விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜனவரி, 2014

ப்ரியா கல்யாணராமன்

ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன். 

வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"

+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா சொல்ல முடியும்? உண்மையில் சொல்லப் போனால் இதற்கு என்ன விடை சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆக்சுவலி எனக்கு லட்சியம், கிட்சியம் என்பதெல்லாம் இன்றுவரை இல்லை.

தான்தோன்றித்தனமாக என் உள்மனது சட்டென்று ஒரு பதிலை வாய்வழியாகச் சொன்னது. "ப்ரியா கல்யாணராமன் ஆகணும்"

கேள்வி கேட்டவருக்கு வியப்பு. அதைவிட வியப்பு பதில் சொன்ன எனக்கு. உள்மனதில் இப்படியொரு ஆசை இருப்பது அன்றுதான் எனக்கே தெரியும்.

ப்ரியா கல்யாணராமன் ஆகணும் என்கிற லட்சியம் என்னைத்தவிர வேறு யாருக்காவது இருக்குமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான். பத்திரிகை / எழுத்துத்துறையின் லட்சியமாக கல்கி, ராவ், எஸ்.ஏ.பி., என்று யார் யாரோ இருக்கலாம். ஏன் பர்ட்டிகுலராக ப்ரியா கல்யாணராமன்?

ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்.

+2 பெயில் ஆகிவிட்டு தண்டச்சோறாக கிடந்த கொடூரகாலக்கட்டம் அது. காலை 5 மணிக்கு இங்க்லீஷ் ஹைஸ்பீட் டைப்பிங், 6 மணிக்கு மேத்ஸ் டியூஷன், 7 மணிக்கு ஷார்ட் ஹேண்ட், 8 மணிக்கு தமிழ் டைப்பிங், 11 மணிக்கு விவேகானந்தாவில் இங்கிலீஷ் என்று அப்பா என்னை நொங்கெடுத்துக் கொண்டிருந்த நேரம். இப்படியே விட்டால், இந்தாளு சாகடித்துவிடுவாரு என்ற பீதியில், நானே அப்ளிகேஷன் போட்டு ஒரு நாளிதழில் பணிக்கு சேர்ந்திருந்தேன். அக்டோபர் எக்ஸாமை எதிர்நோக்கியிருந்த சூழலில் பத்திரிகைகளோ, கதைப்புத்தகங்களோ படிக்க அப்பா 'தடா' விதித்திருந்தார்.

குமுதம் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் என்னைப் போலவே அப்பாவும் குமுதத்தை காதலித்தார். புத்தகத்தை எடுத்ததுமே அவரும் என்னைப்போலவே 'நடுப்பக்கத்தை'தான் புரட்டுவார் என்பது தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையையே அர்த்தமற்று போகச்செய்த விஷயம். எஸ்.ஏ.பி., காலமாகியிருந்த சூழலில் கதைகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருந்தது. எளிதில் யூகித்துவிடக்கூடிய முடிச்சுகளோடு கதைகள் வழக்கமான டெம்ப்ளேட்களில் வந்துகொண்டிருந்தது வாசகர்களை கொஞ்சம் சலிப்புறச் செய்திருந்தது.

96ஆ, 97ஆ என்று சரியாக நினைவில்லை. அந்தத் தொடரின் மூலமாக திடீர் புதுப்பாய்ச்சல் குமுதத்தில். தலைப்பே இளமையாக மிரட்டியது. 'ஜாக்கிரதை வயது 16'. கதையின் தொடக்கம் இப்படி இருந்ததாக நினைவு. "ஊர்மிளாவுக்கு தொப்பையோடு கூடிய ஆண்களைப் பிடிக்காது, பிள்ளையாரைத் தவிர". ரங்கீலா வெளியாகி சக்கைப்போடு போட்ட காலக்கட்டம் என்பதால் 'ஊர்மிளா' என்ற பெயரை இந்திய இளைய சமூகம் கிறக்கமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. தமிழக இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா?

கதை இப்படியாக இருந்தது. ஊர்மிளா 16 வயது பெண். +2 படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிள்ளையார் பிடிக்கும். தாத்தாவைப் பிடிக்கும். அர்ஜூன் என்ற ஸ்மார்ட்டான பையனின் காதலை ஊதித்தள்ளினாள். அவனுக்கு ஒருமுறை ராக்கி கூட கட்டிவிட்டாள். அபு என்ற பையனிடம் வாலண்டியராக அவள் சோரம் போனாள். பின்னர் இளமை மயக்கங்களில் தெளிந்து டாக்டரானாள். இந்த நான்கைந்து வரிகளில் கதையைப் படித்தால் கொஞ்சம் மொக்கையாகவே தோன்றும்.

ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து தோற்றிருக்கிறேன். இன்றுவரை எனக்கு திருப்தியாக (ஐ மீன் 16 வயது லெவலுக்கு) எதையும் எழுதி கிழித்துவிட முடியவில்லை. அங்கேதான் நிற்கிறார் ப்ரியா கல்யாணராமன். அவருடைய பெயரே மாடர்ன் + விண்டேஜாக, வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? கமல்ஹாசன் படங்களில் எனக்குப் பிடித்தது கல்யாணராமன். ப்ரியா என்ற பெயரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?

வயது 16க்குப் பிறகு அவர் என்ன எழுதினாலும் (எந்தப் பெயரில் எழுதினாலும்) விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். இளமையும், காமமும் இணைந்து கொப்பளிக்க எழுதினாலும் சரி, ஆன்மீக வாசனையோடு கோயில் சொல்லும் கதைகள் எழுதினாலும் சரி. ஒவ்வொரு வெரைட்டிக்கும், ஒரு யூனிக் ஸ்டைல். ப்ரியா கல்யாணராமன் என்னை ஆக்கிரமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏற்கனவே ப்ரியா கல்யாணராமன் பற்றி மேற்கண்டவாறு முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்.

பத்தொன்பது வயதில் பத்திரிகைத்துறைக்கு வந்த சிக்கல்காரர் (இவருக்கு முன்பு சிக்கலில் ஃபேமஸ் ஆனவர் 'தில்லானா மோகனாம்பாள்' சிக்கல் சண்முகசுந்தரம்). குமுதம் இதழின் ஆரம்பகால தூண்களான ரா.கி.ர., ஜ.ரா.சு., புனிதன் என்று வரிசையாக வயது காரணமாக ஒவ்வொருவராக ஓய்வு நாடிக் கொண்டிருந்தார்கள். குமுதத்துக்கு அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அப்போது அவர் கண்டெடுத்த முத்துகளில் ப்ரியா கல்யாணராமன், ரஞ்சன், கிருஷ்ணா டாவின்ஸி ஆகியோர் முக்கியமானவர்கள்.

