25 பிப்ரவரி, 2019

அது ஒரு கொண்டாட்டமான காலம்!


“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

“சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்”

திரையில் நம்பியாரின் ‘பஞ்ச்’ டயலாக்குக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர் கவுண்டர் கொடுக்கிறார்.

மக்கள் ‘ஓ’ வென்று கத்துகிறார்கள். விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

மணல் பரப்பப்பட்ட தரையில் ஓம்பிரகாஷ் மாமாவின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனான நான் அதிர்ந்து, முழித்து எதிரே வண்ணத்திரையில் கையில் வாளோடு ஜெயலலிதாவை நோக்கி புன்னகையும், நம்பியாரை நோக்கி ஆவேசமுமாக நின்றுக் கொண்டிருந்த வாத்யாரை கண்டு எல்லோரையும் போல ஆர்ப்பரித்தேன். சண்டைக்காட்சி முடிந்தவுடன் மீண்டும் மாமாவின் மடியில் தூக்கம்.

அதிகாலை ஒரு மணிக்கு படம் முடிய ஓம் பிரகாஷ் மாமா, பாலாஜி அண்ணா, செந்தில் அண்ணா, பிரபா அண்ணா என்று அனைவரும் மாறி மாறி என்னைத் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். வழிநெடுக வாத்யாரின் வாள்வீச்சு, நம்பியாரின் நரித்தந்திரம், ஆர்.எஸ்.மனோகரின் கம்பீரமான வில்லத்தனம், ஜெயலலிதாவின் அசரடிக்கும் பேரழகு என்று பேசிக்கொண்டே வந்தார்கள். அரைத்தூக்கத்தில் அவர்களது பேச்சு கொடுத்த ஆர்வம்தான், இன்றுவரை என்னை சினிமாப் பைத்தியமாக வைத்திருக்கிறது.

என்னைப் போன்று நாற்பதைத் தொட்டுவிட்டவர்களுக்கு இதுபோல நிறைய பால்யகால நினைவுகளை டூரிங் கொட்டாய்கள் வாழ்நாள் முழுக்க விதைத்திருக்கிறது. மறக்க முடியாத இரவு. என் நாடி, நரம்பு, ரத்தம், சதையில் எல்லாம் சினிமாவை குளுகோஸாக ஏற்றிய இரவு.

பரபரப்பான சென்னை மாநகராட்சியின் அங்கமாகிவிட்ட மடிப்பாக்கத்தில் தனலட்சுமி என்றொரு டெண்டு கொட்டாய் இயங்கியது என்று சொன்னால், அங்கே வசிக்கும் இன்றைய இளையதலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். அந்த கொட்டாய் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இப்போது டிடிஎஸ், க்யூப் டிஜிட்டல் புரொஜெக்ஷன், ஏசி உள்ளிட்ட நவீன வசதிகளோடு குமரன் என்கிற தியேட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரை டிக்கெட் 50 காசு. பெஞ்ச் 75 காசு. இரும்பு சேர் 1 ரூபாய் என்பது கட்டண விவரம். சைக்கிள் டோக்கன் 25 காசு என்று நினைவு. எட்டணாவுக்கு ருசியான ரவி சோடா ஃபேக்டரின் ஜில்லென்ற சோடா கிடைக்கும். நிறைய வெங்காயம் போட்ட சமோசா நாலணாதான். முறுக்கு, அவித்த வேர்க்கடலை எல்லாம் ரொம்ப சல்லிசான ரேட்டு. ஒரு குடும்பமே வெறும் பத்து ரூபாயில் தனலட்சுமியில் சந்தோஷமாக படம் பார்க்கலாம்.

இன்று அங்கேயே இருக்கும் குமரன் தியேட்டரில் பார்க்க வேண்டுமானால் பார்க்கிங், டிக்கெட் கட்டணம், Food & beveragesக்கு எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாயாவது மொய் வைக்க வேண்டியிருக்கிறது.

