2 ஜூன், 2018

அலிபாபா!

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அதிர்ந்தான் அலிபாபா.

முதன்முறையாக அம்மாவை அப்பா அடிப்பதை இப்போதுதான் பார்க்கிறான்.

அவனைப் பொறுத்தவரை அப்பாதான் உலகிலேயே மிகவும் நல்லவர். வாத்யாரின் வெறிபிடித்த ரசிகர். தலைவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு.

அவனுக்கு தெரிந்து அந்த ஊரிலேயே, ஏன் உலகத்திலேயே அலிபாபா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அவனுக்குதான்.

வைப்பதற்கு பெயரா இல்லை?

திராவிட இயக்கப் பெயர்தான் வைக்க வேண்டுமென்றால் உதயசூரியனில் தொடங்கி குணசேகரன் வரை எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன.

அலிபாபாவின் துரதிருஷ்டம் என்னவென்றால் -

அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம் வாத்யாரின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.

1956 ஏப்ரல் 14-ஆம் தேதி அப்பா பிறந்த அன்றுதான் அலிபாபாவாக வாத்யார் நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆனதாம்.

நியாயமாகப் பார்த்தால் தாத்தா, அப்பாவுக்குதான் அலிபாபா என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

என்ன செய்வது?

தாத்தா பழுத்த காங்கிரஸ்காரர்.

அப்பாவுக்கு ஜவகர் என்று தேசியத்தனமாக பெயரை வைத்துவிட்டார்.

அப்பாவோ திராவிட எழுச்சியில் வளர்ந்தவர்.

பத்து வயதிலேயே இந்தி அரக்கிக்கு எதிராக தார்ச்சட்டி ஏந்தியவர். அதனால் தாத்தாவிடம் தடியடியும் வாங்கியவர். தாத்தா, அப்பாவுக்கு வெறும் அப்பா மட்டுமல்ல. தமிழ் சமூகத்துக்கு போலிஸ்காரரும்கூட.

தாத்தா பணிபுரிந்த காவல்நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை இந்தி என்று தவறுதலாக எண்ணிய ஹைஸ்கூல் மாணவர்கள் சிலர் தார் கொண்டு காவல்நிலையப் பலகையை அழித்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி அப்பாவும் இருந்திருக்கிறார்.

அவ்வகையில் அவர் இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் அறியப்படுகிறார்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை அப்பா ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்.

சிறுவயதில் தன்னை அலிபாபாவாகவே நினைத்துக் கொண்டு பல்லாவரம் குன்றில் போய் ஏதாவது குகையிருக்கிறதா என்று தேடுவதே அவரது வழக்கமாம்.

அந்த எழவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவனுக்கு ஏன்தான் அலிபாபா என்று பெயர் வைத்து தொலைத்தாரோ தெரியவில்லை.

இத்தனைக்கும் அலிபாபா பிறந்தபோது வாத்யார்தான் ஆட்சியில் இருந்தார்.

தலைவரை பிரிந்து வாத்யார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, தீவிர ரசிகராக இருந்தும் வாத்யாரோடு போகாமல் தலைவரின் கட்சியிலேயே விசுவாசமாக இருந்தவர் அப்பா.

எதிர்க்கட்சியாக மாறிவிட்டாலும் வாத்யார் மீதான ரசிப்புத்தன்மை மட்டும் அவருக்குள் அப்படியே தங்கிவிட்டது.

பள்ளியில் சேர்க்கும்போது அலிபாபா என்று சொன்னபோது, ஒருமுறைக்கு இருமுறை கேட்டு, அதுதான் நிஜப்பெயரா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்களாம்.

தனக்கு தன்னுடைய அப்பா நியாயமாக சூட்டியிருக்க வேண்டிய இந்தப் பெயரை சூட்டாத காரணத்தால், தன்னுடைய மகனுக்கு சூட்டி அழகு பார்த்திருப்பதாக பெருமையாக சொல்லியிருக்கிறார்.

“முஸ்லீமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

“எனக்கு சாதியுமில்லை. மதமுமில்லை. நாத்திகன். கழகத்தைச் சார்ந்தவன்” என்று அப்பா பகுத்தறிவு எக்காளமிட்டிருக்கிறார்.

“உங்களுக்கு மதமில்லை சரி. எப்படியோ போகட்டும். பள்ளி வழக்கப்படி பையனுக்கு ஏதாவது சாதி, மதம் போட்டே தீரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார் தலைமையாசிரியர். அனேகமாக அவர் காங்கிரஸ் அனுதாபியாக இருந்திருக்க வேண்டும்.

வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக ‘இந்து’ என்று போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் அப்பா.

அலிபாபா என்கிற பெயரின் காரணமாக அலிபாபா சந்தித்துவரும் துயரங்கள் எண்ணிலடங்கா.