1987ல் பத்திரிகைத்துறைக்குள் நிருபராக நுழைந்த ப்ரியா கல்யாணராமன், கடந்த 2012ல் இத்துறையில் வெள்ளிவிழாவே கண்டுவிட்டார். தற்போது குமுதத்தின் ஆசிரியர். தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் இளைஞர்கள் ஒரு மாதிரியான குழப்பான மனோபாவத்தோடு இருந்தார்கள். உண்மையில் கடந்த நூற்றாண்டுக்கும், இந்த நூற்றாண்டுக்கும் பாலமாக அமைந்த பத்தாண்டுகளாக 90 டூ 2000 வருடங்களை சொல்லலாம். ஒரு மாற்றம் வரும்போது முந்தைய லைஃப்ஸ்டைலின் பாதிப்பும், அடுத்து வரவிருக்கும் ட்ரெண்டின் தாக்கமும் கலந்து அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் ஒரு மாதிரியாக எகனைமொகனையாகதான் அத்தலைமுறை இருக்கும். அம்மாதிரியான சூழலின் சமகால பிரச்சினைகளை தனது கதைகளிலும், கட்டுரைகளிலும் அசலாக பிரதிபலித்தவர் ப்ரியா கல்யாணராமன். தொண்ணூறுகளின் இளைஞனுடைய காதல், லட்சியம், கனவு, இத்யாதிகள் எப்படியிருந்தது, அதே நேரம் யதார்த்தம் எப்படியிருந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் எழுதிய தொடர்களை, சிறுகதைகளை (குமுதம் பதிப்பகத்தில் தனித்தனி புத்தகமாக வந்திருக்கிறது) வாசித்தால் ஓரளவுக்கு புரிதல் கிடைக்கும்.

2000ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட சாமியார் மாதிரி ஆகிப்போனார். அவரது எழுத்துகளை பெருமளவு ஆன்மீகம் ஆக்கிரமித்தது. கோயில் சொல்லும் கதைகள், குறைதீர்க்கும் கோயில்கள், ஜெகத்குரு, 108 திருப்பதிகள், சாய்பாபா என்று குமுதம் மற்றும் குமுதம் பக்தி இதழ்களில் எழுதிக் குவித்தார். எழுதுவது ஆன்மீகம் என்றாலும், அதையும் மிகச்சுவையாக பரிமாறுவதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. நமக்கு ஆகாத ஏரியாதான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படித்து விடுவது உண்டு.

என்னைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர். ஆனால் நாம் யாரையுமே கொஞ்சம் தாமதமாகதான் கொண்டாடுவோம்.

இப்படியொரு ஏகலைவன் தனக்கு சிஷ்யனாக இருக்கிறான் என்று அந்த பீஷ்மருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை நான் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் யாராவது ஒரு சிலரையாவது கண்மூடித்தனமாக நம்புவதும், ரசிப்பதும், வழிபடுவதும் இல்லையென்றால் அதென்ன வாழ்க்கை?

இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை புத்தகக் காட்சியில் ப்ரியா கல்யாணராமனின் சில நூல்கள் வெளியிடப்படுகின்றன. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம். இவர் எழுதி நூல்வடிவம் பெற்ற அத்தனை நூல்களுமே குமுதம் ஸ்டாலில் கிடைக்கும்.

