
பொங்கலுக்கு முன்பாக திருவண்ணாமலை செல்ல வேண்டியிருந்தது. கோயம்பேட்டில் இருந்து அரசுப்பேருந்து. பூமோ, தூமோ ஏதோ ஒரு பிரத்யேக டிவி சேனல். குணா ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஐம்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டதால் அசுவாரஸ்யமாக ஹெட்போனை காதில் மாட்டினேன். ‘கரிகாலன் காலைப்போல...’ வேட்டைக்காரன் அலறினான்.
ஐந்துமுறைக்கும் மேலாக ‘மந்தரிச்ச உதடை’ திரும்ப திரும்ப கேட்டு, அலுத்துப் போனதால் ஹெட்போனை கழட்டினேன். செஞ்சியின் நெரிசலான போக்குவரத்தில் பேருந்து ஊர்ந்துக் கொண்டிருந்தது. எனக்கு பின்சீட்டில் ஒரு கிராமத்து இளைஞர், தன் புதுமனைவியிடம் வியப்பான குரலில், சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே கமல் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!”
2029லும் யாராவது என்னைப் போல திருவண்ணாமலைக்கு பேருந்தில் போகலாம். அப்போதும் யாராவது கிராமத்து இளைஞர், “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே செல்வராகவன் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!” என்று வியப்படையலாம்.
காலத்தை தாண்டி நினைவுகூறத்தக்க திரைப் படைப்புகள் தமிழில் குறைவு. ஆயிரத்தில் ஒருவனையும் தயங்காமல் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கமல்ஹாசனின் படங்கள் வெளியாகும் நேரத்தில் வசூல்ரீதியான வெற்றியை பெரும்பாலும் அடைவதில்லை. ஆயினும் பத்து, இருபது ஆண்டுகள் கழித்து அடுத்துவரும் தலைமுறையினர் சிலாகிக்கிறார்கள். செல்வராகவனும் சிலாகிக்கப்படுவார்.
* - * - * - * - * - *
புதுமைப்பித்தன் ஒரு மொக்கை எழுத்தாளர் என்று அடிக்கடி சாரு எழுதுவதுண்டு. ‘அப்படியென்ன மொக்கையாக எழுதியிருக்கிறார்?’ என்று அவரை வாசிக்க சாருவே தூண்டுகோலாக இருந்தார். வாசித்தபிறகே “புதுமைப்பித்தன் ஒரு லெஜண்ட், அவரை யாருடனும் ஒப்பிட இயலாது!” என்பது புரிந்தது.
சாரு யாரையாவது எதிர்மறையாக விமர்சித்தாலும் கூட, அவரது வாசகர்களுக்கு நல்லதையே செய்கிறார். நல்ல அறிமுகத்தை தருகிறார். சாரு ஆபத்தற்றவர். இன்னொரு எழுத்தாளர் நல்லமுறையிலேயே யாரையாவது அறிமுகப்படுத்தினாலும் கூட, அவர் ஆபத்தானவர் என்று உள்ளுணர்வு அடித்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் உள்ளுணர்வே வெல்கிறது.
புதுமைப்பித்தனை வாசித்த யாருமே கபாடபுரத்தை மறக்க முடியாது. ஒரு மேஜிக் கலைஞனின் நுணுக்கத்தோடு, அவர் கவனமாக இழைத்து, இழைத்து நெய்த படைப்பு. ‘மேஜிக்கல் ரியலிஸம்’ என்பதையெல்லாம் புதுமைப்பித்தன் அறிந்திருப்பாரா என்று தெரியாது. ஆனால் அப்படைப்பு அச்சு அசல் ‘மேஜிக்கல் ரியலிஸ’ கூறுகளைக் கொண்டது.
