“நண்பரே நலமாக இருக்கிறீர்களா? என்னை மன்னிக்கவும். நான் மலேசியாவுக்கு வர இருப்பதை உங்களிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். இளைஞர்களை இனவெறிக்கு எதிராக ஊக்குவிக்கும் மாநாடு ஒன்றிற்கு அவசரமாக கிளம்பி வந்திருக்கிறேன். இங்கே மாநாட்டை முடித்து வந்தபிறகு ஒரு துரதிருஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆம். என்னுடைய கைப்பை ஒன்றினை நான் பயணித்த டாக்ஸியில் மறதியாக விட்டுவிட்டேன். என்னுடைய பணம், பாஸ்போர்ட் மற்றும் இதர முக்கியமான சமாச்சாரங்களை அந்த பையில் வைத்திருந்தேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஹோட்டல் பில் கட்ட 1400 டாலரும், இந்தியாவுக்கு திரும்பிச்செல்ல 1800 டாலருமாக மொத்தமாக 3200 டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய்) உடனடியாக தேவைப்படுகிறது.
ஒரு நூலகத்திலிருக்கும் இணைய இணைப்பிலிருந்து இந்த மடலை உங்களுக்கு அனுப்புகிறேன். உங்களால் எவ்வளவு முடியுமோ அதை உடனே கொடுத்து உதவவும். ஊருக்கு சென்றதுமே கண்டிப்பாக திருப்பித் தந்து விடுகிறேன். உங்களால் பணம் தரமுடியுமென்றால் உடனடியாக வெஸ்டர்ன் யூனியன் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறேன்.
நன்றி!
அன்புடன்
சாரு நிவேதிதா”
இப்படி ஒரு மின்னஞ்சல் கடந்த ஆண்டு, தமிழின் பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதாவின் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் வந்ததுமே பதறிப் போனார்கள். தங்களுடைய அபிமான எழுத்தாளர் பணமின்றி தவித்துக் கொண்டிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. உடனடியாக வெஸ்டர்ன் யூனியன் (மணியார்டரில் பணம் அனுப்புவது போல நவீன இணைய முறை) மூலமாக பல பேர் பணம் அனுப்பினார்கள்.
உண்மையில் சாருநிவேதிதா மலேசியாவில் பணத்தை தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் நின்றாரா? இச்சம்பவம் குறித்து அவரே அவரது இணையத்தளத்தில் விலாவரியாக எழுதியிருக்கிறார்.
“என்னுடைய ஹாட்மெயில் மற்றும் ரீடிப்மெயிலில் திருட்டுத்தனமாக நுழைந்த ஆள் ஒருவன் என்னுடைய இரண்டாயிரம் வாசகர்களுக்கு இதுபோன்ற மெயிலை அனுப்பியிருக்கிறான். என் அன்பான வாசகர்கள் பலரும் முடிந்த அளவு பணம் அனுப்பியிருக்கின்றனர். அல்லது அனுப்ப முயற்சித்திருக்கின்றனர். யாருக்குமே அவசரத்தில் என்னைத் தொடர்பு கொண்டு பேசத் தோணவேயில்லை.
விஷயம் தெரிந்ததுமே என்னுடைய மெயில் ஐடி பாஸ்வேர்டை மாற்ற முயன்றேன். ஆனால் அந்த கிரிமினல் பலே கில்லாடி. என்னுடைய மின்னஞ்சலில் நுழைந்ததுமே அதை மாற்றிவிட்டிருக்கிறான்.
கொடுமை என்னவென்றால், அந்த கிரிமினல் மின்னஞ்சல் அனுப்பிய இரண்டாயிரம் பேரில் என் மகன் கார்த்திக்கும் ஒருவன். அப்போது கப்பலில் பயிற்சியில் இருந்திருக்கிறான். பயிற்சி முடிந்ததும் தான் சம்பளம். இப்படிப்பட்ட நிலையில் தன் தந்தைக்கு இப்படி ஒரு நிலையா என்று பதறிப்போய், கப்பல் கேப்டனிடம் ‘என் தந்தையை காப்பாற்ற ஆயிரம் டாலர் உடனடியாக தேவை. என் இரண்டு வருட சம்பளத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறான்.
