
'பாரிஸ் பை நைட்' என்பார்கள். அந்த லெவலுக்கெல்லாம் சென்னை எப்போதும் இருந்ததில்லை, எதிர்காலத்தில் மாறலாம். பத்து, பதினைந்து ஆண்டுகளாக சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. சென்னைவாசிகளுக்கு தூக்கம் முக்கியம். பத்து மணி ஆனாலே அலாரம் அடித்தது மாதிரி தூங்கப் போய்விடுகிறார்கள் அல்லது சன் டிவியில் பத்தரை மணிக்கு படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். கால் சென்டர்களிலும், பிபிஓக்களிலும், பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும், விளம்பரத்துறையிலும், அச்சுத்துறையிலும், இன்னும் சில துறைகளில் பணிபுரியும் கோட்டான்கள் தவிர்த்து மீதி அனைவருமே தூக்கப் பிரியர்கள். செக்யூரிட்டிகளும், காவலாளிகளும் கூட உட்கார்ந்த இடத்திலேயே இங்கு தூங்கிப் பழகியவர்கள்.
ஓவராக குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வழி தெரியாதவர்களும், வானமே கூரையாய் வாழ்பவர்களும் பிளாட்பாரங்களில் ஒதுங்கி வாழ்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலை பிளாட்பார தூங்குமூஞ்சிகளை நிறைய கண்டிருக்க முடியும். 'சென்னை ஈஸ் எ காஸ்மோபாலிட்டன் சிட்டி, நேஸ்ட்டி அக்லி சிடிசன்ஸ்' என்று முகஞ்சுளித்தவர்கள் புண்ணியத்தால் இப்போது அண்ணாசாலை பிளாட்பார்ம்கள் வெறிச்சோடிப் போயிருக்கிறது. கே.கே.நகர், வடபழனி பிளாட்ஃபார்ம்கள் பரபரப்பாகியிருக்கிறது.
தினமலர் காலத்தில் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் தின அண்ணாசாலை பரபரப்புக்கும், இப்போதிருக்கும் அண்ணாசாலை பரபரப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அப்போதும் சரி, இப்போதும் சரி ஸ்பென்சர்ஸ்க்கு எதிரில் இருக்கும் காவல்நிலையத்தை தாண்டுவது அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். அப்போதாவது பரவாயில்லை “ப்ரெஸ்சுங்க” என்று மிதப்பாக சொன்னால் சலாம் விட்டு அனுப்பி வைப்பார்கள். இப்போது “ப்ரெஸ்” என்று சொன்னாலும் டவுசரைக் கயட்டி செக் செய்து தான் அனுப்புகிறார்கள். பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு போய்விட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை, மைக்கேல் ஜாக்சனை உச்சபட்ச ஒலியில் அலறவிட்டுப் பறக்கும் நவீனரக கார்கள் வெற்றிகரமாக நிரப்புகின்றன. இரவுகளில் டூவீலர் மாதவன்கள் லேன் மாறி ஓட்டுவது உயிருக்கு ஆபத்து.
பிலால் இருந்தவரை நைட்டு ஒரு மணிக்கெல்லாம் கூட பிரியாணி சுடச்சுட கிடைக்கும். பிலால் இல்லாத குறையை அண்ணாசாலை மசூதிக்கு எதிரிலிருக்கும் ஒரு ஹோட்டல் சரிகட்டுகிறது. மதுரையில் அதிகாலை ஒரு மணிக்கு கூட இட்லி கிடைக்கும் என்பார்கள். சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம். பாண்டிபாஜார் டீலக்ஸை மட்டும் நம்பிப் போகலாம். தெருவோர பிரியாணி கடைகளும், கையேந்தி பவன்களும் கூட குடிகாரர்கள் தொல்லையாலும், போலிஸின் அதிகாரத்தாலும் பத்தரை மணிக்கே மூட்டை கட்டிவிடுகிறார்கள்.
கமிஷனர் சேகர் பதவி ஏற்றாலும் ஏற்றார், பலராம் நாயுடுவுக்கு வந்த சிக்கல்கள் மாதிரி சிக்கலோ சிக்கல். பிரஸ்மீட்களில் கம்பீரமாக முழங்கினாலும் சைக்கோ கொலைக்காரன் தண்ணி காட்டுகிறான். போதாக்குறைக்கு பெங்களூர், ஆமதாபாத் குண்டுவெடிப்புகள் போலிசாருக்கும், சென்னைவாசிகளுக்கும் பீதியையும், பேதியையும் சமவிகிதத்தில் கொடுத்திருக்கிறது. பெண் போலிசாரை நைட் ரவுண்ட்ஸில் முன்பெல்லாம் காணமுடியாது. ஆள் பற்றாக்குறை போலிருக்கிறது. பெண் போலிசாரும் ஆங்காங்கே ”வாயை ஊது!” என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பையை நோண்டி டிபன்பாக்ஸை திறந்து பார்க்கிறார்கள். குண்டுகள் கடத்த டிபன்பாக்ஸ் தான் சவுகரியம் போலிருக்கிறது.

