28 பிப்ரவரி, 2010

இருள்நீக்கும் இந்தியச்சுடர்!


இருளை கண்டு நீங்கள் பயப்படலாம். இருளின் தன்மையும் இதுதான். இதிலிருந்து தப்பிக்க விடியும் வரை காத்திருப்பதுதான் ஒரே வழி. இவ்விதி இரவின் இருளுக்குப் பொருந்தும்.

வாழ்க்கை இருளுக்கு?

இருளின் இன்னொரு பெயர் குறைந்த வெளிச்சம் என்று சொல்லுவதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். விடியுமென்று காத்திருந்து மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் பல்லாயிரம் பேர். என்றாவது ஒருநாள் என் வாழ்க்கை அதுவாகவே விடியும் என்று காத்திருப்பது மூடநம்பிக்கை. முனைப்பான முயற்சிகள் மட்டுமே உங்கள் விடியலை விரைவாக்கும்.

அதுவரை வெளிச்சத்துக்கு ஒரு மெழுகுவர்த்தியாவது துணைக்கு வேண்டும் அல்லவா? பல ஆயிரம் பேருக்கு விடியும் வரை மெழுகுவர்த்தி வெளிச்சம் தந்து காத்து வரும் பணியைதான் செய்துவருகிறது இந்தியச் சுடர்.

சுடர் முதலில் எங்கே தோன்றியது?

உதயகுமார் என்ற இளைஞரும், அவருடைய நண்பர்களும் அப்போது சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். கிராமங்களில் இருந்து நகருக்கு படிப்பு நிமித்தமாக வந்தவர்கள். பெரும்பாலானவர்கள் அவரவர் குடும்பத்தில் முதல் தலைமுறையாக பட்டம் படிப்பவர்கள்.

இந்த கல்விக்காக தாங்கள் அடைந்த சிரமங்களை அவ்வப்போது பேசிக்கொள்வார்கள். போதுமான அறிவும், திறனும் இருந்தும் கூட பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல், பணிபுரிய சென்ற தங்களுடைய சகபள்ளித் தோழர்களை நினைவு கூர்ந்து கொள்வார்கள்.

“சரி. எப்படியோ அடித்துப் பிடித்து நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு?” அக்கறையோடு அவர்களுக்குள் எழுந்த இந்த கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்தார்கள்.

கல்லூரி முடிந்ததும், திசைக்கொரு பறவைகளாய் பறந்தார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை விஸ்வரூபம் எடுத்து நின்ற காலம் அது. பெரும்பாலானவர்களுக்கு அதே துறையில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. தொலைபேசியிலும், நேரிலும் அவ்வப்போது சந்தித்து விவாதிக்கும்போது தங்களுடைய முந்தைய கேள்விக்கு இப்போது அவர்களிடம் பதில் இருந்தது. ஏனெனில் இப்போது இவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தார்கள். தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இயலாதவர்களுக்கு தந்து உதவும் மனமும் அவர்களிடம் இருந்தது.

இப்படித்தான் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘இந்தியச் சுடர்’ நிறுவனம் பிறந்தது. கிராமங்களில் இருந்து வந்தவர்கள் மீண்டும் கிராமங்களுக்கே சென்று, தாங்கள் அடைந்த முன்னேற்றத்தை, தங்களுக்குப் பிறகு வருபவர்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்றிய சுடர் இது. உயர்ந்த நோக்கங்கள் தங்களை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் திறன் படைத்தவை.

தொடங்கப்படும்போது இந்தியச்சுடர் தமக்குள்ளாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் இவை :

- வலிமையான இந்தியாவை உருவாக்க கல்வியை பரவலாக்குவது.

- ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் கல்வியை அவர்கள் எட்டுமாறு வகை செய்து தருவது.

- குழந்தைகளின் திறனை சமூக-கலாச்சார மேம்பாட்டு நிகழ்வுகளின் மூலமாக அதிகரிப்பது.

- சுய ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் பணியை குழந்தைகளிடமிருந்தே துவங்குவது.

இந்த உறுதிமொழிகளை அரசுசாராத ஒரு அமைப்பு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமென்ன, அதுவும் குறிப்பாக கல்வி குறித்த அக்கறையோடு? இங்குதான் இன்றைய கள யதார்த்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று வருடங்களாக தன்னாட்சி செய்துவந்தும் இந்தியாவின் நிலை கீழ்க்கண்டவாறுதான் இருக்கிறது.

- 65.4% மக்களுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். சுமார் முப்பத்தைந்து கோடி பேருக்கு எழுத்து, படிப்பு வாசனையே இல்லை.

