29 டிசம்பர், 2018

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி!

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி  என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.

ப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.

அவ்வளவுதான் மேட்டர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.

மினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா?’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.

தப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்டையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.

ஓக்கே.

விஷயத்துக்கு வருவோம்.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.

அவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.

இலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில்  வியப்பேதுமில்லை.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (kக்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.

புலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.

இலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா?” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.

கடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா?” என்று நலம் விசாரிக்கிறார்கள்.

இப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.

அப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.

“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.

பாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.

இதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.

முன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.

1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.

அந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சைக்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.
யாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.


அதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார். 
உப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.

என்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை?

ஒன்றுமில்லை.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில்  கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

நினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

அந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.

நான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.

சூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.

கம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்கொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.

அந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செய்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.

உடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/?p=4169

லிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா?

எவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.

நாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.

ஆனால் -

ஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.

இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

ஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.

வேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.

------

“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டியபோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.

இருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.

ஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.

‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.

ரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.

இந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.

‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.
நூலின் பெயர் : பதிவுகள்
எழுதியவர் : கி.ராஜநாராயணன்
தேர்வும், தொகுப்பும் : கழனியூரன்
வெளியீடு : அன்னம், தஞ்சை.
மேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.

---

வாசித்து விட்டீர்களா? மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.

18 டிசம்பர், 2018

ராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்!


வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைதான் திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறது. சம்மந்தப்பட்ட நபர்கள்தான் மாறுபடுகிறார்கள்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு அருகில் ஆலம்பாக் பகுதியைச் சார்ந்த 75 வயது மூதாட்டி லீலாவதி சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வேயில் பணிபுரியும் அவரது மகன், தன்னுடைய தாயை ஓர் அறையில் பூட்டிவிட்டு கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டாராம்.

சோறு, தண்ணீர் இல்லாமல் பட்டினியில் வாடி லீலாவதி மரணித்திருக்கிறார்.

லீலாவதி, ஓஹோவென்று ராணி மாதிரி ஒரு காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். அவருடைய கணவர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் மேலவை உறுப்பினராம்.

கிட்டத்தட்ட இதே மாதிரி சம்பவம், நம்முடைய தமிழக அரசியலிலும் நடந்திருக்கிறது. சமீபகால வரலாறு ஏதேனும் உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாம் குறிப்பிடும் சம்பவம் நடந்து இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது.

மதுரையை முப்பத்தாறு ஆண்டுகள் தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு ஆண்டவர் திருமலை நாயக்கர். கூடல்மாநகரை தலைநகரமாக மட்டுமின்றி கலைநகரமாகவும் மாற்றிக் காட்டியவர் இவர்தான்.

திருமலை நாயக்கரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் வெறும் நாலு மாதங்களே ஆட்சியில் இருந்து காலமானார்.

மன்னர் பொறுப்பை அடுத்து ஏற்ற 16 வயது சொக்கநாத நாயக்கர், தன் தாத்தா திருமலை நாயக்கரைவிட பெரும் புகழ் பெறக்கூடிய வகையில் வீரமும், கலைமனமும் வாயத்தவராக விளங்கினார். போர்முனையில் பெரும் தீரம் காட்டினார்.

தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகள் மங்கம்மாவை காதலித்தார். விஜயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்துவிட, அவர் மீது போர் தொடுத்து வலுக்கட்டாயமாக பெண்ணெடுக்க முற்பட்டார். தன் தந்தை போரில் தோல்வியடைய, அவருடைய வீழ்ந்த தலை மீதேறி, சொக்கநாத நாயக்கரை கைப்பிடிக்க மறுத்து மங்கம்மா தன்னைதானே தீயில் மாய்த்துக் கொண்டார்.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த காதல் தோல்வியால் மதுரை மன்னர் சொக்கநாதர், பித்து பிடித்தாற்போல ஆனார். அவரை சகஜநிலைக்குக் கொண்டுவர வேறொரு மங்கம்மாளை மணமுடித்து வைத்தனர்.

அவர்தான் பிற்காலத்தில் மதுரை கண்ட மகத்தான பெண்ணரசி மங்கம்மா.

திருமணமான பிறகும்கூட (தாம்பத்தியமெல்லாம் சரியாக நடந்தும்கூட) தஞ்சை மங்கம்மாவின் நினைவை, சொக்கநாதரின் மனசிலிருந்து இந்த மங்கம்மாவால் முடியவே இல்லை.

அந்த நினைவிலேயே தன்னை இழந்துவிட்ட சொக்கநாதர், மிக இளம் வயதிலேயே காலமானார். அப்போது மங்கம்மாளின் கைகளின் மூன்று மாத கைக்குழந்தையாக அடுத்த மன்னர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இருந்தார்.

அந்தக் காலத்தில் மன்னர்கள் மறைந்தால் கூடவே உடன்கட்டை ஏறும் சதி சடங்கு வழக்கத்தில் இருந்தது.

மங்கம்மாவோ அரசியல் குழப்பங்களை தவிர்க்க உடன்கட்டை ஏற மறுத்தார். தன்னுடைய குழந்தைக்கு அரசியல் கற்பித்து, தகுதியுள்ள மன்னனாக உருவாக்க முடிவெடுத்தார்.

