2 ஜூலை, 2010

ஒரு கோடி ரூபாய் நூலகம்!

“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அரசுப்பள்ளியில், அதன் முன்னாள் மாணவர்கள் நூலகம் அமைத்திருக்கிறார்கள்!” என்று நாம் கேள்விப்பட்ட செய்தியே ஆச்சரியமளித்தது. ‘அவ்வளவு பணத்தில் எவ்வளவோ செய்யலாமே, ