11 ஏப்ரல், 2012

ஈ ரோஜுலோ ஆர்டினரி ரச்சா

என்னதான் மொக்கை ஃபிலிம் கிளப் மெம்பர்கள்தான் என்றாலும், தொடர்ச்சியாக அரவான், முப்பொழுதும் உன் கற்பனைகள், மூணு என்று அடுத்தடுத்து மொக்கைக்கே மொக்கை போடும் படங்களாக வரிசைகட்டிப் பார்த்து, நொந்துப்போன நெஞ்சுக்கு மசாஜூம் விதமாக தமிழ்ப்படங்களை தவிர்க்கும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது நமது கிளப். வருடத்தின் முதல் காலாண்டில் கிட்டத்தட்ட நாற்பது படங்கள் வெளியாகியும் ’கர்ணன்’ மட்டுமே அள்ளித் தந்திருக்கிறான். ‘அம்புலி’ கையை கடிக்கவில்லை. மற்ற படங்கள் எல்லாம் தயாரிப்பாளரின்/விநியோகஸ்தரின் தாலியறுத்து விட்டது என்பது கோலிவுட் ரிப்போர்ட்.

குறிப்பாக சிவராமன், நாராயணன் போன்ற லேட்டஸ்ட் செயல்வீர மெம்பர்களிடம் ‘ஒத்தவீடு போகலாமா?’ என்று கேட்டால், சோகம் தாங்காமல் தண்ணி போட்டுவிட்டு ‘பன்றிக்காய்ச்சல் பாஸூ’ என்று இரக்கமில்லாமல் மறுத்துவிடுகிறார்கள். இதையடுத்தே கிளப்பின் தலைவர் மொக்கை மற்றும் மொட்டை விஸ்வா தலைமையில் தெலுங்கு, மலையாள மொக்கைப் படங்களை மட்டுமே சில காலத்துக்கு பார்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அவ்வாறு மொக்கையென நினைத்துப் பார்த்து, எதிர்பாராவிதமாக சுமாராக இருந்து மெம்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படங்கள் சில...

ஈ ரோஜுலோ
தமிழில் ’காதலில் சொதப்புவது எப்படி?’ என்று ‘படமெடுத்து சொதப்புவது எப்படி?’ என பாடமெடுத்த டீம் பார்க்க வேண்டிய தெலுங்கு படமிது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட். இந்தப் படத்தை குட்டி ‘குஷி’ எனலாம். ஹீரோ, ஹீரோயினுக்கு இடையிலான ஈகோவை வைத்து திரைக்கதை குதிரையோட்டுகிறார்கள்.

கதைக்கென்றெல்லாம் ரொம்பவும் மெனக்கெடாமல் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார் இயக்குனர் மாருதி. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த டீமுமே புதுமுகங்கள். படம் பார்ப்பவர்கள், இரண்டேகால் மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு நிமிடத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரித்து விடுகிறார்கள். நீண்ட லத்தி வைத்திருக்கும் செக்யூரிட்டி, அந்த லத்தியை எப்போதும் எண்ணெய் போட்டு உருவிக் கொண்டிருக்கும் அசிஸ்டண்ட் என்று புதுமையான பாத்திரப் படைப்புகள். தெலுங்கு சென்ஸார் போர்ட் அதிகாரிகளுக்கு தாராள மனம். டபுள் மீனிங் டயலாக் என்றெல்லாம் மெனக்கெடாமல் டைரக்ட் மீனிங் டயலாக்குகளாக எழுதித்தள்ளிய வசனகர்த்தாவுக்கு ராயலசீமாவில் கோயில் கட்டலாம்.

ஹீரோயின் த்ரிஷாவின் அம்மா ஜாடையில், கொஞ்சம் பாவனாவின் பாடி லேங்குவேஜென்று செம க்யூட்டாக இருக்கிறார். ஹீரோவோ ஒத்தவீடு நாயகனைவிட ரொம்பவே சுமாராகவே இருக்கிறார். படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், அட்மாஸ்பியருக்கு வரும் சாதாரண ஃபிகர்கூட ரிச்கேர்ளாகவோ அல்லது சிறப்பான நாட்டுக் கட்டையாகவோ அமைந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடிக்கிறார்கள். ஆந்திர மல்டிப்ளக்ஸ் மைனர்களும், அமெரிக்க ஐரோப்பிய என்.ஆர்.ஐ.களும் திரும்பத் திரும்ப இந்தப் படத்தை ரசித்துக் கொண்டேயிருக்க, கோடிகளில் வசூல் பேய்மழையாய் கொட்டி தயாரிப்பாளரை குஷிப்படுத்தியிருக்கிறது. தீம் பாடலான ‘ரிங், ட்ரிங்’, படம் பார்த்து நீண்டநாளானாலும் நம் மனதில் ரிங்கிக் கொண்டும், ட்ரிங்கிக் கொண்டும் இருக்கும்.