முத்துவீரப்ப நாயக்கர், பட்டத்துக்கு வரும்வரை தானே நாட்டை மறைமுகமாக ஆண்டார். மங்கம்மா அரசியலில் ஈடுபட்டிருந்த அதே காலத்தில் மதுரை அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். அக்கம் பக்கம் நாடுகளின் படையெடுப்பு, அவுரங்கசீப்பின் முகலாய அரசின் நேரடி மிரட்டல் ஆகியவற்றை சமாளித்தார். போர்களில் வெற்றியும், அரசியல் நடவடிக்கைகளில் ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தி மதுரையை காத்தார்.
மக்களுக்கு அன்ன சத்திரம், கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு மானியம், பெரிய நகரங்களை மதுரையோடு இணைக்க சாலைகள், கால்நடைகளுக்கு சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள், ஊர் தோறும் ஊருணி, குளம், ஏரி, கிணறு என்று கட்டமைப்புகளை மேம்படுத்தினார். இன்றும்கூட மதுரையில் மங்கம்மா காலத்து சாதனைகள் வழிவழியாக போற்றிப் பாடப்படுகின்றன.

மங்கம்மாவின் மகன் முத்துவீரப்ப நாயக்கருக்கு 15 வயதில் பட்டம் சூட்டப்பட்டது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி எண்பதடி பாய்ந்தது. நாயக்க மன்னர்களிலேயே பெரும் வீரமும், அறிவுத்திறனும், மக்கள் மீதான பாசமும் கொண்டவராக கணிக்கப்பட்டார் முத்துவீரப்பன். கடற்படை அமைப்பது, மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால் தமிழகத்தின் வரலாறே மாறியிருக்கக்கூடும்.

ஆனால் –

அவரும் தன்னுடைய தந்தை சொக்கநாதரை போலவே மிகவும் இளம் வயதில் எவரும் எதிர்பாராவிதமாக காலமானார். முத்துவீரப்பன் மறைந்தபோது அவரது மனைவி முத்தம்மா கர்ப்பிணியாக இருந்தார். அடுத்த மன்னனை வயிற்றில் சுமக்கும் ராணியை, உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார் மங்கம்மா.

தன்னுடைய மாமியாரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டாக ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு, தற்கொலை செய்து மறைந்தார் முத்தம்மா.

கைக்குழந்தையாக தன்னுடைய மகனை வளர்த்த அதே கதைதான் மீண்டும் மங்கம்மாவுக்கு. இம்முறை பேரன் விஜயரங்க சொக்கநாதன்.

குழந்தை விஜயரங்கனை மன்னனாக பெயரளவுக்கு பட்டம் சூட்டிவிட்டு, மங்கம்மாவே ஆட்சி புரிந்தார். மகனை கண்டிப்பாக வளர்த்த அம்மாவான மங்கம்மா, பேரனை ரொம்ப செல்லமாக வளர்த்த பாட்டியாக இருந்துவிட்டார்.

அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு. இதனால், நாயக்க வம்சத்தின் ஆட்சியே மதுரையில் முடிவுறுவதற்கு காரணமாகவும் அமைந்தார்.

எந்நேரமும் அந்தப்புரம், நண்பர்களோடு உல்லாசம் என்று மைனராக வளர்ந்தார் விஜயரங்கன் நாயக்கர். ஒரு பெண் தங்களை ஆள்வதா என்று நினைத்த அந்தக்கால ஆணாதிக்க அரசியல் பிரமுகர்கள், விஜயரங்கனை தங்களுடைய கைப்பாவை ஆக்கிக் கொண்டனர்.

எப்போதும் பேரனுக்கும், பாட்டிக்கும் ராஜ்ய பரிபாலனம் குறித்து பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருக்கட்டத்தில் அதிகாரம் மொத்தத்தையும் கைப்பற்றிய விஜயரங்கன், தன்னுடைய பாட்டி மங்கம்மாவையே தனிமைச்சிறையில் அடைத்தார். அவருக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.

கட்டிய கணவனோடும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. கண்ணுக்கு கண்ணாக வளர்த்த மகனும் அல்பாயுசில் மறைந்துவிட்டான். செல்லமாக வளர்த்த பேரனே தன்னை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று கடைசிக்காலத்தில் புலம்பி, புலம்பியே காலமானார் அந்த மகத்தான மாதரசி.

அந்நாட்களில் மங்கம்மா ஏதேனும் தெரியாத்தனமாக தன் பேரனை சபித்துவிட்டாரோ என்னவோ, விஜயரங்க சொக்கநாதர் பிள்ளை பாக்கியம் இல்லாதவராகிப் போனார். தன்னுடைய பாட்டியின் மரணத்துக்கு தானே காரணமாகிவிட்ட கழிவிரக்கம், அவரை முழுமையாக இறைச்சேவையில் ஈடுபடுத்தியது.

இருபத்தைந்து ஆண்டுகள் பெயருக்கு ஆட்சியில் இருந்து காலமானார். அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அவரது மனைவி மீனாட்சி சில காலம் அரசு பொறுப்பேற்றார். ஆற்காடு நவாப் படையெடுத்து வந்து மீனாட்சியை வென்றதோடு 200 ஆண்டுகால மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்நது.

(நன்றி : குங்குமம்)

24 நவம்பர், 2018

மஞ்சள் நீராட்டுவதற்கு முன்...

உங்கள் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டாள் என்பதற்காக, ஊரைக்கூட்டி மஞ்சள் நீராட்டு சடங்கு நடத்துவதெல்லாம் நல்ல விஷயம்தான். நடத்தாதீர்கள் என்று சொல்லுவதற்கு சட்டத்துக்கு கூட உரிமையில்லை. உங்கள் மரபையும், கலாச்சாரத்தையும் நீங்கள் பேணிக்காப்பது உங்களது பிறப்புரிமை.

