16 ஏப்ரல், 2009

கி.பி. 2058


சேது திட்டம் நிறைவேறலையே? கருணாநிதி ஆதங்கம்!!

சென்னை, ஜூன் 3 : இந்த ஆண்டாவது சேதுசமுத்திர திட்டம் நிறைவேறினால் மகிழ்ச்சியடைவேன் என்று தனது 135வது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் கருணாநிதி உருக்கமாகப் பேசினார். தான் இருநூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படும் அன்றாவது இத்திட்டம் நிறைவேறுமா என்று உணர்ச்சிவசப்பட்டு முதல்வர் பேசியபோது திமுகவினர் துரைமுருகன் தலைமையில் ஒப்பாரி வைத்தார்கள்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் 135வது பிறந்தநாள் கோலாகலமாக தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்தது போல ஏழை மக்களுக்கு இலவச கம்ப்யூட்டர் தந்தோம். ஒவ்வொரு தமிழனுக்கும் நிலாவில் அரை ஏக்கர் நிலம் தரும் திட்டமும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் இன்னமும் தமிழர்களின் இருநூறு ஆண்டு கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப் படவில்லையே? என்று முதல்வர் சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த வாழும் வள்ளுவன் பிறந்தநாள் விழாவில் பேசினார்.

இந்த பிறந்தநாள் விழாவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

* - * - * - * - * - * - *

”கலைஞரின் பிறந்தநாளுக்கு முன்னதாக பொதுக்குழு நடந்ததே? அதில் என்ன பேசினார்கள் சாமி?”

“இன்னமும் ஸ்டாலினுக்கு தகுந்த வயது வராததால் அவரை முதல்வராக்கும் திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு தள்ளிப் போட்டிருப்பதாக கலைஞர் பேசினாராம். 104 வயசாயிடிச்சி, இன்னமும் எவ்வளவு நாளைக்கு தான் உள்ளாட்சி அமைச்சராகவே இருப்பது என்று விரக்தியடைந்துப் போன ஸ்டாலின் மெசபடோமியாவுக்கு அரசுமுறை பயணமாக யாருக்கும் சொல்லாமல் கோபமாக கிளம்பிப் போய்விட்டாராம்”

(சுவாமி வம்பானந்தா, குமுதம் ரிப்போர்ட்டர் ஜூன் 18, 2058 இதழில்)

* - * - * - * - * - * - *

கலைஞருக்கு ஓய்வு கொடுங்கள்! - ஞாநியின் “ஓ” பக்கங்கள்!

”135 வயது ஓய்வு பெறும் வயதா இல்லையா என்று நாம் சிந்திக்க வேண்டும். 104 வயதான ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கலைஞர் காசி, இராமேஸ்வரம் என்று சென்று பெரியாரின் சிந்தனைகளை மக்களிடையே விதைக்க வேண்டும். கலைஞரால் மட்டும் தான் இது முடியும்”

இவ்வாறாக குமுதம் பத்திரிகையில் ஞாநி “ஓ” பக்கங்களில் எழுதியிருக்கிறார்.

* - * - * - * - * - * - *

எப்போதான் ஆட்சிக்கு வருவது? விஜயகாந்த் விரக்தி!!

வேலூர், ஜூன் 5 : கட்சி ஆரம்பித்து ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் நூற்றி மூணு வயது ஆகிறது. பண்ரூட்டி ராமச்சந்திரனுக்கோ நூற்று இருபது வயது ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வர மக்கள் ஓட்டு போடவேண்டும் என்று விஜயகாந்த் பேசினார்.

வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், கடந்த தொண்ணூறு ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை கண்ட மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். நான் செல்லுமிடமெல்லாம் கூட்டம் கூடுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் என்னை மக்கள் முதல்வராக்குவார்கள் என்று பேசினார்.

* - * - * - * - * - * - *

“திமுக பொதுச்செயலாளரான அன்பழகன் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். 137 வயதுதானே ஆகிறது? இதெல்லாம் ஓய்வு பெறும் வயதா? இன்னமும் பதினைந்து ஆண்டுகள் கழித்து ஓய்வு பற்றி யோசிக்கலாம் என்று கலைஞர் சொன்னாராம். இதனால் தன் ஓய்வு குறித்த யோசனையை தள்ளிப்போட்டிருக்காராம் பேராசிரியர்”. நாம் வைத்த பீரை சிப் செய்தபடியே சொன்னார் கழுகார்.

கழுகார், ஜூனியர் விகடன் ஜூன் 15, 2058 இதழில்.

2 கருத்துகள்: