11 செப்டம்பர், 2009

கடவுள்!


ரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

“வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?”

“ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான்.

கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!”

”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!”

“ம்.. நீங்க ஒரு நல்ல கேண்டிடேட் தான். உங்களை கேள்வியெல்லாம் கேட்டு துன்புறுத்த விரும்பலை!”

பலமுறை கேட்ட வாசகம். என்ன சொல்ல வருகிறார் என்று சரவணனுக்கு புரிந்துவிட்டது.

“சாரி சரவணன். ஆஸ் யூஸ்வல் இதுவும் ஒரு கண்துடைப்பு இண்டர்வ்யூ தான். ஏற்கனவே ரெகமண்டேஷன்லே வந்தவங்களுக்குள்ளேயே போட்டி நிறைய இருக்கு!” அதிகாரியின் கண்களில் தென்பட்டது நேர்மையா? பரிதாபமா? என்று சரவணனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

கோப்பினை வாங்கியவன் எதுவும் சொல்லாமல் புறப்பட்டான். இன்று காலை கையில் இருந்தது ஐம்பது ரூபாய் தான். இண்டர்வியூவுக்கு தாமதமாகி விட்டது என்று பஸ்ஸில் வராமல் ஆட்டோவில் வந்திருந்தான். பாக்கி பத்து ரூபாய் தான் பாக்கெட்டில் இருந்தது. ஊரில் இருந்து மணியார்டர் வந்திருந்தால் இன்று இரவு தண்ணி அடிக்க வேண்டும்.

களைப்பு தெரியக்கூடாது என்பதற்காக ஒரு வில்ஸ் ஃபில்டர் வாங்கி நெருப்பை பற்ற வைத்தான். இரண்டு சாந்தி பாக்கு வாங்கி, ஒன்றை பிரித்து வாயில் கொட்டி நடக்கத் தொடங்கினான். நந்தனத்தில் இருந்து திருவல்லிக்கேணி மேன்ஷன் வரை பாதயாத்திரை.

நல்லவேளையாக அப்பா மணியார்டர் அனுப்பி இருந்தார். ஆயிரத்து எட்டுநூறு ரூபாய். மேன்ஷனுக்கு அறுநூறு ரூபாய் காட்டியவன் மீதி ஆயிரத்து இருநூறு ரூபாயை பர்சில் வைத்தான். இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்கு பிரச்சினையில்லை. அறை சாவியை வாங்கிக் கொண்டான். அறை எண் 786.

மது மட்டும் இல்லையென்றால் எப்போதோ அவன் மனநல காப்பகத்துக்கு சென்றிருப்பான். அன்று இரவு அவனுக்கு மதுவே துணை. ஒரு ஹாஃப் வாங்கியவன், அதில் பாதியை தண்ணீர் கூட கலக்காமல் ராவாகவே அடித்தான். லேட் பிக்கப்பாக போதை ஏறியது.

போதை ஏறியவுடன் வழக்கம்போல மொட்டை மாடிக்கு வந்தான். வானத்தைப் பார்த்தான். “டேய் கடவுளே! என்னை ஏண்டா படைச்சே?”

வானம் மவுனத்தையே பதிலாக தந்தது.

“த்தா... பாடு.. மரத்தை வெச்சவன் தண்ணிய ஊத்துவான்னு சொல்றது ரீலாடா? தண்ணி ஊத்துலன்னா கூட பராயில்ல.. ஆசிட் ஊத்துறியேடா கேணைப்பு....”

சரவணனுக்கு கடவுள் ரொம்ப நெருக்கமானவர். போதை ஏறியவுடன் தெரிந்த கெட்டவார்த்தைகளை எல்லாம் சொல்லி திட்டுவது வழக்கம். கடவுளை தவிர வேறு யாரையும் இதுவரை சரவணன் கெட்டவார்த்தைகளில் திட்டியதில்லை. இவனது இந்த வழக்கத்தை கடவுள் ஐந்தாண்டுகளாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்? காலையில் கண்டிப்பாக தெருமுனை பிள்ளையார் கோயிலுக்கு வந்துவிடுவான் என்று அவருக்கும் தெரியும். அப்படியே லூஸ்ல விட்டுவிடுவார்.


பாலைவனத்தில் தண்ணீருக்காக அலைபவன், தூரத்தில் ஏதாவது சோலைவனம் தெரிந்தால் குஷியாகிவிட மாட்டானா? சரவணனுக்கு அதுபோல தெரிந்தவள் சந்தியா. வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் இருபத்தாறு வயது சரவணனுக்கு அந்த வயதுக்கேயுரிய இளமை எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்.

வேலை வெட்டிக்கு செல்பவனெல்லாம் சரியாக நேரத்துக்கு செல்வானோ இல்லையோ? தினமும் காலை எட்டரை மணிக்கு பேருந்து நிலையத்தில் சரவணனை டிப்டாப்பாக காணலாம். காரணம் சந்தியா.

அவளுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். கண்கள் எப்போதும் பட்டாம்பூச்சியின் இறக்கையை போல படபடத்துக் கொண்டிருக்கும். சிகப்பு நிறம், வாளிப்பான தோற்றம். டிசைனர் புடவைகளில் தினுசு, தினுசாக கட்டிக்கொண்டு வருவாள். எங்கேயோ பணியாற்றுகிறாள் போலிருக்கிறது. அவள் பெயர் சந்தியா என்பதைத் தவிர்த்து சரவணனுக்கு வேறு விவரங்கள் தெரியாது. ஆறுமாதமாக காதலிக்கிறான்.

அன்று ஏனோ அவளிடம் தன் உள்ளத்தை திறந்துகாட்ட நினைத்தான் சரவணன்.

“ம்ம்ம்... மிஸ்...”

ஏறிட்டு நோக்கினாள். ஸ்டைலாக வாயைத் திறக்காமலேயே புருவங்களை தூக்கி என்னவென்று வினவினாள்.

“எம் பேரு சரவணன்... ஆறு மாசமா..”

“ஆறு மாசமா..?”

“வந்து... உங்களை லவ் பண்ணுறேன்!”

சுற்றும் முற்றும் பார்த்தாள். பஸ் ஸ்டேண்டிலிருந்தவர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். இவர்களை கவனிக்கும் ஆர்வம் யாருக்குமில்லை.

தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்ற விஷயம் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், காதலிக்கும் பையன் டொக்காக இருப்பது அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

“ராஸ்கல்.. உன் மூஞ்சிய கண்ணாடியிலே பார்த்திருக்கியா?”

“ஃபேஸ் கொஞ்சம் டம்மியா இருந்தாலும், என்னோட ஃஹார்ட் ஃபுல்லா நீங்களும், ரொமான்ஸும் தான் இருக்கு!”

“கொண்டு போய் குப்பைத் தொட்டியிலே போடு. ஒரு குரங்கை லவ் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் பைத்தியமில்லே!” இவ்வளவு கடுமையாக தன் காதலை மறுப்பாள் என்று சரவணன் எதிர்பார்க்கவில்லை. கண்களில் நீர் முட்ட ஆரம்பித்தது. அழுதுவிட்டால் அசிங்கமாக நினைத்துவிடுவாளோ என்று அவசர அவசரமாக கர்ச்சீப் எடுத்து துடைத்தான்.

அன்றைய இரவும் அவனுக்கு மது தான் துணை. போதை ஏறியவுடன் மொட்டை மாடிக்கு சென்றான்.

“டேய் முட்டாக்...... கடவுளே! என்னை ஏண்டா சுமாரா படைச்சே?” வானத்தைப் பார்த்து கடவுளோடு வழக்கமாகப் பேசினான். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை. சுமார் அரைமணி நேரமாவது கடவுளை திட்டி இருப்பான். திட்டி முடித்தவன் அழுதபடியே தூங்கிப் போனான்.


ரண்டு இரவுகளாக வயிற்றில் ஈரத்துணியை போட்டு உறங்கவேண்டிய நிலை சரவணனுக்கு. ரூம் வாடகை தரவேண்டும், இன்னும் இரண்டு நாட்களில் செட்டில் செய்யாவிட்டால் பொட்டி, படுக்கையை தூக்கி எறிந்துவிடுவேன் என்று மேன்ஷன் மேனேஜர் மிரட்டிவிட்டு போனார். மேன்ஷனுக்கு கீழிருந்த பொட்டிக்கடைக்காரனுக்கு தரவேண்டிய பாக்கி எகிறிக்கொண்டிருந்தது, பழைய பாக்கி இல்லாமல் சிகரெட் தரமுடியாது என்று கைவிரித்து விட்டான்.