என்னுடைய அப்பா, வெறும் பத்து ரூபாயில் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்த சந்தோஷத்தை, நான் என் குடும்பத்துக்கு நூறு மடங்கு செலவழித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வெறும் முப்பத்தைந்து ஆண்டுகளில் இப்படியொரு விலையேற்றம் வேறு எந்தத் துறையிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மடிப்பக்கத்தில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்கவே பெரிய நகரங்களின் புறநகர், சிறுநகர், கிராமங்களில் எல்லாம் டூரிங் கொட்டாய்கள் சக்கைப்போடு போட்ட காலம் ஒன்று உண்டு. பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களோடு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று எங்கள் கால ஹீரோக்களின் படங்களையெல்லாம் நாங்கள் நூற்றுக்கணக்கில் அங்கேதான் மகிழ்ச்சியாக குடும்பமாக கண்டுகளித்தோம். வாரத்துக்கு இரண்டு படம் மாற்றுவார்கள். ஒரு பழைய படம், வார இறுதிக்கு புதிய படம் என்று காம்பினேஷன். வாரத்தில் எல்லாக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு, இரவு 9 மணிக்கு என்று இரண்டு காட்சிகள். சனி, ஞாயிறு மட்டும் மதியம் 3 மணிக்கு சிறப்பு மேட்னி காட்சி உண்டு.

சினிமாவைத் தவிர்த்தால் எங்களுக்கெல்லாம் வேறென்ன பொழுதுபோக்கு இருந்தது?

அதே மடிப்பாக்கம் தனலட்சுமி, சில ஆண்டுகள் கழித்து கீழ்க்கட்டளை என்கிற ஊரில் இயங்கியது. டெண்டு கொட்டாய்களுக்கு, மற்ற நிரந்தர அரங்குகளுக்கு தருவதைப் போல பர்மணென்ட் லைசென்ஸ் கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு டெம்பரவரி லைசென்ஸ்தான் தருவார்கள். லைசென்ஸ் முடிந்தபிறகு ஏற்கனவே இயங்கிய இடத்திலோ அல்லது அருகில் வேறேதும் புதிய வசதியான இடத்திலோ மீண்டும் குடிசை போட்டு ‘புதுப்பொலிவோடு’ படம் ஓட்டுவார்கள். கடைசியாக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கீழ்க்கட்டளை தனலட்சுமி தியேட்டரில் சிம்பு நடித்த ‘தம்’ பார்த்ததாக நினைவு. இப்போது தனலட்சுமி, அங்கே இல்லை.


‘நியூஸ் மினிட்’ ஆங்கில இணைய இதழில் வந்திருக்கும் கட்டுரை ஒன்று மீண்டும் டூரிங் கொட்டாய் நினைவுகளில் என்னை உலவச் செய்திருக்கிறது.

இப்போது டூரிங் கொட்டாய்களே தமிழகத்தில் இல்லையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேலூர் மாவட்டத்தின் புத்துக்காடு என்கிற ஊரில் கடந்த 1985ல் இருந்து இன்றுவரை ‘கணேஷ் திரை அரங்கம்’ என்கிற டூரிங் கொட்டாய் சிறப்பாக நடந்து வருகிறது என்று தகவல் கொடுக்கிறது ‘நியூஸ் மினிட்’.

பி.கே.கணேசன் என்பவர், இந்திய திரையரங்கை நடத்தி வருகிறார். புத்தூர், ‘பராசக்தி’யை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாளின் சொந்த ஊர். பெருமாள், உயிரோடு இருந்தவரை சிவாஜி வருடாவருடம் இந்த ஊருக்கு வருவாராம். எனவே, ஊர் முழுக்க சிவாஜி ரசிகர்கள் என்கிறார்கள்.


பெரிய திரையரங்குகளில் இடம்பெற்றிருப்பதை போல சிறப்பான வெண்திரை, கியூப் புரொஜெக்ஷன், டிடிஎஸ் ஒலியமைப்பு (7.1 சேனல்) என்றெல்லாம் இருந்தும் இன்னமும் பழமை மாறாமல் மணல் தரை வசதியோடு இந்த அரங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது.

நகரங்களில் இருக்கும் நவீன தியேட்டர்களில் வாரநாட்களில் ரசிகர்கள் இல்லாமல் அரங்கங்கள் காற்றாட, இன்னமும் நூற்றுக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு படங்கள் இங்கே திரையிடப் படுகின்றனவாம். விஜய், ரஜினி, அஜித் போன்ற ஹீரோக்களின் படங்கள் திரையிடப்படும் போதெல்லாம் 400, 500 டிக்கெட் கூட ஒரு காட்சிக்கு விற்கப்படுவதுண்டாம். தரை டிக்கெட் 25 ரூபாய், 30 ரூபாய் சேர் டிக்கெட், 40 ரூபாய் பாக்ஸ் டிக்கெட் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

புத்தூர் ‘கணேஷ் திரை அரங்கம்’ போல தமிழகம் முழுக்க மலிவு விலையில் படம் காட்டக்கூடிய டெண்ட் கொட்டாய்கள் மீண்டும் உருவாக்கப்படுவதே, ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற திரையுலகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும். ஒவ்வொரு படத்துக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு குறைவாக கிடைத்தாலும், நிறைவாக நீண்டகாலத்துக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

திரையுலகம் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். அந்த பொற்காலம் மீண்டும் திரும்ப ‘சி’ சென்டர் தியேட்டர்கள் நிறைய பெருகுவதே ஒரே வழி.