20 டிசம்பர், 2013

பாக்கெட் நாவல் அசோகனுக்கு பாராட்டு விழா


17 டிசம்பர், 2013

கர்ணனோடு நாற்பது வாரங்கள்

ஜனவரி 1, 2013. அண்ணன் சிவராமனும், நண்பர் விஸ்வாவும் சோளிங்கர் மலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “குங்குமத்துலே ஒரு தொடர் எழுதணும். கரு சிக்கவே மாட்டேங்குது” என்று கொஞ்சநாட்களாக சொல்லிக் கொண்டிருந்தார் சிவராமன். அன்று காமிக்ஸ், அரசியல், சமூகம், சொந்த வாழ்க்கை, காதல், சினிமாவென்று கலந்துகட்டி மனசுவிட்டு பேசினோம்.
விஸ்வா ஏதோ ஒரு மொக்கை இந்திப்படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். “படம் பெருசா போகலை. ஆனா நல்ல ஐடியா” என்றார். அந்த ஐடியாவை அவர் சொன்னதுமே, சிவராமன் பிடித்துக் கொண்டார். “இந்த லைனை நான் கதை எழுத எடுத்துக்கட்டுமா?” என்று விஸ்வாவிடம் அனுமதி கேட்டார். “எங்கிட்டே ஏன் சார் கேட்குறீங்க. நானா படம் எடுத்தேன்” என்று விஸ்வா ஜோக் அடித்தார்.
கர்ணனின் கவசம் பிறந்தது.
ஆரம்பத்தில் எனக்கு இந்த டைட்டிலில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. ‘கர்ண கவசம்’தான் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘னின்’ தேவையில்லாமல் உறுத்திக் கொண்டிருப்பதாக தோன்றியது. ஆனால் போகப்போக இந்த டைட்டிலே சிறப்பானதாக இருப்பதாக பட்டது.
மயிலாப்பூர் தினகரன் அலுவலக வாசலில் இருக்கும் டீக்கடைதான் டிஸ்கஷன் ரூம். நண்பர் நரேனும், நானும் துணை இயக்குனர்கள் மாதிரி சிவராமனோடு பேசிக்கொண்டிருப்போம். கதை எங்கே ஆரம்பிக்க வேண்டும், எப்படி நகரவேண்டும், வசனங்கள் எப்படி அமையவேண்டும் என்று ஒரு பக்காவான சினிமாவுக்கு ப்ளான் போட்டோம்.
உண்மையில் நாங்கள் திட்டமிட்டிருந்ததில் ஐம்பது சதவிகிதம் கூட கர்ணனின் கவசமாக வரவில்லை. தண்டகாரண்யா, நக்சல்பாரிகள் எல்லாம் கதையில் பிரதானமாக வருவதை போல ஆரம்பகால திட்டம். பாரதத்தின் பரம்பரைச் சொத்தை அபகரிக்க வெளிநாட்டு சதி என்பதுபோலெல்லாம் இண்டர்நேஷனல் லெவலில் டிஸ்கஷன் செய்தோம். கதை தொடங்கி, அதன் போக்கில் ஓடிவிட்டது. முதலில் நாங்கள் பேசிய லைனையே கூட மீண்டும் சிவராமன் எழுதலாம்.
கதையில் வரும் களத்துக்காக சில இடங்களுக்கு லொக்கேஷனை நேரில் சென்று பார்க்க விரும்பினோம். துரதிருஷ்டவசமாக முடியவில்லை. காஞ்சிபுரம் மட்டும் போய், யாத்ரிகர்கள் அவ்வளவாக அறியாத ஜீனகாஞ்சியில் கள ஆய்வு செய்தோம். கைலாசநாதர் கோயிலில் நிறைய நேரம் செலவிட்டோம்.
அசிஸ்டண்ட் டைரக்டர் போல அசிஸ்டண்ட் ரைட்டராக பணிபுரிந்த இந்த நாற்பது வாரங்கள் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலக்கட்டம். சிலிர்ப்பான நாட்கள். ஒரு வேளை இந்த வாய்ப்பு எனக்கு சில வருடங்களுக்கு முன்பாக கிடைத்திருந்தால், இந்நேரம் நானும் நாலு பேர் பேசக்கூடிய நான்கு நாவல்களை எழுதியிருக்க முடியும். ஏற்கனவே எழுதிய அழிக்கப் பிறந்தவனை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும். வேறு சில முக்கியமான எழுத்தாளர்களிடமும் இதுமாதிரி அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ள முடியுமா என்று வாய்ப்பு கேட்க வேண்டும். கதையென்று எதையாவது கீபோர்டில் தட்டும்போது, கொஞ்சம் அச்சமாக இருக்கும். இப்போது 2014ல் உருப்படியாக ஒரு நாவல் எழுதிவிட முடியுமென்று தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.
திங்கள் மதியம் சாப்டர் மெயிலுக்கு வரும். வாசித்துவிட்டு உடனடியாக போனில் நிறை, குறைகளை அலசுவோம். நான் குறிப்பாக ‘கண்டினியூட்டி’ கவனித்துக் கொண்டிருந்தேன். கதையின் ஆரம்ப நாட்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியும், பாத்திரங்களின் பெயர்களும் எதுவும் மாறிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இல்லாவிட்டால் வாசகர் கடிதங்களில் பல்லிளித்துவிடும். ஐந்தாவது சாப்டரில் ஆதித்த கரிகாலனாக இருந்தவர், முப்பத்தியெட்டாவது சாப்டரில் ஆதித்த‘க்’ கரிகாலனாக மாறிவிடுவார். இதையெல்லாம் மிகக்கவனமாக பழைய சாப்டர்களை ‘ரெஃபர்’ செய்து திருத்த வேண்டும்.
ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘எப்படி கதை எழுதுவது?’ நூலை நிறைய பேர் வாசித்திருக்கலாம். ‘கர்ணனின் கவசம்’ முழுக்க முழுக்க அந்த நூல் அறிவுறுத்தும் ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாற்பது வாரங்களும் சிவராமன் மிக ரிலாக்ஸாகவே இருந்தார். ஞாயிறு முழுக்க யோசிப்பதை, திங்கள் காலையில் எழுதிவிடுவார். அத்தியாயத்துக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வரை வார்த்தைகள் இருக்கும். ஓவியருக்கு முன்கூட்டியே வரப்போகும் அத்தியாயத்தில் இருந்து ஒரு காட்சியை சொல்லிவிடுவார்.
தொடர் வந்துக்கொண்டிருந்த கட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று நிறைய படங்கள் பார்த்தோம். கர்ணனின் கவசத்தில் குறைந்தபட்சம் பத்து படங்களின் பாதிப்பாவது இருக்கிறது. ‘கிராவிட்டி’ படத்தின் ஒரு காட்சிகூட கதையில் வருகிறது. அவ்வளவு ஈஸியாக யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், டிவி நிகழ்ச்சிகள், செய்திகள் என்று சமகால சங்கதிகள் சகலத்தின் தாக்கமும் கதையில் வெளிப்படுகிறது.
வாயால் எவ்வளவு வேண்டுமானாலும் வடை சுடலாம். ஆனால் தொழில் கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. அசாத்திய பொறுமையும், கடுமையான உழைப்பும் அவசியம். எப்படி காட்சிகளை யோசிப்பது, அவற்றை எப்படி கதைக்குள் பொருத்தமான இடத்தில் செருகுவது என்று ஏராளமான எழுத்து நுட்பங்களை பிராக்டிக்கலாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்த அண்ணன் சிவராமனுக்கும், உடன் பணியாற்றிய தோழர் நரேனுக்கும் நாற்பது வாரங்கள் முடிந்த நிலையில் நெகிழ்ச்சியோடு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தொடர் தொடர்பாக பேசும் இடங்களில் எல்லாம் தவறாமல் என்னையும், நரேனையும் மறக்காமல் உச்சரித்துக் கொண்டிருக்கிறார் சிவராமன். அது அவருடைய பெருந்தன்மை. எங்கள் மீதான அன்பு. உண்மையில் நாங்கள் அணில்கள். பாலம் அமைத்து லங்காவை வென்றவர் அவர்தான். இந்நூலுக்கு உரிய பெருமை முழுக்க முழுக்க அவரைதான் சாரும்.


இன்னும் சில நாட்களில் ‘கர்ணனின் கவசம்’ தடிமனான நூலாக, சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. நானும் பணியாற்றினேன் என்பதற்காக அல்ல. நாற்பது வாரங்கள் தவறாமல் வாசித்த வாசகனாக சொல்கிறேன். இந்த கதை உங்களுக்கு தரப்போவது இதுவரை நீங்கள் அனுபவிக்காத அனுபவத்தை. வரலாறு ஒரு பாத்திரமாக உங்களையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் அதிசயத்தை உணர்வீர்கள். புராண களத்தில் நீங்கள் அறிந்திருக்கும் புகழ்பெற்ற பாத்திரங்களோடு தோளோடு தோள் உரசி நடப்பீர்கள். குறிப்பாக, ஹாரிபாட்டர் மாதிரியெல்லாம் தமிழில் யாரு சார் எழுதறாங்க என்று அலுத்துக்கொள்ளும் ‘என்னத்த கன்னய்யா’ வாசகர்கள், தயவுசெய்து ஒருமுறை ‘கர்ணனின் கவசம்’ நூலை தவறாமல் வாசியுங்கள்.

’கர்ணனின் கவசம்’ தொடங்கியபோது எழுதிய பதிவை வாசிக்க இங்கே க்ளிக்குங்கள்...

4 டிசம்பர், 2013

மசாலாவே வாழ்க்கை!

தீவிர இலக்கியத்தின் வாசல் மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமும் வெகுஜன இலக்கியமே என்று தீவிரமாக நம்புகிறோம். இலக்கியத்துக்கு மட்டுமல்ல. வெகுஜன முயற்சிகள் சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஏற்படும் இடைவெளிகளையும் நிரப்புகின்றன. எல்லா துறைகளுமே தொடர்ச்சியான இயங்குதலுலை நடத்த இது அத்தியாவசியமான பணியும் கூட.

