1 ஏப்ரல், 2009

வனவாசம்!


அப்போது பள்ளியில் ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் பெரியார் படிப்பகம் இருந்தது. பள்ளி முடிந்ததுமே அங்கு சென்று நாளிதழ்களையும், புத்தகங்களையும் புரட்டுவது வழக்கம். பொழுதுபோகாத ரிடையர்டு கேஸுகள் சிலர் அங்கே எனக்குப் பழக்கமானார்கள்.

அவர்களில் சிலர் திராவிடம் பேசுவார்கள். சிலர் பொதுவுடைமை பேசுவார்கள். சிலர் தேசியம் பேசுவார்கள். வி.பி.சிங் அப்போது லைம்லைட்டில் இருந்தார். வி.பி.சிங் பற்றி ஒருமுறை அவர்கள் காரசாரமாக மோதிக்கொண்டிருந்தபோது தெரியாத்தனமாக நான் வேறு அந்த மோதலில் கலந்துகொண்டேன். கலைஞர் வி.பி.சிங்குக்கு அடிவருடியாக இருந்ததைப் பற்றி ஒரு தேசியவாதி மோசமான சில வார்த்தைகளை பயன்படுத்திப் பேசினார். உடனே நான் கலைஞருக்கு வக்காலத்து வாங்கி ‘நெஞ்சுக்கு நீதி’யை Quote செய்துப் பேச, அந்தப் பெரியவர் “இன்னும் நீ படிக்க வேண்டிய முக்கியமான புக்கு ஒண்ணு இருக்கு. கண்ணதாசன் எழுதிய வனவாசம்” என்றார்.

வனவாசம் எனக்கு அறிமுகமான கதை இது.

கவிதைக்கு பொய்யழகு. கவிஞருக்கு? வனவாசத்தை முதல் தடவை வாசிக்கும்போதே ஒன்றுமில்லாத விஷயங்களை கூட கவிஞர் ‘பூஸ்ட்’ செய்து சொல்லுகிறார் என்பதை உணரமுடியும். கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன் மூவரும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தங்களது கேரியரை சினிமாவிலும், அரசியலிலும் தொடங்குகிறார்கள். இவர்களில் கலைஞர் அரசியலிலும், எம்.ஜி.ஆர் சினிமாவிலும் உச்சத்துக்குப் போக கவிஞர் அடைந்த வயிற்றெரிச்சலே வனவாசமாக மணம் வீசியிருக்கிறது.

சாதிவெறியும், மத அபிமானமும் நிரம்ப கொண்ட கவிஞர் இருந்திருக்க வேண்டிய கழகம் திமு கழகம் அல்ல. காங்கிரஸ். தன் இயல்புக்கு ஒத்துவராத இயக்கத்தை தேர்ந்தெடுத்தது கவிஞரின் தவறே தவிர, கழகத்தின் தவறு அல்ல. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதக்கூடிய மனநிலையில் இருந்தவர் ஒரு திராவிட இயக்கத்தில் இருந்திருக்கவே வேண்டியதில்லை. 1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுயசரிதையாக எழுதியதாக கவிஞர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். ‘வனவாசம்’ அவரது சுயசரிதையா அல்லது மற்றவர்களை அவர் பார்வையில் வசைபாடும் நூலா என்பதை வாசித்தவர்கள் தான் சொல்லமுடியும். வசைவாசம் என்று நூலுக்கு தலைப்பிட்டிருக்கலாம்.

சென்ற பத்தியில் சாதிவெறி, மத அபிமானம் போன்ற சொற்களை கண்டு நீங்கள் அதிசயித்திருக்கலாம். கண்ணதாசனின் சாதிவெறி இந்நூலில் பல இடங்களில் வெளிப்படுவதை பார்க்க முடியும். ‘செட்டியார்’ சாதி குறித்த முரட்டுத்தனமான அபிமானம் அவருக்குண்டு. சாதி, மதப் பற்றுகளை வெளிக்காட்டிக் கொள்ள கழகம் தடையாக இருந்தது என்பதை நான்கைந்து இடங்களில் திரும்ப திரும்ப குறிப்பிட்டிருக்கிறார். அதிலும் தனது சாதி எத்தனை உயர்ந்த சாதி என்பதை ஒரு அத்தியாயத்தில் செட்டியார் சாதி திருமணம் பற்றி விவரிக்கும்போது வெளிப்படுத்தியிருப்பார்.

கல்லக்குடிப் போராட்டம் குறித்த கவிஞரின் பொச்சரிப்பு நகைச்சுவையானது. கலைஞரே தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு தலைமையிடம் சபாஷ் பெறுகிறார் என்ற ஆதங்கம் கவிஞருக்கு நிரம்ப உண்டு. எனவே கல்லக்குடி போராட்டம் நடந்தபோது கவிஞரும் ஆட்டையில் இறங்குகிறார். போராட்டத்துக்கு முன்பாகவே கலைஞர் கேட்கிறார். “கண்டிப்பாக நீரும் வர்றீரா?”. மேடையில் அதற்குப் பதில் தருகிறார் கண்ணதாசன். “போகிறேன். சாகிறேன்!”

இவ்வளவு வீரவசனம் பேசிய கண்ணதாசன் மறுநாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததுமே கலங்கிப் போனார். கலவரச் சூழலில் கட்சிக்காரர் ஒருத்தரே “அய்யா நீங்க தான் தலைமை. சீக்கிரமா ஓடிப்போய் ரயில் முன்னாடி படுங்க” என்றாராம். அதைத் தொடர்ந்து வழக்கு, சிறைத்தண்டனை. தன்னைப் பற்றிய உச்சபட்ச கழிவிரக்கத்தோடு இந்நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் கவிஞர். இதிலேயும் கருணாநிதி பெயரை தட்டிக்கிட்டு போயிட்டாரே என்ற ஆதங்கம் கவிஞருக்கு.

அடுத்ததாக 1957 சென்னை மாநகராட்சித் தேர்தல் வெற்றி. இதில் கருணாநிதிக்கு எந்தப் பங்கும் இல்லை. உழைத்தது முழுக்க நான் தான். ஆனால் கருணாநிதிக்கு கணையாழி அணிவித்தார் அண்ணா என்று எழுதியிருக்கிறார். சென்னையின் பழைய திமுக பெருசுகள் இன்றும் உயிரோடிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தான் தெரிகிறது கண்ணதாசன் எவ்வளவு பெரிய சோம்பேறியாக இருந்திருக்கிறார் என்பது. கண்ணதாசன் முழுக்க முழுக்க அரசியலில் இருந்திருந்தாலும் அவர் எக்காலத்திலும் எம்.எல்.ஏ.வாக கூட ஆகியிருக்க முடியாது. ஒரு அரசியல்வாதிக்கு தேவையான தியாகக்குணம், போராட்ட உணர்வு, தலைமைப்பண்பு எதுவுமே இல்லாத ஒரு மனிதர் இவர்.

கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொள்ள, கவிஞரோ வெத்து பல்பான ஈ.வி.கே.எஸ்.ஸை தன்னுடைய ஆதர்ச தலைவனாக குறிப்பிடுகிறார். முன் ஏர் எப்படிப் போகுமோ அப்படித்தானே பின் ஏரும் போகும்?

கவிஞர் எழுதிய வனவாசத்தில் உச்சக்கட்ட வன்முறை என்னவென்றால் தனக்குப் பிடிக்காதவர்கள் மீதெல்லாம் கிசுகிசு பாணியில் பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கிறார். பொருள் அபகரிப்பு புகார்களை வாய்கூசாமல் கூறுகிறார். இவர் குறிப்பிடும் காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக, இப்போதைய மதிமுக லெவலில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டே போகும் கண்ணதாசன் பேரறிஞர் அண்ணாவை கூட விட்டு வைக்கவில்லை. அண்ணா குறித்த அச்சம்பவத்தை ஒரு சினிமா திரைக்கதை போல சுவையாக கண், மூக்கு, காது வைத்து வர்ணிக்கிறார்.

ஒரு பிரபல குடிகாரராக, காமுகராக அறியப்பட்ட கவிஞரா மற்றவர்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவது? என்ன கொடுமை சார்!

இதுவரை முப்பத்திநான்கு பதிப்புகள் கண்ட நூல் இது. இந்நூலின் வெற்றிக்கு கவிஞரின் சுவாரஸ்யமிக்க தமிழ் நடை முக்கியப் பங்கு வகிக்கிறது. பக்கத்துக் பக்கம் சுவாரஸ்யம். அதுமட்டுமல்லாமல் அத்தியாயத்துக்கு அத்தியாயம் ஏதாவது கிசுகிசு வைத்திருக்கிறார் என்பதும் நூல் பரபரப்பாக விற்பனையாக கூடுதல் காரணமாக இருந்திருக்கலாம். இதை ஒரு அரசியல் நூல் என்று சிலர் சொல்வது நல்ல நகைச்சுவை. கவிஞரே குறிப்பிட்டிருப்பது போல ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு கவிஞரின் வாழ்வு நல்ல முன்னுதாரணம். அதற்கு தகுந்த சாட்சி அவரே எழுதிய இந்நூல். திமுகவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை வனவாசம் முன்வைப்பதாக இருந்தாலும் நான் பழகிய திமுககாரர்கள் பெரும்பாலும் ரகசியமாகவாவது இந்நூலை வாசித்திருக்கிறார்கள் என்பதே கண்ணதாசனுக்கு கிடைத்த வெற்றி.

கடைசியாக கட்சியில் இருந்து அவர் வெளிவரும் தினத்தை ‘விடுதலை தந்த ஏப்ரல் ஒன்று’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என்பது கச்சிதமாகப் பொருந்துகிறது அல்லவா?

நூல் : வனவாசம்

எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்

விலை : ரூ.75

பக்கங்கள் : 392

வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக