7 ஏப்ரல், 2009

இதையெல்லாம் கூடவா சொல்லித் தர்றது?


சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தேன். ஒரு புத்தகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஆர்வக்கோளாறில் சொன்னேன். “இப்புத்தகம் இத்துறையை சார்ந்தவர்களுக்காகவும், இத்துறையை படிக்கும் மாணவர்களுக்கானது” என்றேன். உடனே கோபப்பட்ட அவர், “ஒரு புத்தகம் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கானது என்று வரையறைப்படுத்த நீ யாருய்யா? எவனெவனுக்கு எது எது விருப்பமோ அவனவன் அது அதை தேர்வு செய்து படிச்சுக்கட்டும். அடுத்தவன் இதைதான் படிப்பான், இதைதான் படிக்கணும்னு சொல்றதுக்கு உனக்கு யாரு உரிமை கொடுத்தது?” என்று கேட்டார். எனது தவறு புரிந்தது.

கொஞ்சம் விட்டால் ’முதலிரவு நடத்துவது எப்படி?’ என்று கூட பதிவு போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது நம்ம பதிவர்கள். பொதுவாக சுரேஷ்கண்ணனின் பதிவுகளை வாசிக்கும்போது இவருக்குப் பின்னே ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக் கொள்வேன். இந்த குறிப்பிட்ட பதிவை வாசித்தபோது சுரேஷ்கண்ணனே ஒட்டுமொத்த ஒளியாக மாறி, மகாபாரதம் கிராபிக்ஸில் வரும் வியாசமுனிவராய் மாறி ‘ஆயுஷ்மான் பவ’ சொல்வது மாதிரி இருந்தது. நம் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றார்போலவே அறிவுஜீவிகளும், அறிவுஜீவியாக ஆசைப்படுபவர்களும், தன்னைத்தானே அறிவுஜீவியாக அறிவித்துக் கொள்பவர்களும் தங்களுடைய பிம்பத்தை அவர் பதிவின் பின்னூட்டங்களில் பிரேம் செய்து மாட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.

இலக்கியங்களை தான் கற்றறிந்தவர்களுக்கான ஊடகம் என்று பொதுப்புத்தி உருவாக்கி அவரவர் வீட்டுப் பரணில் மூட்டைக்கட்டி வைத்தாயிற்று. தலித் இலக்கியம் பரவலாகி பதினைந்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வெகுஜனங்களிடம் இலக்கியத்தை பரவலாக்க முடியாத நிலை இருக்கிறது. அடுத்தது வெகுஜன மக்களுக்கான ஒரே உச்சபட்ச பொழுதுபோக்காக இருக்கும் சினிமாவையும் கலையின் உச்சம் ஆக்கிவிடலாம். எவன் பார்த்தாலென்ன? பார்க்காவிட்டால் எனக்கென்ன. நான் மட்டும் என் வீட்டு டிவிடியில் பார்த்துவிட்டு பதிவு போட்டுவிடுகிறேன். அதற்கு இருபது, இருபத்தைந்து பேராவது பின்னூட்டம் இடுவார்கள்.

ஏற்கனவே மல்டிபிளக்ஸ், சினிபிளக்ஸ் கலாச்சாரத்தால் சாமானிய மனிதன் தியேட்டருக்கு போய் சினிமா பார்ப்பதை விட்டு விட்டு திருட்டு டிவிடியில் பார்க்கிறான் அல்லது டிவியில் போடும்போது பார்க்கிறான். இந்த அழகில் கலைப்படங்களாக எடுத்துத் தள்ளி, வணிகப்படங்களை புறந்தள்ளி சினிமாவை தொழில் என்ற அந்தஸ்தில் இருந்து குப்புறக் கவிழ்த்து பால் ஊற்றும் ஐடியாக்கள் அறிவுஜீவிகளிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. சினிமாவை கலையின் உன்னதவடிவமாக பார்க்கும் பாலாக்கள் வேண்டுமானால் சோதனை முயற்சிகளில் ஈடுபடலாம். சுரேஷ்கண்ணன் மாதிரி பத்துபேர் மட்டும் தியேட்டரில் படம் பார்த்து கைத்தட்டுவார்கள். அவருக்கு கோடிகளை சம்பளமாக கொட்டும் தயாரிப்பாளன் என்ன மசுருக்கு சோதனை செய்து பார்க்க வேண்டும்?

நம்ம ஆட்கள் கலைப்படம், வணிகப்படம் என்பதை எப்படி பிரிக்கிறார்கள் என்பதே எனக்குப் பெரிய புதிராக இருக்கிறது. இம்மாதிரி பிரிக்க முயற்சித்து படுதோல்வி அடைந்து, “படமென்றால் ஒரே படம். ஓடினால் வணிகப்படம். ஓடாவிட்டால் கலைப்படம்” என்று கமலஹாசனே திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

இந்த அறிவுஜீவிகள் நமக்கு பரிந்துரைக்கும் படங்கள் எப்படிப்பட்டவை? உதாரணத்துக்கு உடல் ஆராதனை, உடல் அரசியல் குறித்து போதிக்கும் உலகப்புகழ்பெற்ற இத்தாலிய இயக்குனரான டிண்டோபிராஸை எடுத்துக் கொள்ளலாம். இவர் பட டிவிடியை யாராவது போய் வீடியோ லைப்ரரியில் கேட்டுப் பாருங்கள். கிடைக்காது. பர்மாபஜாருக்குப் போய் டபுள் எக்ஸ், த்ரிபிள் எக்ஸ் படங்களைத் தேடிப் பார்க்கும்போது உங்களுக்கு டிண்டோபிராஸ் கிடைப்பார். அதாவது நம்மூர் மலையாள பிட்டு படங்கள் நம் ஆட்கள் பரிந்துரைக்கும் எந்த உலகப் படத்துக்கும் தகுதி குறைந்ததல்ல.

