5 ஏப்ரல், 2009

இதற்குப் பெயர் தான் காதலா?


நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான்.

பார்த்ததுமே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது. கண்களில் நீர், என்னவளை கண்டுக் கொண்டதால் வந்த ஆனந்தக் கண்ணீரா? இல்லை கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான்! என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன்.

நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா? முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள்? காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.

கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்த என் காலம் அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது.

அவள் தான் என் காதலி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை தேடுவது?

பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால் பக்கம் செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மஞ்சள் மைனா மாட்டுவாளா என்று என் கண்கள் ஏங்குகிறது.

அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் என்று நினைக்கிறேன். பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடுகிறது.

அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் வருகிறது.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன். இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?

எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு, வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி.. அய்யோ கடவுளே! எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?


உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?

1 ஏப்ரல், 2009

வனவாசம்!


அப்போது பள்ளியில் ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் பெரியார் படிப்பகம் இருந்தது. பள்ளி முடிந்ததுமே அங்கு சென்று நாளிதழ்களையும், புத்தகங்களையும் புரட்டுவது வழக்கம். பொழுதுபோகாத ரிடையர்டு கேஸுகள் சிலர் அங்கே எனக்குப் பழக்கமானார்கள்.

அவர்களில் சிலர் திராவிடம் பேசுவார்கள். சிலர் பொதுவுடைமை பேசுவார்கள். சிலர் தேசியம் பேசுவார்கள். வி.பி.சிங் அப்போது லைம்லைட்டில் இருந்தார். வி.பி.சிங் பற்றி ஒருமுறை அவர்கள் காரசாரமாக மோதிக்கொண்டிருந்தபோது தெரியாத்தனமாக நான் வேறு அந்த மோதலில் கலந்துகொண்டேன். கலைஞர் வி.பி.சிங்குக்கு அடிவருடியாக இருந்ததைப் பற்றி ஒரு தேசியவாதி மோசமான சில வார்த்தைகளை பயன்படுத்திப் பேசினார். உடனே நான் கலைஞருக்கு வக்காலத்து வாங்கி ‘நெஞ்சுக்கு நீதி’யை Quote செய்துப் பேச, அந்தப் பெரியவர் “இன்னும் நீ படிக்க வேண்டிய முக்கியமான புக்கு ஒண்ணு இருக்கு. கண்ணதாசன் எழுதிய வனவாசம்” என்றார்.

வனவாசம் எனக்கு அறிமுகமான கதை இது.

கவிதைக்கு பொய்யழகு. கவிஞருக்கு? வனவாசத்தை முதல் தடவை வாசிக்கும்போதே ஒன்றுமில்லாத விஷயங்களை கூட கவிஞர் ‘பூஸ்ட்’ செய்து சொல்லுகிறார் என்பதை உணரமுடியும். கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன் மூவரும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தங்களது கேரியரை சினிமாவிலும், அரசியலிலும் தொடங்குகிறார்கள். இவர்களில் கலைஞர் அரசியலிலும், எம்.ஜி.ஆர் சினிமாவிலும் உச்சத்துக்குப் போக கவிஞர் அடைந்த வயிற்றெரிச்சலே வனவாசமாக மணம் வீசியிருக்கிறது.

சாதிவெறியும், மத அபிமானமும் நிரம்ப கொண்ட கவிஞர் இருந்திருக்க வேண்டிய கழகம் திமு கழகம் அல்ல. காங்கிரஸ். தன் இயல்புக்கு ஒத்துவராத இயக்கத்தை தேர்ந்தெடுத்தது கவிஞரின் தவறே தவிர, கழகத்தின் தவறு அல்ல. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதக்கூடிய மனநிலையில் இருந்தவர் ஒரு திராவிட இயக்கத்தில் இருந்திருக்கவே வேண்டியதில்லை. 1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுயசரிதையாக எழுதியதாக கவிஞர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். ‘வனவாசம்’ அவரது சுயசரிதையா அல்லது மற்றவர்களை அவர் பார்வையில் வசைபாடும் நூலா என்பதை வாசித்தவர்கள் தான் சொல்லமுடியும். வசைவாசம் என்று நூலுக்கு தலைப்பிட்டிருக்கலாம்.