நல்லவேளையாக இந்த மோசடி என்னுடைய கவனத்துக்கு வந்ததுமே என்னுடைய இணையத்தளத்தில் அறிவிப்பு கொடுத்தேன். என்னுடைய வாசகர் ஒருவர் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்துக்கு புகார் செய்து, வாசகர்களும் அன்பர்களும் அனுப்பிய பணம் அந்த மோசடிப்பேர்வழி கைக்கு சென்று சேர்வதை தடுத்துவிட்டார்.
ஒருவரின் மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்து, அவரோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு அவர் போலவே மின்னஞ்சல் செய்து, இரண்டாயிரம் டாலர் கொடு.. மூன்றாயிரம் டாலர் கொடு என்று மிரட்டுவது எவ்வளவு பெரிய கிரைம்?
தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ட் பார்த்திருக்கிறேன். அதுபோல் நிஜ வாழ்விலும் நடக்கும் என்று என்னுடைய எளிய மனதுக்கு இப்போதுதான் புரிகிறது. என்னுடைய வேஷத்தில் ஒரு வில்லன் சாரு! இனிமேல் பாஸ்வேர்டை தினசரியும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.”
இவ்வாறாக எழுதியிருக்கிறார். என்ன மோசடி நடந்திருக்கும் என்று இப்போது உங்களுக்கே புரிந்திருக்குமே? சாருநிவேதிதாவின் பெயரைப் பயன்படுத்தி, அவர் போலவே மின்னஞ்சல் செய்து, அவரோடு தொடர்பில் இருந்தவர்களிடம் பணம் பிடுங்கி ஏமாற்ற முயற்சித்திருக்கிறான் இந்த சைபர் கிரிமினல்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் அல்-நசீர்-ஜக்கரியா மும்பை சைபர் க்ரைம் பிரிவைத் தொடர்பு கொண்டு ஒரு புகார் அளித்தார். அப்புகாரில் “என் மின்னஞ்சலை தவறாகப் பயன்படுத்தி 1,800 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய்) பணத்தை என் உறவினர்களிடம் யாரோ மோசடி செய்ய முயற்சிக்கிறார்கள்” என்று புகார் கொடுத்தார். இதே காலக்கட்டத்தில் இதே மாதிரியான பல்வேறு புகார்களும் வந்து சேர சைபர் கிரைம் போலிசார் திணறித்தான் போனார்கள்.
விசாரித்துப் பார்த்ததில் அந்த மோசடி மெயில் அனுப்பியவன், பணத்தை லண்டனில் இருக்கும் வீடு ஒன்றின் முகவரிக்கு அனுப்புமாறு கோரியிருக்கிறான். போலிசார் மேற்கொண்டு விசாரணையை நீட்டித்தபோது, சம்பந்தப்பட்ட ஃப்ராடு, அந்த லண்டன் வீட்டை காலிசெய்துக் கொண்டு ஓடிப்போனது தெரியவந்தது. அதாவது மோசடியில் யாராவது ஏமாந்து லம்பாக பணத்தை கொடுத்ததுமே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை காலிசெய்துவிட்டு ஓடிவிடுவது இவர்களின் வழக்கம்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பணம் அனுப்பவேண்டுமானால், பணத்தை பெறுபவரின் வங்கி கணக்கு எண்ணும், ஏன் பணம் கைமாறுகிறது என்பதற்கான காரணமும் வழங்கப்படவேண்டும். நேரடியாக ஒரு முகவரிக்கு பணத்தை அனுப்பிவிட முடியாது. ஆனால் வெளிநாடுகளில் இதுபோன்ற நிர்ப்பந்தம் இல்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பணத்தை கைமாற்ற கட்டுப்பாடுகள் இல்லாத எளியமுறை இருக்கிறது. வங்கிக்கணக்கு எண் இல்லாமலேயே ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு பணத்தை அனுப்ப இயலும். எனவேதான் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை குறிவைத்து இந்த மோசடி மெயில் சமாச்சாரம் தொடர்ந்து நடக்கிறது.