‘மது, மங்கை, மயக்கம்’ என்ற பிட்டு படம் சொல்லாத எந்த செய்தியையும், ஏற்படுத்தாத எந்த உணர்வையும் இவர்கள் பரிந்துரைக்கும் படங்கள் ஏற்படுத்திவிடப் போவதில்லை. அம்மணக்குண்டி படங்களை எப்படி பார்ப்பது என்பதற்கு கூட சுஜாதா என்ன சொல்லியிருக்கிறார் என்று புரட்டிப் பார்த்து தான் பார்க்கிறார்களாம் இவர்கள். பார்ப்பது பிட் படம். அப்புறம் முதிர்ந்த மனநிலையென்ன, முதிரா மனநிலையென்ன. எல்லாத்துக்கும் இந்த ‘மேட்டரில்’ ஒரே மனநிலைதான்.

ஏதோ மேல்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமே கலாரசிகர்கள். சினிமாவை கலையாகப் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்றெல்லாம் அடிக்கடி இவர்கள் எழுதுவது எந்த அளவுக்கு உண்மை? உலகளவில் சூப்பர்ஹிட் ஆன படங்கள் எனக்குத் தெரிந்து டைட்டானிக், ஜூராசிக்பார்க், ஹாரிபாட்டர் மற்றும் சில ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தான். நம்மூரில் குணாவும், ஹேராமும் எப்படி ஓடியதோ அதுமாதிரி தான் அயல்நாடுகளிலும் இவர்கள் மாய்ந்து மாய்ந்து உணர்ச்சிகளை கொட்டி எழுதி, பரிந்துரைக்கும் உலகப்படங்களும் ஓடியிருக்கின்றன.

கலைப்பட உம்மணாம்மூஞ்சிகள் பார்த்து தொலைப்பதற்கு தானே பிலிம்சேம்பரிலும், பைலட்டிலும் படம் போடுகிறார்கள். ரஜினி படம் போடும் ஆல்பர்ட் தியேட்டருக்கு முதல் நாள் வந்துவிட்டு விசிலடிக்கிறான், கைத்தட்டுகிறான் என்று ஏன் இவர்கள் புலம்பித் தொலைக்க வேண்டும்? மொழி படம் நன்றாகத்தானே ஓடிற்று. எவனாவது விசிலடித்தானா? லாட்டரிச்சீட்டு கிழித்து ஸ்க்ரீன் முன்பாக எறிந்தானா?

நான் பார்க்குற படம் தான் ஒஸ்தி. நீ பார்க்குற படமெல்லாம் குப்பை என்ற ரேஞ்சுக்கு எழுதுவது ‘நான் டீசண்டு, நீ இண்டீசண்டு. உன்னை தொடமாட்டேன்’ என்று சொல்லுகிற தீண்டாமைக்கு ஒப்பானது. அவரவர் தேர்வு அவரவர் விருப்பம் என்பதுதான் ஜனநாயகம். கட்டற்ற சுதந்திரம், கட்டுடைப்பு என்று பேசுபவர்கள் சினிமா பார்ப்பதற்கெல்லாம் கூட நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் எழுதுகிறார்கள் என்பது முரணாகத் தெரிகிறது.

குறிப்பாக சுரேஷ்கண்ணனின் பதிவில் காணப்படும் முட்டாள்தனம், முதிர்ச்சியற்ற மனநிலை போன்ற வார்த்தைகள் கடுப்பாக இருக்கிறது. அவரைப் போன்றவர்கள் மட்டுமே அறிவுஜீவியென்றும், வெகுஜனங்கள் முட்டாள்கள் என்று கட்டமைக்கும் முயற்சி இது. நான் ரசிப்பதை எல்லோரும் ரசிக்கவேண்டும், அதுவும் என்னைமாதிரியே ரசிக்கவேண்டும் என்று நினைப்பது பாசிஸ்ட்டுத்தனம் இல்லாமல் வேறென்ன? மசாலப்பட ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று எழுதுகிறார்கள். எல்லாருக்கும் தான் இருக்கிறது, விசிலடிப்பவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாகவா இருக்கிறது?

இனிமேலாவது இதுபோன்ற மேன்யுவல் கைடுகளை யாராவது எழுதும்போது, அதற்கு முன்பாக ஆதித்தனாரின் இதழாளர் கையேடு படித்துவிட்டு எழுதலாம். சிந்தனைகளில் எதுவும் பெரியதாக மாறிவிடாது என்றாலும் மேன்யுவல் கைடு எழுதுவதற்கான எழுத்துத் தொனியையாவது அது கொஞ்சம் நாகரிகமாக மாற்றும்.

கடைசியாக, மசாலா படத்தை கொண்டாடவும், கலைப்படங்களை ஆராதிக்கவுமான மனநிலை எனக்கு வாய்த்திருக்கிறது. இம்மாதிரியான மனநிலை வாய்க்கப்பெறாத சுரேஷ்கண்ணன்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.

2 கருத்துகள்: