16 அக்டோபர், 2009

தீபாவளி


தேர்தல் அரசியல் தலைவர்களில், கலைஞர் மட்டும் இன்னும் கொள்கை பிடிப்பாய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காமலிருக்க, கலைஞர் டீவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ̀சன்'னுடன் போட்டியிடும் காலத்தின் கட்டாயத்தில், தீபாவளி பற்றிய சில கருத்துக்கள்; தீபாவளி பற்றி ஏதோ வகையில் எதிரெண்ணம் கொண்டவர்களை முன்வைத்து.

கிட்டத்தட்ட 15 வருஷங்கள் தீபவளியை கொண்டாடாமலும், விலகியும், பட்டும் படாமலும், தவிர்த்தும் வந்து, கடந்த மூன்று வருடங்களாய் கொண்டாடுகிறேன்; கொண்டாடுவது என்பது புத்தாடை, வெடிகளுடன், ̀சகலை' வீட்டில் கொண்டாட்டங்களில் பங்கேற்பது. மகன் பிறந்த பிறகு தீபாவளியை தவிர்ப்பது வன்முறையாகவும், அராஜகமாகவும் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்க பாதிப்பில், கொள்கை பிடிப்புள்ள ஒரு கூட்டம் தீபாவளி பற்றி எதிர் எண்ணம் கொண்டு, ராவணனை/நரகாசூரனை -என்ற திராவிடன/ ̀சூத்திரனை'- கொன்ற தினமாக கருதி, கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறது. இஸ்லாத்திற்கோ, கிரிஸ்தவத்திற்கோ , முடிந்தால் பௌத்தத்திற்கு மாறுவது இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. (எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று சொல்லவில்லை.) மிக தெளிவாக ̀நாம் வேறு; தீபாவளி நமக்கானதல்ல' என்ற எண்ணம் திடமாக வந்து, கொண்டாடாததன் மனக்குறை இருக்காது; குறிப்பாக குழந்தைகளுக்கு இருக்காது. இந்துவான அடையாளத்தை மாற்று மதத்தில் கரைக்காமல், குழந்தைகளிடம் தீபாவளியை பிடுங்குவது நிரப்ப முடியாத வெற்றிடத்தையும், மனக்குறையையும், தாழ்வு மனப்பான்மையை ஒத்த ஒரு மனநிலையையையுமே ஏற்படுத்தும்.

மேலும் எந்த ஒரு செயலுக்குமான பொருளை நாம் புதிது புதிதாக கற்பிக்க இயலும்; 80களின் (இளைஞ)தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக முந்தய தினம் முட்ட முட்ட தண்ணியடிப்பதே. மூன்று மதத்தவரும் சம அளவில் வாழும் தூத்துக்குடியில் வாழ்ந்த போது, 80களின் தெரு முக்கு க்ரூப்களில், இந்துக்கள் தீபாவளியன்று (எல்லோரும் கலக்க) பார்ட்டி தருவதும், ரம்ஜானில் இஸ்லாமிய இறுப்பினர்களும், கிரிஸ்மஸ் அன்று கிருஸ்தவ நண்பர்கள் தருவதும் ஒரு பண்பாடாய் உருவானது. அந்த தீபாவளி நீர் கொண்டாட்டத்திற்கு நரகசூரனோ, ராவணனோ, ராமனோ, கிரிஷ்ணனோ அருத்தம் தருவதில்லை. ஆகையால், இப்போதைக்கு தீபாவளியை வேறு தினத்திற்கு, வேறு சந்தர்ப்பத்திற்கு மாற்றவோ, இதே அளவு குதுகலத்தை பதிலீடு செய்யவும் இயலாததால், எல்லாரையும் தீபாவளி கொண்டாட அறைகூவுகிறேன். மீறி கொண்டாடாதவர்களை நான் திட்ட மாட்டேன். கொண்டாடுபவர்களை யாரும் திட்டாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரோஸாவசந்த் எழுதியது. அப்போது படிக்கும்போது தெனாவட்டாக சிரித்தேன். இப்போது கிட்டத்தட்ட இப்பதிவு சுட்டிக்காட்டும் மனநிலைக்கு மாறிவிட்டிருப்பதை உணர்கிறேன். :-)

15 அக்டோபர், 2009

டுக்.. டுக்.. டுக்...


சென்னை-28 திரைப்படத்தின் கிரிக்கெட் பட்டாளம் மாதிரி கலாட்டாவாக இருக்கிறது இந்த இளமை டீம். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்பு நடத்திய போட்டி ஒன்றில் வெற்றிவாகை சூடிய தெம்பு ஒவ்வொருவரின் முகத்திலும் பளிச்சிடுகிறது. இப்போது இவர்கள் தான் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் செல்லப் பசங்க. ஆட்டோப் பசங்க.

“மீடியாக்காரங்க போட்டோவுக்கு போஸ் கொடுத்தே டயர்ட் ஆயிட்டேம்பா” என்று டீம்லீடர் அங்கூர் சிணுங்க, மற்றவர்கள் ரவுண்டு கட்டி ஜாலியாக முதுகில் குத்துகிறார்கள்.

பல்கலைக் கழகத்தின் ஆட்டோமொபைல் ஷெட் பளிச்சென்று, பக்காவாக இருக்கிறது. ஷெட்டில் இருப்பவர்கள் யார் கையிலும் க்ரீஸ் கறை பேருக்கு கூட இல்லை. தரை சுத்தமோ சுத்தம். சம்மணமிட்டு அமர்ந்து சோறு சாப்பிடலாம். “ஹலோ இது ஆட்டோமொபைல் ஷெட்டா? இல்லைன்னா கம்ப்யூட்டர் லேபா?” என்று கேட்டால், “ஷெட்டுன்னு எல்லாம் சொல்லக்கூடாது. இதையும் லேப்புன்னு தான் சொல்லணும்” என்று சீரியஸாக அட்வைஸ் செய்கிறார்கள்.

ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் வினோத வடிவ வாகனங்களைப் பார்க்கும்போது ஏதோ சயன்ஸ் பிக்‌ஷன் ஹாலிவுட் படங்களுக்கு மாடல் தயாரிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. விசித்திரமாக காட்சியளித்த குட்டிவிமானம் இருந்த ஒன்றைப் பார்த்து, “இதிலே உட்கார்ந்துட்டு எத்தனை பேர் பறக்கலாம்?” என்றால், “உங்க ஊருலே காரெல்லாம் கூட பறக்குமா?” என்று கலாய்க்கிறார்கள். விரைவில் இவர்கள் கால இயந்திரம் கூட தயாரித்து விடுவார்கள் போலிருக்கிறது.

ஓர் ஓரமாக அமைதியாக கவர்ச்சியான சாக்லேட் வண்ணத்தில் நிற்கிறது அந்த ‘டுக் டுக்..’
“அதென்னங்க பேரு டுக் டுக்?”

“பாரின்லே எல்லாம் ஆட்டோன்னு சொல்ல மாட்டாங்க. ‘டுக் டுக்’னு தான் சொல்வாங்க. ரோட்டுலே ஆட்டோ ஓடுறப்போ வர்ற சவுண்டை கவனிச்சிங்கன்னா தெரியும். ‘டுக்.. டுக்.. டுக்..’னு ஒரு ரிதம் பேக்கிரவுண்ட்லே நைசா ஓடிக்கிட்டே இருக்கும்” நீலக்கலரில் உடை அணிந்திருந்த ஒருவர் அக்கறையாக நமக்கு விவரிக்க, டீமில் இருந்த பரத், “ஏய் யாருய்யா நீயி? உன்னை நம்ம ப்ராஜக்ட்டுலே நான் பார்த்ததே இல்லையே?” என்று மிரட்டுகிறார்.
“சாரி பாஸ். நான் வேற ப்ராஜக்ட்டுலே இருக்கிறேன். சும்மா எட்டிப் பார்த்து ஒரு கருத்து சொல்ல்லாமேன்னு வந்தேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக அந்த கருத்து கந்தசாமி எஸ்கேப் ஆனார்.

