
தந்தைபெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் படம் என்று சொல்லி ஆதம்பாக்கம் ஜெயலட்சுமிக்கு அழைத்துப் போனார்கள். ஒரு தலைக்கு ‘75 காசு’ மானியவிலை டிக்கெட். படத்தின் பெயர் ‘எங்களையும் வாழவிடுங்கள்’ என்பதாக நினைவு. சுமார் ஐந்து, ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையாக நடத்தியே அழைத்துச் சென்றார்கள். அது கூடப்பரவாயில்லை. குழந்தைகளுக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைத்து அவர்கள் போட்ட அந்த பாடாவதிப்படம். இதைவிட குழந்தைகளுக்கு எதிரான பெரிய வன்முறையை யாரும் நிகழ்த்திவிட முடியாது.
குழந்தைகள் படம் என்றாலே முதலில் தொலைந்துப்போவது யதார்த்தம். குழந்தைகள் வயசுக்கு மீறிய செயல் செய்பவர்களாக காட்டுவார்கள். அல்லது பத்து, பண்ணிரண்டு வயது சிறுவர் சிறுமிகளைகூட நான்கைந்து வயதுக் குழந்தைகளுக்கான மனமுதிர்ச்சியோடு அநியாயத்துக்கு குழந்தைத்தனமாக காட்டுவார்கள். அதிலும் மணிரத்னம் படங்களில் காட்டப்படும் குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாமா என்று இருக்கும். ’அழியாத கோலங்கள்’ படத்துக்குப் பிறகு யதார்த்தமான ஒரு குழந்தைகளுக்கான படம் வந்ததா என்று யோசித்து யோசித்து மண்டை காய்கிறது. ‘பசங்க’ குழந்தைகளுக்கான எதிர்ப்பார்ப்பை சரியாகப் பூர்த்தி செய்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் காட்சிகள் செம கடுப்பு. அதுவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் வந்து பசங்க பற்றி புகார் சொல்லுவதெல்லாம் ரொம்பவும் ஓவர். பில்டப் சாங், ஹீரோ - ஹீரோயின் ஓபனிங்கையெல்லாம் ரசிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கத்திரி போட்டிருந்தால் இயக்குனர் நினைத்ததை விட படம் நறுக்கென்று வந்திருக்கும்.
ஒரு பையன் தான் படிக்கும் ஒரு வகுப்பை மட்டுமன்றி, இரு குடும்பங்களில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறான் தன் ஆட்டிட்யூட்டால் மாற்றுகிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைனர். ஸ்டார்டிங் ட்ரபுள் இருந்தாலும் ரன்னிங்கில் இயக்குனர் செம ஸ்பீட். ‘பசங்க’ நடிக்காமல் வாழ்ந்திருப்பது ஆச்சரியமோ ஆச்சரியம். இயக்குனர் அப்துல்கலாம் ரசிகர் போலிருக்கிறது. படம் முழுக்க கனவு பற்றி நீதிபோதனை ஏராளம். விக்ரமன் மாதிரி நிறைய குட்டி குட்டி ஐடியாக்களை படம் முழுக்க தூவியிருக்கிறார்.
பசங்க கோஷ்டி சேர்ந்து சண்டை போடும்போது ஒரு புத்திசாலி மாணவி சண்டையை நிறுத்த தேசியகீதம் ஒலிக்கச் செய்கிறார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்படியே ஸ்டேண்டடீஸில் நிற்கிறார்கள். தியேட்டரில் ஒருவர் கூட எழுந்து நிற்கவில்லை என்பது இயக்குனருக்கு கிடைத்த படுதோல்வி. இந்திய தேசிய எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
ஒரு சின்ன காதலும் உண்டு. காதலன் தாடிவைத்திருந்தாலும் அழகாக இருக்கிறார். சுப்பிரமணியபுரம் ஜெய்யை நக்கலடித்து நடிக்கிறார். காதலி வேகா. தமிழன் எதிர்பார்க்கும், திரையை வியாபிக்கும் பிரம்மாண்ட கவர்ச்சி அம்சங்கள் இவரிடம் குறைவு. குறைவு என்பதைவிட சுத்தமாக இல்லவேயில்லை எனலாம். ஹீரோயினின் இடுப்பைக்கூட காட்டாத முதல் தமிழ் சினிமாவென்றும் இப்படத்தைச் சொல்லலாம். ஆனால் அடிக்கடி புருவத்தை வில்மாதிரி அழகாக நெரிக்கிறார். தெரித்துவிடுகிறது மனசு. வேகா மாதிரி ஃபிகர்களை காதலிக்கவே முடியாது. கட்டிக்க மட்டும் தான் தோணும். கண்ட கண்ட படங்கள் பார்த்து ஹீரோயின்களை பார்த்து லிட்டர் லிட்டராக ஜொள்ளுவிடும் லக்கியே, பசங்க படத்துக்கு விமர்சனம் எழுது என்று கோஷமிட்ட சென்னை ‘சுட்டி’ வாசகி மன்னிக்க. நாய்வாலை நிமிர்த்த முடியாது. ஹீரோயின்களை வர்ணிக்காமல் இருக்க என்னால் முடியவே முடியாது.
இடைவேளைக்குப் பிறகு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்தப் படமோ என்று சந்தேகம் வருகிறது. முழுக்க லால்லலாலா தான். ஃபிரேமுக்கு ஃப்ரேம் செண்டிமெண்ட். க்ளைமேக்ஸ், தாங்கலை சாமி. படம் முழுக்க நிறைய மைனஸ் பாயிண்டுகள். டைரக்டரின் முதல் படம் என்ற பதட்டத்தை, படத்தில் நிறைந்திருக்கும் யதார்த்தத்தை மீறியும் கணிக்க முடிகிறது. ஆனால் வலுவான கதை, திரைக்கதை மூலமாக மைனஸ்களை, பிளஸ்களாக்கும் சாமர்த்தியம் இயக்குனரிடம் இருக்கிறது.
வெளிவந்து ஒருவாரமாகியிருக்கும் இப்படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. காண்வெண்ட் மோக ‘ஏ’ செண்டர்களில் இப்படம் சாதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. நான் படம் பார்த்த அர்பன் சிட்டி காஞ்சிபுரம் அருணா காம்ப்ளக்ஸில் இருபத்தைந்து சதவிகித இருக்கைகள் கூட நிரம்பவில்லை. இலவச டிவி தரும் அரசாங்கம் இப்படத்துக்கு இலவச டிக்கெட் தந்தாவது இப்படத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரிவிலக்கு அளிக்கவாவது பரிசீலிக்கலாம். குடும்பம் குடும்பமாக பார்த்து மக்கள் ஆராதிக்க வேண்டிய படமிது.
தமிழின் சிறந்த படங்களின் பட்டியலில் ’பசங்க’ளுக்கு கட்டாயம் ஒரு இடமுண்டு.