இயக்கம் - கேமிரா - நடிப்பு - இசை மற்ற தொழில்நுட்ப இத்யாதிகள் என்று ஒரு திரைப்படத்துக்கு சிறப்பு சேர்க்கும் எல்லா காரணிகளுமே மிக சிறப்பாக அமைந்திருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சிறப்பு. ஆனால் இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது. அப்பாவின் கல்லூரி காதலில் ஆரம்பித்து அவரது இறுதி மூச்சு வரைக்கான கதை என்று எடுத்துக் கொண்டாலும் இதில் மகன் வளர்வது, காதலிப்பது, மேட்டர் முடிப்பது, தண்ணியடிப்பது, டோபு அடிப்பது மாதிரியான கருமங்கள் எதற்காக? மகனின் பார்வையில் அப்பா என்ற கான்செப்டை எடுத்துக் கொண்டாலும் அப்பாவுக்கு நேரடி தொடர்பில்லாத மகனின் அந்தரங்கம் காட்சியாக்கப்பட்டிருப்பது எல்லாம் அனாவசியம். சுவாரஸ்யம் குறைவான ஒருவரின் வாழ்க்கை வரைபடம் இத்திரைப்படம். அனேகமாக இயக்குனர் கவுதமின் சொந்தக்கதையாக இருக்கலாம். மகன் சூர்யாவின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் அனைத்திலும் அச்சு அசலாக கவுதம் வாசுதேவ் மேனன். இயக்குனருக்கு சினிமா சென்ஸ் ரொம்பவும் அதிகம். தனித்தனி காட்சிகளாக பார்த்தால் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது புலப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்றுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்கும்போது கொட்டாவிதான் வருகிறது. சாரி கவுதம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல்கல். இப்படத்துக்கு அவர் செலவழித்திருக்கும் உழைப்பையும், சிரத்தையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பா கேரக்டருக்கு ரகுவரன்; மகன் கேரக்டருக்கு கமல்ஹாசன் ஆகியோரின் உடல்மொழியை அப்பட்டமாக பின்பற்றுகிறார். இயக்குனர் கமல்ரசிகர் என்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. டீனேஜ் சூர்யா பைலட்டில் பார்க்கும் படம் ‘சத்யா'. அப்பா, மகன் இரண்டு கேரக்டரையும் சூர்யாவே எடுத்து நடித்தது ஏன் என்பதை அவராலும், இயக்குனராலும் ஜஸ்டிஃபை செய்யவே முடியாது. வேறொரு நடிகரை அப்பாவாக நடிக்க வைத்திருந்தால் தயாரிப்புச் செலவாவது குறைந்திருக்கும். ஆயினும் தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை. வானில் ஹெலிகாப்டரில் மேஜர் சூர்யா பறக்கிறார் என்றால் அதை வானிலேயே சென்று படமாக்கும் மிஸ்டர் பர்ஃபெக்ட் இயக்குனர். அந்த ராணுவகாட்சிகளுக்கான டோன் அபாரம். திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டே பார்ப்பார்கள். அமெரிக்க காட்சிகளும், பாடல்களும் வாவ். படத்தைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆமையை விட மெதுவாக நகரும் காட்சிகள் ஏற்படுத்தும் கடுப்பின் எல்லைக்கு அளவேயில்லை. இயக்குனருக்கு படத்தை முடிக்க மனமேயில்லாமல் முடித்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் பத்துமணி நேரத்துக்கு படமெடுத்திருப்பார் போலிருக்கிறது. இறுதிக்காட்சிக்கு இடையே தேவையில்லாமல் நுழைக்கப்பட்ட இராணுவமீட்பு சண்டை சூப்பர் என்றாலும் தேவையே இல்லை. சமீரா ரெட்டி என்ற சப்பை ஃபிகரை எப்படித்தான் சூர்யாவுக்கு ஜோடியாக சேர்த்தார்களோ? காதலை சொல்லும் கட்டத்தில் பூ மாதிரி முகத்தை மலரவைக்க வேண்டாமா? ரியாக்ஷன் காட்டுவதில் கஞ்சத்தனம். நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு குத்து ரம்யா (எ) திவ்யாவின் எண்ட்ரி வருவதால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும் பார்ப்பது தமிழ்படமா? ஆங்கிலப் படமா என்ற சந்தேகத்தை தருகிறது. ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம். சிம்ரன் இளமையாக தோன்றும் காட்சிகள் நிறைவு. வயதான கெட்டப் மோசமென்றாலும், நடிப்பில் சோடைபோகவில்லை. கிராபிக்ஸில் பழைய சென்ட்ரல், அந்நாளைய ஸ்பென்ஸர் பிளாஸா ஆகியவற்றை பாடலில் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் 60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் அவை. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது, மேஜிக்கும் இருக்கிறது. சராசரி தமிழ் சினிமா ரசிகனால் பார்க்கவே முடியாத படமிது. தெலுங்கிலும் டப் செய்திருக்கிறார்களாம், அங்கே திரையை ரசிகர்கள் கிழிக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம். வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!
தெலுங்கில் அடிதடி, மசாலா, அஜால் குஜால் காலக்கட்டங்களை எல்லாம் தாண்டி காமெடிக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் பார்த்த 'யுவதா'வும் காமெடி மசாலா. காமெடி என்று இறங்கிவிட்டால் லாஜிக்கெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா? ஊரில் மாமா வீட்டில் இருந்து சிட்டிக்கு வரும் ஹீரோ பாபு. மகிழ்ச்சி, கொண்டாட்டம், கும்மாளம் - இதைத்தவிர அவனுக்கு வேறெதுவுமே தெரியாது. நட்புக்காக உயிரையும் கொடுப்பான். சிட்டியில் பட வாய்ப்பு தேடும் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர், காதலியை கைப்பிடிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு போக முயற்சிக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், வங்கிப் பணத்தை பாதுகாக்கும் ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் என்று அவனுக்கு மூன்று நண்பர்கள். நண்பர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே பாபுவின் வேலை. இடையில் எகனை மொகனை போன் கால் ஒன்றில் பேபி என்ற ஒரு அழகான காதலியும் பாபுவுக்கு கிடைக்கிறாள். மகிழ்ச்சியாக பயணப்படும் திரைக்கதையில் திடீரென்று ஒரு ஜெர்க் அடித்து அடிதடியை நுழைத்து படத்தை த்ரில்லர் ஆக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். நண்பனின் உயிரைக் காக்க ஒரு வட்டிக்கார வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் மற்ற நண்பர்கள், வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து, யாரோ அடித்த இருபது கோடி கொள்ளைக்காக ஜெயிலுக்குப் போகிறார்கள். அதன் பின்னர் வரிசையாக தடாலடியாக இறக்கிவிடப்படும் கொடூர வில்லன்கள் ஒவ்வொருத்தராக காமெடியன்களாகி விட இறுதியில் ஒரிஜினல் வில்லன் ஜெயிலுக்குப் போகிறார். நண்பர்கள் மகிழ்ச்சியோடு தொடர்கிறார்கள். நட்பு தான் பெஸ்ட்டு என்று அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர். இடைவேளைக்கு