18 மே, 2015

அம்மா ரசிகர் மன்றம்!

தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தபோது அவருக்கு ரசிகர் மன்றம் இருந்ததோ என்னமோ.

அந்த குறை நீங்க இப்போது பத்திரிகையாளர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. ‘பொழைப்பு’ காரணமாக ஐடி கார்டு இல்லாமல், விசிட்டிங் கார்டு மட்டும் வைத்திருப்பவர்கள் செய்வதை புரிந்துக் கொள்ள முடிகிறது. மற்றவர்கள்?

கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக்கொண்டு கல்லடிப்பது கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கிறது. எனினும், எவ்வளவு நாளைக்குதான் ‘நடுநிலை’ நாயகர்களை சகித்துக்கொண்டிருக்க முடியும். தங்களுடைய சார்பை வெளிப்படையாக முன்வைத்துவிட்டு எழுதும் பத்திரிகையாளர்கள் ‘அவன் திமுகவாச்சே?’, ‘அவன் அதிமுகவாச்சே?’, ‘அவன் கம்யூனிஸ்ட் ஆச்சே?’, ‘அவன் ஆர்.எஸ்.எஸ் ஆச்சே?’ என்று ஆட்டையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ‘நடுநிலை’ போர்வை உடுத்தியவர்களை ஒப்பீனியன் மேக்கர்களாக ஒரு சிலராவது நம்புகிறார்கள்.

மிக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மே 11 அன்று காலையில் ‘ஜெ. விடுதலை’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டதில் தொடங்கி, அடுத்தடுத்து குமாரசாமியின் தீர்ப்பை நியாயப்படுத்தும் சில கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தார். நீதியரசரின் உலகப் புகழ்பெற்ற ‘கணக்கு மிஸ்டேக்’ வெளிவரும் வரை இது தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஒரு பத்திரிகையாளர் மிக முக்கியமான தீர்ப்பு வரும்போது அது தொடர்பான பதிவுகளையும், தன்னுடைய சொந்த கருத்துகளையும் பதிவது இயல்பானதுதான்.

ஆனால்-

ஆர்வம் தாங்காமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று அவர் என்ன ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் என்று தேடிப்பார்த்தேன். மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை விமர்சனம் செய்த ஒருவரின் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்ததோடு கடமையை முடித்துக் கொண்டுவிட்டார். அன்றைய அவருடைய மற்ற இரண்டு ஸ்டேட்டஸ்களில் ஒன்று கூகிளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறது. சி.பி.எஸ்.ஈ பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் தமிழை வாசிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை பற்றி மற்றொரு ஸ்டேட்டஸ். அவ்வளவுதான்.

இன்னொரு மூத்த பத்திரிகையாளர். பெண் பத்திரிகையாளர் ஒருவர் குமாரசாமியின் தீர்ப்பை விமர்சிப்பவர்களை நோக்கி பார் கவுன்சில் மிரட்டியிருந்த செய்தியை அப்படியே எடுத்துப் போட்டிருந்தார். அங்கே கமெண்டில் போய் நம் மூத்தப் பத்திரிகையாளர் கேட்கிறார். “ஸ்டாலினின் ஊழல் கதையை உங்கள் பத்திரிகையில் போட்டதின் விளைவா? அப்படியே முரசொலி எழுத்தாளர் ஆகிவிட்டீர்களா?”. அவ்வளவுதான். பிரச்சினையை பேசுவதைவிட்டு பெண் பத்திரிகையாளர் தன் நடுநிலைமையை அந்த மூத்தப் பத்திரிகையாளருக்கு நிரூபிக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று.

இன்னொரு இளம் பத்திரிகையாளர், நண்பர்தான். தீர்ப்பு வந்த குஷியில் வரிசையாக அம்மா புகழ் மேளா. கமெண்டில் போய் சண்டை போட்டு நீதி கேட்க ஆரம்பித்தேன். மறுநாள் கணக்கு குளறுபடி விவகாரம் வந்தபிறகுதான் அவர் மீண்டும் நடுநிலை பாதைக்கு வரமுடிந்தது.

ஒரு மாதமிருமுறை பத்திரிகையின் போஸ்டர் வாசகம் “தீயசக்திகளை வென்ற தெய்வசக்தி”.

ஒரு வாரப்பத்திரிகையின் தலையங்கம் பார்த்தேன். அதிமுக தலைமைக்கழகத்தின் அறிக்கை மாதிரி இருக்கிறது.

‘ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல. மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும்’ என்று ஒரு நாளிதழ் கட்டுரை ஜனநாயகம் பேசுகிறது. பர்சனலாக, இது எனக்கு ஏற்புடைய கருத்துதான் என்றாலும்கூட அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் எல்லாம் எதற்கு இருக்கிறது. கோழி திருடியவனையும், பிக்பாக்கெட் அடித்தவனையும் விசாரிக்க மட்டும்தானா என்கிற அடிப்படைக் கேள்வியும் எழுகிறது.

அந்த நாளிதழ் கட்டுரையின் தொடக்கம் விசித்திரமானது. “எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று.” திருச்செந்தூரில் அம்மாவுக்காக ராஜினாமா செய்வேன் என்று அனிதாராதாகிருஷ்ணனே கூட ‘பூடகமாக’தான் சொன்னார். இந்த கட்டுரை அவ்வளவு வெளிப்படையானது.