சென்ற பத்தியில் சாதிவெறி, மத அபிமானம் போன்ற சொற்களை கண்டு நீங்கள் அதிசயித்திருக்கலாம். கண்ணதாசனின் சாதிவெறி இந்நூலில் பல இடங்களில் வெளிப்படுவதை பார்க்க முடியும். ‘செட்டியார்’ சாதி குறித்த முரட்டுத்தனமான அபிமானம் அவருக்குண்டு. சாதி, மதப் பற்றுகளை வெளிக்காட்டிக் கொள்ள கழகம் தடையாக இருந்தது என்பதை நான்கைந்து இடங்களில் திரும்ப திரும்ப குறிப்பிட்டிருக்கிறார். அதிலும் தனது சாதி எத்தனை உயர்ந்த சாதி என்பதை ஒரு அத்தியாயத்தில் செட்டியார் சாதி திருமணம் பற்றி விவரிக்கும்போது வெளிப்படுத்தியிருப்பார்.

கல்லக்குடிப் போராட்டம் குறித்த கவிஞரின் பொச்சரிப்பு நகைச்சுவையானது. கலைஞரே தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு தலைமையிடம் சபாஷ் பெறுகிறார் என்ற ஆதங்கம் கவிஞருக்கு நிரம்ப உண்டு. எனவே கல்லக்குடி போராட்டம் நடந்தபோது கவிஞரும் ஆட்டையில் இறங்குகிறார். போராட்டத்துக்கு முன்பாகவே கலைஞர் கேட்கிறார். “கண்டிப்பாக நீரும் வர்றீரா?”. மேடையில் அதற்குப் பதில் தருகிறார் கண்ணதாசன். “போகிறேன். சாகிறேன்!”

இவ்வளவு வீரவசனம் பேசிய கண்ணதாசன் மறுநாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததுமே கலங்கிப் போனார். கலவரச் சூழலில் கட்சிக்காரர் ஒருத்தரே “அய்யா நீங்க தான் தலைமை. சீக்கிரமா ஓடிப்போய் ரயில் முன்னாடி படுங்க” என்றாராம். அதைத் தொடர்ந்து வழக்கு, சிறைத்தண்டனை. தன்னைப் பற்றிய உச்சபட்ச கழிவிரக்கத்தோடு இந்நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் கவிஞர். இதிலேயும் கருணாநிதி பெயரை தட்டிக்கிட்டு போயிட்டாரே என்ற ஆதங்கம் கவிஞருக்கு.

அடுத்ததாக 1957 சென்னை மாநகராட்சித் தேர்தல் வெற்றி. இதில் கருணாநிதிக்கு எந்தப் பங்கும் இல்லை. உழைத்தது முழுக்க நான் தான். ஆனால் கருணாநிதிக்கு கணையாழி அணிவித்தார் அண்ணா என்று எழுதியிருக்கிறார். சென்னையின் பழைய திமுக பெருசுகள் இன்றும் உயிரோடிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தான் தெரிகிறது கண்ணதாசன் எவ்வளவு பெரிய சோம்பேறியாக இருந்திருக்கிறார் என்பது. கண்ணதாசன் முழுக்க முழுக்க அரசியலில் இருந்திருந்தாலும் அவர் எக்காலத்திலும் எம்.எல்.ஏ.வாக கூட ஆகியிருக்க முடியாது. ஒரு அரசியல்வாதிக்கு தேவையான தியாகக்குணம், போராட்ட உணர்வு, தலைமைப்பண்பு எதுவுமே இல்லாத ஒரு மனிதர் இவர்.

கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொள்ள, கவிஞரோ வெத்து பல்பான ஈ.வி.கே.எஸ்.ஸை தன்னுடைய ஆதர்ச தலைவனாக குறிப்பிடுகிறார். முன் ஏர் எப்படிப் போகுமோ அப்படித்தானே பின் ஏரும் போகும்?

கவிஞர் எழுதிய வனவாசத்தில் உச்சக்கட்ட வன்முறை என்னவென்றால் தனக்குப் பிடிக்காதவர்கள் மீதெல்லாம் கிசுகிசு பாணியில் பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கிறார். பொருள் அபகரிப்பு புகார்களை வாய்கூசாமல் கூறுகிறார். இவர் குறிப்பிடும் காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக, இப்போதைய மதிமுக லெவலில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டே போகும் கண்ணதாசன் பேரறிஞர் அண்ணாவை கூட விட்டு வைக்கவில்லை. அண்ணா குறித்த அச்சம்பவத்தை ஒரு சினிமா திரைக்கதை போல சுவையாக கண், மூக்கு, காது வைத்து வர்ணிக்கிறார்.

ஒரு பிரபல குடிகாரராக, காமுகராக அறியப்பட்ட கவிஞரா மற்றவர்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவது? என்ன கொடுமை சார்!

இதுவரை முப்பத்திநான்கு பதிப்புகள் கண்ட நூல் இது. இந்நூலின் வெற்றிக்கு கவிஞரின் சுவாரஸ்யமிக்க தமிழ் நடை முக்கியப் பங்கு வகிக்கிறது. பக்கத்துக் பக்கம் சுவாரஸ்யம். அதுமட்டுமல்லாமல் அத்தியாயத்துக்கு அத்தியாயம் ஏதாவது கிசுகிசு வைத்திருக்கிறார் என்பதும் நூல் பரபரப்பாக விற்பனையாக கூடுதல் காரணமாக இருந்திருக்கலாம். இதை ஒரு அரசியல் நூல் என்று சிலர் சொல்வது நல்ல நகைச்சுவை. கவிஞரே குறிப்பிட்டிருப்பது போல ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு கவிஞரின் வாழ்வு நல்ல முன்னுதாரணம். அதற்கு தகுந்த சாட்சி அவரே எழுதிய இந்நூல். திமுகவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை வனவாசம் முன்வைப்பதாக இருந்தாலும் நான் பழகிய திமுககாரர்கள் பெரும்பாலும் ரகசியமாகவாவது இந்நூலை வாசித்திருக்கிறார்கள் என்பதே கண்ணதாசனுக்கு கிடைத்த வெற்றி.

கடைசியாக கட்சியில் இருந்து அவர் வெளிவரும் தினத்தை ‘விடுதலை தந்த ஏப்ரல் ஒன்று’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என்பது கச்சிதமாகப் பொருந்துகிறது அல்லவா?

நூல் : வனவாசம்

எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்

விலை : ரூ.75

பக்கங்கள் : 392

வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17

31 மார்ச், 2009

3ஷா - 6லிருந்து 25 வரை...

“அய்யா.. ஜாலி.. நான் ஸ்கூலுக்கு போகப்போறேனே?”

“ஏஞ்சலுக்கே ஏஞ்சல் ட்ரெஸ்ஸா?
இதெல்லாம் ஓவரா தெரியலை?”

“கல்யாணம் தான் கட்டிக்கினு பாட்டுக்கு டேன்ஸ் ஆட
அப்பவே பிராக்டிஸ் பண்ணிட்டேன்!”

“மம்மி டாடியோட ஒரு பர்த்டே பார்ட்டி. யப்பா.. மம்மி எவ்ளோ அழகா இருக்காங்க?”

“டிஸ்னி லேண்ட் போனப்போ எடுத்தது. நீங்களே சொல்லுங்க.
நான் அழகா இருக்கேனா? இல்லேன்னா மிக்கி மவுஸ் அழகா இருக்கா?”

“கனா காணும் காலங்கள்!”

“க்க... க... க்க.... கல்லூஊர்ரீச் சாலை!”

“99ல் மிஸ் சென்னை. 2008ல் மிஸ் கோலிவுட்!”

“அப்போவெல்லாம் நான் தான் நெ.1 மாடல்!”

“சினிமாவில் கல்லக்கல் எண்ட்ரீ”

“ஒரு பங்ஷனில் ‘பகீர்' போஸ்!”

30 மார்ச், 2009

மிஸ் கிளாமர் வேர்ல்டு!


எது எதற்கு தான் கருத்துக்கணிப்புகள் நடத்துவது என்ற விவஸ்தை மேற்கத்திய பத்திரிகைகளுக்கு இல்லாமல் போய் விட்டது. நல்ல வேளையாக ஆண்கள் பத்திரிகையான FHM "உலகின் கவர்ச்சியான அழகி" என்ற பரவாயில்லை ரக தலைப்பில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.


