதைப்போல கட்டுரையின் துவக்கம் முக்கியம். முதல் வரியின் முக்கியத்துவம், அவற்றின் வகைகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவற்றை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கட்டுரைகளை, சம்பவங்களில் துவக்கலாம். மேற்கோள்களில் துவக்கலாம். உதாரணங்களில் துவக்கலாம். கேள்விகளில் துவக்கலாம் (விஷயம் கேள்விப்பட்டீங்களா? என்று துவங்கும் பழைய முறைதான் தகவல் பரிமாற்றத்தில் இப்போதும் இருந்து வருகிறது என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?) அதிர்ச்சி தரும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். புனையப்பட்ட ஒரு கதையில் துவங்கலாம். மோனை நயம் பொலியும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் போது நம் தலையங்கங்களை எடுத்துக் கொண்டு அவற்றின் ஆரம்பங்களை மட்டும் ஆராய்ந்து பாருங்கள். காலத்தின் குரல் நம் நூலகத்தில் இருக்கிறது.

7. கட்டுரைகளின் நடை ஒரு சீராக, ஒரு செய்தியிலிருந்து அடுத்தற்கு இட்டுச் செல்வதாக அமைய வேண்டும். அதற்குரிய transition உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

8. பாக்ஸ் என்பது அட்டிகை ஆறாவது விரல் அல்ல. கட்டுரைக்கு அதில் உள்ள தகவல் அவசியம் இல்லை. ஆனால் அந்தக் கூடுதல் தகவல் அதற்கு அழகு அல்லது கனம் சேர்க்கும். எனவே எழுதும் போதே அதைப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

9. முடிவு முக்கியம்/ ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முடிவும் முக்கியம் முடிவு என்பது அந்தக் கட்டுரையின் சாரம் முழுவதையும் தொகுப்பதாக இருக்கலாம். கட்டுரையின் மையத்தை நினைவுபடுத்திக் கேள்வி எழுப்புவதாக இருக்கலாம். ’பஞ்ச்’க்கான இடம் அது. ‘காலம்தான் பதில் சொல்ல வேண்டும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ’என்பதோடு முடித்துக் கொண்டார்’ ‘அவரிடமிருந்து விடை பெற்றோம்’ என்பது போன்ற மொக்கை முடிவுகள் வேண்டாம்

10. intro எனப்படும் அறிமுகக் குறிப்பு. கட்டுரையின் மொத்தத்தையும் ஒரு வரியில் சொல்லும் திருக்குறள். இந்தக் கட்டுரையைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பரிடம் உரையாடலில் சொல்வதானால் என்ன சொல்வீர்களோ அதுதான் அறிமுகக் குறிப்பு. பாண்டிச்சேரியில் ஆழ்கடல் டைவிங் சொல்லித் தராங்க நான் போயிருந்தேன் என்றோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிப்புக்கு இந்த முறை டிமாண்ட் அதிகமாயிருச்சாமே என்றோ, இருக்கிற வேலையெல்லாம் விட்டு எதுக்கு இப்போ இந்திப் பிரச்சினையை கிளப்பறாங்க என்றோ சொல்வீர்கள் இல்லையா அதுதான் அறிமுகக் குறிப்பு.

11. தலைப்பு மிக மிக முக்கியம். அதுதான் வாசகரைக் கட்டுரைக்குள் இழுக்கும் விஷயம். அதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அது நாளிதழ் தலைப்புப் போல இருக்கக் கூடாது. நாம் பத்திரிகைகள். நாளிதழ்கள் அல்ல. நம் இருவரின் நோக்கமும் சுவையும் வேறு. ஒரே மாவில் இருந்து செய்தாலும் இட்லியும் தோசையும் வேறு வேறு. கேள்விகள், கிண்டல்கள், சீண்டல்கள் ஆச்சரியங்கள் பெருமிதம்,சினம் இப்படி ஏதேனும் ஓர் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் (நாளிதழ் தலைப்புக்கள் வெளிப்படுத்தாது/ வெளிப்படுத்தக் கூடாது) நயமாக இருக்க வேண்டும். நாகரீகமாக இருக்க வேண்டும். கருணாநிதிக்கு சிபிஐ ஆப்பு, பழனிமாணிக்கம் பதவி டர்ர்ர்ர் என்பதெல்லாம் கூடாது.