சைபர் கிரைம் போலிஸார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜக்காரியாவின் மின்னஞ்சல் முகவரி, மேலதிக மோசடிகள் நடக்காத வண்ணம் உடனடியாக முடக்கப்பட்டது.
சாருநிவேதிதா, ஜக்காரியா போன்ற பலரின் மெயில் ஐடியும் இதுபோல களவாடப்பட்டு தினம் தினம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது. பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் பெரும்பாலும் ஏனோ புகார் செய்வதில்லை. யார் பெயரை சொல்லி மோசடி செய்கிறார்களோ, அவர் இந்தியாவில் இருப்பார். பணத்தை அனுப்பி வைத்தவர் ஏதாவது வெளிநாட்டில் இருப்பார். இதையெல்லாம் விளக்கி ‘எப்படி ஏமாந்தோம்?’ என்று புகார் அளிக்க பலருக்கும் வெட்கமாக இருப்பது இம்மோசடி தொடர்ந்து நடைபெற ஏதுவாக இருக்கிறது.
எப்படி உங்கள் மின்னஞ்சலின் பாஸ்வேர்டு அவர்களுக்கு கிடைக்கிறது?
மின்னஞ்சலில் பாஸ்வேர்டை திருட கேப்மாறிகள் புதுப்புது தந்திரங்களை கையாளுகிறார்கள். உதாரணத்துக்கு ஒரு அரதப்பழசான முறையைப் பார்க்கலாம்.
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் எனில், கூகிள் மெயில் நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு ஒரு மெயில் வரும். ”உங்கள் மெயில் அக்கவுண்டில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் குளறுபடியாகியிருக்கிறது. எனவே உங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டை கீழ்க்கண்ட பொட்டியில் டைப் செய்யவும். எல்லாம் சரியாகிவிடும்” என்றொரு மெயில் வந்திருக்கும்.
“அய்யய்யோ, மெயில்லே ஏதோ ப்ராப்ளமாமே?” என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக பாஸ்வேர்டை டைப்புவீர்கள். முடிஞ்சது ஜோலி. உங்களுக்கு வந்தது மோசடி மெயில்.
கொஞ்சநாட்கள் கழித்து ஐரோப்பாவில் இருக்கும் உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ ‘உங்களிடம்’ இருந்து கீழ்க்கண்டவாறு ஒரு மெயில் போகும், நீங்கள் அறியாமலேயே. “நான் லண்டனில் நடுரோட்டில் நிற்கிறேன். கையில் அஞ்சு பைசா கூட இல்லை. பிச்சை எடுக்காததுதான் பாக்கி. உடனடியா இந்த அட்ரசுக்கு துட்டு அனுப்புங்க”.
பாஸ்வேர்டு கேட்டது கூகிள் நிறுவனம் தானே? எப்படி கொடுக்காமல் இருப்பது என்று கேட்பீர்கள். கூகிள் உள்ளிட்ட மின்னஞ்சல் சேவை வழங்கும் எந்த நிறுவனமும் தனது பயனாளர்களிடம் எக்காலத்திலும் பாஸ்வேர்ட் கேட்பதில்லை. பாஸ்வேர்டை டைப் செய்யச்சொல்லி கோரிவரும் எந்த ஒரு மெயிலுமே மோசடி எண்ணத்தோடு அனுப்பப்பட்ட மெயில் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நகையை திருடுவார்கள், பணத்தைத் திருடுவார்கள், ஏன் சொம்பைக் கூட திருடுவார்கள். போயும், போயும் ஈமெயிலையா திருடுவார்கள் என்று கேட்டால், ஆம். திருடுவார்கள். திருடப்படும் ஈமெயில் ‘வெயிட்டான’ நபருடையது என்றால், மற்ற திருட்டுகளில் கிடைக்கும் லாபத்தைவிட அதிக லாபத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே அசால்ட்டாக அடித்துவிட முடியும். கன்னம் வைத்து, சுவரேறிக் குதித்து, போலிஸ் துரத்த மூச்சிறைக்க ஓடி... இதெல்லாம் தேவையே இல்லாமல் மவுஸை சொடுக்கி, லட்சங்களை ஆட்டை போட முடியும்.