ஆனால் –

காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏனெனில் –

சமீபத்திய அவலச் செய்தி ஒன்று இது குறித்து பேசவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை சூறையாடி சென்ற கஜா புயல், மதிப்பிட முடியாத அளவுக்கு சேதங்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தனிப்பட்ட வகையில் பல்லாயிரம் மனிதர்களின் வாழ்வை மீண்டும் ‘அ’விலிருந்து தொடங்கவேண்டிய மிகப்பெரிய இயற்கை அவலமாக கஜா அமைந்துவிட்டது.

பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சார்ந்த செல்வராஜ் – பானுமதி தம்பதியினருக்கு கஜா கொடுத்த துயரம் மிகவும் அவலமானது. இவர்களது ஒரே மகள் விஜயலட்சுமி பூப்பெய்தி இருக்கிறார். அவர்களது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்வதற்கு முன்பாக விஜயலட்சுமிக்கு தனி குடிசை கட்டி தங்க வைத்திருக்கிறார்கள். கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரணயத்தில் கொடூரத் தாக்குதல் நடத்திய கஜா புயலால், தென்னை மரம் ஒன்று குழந்தை தங்கியிருந்த குடிசை மீது வீழ்ந்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமியின் மீது வீழ்ந்த தென்னை மரம் அவளது உயிரைப் பறித்திருக்கிறது. தனிக்குடிசை கட்டாமல் தங்களுடன் வைத்திருந்தால், தங்கள் ஒரே மகள் உயிருடனாவது இருந்திருப்பாளே என்று அவளது பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையின் கோரத்தாண்டவம் பறித்திருப்பது நூற்றுக்கணக்கான உயிர்கள். இயற்கைப் பேரிடர் தவிர்க்க முடியாதது.

ஆனால் –

பூப்பெய்தும் சடங்குக்காக தனிக்குடிசை கட்டி விஜயலட்சுமியை தங்க வைத்திருக்காவிட்டால், அவளது மரணத்தை அந்தக் குடும்பம் தவிர்த்திருக்க முடியும்.

இந்தக் காலத்திலும் என்றோ அந்தந்த காலக்கட்டத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு வழிமுறைகளை நாம் இன்றும் கேள்வியின்றி பின்பற்றி வரவேண்டுமா என்கிற கேள்வியை விஜயலட்சுமியின் இழப்பு ஏற்படுத்துகிறது.

ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது இயற்கை. அறிவியல்ரீதியாக ஒரு பெண் குழந்தை, இனப்பெருக்கத்துக்கு தயாராகிறாள் என்பதற்கான சமிக்ஞை, அவ்வளவுதான்.

தென்னிந்திய சமூக அமைப்பில் பெண் வயதுக்கு வருவதை படோடபமாக ஊர், உறவைக் கூட்டி விருந்து வைத்துக் கொண்டாடுவது என்பது நூற்றாண்டுக்கால வழக்கம்.

மாதவிடாய் வரும் நாட்களில் நோய்த்தொற்று எளிதாக பெண்ணுடலை பாதிக்கக்கூடும். எனவேதான் முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும்போது, அவளை தனிமைப்படுத்தி அவள் ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் வைத்தார்கள். மருத்துவம் நவீனமான காலக்கட்டத்துக்கு முன்பாக நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவை இல்லாத காலக்கட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாக இருந்தது என்பது உண்மைதான்.

மேலும், அவளுக்கு அப்போது கர்ப்பப்பையை உறுதியாக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை வழங்குவதும் வழக்கமாக இருந்தது. இந்த காலக்கட்டங்களில் ஊட்டமான உணவு மூலமாக குழந்தை பிறப்புக்கு வாகாக இடுப்பு எலும்புகளுக்கு ஏற்படுத்தக்கூடிய உறுதி, பின்னாளில் அவளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக இருக்கும். எனவேதான், பத்திய முறையிலான உணவு வழங்குவதற்கு வசதியாக சில நாட்கள் முறையான ஓய்வு வழங்கப்பட்டது.

மேலும், திடீரென தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு குழந்தை குழம்பியிருக்கும். அது என்னவகையான மாற்றம் என்பதை அத்தை, பெரியம்மா, சித்தி போன்ற குடும்பத்தின் மற்றப் பெண்கள், அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாகவும், அக்குழந்தைக்கு தனிமை ஏற்படுத்தப்பட்டது. பெரிய மனுஷியாகி விட்டதால் நாணப்படுவாள் என்பதற்காக தந்தை உட்பட மற்ற ஆண்களை அவள் எதிர்நோக்கி தர்மசங்கடப்படுவதையும் தவிர்க்க இந்த தனிமை உதவியது.

அடுத்து விமரிசையாக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டு விழா.

‘பெண்ணின் திருமண வயது 18’ என்றெல்லாம் முறையான சட்ட அறிவுறுத்தல்கள் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு பெண், பெரிய மனுஷி ஆனதுமே திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. என்னுடைய வீட்டில் திருமணத்துக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்று அப்பெண்ணின் தந்தையார் விளம்பரப் படுத்துவதற்காகவே மஞ்சள் நீராட்டு விழா என்கிற சடங்கு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எல்லாம் இணையத்தில் மாப்பிள்ளை தேடக்கூடிய வசதியெல்லாம் இல்லைதானே?