ஆர்டினரி
கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமா இண்டஸ்ட்ரியில் தமிழ் இண்டஸ்ட்ரியை விட உருப்படாமல் போய்விட்ட இண்டஸ்ட்ரி மலையாள ஃப்லிம் இண்டஸ்ட்ரி. மம்மூட்டியும், மோகன்லாலுமே கூட அடுத்தடுத்து பல்பு வாங்கிக் கொண்டிருக்க, திலீப் மட்டும் கொஞ்சம் ஸ்டடியாக இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களைப் பார்த்து மலையாள ஹீரோக்கள் கெட்டுப் போய்விட்டார்கள். ஐ மீன் கற்பிழந்து விட்டார்கள். புதியதலைமுறை ஹீரோக்கள் குத்துப்பாட்டு, ஃபைட் என்று கோமாளித்தனம் செய்ய, மரபார்ந்த மலையாள சினிமா ரசிகர்கள் கதகளி பார்க்க கிளம்பிவிட்டார்கள்.

இந்தச் சூழலில் மலையாள மண்ணின் அச்சு அசலான மீன் வாசனையோடு வந்திருக்கிறது ஆர்டினரி. மென்மையான பாத்திரங்கள், நட்பு- உறவு என்று பழைய கேரள விழுமியங்கள். வித்யாசாகரின் மெல்லிசை. கண்ணுக்கு குளிர்ச்சியான மலையாள லொகேஷன் என்று ஆர்டினரி மலையாள மூவி. ஆனால் எக்ஸ்ட்ரா ஆர்டினரி ரெஸ்பான்ஸாம்.

பிஜூ மேனன் டிரைவர். குஞ்சாகோ கோபன் கண்டக்டர். ஒரு மலை கிராமத்துக்கு அப் & டவுன் என்று ரெண்டே சிங்கிள் போகும் சொத்தையான ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி ஆர்டினரி பஸ். ஒரு ஹீரோயின். மேலும் சில கேரக்டர்கள். இடைவேளைக்கு முன்பாக ஒரு முடிச்சு. க்ளைமேக்ஸில் சுபம் என்று வழக்கமான சினிமா பாணிதான் சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. இதுவும் ஒரு மினிமம் பட்ஜெட் படம்தான். ஃபாரினுக்கெல்லாம் போய் மலையாள பாரம்பரிய உடையில் யாரும் ஹிப் ஹாப் ஆடவில்லை.

ஹீரோயின் ஷ்ரீதா பற்றி சொல்லாவிட்டால் நாக்கு அழுகிவிடும். பதினேழு வயதான இவர் நம் ராதாவின் பொண்ணு கார்த்திகா சாடையில் இருக்கிறார். இதுதான் முதல் படம். தூக்கலாக மேக்கப் போட்ட காட்சிகளில் பேரழகியாகவும், மேக்கப் குறைவான காட்சிகளில் ரொம்ப சுமார் ஃபிகராகவும் இருக்கிறார். நவ்யா மாதிரி மாநிறம். இவருக்கு கொடுத்த சம்பளத்தில் பாதியை, அவருக்கு ஐப்ரோ திருத்திய அழகுக் கலைஞருக்கு கொடுப்பதுதான் நியாயம்.

ரச்சா
அப்பா மெகா ஸ்டார். சித்தப்பா பவர் ஸ்டார். எனவே ராம்சரண் தேஜா மெகா பவர் ஸ்டார். படத்தில் இவரது சின்ன வயது கேரக்டர் ஓடும்போதுகூட, பக்கத்தில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பவர் எகிறுகிறது. மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களும் லோ-பட்ஜெட் என்றால், ரச்சா ஹை-பட்ஜெட் ஆக்‌ஷன் மசாலா.

ராம்சரணுக்கு ஒரு ராசி. அவரது படங்களுக்கு ரெண்டே ரெண்டு ரிசல்ட்தான். ஒன்று அட்டர் ஃப்ளாப். இரண்டு மெகா ஜிகா ஹிட். ரச்சா இரண்டாம் வகை. தெலுங்கு சினிமாவின் முந்தைய சாதனைகளான மகாதீரா, தூக்குடு, பிஸினஸ்மேனையெல்லாம் அசால்டாக முதல்வாரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது ரச்சா.

இத்தனைக்கும் ரொம்ப சுமாரான ஒருவரி கதை. எளிதில் அடுத்தக் காட்சியை யூகிக்க வைக்கும் பலவீனமான திரைக்கதை. இப்படியிருந்தும் ரச்சா ஏன் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால், அதை தெரிந்துக்கொள்ள தற்கால தெலுங்கு சினிமா பற்றிய பின்னணியும், கொஞ்சம் வரலாற்று அறிவும் அவசியம்.

