பர்சனல் கேள்விகள் -
லக்கிலுக்,
இப்படி மாய்ந்து மாய்ந்து தமிழ்ப் படங்கள் பார்க்கிறீரே. உலக சினிமா எல்லாம் பார்ப்பதுண்டா? அதைப் பற்றியெல்லாம் எழுதுவதில்லையே!
அடல்ட் விஷயங்கள் எல்லாம் அழகாக எழுதுகிறீர்கள். உங்கள் உறவினர்கள் யாரும் இதையெல்லாம் படித்துக் கண்டனம் தெரிவிப்பதில்லையா?
அப்புறம் உங்க வெப்சைட்டை ஏன் நான் டெய்லி படிக்கிறேன்னு யோசிச்சுப் பார்த்தா உங்ககிட்ட குமுதம் டச் இருக்கு.
என்னமோ காலங்கார்த்தால் இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.
- பெயர் சொல்ல விரும்பாத பிரபல எழுத்தாளர் **************
* - * - * - * - * - * - * - * - * - * - * - * -
அன்பின் **************** சார்!
இதுபோல தனிமடலில் அணுகும் உங்கள் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
இனிமேல் நானும் மற்ற வலைப்பதிவர்களை இம்முறையிலேயே அணுகலாமா என்று யோசிக்கிறேன்.
1) நான் சினிமா பார்ப்பது கொண்டாட்டத்துக்காக. உலக சினிமா பார்த்து நொந்துபோய் மூலையில் உட்கார்ந்த காலமும் உண்டு :-(
2) நான் பிலாக் எழுதுவது என் உறவினர்களுக்கு (குறிப்பாக குடும்பத்துக்கு)
தெரியாது என்பதால் அடிச்சி ஆடமுடிகிறது.
3) நான் குமுதம் வெறியன். தாய்ப்பாலோடு குமுதமும் ஊட்டப்பட்டிருக்கிறது (என்
அம்மா குமுதத்தின் தீவிர வாசகி)
4) நன்றி! :-)
21 டிசம்பர், 2008
19 டிசம்பர், 2008
திண்டுக்கல் சாரதி!

திண்டுக்கல் என்றதுமே எனக்கு தோழர் செந்திலை தான் இதுவரைக்கும் நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. சுண்டக்கஞ்சியிலிருந்து டக்கீலா வரை ஒருவாய் பார்க்கும் வீராதிவீரர். செந்திலுக்கு அப்புறம் என்ன நினைவுக்கு வரும்? ம்ம்ம்... பூட்டு. இனிமேல் சாரதியும் நினைவுக்கு வருவார்.
தன்னம்பிக்கையை அஸ்திவாரமாக்கி பின்னட்டப்பட்ட கதை என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காவே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கம்ப்ளீட் ஃபேமிலி எண்டெர்டெயினர். அந்தக் காலத்து பாக்யராஜ் படம் மாதிரி பளீரிடுகிறது. திண்டுக்கல் சாரதி குழு திடமாக ஜெயித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கப் போவது உறுதி.
பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் சாரதி கொஞ்சமென்ன நிறையவே கருப்பு. அண்டங்காக்கா நிறத்தில் இருக்கும் பெண்கள் கூட இவரைக் கட்டிக்கொள்ள சம்மதிப்பதில்லை. தரகர் வெயிட் கமிஷனுக்காக எப்படியோ சிவப்பான, அழகான ஒரு பெண்ணை காட்டுகிறார். யாரும் எதிர்பாராவண்ணம் அந்தப் பெண்ணும் சாரதியை கட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.
தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் அவதிப்படும் சாரதி சம்பந்தமேயில்லாதவற்றை கற்பனை செய்துகொண்டு மனைவி மீது சந்தேகப்படுகிறார். உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார். க்ளைமேக்ஸ் சுபம்.
சாரதியாக கருணாஸ். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசனோ, அதுபோல கருணாஸுக்கு திண்டுக்கல் சாரதி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த படங்களுக்கும் மிச்சம் வைக்க வேண்டாமா? நடிப்பு, நடனம், பாட்டு என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனுஷன். பச்சைத்தமிழன் தோற்றம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதிலும் அந்த ‘சாமியோவ்வ்வ்...’ காமெடி. வயிறு வலிக்கிறது.
ஹீரோயின் கார்த்திகா. டிப்பிக்கல் ஃபேமிலி ஃபிகர். அழகாக சிரிக்கிறார்.
சீனுவாசன் நடித்த ’வடக்கு நோக்கி யந்த்ரம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். முதல்பாதி காமெடியில் மலையாளம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தமிழ்தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் உண்டிக்கோல் வைத்து யூத்தை குறிவைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் துப்பாக்கி வைத்து தாய்க்குலத்தை குறிவைக்கிறார். குறி கச்சிதம்!
நாசரின் க்ளைமேக்ஸ் எக்ஸ்ட்ரா போனஸ்.
“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”
“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”
“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”
“போங்க டாக்டர்”
“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”
படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுக்கு க்ளைமேக்ஸ் தன்னம்பிக்கை ஹார்லிக்ஸ். சுயபச்சாதாபம் எவ்வளவு மோசமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
சன் பிக்சர்ஸின் கை ஆங்காங்கே புகுந்து விளையாடியிருப்பதால் ‘ரிச்னஸ்’ தெரிகிறது. இல்லாவிட்டால் ராவாக இருந்திருக்கும். உதாரணம் : திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு பாடல். படம் முடிந்தும் யாரும் தியேட்டரை விட்டு எழுந்துப் போகாவண்ணம் ஒரு குத்து குத்தியிருப்பதில் படத்தின் அபாரவெற்றி தெளிவாகிறது.
திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.
17 டிசம்பர், 2008
தமிழக அரசியல் நிலவரம்!
அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் !!!!! - என்ற செந்தழல் ரவியின் பதிவை வாசிக்க நேர்ந்தது. அதிமுக தொண்டர் ஒருவரே திமுக ஆட்சியை பாராட்டும் அளவுக்கு நிர்வாகம் நடந்துவருவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஆனால் இந்த புள்ளி விவரங்களால் திமுக கூட்டணி 2004ல் வென்றதைப் போல 40க்கு 40 வெல்ல வாய்ப்பேயில்லை என்பது தான் நடைமுறை யதார்த்தம். உண்மையில் சொல்லப் போனால் கடந்த மாதம் வரை 40க்கு 40லும் திமுக கூட்டணி தோற்பதற்கான வாய்ப்பு தான் பிரகாசமாக இருந்தது.
அதே பதிவில் கார்க்கி என்ற நண்பர் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பியிருக்கிறார், மின்சாரம் குறித்து. கார்க்கியின் கடந்த சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் கவனித்த வகையில் அவருக்கு கலைஞர் தலைமையிலான தமிழ்நாட்டின் முன்னேற்றம் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சியையே அளித்திருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது. மின்சாரத்தை கையாளுவதில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பது உண்மைதான்.
இதற்காக நிச்சயமாக ஆற்காடு வீராசாமியின் பதவியையும் மாற்றியிருக்க வேண்டியது அவசியம். டேட்டா குவெஸ்ட் சர்வேயில் மின் ஆளுகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் கூட அந்த நேரத்தில் தினமும் 7 மணிநேர மின்வெட்டு (சென்னையில் ஒரு மணிநேரம் தான்) இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஆனால் இதுவும் இப்போது பழைய கதையாகி விட்டது. மின்வெட்டை கண்டித்து அதிமுக கூட இப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இயலாத அளவிற்கு மின் ஆளுகை முன்பிருந்த நிலைக்கு வந்துவிட்டது. மின்வெட்டுப் பிரச்சினையிலும் கூட எந்த தமிழனும் 'கருணாநிதி ஒழிக!' என்று சொல்லாமல் 'ஆற்காடு வீராசாமி ஒழிக!' என்று சொல்லுமளவுக்கு கலைஞரின் செல்வாக்கு ஸ்டெடியாகவே இங்கிருக்கிறது.