முன்பு வேறுபடம், இடைவேளைக்குப் பின்பு வேறுபடம் என்று சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் காட்சியமைப்புகள். நல்லவேளையாக ஹீரோ, ஹீரோயின் போன்றவர்கள் மாறாமல் இருப்பதால் ஒரே படம் தான் என்று நம்பமுடிகிறது. ஹீரோ நிகில் செம அசத்து அசத்தியிருக்கிறார். உங்கள் வீட்டருகில் பஸ் ஸ்டேண்டு பக்கத்தில் பொட்டிக்கடை இருந்தால் அங்கே யாராவது ஒரு பையனை அடிக்கடி பார்த்திருப்பீர்களே? அதுபோன்ற ஒரு சராசரி தோற்றம். தமிழில் மொழிமாற்றம் செய்தால் தனுஷ் நச்சென்று செட் ஆவார். சராசரித் தோற்றத்துக்கு அசாதாரண அழகியான அக்ஷா ஹீரோயின் -பாடல்களில் தாராளம். ரியாக்ஷன்களில் சிக்கனம். அடுத்தடுத்த தொடர்ச்சியான காட்சிகளாலேயே படத்தை நகர்த்திக் கொண்டு செல்வது அபாரம். தேவையில்லாமல் திணிக்கப்பட்ட சண்டைக்காட்சியோ என்று எண்ணும்போது, அந்த சண்டைக்காட்சியே கதையின் திருப்பத்துக்கு மூலகாரணமாக அமைகிறது. ஹாஸ்பிட்டலில் நடப்பதாக சொல்லப்படும் ஆள்மாறாட்டம் காதுல பூ! இரண்டு ஜோடி காதலர்கள் இருந்தாலே சாங்குகளாக போட்டு சாவடிப்பார்கள் தெலுங்கு இயக்குனர்கள். இந்தப் படத்தின் இயக்குனர் கவனமாக சதையை தவிர்த்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குனர், அவ்வளவாக அறிமுகமில்லாத கதாநாயகன் என்றாலும் கதை, திரைக்கதை, நகைச்சுவைக்காக குடும்பத்தோடு காணலாம். யுவதா - யூத்துடா!!
இரட்டை கும்மிப்பதிவர்கள் இருவரையும் அடிக்கடி பெரியார் திடல் பக்கம் பார்க்க முடிகிறதாம். அமாவாசைக்கும் அப்துல்காதர்களுக்கும் என்ன சம்பந்தம்? நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும்... * - * - * - * - * - * - * - * - * - * - * அவர் பிரபல செய்தியாளர். அவ்வப்போது வலைப்பதிவும் செய்கிறார். எங்கு செல்ல வேண்டுமானாலும் அலுவலக மகிழுந்து தயாராக இருந்தாலும், ஒரு இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். "PRESS" என்று வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யாரும் சென்னையில் ஹெல்மெட் அணிவதில்லை. இருந்தாலும் நம்ம ஆளு கவசகுண்டலத்தோடு கர்ணனைப் போல எப்போதும் ஹெல்மெட் அணிந்தே காட்சியளிக்கிறாராம். வண்டி ஓட்டும் நேரம் தவிர்த்தும் கூட மற்ற எல்லா நேரமும், பாத்ரூமுக்கு போகும்போதும் கூட ஹெல்மெட்டோடே எச்சரிக்கையாக செல்கிறாராம். ”சிக்னல்ல ஹெல்மெட் இல்லாம போறவங்களை கமிஷனர் ஆபிஸ்லே இருந்துக்கிட்டே மானிட்டர்லே பார்க்குறாங்க. வேலை விஷயமா அங்கே போறப்போ நீங்கள்லாம் கூடவா சார்னு கேட்குறாங்க. அதுனாலே தான்” என்று ஹெல்மெட்டுக்குள் இருந்து காரணம் சொல்கிறார். மனிதர் எப்போதும் ஹெல்மெட்டுக்குள் தலையை கொடுத்து விடுவதால் அவரது கைப்பேசிக்கு ஒரு ரூபாய் போனில் இருந்து முயற்சி செய்யும் அப்பாவி புதுப்பதிவர்கள் லைன் கிடைக்காமல் கடுப்பாகி டாஸ்மாக்குக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. சிங்காரி சரக்கு.. நல்ல சரக்கு.. * - * - * - * - * - * - * - * - * - * - * ஆசை ஆசையாக சினிமா ஃபீல்டுக்கு வந்த வலைப்பதிவர் அவர். சீனியர் போஸ்டில் இருப்பதால் தினம் தினம் மொக்கைப்படங்களாக ஓசியில் பார்த்து சினிமாவையே வெறுத்துவிட்டாராம். பதவியை ராஜினாமா செய்யும் மூடில் இருக்கிறாராம். கமல் ரசிகரான அவரின் அடுத்த அவதாரம் பத்திரிகையாளர் அவதாரமாக இருக்கக்கூடுமாம். புத்தாண்டில் புது அவதாரம் என்று காதைக்கடிக்கிறது அவருக்கு நெருக்கமான ஒரு சிட்டுக்குருவி. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... * - * - * - * - * - * - * - * - * - * - * பெண் பெயரில் ஆ(சா)பாசமாக களமிறங்கி பல 'பெருசு' பதிவர்களிடம் காதல் கடிதம் பெற்றவர் அந்தப் பதிவர். பிரம்மச்சாரி வேடம் அலுத்துவிட்டதாம். அடுத்தாண்டு ஆரம்பத்தில் மாமன் மகளை கைப்பிடிப்பார் என்று மருதமலையில் பேசிக்கொள்கிறார்கள். முன்னோட்டமாக 'தனி வீடு கூட பார்த்தாச்சு' என்று சரவணா ஸ்டோரில் அவர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தபோது சந்தித்த பதிவர் ஒருவரிடம் கிசுகிசுத்திருக்கிறார். ரகசியம் பரமரகசியம்! * - * - * - * - * - * - * - * - * - * - * வயது நாற்பதை நெருங்கினாலும் அஜித் கலரில், ஜே.கே.ரித்தீஷ் தோற்றத்தில் ‘நச்'சென்றிருக்கும் பதிவர் அவர். அவரை நாயகனாக்கி ஒரு படம் இயக்க இரட்டை இயக்குனர்கள் கதை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்களாம். குறைந்தபட்சம் ஒரு ‘மேட்டர்' படத்திலாவது அப்பதிவரை நாயகனாக்கி பார்க்க இரட்டை இயக்குனர்கள் தொடர் குண்டுவெடிப்பு தீவிரத்தோடு அலைகிறார்கள். தயாரிப்பாளர் தான் இதுவரை மாட்டவில்லை. பேசாமல் நாயகனையே தயாரிப்பாளராக்கி ‘அஜால் குஜால்' படத்தை அவசரமாக முடித்து ரிலீஸ் செய்துவிட திட்டம் தீட்டியிருக்கிறார்களாம். சிம்மா.. நரசிம்மா.... * - * - * - * - * - * - * - * - * - * - * பதிவர் சந்திப்புகளில் மட்டும் முன்பெல்லாம் கலந்துகொண்டவர் அவர். அவருக்கென்று ஒரு வலைப்பதிவு கூட இருப்பதாக தெரியவில்லை. வெறுமனே வாசகர் என்று சொல்லிக் கொள்வார். குறிப்பாக 'மூத்த' வலைப்பதிவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கண்டிப்பாக ஆஜராவார். கடந்த ஒரு வருடமாக ஆளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்த்தாலாவது அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்துங்கள். பூபாளம் இசைக்கும்.... * - * - * - * - * - * - * - * - * - * - * இரண்டாண்டுகளுக்கு முன்பாக பலமான ‘திராவக' சிந்தனையோடு களமிறங்கிய பதிவர். அடித்து ஆடுவதில் வல்லவர். இடையில் குடும்பம், குழந்தை, குட்டி, வேலை என்று பிஸியாகிவிட்டதால் வலைப்பதிவுக்கு நீண்ட லீவ் விட்டிருந்தார். இப்போது அழகிகள் நிறைந்த அயல்நாட்டில் பணியாற்றுபவருக்கு சமையல் வேலையெல்லாம் முடித்தபினி நிறைய நேரம் மிச்சமிருக்கிறதாம். மீண்டும் வலைப்பதிய தொடங்கியிருக்கிறார். மெதுவாக டொக்கு வைத்து ஆடிக்கொண்டிருப்பவர் சந்தர்ப்பம் கிடைத்ததுமே பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாச ஆரம்பிப்பாராம். முன்பெல்லாம் பார்ட்னர்ஷிப்பில் அசத்திக் கொண்டிருந்தவர் இந்த முறை தனியாகவே கொளுத்து கொளுத்துவென்று கொளுத்த திட்டமிட்டிருக்கிறார். ஆடுங்கடா என்னை சுத்தி... * - * - * - * - * - * - * - * - * - * - * மொழிவாசனைக்குப் பிறகு பதிவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் திரட்டி அது. மொழிவாசனை கொஞ்சநாட்களாக அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்துக் கொள்வதால் இத்திரட்டிக்கு நாளுக்கு நாள் ஹிட்ஸ் டபுள் ஆகிறதாம். வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் திரட்டியின் உரிமையாளர் அடுத்ததாக ஆங்கிலத்தில் வலைப்பதியும் தமிழர்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறாராம். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்....
முந்தைய பாகமான கேசினோ ராயலின் க்ளைமேக்ஸில் இருந்து அதிரடியாக தொடங்குகிறது குவாண்டம் ஆஃப் சோலஸ். படு பரபரப்பான கார் சேஸிங் ஓபனிங்கின் இறுதியில் வெற்றி வழக்கம்போல ஜேம்ஸுக்கே. முந்தைய பாகத்தில் கொல்லப்பட்ட ஜேம்ஸின் காதலி வெஸ்பரின் மரணத்துக்கு பழிதீர்க்க அடிபட்ட வேங்கையாய் குமுறிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ். அவரிடம் இருந்த ஒரே ஆதாரம் ஒயிட். ஒயிட்டை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ் குழுவில் இருக்கும் சகா மிட்சல் என்பவர் ஒயிட்டை தப்புவிக்க விசாரணைக்குழுவை சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறார். பின்னணியில் இருக்கும் குழு எத்தகைய தந்திரமிக்கது, செல்வாக்கானது என்பதை ஜேம்ஸ் உணருகிறார். அந்த குழுவின் பெயர் குவாண்டம் என்பதைத் தவிர்த்து அப்போதைக்கு வேறு க்ளூ எதுவுமில்லை. வழக்கம்போல ஓரிரு அழகிகளோடும், இரவுப்பொழுது சல்லாபங்களோடும் கொஞ்சம் சீரியஸாகவே இந்தமுறை விசாரணையை மேற்கொள்கிறார் ஏஜெண்டு 007. விசாரணைக்கு அரசாங்கரீதியான முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, ஒரு கட்டத்தில் தன் பாஸையே கூட முறைத்துக்கொண்டு, க்ளைமேக்ஸில் பாண்டுக்கு வெற்றி. படம் முழுக்க கண்களில் கொலைவெறியோடு அய்யனார் போல ஆவேசமாக அலையும் ஜேம்ஸ் தன்னுடைய தனிப்பட்ட பழி தீர்ந்தபிறகே மலையேறுகிறார். இவ்வளவு ஆக்ரோஷமாக ஜேம்ஸை இதற்கு முந்தைய படங்களில் பார்த்திருக்க முடியாது. கதாநாயகிக்கும் ஜேம்ஸ் போலவே பழிவாங்கும் வெறி. அழகான, அசத்தல் கட்டையான அவரது கண்கள் மட்டும் நாகப்பாம்பை நினைவுறுத்துகிறது. ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரேக்குக்கு ரெண்டாவது படம். இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்ட்களிலேயே கட்டுடல் இவருக்குத்தான். ரீட் & டைலர் கோட் சூட் போட்டாலும் கூட உடல் கட்டு தெறித்துக்கொண்டு தெரிகிறது. பாண்ட் படங்களுக்கு ஹீரோயின்களை எங்கிருந்து பிடிப்பார்களோ தெரியவில்லை. உலக அழகிகளை விடவும் அழகாக இருக்கிறார்கள். அதிலும் டேன் செய்து உடலை மாநிறமாக்கியிருக்கும் அழகி கேமில் செம பீஸ். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சொல்லவேண்டிய கதையை காட்டுத்தனமான எடிட்டிங் மூலமாக ரெண்டு மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை இசையமைப்பாளர்களுக்கு பாடம். காட்சிக்கு இசையால் மட்டுமே கூட பரபரப்பை ஏற்படுத்தமுடியும் என்பதை படத்தின் பல காட்சிகள் நிரூபிக்கிறது. கடந்த வாரம் ஐரோப்பியநாடுகளில் வெளியான படம் இவ்வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. ஜேம்ஸை தரிசிக்கும் பாக்கியம் அமெரிக்கர்களுக்கு அடுத்த வாரம் தானாம். உலகெங்கும் நல்லபடியான விமர்சனங்களோடு வசூல்சாதனைகளை ஜேம்ஸ் மீண்டும் முறியடித்திருக்கிறார். வெகுவேகமான காட்சியமைப்புகள் இந்தியாவில் இப்படத்தின் வெற்றியை பாதிக்கக்கூடும். கண்டிப்பாக காண வேண்டிய படம்!