அப்பாவிடமிருந்து வரவேண்டிய மணியார்டர் ஏன் தாமதமாகிறது என்று அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஊரில் போன் என்ற ஒரு வஸ்துவே இல்லை. எனவே போன் செய்து அப்பாவிடம் பேசமுடியாது. அவராக டவுனுக்கு எப்போதாவது வந்தால் மேன்ஷனுக்கு போன் செய்வார். அந்த நேரத்தில் அறையில் இருந்தால் அவரிடம் பேசமுடியும்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அப்பாவின் மணியார்டரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதோ என்ற விரக்தி ஏற்பட்டது. பணம் சம்பாதிக்க ஒரு வேலை இல்லை, காதலிக்க ஒரு பெண் இல்லை. என்ன வாழ்க்கை இது?

உச்சிவெயிலில் மொட்டைமாடிக்கு சென்றான். எப்போதும் போதை ஏறினால் (போதை ஏத்திக்க ஏது காசு?) மட்டுமே கடவுளை திட்டுபவன் அன்று ஆத்திரத்தில் அறிவிழந்து திட்ட ஆரம்பித்தான். “அடேய் பொறம்போக்கூ கடவுளே!” உச்சஸ்தாயியில் அவன் கத்தியது அவனுக்கே எதிரொலித்தது. நூற்றிபத்தை சென்னை வெயில் தொட்டு விட்டதால் அக்கம் பக்கத்தில் ஆளரவம் இல்லை. அவனவன் ஏசி ரூமில் அடங்கிக்கிடப்பான் போலிருக்கிறது. வழக்கம்போல வானம் மவுனத்தையே பதிலாக தந்து கொண்டிருந்தது. எதிர்தரப்பு மவுனம் தந்த தெம்பிலோ என்னவோ அன்று அரைமணி நேரம் காட்டுக்கத்தலாக கடவுளை திட்டினான் சரவணன். அவன் திட்டுவதை யாராவது பார்த்திருந்தால் உடனடியாக பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போன் போட்டிருப்பார்கள். நல்லவேளையாக யாரும் வழக்கம்போல பார்க்கவில்லை.


சூடேறிப் போன மண்டையுடன் அறைக்கு திரும்பினான் சரவணன். இன்றிரவுக்குள் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைக்க ஆரம்பித்தான். பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்தான். அறையின் மத்தியில் சப்பணமிட்டு ஒருவர் அமர்ந்திருந்தார். வெள்ளை உடையோடு பார்க்க பிரகாஷ்ராஜ் மாதிரி இருந்தார். பூட்டப்பட்ட அறைக்குள் அவர் எப்படி வந்திருக்க முடியும்? ஒருவேளை ஜன்னல் வழியாக வந்திருப்பாரோ? ஜன்னலும் சாத்தப்பட்டிருந்தது!

“யோவ் யாருய்யா நீயி?” கொஞ்சம் பயத்தோடே அறைக்குள் பாதியாக நுழைந்து, தப்பி ஓடுவதற்கு வாகாக காலை தயார்செய்துகொண்டு கேட்டான்.

“நானா? கடவுள்!”

”கடவுளாவது, மசுராவது.. எப்படிய்யா ரூமுக்குள்ளே வந்தே?”

“நான் படைத்த உலகில் நான் எங்கு வேண்டுமானாலும் பிரவேசிப்பேன்!”

நட்டு கழண்ட கேசு போலிருக்கு என்று மனதுக்குள் நினைத்தவாறே கொஞ்சம் பயம் தெளிந்து அறைக்குள் பிரவேசித்தான்.

“நீ கடவுள்னு எப்படி நம்புறது?”

ஒரு சொடுக்கு போட்ட கடவுள் பழுப்பேறியிருந்த சுவற்றை காட்டினார். சுவற்றில் டிவி போன்ற ஒரு திரை தோன்றியது. சரவணனுடைய அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அம்மா ஏதோ ஒரு கஞ்சியை அவருக்கு புகட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“உன் அப்பாவுக்கு மஞ்சக்காமாலை. அதனாலே தான் போஸ்ட் ஆபிஸுக்கு போய் உனக்கு மணியார்டர் கூட பண்ணமுடியாம படுத்துக் கிடக்கார்!”

அந்த வெள்ளுடை மனிதர் கடவுள் தான் என்று சரவணன் நம்பிவிட்டான். கடவுள் இருக்கிறார் என்று நிரூபிப்பது எவ்வளவு சுலபம்!

“நீங்க நெஜமாலுமே கடவுளா இருந்தா.. சாரி.. மன்னிச்சுக்கங்க.. உங்களை கண்டபடி திட்டியிருக்கேன்!”