அடுத்ததாக அதே பதிவில் அத்திரி என்ற நண்பரின் பின்னூட்டம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. பாவம், மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்தோடு மீண்டும் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் வெளிவராதவர் இவர். அவர் காழ்ப்புணர்வில் கூறிய சில பிரச்சினைகளை தவிர்த்து பார்க்கப் போனால் மீதிப் பிரச்சினைகள் அனைத்துமே இந்தியாவுக்கே பொதுவானவை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளின் பாதிப்பு அதிகம். மக்கள் நிராகரித்துவிட்ட குடும்ப அரசியல் கோஷத்தை அத்திரி போன்றவர்கள் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.
ஓக்கே இவர்களை விட்டுத் தள்ளுவோம். எந்த காலத்திலும் கலைஞரால் இவர்களை திருப்திபடுத்தி விடவே முடியாது. இவர்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் பிரச்சினை ஆட்சியின் பேரில் அல்ல. கலைஞரின் பேரில். முதல் பத்தியில் நான் குறிப்பிட்டதைப் போல 40க்கு 40ம் தோல்வி என்ற நிலையில் தான் நவம்பர் மாதம் வரை நிலை இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ் - திமுக கட்சிகளின் கூட்டணி ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை கணிக்க இயலாதவகையில் நிலை இருந்தது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து போதித்து வந்தன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த மாயையை தகர்த்தெறிந்திருக்கிறது. இந்த ட்ரெண்ட் பாராளுமன்றத் தேர்தலுக்கு பொருந்தாது என்று இப்போது அதே ஊடகங்கள் அவசர அவசரமாக ஊளையிட்டு வருகின்றன.
இந்த லாஜிக் தென்னிந்தியாவுக்கு தான் பொருந்தும். சட்டமன்ற தேர்தலிலோ அல்லது இடைத்தேர்தலிலோ வென்றவர்கள் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வும் வகையில் மாற்றி ஓட்டளிப்பது தென்னிந்தியர்களின் இயல்பு. பொதுவாக வட இந்தியர்கள் கடைசியாக நடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்களோ, அடுத்த தேர்தலிலும் அதே அணிக்கு வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எனவே பாஜக மெஜாரிட்டி பெறும் என்றெல்லாம் வாயால் கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தவர்களின் வாய் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் காங்கிரஸ் பெற்ற இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுமைக்குமே காங்கிரசுக்கு ஆதரவான ட்ரெண்டை உருவாக்கக் கூடும். ஆயினும் தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ட்ரெண்டை யாராலும் சுலபமாக கணித்துவிட இயலாத நிலை சிரஞ்சீவியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரசுக்கு ஆதரவான இந்த ட்ரெண்ட் தமிழகத்தில் திமுகவை காப்பாற்ற உதவும். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணியாக பாஜக - அதிமுக கூட்டணி உருவாகி இருக்குமேயானால் அது ஆளும் கூட்டணிக்கு சிக்கலை தந்திருக்கும். ஆனால் ஜெயாவோ யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க அணு ஒப்பந்தம் சரியா தவறா என்று மக்களுக்கு முழுமையாக புரியவைக்காத நிலையில் மன்மோகன்சிங்கை கவிழ்க்க நினைத்தனர் இடதுசாரிகள். மக்களிடையே கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த மன்மோகன் மீது அனுதாப அலையை வீசச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். எந்த லாப-நஷ்ட அடிப்படையை கணக்கிட்டு ஜெ. இவர்களை சேர்த்துக்கொண்டார் என்பது புரியவில்லை. மதிமுக ஒட்டுமொத்தமாக ப்யூஸ் போன நிலையில் அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி சுமையாகவே இருக்கும். பாமகவை வளைத்துப் போடுவதின் மூலமாகவே அதிமுக கூட்டணியை ஜெ.வால் வலுவானதாக காட்ட இயலும். ஆனால் பாமகவோ காங்கிரஸ் மீது காதல் கொண்டிருக்கிறது.