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் நம் பாட்டிக்கு, ஏன் நம் அம்மாவுக்கே கூட நடந்தவைதான்.

இப்போது நம் மகள்களுக்கும் இதையெல்லாம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா, இந்தக் காலத்துக்கு இவையெல்லாம் பொருத்தமானவைதானா என்றுதான் நாம் யோசிக்க வேண்டும்.

நம் குழந்தை பிறக்கும்போதே நோய்த்தொற்றுகளுக்கு எதிரான முறையான தடுப்பூசிகளை போட்டுவிடுகிறோம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஊட்டமான உணவுகளை வழங்குகிறோம். அந்தக் காலத்தில் சிக்கன், முட்டை என்பதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை சமைக்கக்கூடிய உயர்தர உணவு. இப்போது குறைந்தது வாரம் ஒரு முறையாவது கறியெடுக்க கசாப்புக் கடை வரிசையில் நிற்கிறோம்தானே?

அதுவுமின்றி, அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வெளியுலகத் தொடர்பு இன்றி வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்கள். இப்போது பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்கிறார்கள். உலக நடப்பை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையை தெரிவு செய்யக்கூடிய சமூக அந்தஸ்தை எட்டியிருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் சமம் என்று இயற்கை வழங்கியிருக்கக்கூடிய இயல்பு நீதியை, சமூகமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஒரு ஆண் குழந்தை எப்படியோ, அப்படியேதான் பெண் குழந்தையும் என்கிற விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது.

தூய்மை உள்ளிட்டக் காரணங்களால் அந்தக் காலத்தில் கற்பிக்கப்பட்ட மாதவிடாய் தீண்டாமையை இன்னும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அந்நாட்களில் அவர்கள் தூய்மையைப் பேணுவதற்கு வசதியாக நாஃப்கின்கள் பெருமளவு புழக்கத்துக்கு வந்துவிட்டன. இன்னும் அவர்களை வீட்டுக்குள் புழங்க விடாமல் செய்வதற்கு ஏதேனும் காரணம் நம்மிடம் மிச்சமிருக்கிறதா?

வயதுக்கு வருவது குறித்து அவர்களுக்கு முன்பு இருந்த அச்சமெல்லாம் இன்றைய நாகரிக உலகில் அகன்று, உடல் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

நகர்ப்புறக் குடும்பங்களில் இந்த மாற்றங்களின் விளைவுகளை கண்கூடாக நாம் காண முடிகிறது.

எனினும் –

இன்னமும் கிராமப்புற மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படாததின் ஓர் விளைவாகவே அணைக்காடு விஜயலட்சுமியின் இழப்பைக் காண வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதோ ஒரு காலத்தில் முன்னோர் அனுஷ்டித்தார்கள் என்பதற்காக அர்த்தமற்ற சடங்குகளை இன்றும்கூட நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விசேஷங்களை கொண்டாடலாமா என்று அதில் சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு விருப்பமிருந்தால் செலவு செய்துக் கொண்டாட வேண்டியது பெற்றோரின் கடமையும்கூடதான்.

ஆனால் –

அதன் பேரில் பெண் குழந்தைகளை தனிமைப்படுத்துவது, தீண்டாமை அனுசரிப்பது போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் இனியும் வேண்டாமே? இவற்றையெல்லாம் தவிர்ப்பதின் மூலமாகதான் நாம் நாகரிகமான சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை நிரூபிக்க முடியும்.

(நன்றி : குங்குமம்)

23 நவம்பர், 2018

ஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான்..

..இன்று முதல் ஈ.வெ.ராமசாமி!

அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 1200 பணியிடங்களுக்கு சமீபத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வுத் தாளில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வி :

“திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?”

இதற்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு எழுதுபவர் தேர்வு செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டிருந்த நான்கு பதில்கள் :

A) இ.வெ.ராமசாமி நாயக்கர்

B) ராஜாஜி

C) காந்திஜி

D) சி.என்.அண்ணாதுரை

தந்தை பெரியாரின் இனிஷியலில் இடம்பெறும் ‘ஈ’ என்பது ஈரோட்டைக் குறிக்கும். அதையேகூட கேள்வித்தாள் தயாரித்த மேதாவி அதிகாரிகள் ‘இ’ என்று தவறாகக் குறிப்பிட்டதைக் கூட விட்டுவிடலாம்.

ஆனால் –

பெரியாரின் பெயருக்குப் பின்னால் அவரது சாதியை குறிப்பிட்டிருப்பதுதான் தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.

தந்தை பெரியார் யார் என்பதை உணர்ந்தவர் யாவருமே உள்ளம் கொதித்துப் போய்விடக்கூடிய அடாத செயல்பாடு இது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் சாதிய இறுக்கத்தில் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்த சூழலில் பிறந்தவர் தந்தை பெரியார். 94 வயதில் தான் இறுதிமூச்சை விடும் நொடி வரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து, சாதியை விட்டொழிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி வந்தவர்.

அவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் சாதி ஒழிப்புச் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார், சாதியொழிப்பு லட்சியத்துக்காகவே கடவுளை, மதத்தை எதிர்க்கும் கடுமையான நிலைப்பாட்டுக்குச் சென்றார்.

“அவருக்கு முன்பான தலைவர்களில் இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்களே சாதியமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் செயல்பட்டவர்கள். பெரியார்தான் சாதியொழிப்பைப் பேசிய ஒடுக்கப்பட்டோர் அல்லாத முதல் தலைவர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிடுகிறார்.