(நன்றி : குங்குமம்)

7 ஜனவரி, 2019

போதையேறிப் போச்சி…

வரலாற்றுக்கு நல்லவர், கெட்டவர் பாகுபாடெல்லாம் இல்லை. அந்தந்த காலக்கட்டத்து சம்பவங்களை அது தன்னியல்பாகவே, எதிர்காலங்களுக்கான வரலாற்றுப் பெட்டகமாக பதிவு செய்துக் கொள்கிறது. அச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை காலம் முடிவு செய்துக் கொள்ளும்.

போதை உலகின் பேரரசனாக எண்பதுகளில் உலகை அச்சுறுத்திய பாப்லோ எஸ்கோபார், நல்லவனா, கெட்டவனா?

‘நாயகன்’ படத்தின் நாயகன் வேலுநாயக்கர் சொன்னதுமாதிரி, “தெரியலியேப்பா” என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

போதை கெட்டதுதான். மனிதகுலத்தை சிந்திக்க விடாமல் செயலிழக்கச் செய்வதுதான். குறைவான போதை, அதிகமான போதை என்றெல்லாம் இதில் பாகுபாடு பிரிப்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டே.

சட்டவிரோதம் என்று அந்தக் காலத்தில் அமெரிக்கா சுட்டிக் காட்டிய எஸ்கோபாரின் செயல்பாடுகளை, பின்னாளில் அரசாங்கங்களே சட்டப்பூர்வமான வரையறைகளை செய்து நடத்திக் கொண்டிருக்கும் கூத்தை எங்கே போய் அடித்துக் கொள்வது?

அரசாங்கமே மது விற்கிற மாநிலத்தில் இருந்துக்கொண்டு, பாப்லோ எஸ்கோபாரை கெட்டவன் என்று கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்திட முடியவில்லை.

உலகப்போர்கள், மனிதக்குலத்தின் சாபக்கேடு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் உலகப்போரும் சரி, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நடந்த இரண்டாம் உலகப்போரும் சரி. இன்றுவரையில் அவற்றுக்கு தொடர்பே இல்லாத மனிதர்களிடம்கூட அவர்களே அறியாதவகையில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும்கூட அந்த தாக்கம் இருக்கத்தான் போகிறது.

குறிப்பாக இரண்டாம் உலகப்போரை சொல்லலாம். அந்தப் போரின் இறுதியில் பெரும்பாலும் அரசர்கள் இல்லாமல் போனார்கள். பல நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்தது. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டுமென மக்களே முடிவெடுக்கக்கூடிய சுதந்திரம் கிடைத்தது என்றெல்லாம் ஆயிரத்துச் சொச்சம் நற்பலன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இதே அளவுக்கு எதிர்பலன்களும் உண்டு என்பதுதான் கொடுமை.

போதை என்பது மனிதன் தோன்றிய நாளிலிருந்தே இருந்துக்கொண்டுதான் இருந்தது. மறுக்கவில்லை.

ஆனால் –

அபரிதமான வளம் கொழிக்கும் போதைத்தொழில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்தான் கார்ப்பரேட் வழிமுறைக்கு வந்தது. உண்மையைச் சொல்லப்போனால் மற்றத் தொழில்கள் கார்ப்பரேட்மயமாவதற்கு ஒருவகையில் வழிகாட்டியதே போதைத்தொழில்தான். அதில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித்துறையை (R & D) எல்லாம் உருவாக்கி கச்சிதமாக தொழில் செய்தவர் பாப்லோ எஸ்கோபார்.

கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கெல்லாம் பின்னணியில் நிச்சயம் பெரிய தலைகள் இருப்பார்கள் என்பதை நாம் புதியதாக உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

அமெரிக்காவும், ரஷ்யாவும் குடுமிப்பிடிச்சண்டை போட்ட பனிப்போர் காலக்கட்டத்தில் அரசியல் நிலையற்ற நாடுகளில் ஏராளமான புரட்சிகர குறுங்குழுக்கள் தோன்றின. இவை இந்த பெரும் வல்லரசுகளின் ஜால்ராவுக்கு ஏற்றமாதிரி தாளம் தட்டின.