துரதிருஷ்டவசமாக டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களுக்கு வெகுஜன கலை இரண்டாம் தரமானதாகவோ அல்லது தீண்டப்பட தகாததாகவோ படுகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. பல்வேறு காரணங்களால் தொண்ணூறுகளின் இறுதியில் ஏற்பட்ட தொய்வு இதற்கு காரணமாகிறது. எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்த எங்களுக்குதான் சமையலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் ‘மசாலா’ எவ்வளவு அவசியமானது என்று தெரியும். நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது இதையெல்லாம் மிகத்தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.  இதன் விளைவே LIPS (எ) Life is pulp society. நாங்கள் நம்பும் கருத்தாக்கங்களுக்கு எங்களுடைய பங்காக எதையாவது செய்யவேண்டும். அது நமது கடமையும் கூட.

LIPS அமைப்பின் தொடக்கம் வரும் ஞாயிறு (08-12-2013) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் நிகழ்கிறது.

எங்களது முதல் நிகழ்வே ‘வாசகருக்கு மரியாதை’

வாசகர்தான் வேர் என்கிற அடிப்படையில், வெகுஜன இதழ்களை வாசிக்கவும், வாசித்தபின் அதுகுறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் (நம் மொழியில் சொல்லப்போனால் பின்னூட்டம், கமெண்ட்) கடந்த முப்பத்தைண்டு ஆண்டு காலமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வாசக மனங்களின் மன்னன் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு சிறியளவில் பாராட்டு விழா நடத்துகிறோம். ‘அந்நியன்’ திரைப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் பாத்திரத்துக்கு வாத்யார் சுஜாதா, அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களது பெயரை சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பத்திரிகை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாராட்டு விழாக்கள் நிறைய நடைபெற்றிருக்கிறன. நாம் நடத்தப்போவது அப்படியே உல்டா. ஒரு பத்திரிகை ஆசிரியர், வாசகரை பாராட்டுகிறார். அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களை கவுரவித்து உரையாற்ற குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியர் அண்ணன் தி.முருகன் அவர்கள் பெருமனதோடு ஒப்புக்கொண்டிருக்கிறார். இடம் கொடுத்து உதவும் பனுவல் புத்தக நிலையத்தாருக்கும், பரிசல் செந்தில்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வளவோ எழுத்தாளர்களோடு ‘வாசகர் சந்திப்பு’ நடைபெற்றிருக்கிறது. ஒரு வாசகரோடு வாசகர் சந்திப்பு நடத்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தொடர்ச்சியாக இம்மாதிரி நிகழ்வுகளை நடத்த உத்தேசித்திருக்கிறோம். உங்களது அன்பான வருகையும், அவசியமான ஆலோசனையும் எங்களை வழிநடத்த வேண்டுமென்று விரும்புகிறோம். ஞாயிறு காலை உங்கள் அனைவரின் அப்பாயிண்ட்மெண்டும் எங்களுக்கு தேவை.

28 நவம்பர், 2013

வெள்ளை யானை

சென்னையின் ஆதிவாசிகள் யாரென்ற சர்ச்சைக்கு விடை காண முடியாத விவாதங்கள் கடந்த அரைநூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. நகரமாக நாகரிகமடைந்த சென்னை ‘தலித்’ மக்களின் உழைப்பாலும், உணர்வாலும் உருப்பெற்ற நகரம் என்கிற கோணத்தை, தகுந்த ஆதாரங்களோடு ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ வெளிப்படுத்துகிறது.

நாவலை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. சோம்பலின் காரணமாக தினம் இருபது, இருபத்தைந்து பக்கங்கள் என பாதியைதான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன். வரும் சனிக்கிழமை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. அதற்குள்ளாக முழுமையாக வாசித்துவிடவேண்டும் என்று ஆசை. அடுத்த இருநாட்களில் ‘சோம்பேறித்தனம்’ தற்காலிகமாகவாவது விலகவேண்டும். வாசித்தவரையில் இது ஜெயமோகனின் முக்கியமான படைப்பு பங்களிப்பாகதான் தோன்றுகிறது.

இந்நூல் திராவிட இயக்கத்தின் தோற்றம், இருப்பை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக்கூடும் என்று நாவல் வெளிவருவதற்கு முன்பாக நண்பர் ஒருவர் கணிப்பாக சொன்னார். இதுவரை எனக்கு அப்படி தோன்றவில்லை. ஒருவேளை இறுதி அத்தியாயம் நெருங்கும்போது ஏதாவது ‘உள்குத்து’ வைத்திருப்பாரோ என்னமோ?

திராவிட இயக்கம் பார்ப்பனரல்லாதவர்களுக்கான இயக்கம் என்றாலும், சாதிய படிநிலையில் பழகிவிட்ட சமூகமரபின் காரணமாக, அந்த ‘பார்ப்பனரல்லாதவர்களில்’ தலித்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதியினர், சுதந்திரம் பெற்ற சில வருடங்களிலேயே தன்னிறைவை அடைந்துவிட்ட நிலையில் அறுபதுகளில் தொடங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கம் திராவிட இயக்கத்தில் தொடர்ந்து வருகிறது. எனவே இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தை பிற்படுத்தப்பட்டோரின் இயக்கம் என்றுகூட குறிப்பிடலாம் அல்லது விமர்சிக்கலாம். தர்மபுரி, மரக்காணம் நிகழ்வுகளுக்கு திராவிட இயக்கங்கள் காட்டிய எதிர்வினைகளின் தீவிரத்தை ஒப்பிட்டுப் பார்த்து இம்முடிவுக்கு யாருமே சுலபமாக வரலாம்.

சாதியை சகட்டுமேனிக்கு கேள்விக்குள்ளாக்கும் இன்றைய உலகமயமாக்கல் சூழலிலும் கூட தலித்களுக்கான இடம் முற்போக்கு இயக்கங்களான திராவிட இயக்கங்களில் கூட சிறுபான்மையாகதான் (பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளில்தான்) கிடைக்கிறது.

இந்த நடைமுறை பின்னணியோடு ‘வெள்ளை யானை’யை வாசிப்பதே சரியாக இருக்கும். இந்நாவல் சென்னையை உருவாக்கிய ‘தலித்’களின் பங்களிப்பையும், அந்தப் பங்களிப்புக்கு உரிய பலன் அச்சமூகத்துக்கு கிடைக்காத அவலத்தையும் சுட்டுவதாகவே புரிந்துக்கொள்கிறேன். இதை சொல்லும்போது, இது திராவிட இயக்கத்தை எதிர்ப்பதான தோற்றத்தை தருமே தவிர, உண்மையான நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன்.

முந்தைய ஜெயமோகன் படைப்புகளோடு ஒப்பிடுகையில் ‘இலக்கியத்தன்மை’, ‘படைப்பூக்கம்’ மாதிரியான உன்னதங்கள் இதில் குறைவாக இருப்பதாக தீவிர இலக்கிய வாசகர்கள் கருதக்கூடும். என்னைப்பொறுத்தவரை இதில் அம்மாதிரி கற்பிதங்களை காட்டிலும், அவருடைய எழுத்து நாலுகால் பாய்ச்சலில் செயல்வேகத்தோடு கூடியிருப்பதாக கருதுகிறேன். வர்ணனைகளும், உருவகங்களும், குறியீடுகளும் மட்டுமே இலக்கியம் ஆகிவிடாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ஒரு நிகழ்வில் இந்த நாவலை குறிப்பிட்டு, இது ஒரு நாவலாக இல்லாமல் ‘திட்டமாக’ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் சங்கரராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார். அது பாராட்டா அல்லது எதிர்விமர்சனமா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் திட்டமிடாமல் ஒரு சிறு ஹைக்கூவை கூட எழுதமுடியாது என்பதுதான் என் புரிதல்.

வெள்ளை யானைக்கு ஆவணத்தன்மை சற்று கூடுதலாகவே இருக்கிறது. ஆவணங்கள் இலக்கியமாகுமா என்று விவாதித்து இனி நம் நேரத்தை போக்கிக் கொள்ளலாம் :-)

5 அக்டோபர், 2013

பசைவாளி தூக்கும் படைப்பாளி!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெளியான அன்று சாந்தி தியேட்டரில் மாலைக்காட்சியை நண்பர்களோடு பார்த்தோம். திருப்தி தருமளவுக்கு ஓரளவு சுமாரான கூட்டம்தான். படம் முடிந்ததும் டைட்டில் ஓட தொடங்குகிறது. அரங்கில் அப்படியொரு நிசப்தம். அவசரமாக 23-சி பஸ்ஸை பிடிக்க வேண்டியவர்கள் எல்லாம் மவுனமாக அதே நேரம் நிதானமாக கிளம்புகிறார்கள். ஆனால் ஒரு ஐம்பது பேர் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?

ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.

மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.

மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.

கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.
மாற்றுப்படமென்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் க்ளீன் த்ரில்லர் எண்டெர்டெயினராகதான் மகத்தான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் மிஷ்கின். பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினாலும், போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.. வெளியான திரையரங்கங்களிலும் அரங்கு நிறைந்து ஓடவில்லையென்று நிலைமை. பிட்டு படமெடுத்தவனெல்லாம் கூட படைப்பாளி என்று மார்தட்டிக் கொள்கிற சூழலில், நிஜமாகவே நல்ல படைப்பைக் கொடுத்த படைப்பாளியான மிஷ்கின், தன் படைப்புக்காக ஊர் ஊராகப் போய் பசைவாளி ஏந்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதால் மிஷ்கின் கேவலமாகி விடவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளியை போஸ்டர் ஒட்டவைத்த நம் சமூகம்தான் கேவலப்பட்டு நிற்கிறது. மிஷ்கின் போஸ்டர் ஒட்டுவது ஸ்டண்ட் என்றெல்லாம் கூட விமர்சிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? அதுவும் ஓர் கவன ஈர்ப்புதான். பிளாட்ஃபாரக் கடையில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரியின் நிலைமைக்கு ஒரு கிரியேட்டரை தள்ளிவிட்ட நாம்தான் வேதனைப்பட வேண்டும்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.
படம் பார்த்திருக்க வேண்டுமென்று கூட அவசியமில்லை. நிகழ்வில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுக் கூட படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வரலாம்.

27 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.

நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.
உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.
நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)
சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

2 செப்டம்பர், 2013

அன்புமழையில் நனைத்திருக்கும் அந்திமழை

 ‘அந்திமழை’ மாத இதழ் தன்னுடைய இரண்டாம் ஆண்டு துவக்கத்தை இளைஞர் சிறப்பிதழாக கொண்டாடுகிறது.

சினிமா, ஊடகம், இலக்கியம் துறைகளில் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர்களாக சிலரை அந்திமழை யூகித்து அடையாளம் காட்டியிருக்கிறது.

யுவகிருஷ்ணாவையும் இந்தப் பட்டியலில் ‘அந்திமழை’ குறிப்பிட்டிருக்கிறது. இந்த சிறப்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த ‘எந்தரோ மாகானுபாவலு’க்களை வணங்குகிறேன்.

அந்திமழையின் அன்புக்கு நன்றி!

7 மே, 2013

வாழ்த்துகள் தலைவரே


2006 வாக்கில் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து, அதன் மூலம் முதன்முதலாக தொலைபேசியில் பேசியவர் அவர்தான். முன்பாக மெயிலில் உரையாடியிருந்தோம்.

உங்க எழுத்துலே சுஜாதா வாசனை இருக்கு

சரிங்க. மாத்திக்கறேன்

எதுக்கு மாத்திக்கணும்.. அப்படியே இருக்கட்டுமே?

சுஜாதா வாசனை இருக்கிறதாவென்று தெரியாது. ஆனாலும் அவர் சொன்னதால் அப்படியே இருத்திக் கொண்டேன். தன்னை குறும்பட இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். குறும்படங்களுக்காக தனியாக ஒரு வெப்சைட் நடத்துகிறேன் என்றார். ‘நாளைய இயக்குனருக்குவெகுகாலம் முந்திய காலம் என்பதால், இதற்கெல்லாம் தனியாக வெப்சைட்டா என்று ஆச்சரியப்பட்டேன். அந்த வெப்சைட்டில் அவர் இயக்கியஆக்ஸிடெண்ட்டோடு வேறு சிலரின் படங்களும் ஏற்றப்பட்டிருந்தது.

கதை சொல்லிக்கிட்டிருக்கேன் தலைவரே. புரொட்யூஸர் கிடைச்சதுமே படம்தான்அடிக்கடி சொல்வார். “பாம்புகூட படம் எடுத்துடிச்சி. நீங்க சீக்கிரமா எடுங்க தலைவரேஎன்று சிலமுறை கலாய்த்திருக்கிறேன். அப்போது ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தில் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக இருந்தேன். “எங்க ஆபிஸ்லே மொத்தமா பத்து படம் எடுக்கப் போறாங்க. நீங்களும் ட்ரை பண்ணலாமில்லே?” என்றேன். “எங்க சித்தப்பாதான் உங்க சேர்மேன். தெரியுமா?” என்று ஆச்சரியப்படுத்தினார். அங்கே கதை சொன்னாரா என்று தெரியவில்லை.