பெரியார், ஈரோட்டில் விவசாயிகளும் வியாபாரிகளும் நிறைந்த இடைநிலைச் சாதியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஈரோட்டிலேயே வணிகத்துக்கு பிரசித்தி பெற்றிருந்த பணக்காரக் குடும்பம். சிறுவயதிலிருந்தே சாதிரீதியிலான ஒடுக்குதலை அவர் எதிர்கொண்டதில்லை.

தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஒருமுறை கோபித்துக்கொண்டு காசிக்கு செல்கிறார். தான் பிறந்த சாதியின் காரணமாக அங்கே சில அவமானங்களை எதிர்கொள்கிறார். சாதி ஒரு கொடிய நோய் என்கிற புரிதலை அச்சம்பவங்கள் அவருக்கு ஏற்படுத்துகின்றன.

இங்கே நீதிக்கட்சி வலுப்பெற்று திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாயாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் பெரியார், முற்போக்குப் பிரச்சாரங்கள் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அவர் ஈரோட்டின் நகராட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பொதுவான மக்கள் சேவையில்தான் ஈடுப்பட்டிருந்தார். அதன் மூலமாக கொங்குப் பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவராக உருவெடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தந்தை பெரியாரை தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டது. தீண்டாமைக்கு எதிரான கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் தலைமை தாங்கிப் போராட பெரியாரை பணித்தது.

‘வைக்கம் கோயில் கதவுகள் ஒடுக்கப்பட்டோருக்கும் திறக்கப்பட வேண்டும்’ என்று களமிறங்கிய பெரியாரை நசுக்க அன்றைய திருவாங்கூர் அரசாங்கம் சாம, பேத, தான, தண்டங்கள் அத்தனையையும் பயன்படுத்தி தோல்வியடைந்தது.த

வைக்கம் வீரராக பெரியார் பெற்ற வெற்றி, இந்திய வரலாற்றிலேயே சமத்துவத்துக்கான போராட்டங்களுக்கு சரியான பாதையை அடையாளம் காட்டியது.

எனினும், பெரியாரின் வழிமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருந்தது. ‘சத்தியாக்கிரகம்’ மாதிரியான அகிம்சை முறை போராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான மென்மையான எதிர்ப்பு ஆகியவை காங்கிரஸுக்கும், பெரியாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்தே காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ கண்டார் பெரியார். காங்கிரஸார், தங்கள் அடையாளமாக வெள்ளைச்சட்டை அணிய, பெரியாரோ தன்னுடைய தொண்டர்களை கறுப்புச்சட்டை அணியச் சொன்னார்.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகரில் பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முதன்முறையாக சுயமரியாதை மாநாடு நடத்தினார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ப.சுப்பராயன், இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார்.

தமிழக அரசியலில் பெரியார் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான கொள்கை விளக்க அறிவிப்புகள், அம்மாநாட்டில்தான் தீர்மானங்களாக வரையறுக்கப்பட்டன.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மதம் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்தும் பேசினார்கள். சுயமரியாதை திருமணத்துக்கு ஆதரவாகவும், விதவை மறுமணத்தை ஊக்குவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பங்களிப்பு செய்த மாநாடு அது. இந்த மாநாட்டின் விளைவாகவே திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாலு கால் பாய்ச்சலில் அமைந்தது.

அந்த மாநாட்டில் பெரியார் பேசியதை, சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ திரைப்படம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

“ஒரு சமத்துவ உலகத்தை நிர்மாணிக்கிறதுக்காக நான் உங்களையெல்லாம் அழைக்கிறேன். இனிமேல் இந்த சமூகத்துலே பிராமணன், சூத்திரன், பஞ்சமன்னு யாருமே இருக்கக்கூடாது.

அதனாலே.. இன்னையிலிருந்து நம்ம பேர்களுக்குப் பின்னாடி இருக்கிற சாதி அடையாளங்களை நாம எல்லாம் நீக்கிடறோம். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய நான், இன்று முதல் ஈ.வெ.ராமசாமி”

பெரியார் இவ்வாறு முழங்கியதைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் தங்கள் பெயருடன் இருந்த சாதி அடையாளத்தை மேடையிலேயே துறந்தார்கள்.

அவ்வாறாக தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் துறந்த சாதிப்பட்டத்தை தான் தமிழ்நாடு தேர்வாணையக் குழு அதிகாரிகள், மீண்டும் அவரது பெயரோடு சேர்க்கும் முயற்சியைதான் குரூப்-2 தேர்வு வினாத்தாள் மூலமாக செய்திருக்கிறார்கள்.

சாதியைக் கடந்து வரும் தமிழகத்தின் முற்போக்கு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, மீண்டும் ஓர் நூற்றாண்டுக்கு முந்தைய சாதிய, சனாதன அடக்குமுறை நிலையை ஏற்படுத்த விரும்பும் விஷமனம்தான் இவ்வளவு வக்கிரமாக சிந்தித்திருக்க முடியும்.

பெரியார் மறைந்தும் அவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்துக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. இதற்கு காரணமான கருப்பு ஆடு யார் என்பதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே சரியான செயல்பாடு ஆகும்.

(நன்றி : குங்குமம்)

8 நவம்பர், 2018

96

என் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு ஆங்கில சேனலுக்காக வேலை செய்கிறேன்.