ஒருக்கட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் சில ஒப்பந்தங்களுக்கு உடன்படும் போதெல்லாம் அவர்கள் உருவாக்கிய குழுக்களை அப்படியே அனாதையாக விட்டன. இவர்களை நம்பி தொழிலுக்கு வந்தவர்கள், சொந்த அரசுகளை பகைத்துக்கொண்டு அமைப்பை தொடர்ந்து நடத்தமுடியாமல் கைவிட்டார்கள். அல்லது சட்டத்துக்கு விரோதமான தொழில்களில் இறங்கி, தங்கள் இலட்சியத் தாகத்தை கைவிட்டு சமூகவிரோதிகள் ஆனார்கள்.

அவ்வகையில் தென்னமெரிக்க நாடுகளில் கலகக்காரர்களில் கணிசமான பகுதியினர் பின்னாளில் போதைத்தொழில் செய்யத் தலைப்பட்டனர். அமெரிக்காவின் ஒரு தலைமுறையையே போதையால் சீரழித்தனர். ஒருகாலத்தில் தங்களுக்கு அல்லக்கையாக இருந்தவர்களே, தங்கள் நாட்டை சூறையாடத் தொடங்கிவிட்டனரே என்கிற கோபத்தில் அமெரிக்கா துப்பாக்கியை தூக்கியது. சிலர் அடங்கிப் போனார்கள். சிலர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் மாவீரர்களாக தங்களை கட்டமைத்துக் கொண்டார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் பாப்லோ எஸ்கோபாரை நாம் கவனிக்க வேண்டும். அவர், முக்கியத்துவம் பெறுவதும் இந்த வரலாற்றுக் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால்தான்.

தினகரன் குழுமத்தில் நான் பணிக்குச் சேர்ந்த சமயத்தில், வெவ்வேறு விதமான பணிகளை செய்ய என்னை பணிப்பார் எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். அவர்கள். இதையெல்லாம் நமக்கு ஏன் கொடுக்கிறார் என்று நான் குழம்பியதுண்டு. பின்னாளில் எனக்கு சில பெரிய பொறுப்புகளை கொடுப்பதற்கான பயிற்சியாகதான் அவற்றையெல்லாம் தந்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளன், எல்லாத்துறை குறித்த அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.

திடீரென ஒருநாள், “பாப்லோ எஸ்கோபார் பற்றி, ‘குங்குமம்’ வார இதழில் ஒரு தொடர் எழுது” என்று பணித்தார்.

“கொலம்பியா பற்றியோ, பாப்லோ எஸ்கோபார் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாதே?” என்று தயங்கினேன்.

“அதெல்லாம் தெரியாது. நீதான் எழுதுகிறாய்..” என்று சொல்லி பார்க்கவேண்டிய படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வாசிக்க வேண்டிய நூல்கள் ஆகியவற்றை அவரே எடுத்துச் சொன்னார்.

தொடர் எழுதுவதற்கு நான் தயாராவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அன்றிலிருந்து எஸ்கோபாருக்குள் மூழ்கினேன். stockholm syndrome என்பார்களே, அந்தப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டேன். அந்நாட்களில் பாப்லோ, எனக்கும் காட்ஃபாதர் ஆகிவிட்டார். அவருக்கு வெறித்தனமான ரசிகன் ஆகிப்போனேன். மூன்றே மாதங்களில் தயாராகி எம்.டி.யிடம், “ஆரம்பிக்கிறேன் சார்” என்றேன்.

பெரிய எழுத்தாளர்களுக்கு செய்வதைப் போல தமிழகமெங்கும் சினிமாப் படங்களுக்கு ஒட்டுவதை போல ‘காட்ஃபாதர் : போதை உலகின் பேரரசன்’ தொடரின் அறிவிப்புக்கு பிரும்மாண்டமான போஸ்டரெல்லாம் ஒட்டி, இந்த எளியப் பத்திரிகையாளனை கவுரவப் படுத்தினார் எங்கள் எம்.டி. அவருக்கு வெறுமனே நன்றி சொல்லியெல்லாம் நன்றிக்கடனை தீர்த்துவிட முடியாது.