- ஏழ்மை காரணமாக ஆயிரம் குழந்தைகளில் எண்பத்தி இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டிய வயதில் பணிக்கு அனுப்பப் படுகிறார்கள்.

- 2,390 லட்சம் பேருக்கு வெறும் ஐந்து லட்சம் பள்ளிகளே இருக்கின்றன.

- பதினான்கு சதவிகிதம் பள்ளிகளுக்கு முறையான கட்டிடம் இல்லை.

- முப்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளுக்கு கரும்பலகை கூட இல்லை.

- முப்பது சதவிகிதம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரோடு இயங்கி வருகின்றன.

- ஐம்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.

- பள்ளிக்கு வரும் குழந்தைகளில் எழுபது சதவிகிதம் பேர் பதினான்கு-பதினைந்து வயதுகளில் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுகிறார்கள்.

இந்த புள்ளி விவரத்தைப் பார்த்ததுமே, நாம் செய்யக்கூடிய விஷயம் இரண்டே இரண்டாகதான் இருக்க முடியும். ஒன்று நம் அரசுகளை திட்டித் தீர்த்துவிட்டு, மாலை முதல் காட்சி சினிமா பார்க்கப் போய்விடலாம். இரண்டாவது, அரசினை மட்டுமே முழுமையாக எதிர்பாராமல் இந்நிலை மாற நம்மாலான அதிகபட்ச பங்கினை தந்திட உறுதியேற்கலாம். இந்தியச் சுடர் இளைஞர்கள் இரண்டாவது உறுதியை ஏற்றார்கள்.

ஆறுவிதமான திட்டங்களை தீட்டினார்கள்.

ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துதல் : கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தங்கள் செலவில் நியமிப்பது. டியூஷன் மையங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பிரத்யேக கல்வி அளிப்பது.

கல்வி கருவிகளை வழங்குதல் : பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப்பை, சீருடை, மிதியணி உள்ளிட்ட செலவு பிடிக்கும் விஷயங்களின் சுமையை, ஏழைப் பெற்றோர்களிடமிருந்து நிறுவனம் தாங்கள் சுமக்கத் தொடங்குவது.

சுயமுனைப்பு பயிற்சி : சுயமுனைப்பு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குவிஸ், ஆசிரியர் பயிற்சி போன்ற நிகழ்ச்சிகளை தேவைப்படும் பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்த்துவது.

மாணவர்களை தத்தெடுத்தல் : ஒரு ஆண்டு முழுவதும் ஒரு மாணவனுக்கு ஆகும் கல்விச்செலவு மொத்தத்தையும் தத்தெடுத்தல்.

கணிப்பொறி பயிற்சி : கணிப்பொறி மையங்களை நிறுவி இலவச கணிப்பொறி பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குதல்.

நூலகம் : நூலகமற்ற பள்ளிகளில் நூலகங்களை உருவாக்குதல்.

இந்த திட்டங்களை நிறைவேற்ற இந்தியச் சுடரை, அரசு பதிவுபெற்ற நிறுவனமாக மாற்றி, அறங்காவலர்களை நியமித்தார்கள். கிராமங்களுக்கு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, அரசுப்பள்ளிகளுக்கு படையெடுத்தார்கள். யாருக்கு, எங்கே உதவி தேவைப்படுகிறது என்று கண்டறிந்தார்கள்.

உறுப்பினர்களிடையே நிதி பெற்று உதவினார்கள். மேலும் தேவைப்பட்ட நிதிகளை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலமாக சேகரித்தார்கள். ஆரம்பத்தில் எழுபது பேர் உறுப்பினர்களாக இருந்த அமைப்பு இன்று எண்ணூறுக்கும் மேற்பட்டவர்களாக வளர்ந்திருக்கிறது. உதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு பெருகியே வருகிறது.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அமைப்பு இன்று பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மணிப்பூர், மத்தியப் பிரதேசம் என்று மற்ற மாநிலங்களுக்கும் கிளைபரப்பு கல்விச்சேவையை வழங்கி வருகிறது.

கடந்த ஆறு வருடங்களில் இருபத்தி ஆறு ஆயிரம் மாணவர்கள் வாழ்வில் இந்தியச் சுடர் வெளிச்சம் ஏற்றியிருக்கிறது. முப்பத்தி நான்கு லட்ச ரூபாய் அளவிற்கு நிதி திரட்டி கல்விக்காக செலவழித்திருக்கிறார்கள்.

