23 ஜனவரி, 2010

சைபர் க்ரைம் - ஒரு விமர்சனம்!


யுவகிருஷ்ணா எழுதிய "சைபர் க்ரைம்" புத்தகத்தை படித்தேன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்த இந்த கட்டுரைகளை ஒரே கோப்பையில் பருகிய திருப்த்தி கிடைத்தது.

"தொழில்நுட்பம் கத்தி மாதிரி, காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம், குரல்வளை அறுக்கவும் உபயோகிக்கலாம்."

யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருக்கும் இந்த வாசகங்கள் முற்றிலும் உண்மை. பரபப்பான இந்த உலக சூழ்நிலையில், வளர்ந்து வரும் சைபர் முன்னேற்றங்களுக்கு மனிதன் அடிமையாகி வருகின்றான். இன்டர்நெட் பயன்படுத்தும் வெகுஜென மக்களில் பலருடைய இரகசியங்கள் குறைந்த பட்சம் அரைநிர்வாணப் படுத்த படுகிறது, இதனை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, எனினும் பிரச்சனை என்று வரும்போது புலம்பி அழுவதில் பலன் ஏதும் இல்லை. இத்தகைய பிரச்சனைகளை ஆராய்ந்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த புத்தகம். இன்று கத்திரிக்காய் வாங்குவதில் தொடங்கி, மனிதனின் "காரக்டரை" அறிந்துகொள்வது வரை நாம் அனைவரும் நாடுவது கூகிள் சேவை, இவ்வாறு அனைத்தையும் தேடும் வசதி வந்துவிட்ட சூழ்நிலையில், நாம் நம்மை பற்றி எத்தகைய விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டால், அசிங்கபடுவதையோ அல்லது ஏமாறுவதையோ தவிர்க்கலாம் என்பது இப்புத்தகம் நமக்கு தரும் பாடம்.

சில வருடங்களுக்கு முன்னால் பெற்றோர்கள் "என் புள்ள இங்கிலீஷ்ல தான் பேசுது" என்று கூறி சந்தோஷ பட்டனர், தற்போது எல்லா பெற்றோரும், "என் புள்ள இன்டர்நெட்லதான் முழுநேரமும் கெடக்குது" என்று கூறி பெருமிதம் அடைகின்றனர். இதற்கு தேவையான அத்தனை வசதிகளையும் (தனி அறை உட்பட) செய்து தருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை, எனினும் தங்கள் பிள்ளைகள் இந்த சைபர் உலகத்தில் உண்மையில் என்ன செய்கின்றனர் என்பதனை கண்காணிக்க தவறும் போது, குழந்தைகள் "தவறும்" செய்ய தொடங்குகிறார்கள். குழந்தைக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க விளையும் அத்துனை பெற்றோரும் சற்று இந்த புத்தகத்தை படித்து வைத்துக்கொள்வது நல்லது.

இவ்வுலகில் உலவும் பல நுன்கருவிகளை பயன்படுத்த தெரிந்த, அனுபவம் மிகுந்த பலரும், சில நேரம் சில அறிவுரைகளை ஏற்க மறுத்து பின்பு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம், அறிவுரை கூறுபவர்கள் அதற்கான சான்றுகளை கூற தவறுவதால், பிறர் அதனை அலட்சியப்படுத்துகின்றனர். இதனை நன்கு அறிந்தவராக செயலாற்றி இருக்கிறார் யுவகிருஷ்ணா! "இதை செய்யாதே!" என்று கூறி நிறுத்தாமல் "இப்படித்தான் ஒருத்தன் செஞ்சு மாட்டிகிட்டான்" என்று புரிய வைத்திருக்கிறார். மகராசன் படத்தில் வரும் கவுண்டமணி-செந்தில் காமெடியில், "இப்படித்தான் எங்க ஊர்ல ஒருத்தன் இருமி இருமி, நுறையீரல் வெளிய வந்து விழுந்துருச்சி" என்று பொய் சொல்லாமல், நிகழ்வுகளை உண்மையான வழக்கு ஆதாரங்களால் யுவகிருஷ்ணா விளக்கியுள்ளார். சிறிய சில் முதல், செல், கம்ப்யூட்டர் வரை எத்தகைய ஆபத்துகள் இருக்கின்றன என்பது அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