கொஞ்ச காலம் முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தில் நடித்த மேகன் டெனிஸ் ஃபாக்ஸ் 2008ஆம் ஆண்டின் கவர்ச்சி அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உலகளவில் முதல் நூறு இடங்களில் இருக்கும் கவர்ச்சி அழகிகளையும் அந்தப் பத்திரிகை பட்டியலிட்டிருக்கிறது.

உதட்டழகால் உலகையே கிறங்கடிக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கே பண்ணிரண்டாவது இடம் தான் கிடைத்திருக்கிறது என்றால் போட்டியில் கலந்துகொண்ட அழகிகளின் கவர்ச்சியை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். பாரிஸ் ஹில்டனின் நிலையோ இன்னும் பரிதாபம், எழுபத்து ஏழாவது இடம் தான் அவருக்கு. அதிரடி திருமணங்கள், திடீர் குழந்தை என சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு கடைசி இடமான நூறாவது இடம் மட்டுமே கிடைத்தது. நம்ம ஊர் நமீதாக்களும், நயன்தாராக்களும் இந்த போட்டியில் கலந்துகொள்ளாததாலேயே இவர்களுக்கெல்லாம் இடம் கிடைத்திருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஹாலிவுட் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து கூறியிருக்கிறார்.


முதலிடம் பெற்ற ஃபாக்ஸுக்கு இருபத்தொரு வயது தான் ஆகிறதாம். பொது இடங்களுக்கும், விழாக்களுக்கும் அபாயகரமான உடைகளை அணிந்துவந்து ஆண்களின் மனநிலையை பிறழச் செய்வது தான் அம்மணிக்கு ஹாபியாம். பச்சை குத்திக் கொள்வதில் (tattoos) அதிக ஆர்வம் கொண்ட ஃபாக்ஸ் உடலில் ஒன்பது இடங்களில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அவரது பாய் ஃபிரண்டான பிரையனின் பெயரை அவர் எங்கே பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னோமானால் தணிக்கைக்குழு இந்தப் பதிவுக்கு "A" சான்றிதழ் வழங்கிவிடக்கூடும்.

25 மார்ச், 2009

விகடன் - விமர்சனம்!


யூத்ஃபுல் நியூ ஜெனரேஷன் விகடன் வடிவத்தில் தான் ஏமாற்றம் தந்தது. இப்போது உள்ளடக்கத்திலும் பெரியளவில் ஏமாற்றம் தந்துவருகிறது. குமுதத்தின் மீதான விமர்சனமே பத்து ரூபாய் விலையுள்ள பத்திரிகையை பத்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது என்பதுதான். விகடன் பதினைந்து ரூபாய். எனவே பதினைந்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றபோதிலும் கூட இன்பாக்ஸ் என்ற பெயரில் பெரிய பெரிய படங்களைப் போட்டு பக்கத்தை நிரப்புவதை ஜீரணிக்கவே முடியவில்லை.

இருவாரங்களாக விகடன் வெளியிட்டு வரும் சர்வே முடிவுகள் கொஞ்சம் கூட மக்களின் எண்ணவோட்டத்தோடு தொடர்பில்லாததாகவே இருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே சர்வே எடுக்கிறார்களா அல்லது டெஸ்க் ஒர்க்கா என்ற சந்தேகமும் எழுகிறது. மன்மோகன் மீதும், காங்கிரஸ் மீதும் அதிருப்தி மக்களுக்கு அதிகமாக இருக்கிறதாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் பிரதமர் பட்டியலில் அவருக்கு தன் முதலிடமாம். நன்றாகவே காதுகுத்துகிறார்கள் விகடன் குழுவினர். இந்த சர்வே தொடர்பாக எழுதப்படும் கட்டுரை நல்ல நகைச்சுவை. ஷங்கர் படங்களில் டிவி மைக் முன்பாக பேசுபவர்கள் மாதிரி மக்கள் பேசுகிறார்கள். விகடன் நிருபர்களின் எண்ணவோட்டம் மக்களின் எண்ணவோட்டமாகி விடாது.