“பாய்ஸ் விளையாட்டு போதும். சீரியஸாப் பேசுவோம்” என்று ஒருவழியாக அங்கூர் சீரியஸ் மூடுக்கு வர, குழுவினர் வலிய வரவழைத்துக் கொண்ட சீரியஸ் முகபாவத்தோடு வரிசையாக அட்டென்ஷனில் நிற்கிறார்கள். எட்டு பேர் கொண்ட டீம் இது. அங்கூர், சூரஜ், பரத், புனீத், சத்யா, அபய், மிருத்யுஞ்சய், சாஹித் – இவர்கள் தான் இந்த வெற்றிக் கூட்டணி.

“என்வியூ (Enviu) என்ற நெதர்லாந்து என்.ஜி.ஓ ஒரு போட்டி நடத்துறதா கேள்விப்பட்டோம். அதாவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஆட்டோவை உருவாக்குறது சம்பந்தமான போட்டி அது. போன வருஷம் போட்டியிலே கலந்துக்க விண்ணப்பிச்சோம்.

அப்புறமா ஜூலை மாசம் வேலையை தொடங்கினோம். எங்களோட ப்ளான் என்னன்னா, ஏற்கனவே இருக்கிற இன்ஜினை லேசா மாத்தி சுற்றுச்சூழலுக்கு பங்கம் வராம பாத்துக்கிறதுதான். புதுசா ஏதாவது பண்ணோம்னா ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆட்டோ டிரைவர்கள் உடனடியா மாறமாட்டாங்க. அதுவுமில்லாம நாங்க எடுத்த சர்வேல ஒரு விஷயம் புரிஞ்சது.

ஆட்டோக்காரர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லை. ஆனா மைலேஜ் கிடைச்சுதுன்னா மாற்றத்தை ஏத்துக்க தயாரா இருந்தாங்க. பெட்ரோல் விக்கிற விலைக்கு அவங்களுக்கு மைலேஜ் தான் முக்கியமான பிரச்சினையா படுது. எனவே எங்க பிராஜக்ட் சுற்றுச்சூழலுக்கும் பங்கம் வராம, பெட்ரோலும் கையை கடிக்காத கண்டுபிடிப்பை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சது. ஏற்கனவே இருக்குற செட்டப்புலே மாற்றம் வேணும். ஆனா அது ரொம்ப சுளுவா இருக்கணும்னு முடிவு பண்ணோம்.

ஏற்கனவே இருக்கிற ஆட்டோவோட செட்டப்புலே சின்ன சின்ன மாற்றங்கள் தான் பண்ணினோம். கார்பரேட்டர்லே இருக்கிற ஜெட்டை மாத்தி, டூவீலரோட ஜெட்டை பொருத்தினோம். கார்பரேட்டருக்கு வர்ற பெட்ரோல் அளவை கம்மி பண்ணினோம். இதனாலே மைலேஜ் கிடைக்கும். சைலன்ஸர்லே வெளிவரும் புகையும் கம்மியா இருக்கும். ஆனா ஏர் ஃபில்டர் ரொம்ப ஹீட் ஆகி பிக்கப் குறைஞ்சது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க ஏர் ஃபில்டருக்கு ஒரு கூலர் செட்டப் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணினோம்.

ஈஸியா சொல்லிட்டோமே தவிர, இதெல்லாம் நடக்க ஒருவருஷம் இரவு, பகல் பாராத உழைப்பும், சிந்தனையும் தேவைப்பட்டது. இப்போ ரெடியாயிட்ட இந்த ஆட்டோவைப் பார்த்தீங்கன்னா மற்ற ஆட்டோக்களை விட இதில் கார்பன் மோனாக்ஸைடு கம்மியா வெளிவரும். அதாவது 3%லேருந்து 0.3%க்கு குறைஞ்சிருக்கு. அதுபோலவே ஹைட்ரோ கார்பனும் 60 ppm அளவிலே இருந்து, 26 ppm அளவுக்கு குறைஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் மேல மைலேஜ் 40% அதிகரிச்சிருக்கும்.

ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஒரு ஆட்டோவில் இந்த மாற்றங்களை செய்ய வெறும் ஆறாயிரம் ரூபாய் செலவு பண்ணா போதும். இந்த காசை ரெண்டே மாசத்துலே ஒரு ஆட்டோ டிரைவர் சம்பாதிச்சிட முடியும். அதுக்கு மேலே ஆட்டோக்கள் ’காசு மேலே காசு வந்துன்னு’ சம்பாதிச்சு கொட்டும்”

டீம் ஆட்கள் எட்டு பேரும் மாற்றி, மாற்றி தங்கள் ‘டுக் டுக்’கின் வரலாற்றை விவரிக்கிறார்கள். உஷாராக இது ஆட்டோக்காரர்களுக்கு பொருளாதார ஆதாயம் கொடுக்கக் கூடியது என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தி சொல்கிறார்கள்.

“எங்க கண்டுபிடிப்பு என்வியூ நடத்திய ‘ஹைப்ரிட் டுக் டுக்’ போட்டியின் ஃபோர் ஸ்ட்ரோக் பிரிவில் முதல் பரிசு வாங்கிடிச்சி. இந்தியாவிலிருந்தும், நெதர்லாந்தில் இருந்தும் ஏழு டீம் கலந்துக்கிட்டாங்க. இந்த கண்டுபிடிப்பு ஆட்டோ வரலாற்றில் ஒரு மைல்கல்லுன்னு கூட சொல்லலாம்.

பேடண்ட் ரைட்ஸ் மாதிரியான மற்ற நடைமுறைகள் நடந்துக்கிட்டிருக்கு. மிக விரைவில் இது மார்க்கெட்டுக்கு வரும். ஆட்டோ டிரைவர்களுக்கு வரப்பிரசாதமா அமையும்” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்கள்.

முதல் பரிசு பத்தாயிரம் யூரோவாம் (இந்திய மதிப்பில் ரூபாய் ஆறு இலட்சத்து எழுபதாயிரம்). தயவுசெஞ்சி ட்ரீட் கொடுங்க பாய்ஸ்!!

12 அக்டோபர், 2009

கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..

கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..100 % மொக்கை..! - இதை படித்து தொலைத்துவிட்டு இங்கே வரவும்.


"நீதான் கேத்தரின் பழனியம்மாளா?" ஆவேசமடைந்தவன் போல கேட்டவன் அடுத்த நொடியே என் முகத்தில் காதலை காட்டினேன்.

என் ஆவேசத்தையும், உடனே மாறிய முகபாவத்தையும் கவனித்தவள், "உன் பேரென்ன?" என்றாள்.

"பேரு கெடைக்குது கழுதை, உங்கிட்டே பேச எனக்கு நிறைய விஷயம் இருக்கு"

"எங்கிட்டேயா? என்ன பேசப்போறே?"

"உன்னை பத்தி, உன் கவிதைகளை பத்தி, என்னை பத்தி, என் காதலை பத்தி"

"என்னை பத்தி சரி.. என் கவிதைகளை பத்தி எதுக்கு? நானே அதெல்லாம் கவிதைன்னு ஒத்துக்க மாட்டேன். உன்னை பத்தியும், உன் காதலை பத்தியும் தெரிஞ்சுக்க எனக்கு எந்த ஆர்வமும் இல்லே!"

"உனக்காக ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி வந்திருக்கேன்"

சாந்தி பாக்கு ஒன்றை கையில் எடுத்தாள். வாயாலேயே பாக்கெட்டை கடித்து திறந்தாள். பாக்கை வாயில் கொட்டிக் கொண்டவள், "அதுக்காக" என்றாள் கொஞ்சம் சத்தமாக.

சக சரக்குவண்டிகள் எங்களை விநோதமாக பார்க்க, கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தேன். "வெளியே போய் பேசலாமா?"