அசைன்மென்ட் விஷயமாக யாங்கூனுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். சென்னை சர்வதேச விமான நிலையம். ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்த நேரத்தில்தான் அவளைப் பார்த்தேன்.

அவளை என்று ஒருமையிலா சொன்னேன்?

அவள்களைப் பார்த்தேன் என்று பன்மையில் திருத்தி வாசியுங்கள். முகங்களைப் பார்க்கவில்லை. முதுகுகளைத்தான் பார்த்தேன்.

எங்கேயோ கண்ட முதுகுகள்!

ஜானகியும், மைதிலியுமா?

யெஸ். அப்படித்தான் தோன்றுகிறது.

அன்று 35 எம்.எம். இப்போது 70 எம்.எம். அகன்ற திரை. அகலம்தான் வித்தியாசம்.

நொடியில் சிலிர்த்த ஆழ்மனசு, 22 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஃப்ளாஷ்பேக்கில் பயணித்தது.

அது 96ம் வருடம். பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு. தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளி. புழுதிவாக்கம். பரங்கிமலை ஒன்றியம். காஞ்சிபுரம் மாவட்டம்.

தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுது. தமிழய்யா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

கைக்கிளை, பெருந்திணை, பசலை என்றெல்லாம் போடு போடென போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து சீட்டு சதீஷ், குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். கண்களைத் திறந்து கொண்டே எப்படித் தூங்குவது என்று அவனிடம்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

அய்யாவோ கர்மமே கண்ணாக தலைவன், தலைவி என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவி குஷ்பூ. அய்யாவின் தலைவன், தலைவியெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள்.

வகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதிப் பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்து விட்டதை அய்யா கவனித்து விட்டார். இதுமாதிரி சமயங்களில் சட்டென்று கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்குவது அவர் வழக்கம்.

எருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்துத் தருவது மாதிரி ‘சூடாக’ ஏதாவது மேட்டர் பிடித்து, வகுப்பறை கும்பகர்ணன்களை எழுப்புவார். அன்றும் அப்படித்தான்.

“எலேய் ராமச்சந்திரன், உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அவளுக்கு உன்னைப் புடிச்சிருக்குன்னு எப்படிய்யா தெரிஞ்சுக்குவே?”என்னை நோக்கி அணுகுண்டு வீசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற உணர்வுகளெல்லாம் கலந்து கட்டி புயலாய் என் நெஞ்சுக்குள் வீசின. ஒட்டுமொத்த வகுப்பும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்து வைக்க, தயக்கத்தோடு எழுந்தேன் “ம்ம்... அய்யா... அது வந்து…” காலால் கோலம் போட்டேன்.

“ஆம்புளைப் புள்ளே தானே? என்னலே வெக்கம்?”

“வந்து... வந்து... என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு’ன்னு சொல்லுவா...”

“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா?”

நான் அவமானப்படுவது கண்டு வகுப்பு குதூகலம் அடைந்தது.

டி.எஸ்.பாலையா மாதிரி விஸ்தாரமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தார் தமிழய்யா. அவர் நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று மினுக்கும்.

‘இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் நடக்கப் போவுது’ என்று ஒட்டுமொத்த வகுப்பறையும் சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தது.

“தெரியலீங்க அய்யா. நீங்களே சொல்லிடுங்க...”

“மூதி. இதெல்லாம் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதுக்குதான்டா சங்கத்தமிழ் படிக்கணுங்கிறது. நான் பாடம் நடத்துனா எல்லாப் பயலும் தூங்குறீங்க. நீங்க எப்படி காதலிச்சி, கல்யாணம் பண்ணி, புள்ளை பெத்து வாழப்போறீங்களோ. தமிழைப் படிச்சவனுக்கு தமிழே வழிகாட்டும்…”

அய்யா ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, சொம்பில் நிறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரே திரும்ப ஆரம்பிக்கட்டும் என்று நாங்களெல்லாம் உன்னிப்பானோம்.

“ஒரு தெருவோட இந்த முனையிலே இருந்து நீ நடக்குற. இன்னொரு முனையிலே இருந்து உன்னை விரும்பற பொண்ணு நடந்து வர்றா. இடையிலே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரு தாண்டி நடக்குறீங்க. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது.

ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா. அவ அப்படிப் பார்க்குறாளான்னு நீ உறுதிப்படுத்திக்கணும்...”

“திரும்பிப் பார்க்கலைன்னா அய்யா?” சதீஷ், ஆர்வமாகக் கேட்டான்.

“இந்த எருமை அந்தப் பசுவோட மனசுலே இல்லேன்னு அர்த்தம்!”

அட. காதலிக்கிறவளின் மனசில் நாம் இருக்கிறோமா என்று தெரிந்துகொள்வதற்கு இவ்வளவு சுலபமான வழியா?

‘இதயம்’ முரளிக்கு இந்த சூத்திரம் தெரிந்திருந்தால், எத்தனையோ படங்களின் கிளைமேக்ஸே மாறியிருக்குமே?

அய்யா, மீண்டும் பாடத்தைத் தொடர என் மனசோ ஜிவ்வென்று றெக்கை கட்டி ராக்கெட் மாதிரி சஞ்சாரமற்ற சூனிய வெளியில், சத்தமற்ற முத்தங்களைப் பறக்கவிட்டுக் கொண்டே பயணிக்கத் தொடங்கியது.