சில நாட்களில் அவரும் வலைப்பூ எழுத வந்தார். சிறுகதை, சினிமாவென்று மசாலாதான். சக போட்டியாளர் என்பதால் நண்பர் என்றும் பார்க்காமல் பின்னூட்டங்களில் பின்னி பெடல் எடுத்துவிடுவேன். பயங்கர சண்டை நடக்கும். சில பேர் விலக்கிவிட முயற்சிப்பார்கள். பல பேர் தூண்டிவிட்டு குளிர் காய்வார்கள். யாருக்குமே தெரியாது. அவரும் நானும் ஏற்கனவே நண்பர்கள் என்று. அவருடைய கருத்துகளை நானோ, என்னுடைய கருத்துகளை அவரோ அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. நண்பர்களாக இருக்க ஒத்த கருத்து இருந்தே ஆகவேண்டுமா என்ன?

பதிவுகளில் எழுதியதையெல்லாம் தொகுத்து வரிசையாக புத்தகங்களாக வெளியிட ஆரம்பித்தார். அவர் புத்தகங்களை வெளியிடவே புதியதாக பதிப்பகங்களும் தொடங்கப்பட்டன. அவரது சிறுகதைத் தொகுப்புக்கு விமர்சனக்கூட்டம் நடத்தினார்.

நீங்க பேசணும் தலைவரே

இதுமாதிரி புக்கு பத்தியெல்லாம் இதுவரைக்கும் பேசினதில்லை தலைவரே

அதனாலே என்ன.. எனக்கு நீங்க பேசுனா சந்தோஷமா இருக்கும்

முதன்முதலாக புத்தக விமர்சனத்தை மேடையில் செய்தது அவருக்காகதான். அதற்குப் பிறகு நான்கைந்து சான்ஸ் கிடைத்துவிட்டது. நல்ல ராசியான ஆள் அவர்.

அழிக்கப் பிறந்தவன்தொடர்கதையாக என்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். அதை படித்தவர் உலகநாதனிடம் பேசியிருக்கிறார். உலகநாதனும், அவரும் இணைந்துதான் அதை புத்தகமாக கொண்டுவந்தார்கள். முன்பே வேறு சில நண்பர்களுக்கும் இதேமாதிரி உதவியிருக்கிறார். பொதுவாக நட்பு வட்டத்தில் இருக்கும் எல்லோருடைய சுக துக்கங்களுக்கும் முன்வரிசையில் வந்து நிற்கும் குணம் கொண்டவர். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவரை வெறுப்பதற்கு ஒரு காரணம் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர் மீது எதற்காகவாவது கோபம் வந்தாலும், நேரில் அவர் முகத்தை பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும். ஒருமாதிரி காமெடியான முகம் கொண்டவர். எப்போதும் புன்னகையோடே “வாங்க தலைவரே” என்று எதிர்கொண்டு கட்டிக் கொள்வார் (தொப்பைதான் கொஞ்சம் இடிக்கும்).

சாண் ஏறினால் முழம் சறுக்குவது சினிமாத் தொழிலின் பண்பு. ஆனால் சோர்வில்லாமல் பல்லாண்டுகளாக சறுக்கி, ஏறி, சறுக்கி, ஏறி இன்று ஒருவழியாக சிகரத்தை எட்டிவிட்டார். நண்பர்களின் வெற்றி, நம்முடைய வெற்றி. ‘தொட்டால் தொடரும்’ வெள்ளிவிழா காண வாழ்த்துகள் தலைவரே. ஆனா, படம் மொக்கையா வந்தா எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம்.

4 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : uncut version பார்க்க..

ஊடகங்களால் பிரபலமாகி விட்ட சத்தியவேடு சீனிவாசா தியேட்டர் கொஞ்சம் பெரிய சைஸ் ஆம்னி வேன் மாதிரி இருக்கிறது. நூற்றி ஐம்பது சீட்டுகள் இருந்தாலே அதிகம். அதிலும் பாதி சீட்டுகள் உடைந்திருக்கும் என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ‘சிசென்டருக்கும் கீழே லெவல் தியேட்டர். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் அந்த சிறிய அரங்கின் முன்பாக திரண்டிருந்தது கொடுங்கனவாக இன்னும் சில நாட்களுக்கு நடு இரவில்கூட ஞாபகத்துக்கு வரும். நேற்று காலை போய் முட்டி, மோதிப் பார்த்துவிட்டோம். நைட் ஷோ வரை டிக்கெட் கிடைக்காது என்றார்கள். ‘பிரெஸ்’சுக்கும் ஆந்திராவில் எந்த மதிப்புமில்லை.

கவுண்டரில் சாஸ்திரத்துக்கு இருபது, முப்பது டிக்கெட் வினியோகிக்கிறார்கள். ஐம்பது ரூபாய் விலை. மீதியெல்லாம் கள்ள மார்க்கெட்டில் ஓடுகிறது. நேற்று சிலர் ஐநூறு ரூபாய் கூட கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். நாற்காலிகள் முழுக்க நிரம்பிவிட ‘ஓவர்ஸ்’ டிக்கெட் வினியோகம் நடக்கிறது. பாதி பேர் தரையில் உட்கார்ந்தும், ஓரமாக நின்றுக்கொண்டும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தியேட்டர் ஓனரின் மகன் என்று சொல்லப்பட்டவர் திரையரங்கு முன்பாக திரண்டிருந்த ரசிகர்களிடையே பால்கனியில் இருந்து கமல் ஸ்டைலில் பேசினார். “நாகலாபுரம் இங்கிருந்து இருவத்தஞ்சி கிலோ மீட்டர் இருக்கும். அங்கேயும் வேல்முருகன் தியேட்டர்லே வெள்ளிக்கிழமையிலேருந்து தமிழ்லேதான் போட்டிருக்காங்க. தயவுசெஞ்சி எல்லாரும் அங்கே போய் பாருங்க”

கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொய் சொல்கிறார் என்று நினைத்து எல்லோரும் அப்படியே இருக்க, சில பேர் நாகலாபுரத்துக்கு போன் போட்டு விசாரித்து ‘மேட்டர் ஓக்கே’ என்றார்கள். சத்தியவேட்டில் இருந்த பாதி கூட்டம் நாகலாபுரத்துக்கு விரைந்தது.

வேல் முருகனும் தம்மாத்துண்டு தியேட்டர்தான். ஆனால் சத்தியவேடு சீனிவாசாவை விட கொஞ்சம் பெரியது. போன வாரம் முழுக்க ‘விஸ்வரூபலு’வாக ஈயடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று ‘பல்ப்’ எரிய விஸ்வரூபமாக்கி விட்டார்கள். ‘நாகலாபுரத்தில் தமிழில் விஸ்வரூபம்’ என்று கையால் எழுதி - தமிழில்தான் எழுதியிருக்கிறார்கள், ஆனாலும் ஜாங்கிரி சுட்டமாதிரிதான் இருக்கிறது ஊத்துக்கோட்டையில் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

காலை காட்சிக்கு எழுபது பேர் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் மதிய காட்சிக்கு வேல்முருகன் அதிரிப்போயிந்தி. ஹவுஸ்ஃபுல் ஆகி ஓவர்ஸ் விட தரையும் ஃபுல் ஆனது. டி.டி.எஸ்/க்யூப். சவுண்ட் படு சுமார். புரொஜெக்‌ஷன் ஓக்கே.