மெதுவாக வெளியே நடந்தோம். என்னைவிட அதிகமாக சரக்கடித்திருந்தாலும் கேத்தரீனா ஸ்டெடியாக இருந்தாள். என் கால்கள் தான் கொஞ்சம் தடுமாறியது. சாலையில் இருவரும் நடந்து செல்லும்போது எதிர்பட்ட பார்வைகள் கொஞ்சம் வித்தியாசத்தை காட்டியது. ஒரு போலிஸ்காரர் கேத்தரீனுக்கு வைத்த சல்யூட் என்னை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது.

"தாயோளி, போனவாரம் வந்து ஓசிலே மேஞ்சிட்டு போன நாயி சல்யூட் வைக்குது. இவன் சல்யூட் வெச்சாலே மறுபடியும் ஓசிக்கு வருவான்னு அர்த்தம்" என்றவள் பாக்கு எச்சிலை புளிச்சென்று துப்பினாள்.

"உங்களை கவிதைகள் வாயிலாக அறிந்தவன் நான்" என்றேன்.

"அதுக்கு என்னா இப்போ? நேருல பார்த்துட்டே இல்லே. என்னா வேணும்?"

"உங்களை காதலிக்கிறேன்" கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன். சாலையில் நடந்துகொண்டிருந்த கூட்டம் ஒரு நொடி நின்றது. என்னை ஆச்சரியத்தோடும், கிண்டலோடும் பார்த்தவர்கள் மறுகணம் தத்தம் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

மவுனித்தாள் கேத்தரீன். அவள் முகத்திலும் வெட்கம் தோன்றியதைப் போல இருந்தது. அவளது கால் கட்டைவிரல் தரையில் கோலம் போட ஆரம்பித்ததை நானே எதிர்பார்க்கவில்லை.

"உன் பேரு என்னா?" பெண்மையின் மென்மை முதல் தடவையாக அவளிடம் இழையோட, மெல்லிய குரலில் கேட்டாள்.

"சத்யா.. என்னை பொட்"டீ"க்கடைன்னு கூப்பிடுவாங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன்" என்று பதிலளித்தேன்.

9 அக்டோபர், 2009

நோபல் பரிசு!


என்ன கொடுமை சார் இது?

கடைசியில் நோபல் பரிசும் கூட கலைமாமணி விருது ரேஞ்சுக்கு போய்விட்டதே?

ஏற்கனவே தமிழகத்தின் தங்கத்தாரகைக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றளவில் பெரிய கோரிக்கை ஒன்று சில காலத்துக்கு முன்பாக எழுந்தது. தொல்காப்பியப் பூங்கா எழுதியதற்காக கலைஞருக்கு வழங்கப்படும் என்று திமுகவினரும் எதிர்பார்த்தார்கள். நோபல் கமிட்டியின் நொள்ளைக்கண்ணுக்கு ஏனோ தங்கத்தாரகையும், டாக்டர் கலைஞரும் கண்ணிலேயே படவில்லை.

இப்போது அமைதிக்கான நோபல் பரிசு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் வியட்நாம் புகழ் அமெரிக்காவின் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்தாண்டுக்கான நோபல் பரிசாவது பச்சைத் தமிழருக்கு கிடைக்க வேண்டும். கண்ணகி காலத்திலிருந்தே தீயாய் பற்றியெறியும் வன்முறை நகரம் மதுரை. பல நூற்றாண்டுகளாக கத்தியும், இரத்தமும், தீயுமாக பற்றியெறிந்த மதுரை இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இதற்கு காரணம் அண்ணன் அஞ்சாநெஞ்சனார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக சாதனை வெற்றியடைந்து, இந்தியாவுக்கே அமைச்சரானது உலக சரித்திரம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அமைதியிழந்து தவித்த நகரை அமைதியின் மறுபெயராக மாற்றிய அஞ்சாநெஞ்சனாருக்கு அடுத்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதே நியாயமானதாக இருக்க முடியும். அதுவே தமிழுக்கு கிடைக்கும் பெருமையும் ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் பரிசு வழங்கியதைப் போல, அண்ணனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென்று தமிழகமே நோபல் கமிட்டியை இந்தப் பதிவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறது. தகுதியான ஒருவருக்கு இப்பரிசினை வழங்கி நோபல் தனக்கான கவுரவத்தை காத்துக் கொள்ளுமா என்பதே இப்போது நம் முன் உள்ள பில்லியன் டாலர் கேள்வி!

இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும்...

இடாகினி என்பது தமிழ் சொல்லா? இடாகினி என்ற வார்த்தைக்கு சத்தியமாக என்ன பொருள் என்பது புரியவில்லை. ஆனாலும் மோகிணி என்று சொல்லுவதைப் போல இடாகினி என்று சொல்லுவதும் கவர்ச்சியாக, நாக்குக்கு இதமாக இருக்கிறது. இடாகினி இடாகினி என்று சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களின் காதுகளில் நிச்சயம் தேன் ஒழுகும். என்ன ஒரு அழகான வார்த்தை.

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை அவரது எழுத்தைப் போலில்லாமல் துயரமானதாக இருந்திருக்கக்கூடும். துயரமும், கொண்டாட்டமும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே அமைகிறது. ஒரு அரசுசாரா சேவை நிறுவனத்தில் 750 ரூபாய் சம்பளத்தில் கோபிகிருஷ்ணன் என்னத்தை பெரியதாக கொண்டாடியிருக்க முடியும்? சிகரெட்டும், குடிப்பழக்கமும் இல்லாது இருந்திருந்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோவென்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அவரது எழுத்து கொண்டாட்டம் நிறைந்தது. மற்றவர்களை எந்தளவுக்கு எள்ளல் செய்கிறாரோ, அதே அளவு சுயஎள்ளலும் செய்துகொள்கிறார். அடுத்தவர்களை வெறுக்கும் அளவுக்கு தன்னையும் வெறுத்துக் கொள்கிறார். அடுத்தவர்களை புகழும் அளவுக்கு தன்னையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தவர்களை திட்டும் அளவுக்கு தன்னையும்... இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்த மனம் எல்லோருக்கும் வாய்ப்பது அரிது.

‘இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!’ - குறுநாவலில் தலைப்பே ஒருவரி கதை மாதிரிதானிருக்கிறது. தலைப்பைப் பார்த்து மிரளாதே என்று முதல் பத்தியிலேயே நட்போடு ஆலோசனை கூறுகிறார். 28-09-1989 முதல் 24-03-1997 வரையிலான ஒரு மனிதரின் டயரிக்குறிப்புதான் இக்குறுநாவல். நாவலை எழுதுவதற்கான நியாயங்களாக கோபி குறிப்பிடுவதில் முக்கியமானது சமூகப்பணித்துறையில் பல கறுப்பு ஆடுகள் நுழைந்து கொண்டிருப்பது. மற்றொன்று, இந்த... என்ன சொல்வார்கள் அதை.. ஆம் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் என்ற வார்த்தை நெருடலாக இருப்பது மட்டுமின்றி இயல்பான உணர்வுகள் மீது ஒடுக்குமுறையை திணிக்கிறது. இப்படியே எழுதிக் கொண்டு போகிறார். கோபிகிருஷ்ணனின் புகைப்படம் எதையும் பார்த்ததில்லை நான். இந்நாவலை வைத்து அவரது உருவத்துக்கு என் மனதில் ஒரு பிம்பம் வரைந்து வைத்திருக்கிறேன். அனேகமாக அசோகமித்திரன் உடல்வாகோடு கூடிய பிம்பம் அது.