அன்று பள்ளி முடிந்தது. டியூஷனுக்குச் செல்ல வேண்டும். சதீஷும் என்னோடு டியூஷனுக்கு வருவான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் பேசாமலேயே மிதந்து வந்துகொண்டிருந்தேன்.

“மச்சி. தமிழய்யா சொன்னதை டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறேண்டா...” என்றேன்.

கொஞ்சம் ஆவலோடு கேட்டான். “ஜானகி கிட்டேயா?”

ராமச்சந்திரனுக்கு ஜானகிதான் ஹீரோயினாக முடியும் என்பதெல்லாம் விதி. களிமண் மண்டையன் சதீஷுக்கே இது தெரிந்திருப்பது கடவுளின் சதி. அனைத்துக்கும் மேல் நான் ஜானகியிடம் ஃப்ளாட் ஆகியிருந்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கடலளவு காதல் அது. மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு. அதற்கு இருபக்கத்திலும் 3 மில்லிமீட்டர் சுற்றளவுக்கு வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். வட்ட முகம். சிவப்பு என்று சொல்லிவிட முடியாது. கருப்பு என்றும் கழற்றிவிட முடியாது. மாநிறம். வெள்ளை ஜாக்கெட். பச்சைப் பாவாடை தாவணியில் அவளைப் பார்த்ததுமே ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மனசுக்குள் லூப்பில் ஓடும்.

சதீஷ் என் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தான்.

“மச்சீ. தப்பா நினைச்சுக்காதே. அது திம்சுக்கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே! வேலைக்கு ஆவும்னு நெனைக்கறீயாடா?”

அவன் சொன்னதும் என் பர்சனாலிட்டியை நினைத்து நானே கழிவிரக்கம் கொண்டேன். இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும்போது ‘ரசிகன்’ விஜய் மாதிரிதான் என் முகமும் இருந்தது. கன்னத்தில் லேசாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லை என்றாகிவிடுமா? அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார்? அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா? பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது!”

“சரி மச்சான். உன் நம்பிக்கையைக் கெடுப்பானேன். இப்போ ஜானகி, சைக்கிள் எடுக்க வருவா இல்லே. தமிழய்யாவோட ஃபார்முலாபடி நடந்துட்டா நீங்க லவ்வர்ஸுன்னு ஏத்துக்கறேன்...”

நல்ல வேளையாக அந்தக் காலத்தில் ஒவ்வொரு விஜய்க்கும், அஜீத்துக்கும் சின்னி ஜெயந்த், விவேக், கரண் மாதிரி காதலுக்கு உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் அமைந்திருந்தார்கள். எனக்கு சதீஷ்.

‘ஆ’ பிரிவிலிருந்து ஜானு வருவதற்கு பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் ‘அ’ பிரிவு ஆண்கள் எல்லாரும் கிளம்பியபிறகே, ‘ஆ’ பிரிவு பெண்களை பாதுகாப்பு நிமித்தமாக புஷ்பவல்லி மேடம் அனுப்புவார்.

இந்த விஷயத்தில் மேடம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். மேடத்தின் இதுமாதிரி தீவிரமான கண்டிஷன்களால் கடுப்பான சில மாணவர்கள், வெறுத்துப்போய் அந்த மேடத்தையே சைட் அடிக்கும் சம்பவங்களும் சமயங்களில் நடந்ததுண்டு.

அன்றைய பத்து நிமிடம், பத்து ஆண்டுகளாய் எனக்குக் கழிந்தது. பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பியிருந்தேன். கடிக்க மேலும் நகம் இல்லாமல், கால் நகங்களைக் கடிக்கலாமா என்று எண்ணிய வேளையில், பச்சைத் தாவணிகள் பட்டாம்பூச்சிகளாகப் பறந்துவரத் தொடங்கியிருந்தன. ஜானு, தூரத்தில் ஒளியாய்த் தெரிந்தாள்.

புத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. ட்ரிம் செய்த புருவம். இமைகளின் இருபுறமும் லேசாக மையைத் தீற்றியிருந்தது அன்று கூடுதல் கவர்ச்சியாக எனக்குப் பட்டது. அவள் சைக்கிள் எடுக்கும்போது அவளது கண்பார்வையில் படும்படி நின்றுகொண்டேன்.

சதீஷ், பாதுகாப்பாக தலைமறைவாகி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து விடுவித்தாள். தமிழய்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது.

“வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது...”

ஹேண்டில்பாரை லாவகமாகப் பிடித்து சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், பெடலை மிதிக்க ஆரம்பித்தாள்.

‘போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே’ என்று பேத்தோஸாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் பாட ஆரம்பித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஜானு என்னைவிட்டு தூரமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். ‘திரும்பிப்பாரு ஜானு, திரும்பிப்பாரு ஜானு’ என்று மனசுக்குள் மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தேன். திருப்பத்துக்கு இன்னும் பதினைந்து, இருபது அடி தூரம்தான்.

திரும்பிப் பார்க்காமல் போய்விட்டால் எனக்கு மனசு தாங்காது. சதீஷ் வேறு கிண்டலடித்தே சாகடிப்பான். சட்டென்று அனிச்சையாக சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.

திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக எனக்கே எனக்கான ஜானு ஒன்றரை நொடி திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒன்றரை நொடிக்குள் அவள் சிந்திய புன்னகையை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.

“மச்சான், சக்சஸ்டா!” சதீஷைப் பார்த்து உற்சாகமாகச் சொன்னேன்.

“போடா இவனே. பெல்லு அடிச்சா பொண்ணு என்னா... கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம்தாண்டா திரும்பிப் பார்க்கும்...”

மெதுவாக மிதக்க ஆரம்பித்திருந்த நான், சதீஷ் சொன்ன யதார்த்தமான உண்மையைக் கேட்டதும் பொத்தென்று தரையில் விழுந்தேன்.

அதன்பின் பல சந்தர்ப்பங்கள். பிரேயரில், டியூஷனில், கோயிலில், பிளேகிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க ‘ஆ’ பிரிவுக்குச் சென்ற நேரத்தில் என்று ஏகப்பட்ட இடங்களிலும் என்னைப் பார்க்கிறாளா என்று பார்த்துப் பார்த்து ஏங்கினேன்.

ஒருவேளை ஸ்கூல் யூனிஃபார்மில் என்னுடைய பர்சனாலிட்டி கொஞ்சம் கம்மியாக இருப்பதால்தான் பார்க்க மறுக்கிறாளோ என்று சந்தேகம். சதீஷுக்கும் சொல்லாமல் ஒரு ரகசியத் திட்டம் தீட்டினேன். மானை, மான் வசிக்கும் இடத்திலேயே மடக்குவது என்று முடிவெடுத்தேன்.

டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அந்த சனிக்கிழமை காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகி விட்டேன். ட்யூஷனுக்குக் கிளம்புவதாக வீட்டில் சொல்லி, நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்காக ரஃப்பாக ஒரு ரஃப் நோட்டை கையில் வைத்துக்கொண்டு, பிஎஸ்ஏ சைக்கிளைக் கிளப்பினேன்.

ஜானுவை பல மாதங்களாக புலனாய்வு செய்ததில் எனக்குக் கிடைத்திருந்த தகவல்கள் ஆயிரம் பக்க ஆவணமாக இருந்தன. அதன்படி பள்ளி விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில், அவள் வீட்டின் தெருமுனை கைப்பம்பில் தண்ணீர் இறைக்க வருவாள்.

ஒன்பதே முக்காலுக்கு கைப்பம்புக்கு இருபத்தைந்து அடி தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிலைகொண்டேன். வேண்டுமென்றே சைக்கிள் செயினைக் கழற்றிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. வெட்டியாக சைக்கிளோடு நின்றுகொண்டிருந்தால் போவோர், வருவோர் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஏரியாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்.

பத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ ஜானு, குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண உடையில் கண்டபோது கூடுதல் கவர்ச்சி தெரிந்தது.

அவளுக்கும் அப்படித்தான் என்னைப் பார்க்கும்போது இருக்குமென்ற நினைப்பே கிளுகிளுவென்றிருந்தது. ஜானுவின் கூடவே ஒரு வாண்டு. அச்சு அசல் ஜானு மாதிரியே இருந்தாள். அவளை மினியேச்சர் செய்தமாதிரி இருந்தவளின் பெயர் மைதிலி என்று பிற்பாடுதான் அறிந்தேன்.

‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது, மனசுக்குள்ளே பஞ்சவர்ணக் கிளி பறக்குது...’ ஜானு, கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்க என் மனசோ கூட்ஸ் வண்டியாக தடதடத்துக் கொண்டிருந்தது.

படபடப்பைக் குறைக்க சைக்கிள் செயினை மாட்டிவிட்டு பெடலை வேகமாகச் சுற்றி விட்டுக் கொண்டிருந்தேன்.

ஜானு என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை மாறு வேடத்தில் வந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லையோ? என்னுடைய தன்னம்பிக்கையின் டெம்ரேச்சர் குறையத் தொடங்கியது.

குடத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் இருவரும் கிளம்பினார்கள்.

‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு ஜானு...’ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டுமே கேட்பது போல சன்னமான குரலில் பிதற்ற ஆரம்பித்தேன். என் பிரார்த்தனை வீண் போனது. தெருமுனையை எட்டிவிட்டாள் ஜானு. இதற்கு மேல் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.

சங்கக்கால தமிழில் எழுதப்பட்ட காதல் சூத்திரமெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகவில்லை. திருப்பத்தில் திடீர் திருப்பம். திரும்பிப் பார்த்தாள்.

‘பார்த்தாள்’ என்று ஒருமையிலா சொன்னேன்?

‘பார்த்தார்கள்’ என்று பன்மையில் திருத்திக் கொள்ளுங்கள்.

ஆமாம். அக்கா, தங்கை இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்!

இருவருமே காதலோடு சிரித்தது மாதிரிகூட எனக்குத் தோன்றியது. தமிழய்யாவின் குரலில் மீண்டும் அசரீரி.

“ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா..!”

யாங்கூன் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைக் கடந்து போன இருவர் ஜானகி, மைதிலி மாதிரிதான் தோன்றுகிறார்கள்.

மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராம ஜெயம் மாதிரி, ‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு மைதிலி...’ என்று மந்திரம் ஓத ஆரம்பிக்கிறேன்.

ம்ஹூம். இது 2018. ஃபார்முலாவெல்லாம் மாறிவிட்டது போலிருக்கிறது. அவர்கள் ஜானுவும், மைதிலியும்தானா என்றுகூடத் தெரியவில்லை.

எனக்கும் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. ஜானுவின் குரலில் போர்டிங்குக்கு யாரோ அழைக்கிறார்கள்.

Tata bye bye!

(நன்றி : குங்குமம்)