கபாடபுரம் வாசித்ததில் இருந்தே, புதுமைப்பித்தனின் வர்ணிப்பு என்னை தொந்தரவு செய்துக்கொண்டே இருந்தது. அவரது எழுத்தை காட்சியாக, மிகச்சரியாக கற்பனை செய்ய இயலாதது குறித்த என்னுடைய திறமைக்குறைவை நினைத்து அடிக்கடி நொந்துகொள்வேன். இதனாலேயே அப்படைப்பை அடிக்கடி மீள்வாசிப்பும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. கபாடபுரம் மாதிரியான தொல்லையை தந்த இன்னொரு படைப்பு ஜெயமோகனின் டார்த்தீனியம். மேஜிக்கல் ரியலிஸத்தின் தன்மையே வாசகனை இவ்வாறு தொந்தரவுக்கும், தொல்லைக்கும் ஆளாக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த நீண்டகால தொந்தரவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’. கபாடபுரத்துக்கு ஒப்பான ஒரு கனவு நகரத்தை கண்முன்னே காட்சியாக விரித்ததில் ஆயிரத்தில் ஒருவன் குழு அபாரவெற்றி கண்டிருக்கிறது.
* - * - * - * - * - *
இப்படம் வெளியான இரு தினங்களுக்குளாகவே பெற்றிருக்கும் விமர்சனங்கள் பலவும் நகைக்க வைக்கிறது. இதுவரை என்னவோ எல்லாப் படத்துக்கும் தமிழ் ரசிகன் ‘லாஜிக்’ பார்த்து ரசித்தது போலவும், இப்படம் லாஜிக்குகளை மீறியிருப்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்படுவது வேடிக்கையானதும் வினோதமானதுமான ஒரு விஷயம். மேஜிக்குக்கு லாஜிக் கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் ஒரு மேஜிக் கலைஞன்.
படத்தின் இரண்டாம் பாதி, ஈழத்தில் நடந்த கடைசிக்கட்ட சோகங்களை உருவி வணிகமாக்கியிருக்கிறது என்ற விமர்சனமும் அர்த்தமற்றது. படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்துக்கு முன்பே படமாக்கப்பட்டு விட்டது என்பதை செல்வராகவனே பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
* - * - * - * - * - *
தொழில்நுட்பரீதியாக ஏகப்பட்ட விஷயங்களை முதன்முறையாக தமிழில் செல்வராகவன் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டுமானால் கிளாடியேட்டர் பாணியில் நடைபெறும் அந்த மைதான சண்டைக்காட்சி.
சுற்றிலும் ஆயிரமாயிரம் பார்வையாளர்கள். ஒரு தடியன் சங்கிலியில் இரும்புக் குண்டை கட்டி சுழற்றி, பலரின் தலைகளை சிதறவைக்கிறான் என்பதை சுலபமாக எழுத்தில் வடித்துவிடலாம். தத்ரூபமாக காட்சியாக்கிருப்பதில், ஒரே ஓவரில் எட்டு சிக்ஸர் (ரெண்டு பால் நோ பால்) அடிக்கிறார் செல்வா.
* - * - * - * - * - *
எல்லோரும் சொல்வதைப் போல ரீமா கலக்கியிருக்கிறார். அனாயசமாக இரு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சுடுவதில் தொடங்கி, நீருக்குள் டைவ் அடிப்பது, ஓடுவது, ஒரு நொடி நகைத்து மறுநொடி கடுத்து என்று அதகளம். ரீமாவின் உழைப்புக்கு நிஜமாகவே அவர் அணிந்திருக்கும் லெதர் டவுசர் கிழிந்திருக்க வேண்டும். ஆண்ட்ரியா அழகு. ஊட்டிரேஸில் ஓடும் உயர்ஜாதிக் குதிரை.
கார்த்தி ஆரம்பக்காட்சியில் இருந்தே அட்டகாசம். ‘பேலன்ஸ் அமவுண்டை கொடுத்துடுங்க!’ என்று அழுதுக்கொண்டே கேட்கும் காட்சியெல்லாம் கலக்கல். இரவில் இரண்டு ஃபிகரும் கட்டிக்கொண்டு தூங்க, அவர் முழிக்கும் முழி ‘ஏ’ க்ளாஸ். பார்த்திபனின் பாத்திரம் இதுவரை தமிழில் இல்லாதது.
* - * - * - * - * - *
ஆயிரத்தில் ஒருவன் - ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறான். விரைவில் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறான். இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்!