செலவு விஷயத்தில் சவுதி அரேபிய சட்டங்களுக்கு நிகரான கறார்த்தன்மை இருப்பதில் இந்தியச் சுடர் மற்ற அரசுசாரா நிறுவனங்களிடம் இருந்து வேறுபடுகிறது. திரட்டப்படும் நிதியின் ஒவ்வொரு காசும், பயனாளிக்கு போய்ச்சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுவரை இந்நிறுவனத்தின் நிர்வாகச்செலவு முழுவதையுமே உறுப்பினர்களே தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். பயணப்படியோ, வேறு படிகளோ இதில் பணியாற்றுபவர்களுக்கு இல்லை. ஒரு திட்டம் தொடர்பாக, ஒரு உறுப்பினர் மணிப்பூருக்கு செல்ல வேண்டுமானால் அவரது சொந்த செலவில்தான் செல்ல வேண்டும். நிறுவனம் தனது நிதியிலிருந்து பணம் தராது.

“கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இது. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் திரட்டும் ஒவ்வொரு காசும், யாருக்காக தரப்படுகிறதோ, அவருக்கு போய்சேர வேண்டும் என்பதால் இந்த கடுமையை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அறங்காவலர்களில் ஒருவரான சற்குணன். இந்த ‘சொந்தச்செலவில் சேவை’ திட்டத்துக்கு இதுவரை உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கூடுதல் தகவலை தருகிறார் இன்னொரு அறங்காவலரான சிவநாராயணன்.

இந்தியச் சுடர் உறுப்பினர்கள் தயாரித்திருக்கும் ‘உயர்கல்வி வழிகாட்டி’ என்ற பதினாறு பக்கநூல் அவர்களது குறிப்பிடத்தகுந்த முக்கியமான சாதனை. மேல்நிலை பள்ளிக்கல்வி முடித்த ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்படும் குழப்பங்களை போக்குகிறது. உயர்கல்வி குறித்த எல்லா வாய்ப்புகளையும் சுருக்கமாக, எளிமையாக அலசி ஆராய்கிறது. இந்நூலை இலவசமாகவே தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

“கல்வியால் முன்னேறியவர்கள், அடுத்த தலைமுறையின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த கல்விச்சேவையில் முன்னுரிமை வழங்கி வருகிறோம். கல்விக்காக ஆகும் செலவினை தடைக்கல்லாக நினைக்காமல் எங்களிடம் மாணவர்கள் வரலாம். எங்களால் இயன்றதைச் செய்கிறோம்” என்று வாக்கு கொடுக்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனரான உதயகுமார்.

அரசின் கையை எதிர்பார்க்காமல், தன் கையே மற்றவர்களுக்கு உதவும் என்று களமிறங்கியிருக்கும் இந்த இளைஞர்கள், கல்விப்புரட்சிக்கான விதையை விதைத்து வருகிறார்கள். எதிர்கால சமூகம் கனியை ருசிக்கும் என்று நம்பலாம்.

யாரோ ஒருவருக்கு விளக்கேற்றினால், நீங்கள் செல்லவேண்டிய பாதையும் ஒளிமயமாகிறது!

இந்தியச் சுடர் தொடர்புக்கு :
இணையம் : www.indiasudar.org
மின்னஞ்சல் : admin@indiasudar.org
வி.உதயகுமார், தலைமை நிர்வாகி : 9886733607
டி.சற்குணன், நிர்வாகி : 9884153800

(நன்றி : புதிய தலைமுறை)

26 பிப்ரவரி, 2010

ஆட்டோ ராமர்!


சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து சாந்தோமுக்கு செல்ல புகைப்படக் கலைஞரோடு நின்றிருந்தோம். அவசரத்துக்கு பஸ் கிடைக்கவில்லை. வந்த நான்கைந்து ஆட்டோக்களும் சாந்தோம் செல்லத் தயாராக இல்லை. “சாந்தோமா? நூறு ரூபாய் கொடு!” என்று ஒரு ஆட்டோக்காரர் கேட்க, மூன்று கிலோ மீட்டர்தானே, நடந்தே போய்விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.

‘CALL AUTO 9941468215’ என்று எழுதப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று, நாம் கைகாட்டாமல் தாமாகவே அருகில் வந்து நின்றது.

“வணக்கம். நான் ஸ்ரீராமர். ஆட்டோவுக்காக காத்திருக்கீங்களா? எங்கே போகணும்?” என்று அந்த டிரைவர் கேட்டதுமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

“சாந்தோம்” என்றதுமே, “உட்காருங்க. போகலாம்” என்றார்.