சக பள்ளி மாணவர்கள் பெயரை சுருக்கமாக முதல் இரண்டு எழுத்துகளில் அழைத்து கேலியாக சிரிப்பதுண்டு.

பெயர் ‘அ’வில் ஆரம்பிப்பதால் வருகைப் பதிவேட்டில் முதல் பெயரே அலிபாபாதான்.

அப்போதுதான் வயசுக்கு வந்த சிறுமி தோற்றத்தில் வெடவெடவென்று ஒல்லியாக சிகப்பாக இருக்கும் ஒண்ணாங்கிளாஸ் காஞ்சனா டீச்சர், ‘அலிபாபா’ என்று கீச்சுக்குரலில் அழைக்கும்போதெல்லாம் வகுப்பறையே கொல்லென்று சிரிக்கும்.

இந்த ‘கொல்’ அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளிப் பருவம் முழுவதிலும் நிழல்போல இடைவிடாமல் தொடர்ந்தது என்பதுதான் கொடுமை.

அப்படிப்பட்ட அலிபாபாதான் ஆறு வயசாக இருந்தபோது, இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அதிர்ச்சியடைந்தான்.

ஏனெனில் –

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அப்போது அவனுக்கு வயசு ஆறுதான்.

வாத்யார் ரசிகர் என்கிற முறையில் ‘தாய்க்கு பின் தாரம்’ என்கிற கொள்கையில் உறுதியோடு இருப்பவர் அப்பா.

அம்மாவை நோக்கி அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்.

எல்லா அப்பாக்களும் அவரவர் மனைவியை ‘போடீ வாடீ’ என்று அழைக்கும்போது, இவர் ‘டீ’ போட்டு பேசியதுகூட இல்லை.

வாத்யார், தன்னுடைய நாயகிகளுக்கு சினிமாவில் எத்தகைய மரியாதை கொடுத்து நடித்தாரோ, அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் அப்பா.

அம்மாவை தவிர மற்ற பெண்களை சகோதரி என்றுதான் அழைப்பார்.

அத்தை மற்றும் மாமன் மகள்களைகூட சகோதரி என்று அழைக்குமளவுக்கு வாத்யார்தனமான உயர்ந்த பண்பு கொண்டவர்.

அப்படிப்பட்ட அவரா அம்மாவை அறைந்தார்?

அப்பாவுக்கு இவ்வளவு கோபம்கூட வருமா?

அன்று காலை அலிபாபா வசித்துவந்த கிராமமான மடிப்பாக்கமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

தலைவர் வருகிறார்.

மடிப்பாக்கம் கிராம கிளைக்கழகச் செயலராக இருந்தவர் மோ.அமரசிகாமணி.

ஒருவகையில் தலைவரின் துணைவியாருக்கு உறவுமுறையில் தம்பி.

அரசுப்பணியில் இருந்தவரான அமரசிகாமணி, தன்னுடைய துணைவியார் வள்ளி பெயரில் அரசியலில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்து வரவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவராக்கி அழகு பார்க்க உறுதி பூண்டிருந்தார்.

தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த வாத்யாருக்கு உள்ளாட்சி என்றாலே அலர்ஜி. தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்.

சர்வ அதிகாரத்தோடு நாட்டை ஆள தான் இருக்க, ஊரை மட்டும் ஆள பஞ்சாயத்துத் தலைவர் வேறு தனியாக எதற்கு என்கிற எண்ணம் ஒருபுறம்.

அப்படி ஒருவேளை தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சியான கழகம் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டால் தன்னுடைய பிம்பம் தகர்ந்துவிடுமே என்கிற தயக்கமும் வாத்யாருக்கு இருந்தது.

இருப்பினும் பல்வேறு தளங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்கிற நெருக்குதல் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இத்தகைய நிலையில்தான் அமரசிகாமணி, தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் நிறுத்துவதற்காக தன்னுடைய செல்வாக்கை கழகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியே, இல்லத் திறப்பு விழா.

மோ.அமரசிகாமணி புதியதாக கட்டியிருந்த இல்லத்தை திறந்துவைக்க தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தார்.

தலைவரை வரவேற்க வழியெங்கும் வாழைமரங்கள் கட்டியிருந்தன. இருவண்ண கொடி பறக்காத மரங்களே ஊரில் இல்லை. சுவரெங்கும் தலைவரை வரவேற்று வாசகங்கள் வரையப்பட்டிருந்தன.

அவரை வரவேற்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகளும் குவிந்திருந்தனர்.

அலிபாபா, அப்பாவின் தோள்மீது அமர்ந்திருந்தான். அருகில் ஆரத்தித் தட்டை ஏந்தியவாறு அம்மா.

கூட்டத்தை கிழித்துக் கொண்டு வெள்ளைநிற அம்பாஸடர் கார், தேர் மாதிரி ஊர்ந்து வந்தது.

பத்தாயிரம் வாலா பட்டாசுக்கு திரி கொளுத்தப்பட்டது.

‘டாக்டர் கலைஞர் வாழ்க’, ‘முத்தமிழறிஞர் வாழ்க’ கோஷம் விண்ணை முட்டியது.

புது இல்லத்தின் முன்பாக கார் நின்றது.

ஓட்டுநருக்கு அருகாமையில் இருந்த இருக்கையில் இருந்து உற்சாகமாக தமிழ் இறங்கியது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கையை விரித்து உதயசூரியன் சின்னத்தை காட்டியது.

தொண்டர்களின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ‘டாக்டர் கலைஞர்’ என்று அப்பா, அடித்தொண்டையிலிருந்து ஒலியெழுப்ப, உச்சஸ்தாயியில் ‘வாழ்க’ கோஷம் எதிரொலித்தது.

மாடியிலிருந்து தலைவர் மீது மலர்கள் வீசப்பட்டன.

மோ.அமரசிகாமணி, தலைவருக்கு ஆளுயர மாலை போட்டார்.

அம்மாவும், கட்சிக்காரர் வீட்டுப் பெண்கள் சிலரும் ஆரத்தியெடுத்து தலைவருக்கு திருஷ்டி கழித்தார்கள்.

தலைவர், ரிப்பன் வெட்டி வீட்டுக்குள் வலதுகால் எடுத்து வைத்தார்.

ஹாலில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவருக்கு மட்டும் இருக்கை. முன்பிருந்த ஒலிப்பெருக்கியில், “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…” என்று கரகரத்த குரலில் அவர் பேசத் தொடங்க, கரவொலியில் இல்லம் அதிர்ந்தது. “…ஆகவே, நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர். நாம் புது இல்லத்துக்குள் புகுந்திருக்கிறோம். அராஜக ஆட்சியை, அதர்மத்தின் பேரில் நடக்கும் ஆட்சியை இல்லத்துக்கு அனுப்ப சூளுரை ஏற்போம்” என்று அவர் முடிக்கும்வரை அலிபாபா கைத்தட்டிக் கொண்டே இருந்தான்.

தலைவரை நேரில் கண்ட மகிழ்ச்சியோடு அவர்கள் இல்லம் திரும்பினார்கள்.

“தலைவர் எப்படி தகதகன்னு உதயசூரியன் மாதிரி இருக்காரு பார்த்தியா?” சைக்கிள் மிதிக்கும்போது அப்பா, அம்மாவிடம் சொன்னார்.

“நல்லா செவப்பாதான் இருக்காரு. ஆனா, எம்.ஜி.ஆரு இவரைவிட கலரு” அம்மா சொன்னதும், அப்பா மவுனமானார்.

அந்த மவுனம் அவருக்குள் எரிமலையாய் குமுறி, வீட்டுக்குள் நுழைந்ததுமே வெடித்தது.

“எந்தலைவன் என்ன கூத்தாடியா, எப்பவும் மேக்கப் போட்டுக்கிட்டு திரிய… காட்டுலேயும், மேட்டுலேயும் அலையுற பாட்டாளிகளோட தலைவண்டி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறேதான் சட்டென்று எதிர்பாராத கணத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்தார்.

- எப்போதோ எழுதத் தொடங்கி, பாதியிலேயே முக்கிக் கொண்டிருக்கும் நாவலில் ஓர் அத்தியாயம்...

10 மே, 2018

இதுவா பேச்சு சுதந்திரம்?

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ சாட்டிங் வசதியில் மோடி, தன்னுடைய கட்சியினரிடம், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வரம்பு மீறி பேசாதீர்கள்” என்று வருத்தத்தோடு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.

“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அள்ளித் தெளிக்கும் தான்தோன்றித்தனமான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை, பாஜக தொடர்புடைய சிலரால் கசக்கியெறியப்பட்டதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளிலும் பாஜகவினர் நாடு முழுக்க தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழக அளவில் பார்க்கப் போனால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சமீபகாலமாக தெரிவித்து வரும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும்கூட, அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் தமிழ் மாநிலச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கெல்லாம் தினமும் மன்னிப்பு கேட்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போகிறது.

“திரிபுரா மாநிலத்தில் ரஷ்யத் தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அவர் இட்டிருந்த இந்த கருத்து கட்சிகள் தாண்டி கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதையடுத்து, அது தன்னுடைய கருத்து அல்ல.. தன்னுடைய ‘அட்மின்’ தனக்குத் தெரியாமல் பதிவிட்ட கருத்து என்றுகூறி சமாளித்தார்.