“என்னை திட்டாத ஜீவராசிகள் எதுவும் உலகத்தில் இல்லை! மன்னிப்பதாக இருந்தால் மன்னிப்பைத் தவிர வேறெதையும் என்னால் செய்யமுடியாது. மன்னித்துக்கொண்டே.... இருக்கவேண்டும்!”

சடாரென காலில் விழுந்து வணங்கினான்.

“எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது சரவணா. உன்னைப் படைத்தவன் கேட்கிறேன். உனக்கு என்ன வேண்டும்? மூன்று கோரிக்கை வைக்கலாம். மூன்றையுமே நிறைவேற்றுவேன்”

திடீரென கடவுள் என்ன வேண்டும் என்று கேட்டதால் குழம்பிப் போனவன் என்ன கேட்பது என்று புரியாமல் முழித்தான். பொட்டிக்கடைக்காரன் பாக்கி, ரூம் வாடகை போன்றவை உடனடியாக நினைவுக்கு வந்தது.

”ம்ம்ம்... கடவுளே! என் கையில் இருக்கும் பையில் எப்போதும் பணம் இருக்கவேண்டும்!”

“சரி... அப்படியே ஆகட்டும்!”

”அடுத்ததா... ம்ம்ம்ம்...” யோசித்தவன், ஐந்து ஆண்டுகளாக வேலை இல்லாமல் அவமானப்பட்டு வருவதை யோசித்தான். தன் கவுரவத்தை மீட்க தனக்கொரு நல்ல வேலை வேண்டுமென நினைத்தான். “ஒரு கவுரவமான வேலை!”

“அதுவும் அப்படியே ஆகட்டும்!”

வேலை, பணம் இவை இரண்டுமே போதும், தான் விரும்பியது எல்லாவற்றையும் பெறலாம் என்றாலும் மூன்றாவதாகவும் ஏதாவது தருவதாக கடவுள் சொல்கிறாரே? அந்த வாய்ப்பை ஏன் வீணாக்குவது என்று யோசித்தான். மூன்றாவதாக என்ன கேட்கலாம்? சந்தியா... ச்சேச்சே... அது ஒரு மொக்கை ஃபிகர். கடவுள் நினைத்தால் சூப்பர் ஃபிகர் ஒன்றை தனக்கு தரமுடியும்.. ஒன்றா? வேண்டாம் ரெண்டு கேட்கலாமே? வேண்டாம்.. வேண்டாம்... நிறைய கேட்கலாம். ஃபிகர்களை தள்ளிக்கொண்டு போக ஒரு கார் வேணுமே? அதை கேட்டால் அது நான்காவது கோரிக்கையாகிவிடும். கடவுள் தரமாட்டார். மூன்றாவதையும், நான்காவதையும் ஒன்று சேர்த்து ஒரே கோரிக்கையாக வைத்து கடவுளை ஏமாற்ற முடிவுசெய்தான்.

“ம்ம்ம்... நான் எப்பவும் பெரிய வண்டி ஒண்ணுத்துலே போய்க்கிட்டே இருக்கணும்.. என்னை சுத்தி பொண்ணுங்களா இருக்கணும்!”

சரவணனின் புத்திசாலித்தனத்தை வியந்த கடவுள், “அப்படியே ஆகட்டும். நாளை முதல் நீ கேட்டதெல்லாம் உனக்கு கிடைக்கும்!” கடவுள் கடைசியாக சொன்னது அசரீரி போல கேட்டது. அவர் அமர்ந்திருந்த இடம் ஒளிவெள்ளமாக இருக்க, கடவுளைக் காணவில்லை. நடப்பது கனவா? நனவா? என்று புரியவில்லை சரவணனுக்கு. தன் தலையில் தானே ஒரு கொட்டு வைத்து பார்த்துக் கொண்டான், வலித்தது. 'நாளை'க்காக காத்திருக்க ஆரம்பித்தான் சரவணன்.


டிப்பாக்கம் டூ பாரிமுனை வண்டி அது. 51S லேடீஸ் ஸ்பெஷல். பெரிய வண்டி. நாற்பது பேர் உட்காரலாம். நூறு பேருக்கு மேல் நிற்கலாம்.

“டிக்கெட்.. டிக்கெட்..” கண்டக்டர் சரவணனுடைய குரல், போன மாதம் தான் கண்டக்டர் வேலைக்கு சேர்ந்திருந்தான்.