நாவல் முழுக்க ஆங்காங்கே இறைந்து கிடக்கும் கோபியின் சுயபிரகடனங்களும் சுவாரஸ்யமானவை. ‘நான் நல்லவனா, கெட்டவனா என்பது பிரச்சினை இல்லை. இந்த அடைகள் தேவை இல்லாதவை. நான் வரம்புகள் அற்றவன். ஆனால் ஒன்றை நிச்சயம் சொல்லியாக வேண்டும். நீங்கள் எனக்கு கொடுக்கும் சுதந்திரங்களை தவிர்த்து வேறு சுதந்திரங்களை நான் என்றைக்கும் எடுத்துக் கொள்ளமாட்டேன்’

நந்தன் இதழில் வெளிவந்திருந்த தந்தை பெரியாரின் கூற்று ஒன்றினை வாசித்தபோது இந்நாவலுக்கான அவசியம் கோபிக்கு ஏற்பட்டிருக்கிறது. ’நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமல் போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்க வேண்டும் என்பதல்லாமல் பொது மக்கள் நலனுக்காக ஏற்படவில்லை’. இந்தக் கூற்றை வாசிக்கும்போது அது எல்லா நிறுவனங்களுக்குமே பொருந்துகிறது. இதுவரை மதங்கள் உலகுக்கு தந்த எல்லா தீர்க்கதரிசிகளை விடவும் சிறந்தவர் தந்தை பெரியார்.

கோபி பணிபுரிந்த அலுவலகம், அது அமைந்திருந்த சாலை, கட்டிடம், அறைகள், வராண்டா என்று விஸ்தாரமாக அஃறிணைகளில் தொடங்கி அவ்வலுவலகத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியரைப் பற்றியுமான அறிமுகத்தை தமிழ் வாசகனுக்கும், வாசகிக்கும் கொடுக்கிறார். ஹாலிவுட் படங்களில் கையாளப்படும் உத்தி இது. ஒரு படத்தின் இரண்டு மணி நேரத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொண்டு முதல் பாகத்தில் முழுக்க முழுக்க கேரக்டர் எஸ்டாபிளேஷன். அடுத்த பாகத்தில் கேரக்டர்களுக்கிடையேயான சிக்கலை, பிரச்சினைகளை உருவாக்குவது. மூன்றாவது பாகத்தில் சிக்கு எடுத்து சுபம். இடாகினி இந்த ஃபார்முலாவில் அச்சுபிசகாமல் பயணிக்கிறது. க்ளைமேக்ஸ் மட்டும் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ்.

இன்று இணையத்தில் சாத்தியமாகியிருக்கும் ஹைப்பர்-லிங்க் முறையை ப்ரிண்ட் மீடியத்தில் பரிசோதித்து இந்நாவலில் வெற்றி கண்டிருக்கிறார் கோபி. ‘இணைப்பு-1ல் அந்தப் பரிசோதனை ஓர் அற்புதமான உளவியல் ஆவணம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, புது எழுத்துவில் வெளியாகி மானிட வாழ்வு தரும் ஆனந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இலியும் வழியும் புறப்பாடும் தெறிப்பும் என்ற படைப்பு ஆகும். இதை இணைப்பு 1-அ என்று வைத்துக் கொள்ளலாம்’ என்ற ரேஞ்சுக்கு நாவல் முழுக்க ஒன்பது இணைப்புகள். நல்லவேளையாக அவற்றை புது எழுத்துவிலோ, கணையாழியிலோ, கோபியின் தொகுப்புகளிலோ தேடிப்படிக்கும் அசாதாரமாண வேலையை வைக்காமல் நூலின் பிற்பகுதியிலேயே பதிப்பகத்தார் இணைத்திருக்கிறார்கள்.

இதை புனைவு என்றோ, என் சொந்தக்கதை என்றோ எப்படி உனக்குத் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக்கொள் என வாசகனுக்கு சுதந்திரத்தை அவர் தந்துவிட்டாலும், அந்த சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள வாசகன் தயாரில்லை. இதைப் புனைவு என்று யாருமே நினைக்கமுடியாத அளவுக்கு அனுபவித்தால் மட்டுமே எழுதியிருக்கக்கூடிய உயிரோட்டமான எழுத்துகள். இப்படைப்பின் நாயகன் கோபி என்றால், நாயகி அவரோடு பணிபுரிந்த விக்டோரியா சமாதானம். மெல்லிய ரொமான்ஸும் உண்டு. சமாதானம் குறித்து எழுதும்போது கோபியின் பேனா நிறைய ஜொள்ளு விடுகிறது. பெண்களுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்றால் பேண்டீஸும், ப்ராவும்தான் கோபியின் சாய்ஸ்.