ஏற்கனவே சில தொடர்களை பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் –

‘காட்ஃபாதர்’ ஸ்பெஷல். ஏனெனில் 70 வாரங்களுக்கு நீளக்கூடிய மெகாத்தொடரை என்னாலும் எழுதமுடியும் என்று என்னை நானே எனக்கு நிரூபித்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இது வழங்கியது.

தொடரின் முதல் அத்தியாயத்தில் தொடங்கி, கடைசி அத்தியாயம் வரை எனக்கு ஊக்கமும், தொடருக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதிலும் உற்றத்துணையாக இருந்தவர் ‘குங்குமம்’ வாரஇதழின் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன். இத்தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதற்கு எழுத்து மட்டுமல்ல, அண்ணன் அரஸ் அவர்களுடைய உயிரோட்டமான ஓவியங்களும் காரணம். பல வாரங்கள் அவருடைய ஓவியத்தை பார்த்துவிட்டுதான் அந்தந்த வாரத்துக்கான அத்தியாயங்களையே எழுதுவேன். அன்பான அண்ணன்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லப்போவதில்லை. தம்பிக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமை இது.

தொடராக வந்தபோது வாராவாரம் ‘குங்குமம்’ இதழில், அயல்நாட்டுப் பத்திரிகைத் தொடர்களுக்கு இணையாக அழகுசெய்த அண்ணன் வேதா அவர்களின் வடிவமைப்புக் குழுவினருக்கு நன்றி சொல்ல இதையொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறேன்.

‘குங்குமம்’ இதழில் வாராவாரம் வாசித்தவர்களுக்கு, ஒட்டுமொத்த நூலாக வாசிக்கும்போது வேறுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். முதன்முறையாக இப்போது நூலாகதான் வாசிக்கப் போகிறீர்கள் என்றால் ஜெட் வேக பயணத்துக்குத் தயாராகுங்கள்.

Happy reading!

இந்நூலை என்னுடைய காட்ஃபாதர், எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

5 ஜனவரி, 2019

சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?

“ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”

உலகின் மிக சிறிய கதை இதுதான். இந்த கதையை கடந்து வராதவர்கள் யாருமே நம்மில் இருக்க முடியாது. இதை சினிமாவாக எடுக்க முடியுமா?

முடியும்.

‘ஈ’யை வைத்தே ராஜமவுலி எடுத்திருக்கிறார். நரியை வைத்து நாம் எடுக்க முடியாதா?

அந்த நரிக்கு ஒரு நண்பன், ஒரு குடும்பம், ஒரு காதலி, ஒரு வில்லன், ஒரு பிரச்சினை என்று கூட்டிக்கொண்டே போனோமானால் ஐந்து பாட்டு, நாலு ஃபைட்டு வைத்து சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்லிவிடலாம் இல்லையா?

சினிமாவுக்கு அது போதும்.

இதுமாதிரி கதையை எழுததான் இந்த நூலில் கற்றுக்கொள்ளப் போகிறோம். “இதை எழுதும் நீ எத்தனை படங்களுக்கு கதை எழுதியிருக்கிறாய், உன்னுடைய தகுதி என்ன?” என்கிற நியாயமான கேள்வியை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். அதற்கான முழுத்தகுதியும், உரிமையும் உங்களுக்கு உண்டு.

இதுவரை எந்தப் படத்துக்கும் நான் கதை எழுதியதில்லை. அதே நேரம், நான் எழுதி எந்தப் படமும் படுதோல்வி அடைந்ததில்லை என்று பாசிட்டிவ்வாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எழுதத் தெரிந்ததால் எழுதுகிறேன். வாசிக்கத் தெரிந்ததால் வாசிக்கிறீர்கள். எழுத்தோ, வாசிப்போ ஒன்றில் மற்றொன்று உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. ‘சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?’ என்கிற சூத்திரத்தை நாம் இருவரும் இணைந்தேதான் கற்றுக்கொள்ளப் போகிறோம். வகுப்பறையில் உங்களோடு பெஞ்சில் அருகே அமர்ந்திருக்கும் மாணவன்தான் நானும்.

அப்படியெனில் ஆசிரியர்?

1906ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளத் திரைப்படமான ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’கில் தொடங்கி, போன வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களின் கதாசிரியர்கள் வரை நமக்கு லட்சக்கணக்கிலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் நாம் சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொள்ளப் போகிறோம்.

உலகின் முதல் முழுநீளப் படத்தின் கதை ஏதேனும் சரித்திரக் கதையாகதான் இருக்குமென்று நீங்கள் கருதலாம். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி அதுவொரு போலிஸ் படமென்று சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும்.

1906ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான அந்த திரைப்படம் சுமார் ஆயிரம் ஆஸ்திரேலிய பவுண்டுகளை பட்ஜெட்டாக கொண்டு எடுக்கப்பட்டு, இருபத்தையாயிரம் பவுண்டுகளை வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது.

நெட்கெல்லி என்கிற கேங்ஸ்டர் அந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலம். அவனும் அவனுடைய குழுவினரும் செய்யாத அட்டூழியங்களே இல்லை. பிற்பாடு அவன் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அவனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நாடகமே, சினிமாவாக ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’ என்று எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மொத்தமே ஆறு காட்சிகள்தான். வன்முறையாளர்களை ஒடுக்க போலிஸ் திட்டமிடும் காட்சியில் தொடங்கும் படம், கிளைமேக்ஸில் நெட்கெல்லியோடு சண்டை நடந்து அவனை காலில் சுட்டு கைது செய்வதோடு முடிவடைகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட இந்த மவுனப்படம், பின்னர் நியூஸிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என்று நாடு விட்டு நாடு பயணித்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருந்ததாம்.

இந்தப் படம் வெளிவரும் வரை சினிமா என்பது கதை சொல்லும் ஊடகமாக இருந்தது இல்லை. டிரெயின் ஓடுவது, குதிரைப் பந்தயம் மாதிரி துண்டுக் காட்சிகளையும் நியூஸ் ரீல்களையும் வைத்து அதுவரை ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்தை போலவே சினிமாவிலும் கதை சொல்லலாம். செமத்தியாக கல்லா கட்டலாம் என்பதை கண்டறிந்தார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகமாகவும் உருவெடுத்தது அப்போதுதான்.

அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே தாதாசாகேப் பால்கே தயாரித்து, இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாக வெளிவந்தது. இதிகாசங்கள், புராணங்கள் என்று பல நூற்றாண்டுகள் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த இந்தியர்கள் வெகுவிரைவிலேயே சினிமாவுக்கு அடிமை ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியப் பாரம்பரியப் பெருமையை சினிமாவில் கதையாக சொல்லியே வெள்ளையர்களின் அடிமைத்தளையை உடைக்கவும் பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறு.

இந்த கதையை எல்லாம் ஏன் உங்களுக்கு மெனக்கெட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால், இதுமாதிரி நாம் நிறைய கதைவிட கத்துக்கணும். சினிமாவில் கதை எழுத இந்த ‘கதைவிடுற’ பண்புதான் அடிப்படை தகுதியே.

- ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து...

29 டிசம்பர், 2018

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி!

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி  என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.

ப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.

அவ்வளவுதான் மேட்டர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.

மினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா?’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.

தப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்டையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.

ஓக்கே.

விஷயத்துக்கு வருவோம்.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.

அவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.

இலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில்  வியப்பேதுமில்லை.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (kக்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.

புலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.

இலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா?” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.

கடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா?” என்று நலம் விசாரிக்கிறார்கள்.

இப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.

அப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.

“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.

பாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.

இதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.

முன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.

1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.

அந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சைக்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.
யாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.


அதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார். 
உப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.

என்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை?

ஒன்றுமில்லை.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில்  கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

நினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

அந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.

நான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.

சூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.

கம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்கொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.

அந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செய்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.

உடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/?p=4169

லிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா?

எவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.

நாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.

ஆனால் -

ஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.

இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

ஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.

வேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.

------

“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டியபோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.

இருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.

ஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.

‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.

ரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.

இந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.

‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.
நூலின் பெயர் : பதிவுகள்
எழுதியவர் : கி.ராஜநாராயணன்
தேர்வும், தொகுப்பும் : கழனியூரன்
வெளியீடு : அன்னம், தஞ்சை.
மேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.

---

வாசித்து விட்டீர்களா? மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.

18 டிசம்பர், 2018

ராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்!


வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைதான் திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறது. சம்மந்தப்பட்ட நபர்கள்தான் மாறுபடுகிறார்கள்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு அருகில் ஆலம்பாக் பகுதியைச் சார்ந்த 75 வயது மூதாட்டி லீலாவதி சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வேயில் பணிபுரியும் அவரது மகன், தன்னுடைய தாயை ஓர் அறையில் பூட்டிவிட்டு கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டாராம்.

சோறு, தண்ணீர் இல்லாமல் பட்டினியில் வாடி லீலாவதி மரணித்திருக்கிறார்.

லீலாவதி, ஓஹோவென்று ராணி மாதிரி ஒரு காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். அவருடைய கணவர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் மேலவை உறுப்பினராம்.

கிட்டத்தட்ட இதே மாதிரி சம்பவம், நம்முடைய தமிழக அரசியலிலும் நடந்திருக்கிறது. சமீபகால வரலாறு ஏதேனும் உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாம் குறிப்பிடும் சம்பவம் நடந்து இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது.

மதுரையை முப்பத்தாறு ஆண்டுகள் தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு ஆண்டவர் திருமலை நாயக்கர். கூடல்மாநகரை தலைநகரமாக மட்டுமின்றி கலைநகரமாகவும் மாற்றிக் காட்டியவர் இவர்தான்.

திருமலை நாயக்கரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் வெறும் நாலு மாதங்களே ஆட்சியில் இருந்து காலமானார்.

மன்னர் பொறுப்பை அடுத்து ஏற்ற 16 வயது சொக்கநாத நாயக்கர், தன் தாத்தா திருமலை நாயக்கரைவிட பெரும் புகழ் பெறக்கூடிய வகையில் வீரமும், கலைமனமும் வாயத்தவராக விளங்கினார். போர்முனையில் பெரும் தீரம் காட்டினார்.

தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகள் மங்கம்மாவை காதலித்தார். விஜயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்துவிட, அவர் மீது போர் தொடுத்து வலுக்கட்டாயமாக பெண்ணெடுக்க முற்பட்டார். தன் தந்தை போரில் தோல்வியடைய, அவருடைய வீழ்ந்த தலை மீதேறி, சொக்கநாத நாயக்கரை கைப்பிடிக்க மறுத்து மங்கம்மா தன்னைதானே தீயில் மாய்த்துக் கொண்டார்.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த காதல் தோல்வியால் மதுரை மன்னர் சொக்கநாதர், பித்து பிடித்தாற்போல ஆனார். அவரை சகஜநிலைக்குக் கொண்டுவர வேறொரு மங்கம்மாளை மணமுடித்து வைத்தனர்.

அவர்தான் பிற்காலத்தில் மதுரை கண்ட மகத்தான பெண்ணரசி மங்கம்மா.

திருமணமான பிறகும்கூட (தாம்பத்தியமெல்லாம் சரியாக நடந்தும்கூட) தஞ்சை மங்கம்மாவின் நினைவை, சொக்கநாதரின் மனசிலிருந்து இந்த மங்கம்மாவால் முடியவே இல்லை.

அந்த நினைவிலேயே தன்னை இழந்துவிட்ட சொக்கநாதர், மிக இளம் வயதிலேயே காலமானார். அப்போது மங்கம்மாளின் கைகளின் மூன்று மாத கைக்குழந்தையாக அடுத்த மன்னர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இருந்தார்.

அந்தக் காலத்தில் மன்னர்கள் மறைந்தால் கூடவே உடன்கட்டை ஏறும் சதி சடங்கு வழக்கத்தில் இருந்தது.

மங்கம்மாவோ அரசியல் குழப்பங்களை தவிர்க்க உடன்கட்டை ஏற மறுத்தார். தன்னுடைய குழந்தைக்கு அரசியல் கற்பித்து, தகுதியுள்ள மன்னனாக உருவாக்க முடிவெடுத்தார்.

முத்துவீரப்ப நாயக்கர், பட்டத்துக்கு வரும்வரை தானே நாட்டை மறைமுகமாக ஆண்டார். மங்கம்மா அரசியலில் ஈடுபட்டிருந்த அதே காலத்தில் மதுரை அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். அக்கம் பக்கம் நாடுகளின் படையெடுப்பு, அவுரங்கசீப்பின் முகலாய அரசின் நேரடி மிரட்டல் ஆகியவற்றை சமாளித்தார். போர்களில் வெற்றியும், அரசியல் நடவடிக்கைகளில் ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தி மதுரையை காத்தார்.
மக்களுக்கு அன்ன சத்திரம், கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு மானியம், பெரிய நகரங்களை மதுரையோடு இணைக்க சாலைகள், கால்நடைகளுக்கு சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள், ஊர் தோறும் ஊருணி, குளம், ஏரி, கிணறு என்று கட்டமைப்புகளை மேம்படுத்தினார். இன்றும்கூட மதுரையில் மங்கம்மா காலத்து சாதனைகள் வழிவழியாக போற்றிப் பாடப்படுகின்றன.

மங்கம்மாவின் மகன் முத்துவீரப்ப நாயக்கருக்கு 15 வயதில் பட்டம் சூட்டப்பட்டது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி எண்பதடி பாய்ந்தது. நாயக்க மன்னர்களிலேயே பெரும் வீரமும், அறிவுத்திறனும், மக்கள் மீதான பாசமும் கொண்டவராக கணிக்கப்பட்டார் முத்துவீரப்பன். கடற்படை அமைப்பது, மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால் தமிழகத்தின் வரலாறே மாறியிருக்கக்கூடும்.

ஆனால் –

அவரும் தன்னுடைய தந்தை சொக்கநாதரை போலவே மிகவும் இளம் வயதில் எவரும் எதிர்பாராவிதமாக காலமானார். முத்துவீரப்பன் மறைந்தபோது அவரது மனைவி முத்தம்மா கர்ப்பிணியாக இருந்தார். அடுத்த மன்னனை வயிற்றில் சுமக்கும் ராணியை, உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார் மங்கம்மா.

தன்னுடைய மாமியாரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டாக ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு, தற்கொலை செய்து மறைந்தார் முத்தம்மா.

கைக்குழந்தையாக தன்னுடைய மகனை வளர்த்த அதே கதைதான் மீண்டும் மங்கம்மாவுக்கு. இம்முறை பேரன் விஜயரங்க சொக்கநாதன்.

குழந்தை விஜயரங்கனை மன்னனாக பெயரளவுக்கு பட்டம் சூட்டிவிட்டு, மங்கம்மாவே ஆட்சி புரிந்தார். மகனை கண்டிப்பாக வளர்த்த அம்மாவான மங்கம்மா, பேரனை ரொம்ப செல்லமாக வளர்த்த பாட்டியாக இருந்துவிட்டார்.

அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு. இதனால், நாயக்க வம்சத்தின் ஆட்சியே மதுரையில் முடிவுறுவதற்கு காரணமாகவும் அமைந்தார்.

எந்நேரமும் அந்தப்புரம், நண்பர்களோடு உல்லாசம் என்று மைனராக வளர்ந்தார் விஜயரங்கன் நாயக்கர். ஒரு பெண் தங்களை ஆள்வதா என்று நினைத்த அந்தக்கால ஆணாதிக்க அரசியல் பிரமுகர்கள், விஜயரங்கனை தங்களுடைய கைப்பாவை ஆக்கிக் கொண்டனர்.

எப்போதும் பேரனுக்கும், பாட்டிக்கும் ராஜ்ய பரிபாலனம் குறித்து பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருக்கட்டத்தில் அதிகாரம் மொத்தத்தையும் கைப்பற்றிய விஜயரங்கன், தன்னுடைய பாட்டி மங்கம்மாவையே தனிமைச்சிறையில் அடைத்தார். அவருக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.

கட்டிய கணவனோடும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. கண்ணுக்கு கண்ணாக வளர்த்த மகனும் அல்பாயுசில் மறைந்துவிட்டான். செல்லமாக வளர்த்த பேரனே தன்னை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று கடைசிக்காலத்தில் புலம்பி, புலம்பியே காலமானார் அந்த மகத்தான மாதரசி.

அந்நாட்களில் மங்கம்மா ஏதேனும் தெரியாத்தனமாக தன் பேரனை சபித்துவிட்டாரோ என்னவோ, விஜயரங்க சொக்கநாதர் பிள்ளை பாக்கியம் இல்லாதவராகிப் போனார். தன்னுடைய பாட்டியின் மரணத்துக்கு தானே காரணமாகிவிட்ட கழிவிரக்கம், அவரை முழுமையாக இறைச்சேவையில் ஈடுபடுத்தியது.

இருபத்தைந்து ஆண்டுகள் பெயருக்கு ஆட்சியில் இருந்து காலமானார். அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அவரது மனைவி மீனாட்சி சில காலம் அரசு பொறுப்பேற்றார். ஆற்காடு நவாப் படையெடுத்து வந்து மீனாட்சியை வென்றதோடு 200 ஆண்டுகால மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்நது.

(நன்றி : குங்குமம்)