மெகா ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் பிரஜாராஜ்யத்தை காங்கிரஸில் இணைத்தது தொடர்பாக கொஞ்சநாளாக கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் என்று ஆந்திர பத்திரிகைகள் பகிரங்கமாகவே கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றன. பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படமான ‘பாஞ்சா’வில் அண்ணனின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிரான பஞ்ச்களை கொஞ்சம் பலமாகவே வைத்திருந்தார் பவன் கல்யாண். ரசிகர்களின் மாபெரும் ஆதரவோடு ஓபனிங் சூப்பர் என்றாலும், மக்களின் பேராதரவு இல்லாமல் அடுத்தவாரங்களில் பாஞ்சா பஞ்சர் ஆனது. இச்சூழலில் சிரஞ்சீவியின் வாரிசு அவரது தம்பியா அல்லது மகனா என்கிற கேள்வி இயல்பாகவே ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கான பதில்தான் ரச்சா.

“என் அப்பனை ஏதாவது சொன்னா, மவனே எங்கிருந்தாலும் தேடி வந்து உதைப்பேன்”

“எனக்கு உயிரைப் பத்தி கவலையில்லை. என் அப்பாவோட ஆசையை நிறைவேத்த எதை வேணும்னாலும் செய்வேன்”

“மக்களோட ஆதரவு எங்களுக்கு இருக்கு. எதைப்பத்தியும் கவலை இல்லை”

இம்மாதிரி வசனங்கள் மெகாஸ்டாரின் மகன் வாயால் உச்சரிக்கப்படும்போது, அது ஆந்திர தியேட்டர்களில் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவது பெரிய ஆச்சரியமில்லை.

போதாக்குறைக்கு மெகாஸ்டாரின் சூப்பர்ஹிட் பாடலான “வானா.. வானா”-வின் ரீமிக்ஸ் வேறு. இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரகதாபத்தை சிறப்பாக வெளிப்படுத்தி கேங்லீடரில் இப்பாடலுக்கு ஆடிய சிரஞ்சீவி, விஜயசாந்தி இருவருமே இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

கொஞ்சமும் நம்பவே முடியாத, காதுகளில் கி.மீ. கணக்கில் பூ சுற்றும் காட்சிகள் இருந்தாலும் ‘ரச்சா’ பார்ப்பது கொண்டாட்டமாகவே இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்தடுத்து தெலுங்கில் ஒருமுறை, தமிழில் இன்னொருமுறை இப்படத்தை மொக்கை ஃப்லிம் கிளப் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு பாடலில் தமன்னா வேகமாக தன் பாலினும் வெண்மையான, வடிவான தொப்புளை ‘ஷேக்’ செய்யும்போது ‘ஷாக்’ ஆகாத ரசிகமனங்களே இல்லை எனலாம். அதிலும் கடைசி பாடலில் உலகில் இருக்கும் அத்தனை வண்ணங்களையும் உடைகளிலும், ப்ராப்பெர்ட்டி செட்டுகளிலும் இறைத்திருக்கும் லாவகம்தான் தெலுங்கு சினிமாக்காரர்களின் பலமே. இப்பாடலில் வரும் ஒரு ஷாட்டில் ஸ்க்ரீனின் இருபுறமும் எக்ஸ்ட்ராஸ் எடுப்பாக திருமலை நாயக்கர் மகால் தூண் மாதிரி நிற்கும்போது ரசிகர்களின் விசிலில் திரை கிழிகிறது.

7 கருத்துகள்:

  1. நான் ஏற்கனவே சொன்னதுல எந்த மாற்றமுமில்லை. வீட்டுல ராமன் தியேட்டர்ல கிருஷ்ணன்.சின்னப்பையன் நானே ஃபிகர்களைப்பாத்து பேசாம இருக்கேன். ஒரு பொறுப்பான பணியில இருந்துக்கிட்டு, பிணி பிடிச்சி அலையலாமா?

    பதிலளிநீக்கு
  2. எங்கே தலைவி தமன்னாவைப்பத்தி சொல்லாமல் போய்விடுவீங்கனு நெனச்சேன்.... ஆமா அது என்ன எக்ஸ்ட்ராஸ்?

    பதிலளிநீக்கு
  3. எனக்கு என்னமோ படத்தை விட உங்க கட்டூரை தான் சூப்பர இருக்குது!!சொல்லால் அடிக்கிர கில்லிப்பா கிருஷ்!!

    பதிலளிநீக்கு
  4. gr8 sense of review....அருமையான விமர்சனம்.....

    பதிலளிநீக்கு
  5. மொக்கை ஃபிலிம் கிளப்ல என்னையும் சேர்த்துக்கோங்க தல... லத்திகா படத்திற்கு விமர்சனம் போட்ட ஆகச்சிறந்த பதிவர்களில் நானும் ஒருவன்...

    பதிலளிநீக்கு