அதே கட்டுரை ஸ்ரீமான் நரேந்திர மோதி அவர்கள் பதவியேற்ற ஓராண்டிலேயே இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக ‘தகுதி’ பெற்றிருக்கிறது என்று இன்னொரு மாங்காயும் அடிக்கிறது. தமிழக சட்டமன்றம் அத்தகைய மாண்பினை பெறாமல் போனதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது. கட்டுரையின் நடுநிலை தவறிவிடக்கூடாது என்று முதல்வரும், அரசாங்கமும், ஆளுங்கட்சியும் உறைநிலையில் இருக்கிறார்கள் என்று தீர்க்கமாக விமர்சிக்கப்படுகிறது. நன்கு கவனிக்கவும். புரட்சித்தலைவி, எதிர்க்கட்சிகளின் பொய்வழக்கால் இதெல்லாம் முடங்கிப் போயிருக்கிறது. அவர் வந்துவிட்டால் சரியாகிவிடும் என்பதை நாம் between the linesல் தான் வாசித்தாக வேண்டும். ஏனெனில் கட்டுரையாளர் ஏற்கனவே ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து இறங்கி விட்டதால்தான் (அவராகவே இறங்கினார் என்பதை போன்ற தொனியில்) எல்லாம் முடங்கிவிட்டது என்று தெளிவாகவே எழுதுகிறார்.

சட்டமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகளுக்கு போதிக்கும் அந்த கட்டுரையாளர், சபை உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் 110 விதியின் கீழ் 110 அறிவிப்புகளையாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சமர்ப்பித்திருப்பார் என்பதை அறிவாரா? மாண்புமிகு சபாநாயகர் தனபால் அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நடத்துகிறார் என்பதை டிவியிலாவது பார்த்திருப்பாரா?

மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கொடுத்திருக்கும் தீர்ப்பிலேயே கூட்டல் தப்பாக இருக்கிறது. அதைப்பற்றி எந்த கவலையுமில்லாத கட்டுரையாளர் எதிர்க்கட்சிகளை வர்ணிக்க கீழ்க்கண்ட சில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

  • விஜயகாந்த் - செயல்படா எதிர்க்கட்சித் தலைவர் (முன்பு புரட்சித்தலைவி நரசிம்மராவை செயல்படா பிரதமர் என்று விமர்சித்தது நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)
  • திமுக – பெயருக்கு போராட்டம் நடத்தும் / போராட மறந்துவிட்ட கட்சி
  • காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள், பாஜக – அறிக்கை அரசியல்; பாவனை அரசியல்; உள்ளேன் ஐயா அரசியல்
  • ஜெயலலிதா விடுதலைக்குப் பின் மேல் முறையீடுக்காக கர்நாடகத்துக்கு ‘காவடி தூக்குவது’ அரசியல் அவலம்
  • ஜெயலலிதா இல்லாத இடத்தில் அரசியல் கட்சிகள் கம்பு சுற்ற ஆசைப்படுகின்றன
  • ஜெயலலிதா வழக்கையே அரசியல் கட்சிகள் கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது
- ஜெயலலிதா என்பதற்கு பதில் டாக்டர் புரட்சித்தலைவி என்று குறிப்பிடாதது ஒன்று மட்டும்தான் குறை. இதெல்லாம் நாஞ்சில் சம்பத் ஜெயாடிவியில் பேசியவை அல்ல. ஒரு ‘நடுநிலை’ நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள்.

இப்படியாகதான் பெரும்பாலான பத்திரிகைகயாளர்கள் நமது எம்.ஜி.ஆர் நிருபர்களாகவும், ஜெயா டிவி செய்தியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

தோழர்களே, புரட்சித்தலைவி பேரவையில் சேரும் உரிமை நம்மில் ஒவ்வொருவருக்குமே உண்டு. ஆனால் அந்த பணிகளை அங்கு சேராமலேயே பசுத்தோல் போர்த்திக்கொண்டு மக்கள் மத்தியில் செய்வது அநியாயம். பாவம், மக்களை அரசியல்வாதிகளில் தொடங்கி ஆட்டோகாரர் ஏற்கனவே ஏமாற்றி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் நட்டநடு சென்டர் மீடியா பர்சனாலிட்டிகளும் சேரவேண்டுமா?

6 கருத்துகள்:

  1. நானும் அந்த கட்டுரையை படித்து கொஞ்சம் மிரண்டு போனது உண்மை! என் நடுநிலையைக் கூட கொஞ்சம் பிறழச்செய்தது அந்த கட்டுரை!

    பதிலளிநீக்கு
  2. பேருந்திலோ, நண்பர்கள் கூட்டத்திலோ, அலுவலகத்திலோ கூட தி.மு.க.காரர்கள், நடுனிலைமைவாதிகல் என இரு பிரிவுகள்தாம் உண்டு. அந்த 'நடு'க்கள் சென்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்கள் என்று கேட்டால் சொல்ல மாட்டேன் எங்கிறார்கள். ...அல்லத்கு இந்த முறை ஜெவுக்கு எங்கிறார்கள்.....ஒவ்வொருமுறையும்.

    பதிலளிநீக்கு
  3. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. இதற்கு நாமெல்லாரும் வெட்கித் தலை குனியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா9:45 PM, மே 18, 2015

    அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் எல்லாம் எதற்கு இருக்கிறது. கோழி திருடியவனையும், பிக்பாக்கெட் அடித்தவனையும் விசாரிக்க மட்டும்தானா

    பதிலளிநீக்கு
  5. Nice article. Please continue your good work.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா5:12 PM, மே 20, 2015

    This week, I purchased Kumudam, after reading the book only,I had doubt,
    I purchased Kumudam or Namathu MGR or Makkal Kural... Alava adingappa jalra

    பதிலளிநீக்கு