கட்டற்ற மென்பொருள் மற்றும் ஒபன் சோர்ஸ் மென்பொருள்களின் மூலம் சில பாதுகாப்பு அம்சங்களை சாதிக்க முடியும் என்பதனை கூற தவறியிருந்தாலும், எப்படி நம்மை பாதுகாப்பது என்பதனை எளிய தமிழில் ஆங்காங்கே நகைச்சுவை தூவி மிகச் சிறப்பாக யுவகிருஷ்ணா எழுதி இருக்கிறார். "சைபர் க்ரைம்" - "பூஜ்ய குற்றம்" என்று மொழிபெயர்த்த யுவகிருஷ்ணாவின் இலக்கிய ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை :)

காலத்துக்கேற்ப மாற முயலும் அனைவரும் அத்யாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அருமை செய்திகள் பொதிந்த இந்த புத்தகத்தை, ஒரு கோப்பை கொட்டை வடிநீராக மாற்றி, பருக கொடுத்த கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி!

(நன்றி : ஸ்டைல்சென்)

இணையத்தில் இப்புத்தகத்தை வாங்க : http://nhm.in/shop/978-81-8493-266-9.html

பீஷ்மா!


கடந்த சில குடியரசுத் தினங்களில் தொலைக்காட்சிகளில் நீங்கள் கண்டிருக்கலாம். டெல்லியில் வழக்கமாக நடக்கும் ராணுவ அணிவகுப்பில் ஒய்யாரமாக வீறுநடை போடும் பீஷ்மா பலரின் கண்ணையும், கவர்த்தையும் கவர்ந்துவருகிறார். மகாபாரத பீஷ்மரைப் போலவே கம்பீரமும், ஆளுமையும் கொண்டவர் இந்த பீஷ்மரும். போர்முனையில் இவர் ஒரு வெல்லமுடியாத சிங்கம். வேதியியல், உயிரியல், அணு ஆயுதங்கள் இவரின் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு எதிரிகளை களத்தில் ஓட ஓட விரட்டி, புறமுதுகிட்டு சிதறி ஓடச்செய்யப்போகும் இவர்தான் இந்திய ராணுவத்தின் இன்றைய ஹீரோ.

யார் இந்த பீஷ்மா?

இதுவரை இந்திய ராணுவத்துக்கு டாங்கிகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. அல்லது உதிரிபாகங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பீரங்கி இந்த பீஷ்மா. ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகள் மட்டும் பெறப்பட்டிருக்கிறது. உலகளவில் போர்முனைகளில் பயன்படுத்தப்படும் டாங்கிகளில் இதுதான் லேட்டஸ்ட்.

இரவுகளிலும் துல்லியமாக போரிடவும், குண்டுகளை சுடும் அதே குழாயிலேயே குறிபார்த்து ஏவுகணைகளை ஏவவும் பீஷ்மாவில் வசதிகள் உண்டு. அணு ஆயுதங்களில் வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சினை தாங்கும் சக்தி பீஷ்மாவிடம் இருப்பதால், இந்த டாங்கியை இயக்கும் குழுவுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்பு மிக மிகக்குறைவு என்பது தனிச்சிறப்பு. அவசியம் தேவைப்படும் காலங்களில் போர்முனைகளுக்கு மின்னல்வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது இந்த பீஷ்மா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த டாங்கி, இந்திய ராணுவ வரலாற்றில் தனியிடத்தைப் பிடிக்கிறது. ஒரு பீஷ்மாவை உருவாக்க இந்தியாவுக்கு ஆகப்போகும் செலவு ரூபாய் பதினான்கு கோடி என்றால் இதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம். அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு தலா 100 பீரங்கிகளை உருவாக்க சென்னை ஆவடி டாங்க் தொழிற்சாலை தயார்நிலையில் இருக்கிறது. 2020ஆம் ஆண்டு வாக்கில் 1,600 பீரங்கிகளோடு தனது தரைப்படையை உலகின் தன்னிகரற்ற, யாராலும் வெல்லமுடியாத படையாக உருவாக்க இந்தியா பெரும் முனைப்பு காட்டி வருகிறது.

ரஷ்யாவின் டி-90 டாங்கிகளின் தொழில்நுட்ப அடிப்படையில் பீஷ்மா டாங்குகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய ராணுவம் இதுவரை பயன்படுத்தி வந்த அர்ஜூன்ரக டாங்குகளை தயாரிக்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே குறைந்தகால அவகாசத்தில் அதிக டாங்குகளை தயாரிக்கும் சுலபமான – அதே நேரம் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை இந்திய ராணுவம் தேடிவந்தது. இடையில் உக்ரைன் நாட்டிலிருந்து 320 டி-80 யூடி ரக டாங்குகளை வாங்க பாகிஸ்தான் முடிவெடுத்ததால் இந்திய ராணுவத்துக்கு சக்திவாய்ந்த டாங்குகளை உடனடியாக உருவாக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது.

எனவே கடந்த 1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் இரண்டு டாங்கி மாடல்களை (டி72 மற்றும் 90) வாங்கி பாலைவனப் பகுதிகளில் பரிசோதனை நடத்தியது. இதில் டி72 குறித்த திருப்தி இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு சுத்தமாக இல்லை. வெப்பத்தை தாங்கக் கூடிய பலம் அந்த டாங்கிக்கு இல்லை. டி90 டாங்குகளிலும் சில அதிருப்திகள் இருந்தது. தேவையான மாற்றங்களுக்கான தொழில்நுட்ப யுக்திகளை ரஷ்யாவிடம் இருந்து பெற்று முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டி90 ரக பீரங்கிகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. பீஷ்மா என்று பெயரிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் அதிநவீன டாங்கியின் கதை இதுதான்.

பாகிஸ்தான் தற்போது உபயோகிக்கும் டி80 யூடி ரக டாங்குகளை விட பீஷ்மாவில் அதிகவசதிகள் உண்டு. ஏவுகணைகளில் இருவகை உண்டு. இந்த இருவகை ஏவுகணைகளையும் பீஷ்மாவில் ஏவமுடியும். மாறாக டி80 யூடியில் ஒருவகை ஏவுகணையை மட்டுமே பயன்படுத்தலாம். பாதுகாப்பு அடிப்படையில் நம் பீஷ்மா தலைசிறந்தது. எதிரிகளால் சுலபமாக வீழ்த்திவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கனகச்சிதம். திட்டமிட்டபடி பீஷ்மா டாங்குகள் சரியான நேரத்தில் தயாரிக்கப்படுமானால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தரைப்படையை வெல்வது என்பது வல்லரசுகளுக்கே சாத்தியமில்லாததாக ஆகிவிடும்.

22 ஜனவரி, 2010

சங்கராச்சாரியார்!


எதிர்பார்த்தபடியே புதுவையில் நடந்து வரும் சங்கரராமன் கொலைவழக்கில் அடுத்தடுத்து சாட்சிகள் பல்டியடித்து வருகிறார்கள். உச்சக்கட்டமாக முக்கிய சாட்சியான ரவிசுப்பிரமணியம் ‘கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று நேற்று பல்டியடித்து விட்டார்.

இச்சூழலில் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் முன்பு எழுதிய ஒரு சிறுநூல் நினைவுக்கு வருகிறது. அந்நூலில் ‘வரலாறு நெடுகிலுமே சாதாரண மக்கள் இயல்பாக உணரக்கூடிய உண்மையின் தரிசன்ங்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளன என்ற வெளிச்சக்கீற்று விழுதுகளாய் எனக்குள் இறங்கியது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இறங்கிய வெளிச்சம் மீண்டும் இருளுக்குள் அமிழத் தொடங்கியிருக்கிறது. அன்றே சொன்னார் அண்ணா, ‘சட்டம் ஒரு இருட்டறை’.