தேமுதிகவின் விஜயகாந்த் இன்றுவரைக்கும் தனியாக நிற்பேன். எனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு தான் கூட்டணி என்று சொல்லிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக - அதிமுக இருதரப்புக்கும் பலமான அதிர்ச்சியை அளித்தவர் என்ற அடிப்படையில் விஜயகாந்தை நிராகரித்து இனி தமிழக அரசியல் பேசமுடியாது. 2016ல் கேப்டன் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பாஜக இவரோடு சேரக்கூடும். அப்படி சேரும் பட்சத்தில் அது அதிமுக கூட்டணிக்கு இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர் ஆதரவு, கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டுரக ஓட்டுக்களை தான் கடந்த தேர்தல்களில் பார்த்து வருகிறோம். கேப்டன் குறிவைத்து அடிப்பது கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களை. ஏற்கனவே இந்த ரக ஓட்டுக்களை கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு எதிரான அம்சம் இது. இதனாலேயே விஜயகாந்தை கலைஞர் உள்ளூர ரசித்து வருகிறார். திருமாவளவனும் இப்போதைக்கு கலைஞரை விட்டு நகர்வதாக இல்லை.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அதைவிட முக்கியமான பிரச்சினையாக தமிழகத்தில் திமுகவுக்கு இருந்த சன்குழுமத்துடனான மோதலும் முடிவுக்கு வந்திருக்கிறது. சன்குழுமத்தின் ஊடகப்பலம் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் வலுசேர்க்கும். இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.
16 டிசம்பர், 2008
பாவி ஆசிரியர் குழுவின் கும்தலக்கடி கும்மாங்குத்து!

ஒவ்வொரு இஷ்யூ முடிக்கறதுக்குள்ளேயும் தாவூ தீர்ந்து டவுசர் கிழிந்துவிடுகிறது மன்னனுக்கு. மன்னன் பாவியின் ஆசிரியர். தமிழ் சமூகத்தின் முழுசாக ஃபில் அப் ஆகாத முகவரி பாவி. குவளவிழா கண்ட வார இதழ். வாராவாரம் யாரையாவது வாரும் ஒரு வார இஷ்யூவை தயார் செய்ய மன்னன் குழு குத்தாட்டம் போடும் நாக்க முக்கா...
மன்னன் : என்னத்தை தலையங்கம் எழுதி.. என்னத்தை கிழிக்கிறது? போனவாரம் வரைக்கும் தலைவரை காய்ச்சிக்கினு இருந்தோம். இந்த வாரம் யூ டர்ன் அடிக்கச் சொல்லி மேலிடத்து ஆர்டர்...
கவிப்ரகாஷ் : பேசாம வழுக்கைத் தலையர்கள் திருப்பதியில் மொட்டை அடிப்பது சம்பந்தமா தலையங்கம் எழுதிருவோமா? ஜாவியில் இருந்தப்போ இப்படித்தான் ஒரு தடவை வழுக்கை ஸ்பெஷல் போட்டோம். கலைஞர், சோன்னு எல்லாரோட இண்டர்வ்யூம் நைண்டீன் எய்ட்டி நைனிலே நான் தான் எடுத்தேன்.
சதன் : சூப்பர் ஐடியா. சோ சுருள் சுருள் முடியோட மொட்டை அடிக்க சலூன்லே உட்கார்ந்திருக்கிறா மாதிரி ஒரு கார்ட்டூன் போட்டு தந்துடறேன். (வெத்தலையை குதப்பிக்கொண்டு கிஜய் டிவி ஆபிஸுக்கு கெளம்புகிறார்)
(சதன் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு) கரன் : அவுரு ஏற்கனவே மொட்டை தான் சார். வேணுமின்னா கலைஞருக்கு மொட்டை போட்டு நான் வரைஞ்சி தள்ளிடறேன்.
சூச்சூப்பையன் : ஓக்கே. ஒரு சலூன்கடைக்கு கலைஞர், ஜெயலலிதா, பாரதிராஜா, வைகோ, மணிரத்னம், முடிவெட்டிக்க வர்றாங்க. சலூன்லே ரண்டக்கா.. ரண்டக்கா தான். அவசரமா கெளம்பணும். அம்பத்தூர்லே ஒரு ப்ரொடியூசரை பார்க்கணும்.
