
வலையுலகப் பெருசு ஒருவரோடு வழக்கமாக டீ குடிக்கும் கடை அது. டீ குடிக்க போனால் ரெண்டு மூன்று தம்மை பற்றவைத்து விட்டு அரைமணி நேரம் ஏதாவது மொக்கை போடுவோம். அன்றும் அப்படித்தான். கடந்து போன சேட்டு ஃபிகர் (ஆண்டி?) ஒன்றின் வெள்ளைவேளேர் சதைப்பிடிப்பான இடுப்பை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தேன்.
திடீரென அவருக்கு பெண்ணுரிமை சிந்தனைகள் கிளர்த்தெழுந்து என்னை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை எப்படி பார்க்கவேண்டும் என்று ஆவேசமாக கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது பெரியார் சொன்னவற்றை இடை இடையே உதாரணமாக காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு பேர் எங்களை நெருங்கினார்கள். அவர்களை கவனிக்காமல் அண்ணாத்தையோ ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். எங்களை நெருங்கியவர்களில் ஒருவர் லுங்கி கட்டிக் கொண்டிருந்தார், இன்னொருவர் வெள்ளைச்சட்டையை கருப்புப் பேண்டில் டக்-இன் செய்திருந்தார்.
லுங்கி கட்டிக் கொண்டிருந்தவர் எங்களை சுட்டிக் காட்டி, “சார் நான் சொன்னேன்லே? இவங்க ரெண்டு பேரு தான்!” என்றவுடனே எனக்கு அடிவயிறு கலக்க ஆரம்பித்தது. வண்டி சாவியை இக்னீஷியனில் செருகி வண்டியை கிளப்ப மனதளவில் தயாரானேன். அண்ணாத்தையை லைட்டாக சீண்டி அவர்களை காட்டினேன்.
வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் போட்டவர் சினேகமாக சிரித்துக் கொண்டு எங்கள் அருகில் வந்து கை கொடுத்தார். “சார் உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன், உங்க முகம் எனக்கு நெருக்கமா தெரியுது, நான் ஞாபக மறதிக்காரன். உங்களை எங்கே பார்த்தேன்னு மறந்துடிச்சி” யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் அண்ணாத்தை சொல்லும் முதல் டயலாக் இது.
“எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க, இங்கே தான் பார்த்திருப்பீங்க. உங்க ரெண்டு பேரையும் ஒரு ரெண்டுமாசமா நான் வாட்ச் பண்ணி இருக்கேன்” லுங்கி ஆசாமி.
“ஆமாங்க. நீங்க ரெண்டு பேரும் வித்தியாசமா ஏதோ பேசிக்கிறீங்கன்னு இவன் சொன்னான். என்னதான் பேசுறீங்கன்னு இன்னைக்கு இங்கே ஒருமணி நேரமா வெயிட் பண்ணி பார்த்தோம்” வெள்ளை சட்டை.
“பாருங்க, பெரியார் பேரை நம்ம மாதிரி யூத்துங்க (அவர்கள் இருவருக்கும் தலா 40, 42 வயதிருக்கலாம்) சொல்லவே பயப்படுறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரும் தைரியமா பப்ளிக்லே பேசுறீங்க. அதுமட்டுமில்லே நிறைய சமுதாயப் பிரச்சினைகளை போட்டு அலசு அலசுன்னு அலசுறீங்க. ஒருமுறை நீங்க ரெண்டு பேரும் ஓட்டலுக்குள்ளே பரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தீங்க. நீங்க என்ன பேசுறீங்கன்னு கேட்குறதுக்காகவே ஓட்டலிலே உங்க பக்கத்து டேபிளுக்கு வந்து உட்கார்ந்து மசாலா தோசை சாப்பிட்டேன்!”
இருவரும் எங்களை பேசவிடாமல் வெள்ளமாய்க் கொட்டினார்கள். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு வெள்ளைச் சட்டைக்காரர் லுங்கியை காட்டி, “பக்கத்து தெருவிலே பெரியார் சிலை பார்த்திருப்பீங்க. அதை நிறுவுனவரு இவரு தான். நான் வக்கீலா இருக்கேன், பெரியார் போட்ட பிச்சை!” என்றார்.