இந்த சர்ச்சையின் வீச்சு அடங்குவதற்குள்ளாகவே எதிர்க்கட்சி பெண் தலைவர் ஒருவர் குறித்து மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான கருத்து ஒன்றை உதிர்த்து பல்வேறு தரப்பினர்களின் கண்டனங்களை பெற்று வருகிறார். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டதாலேயே பெண் ஒருவரின் பிறப்பை சிறுமைப்படுத்தும் ராஜாவின் மனப்போக்குக்கு பாஜகவினர் மத்தியிலேயேகூட கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவத்திலேயே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவாரா என்று வேதனையோடு கேட்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

ராஜாவின் மீது நடவடிக்கை எதுவுமில்லை என்பதாலேயோ என்னவோ, எஸ்.வி.சேகரும் தன் பங்குக்கு பாஜகவின் இமேஜை காலி செய்யும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் மிகவும் ஆபாசமாக தெரிவித்திருந்த கருத்து, நாடு முழுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவெங்கும் இருந்து பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகரின் இந்த ஆபாசமான எண்ணத்துக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக போராடிய தமிழகப் பத்திரிகையாளர்களை கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

தரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு எங்கள் மீது வழக்கா என்று பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்கவே, இப்போது பதிலுக்கு எஸ்.வி.சேகர் மீதும் சில பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சையே அவரது கட்சியினர்கூட மதிக்காத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கட்சியேகூட ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, குடிமக்களுக்கு தந்திருக்கும் 6 உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. கருத்துச் சுதந்திரம் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல. அதற்குரிய சில வரையறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவதூறாகப் பேசுதல், நாகரிகமில்லாத கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தல் போன்றவை சட்டத்தை மீறக்கூடிய செயல்கள், அவற்றுக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் சட்டம். மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்களே அவற்றையெல்லாம் மீறக்கூடிய காட்சிகளைதான் தமிழகத்தில் இப்போது காண்கிறோம். அவற்றுக்கெல்லாம் ‘அட்மின் தவறு’, ‘வன்மையான கண்டனங்கள்’ என்றெல்லாம் அக்கட்சியின் மாநிலத் தலைமை சப்பைக்கட்டு கட்டுகிறதே தவிர, மக்கள் எதிர்ப்பார்க்கும் உரிய நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே திருவள்ளுவர் மக்களுக்கான பேச்சு நாகரிகத்தை கற்பித்திருக்கிறார்.

மேலும் –

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்றும் ஒருவரது உள்ளத் தூய்மையை அவருடைய பேச்சுதான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த இரண்டு திருக்குறளையும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஆயிரம் தடவை ‘இம்போசிஷன்’ எழுதவேண்டும் என்கிற குறைந்தபட்ச நடவடிக்கையையாவது பிரதமர் மோடி எடுத்தால், அவர் கட்சியினரிடம் காட்டும் வாய்மை கண்டிப்புக்கு ஓர் அர்த்தமாவது இருக்கும்.

(நன்றி : குங்குமம்)

தேரா மன்னா! செப்புவது உடையேன்!!

மூன்று மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த அந்த கொடுமையான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அட்டப்பாடி அருகே உணவுப் பொருட்கள் அடிக்கடி திருடு போனதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

உள்ளூர் காட்டின் அருகில் அரிசி மூட்டையோடு மது என்கிற இளைஞரை பார்த்ததுமே அவர்தான் அரிசி திருடர் என்று கருதி பொதுமக்கள் அடித்து நொறுக்கி விட்டனர்.

காவல்துறை வந்து பார்த்தபோது அந்த இளைஞர் அநியாயமாக உயிரிழந்துவிட்டார்.

சற்றே மனநிலை பாதித்திருந்த பழங்குடி இன இளைஞர் அவர். பொதுமக்களின் கேள்விகளுக்கு கோர்வையாக பதில் சொல்ல முடியாததால், அவரை திருடர் என்று கருதி காட்டுத்தனமாக அடித்திருக்கிறார்கள்.

கேரள முதல்வரையே மிகக்கடுமையாக பாதித்த சம்பவம் இது.

“நாகரிக சமுதாயத்தில் இப்படிப்பட்ட கொடுஞ்செயல்கள் எப்படி நடக்கிறது? கேரளாவுக்கே இந்தச் சம்பவம் இழுக்காகி விட்டதே?” என்று வேதனைப்பட்டார்.

மதுவை மக்கள் அடித்தது செல்போனில் வீடியோ காட்சியாக எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதாலேயே பெரும் விவாதமாக எழுந்தது. தினமும் தவறாக கருதப்பட்டு பாதிப்புக்குள்ளாகும் மதுக்கள் எத்தனை எத்தனை பேரோ?

கடந்த வாரம் கூட ஒரே நாளில் இரண்டு செய்திகள்.