உட்கார்ந்தவுடனேயே மின்விசிறியின் ஸ்விட்சைத் தட்டினார். “அக்டோபர் மாச வெயில்லு ஏப்ரலையே மிஞ்சிடும் போலிருக்கே?” என்று கமெண்டும் அடித்தார். காசு பற்றி பேசவேயில்லை. சாதாரண ஆட்டோவே நூறு ரூபாய் கேட்கும்போதும், மின்விசிறி வசதியெல்லாம் கொடுக்கும் ஆட்டோவில் சொத்தையே எழுதிவாங்கி விடுவார்களே என்று பயந்தபோது, மீட்டரை சொடுக்கினார்.

“பயப்படாதீங்க சார். மீட்டர் என்ன காட்டுதோ, அந்தப் பணத்தை மட்டும்தான் வாங்குவேன். இருபது ரூபாய்க்குள்ளே தான் ஆகும்!” என்றார் ஆட்டோ நண்பர்.

சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர்கள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். ஸ்ரீராமரும் ஒருவர். “சைட்லே படிக்க பத்திரிகைங்க வெச்சிருக்கேன். தேவைப்பட்டா எடுத்துங்க சார்!” என்றவாறே வண்டியை கிளப்பினார். சில நாளிதழ்களும், வார இதழ்களும், கூடவே நம்ம புதியதலைமுறையும். நிமிர்ந்துப் பார்த்தால் ஒரு டைம்பீஸ். “எல்லாருமே வாட்ச் கட்டுறதில்லை. எவ்வளவு நேரத்துலே போகவேண்டிய இடத்துக்கு போகிறோம்னு பயணிகள் தெரிஞ்சுக்கணுமில்லே?”

சென்னையின் வரைபடம் ஒன்றும் செருகப்பட்டிருக்கிறது. “சென்னை ரொம்ப பெரிய ஊருங்க. புதுசா இங்கே வர்றவங்க குழம்பிடறாங்க. அவங்க வசதிக்காகதான் இந்த மேப்!”
அடுத்தடுத்து சதிஷ்குமார் என்கிற ஸ்ரீராமர் இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டே போக, அவரைப் பற்றி மெல்ல விசாரித்தோம்.

“முப்பத்தி மூணு வயசாகுது. எட்டாவது வரைக்கும்தாங்க படிச்சிருக்கேன். என்னோட அக்காவெல்லாம் ரெண்டு, மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவில் போகுறதுக்கே அநியாயமா காசு கொடுப்பதைப் பார்த்து மனம் வெதும்புவேன். ஆட்டோக்காரங்க கிட்டேருந்து பயணிகளை காப்பாத்தணும், நாமளும் ஏதாவது வேலை பார்க்கணும்னு ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன். சுயநலத்திலும் ஒரு பொதுநலம்னு வெச்சிக்குங்களேன்.

மீட்டருக்கு மேலே அஞ்சு பைசா வாங்குறதில்லே. பயணிகளை மரியாதையா நடத்துறேன். என்னோட விருந்தோம்பலில் திருப்தியானவங்க சில பேர், அவங்க நண்பர்களுக்கு என்னைப் பத்திச் சொல்லுவாங்க. அதனாலே நிறைய பேர் என் ஆட்டோவைத் தேடி வந்து பயணிக்கிறாங்க. அவங்க வசதிக்காக இந்த ஆட்டோவை ‘கால் ஆட்டோ’வா மாத்தியிருக்கேன். என் செல் நம்பருக்கு போன் பண்ணா, வீட்டுக்கு வந்து பிக்கப் பண்ணிக்குவேன். பொதுவா மேற்கு மாம்பலம், தி.நகர், மயிலாப்பூர் ஏரியாக்கள் தான் நாம வேலை பார்க்குற இடம். என்னைப் பத்தி கமிஷனர் ஆபிஸ்லே கேள்விப்பட்டு கூப்பிட்டு பாராட்டியிருக்காங்க. ரோட்டரி சங்கத்தில் ‘சென்னையின் சிறந்த ஆட்டோ டிரைவர்’னு விருதுகூட கொடுத்திருக்காங்க!” சிக்னல்களை கவனமாக கவனித்தவாறே நம்மிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“எல்லா ஆட்டோக்காரங்களும் உங்களை மாதிரி இல்லாம ஏன் இப்படி அநியாயமா காசு வாங்குறாங்க?”

“ஒரு பயணியா நீங்க இப்படித்தான் நினைப்பீங்க. பத்துவருஷமா மினிமம் 7 ரூபாய், கிலோ மீட்டருக்கு ரூ.3.50 என்பதுதான் அரசு ஆட்டோக்காரங்களுக்கு நிர்ணயிச்ச கட்டணம். இப்போதான் மினிமம் ரூ.14.00, கிலோ மீட்டருக்கும் ரூ.6.00ன்னு உயர்த்தி இருக்காங்க. பெட்ரோல் விக்கிற விலையிலே இது ரொம்ப ரொம்ப குறைவான நிர்ணயம்.