2004, நவம்பர் 11 கைதுக்குப் பிறகான சில சம்பவங்களை மீள்பார்வை செய்துப் பார்க்கவே இப்பதிவு. சங்கராச்சாரியார் கைதின்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளை தனது துல்லிய ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார் சாவித்திரி கண்ணன். இவர் துக்ளக்கில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் என்பது இங்கே தேவையில்லாத, ஆனால் அவசியம் குறிப்பிட வேண்டிய ஒரு தகவல்.

ராதாகிருஷ்ணன் மற்றும் மாதவன் என்பவர்கள் மீது ஏற்கனவே கொலைதாக்குதல் முயற்சிகள் நடத்தியவர், பாலியல்ரீதியான பலவீனங்களை கொண்டவர், கூலிக்கு கொலை செய்யும் அடியாள் கூட்டத் தலைவர்களோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகின. பல்லாண்டுகளாக திரையிட்டு மறைக்கப்பட்ட புனிதம் வெட்டவெளிச்சத்துக்கு வந்து சிதைந்துப் போனது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களும், கொலையான சங்கரராமன் மீதான அனுதாபமும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, கைதுக்குள்ளானவரின் அந்தஸ்து பற்றியும், கைது செய்யப்பட்ட முறை பற்றியுமே அதிகமாக பேசப்பட்டது.

இத்தனைக்கும் பாரம்பரியமிக்க கோயிலில், இந்து நம்பிக்கையில் ஆழ்ந்தப் பற்று கொண்ட வைதீக பிராமணர் பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் கள்ள மவுனம் காத்தன. இந்துமத எதிர்ப்பு இயக்கமான திமுகதான் அந்த ஏழை பிராமணரின் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியன்று மதத்தலைவரை கைது செய்யலாமா என்று கேணைத்தனமாக கேள்வி எழுப்பினார்கள். கிறிஸ்துமஸ் வரும் வரை போலிஸ்காரர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் போலும். அயோத்தியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த மத அரசியல் கட்சியான பிஜேபி ஒரே நாளில் ‘இஸ்லாமியர்களுக்கு மெக்கா, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், எங்களுக்கு காஞ்சி’ என்று கொதித்து எழுந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா கிறிஸ்தவ மதத்தவர் என்பதாலேயே இந்துமதத் தலைவரை அவமானப்படுத்துகிறார்கள் என்று புரளி பரப்பியது.

ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களின் உண்மை முகத்தை அறிய ஜெயேந்திரர் கைது துணைபுரிந்தது. “பத்திரிகைகள் பொறுப்பற்று எழுதுகின்றன. மடிப்பத்திரிகைகளுக்கும், மஞ்சள் பத்திரிகைகளுக்கும் இப்போது வித்தியாசம் தெரியவில்லை” என்று கொதித்து எழுந்தார். மடிப்பத்திரிகைகள் என்றால் பிராமணப் பத்திரிகைகளாம். அப்பட்டமான ஜாதியப் பார்வை இவ்வளவு நாட்களாக அறிவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக பாவனை காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்தது என்பதை மக்கள் இலகுவாக விளங்கிக் கொண்டார்கள்.

அந்தப் புத்தகத்தில் வலுவான ஒரு கருத்தை தனது சுயகருத்தாகவும் சாவித்திரி கண்ணன் சொல்லியிருந்தார். “சங்கராச்சாரியார்களிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”

இன்று விசாரணை போகும் போக்கைப் பார்த்தால், ‘இந்து மதத்தின் கதி அதோகதிதான்’ என்று தோன்றுகிறது. கையும் களவுமாக பிடிபட்டிருந்தாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் ‘அவர்களின்’ லாபி மிகச்சிறப்பாகவே செயல்படும் என்பது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிரூபணமாகியிருக்கிறது. வழக்கிலிருந்து விரைவில் விடுவிக்கப்படப் போகும் ஜெயேந்திரருக்கு நமது வாழ்த்துகள்!