சில பேர் தங்கள் மெயில் பாக்ஸில் ஏடிஎம், கிரெடிட் கார்டு போன்றவற்றின் எண்களையும், பாஸ்வேர்டுகளையும் இணையத்தில் பயன்படுத்தும் வசதிக்காக சேமித்து வைத்திருப்பார்கள். இதுபோன்றவர்களின் ஈமெயில் திருடப்பட்டால் போயே போச்சு. ஒட்டுமொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்.
உங்கள் ஈமெயில் பாஸ்வேர்டை திருடுபவன் உடனடியாக வெளிப்பட்டு விடமாட்டான். உங்கள் மின்னஞ்சல் நடவடிக்கைகளை வெகுகாலமாக நைசாக நோட்டமிட்டு, உங்களுக்கு யார் நெருக்கமானவர்கள், யாரெல்லாம் பண உதவி செய்யக்கூடியவர்கள் என்றெல்லாம் உங்களுக்கு தெரியாமலேயே உளவுப்பார்த்துக் கொண்டிருப்பான். தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான். இப்போதெல்லாம் பல பிஸினஸ் டீலிங்கே மின்னஞ்சலில் நடந்துவருகிறது என்பதால் ஈமெயில் எவ்வளவு முக்கியமானது என்பதை அதன் பயனாளிகள் உணரவேண்டும்.
உங்களுக்கு தெரியாத அநாமதேயம் யாராவது உங்களைப் பற்றிய பர்சனல் விவரங்களையோ, பாஸ்வேர்டையோ அல்லது உங்கள் வங்கி தொடர்பான தகவல்களையோ கேட்டால் உடனடியாக உள்ளூர் இணைய குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அந்த மின்னஞ்சலை பார்வேர்டு செய்யுங்கள்.
ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு, அந்தத் தகவல்களை கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால் அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும். இது கிட்டத்தட்ட ஆள்மாறாட்டம் போன்றது. வேறொருவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவது.
இணைய வழி பொருள் வாங்கும்போது, நீங்கள் உங்களது வங்கி, வங்கி கணக்கு எண் அல்லது உங்களது தாயாரின் முதல் பெயர் ஆகியவற்றை கொடுக்க வேண்டியதில்லை. அப்படி நீங்கள் கோரப்பட்டால், எச்சரிக்கையாக இருங்கள். அந்த இணையத்தளம் மோசடியான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
முன்பின் தெரியாத மின்னஞ்சல்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் கிளிக் செய்வதை தவிருங்கள், நீங்கள் தவறுதலாக கிளிக் செய்து விட்டால், அதில் கேட்கப்படும் எந்த தகவல்களையும் நிரப்பாதீர்கள்.
உங்களது கடவுச்சொற்களையோ அல்லது முகவரி, வங்கி விவரம் மற்றும் கடன் அட்டை விவரம் போன்ற சொந்த விவரங்களையோ எப்போதும் அரட்டை அறையில் யாருக்கும் கொடுக்காதீர்கள்.
இதெல்லாம் பொதுவான எச்சரிக்கைகள். நீங்கள் ஏமாறப்படாமல் இருக்க நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.
உங்களது தனிநபர் தகவல்கள் தவறாக உபயோகப் படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விபடும் பட்சத்தில், சோம்பேறித்தனப் படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள். இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி, உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்.
(நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்)