ஆட்டோ சங்கங்கள் கேட்கிறமாதிரி குறைந்தக் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 10 ரூபாய்னு நிர்ணயிச்சா, பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க. அப்போதான் கட்டுப்படியும் ஆகும். எப்படி இருந்தாலும் ‘லாபமோ, நஷ்டமோ’ என்னைப் பொறுத்தவரைக்கும் மீட்டர் போட்டுதான் ஓட்டணும்னு உறுதியா இருக்கேன்!” என்கிறார்.

நாம் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது. மீட்டர் காட்டிய இருபது ரூபாயை கொடுத்துவிட்டு விடைபெறும்போது, “இன்னமும் வாடகை ஆட்டோதான் சார் ஓட்டுறேன். பகல் வாடகை 150 ரூபாய், முழுநேரம் ஓட்டுனா 300 ரூபாய். அப்படியிருந்தும் எனக்கு சராசரியா தினமும் 150, 200 ரூபாய் வருமானம் கிடைக்குது. சீக்கிரமா சொந்த ஆட்டோ வாங்கணும். ஆட்டோ வாங்கிட்டா ஈஸியா பர்மிட் கொடுக்கறோம்னு துணை கமிஷனர் சொல்லியிருக்கார். வர்றது வாய்க்கும், வயித்துக்குமே சரியா போகுதே. எங்கிருந்து வாங்குறது?” என்று அங்கலாய்த்தார் ஸ்ரீராமர்.

விரைவில் சொந்த ஆட்டோ வாங்கி சிறப்பான சேவைபுரிய வேண்டுமென வாழ்த்தி விடைபெற்றோம்.

எக்ஸ்ட்ரா மேட்டர் : சென்னையில் மட்டுமே அறுபதாயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டுனர்களாக பணிபுரிகிறார்கள். இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு தரும் இத்தொழில் புரையோடிப் போயிருப்பதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமே காரணமல்ல. யாரெல்லாம் சொந்த ஆட்டோ வாங்கி வைத்து, ஓட்டுனர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள் என்றொரு புலனாய்வு மேற்கொண்டால் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவரும். சென்னைக்கு வரும் பயணிகளும், வெளிநாட்டவர்களும் சென்னைவாசிகளை தங்கள் ஆட்டோ அனுபவங்களை வைத்தே மட்டமாக எடைபோடுகிறார்கள். போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு, சீர்த்திருத்த வேண்டிய உடனடி பிரச்சினை இது.

அக்டோபர் 29, 2009 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான செய்தி இது.

இரண்டு மாதங்கள் கழித்து ஒருநாள் ராமர், புதிய தலைமுறை அலுவலகத்துக்கு நேரில் வந்திருந்தார். ஆசிரியரை சந்தித்து, தன்னுடைய புதிய சொந்த ஆட்டோவை காட்டவேண்டுமென்பது அவரது வருகையின் நோக்கம். இப்போது ராமர் வங்கியில் கடன் பெற்று வாங்கிய சொந்த ஆட்டோ அது. கட்டுரையை வாசித்த பெங்களூர் வாசகர் ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை ராமருக்கு செய்துத்தந்தார். வங்கியில் கட்டவேண்டிய முன்பணத்தையும் அவரே கட்டியிருக்கிறார்.

எழுதுவதால் மட்டுமே எப்போதாவது இதுபோன்ற மனதுக்கு திருப்தி தரும் ஓரிரு நல்ல விஷயங்களாவது நடைபெறுகிறது.

25 பிப்ரவரி, 2010

கான் - ஒரு எதிர்வினை!

Hi

I do not know why you guys always support Muslims in the first place.

If the same movie has been taken by a Hindu, will you appreciate?
Immediately, You and Your groups will start writing about SECULARISM

Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also?


Think man. Think and write before you think again.

During mogul period what has happened to our country. Imagine.
Go and read the books. You will know the truth.

Sooner the entire India will be converted to Islam and Christianity.
Do not worry. Your kid and my kid will do a research on Hinduism just like Americans are doing about Greeks and Latin. But they are the one burried those civilization.


Bye

Regards
Ramanujam Varaddhan

* - * - * - * - * - * - * - * - *

வணக்கம் திரு ராமானுஜம் வரதன்!

இப்படம் ஒரு இந்து இயக்குனரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. நாயகனை தவிர்த்து படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானோர் இந்துக்களே.