நூல் : சங்கராச்சாரியார்களும், இந்துமதமும் - சிதைக்கப்பட்ட உண்மைகள்
ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்
பக்கங்கள் : 40
விலை : ரூ.10/-
வெளியீடு : மாணிக்க சுந்தரம் வெளியீட்டகம்,
522, 2வது மேற்கு தெரு, காமராஜர் நகர்,
திருவான்மியூர், சென்னை-600 041.

21 ஜனவரி, 2010

சாமியார் டி.வி.டி!


இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த சினிமாக்காரர்கள் திருட்டு வி.சி.டி, திருட்டு வி.சி.டி. என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. வி.சி.டி. என்ற தொழில்நுட்பம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துப் போய்விட்டது. இனிமேல் 'திருட்டு டி.வி.டி' என்று சரியாக உச்சரிக்குமாறு சினிமாக்காரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

ஜக்குபாய் விவகாரத்தைத் தொடர்ந்து நடந்த கண்டனக்கூட்டத்தில் ‘நம்ம ஆளுங்கதான் இதை செய்யுறாங்க. அவங்களை கண்டுபிடிக்கணும்!' என்று ரஜினி கூறியதற்கு, பெருத்த கண்டனங்கள் சினிமாத் துறையில் எழுந்திருப்பதாக தெரிகிறது. யாராவது, எப்போதாவது தப்பித்தவறி உண்மையை பேசிவிட்டால் இதுபோல கண்டனங்கள் எழுவது சகஜம்தான். சொன்னது ரஜினி என்பதால் வெளிப்படையாக யாரும் சண்டை போடாமல், உள்ளுக்குள் நொணநொணவென்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்ரம் படம் வெளியானதுமே, அப்படத்தின் திருட்டு வீடியோ கேசட் வெளிவந்துவிட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் வரை முட்டி மோதி சோர்ந்துவிட்டார் கமல். அதன்பிறகு இந்த திருட்டுச் சமாச்சாரங்கள் எல்லாம் அதிசமீபத்திய தொழில்நுட்பங்களாக இருக்கிறது. நல்லதோ, கெட்டதோ என்ன செய்தாலும் இதைத் தவிர்க்க முடியாது. இதையும் தாண்டி எப்படி நாம் முன்னேறுவது என்பதைதான் சிந்திக்க வேண்டும் என்று இருபது வருடங்களாக கரடியாக கத்திக் கொண்டிருக்கிறார். யாராவது கேட்டால்தானே?

ஜக்குபாய் படத்தின் பிரிண்ட் இணையத்தில் வந்தபோதே பார்த்தேன். FX COPY என்ற வாட்டர் மார்க்கோடு இருந்தது. பின்னணி இசை சேர்க்கப் படுவதற்கு முன்பாக போஸ்ட்-புரொடக்‌ஷன் நிலையில் யாரோ ஆட்டையை போட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்படத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின் வேலையாக தான் இது இருக்க முடியும். ரஜினி இதைத்தான் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் லேட்டஸ்ட் படம் ஒன்று ஊத்திக் கொண்டது அல்லவா? அப்படத்தின் திருட்டு டி.வி.டியும் ரிலீஸ் ஆன நாளிலேயே பல நகரங்களில் தாராளமாக கிடைத்தது. வெளியூர் தியேட்டர்களுக்கு பயணமான பிரிண்ட் ஒன்றினை, நடுவழியில் ஆட்டையை போட்டு அடித்திருக்கிறார்கள். இது ரஜினிக்கும் தெரியும் என்பதால்தான் ‘முதலில் நம்ம ஆளுங்கள பிடிங்க' என்று சொல்லியிருக்கிறார்.