இரண்டு பேரும் ‘சமுகத்துக்கு ஏதாவது செஞ்சாகணும்!' என்ற வெறியில் இருந்தார்கள். கொஞ்ச நேரம் சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்து பின்னர் கிளம்பினோம்.
“ங்கொய்யால, இனிமே இந்த டீக்கடைப் பக்கமே வரக்கூடாதுடா, டெய்லி ஒரு மணி நேரம் மொக்கைய போட்டு டவுசரை கயட்டிடுவாங்க போலிருக்கு!” என்றார் அண்ணாத்தை.
* - * - * - * - * - * - * - * - * - *
அவர் நல்ல துடிப்பான இளம்பெண். நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். என்னோடு அதே வலையுலகப் பெருசு தானிருந்தார். இணையத்தில் தமிழ், வலைப்பூக்கள் என்றும் பல டாபிக்குகளுக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்தோம்.
திடீரென்று அந்தப் பெண் கேட்டார், “வலைப்பூக்களில் எழுதுவதால் சமூகத்துக்கு என்ன நன்மை?”
அண்ணாத்தை கொஞ்சம் திணறி, உடனே சுதாரித்து, “நேற்று ஏதோ படம் பார்த்தேன்னு சொன்னீங்கள்லே? அதனாலே சமூகத்துக்கு என்ன நன்மை செஞ்சிருக்கீங்க?” என்றார்.
“படம் என் திருப்திக்கு பார்க்குறேன்!”
“அதுமாதிரி தான் வலைப்பூக்களில் எழுதுறவங்க அவங்கவங்க திருப்திக்கு எழுதறாங்க?”
“சினிமா பார்க்குறதும், எழுதறதும் ஒண்ணா? என்ன சார் சொல்றீங்க? எழுத்துங்கிறது...” ஆவேசமாய் கேட்டார், கொஞ்சம் விட்டால் ‘ஏய் மனிதனே!' என்று ஆவேசக்கவிதை படிப்பார் போலிருந்தது.
“நீங்க மொதல்லே கேட்டதே ஒரு கோயிந்துத்தனமான கேள்வி. உலகத்துலே எவ்வளவோ விஷயம் நடக்குது. ஒவ்வொண்ணாலயும் சமூகத்துக்கு என்ன பயன்னு கேட்டுக்கிட்டிருந்தா எதுவுமே நடக்காது”
“அப்போ நீங்கள்லாம் எழுதறதால பயனேதும் இல்லைன்னு சொல்றீங்க?”
“அதுமட்டுமில்லே, நீங்க படம் பார்க்குறது, இப்போ நாம பேசிக்கிட்டிருக்கிறது இதனால எல்லாம் கூட சமூகத்துக்கு எந்த பயனுமில்லே!”
'ம்ஹூம், இது வேலைக்கு ஆகாது!' என்று அப்பெண் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, உடனேயே பேச்சை துண்டித்துவிட்டு கிளம்பி விட்டார்.
* - * - * - * - * - * - * - * - * - *
கொஞ்ச நாட்களுக்கு முன் தண்டையார்ப்பேட்டை மணிக்கூண்டு அருகில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்புக்கு சென்றேன். லைட் ம்யூசிக்கில் பாடிக்கொண்டிருந்தவர் மிகக்கொடூரமாக பி.எஸ்.வீரப்பா குரலில் ‘உலக நாயகனே' பாடிக்கொண்டிருந்தார். இவர்களது அவஸ்தையில் இருந்து தப்பிக்க நினைத்து மிரண்டுப் போயிருந்த மணமகனிடம் மொய்க்கவரை திணித்துவிட்டு எஸ்கேப் ஆனேன். வண்டியை மண்டபத்துக்கு எதிரில் ஒரு டீக்கடைக்கு அருகில் நிறுத்தியிருந்தேன்.
வண்டியை எடுத்தபோது ஒருவர் என் தோளை சீண்டி “நீங்கதான் லக்கிலுக்கா?” என்று கேட்டார். எனது வண்டியில் லக்கிலுக் என்ற ஸ்டிக்கர் ஒட்டிவைத்திருந்ததை கவனித்திருப்பார் போலிருக்கிறது. நான் தான் என்று தெரிந்தால் அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தெரியாததால் ”இல்லைங்க. என் பேரு குமார்” என்றேன்.
“உங்க வீடு எங்கே இருக்கு?”
அனிச்சையாக “மடிப்பாக்கம்” என்றேன்.
“மாட்டிக்கிட்டீங்களா, நீங்க தான் லக்கிலுக்கு, நான் இங்கே தான் மிண்டுலே வேலை பார்க்குறேன்” அவர் பெயரோடு, அவர் பணிபுரியும் பிரபலமான அந்த அச்சகத்தின் பெயரை சொன்னார். இந்தியாவின் நெ.1 டயரியை தயாரிப்பவர்கள் அவர்கள். தொழில்நிமித்தமாக அவர்களோடு எனக்கு முன்பு தொடர்பு இருந்தது. மனிதர் பார்க்க வடிவேலுவிடம் ‘செத்து செத்து விளையாடலாமா?' என்று கேட்ட முத்துக்காளை கெட்டப்பில் இருந்தார்.
“நெட்டுலே இமேஜஸ் தேடுவேன் சார். அப்போ யதேச்சையா எப்படியோ தமிழ்மணம் மாட்டிச்சி. உங்க பிலாக் எல்லாம் எனக்கு அப்படித்தான் அறிமுகம். ஒரு வருஷமா தொடர்ந்து உங்க பிலாக் படிக்கிறேன்”
“ரொம்ப நன்றிங்க!”
“ஆனா பாருங்க. உங்களை மாதிரி பெரிய எழுத்தாளர்கள் (யாரும் நகைக்க வேண்டாம், அவர் சீரியஸாக தான் சொன்னார்) அன்றாட மக்களின் பிரச்சினைகளை பத்தி எழுதறது இல்லே!”
”அன்றாட மக்களின் பிரச்சினைன்னா எதுங்க?”
“நான் திருவொற்றியூர் போகணும். ஒருநாள் மகாராணி ஸ்டாப்பிங்க்லே நின்னிக்கிட்டிருந்தேன். 28ஆம் நம்பர் பஸ்காரன் பஸ் ஸ்டேண்டுலே நிறுத்தாம ரொம்ப தள்ளிப்போய் நிறுத்தினான். இதுமாதிரி பிரச்சினைகளை எழுதணும் சார்! அப்போதான் சமூகத்துலே மாற்றம் வரும்!”
“நான் எழுதினா கூட 28ஆம் நம்பர் பஸ் ட்ரைவர் பிலாக்கெல்லாம் படிக்கமாட்டாரே?”
“அட என்ன சார், உங்க பிலாக்கையெல்லாம் கலைஞரே படிப்பாருன்னு (?) கேள்விப்பட்டிருக்கேன். இதுமாதிரி நீங்கள்லாம் எழுதினீங்கன்னா உடனே அரசு அதிகாரிங்கள்லாம் நடவடிக்கை எடுப்பாங்களே?”
“தோழா. நாமல்லாம் சமூகத்தை புரட்டிப் போடவெல்லாம் முடியாதுங்க. சமூகம் எப்பவும் ஒருக்களிச்சு தான் படுத்துக்கிட்டிருக்கும். அதுவா புரண்டு படுத்தாதான் உண்டு”
“என்ன சார் இப்படி சொல்றீங்க? எழுத்தாளர்கள் நினைச்சா எது வேணும்னாலும் பண்ண முடியும் சார்! பிரெஞ்சுப் புரட்சி எப்படி நடந்தது?”
“இது இந்தியாவாச்சே? அதுவுமில்லாம நானெல்லாம் வால்டரோ, ரூசோவோ கிடையாது!”
நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை, தொடர்ந்து அடம்பிடித்தார். சரி இனி அன்றாட மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எழுதறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனேன். இதோ 28ஆம் நம்பர் பஸ் மகாராணி ஸ்டாப்பிங்கில் நிற்பதில்லை என்று எழுதிவிட்டேன். ஏதாவது புரட்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.
இன்னும் கூட எங்களையெல்லாம் இவங்க நம்பிக்கிட்டிருக்காங்களே? :-)