வேலூர் மாவட்டத்தில் ‘தீரன் : அதிகாரம் ஒன்று’ படத்தில் வருவதை போல வடமாநில குற்றப் பின்னணி கும்பல் ஒன்று ஊடுருவியிருப்பதாக வதந்தி பரவியது. போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ‘வாட்ஸப்’, ‘ஃபேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களே இப்படியொரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அந்த கும்பல் நகை, பணம் திருடுவது மட்டுமின்றி வீட்டிலிருக்கும் குழந்தைகளையும் கடத்திக்கொண்டு போய்விடுவதாக கூடுதல் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் சுண்ணாம்புப் பேட்டை வழியாக முப்பது வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் நடந்துச் சென்றிருக்கிறார். அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். தமிழ் புரியாததால் அவர் திருதிருவென முழிக்க தர்ம அடி போட்டிருக்கிறார்கள். போலிஸார் வந்து அவரை காப்பாற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த நாள் அதே வாலிபர் மீண்டும் பரசுராமன்பட்டி என்கிற பகுதியில் பொதுமக்களிடம் மாட்டியிருக்கிறார். “இவன் குழந்தை திருடன். கொள்ளை கும்பலை சார்ந்தவன்” என்று யாரோ கூக்குரலிட கூட்டம் சேர்ந்து மீண்டும் தர்ம அடி போட்டிருக்கிறது.

குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிந்து மீண்டும் வந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். படுகாயம் அடைந்த நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் அந்த இளைஞர்.

வடமாநிலத்தில் இருந்து ரயிலில் வந்த அந்த இளைஞர் தவறுதலாக குடியாத்தத்தில் இறங்கி, டவுன் சுற்று வட்டாரத்தில் மொழி தெரியாமல் வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த தகவல் மட்டுமே போலீசுக்கு தெரிந்திருக்கிறது. அவர் பெயர் என்ன, ஊர் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று வேறெந்த தகவலும் தெரியவில்லை.

இதை போலவே திருவள்ளூர் அருகே கொசவன்பாளையம் கிராமத்தில் ஒரு சம்பவம்.

நிஷாந்த் என்கிற சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து மூன்று பெண்கள் அழைத்ததாக தகவல். அந்த மூன்று பெண்களையும் பொதுமக்கள் துரத்த, அவர்களில் ஒருவர் மட்டும் மாட்டினார். கூடிவிட்ட கும்பல் என்ன ஏதுவென்று விசாரிப்பதற்கு முன்பு அடி போடுவதுதானே வழக்கம்?

அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. தகவலறிந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அடி கொடுத்த பொதுமக்கள், சுமார் 200 பேர் திடீரென மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

போலீஸ் விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் மாரியம்மாள். ஐம்பத்து இரண்டு வயதான அவர் கிராமங்களில் ஜோசியம் பார்ப்பது, சுருக்குப்பை விற்பது என்று பணி. அம்மாதிரி கொசவன்பாளையத்துக்கு வந்திருந்த போதுதான் ‘குழந்தை திருடி’ என்று பொதுமக்களாக கருதிக்கொண்டு அடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே பொதுமக்கள் மிகவும் கொந்தளிப்பான ஒரு மனநிலையில் இருப்பதாக தோன்றுகிறது. வன்முறை செய்ய வாய்ப்பு கிடைத்தால், விளைவுகளை பற்றி கவலைப்படாமல் களமிறங்கி விடுகிறார்கள். இவர்களது உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் வகையிலேயே சில கட்சியினரும், அமைப்புகளும்கூட செயல்படுகின்றனர்.

அர்த்தமற்ற போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களும் ‘ஹீரோயிஸம்’ என்று கட்டமைக்கப்படுகின்றன. சிறு அளவில் நடக்கக்கூடிய கும்பல் வன்முறைகள் கூட செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படுவதும், அவற்றை பல்லாயிரம் பேர் பார்ப்பதுமான போக்கு அதிகரித்து வருகிறது. சட்டத்தின் மீதான மரியாதையும், நியாயமாக இருக்க வேண்டிய குறைந்தபட்ச அச்சமும் அகன்று வருகிறது.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் சரிவர விசாரிக்காமல் கோவலனை திருடன் என்றுகூறி கொல்கிறான். கண்ணகியின் கோபம், மதுரையை எரித்தது. தமிழர் காப்பியம் விடுக்கும் இந்த எச்சரிக்கையை, நாம் என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அவசரப்படுபவர்களுக்கும், ஆத்திரப்படுபவர்களுக்கும் அழிவு மட்டுமே நிரந்தரம்.

(நன்றி : குங்குமம்)

27 மார்ச், 2018

ராஜரதா!

ஓர் எழுத்தாளர் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். சில அரசியல் கட்சி இளைஞர்கள் (சாதிக்கட்சி மாதிரி காட்டுகிறார்கள்) அவரை சந்தித்து, அவர் எழுதிய நாவல் ஒன்று குறித்து மிரட்டுகிறார்கள். அந்த நாவலில் தங்கள் இனம் அவமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரிடம் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கடிதம் வாங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் நிஜமாகவே நடந்த இந்த சம்பவத்தை கன்னடத்தில் ஒரு காட்சியாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘ராஜரதா’.

கன்னட சினிமாவின் நியூவேவ் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராக போற்றப்படும் அனுப் பண்டாரியின் இரண்டாவது படம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘ரங்கி தரங்கா’, விமர்சகர்களால் ஆஹாஓஹோவென பாராட்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வசூலிலும் சாதனை படைத்தது. விருதுகளும் குவிந்தன.

‘ரங்கி தரங்கா’வில் தன்னுடைய தம்பியா நிரூப் பண்டாரியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இரண்டாவது படமான ‘ராஜரதா’விலும் அவர்தான் ஹீரோ. தம்பியுடையான் ஹீரோ கால்ஷீட்டுக்கு கவலைப்படான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்னையின் காரணமாக கே.பி.என். நிறுவனத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் கன்னட வெறியர்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘ராஜரதா’ எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வன்முறைக்கு நேரடியாக சம்மந்தப்படாத வேறு பின்னணி பிரச்சினை இருந்திருக்கலாம் என்று இயக்குநர் கணிக்கிறார். அதாவது ‘முதல்வன்’ படத்தில் இடம்பெறும் வன்முறையை, வேறொரு பிரச்சினையை திசைமாற்ற முதல்வரே உருவாக்குவது மாதிரி.

கன்னடத்திலேயே கன்னடர்களின் வன்முறையை கண்டித்து படமெடுத்திருப்பது துணிச்சலான முயற்சிதான். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியின் வன்முறை பின்னணி இசையில் ‘தமிழண்டா’ என்றெல்லாம் கோஷம் ஒலிக்கிறது.

‘ராஜரதா’ என்பது பேருந்தின் பெயர். பேருந்தே கதை சொல்வதை போன்று (புனீத் ராஜ்குமார் குரலில்) திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மூர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாதிப்பும் இயக்குநருக்கு நிறைய இருக்கிறது.

கேட்பதற்கு சூப்பராக தெரியும் இந்த கதை, திரைக்கதையை ஐரோப்பிய ரொமான்ஸ் காமெடி பாணியில் ரொம்பவும் சுமாராகதான் எடுத்திருக்கிறார் பண்டாரி. ஒருவேளை உலகப்பட சூனாகானாக்கள், ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி மெச்சிக் கொள்ளலாம்.

வழக்கமாக கன்னட சினிமா ஹீரோக்கள்தான் சுமாராக இருப்பார்கள். ஆனால், இதிலோ ஹீரோயின் அவந்திகா ஷெட்டி, ‘தேவுடா’ என்று ரசிகர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் வகையில் ஆயா லுக்கில் இருக்கிறார். படம் முழுக்க லெக்பீஸ் தெரியும் வண்ணம் அவர் கவர்ச்சி காட்டியிருந்தாலும், ரசிகனுக்கு இந்த கவர்ச்சி இனம் தெரியா அமானுஷ்ய உணர்வையே முதுகுத்தண்டில் ஏற்படுத்துகிறது. குளோஸப்பில் காஞ்சனா பேய் கணக்காக பயமுறுத்துகிறார். கன்னட காஞ்சனாவான ‘கல்பனா’வின் ஹீரோயின் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக ஹீரோ நிரூப் பண்டாரி, அம்சமான அமுல் பேபி லுக்கில் ரசிகைகளின் கனவுகளை ஆளக்கூடிய தோற்றத்தில் சுறுசுறுவென்றிருக்கிறார்.

படத்தின் ஹைலைட்டே, ஆர்யாதான். தமிழில் நடிக்கத் தெரியாத ஹீரோ என்று பெயரெடுத்திருக்கும் இவர், கன்னடத்தில் அனாயசமான தாதாவாக நடிப்பில் பின்னுகிறார்.

அரசியல் படங்களை எடுக்க சினிமாவின் தொழில்நுட்பம் மட்டும் போதாது. அடிப்படை அரசியலும், கிராம கிளைக்கழகத்தின் வார்டு நிலவரம் வரை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘அரசியல்வாதிகள் என்றாலே மோசம்தான்’ என்று அமெச்சூராக ‘ராஜரதா’தான் எடுக்க முடியும், ‘அமைதிப்படை’கள் சாத்தியமாகாது போகும்.

9 மார்ச், 2018

எதற்கு சினிமா ஸ்ட்ரைக்?

கடந்த இரு வாரங்களாக தமிழ் சினிமா உலகம் ஸ்ட்ரைக்கால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. புதிய படங்கள் வெளிவராததால், திரையரங்குகள் பழைய படங்களை போட்டு ஒப்பேத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், டிஜிட்டல் ஒளிப்பரப்புக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்தி வருகிறார்கள்.

அதென்ன டிஜிட்டல் ஒளிப்பரப்பு?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பிலிம் புரொஜெக்டர்களைதான் நம் தியேட்டர்களில் பயன்படுத்தி வந்தோம். பிலிம் பிரிண்ட், விலை மிகவும் அதிகம். தோராயமாக ஒரு பிரிண்டுக்கு 60,000 முதல் 80,000 வரை (பிலிமின் தரத்தைப் பொறுத்து விலை) செலவாகும்.

அதாவது நூறு தியேட்டர்களில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால் (பகல் காட்சியாக மட்டும் இருந்தாலும் சரி, நான்கு காட்சிகளாக இருந்தாலும் சரி) பிலிம் செலவு மட்டுமே அறுபது லட்சம் ஆகும்.

எனவேதான் ரஜினி, கமல் திரைப்படங்கள் கூட நாற்பது முதல் ஐம்பது தியேட்டர்கள் வரைதான் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தது. தமிழ் சினிமாவில் முதன்முதலாக 100 பிரிண்டுகள் போடப்பட்டதே ‘தளபதி’ படத்துக்காகதான்.

படம் எல்லா ஊரிலும் நன்றாக ஓடி வசூலைக் குவித்தால் ஓக்கே. இல்லையேல் பிரிண்டுக்காக செய்யப்பட்ட செலவு அம்பேல்தான். இந்த பிரிண்டுகளை கெமிக்கலில் போட்டு பராமரிக்கவும் தனியாக செலவழிக்க வேண்டும்.

இந்த நிலை 2005 காலக்கட்டத்தில் மாறத் தொடங்கியது. பிலிம் தேவைப்படாமல் டிஜிட்டல் முறையில் ஒளிப்பரப்பும் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய பிலிம் புரொஜெக்டர்களை நீக்கி, புதிய டிஜிட்டல் புரொஜெக்டர்களை நிறுவி, சாட்டிலைட் மூலமாகவோ அல்லது ஹார்ட் டிஸ்க்கில் சேமித்தோ படத்தை திரையில் ஒளிப்பரப்பும் முறைதான் டிஜிட்டல் சினிமா. யூஎஃப்ஓ, கியூப் போன்றவை டிஜிட்டல் சினிமாவை கையாளும் நிறுவனங்கள்.

இந்த முறையில் பிலிமுக்கான பழைய செலவு இல்லை. மாறாக ஒரு காட்சிக்கு ரூ.325 (வரிகள் தனி) ஒளிப்பரப்புக் கட்டணமாக சம்மந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்துக்கு கட்டவேண்டும். இந்த முறை வந்தபிறகு 100 பிரிண்டு, 200 பிரிண்டு என்று பார்த்து பார்த்து செலவு செய்துக் கொண்டிருந்த முறை மாறியது. பெரிய நடிகர்களின் படங்களை 500 அரங்குகளில்கூட ரிலீஸ் செய்ய முடிகிறது. முதல் மூன்று நாட்களில் படம் செல்ஃப் எடுக்காவிட்டால் தூக்கிவிடலாம், பிரச்சினையில்லை. முந்தைய பிலிம் முறையில் பிரிண்ட் போட கட்டிய காசு ஆத்தில் போட்ட மாதிரிதான்.

புதிய டிஜிட்டல் முறையில் ஓர் அரங்கில் பகல் காட்சியாக ஒரு படத்தை ஒரு வாரத்துக்கு (அதாவது மொத்தம் 7 காட்சிகள்) ஓட்ட வேண்டுமென்றால் ரூ.2,275 கட்டினால் போதும். ஒரு நாளைக்கு 4 காட்சிகள் அடிப்படையில் வாரத்துக்கு 28 காட்சிகள் என்றால் ரூ.9,000. ஒரு தியேட்டரில் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் ஓட்டிக் கொள்வேன், மொத்தமாக ஒரே தொகையை கட்டிவிடுகிறேன் என்றால் ரூ.22,500 கட்டிவிடலாம். இங்கு நாம் குறிப்பிட்டிருப்பது கியூப் நிறுவனத்தின் கட்டணம். வேறு சில நிறுவனங்களில் இது சற்றே வேறுபடலாம்.

அவ்வகையில் பார்க்கப் போனால் 500 தியேட்டர்களில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய ஒளிப்பரப்புக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் இருந்தால் போதும். பிலிமாக இருக்கும் பட்சத்தில் மூன்று கோடி ரூபாய் முதல் நான்கு கோடி ரூபாய் ஆகியிருக்கும். எக்ஸிபிஷனுக்கான கட்டணம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக டிஜிட்டல் ஒளிப்பரப்பு முறையால் குறைந்திருக்கிறது. பிலிமை ஒப்பிடுகையில் பளிச்சென்ற படமும், துல்லியமான இசையும் பார்வையாளர்களுக்கு கூடுதல் போனஸ்.

அப்படியிருக்க தயாரிப்பாளர்கள் ஏன் இந்த முறையை எதிர்த்து ஸ்ட்ரைக் செய்கிறார்கள்?

விளம்பர வருமானம்தான் காரணம்.