“யோவ் யாரைப் பார்த்து டிக்கெட்டு இன்றே?” பாரிமுனையில் ஏறிய கருவாடை கூடைக்காரி சரவணனை முறைத்தாள்.

“ஆமா. இது ஒரு சூப்பர் டிக்கெட்டு, இதைப்பார்த்து டிக்கெட்டுன்னு சொல்றாங்க. மூஞ்சியப்பாரு. டிக்கெட் எடுத்தியா? உன் கூடைக்கு லக்கேஜ் போட்டியா?” வெயில் தந்த வெறுப்பில் கடுப்பாக குரைத்தான் சரவணன்.

கருவாட்டுக்காரி இருபது ரூபாய் நோட்டை நீட்டினாள். அவளுடைய டிக்கெட் மற்றும் லக்கேஜ் டிக்கெட்டை கிழித்து அவளிடம் தந்தவன், மீதி சில்லறைக்காக பையினுள் கைவிட்டான். பை நிறையப் பணம்.

ஹிந்து நிறுத்தத்துக்கு வந்த பேருந்துக்குள் முட்டி மோதிக்கொண்டு ஏறினார்கள் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி மாணவிகள். அதுவரை நடந்துகொண்டே டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த சரவணனுக்கு சிரமமாகி போனது. கால்வைக்க கூட இடமில்லை. சரவணனை சுற்றிப் பெண்கள்.

பிரகாஷ்ராஜ் ஜாடையிலிருக்கும் கடவுள் வானத்திலிருந்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.

9 செப்டம்பர், 2009

படைப்பும், படைப்பாளியும்!

ஒரு படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சங்கடம் தன் படைப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலையே. யாரும், எதையும், யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியதில்லை. தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.

ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?

எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.

ஒரு நெருங்கிய தோழருக்கு சொல்ல விரும்பிய அட்வைஸ். நேரில் சொல்ல தயக்கமாக இருப்பதால் பதிவு மூலம் சொல்கிறேன்.

8 செப்டம்பர், 2009

“புதுவிசை” வாசகர் சந்திப்பு!


”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் வெளியாகியுள்ளதையொட்டி “புதுவிசை” வாசகர் சந்திப்பு நிகழவிருக்கிறது.

இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், (எல்.எல்.ஏ கட்டிடம்), அண்ணா சாலை.
நாள் : 9 செப்டம்பர், 2009, புதன்கிழமை

பங்கேற்பு :

எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்வாளர் வ.கீதா
முனைவர் ஆம்ஸ்ட்ராங்
ஜி.செல்வா, இந்திய மாணவர் சங்கம்.
முனைவர் செ.ரவீந்திரன்
சுதிர் செந்தில், ’உயிர் எழுத்து’ ஆசிரியர்
கவிஞர் குட்டிரேவதி
ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

“புதுவிசை” ஆசிரியர் குழுவிலிருந்து...

சம்பு
எஸ்.காமராஜ்
ந. பெரியசாமி
ஆதவன் தீட்சண்யா

வரவேற்பு
க.பிரகதீஸ்வரன்

தலைமை
பிரளயன்

நன்றியுரை
வா.அசோக் சிங்

அன்புடன் அழைக்கும்...
சென்னை கலைக்குழு - பூபாளம் புத்தகப் பண்ணை


அனைவரும் வருக!

7 செப்டம்பர், 2009

கர்ணன்!


சினிமா, சேட்டிலைட் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்களின் வீச்சு நாடகக்கலையின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கும் சூழல் இன்று நிலவுகிறது. நாடக அரங்குகள் பெரும்பாலும் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் மீண்டும் நாடகக்கலையை மறுமலர்ச்சி அடையச்செய்ய பரவலான முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஒரு முயற்சிதான் அடவு அமைப்பு வழங்கும் ‘கர்ணன்’ ஒருநபர் நாடகம்.

வெகுஜன சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவ்வப்போது கலைசினிமாவுக்காக கைக்காசை செலவழிக்கும் நடிகர் நாசர் கர்ணனாக நடிக்கிறார். ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் புனிதமாக்கப்பட்டிருக்கும் மகாபாரதத்தை இன்னொரு பரிணாமத்தில் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறார் இந்த நவீன கர்ணன். தொடக்கத்தில் ஒலிக்கப்படும் தற்கால போர் ஓலம், மகாபாரத போர் ஒலியோடு இணைவது அவல அழகியல். போர்க்களத்தில் துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் மனித உறுப்புகளை கண்டு மனம் வெறுத்து கர்ணன் பேச ஆரம்பிக்கிறார். மனிதநேயத்தின் அவசியம் அவருடைய பேச்சின் அடிநாதம்.