நூலாசிரியரின் பலமே புரியும்படி எழுதுவது. தமிழில் வன்மையான வார்த்தைகள் நிறைய உண்டென்றாலும் வாசிக்கும் எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளையே பயன்படுத்துகிறார். சிற்றிலக்கியம் என்ற பெயரில் வாசகனுக்கு பூச்சாண்டி காட்டவில்லை. இவ்வகையிலும் கோபியையும், சாருவையும் நிறைய ஒப்பிட முடிகிறது. நண்பர் என்ற அடிப்படையில் சாருவுக்கு கோபியின் இன்ஃப்ளூயன்ஸ் எழுத்தில் நிறைய இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். கோபியின் இடாகினியும், சாருவின் ராஸலீலாவும் பணிசார்ந்த அனுபவங்கள் என்ற அடிப்படையில் ஒரே தளத்தில் இயங்கும் படைப்புகள். இருவருமே குமாஸ்தாப்பணியை திறம்பட செய்தவர்கள். அப்பணியை வெறுத்தவர்கள். நரகத்தில் இருந்ததைப் போல உணர்ந்தவர்கள் பணியில் இருந்து வெளிவந்ததை விடுதலையாக கொண்டாடியவர்கள். அதே நேரத்தில் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அந்தரங்க வெளிப்பாடு வாசகனுக்கு கிசுகிசு படிக்கும் போதையையும் ஏற்றுகிறது.

நூல் சொல்லும் கதையைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. படிக்க விரும்புபவர்களுக்கு அது ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆனால் மாறுபட்ட சுகமான வாசிப்பனுபவத்துக்கு இடாகினி நிச்சய உத்தரவாதம் அளிக்கிறாள் என்று மட்டும் உத்தரவாதம் அளிக்க இயலும்.


நூலின் பெயர் : இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!

நூல் ஆசிரியர் : கோபிகிருஷ்ணன்

விலை : ரூ.40/-

பக்கங்கள் : 128

வெளியீடு : தமிழினி,
342, டி.டி.கே. சாலை, சென்னை-14


கோபிகிருஷ்ணனின் பிற படைப்புகள் :

1) ’ஒவ்வாத உணர்வுகள்’ (சிறுகதைகள்) 1986 - சிட்டாடல் வெளியீடு

2) ’உணர்வுகள் உறங்குவதில்லை’ (குறுநாவல்கள்) 1989 - சரவணபாலு பதிப்பகம்

3) சஃபி, லதா ராமகிருஷ்ணன் - இவர்களுடன் இணைந்து எழுதிய ’கொஞ்சம் அவர்களைப் பற்றி.. மனோதத்துவம் ஓர் அறிமுகம்’ (கட்டுரைகள்) 1992 - சவுத் ஏஷியன் புக்ஸ்

4) சஃபியுடன் இணைந்து எழுதிய ‘சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ (ஒரு நீண்ட கட்டுரை) 1992 - முன்றில் வெளியீடு

5) ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ (மனநோய்கள் குறித்த புத்தகம்) 1993 - முன்றில் வெளியீடு

6) ’முடியாத சமன்’ (சிறுகதைகள்) 1998 - ஸ்நேகா வெளியீடு

7) ‘டேபிள் டென்னிஸ்’ (குறுநாவல்) 1999 - தமிழினி

8) ‘தூயோன்’ (சிறுகதைகள்) 2000 - தமிழினி

9) ‘மானிட வாழ்வு தரும் ஆனந்தம்’ (சிறுகதைகள்) 2001 - தமிழினி