எனக்கு நினைவு தெரிந்த ஒரு தீபாவளிக்கு மொத்தம் 19 படங்கள் வெளிவந்தது. அது 87 தீபாவளி. அவற்றில் 17 படங்களுக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடவேண்டிய பொட்டிச் செய்தி. அதெல்லாம் அந்தக் காலம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் இல்லாவிட்டால் அப்போதெல்லாம் தீபாவளியே இல்லை. மனிதன் - நாயகன், மாப்பிள்ளை - வெற்றிவிழா, தளபதி - குணா, பாண்டியன் - தேவர் மகன், முத்து - குருதிப்புனல் என்று தீபாவளிக்கு தீபாவளி சரவெடி தான். ரஜினி, கமல் படங்கள் மட்டுமன்றி விஜயகாந்த், சத்யராஜ் என்று அடுத்த நிலையில் இருப்பவர்களின் படங்களும், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒப்புக்கு சப்பாணிகளின் படங்களும் அதிரடியாக களமிறங்கிய காலம். தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த டர்ன் ஓவரில் நாற்பது, ஐம்பது சதவிகித வசூலை தீபாவளியிலேயே எடுத்துக் கொண்டிருந்த காலம். ம்ம்.. எல்லாம் இப்போது கானல் நீர்! தமிழின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ஹரிதாஸ் கூட 1944 தீபாவளி ரிலீஸ் தான். தீபாவளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மாதங்கள் இரண்டு. ஒன்று தீபாவளி வரும் அக்டோபர் அல்லது நவம்பர். கூடுதலாக ஒரு மாத சம்பளத்தை போனஸ் வாங்கியிருப்பார்கள், தாராளமாக செலவழிப்பார்கள். அடுத்தது பள்ளிகள் திறக்கும் காலமான ஜூன் மாதம், இம்மாதத்தில் கடனோ, உடனோ வாங்கி பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு தாராளமாக செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டாவது பணப்புழக்க மாதத்தில் சினிமாவுக்கு நோ சான்ஸ். ஆனால் அதற்கு முன்பாக ஏப்ரல் - மே மாதங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை காலமென்பதால் ஏப்ரல் 14 ரிலீஸில் சினிமாக்காரர்கள் ஒரு காட்டு காட்ட முடியும். சினிமாக்காரர்களுக்கு ஏப்ரல் 14 சின்ன தீபாவளி. தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் ஷிப்டிங் முறையிலும் சக்கைபோடு போடும் என்பது ஸ்பெஷலுக்கு இன்னொரு காரணம். உதாரணத்துக்கு செங்கல்பட்டில் ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். அது வெற்றிகரமாக ஐம்பது நாட்களை கடக்கும்போது பொங்கல் வந்து விடும். பொங்கலுக்கு புதுப்படம் ரிலீஸ் செய்யவேண்டும். அந்நேரத்தில் இங்கு ஐம்பது நாள் ஓடிய படம் உத்திரமேரூரில் இருக்கும் ‘பி' செண்டர் தியேட்டரில் செகண்ட் ரிலீஸ் செய்யப்படும். இதன் பெயர் தான் ஷிப்டிங். ரிலீஸின் போது நன்கு பேசப்பட்ட படமாக இருந்தால் ஷிப்டிங்கின் போதும் ஒரு அள்ளு அள்ளிவிடும் (87 தீபாவளிக்கு வெளியான மனிதன் 88 தீபாவளிக்கு