“தந்திரத்தில் சிறந்தவர் சகுனி என்கிறார்களே? அப்படியென்றால் கண்ணனை என்ன சொல்ல?” என்று கேள்வி எழுப்புகிறார். துரியோதனனுக்கு நண்பனாக விதிக்கப்பட்டது தன்னுடைய விதி என்று நொந்துப்போகிறார். பாண்டவர்களின் மேன்மையையும், கவுரவர்களின் நயவசஞ்சகத்தையும் எடுத்துக்காட்ட பகடைக்காய் நான் தானா? என்று வியாசரையே சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார். பீஷ்மரில் தொடங்கி, தன் தாய் குந்திதேவி வரைக்கும் யாரையும் விடவில்லை இந்த கர்ணன். தன்னைப் போலவே ஒடுக்கப்பட்டவனாக, சக தோழனாக இவர் கருதுவது அரவானை மட்டுமே.

சுமார் நாற்பத்தைந்து நிமிடம் தொடர்ச்சியாக மிக நீண்ட வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு நல்ல உணர்ச்சி பாவத்தில், தெளிவாக உச்சரிக்கிறார் நாசர். அவருக்கு நடிக்க வருகிறது என்று சொல்லுவது, தேன் தித்திக்கிறது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. நல்ல நாடகக் கலைஞன் மேடையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தனது நடிப்புக்குப் பயன்படுத்திக் கொள்வான். நாசர் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நொடியும் ஓயாமல் மேடையில் இங்கும், அங்கும் சுழன்றுக்கொண்டே இருக்கிறார்.

வசனங்களுக்கு ஏற்ப மாறும் ஒளி வண்ணங்களை மாற்றி மாற்றி வழங்குவது நல்ல சிந்தனை. நாடகங்களில் நடிப்பவர்கள் கடைசி வரிசை பார்வையாளனுக்கு கேட்கவேண்டுமே என்ற அக்கறையில் உரக்க பேசுவார்கள். இதனால் அவர்களது நடிப்பு சற்று மிகையாகத் தெரியும். தொழில்நுட்ப வளர்ச்சி கார்ட்லெஸ் மைக் மூலமாக இக்குறையை நிவர்த்தி செய்கிறது. நாசர் நின்று நிதானமாக, பதட்டப்படாமல் வசனங்களை பேச வகை செய்கிறது. கர்ணனின் தோற்றமே பார்வையாளனுக்கு பிரதானமாக தெரியும் வகையில் மேடைப்பின்னணி எளிமையாக வசீகரிக்கிறது. மொத்தத்தில் இன்றைய தொழில்நுட்பத்தை மிகச்சரியாக மேடைநாடகத்துக்கு பொருத்தியிருக்கிறார்கள். இந்நாடகத்தை தொலைக்காட்சியில் கண்டாலோ, வானொலியில் கேட்டாலோ கூட, மேடையில் பார்க்கும் அனுபவமும், பரவசமும் கிஞ்சித்தும் கிடைக்காது.

கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கும் இந்நாடகத்தின் முதல் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடந்தது. வித்தியாசமான, புதிய முயற்சியாக இருந்தாலும் அரங்கு நிறைந்தது ஆச்சரியமான மகிழ்ச்சி. இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் மீண்டும் மேடை நாடகம் மக்களிடையே வெற்றி வலம் வரக்கூடும்.

5 செப்டம்பர், 2009

உதிரத்துணி!

”இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்!” என்ற ஒற்றைவரியினை தவிர்த்து, ஈழப்பிரச்சினை குறித்த போதுமான அறிவும், தீவிரமான புரிதலும் இல்லாமலேயே முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக இணையமும், புலம்பெயர் தமிழர்கள் எழுதும் சில புத்தகங்களும் ஓரளவுக்கு நடந்தவற்றையும், தற்போதைய நடப்பையும் தெளிவாக்கி வருகின்றன.

இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன். பலாலி வங்கிக்கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

புஷ்பராஜாவின் சகோதரி புஷ்பராணியை, ஷோபாசக்தி எடுத்திருக்கும் நேர்காணல் இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.

“விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.

என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.”


ஏராளமான அதிர்வுகளையும், கேள்விப்பட்டிராத பல தகவல்களையும் ஒருங்கே கொண்டது அந்நேர்காணல். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்!