திருட்டு டி.வி.டி. தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு பாண்டிச்சேரி புள்ளி, ஜக்குபாய் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துகொண்டதாக ஒரு வார இதழில் வாசித்தேன். தயாரிப்பு நிலையிலேயே இதை கிள்ளி எறிய முயற்சிக்காமல், பதினைந்துக்கும் இருபதுக்கும் விற்றுக் கொண்டிருக்கும் ஏழை வியாபாரிகளின் மென்னியை பிடிப்பது எந்தவகையில் சரியான செயல் என்று தெரியவில்லை. திருட்டு டி.வி.டி.க்கு எதிராக பஞ்ச் வசனங்களை தங்கள் படங்களில் வைக்கும் இயக்குனர்களும், காமெடி காட்சிகளிலும் திருட்டு டி.வி.டி.க்கு எதிராக மெசேஜ் சொல்ல நினைக்கும் நடிகர்களும் முதலில் தங்கள் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகள் யாரென கண்டறிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

* - * - * - * - *

தமிழ்நாட்டின் இப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட் திருட்டு டி.வி.டி. எது தெரியுமா? வேட்டைக்காரன் என்று நினைத்தால் நீங்க ரொம்ப நல்லவ்வ்வர்ர்ரூ.

‘தேவநாதன் ஹிட்ஸ்' என்ற பெயரில் இருபத்தைந்து ரூபாய்க்கு பஜார்களில் கூவி கூவி விற்கப்படும் டி.வி.டி. தான், இந்திய திருட்டு டி.வி.டி. வரலாற்றிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. வேட்டைக்காரன் டி.வி.டி. விற்பவர்களை மடக்கிப் பிடிக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மட்டும் இந்த டி.வி.டி. இன்னமும் மாட்டவில்லை என்பதில் எனக்கு எந்தவித ஆச்சரியமுமில்லை. ஏனெனில் நம் போலிஸார் ஸ்காட்லாந்துயார்டுக்கு திறமை அடிப்படையில் சவால் விடுபவர்கள்.

இந்த டி.வி.டி. சந்தைக்கு வந்த வரலாறு உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கலாம். கோயில் கருவறை உள்ளிட்ட பல இடங்களில் பக்தைகளுக்கு குருக்கள் ஆசிகள் வழங்கிய காட்சிகளை, அவரே அவரது செல்போனில் (நல்ல ஆங்கிளில்) படமாக்கியிருக்கிறார். ஒருமுறை செல்போன் ஏதோ மக்கர் செய்ய, அருகிலிருக்கும் சர்வீஸிங் சென்டர் எதிலோ பழுது பார்க்கத் தந்திருக்கிறார். பழுது பார்த்த மெக்கானிக், போனில் பதிவாகியிருந்த ‘சரக்குகளை' மொத்தமாக உருவி கைமாவாக்கியிருக்கிறார்.

யாரோ ஒரு திருட்டு டி.வி.டி. மொத்த வியாபாரிக்கு கொழுத்த விலைக்கு சரக்கு கைமாற்றப்பட்டு, அவர் மூலமாக சந்தைக்கு வந்தது. சந்தையில் வாங்கிய பக்தர் ஒருவர், கோயில் கருவறையிலேயே கும்மாங்குத்தா என்று பதறிப்போனார். வார இதழ் ஒன்றுக்கு அந்த டி.வி.டி.யின் காப்பியை அனுப்பிவைக்க, அதன்பிறகே எல்லாம் வெட்டவெளிச்சம் ஆனது என்பது வரலாறு.

சமீபத்தில் தோழர் ஒருவர் தீவிரக் கலையார்வம் காரணமாக இந்த டி.வி.டி.யை பர்மா பஜார் பகுதியில் வாங்கியிருக்கிறார். வீட்டில் அனைவரும் தூங்கியப் பிறகு அதிகாலை ஒரு மணிக்கு பூனைநடை போட்டு எழுந்து, டி.வி.யை ம்யூட் செய்துவிட்டு போட்டுப் பார்த்திருக்கிறார். துரதிருஷ்டவசமாக அது தேவநாதன் ஹிட்ஸ் ஆக இல்லாமல், பக்திப்பட பாடல்களின் எம்.பி.3 வகை டி.வி.டி.யாக இருந்திருக்கிறது. சவுண்டு வைத்துப் பார்த்ததில் ‘பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸாம்!'. பெருத்த சோகம் அடைந்த அவர் அன்றிரவு, குன்றத்திலே குமரனோடு கொண்டாட்டமாக இருந்திருக்கிறார்.

மறுநாள் டி.வி.டி. விற்ற கடைக்குப் போய் புகார் செய்திருக்கிறார். கடைபையனோ ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறான். “சார் வேற ஒரு கஸ்டமருக்கு எடுத்துட்டு வந்த டி.வி.டி. சார் அது. மாத்தி கொடுத்துட்டேன் போலிருக்கு”. நண்பருக்கு சரியான டி.வி.டி. கிடைத்துவிட்டது. ஒருவாரமாக தேவநாதன் புகழை காண்பவர்களிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார். தேவநாதனின் காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்பது இப்போது அவருடைய ஆசை.

அவர் காலையாவது அல்லது வேறு எதையாவது தொட்டு கும்பிட்டுக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை. என்னுடைய கவலையெல்லாம் பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸுக்கு பதிலாக தேவநாதன் ஹிட்ஸை தவறுதலாக எடுத்துச் சென்ற ஆன்மீக அன்பரைப் பற்றிதான். ஒன்று, அந்த கலைப்படைப்பை அவர் தெரியாத்தனமாக பக்தி பாடல் என்று நினைத்து குடும்பத்தினர் மத்தியில் போட்டுப் பார்த்து அவமானப்பட்டிருக்கலாம். அல்லது தேவநாதனால் ஈர்க்கப்பட்டு, இரண்டாம் தேவநாதனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.

20 ஜனவரி, 2010

க்ரீன் டெக்னாலஜி : ஒரு சுருக்கம்!


‘க்ரீன் டெக்னாலஜி’ என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளையே பெரிதுமாக பொருளாதாரத்துக்கு உலகம் நம்பிக் கொண்டிருந்தது. உலகமே இவற்றில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக இவற்றுக்கு மாற்று தொழில்நுட்பத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இன்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் வளங்களை எந்தவிதத்திலும் சேதாரப்படுத்தாமல், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் நகர்வது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும்.

எனவேதான் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகளாலும், பல நிறுவனங்களாலும் இத்துறை வளர்ச்சிக்காக செலவழிக்கப்படப் போகும் தொகை நாம் கனவில் கூட காணமுடியாததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளுக்கு கைகொடுக்கும் எனவும் தெரிகிறது.

எதிர்காலத்தில் வளர்ச்சி அடையப்போகும் துறை எப்படி இருக்கும் என்று துல்லியமாக விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். காப்பி குடித்துவிட்டு நாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்பிலிருந்து, விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் எரிபொருள் வரை எல்லாவற்றையுமே மாற்றப்போகிறோம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயற்கைக்கு இணக்கமில்லாத எல்லா விஷயங்களையும் தூக்கி கடாசிவிட்டு, புதிய விஷயங்களை உருவாக்கப் போகிறோம். புதியதோர் உலகம் படைக்கப் போகிறோம். நீங்கள் எழுதும் பேனாவிலிருந்து, வீடு, ரோடு என்று ஒன்றுவிடாமல் எல்லாமே மாறப்போகிறது.

இப்போது இருக்கும் விஷயங்களே, நம் பயன்பாடுகளுக்கு இலகுவாகதானே இருக்கிறது, நாம் ஏன் மாற்றவேண்டும்? என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழலாம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? உலகு உயிர்ப்போடு இருந்தால்தான் மனிதக்குலமும் வாழும். இதுவரையிலான நமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் புல், பூண்டு கூட மிச்சமிருக்காது. இயற்கையின் கோபத்தை யார்தான் தாங்கிவிட முடியும்?

எல்லாவற்றையும் மாற்றுவதற்கான பணி இவ்வருடம் தொடங்குகிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்பணி பல நூற்றாண்டுகளாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் தான், கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் நாம் பாழ்படுத்திய உலகை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!