12. கட்டுரை மட்டுமல்ல, எதை எழுதும் போதும் எழுத்தாளன் வாசகனாகிவிட வேண்டும். ஒரு வாசகனாக இதை நாம் படித்தால்…. என்ற எண்ணம் நினைவில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

முழுமனதோடு முயற்சியுங்கள். நல்ல கட்டுரை நிச்சயம் உருவாகும்.

MCR / MCP chappals

சில மாதங்களுக்கு முன்பாக மிகக்கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும்போது நடுமுதுகில் நெருப்பை எடுத்துக் கொட்டியது மாதிரி எரியும். இரவில் வீட்டுக்குச் சென்ற பிறகும் இந்த எரிச்சல் குறையாது. தூக்கம் வராது.

தெரிந்த சில மருத்துவர்களிடம் கேட்டபோது அலுவலக இருக்கையை மாற்றிப்பார் என்றார்கள். முயற்சித்தேன். சில நாட்களுக்கு சரியான மாதிரி இருந்தது. மீண்டும் எரிச்சல் தொடங்கும்.

அப்போதுதான் MCR chappals பற்றி சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். மயிலாப்பூரில் National Leather Works என்கிற நூற்றாண்டு காணப்போகும் செருப்புக்கடை ஒன்று இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவுக்கே இவர்கள்தான் செருப்பு செய்துக் கொடுத்தவர்கள் (சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களுடைய சாட்சியமும் உண்டு). சிவராமன் அண்ணன் அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அந்த செருப்பைதான் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயன்படுத்துகிறேன். முதுகு எரிச்சல் கொஞ்சமும் இல்லை.

ஒரிரு தலைமுறைக்கு முன்பு செருப்பு என்பது ஆடம்பரமாக இருந்திருக்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் செருப்பை பயன்படுத்தாமலேயே நடந்திருக்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக செருப்பு என்பது உடையை போலவே அத்தியாவசியமான அணிகலனாக ஆகிவிட்டது. செருப்பு அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடை மாறுவதால், நரம்புகளில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இடுப்பு, முதுகுவலிகள் ஏற்பட காரணமாகின்றன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தற்காலிக நிவாரணம் தருகின்றனவே தவிர, பிரச்சினையை முற்றிலுமாக தீர்ப்பதில்லை. எனவே ஆர்த்தோ மருத்துவர்களே MCR/MCP செருப்புகளை சமீபகாலமாக தங்கள் பேஷண்டுகளுக்கு பரிந்துரைத்து வருகிறார்கள்.

Multicellular rubber (MCR), Multicellular polyurethane (MCP) செருப்புகள் சிறப்பு ரப்பர் மூலப்பொருட்களால் உருவாக்கப்படுபவை. இவற்றை அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. நரம்பியல்ரீதியான பிரச்சினையும் ஏற்படுவதில்லை. என் அம்மாகூட மூட்டுவலி பிரச்சினை கொண்டவர். அவரும் MCP செருப்புகளைதான் பயன்படுத்துகிறார்.

விலை கொஞ்சம் கூடுதல்தான். நான் பயன்படுத்தும் அடிப்படை மாடல் செருப்பே 500 ரூபாயில்தான் தொடங்குகிறது. ஏற்கனவே தயார் செய்திருக்கும் செருப்பை நேஷனல் லெதர் நிறுவனத்தார் விற்பதில்லை. நம் கால் அளவுக்கு ஏற்ப, புதுசாக தயார் செய்து கொடுக்கிறார்கள். MCR / MCP முறையில் ஷூ வேண்டுமென்றால், அதையும் செய்துக் கொடுக்கிறார்கள் (விலை ரூ.1500 வரலாம்)