சென்னையிலிருப்பவர்கள் விஸ்வரூபத்தின் uncut versionஐ பார்க்க நாகலாபுரத்தை பரிசீலிக்கலாம். சத்தியவேடுக்கு போய் முட்டிப் பார்க்க முடிவெடுப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். ஒரு காட்சி ஃபுல் ஆகிவிட்டாலும், அடுத்த காட்சியை பார்த்துவிடலாம். சத்யவேடுவில் இந்த கேரண்டி இல்லை. பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் புத்தூர் வழியாக திருப்பதிக்குப் போகும் பேருந்தில் செல்லலாம். “நாகலாபுரம் நில்சுனா அண்ணய்யா...” என்று டிக்கெட் எடுப்பதற்கு முன்பாக கண்டக்டரிடம் விசாரித்துக் கொள்ளவும். நாகலாபுரம் ஆர்ச்சுக்கு முன்பாக பைபாஸில் நிறுத்துவார்கள். அங்கிருந்து ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். அல்லது கோயம்பேட்டிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து நாகலாபுரம் செல்லலாம். இந்த பஸ் ஊருக்குள்ளேயே போகும்.

டூவீலரிலோ, காரிலோ செல்பவர்கள் திருவள்ளூர், பூண்டி தாண்டி ஆந்திர எல்லைக்குள் நுழைந்து லெஃப்ட் எடுத்து நாகலாபுரம் செல்லலாம். தோராயமாக எண்பது கி.மீ. தூரம் வரும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு ஆந்திரா போய்தான் பார்க்க வேண்டுமா, எட்டாம் தேதி ரிலீஸ் ஆகும்போது உள்ளூரிலேயே பார்த்துக் கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு நம்மிடம் பதிலில்லை. தமிழக அரசின் கட்டப் பஞ்சாயத்தால் வெட்டப்படும் காட்சிகள் என்று கேள்விப்படும் காட்சிகள் எல்லாமே படத்தின் உயிர்நாடி. அக்காட்சிகளோடு முழுமையாக பார்க்கும் அனுபவம் அலாதியானது. விஸ்வரூபம் இதுவரை உங்களுக்கு சினிமாவில் வழங்கப்படாத புது அனுபவத்தை வழங்குகிறது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறோம். நமக்கு கிடைத்த அந்த அற்புதமும், பரவசமும் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஆப்ஷன் ஒன்று : வழியில் சுருட்டப்பள்ளியில் ஈஸ்வரன் கோயில் இருக்கிறது. ஆலகால விஷத்தை முழுங்கிய ஈஸ்வரன், டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்க அம்மையின் மடியில் தலை வைத்து இருபது அடி நீளத்துக்கு படுத்தவாக்கில் வீற்றிருக்கிறார். ஈரேழு உலகிலும் ஈஸ்வரனுக்கு இப்படியொரு சிலை இருப்பது சுருட்டப்பள்ளியில்தான். அங்கிருக்கும் அம்மனும் சக்தி வாய்ந்தவராம். விஷத்தால் சிவனுக்கு ஆபத்து ஏற்படாமல் காத்தவர் அவர்தானாம். மிகப்பழமையான இந்த ஆலயம் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. நாகலாபுரத்தில் இருக்கும் பெருமாள் (விஷ்ணு? அல்லது ஏதோ ஒண்ணு) கோயிலும் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் பிரமாதமாக புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் ஒரு கலை அதிசயம். படம் பார்க்கும் சாக்கில் இப்படி ஓர் ஆன்மீக டூரும் அடிக்கலாம்.


ஆப்ஷன் இரண்டு : ஆன்மீகத்தில் அக்கறை இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கு ஆந்திராவின் ஒரிஜினல் சரக்கு. நம்மூர் டாஸ்மாக்கில் கலப்பட சரக்கு அடித்து வயிறு புண் ஆனவர்களுக்கு ஆந்திர சரக்குதான் சிறந்த மருந்து.

நீங்கள் தேவனோ, சாத்தானோ தெரியாது. ஆனால் இருவருக்குமான ஆப்ஷனும் மேலே இருக்கிறது. choose your best choice!


12 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் காட்சி – சில விளம்பரங்கள்


முத்து காமிக்ஸின் நாற்பதாண்டு பயணநிறைவை கொண்டாடும் வகையில் ‘never before special’ஐ கொண்டு வந்திருக்கிறது. 456 பக்கங்கள். ரூ.400/- விலை. தரமான இந்த வண்ணப் புத்தகத்தின் விலை நியாயமாகப் பார்க்கப் போனால் ஆயிரம் ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.

புத்தகக் காட்சியின் முதல் நாள் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் முத்து காமிக்ஸ் ஸ்டால்தான். பயங்கர கூட்டம். முத்துவின் நிறுவனர் சவுந்தரபாண்டியன், ஆசிரியர் எஸ்.விஜயன், விஜயனின் மகன் என்று மூன்று தலைமுறையையும் ஒருங்கே ஸ்டாலில் காணமுடிந்தது. காமிக்ஸ் வாசகர்களோடு அவர்களது உரையாடல் நெகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கியது.

நெவர் பிஃபோர் ஸ்பெஷலைத் தவிர்த்து பழைய லயன்/முத்து இதழ்களும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்டால் எண் 343.

ஸ்டால் எண் 300ல் ‘ஸ்டார் காமிக்ஸ்’ விற்பனைக்குக் கிடைக்கிறது. கேப்டன் பிரின்ஸின் பனிமண்டலக் கோட்டை இன்னமும் குறைந்த பிரதிகளே மிச்சமிருக்கின்றன. விலை ரூ.100. ஹார்ட்பவுண்ட் அட்டை, கண்ணைப் பறிக்கும் வண்ணமென்று இந்த காமிக்ஸும் பட்டாசுதான்.

இணையத்தில் பிரபலமான நண்பர் நர்சிம்மின் ‘ஒரு வெயில் நேரம்’ சிறுகதைத் தொகுப்பு பட்டாம்பூச்சி பதிப்பகத்தில் கிடைக்கும். இணையத்தில் எழுதிய சில சிறுகதைகள், இதழ்களில் வெளிவந்தவை என்று கலந்துக்கட்டி தொகுப்பாக்கி இருக்கிறார்கள். கதைகளில் ஆர்வமிருக்கும் வாசகர்கள் வாங்கலாம். நிச்சயம் ஏமாற்றாது என்பதற்கு நான் கேரண்டி. நர்சிம்மின் ‘உன்னை அழைத்துப்போக வந்தேன்’ கவிதைத் தொகுப்பும் இதே பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ’கேபிளின் கதை’ நாகரத்னா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. நம் அன்றாட வாழ்வில் ஒன்றிப்போய்விட்ட ‘கேபிள் டிவி’யின் பின்னணியை அறிந்துக்கொள்ள இந்நூல் உதவும்.