முகலாயர் காலத்தில் ‘இந்தியா’ என்றொரு நாடே கிடையாது. இன்று இருக்கும் அமைப்பு கூட பரஸ்பர நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பு மட்டுமே. இங்கே பரஸ்பர நலன்கள் மறுக்கப்படுவதுதான் தெலுங்கானா, நக்சல்பாரி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அஞ்சுவதைப் போல இந்நாடு ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்துக்கோ, கிறிஸ்தவத்துக்கோ மாறக்கூடிய வாய்ப்பு எக்காலத்திலும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த மத விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால் இந்துக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

சிந்திக்க வேண்டியது நானல்ல. நீங்கள்!

அன்புடன்
யுவகிருஷ்ணா

24 பிப்ரவரி, 2010

மை நேம் ஈஸ் கான்!


சரியாக எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக என்பது நினைவில்லை. 1999 உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. வெற்றி நிலை மாறிக்கொண்டே இருந்தது. அண்ணாசாலை விஜிபி ஷோரூமுக்கு முன்பாக சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியா தோற்பது போன்ற ஒரு சூழல்.

நடுத்தர வயதுடைய ஒருவர் வெறுப்பாக சொன்னார். “துலுக்கப் பசங்கள்லாம் கொண்டாடுவானுங்க! பாகிஸ்தான் ஜெயிக்கப் போவுது!!” இத்தனைக்கும் அப்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் முகம்மது அசாருதீன்.

இறுதியில் வென்றது இந்தியா. சாலை என்று பாராமலும் ‘ஹூர்ரே’ என்று குரலெழுப்பி, ஹைவோல்டேஜ் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவர் கமெண்டு அடித்த நடுத்தர வயதுக்காரர் அல்ல. அவருக்கு அருகில் இருந்த இளைஞர். தலையில் வெள்ளைத் தொப்பி. திருவல்லிக்கேணிகாரராக இருக்கலாம்.

நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது. ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை. ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்.

* - * - * - * - * - *

ஷாருக்கின் ‘மை நேம் ஈஸ் கான்’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு சதவிகிதத்தை கூட என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஒரு இஸ்லாமியராகவே மனதளவில் வாழும் சாரு போன்றவர்களின் விமர்சனம் சரியான வெளிப்பாடாக அமையும் என்று நம்புகிறேன். அடையாளம் தொடர்பான அரசியலை மிக நுட்பமாக பேசும் படம் இது. உணர்வுகளை அலைக்கழிக்கும் இதுபோன்ற திரைப்படங்கள் வெளியாவது அரிதிலும் அரிதாக நடக்கும் அபூர்வம்.

ஏதோ வாயில் நுழையாத பெயருடைய நோய் கொண்ட ரிஸ்வான்கான் சூழ்நிலை காரணமாக அமெரிக்கா செல்கிறான். மூளை தொடர்பான நோய் அது. புரிந்துகொள்வதிலும், பேச்சிலும், நடத்தையிலும் மற்றவர்களிடமிருந்து சற்றே வேறுபட்டவன் ரிஸ்வான். ஆயினும் அவனுக்கு வேறு சில விஷயங்களில் அதீதமான மாற்று ஆற்றல் உண்டு.

அமெரிக்காவில் இளம் விதவையான மந்திராவை சந்திக்கிறான். இயல்பாக மலரும் காதல் திருமணத்தில் முடிகிறது. மந்திராவுக்கு ஏற்கனவே ஒரு மகன் உண்டு. 2001 செப்.11 சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர் மீதான அமெரிக்கர்களின் விரோத மனோபாவம் நீறுபூத்த நெருப்பாய் மாறி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வன்முறையில் முடிகிறது. ஒரு இஸ்லாமியன் தனக்கு திடீர் தகப்பன் ஆனதாலேயே மந்திராவின் மகன் ஒரு வன்முறையில் உயிரிழக்கிறான்.

‘கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!’ என்று மந்திரா கோபத்தில் குற்றம் சாட்டுகிறாள். “உனக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்!” என்று கத்துகிறாள். கோபத்தில் விளைந்த இந்த அர்த்தமற்ற வார்த்தைகளை கான் சீரியஸாக எடுத்துக் கொள்கிறான். அமெரிக்க அதிபரை சந்திக்க தன் பயணத்தை தொடர்கிறான். இதையடுத்து அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கான் அமெரிக்க அதிபரை சந்திக்க முடிந்ததா? என்பதுதான் கதை.