முன்பு பிலிம் முறையில் தியேட்டர்கள் இயங்கியபோது, உள்ளூர் தொழிலதிபர்களிடம் விளம்பரம் வாங்கி ஸ்லைடாக போட்டு சொற்பமாக கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

டிஜிட்டல் சினிமா வந்தபோது அதற்கான புதிய புரொஜெக்டர் உள்ளிட்ட செலவுகளை செய்ய தியேட்டர்கள் யோசித்தன. இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் அவர்களது செலவு சுமையில் பாதியை ஏற்றுக் கொண்டனர். அதாவது பத்து லட்ச ரூபாய் செலவாகிறது என்றால், தியேட்டர் ஐந்து லட்சம் கொடுத்தால் போதும். மீதி பணத்துக்கு அந்த தியேட்டரில் டிஜிட்டல் நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இடைவேளையில் விளம்பரங்கள் போட்டு அவர்களே கட்டணம் வாங்கி சமாளித்துக் கொள்வார்கள் என்பது மாதிரி ஏற்பாடு. இந்த முறையில் பெரிய விளம்பரங்களை வாங்கி இந்தியா முழுக்க டிஜிட்டல் முறையில் படம் ஒளிப்பரப்பும் தியேட்டர்களில் விளம்பரங்களை ஒளிப்பரப்பினார்கள்.

அந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் புதிய ஒப்பந்தங்களை தியேட்டர்காரர்களோடு டிஜிட்டல் நிறுவனங்கள் செய்துக் கொண்டார்கள். விளம்பரத்தில் வரும் வருவாயை டிஜிட்டல் நிறுவனங்களும், தியேட்டர்காரர்களும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

இதுதான் தயாரிப்பாளர்களை உறுத்தியது. அந்த விளம்பர வருவாயில் தங்களுக்கும் பங்கு தேவை என்று உரிமைக்குரல் எழுப்பினார்கள். தயாரிப்பாளருக்கும், இடைவேளை விளம்பரங்களுக்கும் சம்மந்தமில்லை என்பது தியேட்டர் மற்றும் டிஜிட்டல் ஒளிப்பரப்பு நிறுவனங்களின் வாதம்.

ஏனெனில், ஒரு படம் என்பது ஒரு வாரமோ ஒரு மாதமோதான் தியேட்டரில் ஓடப்போகிறது. ஒரு வருடத்தின் 52 வாரங்களுக்கு வெவ்வேறு படங்களை தியேட்டர்களில் போடுகிறார்கள். சில படங்களுக்குதான் கூட்டம் வருகிறது. பெரும்பாலான படங்களுக்கு ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் நிலைமையில், ஏதோ நிவாரணத் தொகையாக எங்களுக்கு இந்த வருமானம் கிடைக்கிறது, அதில் மண்ணை போடலாமா என்று தியேட்டர் உரிமையாளர்கள் கொதிக்கிறார்கள்.

படத்துக்குள்ளேயே செய்யப்படும் விளம்பரங்களுக்கு (infilm ad, ஒரு காட்சியில் ஷாருக்கான் ஹ்யூண்டாய் கார் ஓட்டினால் அதற்கு கணிசமான கட்டணம்) தயாரிப்பாளர்கள் பெறக்கூடிய கோடிக்கணக்கான வருவாயை எங்களோடு பகிர்ந்துக் கொள்வார்களா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

தியேட்டர்காரர்களால் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை நேரடியாக பெறமுடியாது என்பதால், அதற்கான கட்டமைப்பையும் ஆற்றலையும் கொண்டிருக்கும் டிஜிட்டல் நிறுவனங்களோடு தங்களுக்கு கிடைக்கும் வருவாயை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் பக்கம் நியாயமே இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தியேட்டர்களுக்கு கிடைக்கக்கூடிய சொற்ப இடைவேளை விளம்பரங்களில் பங்கு கேட்கிறோம் என்று தெரிந்தால், மக்கள் காறி உமிழ்வார்களே என்றுதான் ‘டிஜிட்டல் கட்டணம் அதிகம்’ என்று உண்மைக்கு மாறான ஒரு தகவலை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பால் தியேட்டர்களுக்கு ஏற்றப்படும் கடும் சுமையால் பல அரங்கங்கள் கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும் உருவெடுத்து விட்டன. போதாக்குறைக்கு மோடி அரசாங்கத்தின் ஜிஎஸ்டி, எடப்பாடி அரசின் உள்ளூர் வரி காரணமாக தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் குறைந்துக்கொண்டே வருகிறார்கள். சினிமாவை டிவியில் பார்த்துக் கொள்ளலாம் என்று தாய்மார்கள் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விட்டார்கள். தமிழ் நாட்டில் இப்போது 900 தியேட்டர்கள் இருந்தாலேயே அதிகம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காக இருந்தது.

தியேட்டர்களுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளால் சினிமாக்காரர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. எல்லா அரங்கங்களையும் மூடிவிட்டு, இவர்கள் எடுக்கும் படங்களை தெருவில் ஸ்க்ரீன் கட்டியா நமக்கு காட்டப் போகிறார்கள்?