சத்ரபதி வெளியீடான ‘சின்மயி விவகாரம் : மறுபக்கம்’ ஒரு முக்கியமான நூலாக படுகிறது. பணத்திமிர் பிடித்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும், பிரபலங்களும் சாமானிய மனிதர்களை போட்டுத் தள்ளுவது ஆண்டாண்டு காலமாக நடைமுறைதான். அதை ஓர் எழுத்தாளர் தட்டிக்கேட்டு, விவகாரத்தின் முழுமையான பார்வையை ஒரு நூலாக கொண்டுவருவது எனக்குத் தெரிந்து இதுதான் முதல்முறை. “முகமற்றவர்களின் முகமாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன்” என்கிறார் விமலாதித்த மாமல்லன். அவர் எழுத்தாளர்தான் என்பதை இந்நூல் நிரூபிக்கிறது. கிழக்கு, காலச்சுவடு ஸ்டால்களில் இந்நூலை வாங்கலாம்.

15 நவம்பர், 2012

ட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்!

நாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணி
இடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

சைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா? முடக்கவா?
- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்


அரசு இயந்திரம்: சாமானியர்களுக்கா? பிரபலங்களுக்கா?
- சையது, சேவ் தமிழ்சு இயக்கம்


இணைய உலகிலும் கருத்துரிமைக்கு சாவுமணி அடிக்கும் அரசு!
- ராதிகா கிரி, ஊடகவியலாளர்


விவாதங்கள் நடத்துவது: கருத்தை மாற்றவா? காயப்படுத்தவா?
- கஜேந்திரன், ஊடகவியலாளர்


சமூக வலைத்தளங்கள் தொடர்பான இப்பிரச்சினையில் தங்களது பார்வைகள்
- யுவகிருஷ்ணா, கார்ட்டூனிஸ்ட் பாலா, நிர்மலா கொற்றவை, உண்மைத்தமிழன்


எதிர்கொள்வது எப்படி - கலந்துரையாடல்
----------------------------
அனைவரும் வருக
----------------------------

2 நவம்பர், 2012

முட்டைக்கு மொட்டை அடிப்பது


சென்னை விமானநிலையத்தில் விஜயகாந்த் நடந்துகொண்ட முறை அநாகரிகமானது. பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்றால் எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றிருக்கலாம். மாறாக தன்னுடைய கட்சிக்காரர்களை நடத்துவதைப் போல பத்திரிகையாளர்களை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதே நேரம், புரட்சித்தலைவியை இதேபோல விமானநிலையத்தில் மடக்கி, குறுக்கிட்டு, இதே பத்திரிகையாளர்கள் பேச ‘தில்’ இருக்கிறதா என்று பொதுமக்கள் ஊருக்குள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ கணக்காக, கொஞ்சம் கிராமத்து மனிதர் மாதிரியாக வெள்ளந்தியாக பழகுகிறார் என்பதற்காக மனைவியோடு கைபிடித்துச் சென்றுக் கொண்டிருந்தவரை குறுக்கிட்டு எகனைமொகனையாய் பேசியதை என்னவென்று சொல்ல?

குறிப்பிட்ட பத்திரிகையாளர் (அவர் தற்போதைய அரசு ஆதரவு பத்திரிகையாளர் என்பதில் சந்தேகம் வேண்டாம்) விஜயகாந்திடம் சென்று அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், முதல்வரை சந்தித்ததைப் பற்றி கருத்து கேட்கிறார். விஜயகாந்துக்கு விடையளிக்க விருப்பமில்லை. பதிலுக்கு ஊரெல்லாம் கரெண்டு இல்லை. இதைப்பத்தி போயி ஜெயலலிதாகிட்டே என்னன்னு கேளு என்று பதில் அளித்திருக்கிறார். புத்திசாலித்தமான பத்திரிகையாளர் பதிலுக்கு ‘ரிஷிவந்தியத்தில் மட்டும் கரெண்டு இருக்கா?’ என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார். கோபத்துக்கு பேர் போன விஜயகாந்துக்கு கோபம் வந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ரிஷிவந்தியம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது? ரிஷிவந்தியத்துக்கும் ஜெயலலிதாதான் முதல்வர். இந்த ஆட்சியின் மின்சார வாரியம்தான் அந்த ஊருக்கும் மின்சாரம் கொடுக்க வேண்டும்.


இதையடுத்துதான் ரசபாசம் ஆகியிருக்கிறது. குறிப்பிட்ட பத்திரிகையாளரை விஜயகாந்த் ஏகவசனத்தில் ‘நாயே’ என்று விளித்திருக்கிறார். உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் கொடுக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகையாளர்களும் விஜயகாந்துக்கு எதிராக நூதனப் போராட்டம் ஒன்றினை அறிவித்திருக்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருகவென்று கேட்டுக் கொள்கிறோம்.

ஆட்சிக்கு வந்தபோது வாராவாரம் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் முதல்வர் மட்டுமின்றி அமைச்சர்களும், உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், அதிகாரிகளும் கூட பத்திரிகைகளிடம் எதைப்பற்றியும் பேச விரும்புவதில்லை. எதிர்தரப்பினரின் கருத்துகளை வாங்கிவிட்டு, அரசு தரப்பாக பத்திரிகைகளே பேசித்தொலைக்க வேண்டிய அபாக்கியமான நிலைமை.

அப்படியும் ஏதோ இலைமறை காய்மறையாக எழுதினாலும் முதல்வரோ, அமைச்சர்களோ பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகளை அம்புமாதிரி தொடர்ச்சியாக எய்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிகாரத்துக்கு எதிராக விமர்சனம் வைக்கும் காமன்மேன்கள் மீதும் இப்போது வழக்குகள் பாய ஆரம்பித்திருக்கிறது.

இப்படியிருக்கும் பிரகாசமான தமிழக பத்திரிகைச் சுதந்திரச் சூழலில் விஜயகாந்துக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அவசியம்தான். நமது உரிமையை நிலைநாட்ட இதைக்கூட செய்யவில்லை என்றால் எப்படி. நம்மை சீண்டினால் என்னாகும் என்பதை உலகம் உணரவேண்டாமா. குறைந்தபட்சம் பத்திரிகையாளர்கள் என்று ஒரு இனம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதையாவது மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா. நான்கூட பேசாமல் கையில் ‘ரெட்டை எலை’ பச்சை குத்திக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். ஐம்பது வயதுக்கு பிறகு ராஜ்யசபா சீட்டாவது கிடைக்கும்.