மன்னன் (டென்ஷனாகி) : எதையாவது சென்சேஷனலா பண்ணனும்யா. ஜல்லியடிச்சி, ஜல்லியடிச்சி ஜன்னி வந்துடும் போலிருக்கே. எவ்ளோ நாளைக்கிய்யா படத்தை போட்டு பைசா பண்ணுறது?
சீ.ரிவக்குமார் : கீழ்ப்பாக்கத்துலே நரிக்குறவர்கள் கேம்ப் போட்டிருக்காங்க. அவங்களோட ஒருநாள் வாழ்க்கையை பதிவு செய்வோமா?
உ.ஆ.க்களில் ஒருவர் : பதிவு செய்யறதுக்கு இதென்ன வாரணம் ஆயிரம் பாட்டா?
சாரதிதம்பி : மீனவர்கள் அவலத்தை படம் புடிச்சி காட்டுவோம்.
காஜசேகரன் : ஆமா. அந்தமான் போயி அட்டகாசமா துள்ளிக் குதிக்கிற மீனையெல்லாம் படம் புடிச்சிட்டு வந்துடறேன். அலவுன்ஸ் கொடுங்க பாஸூ.
சுமேஷ் சைத்யா : திண்டுக்கல் சாரதி ஆடியோ சிடி ஓசியிலே அனுப்பியிருக்கானுங்க. எவ்ளோ நாளைக்கு தான் ஆடியோவையே கேட்டு கேட்டு ஆய் போறது. உருப்படாத பய புள்ளைங்க எழுதற ப்ளாக்குங்களை ஒருநாளைக்கு நானூறு வாட்டி பார்க்குறேன். ஏதாவது அஜக்கு மஜக்கா வேலை கொடுங்கய்யா. அசத்திப்புடறேன்.
”ஆளாளுக்கு வூடு கட்டுறானுங்களே?” மன்னன் நொந்துப்போய் யோசனையில் ஆழ்கிறார்.
கா.நதிர்வேலன் : புதுசா ஒரு பொண்ணை ஆனந்தம் ஆரம்பமிலே இண்ட்ரட்யூஸ் பண்ணுறாங்க. நேர்லே போய் பார்த்து ஜொள்ளிட்டு 'டக்கரு ஃபிகரு, டிக்கரு ஷாட்'னு கலர் கலரா கட்டுரை போட்டுடலாமா பாஸ்?
பை.மாரதிராஜா : மொக்கைப்பட ஹீரோ ஒருத்தன் மாட்டியிருக்கான். காஜசேகரன் அண்ணன் கூட வந்தாருன்னா ‘மொக்கைப்பட ஹீரோ ஆல்பம்'னு நாலு பக்கத்தை ரொப்பிடுவேன்.
உ.ஆ.க்களில் மற்றொருவர் : ரொப்புறதுக்கு இதென்னா பக்கெட்டா?
குருமாவேலன் : கேப்டனோட தமிழ்நாட்டை சுத்தி போரடிக்குது. ராகுல்காந்தியோட அமேதிக்கு போவட்டுமா?
மன்னன் : அடுத்த வாரம் சுமுதம் என்னா எக்ஸ்க்ளூசிவ் போடுறான்னா யாராவது விசாரிச்சீங்களாய்யா?
சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவர் : அவங்களுக்கின்னா கே செக்ஸு, லெஸ்பியன் செக்ஸு, அனிமல் செக்ஸுன்னு ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் இருக்கு. மூஞ்சை மட்டும் மறைச்சி போட்டோ போட்டு.. போட்டு தாக்கிடுவாங்க..
மார்க்கெட்டிங்கில் இருந்து மன்னன் சாருக்கு போன் : சார் தங்கம் விலை உசந்துடிச்சி. பளிச் கமெண்டுக்கெல்லாம் இனிமே தங்கக்காசு கட்டுப்படி ஆவாது. பித்தளைக் காசு தான்னு அறிவிச்சிடுங்க.
மன்னன் : அதெல்லாம் பிரச்சினையில்லை. அலுமினியக் காசுன்னு சொன்னாக்கூட ஆயிரம் எஸ்.எம்.எஸ். வந்துரும்.
டென்ஷனோடு டீமை நோக்கி திரும்ப, ஏரியாவில் டென்ஷன் எக்கு தப்பாகிறது.