தான் பிறந்த இனத்துக்கு ஒரு கலைஞனால் செய்யப்படக்கூடிய உச்சபட்ச கைமாறினை ஷாருக்கான் செய்து தந்திருக்கிறார். அமெரிக்க அரசியல், அதன் குடிமக்கள், வர்க்கம் - இவை தொடர்பான வேறுபாடுகளை நுணுக்கமாக பதிவு செய்கிறார். “அமெரிக்காகாரங்களே இப்படித்தான் எசமான்!” என்று புலம்பாமல், மனிதத்தை மதிக்கும் அமெரிக்கர்களையும் கருப்பின தாய் கதாபாத்திரத்தின் வாயிலாக படம்பிடித்து காட்டுகிறார்.

‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசனின் நடிப்பைக் கண்டு சிலாகித்தபோது, இனிமேல் இப்படி நடிக்க ஒருவன் பிறந்துதான் வரவேண்டும் என்று நினைத்தேன். ஷாருக்கான் எப்போதோ பிறந்துவிட்டார். ஒரு காட்சியிலாவது கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி ஷாருக்கின் ஹீரோயிஸம் எங்காவது வெளிப்படுமா என்று பார்த்தோமானால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அடுத்த ஆண்டு ஷாருக் வீட்டின் கதவுகளை வரிசையில் நின்று விருதுகள் தட்டும்.

ஒரு சினிமாவுக்கு தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என்னவென்று படம் வரைந்து பாகம் குறித்து காட்டுகிறது ’மை நேம் ஈஸ் கான்’. குறிப்பாக கஜோலுக்கான ஒப்பனை, உடையலங்காரம் வழியே கதையின் வலிமை வெகுவாக கூட்டப்படுவது அபாரம். ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு, ஷங்கர் என்லாயின் இசை என்றெல்லாம் தனித்தனியாக குறிப்பிட இயலாதவாறு, ஒட்டுமொத்தமாக ஒரு அதிசயத்தை சாதித்துக் காட்டியிருக்கின்றனர் இந்த படக்குழுவினர்.

ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.

அப்போது இந்தியர்களுக்கு?

கமல்ஹாசன் விரைவில் ‘மை நேம் ஈஸ் தெனாலி’ என்றொரு படம் எடுப்பார். 1991, மே 21-க்குப் பிறகு, சென்னையில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழன் சோனியா காந்தியை சந்தித்து, “நான் தெனாலி, நான் விடுதலைப்புலி அல்ல” என்று சொல்லுவது கதையாக இருக்கும். இந்தியத் தணிக்கைக்குழு அனுமதித்தால் இப்படத்தை இந்தியர்களுக்கு போட்டுக் காட்டலாம்.

23 பிப்ரவரி, 2010

தியாகம் மீதான வெறுப்பு!


சில நாட்களாக தியாகங்கள், தியாகிகள் மீதான பற்றோ, பிரமிப்போ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பயமேற்பட்டு இப்போது வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். ‘தன்னலமில்லாத பொதுநலம் பயனில்லாதது’ என்று கவுதம்சார் அடிக்கடி சொல்லுவார். அந்த கூற்றின் மீது ஆரம்பத்தில் எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. இப்போது இதுதான் யதார்த்தம் என்பதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

2007ஆம் ஆண்டு தமிழ்செல்வன் மறைந்தபோது, ”இனத்துக்காக உயிரிழந்தாரே? வாழ்ந்தால் இவரைப்போல வாழவேண்டும்!” என்று உருகியதுண்டு. 2009ன் தொடக்கத்தில் முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து, தியாகங்களை கண்டு அஞ்சத் தொடங்கினேன். வரலாறு நெடுகிலும் தியாகிகளும், தியாகங்களும் போற்றப்படுகிறார்கள். ஆயினும் பெரும்பாலும் தியாகத்துக்குப் பிறகான அவர்களது குடும்பங்கள் என்ன ஆயின என்பது குறித்த குறிப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஓரிரு குறிப்புகளும் கூட வேதனையானவையே.

உச்சபட்சமாக மே 19. அடுத்தடுத்து தமிழீழத் தேசியத் தலைவரின் குடும்பத்தார் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள், அவரை தீவிரமாக எதிர்த்து வந்தவர்களுக்கும் கூட கலக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

’போராட்டமே தவறு!’ என்ற முட்டாள்தனமான முடிவுக்கு நான் அவசரமாக வந்துவிடவில்லை. நம்பியிருந்த இனத்துக்கான, வர்க்கத்துக்கான, மனிதகுலத்துக்கான தியாகங்கள் அனைத்துமே போற்றத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் மூன்றாவது மனிதராக பார்க்காமல், உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தாரின் பார்வையில் பார்த்தோமானால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

பொதுநலவாதிகள் ஊருக்கு நல்லவர்களாக இருந்தாலும், குடும்பத்துக்கு வில்லன்களாகவே அறியப்படுகிறார்கள். நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர் யாரையாவது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவரது மகனிடமோ, மகளிடமோ, மனைவியிடமோ பேசிப்பாருங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். மாணவப் பருவத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு நேர்மையான செயல்வீரராக வாழ்ந்த என் அப்பாவும் கூட குடும்பத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பெயர் எடுத்ததில்லை. நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.