நங்கநல்லூர் ரங்காவில் ஷிப்டிங்கில் ரிலீஸாகி ஹவுஸ்புல் ஆகி சாதனை படைத்தது). ஷிப்டிங் வசூல் முடிந்தப் பிறகும் கிராமங்களில் இருக்கும் ‘சி' செண்டர் தியேட்டர்களில் களமிறங்கி விநியோகஸ்தர்களின் பாக்கெட்டை நிரப்பும். இப்படியாக தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் சரக்கு கொஞ்சம் சுமாராக இருந்தாலே அடுத்த தீபாவளி வரை ஒரு வருடத்துக்கு அதை வைத்து வருமானம் பார்க்க முடியும். எனவே படவெளியீடுக்கு ஏற்ற சரியான தேதியாக தீபாவளி அமைந்திருக்கிறது. தீபாவளி தவிர்த்து மற்ற தேதிகளில் வெளியாகும் படங்கள் இந்த ரிலீஸ் - ஷிப்டிங் பிராசஸிங்கில் கொஞ்சம் அடிவாங்குவது உண்டு. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும். 2007 தீபாவளிக்காவது 7 படங்கள் வந்தது. 2008க்கு மூன்றே மூன்று படங்கள். ஏகன், சேவல், மேகம். என்ன கொடுமை சார் இது? மூன்றே மூன்று படங்கள் தான் வந்திருக்கிறது என்பதால் மூன்றுமே நியாயமாகப் பார்க்கப் போனால் சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டும். ஏகனும், சேவலும் ஓப்பனிங்கில் அசத்தி, படம் பார்த்தவர்களை அயர்ச்சியடைய வைத்து, போனால் போகட்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேகம் சொல்லவே தேவையில்லை. தமிழரசன், பி.ஏ., பி.எல்., என்பவர் தன்னை ஒரு ஹீரோவாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் சில லட்சங்களை வீணடித்திருக்கிறார். கிட்டத்தட்ட மேகம் ஒரு மேட்டர் படம். தமிழ் திரையுலக வரலாற்றுக்கே மிக மோசமான தீபாவளி இது. தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் துவண்டுப் போயிருக்கிறார்கள். ஈயடிக்கும் தியேட்டர்களில் 'காதலில் விழுந்தேன்' வேறு வழியின்றி ஷிப்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்பிக்கையோடு தமிழ் சினிமாவில் முதலீடு செய்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கையைப் பிசைந்துக் கொண்டு நிற்கின்றன. முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்? வழக்கம்போல இந்த சோகமான சூழ்நிலைக்கு சினிமாக்காரர்கள் திருட்டு டிவிடியை காரணம் சொல்கிறார்கள். உண்மையில் சினிமாக்காரர்களின் பேராசை திருட்டு டிவிடியை விட மோசமானது. சின்னப்பா தேவர், ஏவிஎம், வாசன் போன்ற அந்தக்காலத்து தயாரிப்பாளர்கள் சினிமாவை ஒரு தொழிலாக பார்த்தார்கள். இன்றோ சூப்பர்குட் பிலிம்ஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களை தவிர்த்து மீதமுள்ள தயாரிப்பாளர்கள் இத்தொழிலை குதிரைப் பந்தயமாக பார்க்கிறார்கள். அஜித்தை வைத்து பண்ணிரண்டு கோடி செலவழித்தால் இருபத்து ஐந்து கோடியை எடுத்துவிடலாம் என்று ஆதாரமேயில்லாமல் அபத்தமாக நம்புகிறார்கள். இவ்வளவு முதலீட்டுக்கு இவ்வளவு லாபம் போதுமென்ற மனம் இவர்களுக்கு இல்லை. ஓரிரு படங்களிலேயே அம்பானி ஆகிவிட முயற்சிக்கிறார்கள். இந்தியாவிலேயே ஊழலும், சுரண்டலும் பெரியளவில் இன்று நடைபெறும் தொழிலாக திரைத்தொழில் மாறிவிட்டது. தமிழ் திரையுலகம் இருப்பதிலேயே ரொம்பவும் மோசம். முதல் படத்துக்கு எழுபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்கி சூப்பர்ஹிட் படத்தை ஒரு இயக்குனர் தந்துவிட்டால், உடனே அடுத்த படத்துக்கு அவசர அவசரமாக முப்பது, நாப்பது லட்சம் சம்பளம் பேசுகிறார்கள். கதை கூட கேட்க வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் படம் சுமாராக ஓடிவிட்டால் போதும், அவர் எவ்வளவு கேட்டாலும் தர தயாரிப்பாளர்கள் தயார். படம் ஓடுவது ஹீரோவுக்காக தான் என்று தயாரிப்பாளர்கள் நம்புவதை விட பெரிய காமெடி வேறு எதுவுமில்லை. சினிமா தயாரிக்க பணம் கூட இப்போது அவசியமில்லை. ஹீரோவின் கால்ஷீட் யாரிடம் இருக்கிறதோ அவர் தான் தயாரிப்பாளர். ”அந்த ஹீரோவோட கால்ஷீட் இருக்கு” என்று சொல்லியே பைனான்ஸ் வாங்கிவிடலாம். கதை இல்லாவிட்டால் பப்பு வேகாது என்ற உண்மை சராசரி சினிமா ரசிகனுக்கு கூட தெரிந்திருக்கும் நிலையில் இன்னமும் சினிமாவிலேயே பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கூட தெரியாதது ஆச்சரியமாக தானிருக்கிறது. 2008ல் நிஜமாகவே வெற்றிபெற்ற சில படங்களைப் பார்த்தாலே புரியும், எதனால் படங்கள் வெற்றியடைகின்றன என்று. அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், தசாவதாரம் - இவற்றில் அஞ்சாதே, சுப்பிரமணியபுரம் படங்களில் ஹீரோவின் பங்கு என்ன? அழகிய தமிழ்மகன், குருவி, குசேலன் என்று சமீபத்தில் ஹீரோவை நம்பி பப்படமான படங்கள் உணர்த்தும் பாடமென்ன? அப்பா தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இயக்குனராகிவிட்ட இயக்குனரின் சக்கரைக்கட்டி உணர்த்துவதென்ன? ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், என்று பிரபலங்கள் இருந்தாலே வெற்றி உறுதி என்று நினைப்பது மடத்தனமா இல்லையா? சிம்பு எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார்? அவருக்கு கோடிகளை கொட்டி கொடுப்பதால் என்ன பயன்? 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட திருடா திருடி பதினைந்து கோடி வசூலித்துக் கொடுத்தது என்றால் அந்த படம் நன்றாக இருந்தது, மக்களுக்குப் பிடித்தது என்று பொருள். அது தனுஷ் நடித்ததால் மட்டுமே ஓடிவிடவில்லை. இவர்கள் பங்குபெறும் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே கடந்த காலங்களில் ஓடியிருக்கிறது என்பதை கூட அறியமுடியாத அளவுக்கு நம் சினிமாக்காரர்களுக்கு மூளை மழுங்கிவிட்டதா? இனியாவது சினிமாக்காரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். போடும் முதலீட்டுக்கேற்ப நியாயமான லாபம் கிடைத்தால் போதுமென்ற மனத்துக்கு தயாராக வேண்டும். நட்சத்திரங்களை நம்பி நட்டாற்றில் இறங்கக் கூடாது. குறைந்த முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க முயற்சிக்க வேண்டும். திரையரங்குகளில் கட்டணங்களை குறைத்தாலே திருட்டு விசிடியை ஒழித்துவிட முடியும். இன்னமும் தங்கள் தொடர்தோல்விக்கு திருட்டு விசிடி தான் காரணமென்று கூறி தங்கள் தரப்பு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்துக் கொண்டிருந்தால், பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகத்தை பார்த்த கதையாகிவிடும். அடுத்த தீபாவளியாவது தமிழ் சினிமாவுக்கு உருப்படியான தீபாவளியாக அமையுமென்று எதிர்பார்ப்போம்.