முன்பெல்லாம் இரவுகளில் பீச் ரோட்டில் ஆட்டோ ரேஸ் நடக்கும். போலிஸ்காரர்களின் நெருக்கடியால் பீச் ரோட்டில் நடந்த ரேஸ் இப்போது சாந்தோமில் இருந்து சத்யா ஸ்டுடியோ வரை நடக்கிறதாம். அதிவேக கொலைவெறி ஆட்டோக்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் சாந்தோமில் இருந்து ரைட் அடித்து மயிலைக்கு வந்தேன். மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனை தவிர்க்க தினகரனுக்கு முன்பாக வந்த ஏதோ ஒரு சந்தில் நுழைந்து கபாலீஸ்வரர் கோயிலை தொட்டு, குளத்தை சுற்றி மந்தைவெளியை நோக்கி வண்டியை முறுக்கினேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. மேற்கு மாடவீதியும், வடக்கு மாடவீதியும் சந்திக்கும் சந்திப்பில் போலிஸ் செக்கப். ஒரு பெண் போலிஸ் சுறுசுறுப்பாக வண்டி டாக்குமெண்டுகளை டார்ச் அடித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு ஃபோர்டு ஐகானில் இருபதுகளில் ஆறு பேர் அதிவேகமாக வந்து பிரேக் அடித்து நின்றார்கள். ‘கண்களிரண்டால்' பாட்டை சத்தமாக அதிரவிட்டிருந்தார்கள். டிரைவர் சீட்டில் இருந்தவர் காரிலிருந்தபடியே டாக்குமெண்ட்களை காட்டினார். ”வாயை ஊதுங்க” என்று சொன்னதுமே “டாக்குமெண்ட்ஸ் சரியா இருக்கில்லே? அப்புறம் எதுக்கு வாயை ஊதச்சொல்றே?” என்று ஒருமையில் போலிஸ்காரரை கேட்டதுமே, கோபமடைந்த போலிஸ்காரர் வண்டிச்சாவியை பிடுங்கிக் கொண்டுப் போனார்.
பயத்தில் ஹெல்மெட்டை கழட்டாமலேயே டாக்குமெண்ட்ஸை காட்டினேன். ”பாலிசி பேப்பர் வர ஒரு வாரமாகும். இன்சூரன்ஸ் ரிசீப்ட் மட்டும் இருக்கு” என்று சொல்லிவிட்டு என் கம்பெனி ஐடெண்டிகார்டை காட்டினேன். நல்ல வேளையாக அந்த பெண் போலிஸ் வாயை ஊத சொல்லவில்லை. மாணிக்சந்தையும், பாஸ் பாஸையும் சரிவிகிதத்தில் மிக்ஸ் செய்து போடுபவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவன். ஃபோர்டு ஐகான் காரரிடம் “பேரு சொல்லுங்க சார்!” என்றவாறே நகர்ந்தார் அந்த பெண் போலிஸ். “நான் அட்வகேட்” என்று ஃபோர்டு சொல்ல, “பேரை தான் கேட்டேன், ப்ரொபஷனை கேட்கலை!” என்று கடித்துக் கொண்டிருக்க நூறு ரூபாய் மிச்சமான குஷியில் வண்டியைக் கிளப்பினேன்.

பத்து கார்கள், இருபது டூவீலர்கள் மடக்கப்பட்டிருந்தன. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்தவாறே பைக்கை ஓரம் கட்டினேன். கார்களின் டிக்கிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ப்ரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த போலிஸ்காரர் ஒருவர் ஹெல்மெட்டையெல்லாம் கழட்ட சொல்லவில்லை. ”ஐடெண்டி கார்டு மட்டும் காட்டு, குடிச்சிருக்கியா, ஆர்சி புக் இருக்கானெல்லாம் கேட்கமாட்டேன்” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஐடெண்டி கார்டை காட்டியதுமே நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.
சென்னையில் ஒரு பிரச்சினை. பதினொரு மணிக்கு மேல் தம் அடிப்பதற்கும், பாக்கு போடுவதற்கும் பொட்டிக்கடைகளே இருக்காது. ரெகுலர் தம்மர்கள் பாக்கெட்டாக வாங்கி ஸ்டாக் செய்துகொள்வார்கள். திருட்டு தம்மர்கள் பாடு தான் திண்டாட்டம். ஏதாவது பொட்டிக்கடை இருந்தாலாவது லூசில் வாங்கி அடிக்கமுடியும். தரமணி ரோட்டில் டிசிஎஸ் அருகே இருபத்தி நாலுமணி நேர பொட்டிக்கடை ஒன்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகிறது. எந்த நேரத்திலும் டீ, சமோசா, சிகரெட், பாக்கு தாராளமாக கிடைக்கிறது.
வேளச்சேரி விஜயநகரில் ஆட்டோக்காரர்களை தவிர்த்து யாரையுமே காணோம். போலிஸ் விழிப்பாக இருக்க வேண்டிய ஜங்ஷன் அது. வேளச்சேரி மேம்பாலத்தில் முன்பெல்லாம் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும், (அறிந்தும் அறியாமலும், வேட்டையாடு விளையாடு, பரட்டை (எ) அழகுசுந்தரம் etc.) இரவுகளில் பரபரப்பாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் இயங்க ஆரம்பித்தப் பிறகு சினிமாக்காரர்கள் ஏனோ அந்த மேம்பாலத்திடம் பாராமுகம் காட்டுகிறார்கள்.