சுமேஷ் சைத்யா : புள்ளிகள் மாதிரி ஜல்லிகள் ஆரம்பிக்கலாம். எங்க வீட்டு முன்னாடி கார்ப்பரேஷன் நிறைய ஜல்லி கொட்டியிருக்கான்.
குருமாவேலன் : திராவிடம் நீர்த்தது, திராவகம் இனித்ததுன்னு எட்டு பக்கத்துக்கு எடக்கு மடக்கா எழுதறேன்.
பா.வி. விமர்சனக் குழு : தேவி தியேட்டருலே புதுசா இண்ட்ரடியூஸ் பண்ணியிருக்கிற பெப்பர் கார்ன் சூப்பர். விலைதான் கொஞ்சம் அதிகம்.
கவிப்ரகாஷ் : மெலட்டூர் நடராசன் முப்பது பக்கத்திலே ஒரு சிறுகதை அனுப்பியிருக்காரு..
சீ.ரிவக்குமார் : பழங்குடி மக்களின் வாழ்வியல் தொடர்பா...
கந்தினி : எங்க ஊர்லே ஒரு வேப்பமரம் இருந்தது. அய்யோ.. அதோட இலையெல்லாம் பச்சையா இருக்கும்...
உ.ஆ.க்களில் இன்னொருவர் : சருதனோட பாஸ்போர்ட் வந்துருக்கு.
மன்னன் : வெரிகுட். இந்த வாரம் என்ன மேட்டர் எழுதியிருக்காரு?
அதே உ.ஆ. : நாசமாப் போச்சி. மனுஷன் ஏதோ ஞாபகத்துலே போனவருஷம் பாஸ்போர்ட் ஆபிஸில் அவரெடுத்த பாஸ்போர்ட்டையே அனுப்பி வெச்சிருக்காரு.
மன்னன் கொஞ்ச கொஞ்சமாக டர்ராகிக் கொண்டிருக்கும் போது எம்.டி. ரீனிவாசனிடமிருந்து போன் : ஜாநிக்கு சுமுதத்துலே லீசு முடிஞ்சிருச்சாம். மறுபடியும் நம்மகிட்டே லீசு எடுத்து 'சோ' பக்கங்கள் எழுதட்டுமான்னு கேட்குறாரு...
'க்ரீம்ஸ் ரோடு ஆத்தா என்னை காப்பாத்து!' என்று கதறியபடியே ஆளுக்கொரு திசையாய் தெரிக்கிறார்கள்.
அருஞ்சொற்பொருள் விளக்கம் : உ.ஆ = உதவி ஆசிரியர் என அறிக.
பொம்மலாட்டம்!
வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் இமயம். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் பார்த்த படம் எதுவென்பதே நினைவில் இல்லை. தாஜ்மஹால் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டிருக்கிறது. பாரதிராஜா தமிழின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றாலும் 1980களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப மறுமலர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டார் அல்லது பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இந்த ஒரு காரணத்தாலேயே தமிழில் அவுட்-ஆஃப்-ஷோ ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். கடைசியாக கிழக்குச்சீமையிலே தான் சூப்பர்ஹிட் என்பதாக ஞாபகம்.
பாரதிராஜாவின் பலம் மண்ணின் மனம் + கதை மாந்தர்களின் உளவியல் போக்கினை எளிமையாக சித்தரிப்பது. தன் மகனை கதாநாயகனாக்கி அழகு பார்க்கும் ஆசையில் தன்னுடைய பலத்தை சில ஆண்டுகளாக மறந்து தொலைத்திருந்தார். அப்போதிருந்த தமிழ் திரையுலகின் பெரிய ஜாம்பவான்களோடு கூட்டணி அமைத்து ஆசை மகன் மனோஜுக்காக உருவாக்கிய தாஜ்மஹாலில் தன்னுடைய இயல்பினை கோட்டை விட்டு விட்டார். இழந்த இயல்பை 'பொம்மலாட்டம்' மூலமாக கச்சிதமாகப் பெற்றிருக்கிறார். இப்படத்தில் நானா படேகர், ருக்மிணி, ரஞ்சிதா கதாபாத்திரங்கள் அச்சு அசல் பாரதிராஜாவின் டிரேட்மார்க். 'சினிமாவுக்குள் சினிமா' என்ற கல்லுக்குள் ஈரம் காலத்து கான்செப்ட்.
அனேகமாக தானே நடித்து இயக்க இக்கதையை பாரதிராஜா கையிலெடுத்திருக்கக் கூடும். நானாபடேகரின் ஒவ்வொரு பிரேமையும் பாரதிராஜாவோடு ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. நானாபடேகரின் நடிப்பை நடிப்புச்சுனாமி என்று சொல்லுவதா அல்லது நடிப்பு பூகம்பம் என்று சொல்லுவதா? 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது நானாபடேகருக்கு வழங்கப்படாவிட்டால் அவ்விருதினை தூக்கி குப்பையில் போடுவது தான் நியாயம். தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குனரே சினிமாத்துறையையும், அதன் போக்கையும் கிண்டலடிப்பது ரசிக்கக்கூடியது. குறிப்பாக தற்கால கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபைனான்ஸியர்களை வாங்கு வாங்கென்று வாங்குகிறார் பாரதிராஜா. அயல்நாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுடும் இயக்குனர்களையும் ஒரு பிடிபிடித்திருந்தால் தாராளமாக எழுந்து நின்று கைத்தட்டியிருக்கலாம்.
'பொம்மலாட்டம்' த்ரில்லராகவும் இல்லாமல், சராசரிப் படமாகவும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் விடப்பட்டிருக்கிறது. படம் முழுக்க ஆமைவேகத்தில் நகருகிறது. இடையிடையே சில பாடல்கள் கதையின் போக்குக்கு தொந்தரவாக இருந்தபோதிலும் ஹிமேஷ்ரேஷ்மையாவின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமை. ஹீரோயின் முகத்தை சூப்பர் இம்போஸ் செய்து பாடல்காட்சிகளில் காட்டும் உத்தி 1980களிலேயே காலாவதியாகி விட்டது என்று பாரதிராஜாவுக்கு யாராவது உதவி இயக்குனர் எடுத்துச் சொல்லியிருக்கலாம். படத்தின் இறுதிக்காட்சி வித்தியாசமானதாக இருந்தபோதிலும் 'சப்'பென்று முடிகிறது. க்ளைமேக்ஸ் இன்னும் வெயிட்டாக இருந்திருந்தால் பொம்மலாட்டம் ஜோராக நடந்திருக்கும்.
இப்படம் ஆங்கிலத்திலோ அல்லது பிரெஞ்சிலோ எடுக்கப்பட்டிருந்தால் உலகப்படமாக போற்றப்பட்டிருக்கும். பல உலகப்பட விழாக்களில் பங்குபெற்றிருக்கும். பின்நவீனத்துவக்கூறுகள் உள்ளடக்கப்பட்டதாக சினிமா சிந்தனையாளர்களால் பாராட்டப்பட்டிருக்கும். தமிழில் இதை பாரதிராஜா முயற்சித்திருப்பதால் 'தற்கொலை முயற்சி' என்று கூறி அவர்மீது காவல்துறை வழக்கே தொடரலாம்.
ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்திருப்பதாக சொன்னார்கள். படம் முழுக்கத் தேடிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. படம் பார்த்த யாராவது கண்டுபிடித்துத் தரலாம். ஒரு இரண்டாம் கட்ட நடிகர் நடிக்க வேண்டிய கேரக்டர் அது. படத்துக்குத் தொடர்பில்லாத அவரது காதல் மற்றும் கந்தாயத்து காட்சிகள் தாமரை இலை மேல் நீர்த்துளி. படத்துக்கு ப்ளஸ் : பாரதிராஜா + நானாபடேகர். மைனஸ் : மீதி எல்லாமே. நானாபடேகருக்காக ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டிய படம். ஆனால் சாருநிவேதிதாவுக்கு மட்டும் தான் இந்தப் படம் பிடிக்கும்.
பொம்மலாட்டம் - நவரசத் தாண்டவம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)