லேட்டஸ்ட் அதிர்ச்சி தோழர் உ.ரா.வரதராசன்.

1989 ஜனவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தல் நேரம் நினைவுக்கு வருகிறது. எனக்குத் தெரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உச்சபட்ச செல்வாக்கோடு இருந்த காலம் அது. தோழர் வரதராசன் வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளர். அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர். மார்க்சிஸ்ட் செயல்வீரர்கள் வில்லிவாக்கம் மட்டுமன்றி சென்னை முழுவதுமே சிகப்புக்கொடியோடு சைக்கிள் பேரணிகளை நடத்துவார்கள்.

அக்கட்சியில் இருந்த என்னுடைய உறவினர் ஒருவர் என்னையும் சைக்கிளில் அமரவைத்து அழைத்துப் போயிருக்கிறார். முடிவில் பிரச்சார பொதுக்கூட்டம். சேத்துப்பட்டுக்கு அந்தப் பக்கம் என்பதாக நினைவு. வரதராசனை அப்போது பார்த்திருக்கிறேன். அப்பாவோடு சென்ற கூட்டங்களில் திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களையே அதுவரை பார்த்திருந்ததால், ஒரு கம்யூனிஸ்டு வேட்பாளர் எனக்கு வேறுமாதிரியாக தெரிந்தார். ‘வெற்றி வேட்பாளர்’ போன்ற அடைமொழிகளின்றி தோழர் என்றே அவரை பேசியவர்கள் அனைவரும் விளித்தனர். அந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிஜமான வெற்றி வேட்பாளர்.

கடந்த 18ஆம் தேதி மாலை நாளிதழ்களின் ’மார்க்சிஸ்ட் தலைவர் மாயம்’ என்ற போஸ்டரை கண்டபோது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படவில்லை. மாயமானவர் வரதராசன் என்று அறிந்தபோதுதான் இதயத்தைப் பிசைந்தது. குடும்ப வாழ்க்கையின் நெருக்குதல் காரணமாக தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார் என்று வாசித்தபோது, இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தியாகங்களின் மீதான வெறுப்பு எனக்கு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஊன், உறக்கமின்றி, நேர்மையாக ஒரு கட்சிக்கு உழைத்திருக்கிறார். பெரும்பாலான மார்க்சிஸ்ட் தலைவர்களைப் போலவே ஊழலுக்கு ஒவ்வாதவர். அவரது நேர்மையை ஊரே போற்றுகிறது. என்ன பிரயோசனம்?

இன்று தினகரன் நாளிதழின் தலையங்கத்தை வாசித்தேன். இம்மாத துவக்கத்தில் தோழரின் மனைவி மாநிலக்குழுக்கு அளித்த புகாரின் பேரில், கொல்கத்தாவில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் வரதராசன் மீது விசாரணை நடந்திருக்கிறது. பெண் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் கட்சியின் மத்தியக்குழு சீரியஸாகவே விசாரித்திருக்கிறது. எல்லா குற்றச்சாட்டுகளையும் வரதராசன் மறுத்திருக்கிறார். ஆனால் உறுப்பினர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தி, ஒட்டுமொத்தமாக பொறுப்புகளில் இருந்து விடுத்தி, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று தலையங்கம் குறிப்பிடுகிறது.

மனைவியின் சந்தேகத்தால் கூட மன உறுதி குறையாத வரதராசன், விபரீத முடிவை எடுக்க கட்சிதான் காரணமாக இருந்திருக்கிறது. இத்தனை ஆண்டு உழைப்புக்கும், தியாகத்துக்கும் இதுதான் பரிசு. பாவத்தின் சம்பளமாக அல்ல, தியாகத்தின் சம்பளமாக அவருக்கு மரணம் வாய்த்திருக்கிறது. அவரை கட்சி கைவிட்டு விட்ட சூழலிலும் கூட கட்சியை விட்டுக்கொடுக்காத அவரது உயர்ந்த மனம், அவர் எழுதிய கடைசிக் கடிதங்களில் வெளிப்படுகிறது.

நீங்களே சொல்லுங்கள். தியாகத்தை வெறுக்காமல் போற்றவா முடியும்?