கார்ட்டூன்களும் முன்புமாதிரி ஷார்ப்பாக இல்லை. ஹரனும், மதனும் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம். சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக தோன்றுகிறது. சினிமாவை வாசிக்க பலருக்கும் ஆர்வமிருப்பினும் விகடன் ஒரு சினிமாப் பத்திரிகையல்ல என்பதால் ஓவர்டோஸாக இருக்கிறது. கதைகளுக்கான இடம் ரொம்ப ரொம்ப குறைவு. இன்னமும் கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்குண்டு. ஒருவேளை கதைசொல்லிகள் குறைந்துவிட்டார்களோ? நாஞ்சில் நாடனின் ‘தீதும், நன்றும்’ கூட ஏமாற்றத்தையே தருகிறது. பேசாமல் அவரை தொடர்கதை எழுதச் சொல்லலாம். டாபிக்கல் மேட்டர்களை எழுத வேறு எழுத்தாளர்களை ஏற்பாடு செய்துக் கொள்ளலாம்.

அதுபோலவே சினிமா விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இப்போது இல்லை. வில்லு படத்துக்கும் காஞ்சிபுரம் படத்துக்கும் நான்கைந்து மதிப்பெண்களே வித்தியாசம் என்பதை யாராலும் நம்பமுடியவில்லை. விமர்சனத்தில் தாங்கு, தாங்குவென்று தாங்கப்படும் படங்களுக்கு கூட நாற்பத்தி ஐந்துக்கு மேல் விகடன் மதிப்பெண் தருவதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.

கண்கள் பனித்து, இதயம் இனித்து விட்டாலும் இன்னமும் தயாநிதி ஃபீவர் விகடனுக்கு மட்டும் தீரவில்லை. கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்பு நடுநிலையாளர்களை(?) வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். ரெகுலர் விகடன் வாசகர்கள் விரும்புவது விகடனின் சீரியஸ்லெஸ் ட்ரேட்மார்க் கட்டுரைகளையே. திருமாவேலனின் கட்டுரைகள் உக்கிரமாக, அற்புதமாக வருகிறது. இவையெல்லாம் வரவேண்டிய இடம் ஜூனியர் விகடனே தவிர்த்து சீனியவர் விகடனில் அல்ல. ஆடிக்கொருமுறை, அமாவசைக்கொரு முறை இதுபோன்ற சீரியஸ் கட்டுரைகளோ, பேட்டிகளோ வரலாம். சென்ற இதழில் வெளிவந்த ம.க.இ.க. செயலர் மருதையனின் பேட்டி அபாரம். இதுபோன்ற பேட்டிகளை மாதத்துக்கு ஒருமுறை போடலாம். ரெகுலராக இங்கேயே வந்துவிட்டால் ஜூ.வி.க்கு என்ன வேலை? மொத்தத்தில் அரசியலுக்கான அளவை விகடன் கொஞ்சம் குறைக்க வேண்டும்.

பாராட்டும்படியாக இருக்கும் விஷயங்களும் நிறைய இருக்கின்றன. குறிப்பாக இதழ் முழுக்க தூவப்பட்டிருக்கும் இளமை. அந்த இளமைக்கு சப்போர்ட் செய்யும் கலக்கல் கலர்ஃபுல் லே-அவுட். விகடனை வாங்கியதுமே நான் முதலில் வாசிப்பது லூசுப்பையனை. ஆனால் லூசுப்பையன் கூட பயாநிதி பற்றி அதிகமாக எழுதுவதில்லை என்பது வருத்தம் தான். நா.கதிர்வேலனின் சினிமாக்கட்டுரைகளை சொற்சுவைக்காக தவறாமல் வாசிப்பதுண்டு.

சில கவனிக்கத்த இளைஞர்களும் விகடனில் உண்டு. பாரதித்தம்பி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பத்தாண்டுகள் கழித்து இவர் இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருக்கப் போகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சென்ற வார மருதையனின் பேட்டி ஒன்றே போதும். பாரதித்தம்பியின் முதிர்ச்சியை எடுத்துக்காட்ட. அடுத்ததாக மை.பாரதிராஜா. இவரை ஏன் தான் சினிமாவுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்களோ என்று நொந்துப் போகிறேன். மற்ற விஷயங்களுக்கும் பாரதிராஜாவை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். டைமிங் சென்ஸ் நிறைந்தவர். ஜூவியில் பரக்கத் அலியும், ஆராவும் கவர்கிறார்கள்.

விகடன் விரைவில் அடுத்தக் கட்டத்துக்கு உள்ளடக்க ரீதியாகவும், வடிவ ரீதியாகவும் மாறவேண்டியது அவசியம்.