
’தில்லுதுர’ என்ற மொக்கையான சீண்டல் விளம்பரத் தொடரின் தொல்லை இப்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்தது ஆரம்பித்து விட்டார்கள். வெச்சகுறி தப்பாதாம்.
அதிருக்கட்டும். அதென்ன சீண்டல் விளம்பரம்?
‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது :
சீண்டல் விளம்பரங்களை (Teaser ads) நீங்கள் அதிகம் கண்டிருக்க முடியும். இங்கே சீண்டுதல் என்பது மக்களை சீண்டுவதாக பொருள்படும். ஒரு விளம்பரத்தை கண்டதுமே தலையும் புரியாமல், வாலும் புரியாமல் அந்த விளம்பரத்தை தந்த நிறுவனம் எது, விற்க விரும்பும் பொருள் எது என்று தெரியாமல் நீங்கள் குழம்பினால் அதுதான் சீண்டல் விளம்பரம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற கேள்வியை எங்கு பார்த்தாலும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இல்லையா? அதுதான் சீண்டல் விளம்பரம். சீண்டல் விளம்பரங்கள் எந்த பொருளையும் உடனடியாக விற்றுத் தராது, எந்த நிறுவனத்தையும் பற்றி உடனே மக்களை பேசவைக்காது. ஆனாலும் சீண்டலை மக்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட மாட்டார்கள். சீண்டல் விளம்பரங்கள் மூலமாக நிறுவனத்தின் பிராண்டை மக்கள் மத்தியில் வெகுவாக பரவலாக்க முடியும்.
ஓக்கே, கமிங் பேக் டூ த பாயிண்ட்.
‘வச்ச குறி தப்பாது’ யாரை குறிவைத்து விளம்பரப் படுத்தப் படுகிறது என்று கடந்த ஒருவாரமாய் பல்வேறு வேண்டுகோள்களை ஏற்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்த விளம்பரத்துக்கான மீடியம் மூன்று வகைகளாக இருக்கிறது. 1) போஸ்டர், 2) பத்திரிகை விளம்பரம், 3) டிவி விளம்பரம்.
சினிமா சுவரொட்டிகளுக்கு நடுவில் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்தால்தான் இந்த போஸ்டர்களை காணமுடிகிறது. பொதுவாக அரசியல் போஸ்டர்களும், ஏனைய அடாசுகளும் ஒட்டப்படும் இடங்களில் காணமுடிவதில்லை. எனவே சினிமா போஸ்டர் ஒட்டும் ஆட்களே இதையும் ஒட்டுகிறார்கள் என்று கண்டுகொள்ளலாம்.
பத்திரிகை விளம்பரங்களிலும் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு கீழேயும், தம்பிக்கு இந்த ஊருக்கு மேலேயும் நம் வச்சகுறி இடம்பெறுகிறது. டிவி விளம்பரம் என்று பார்த்தால் விஜய் டிவியில் மட்டும் கவுபாய் இசையோடு ஒளிபரப்பாகிறது.
விசிபிலிட்டி மற்றும் டார்கெட் ஆடியன்ஸ் அடிப்படையில் பார்த்தோமானால் இது சினிமா விளம்பரமென்று அதிநிச்சயமாக சொல்லலாம். அப்படி மட்டும் இல்லையெனில் விளம்பரத்தை தரும் விளம்பர ஏஜென்ஸியின் கிரியேட்டிவ் டைரக்டர்கள் அதிபுத்திசாலிகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

என் விளம்பர அனுபவத்தில் உணர்வது என்னவென்றால் புராடக்டுக்கு டீசர் வேலைக்கு ஆகாது. சர்வீஸுக்கு தான் இந்த உத்தியை பயன்படுத்தலாம். புராடக்ட்டை டமாலென்று காட்சிக்கு வைத்து சிறப்பம்சங்களை வரிவரியாக அடுக்குவதே இந்திய மனோபாவத்துக்கு வேலைக்கு ஆகும்.
சினிமா என்பது ஒரு புராடக்ட். சர்வீஸ் அல்ல. ’இரும்புக்கோட்டை முரட்டு’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகளை டார்கெட் செய்து அடித்தால் மட்டுமே வெச்சகுறி தப்பாமல் வசூலை அள்ளலாம். கோடைவிடுமுறை ரிலீஸ் என்பது அருமையான வாய்ப்பு. ஆனால் இதுபோல சீண்டலாக மாற்றி மாற்றி அடிப்பது என்பது இலக்கில்லாத வெத்து அடியாக மட்டுமே இருக்கும்.
சிம்புதேவன் ‘இம்சை அரசன்’ விளம்பரங்களில் டக்கர் அடி அடித்திருந்தார். குழந்தைகளை சரியாக டார்கெட் செய்து அடிக்கப்பட்ட சரியான அடி அது. அதே பாணியையே இப்படத்துக்கும் தொடர்ந்திருக்கலாம். இப்பொழுதே கவுபாய் எலிமெண்ட்ஸை (தொப்பி, பொம்மை துப்பாக்கி போன்றவை) விற்பனைக்கு வைத்து அல்லது குழந்தைகளுக்கு பரிசுகளாக கொடுத்து படத்துக்கு ஹைப்பை ஏற்றமுடியும்.
இவ்வளவு நாளாக இறைக்கப்பட்டது விழலுக்கு இறைத்த நீர் என்றே நினைக்கிறேன்.
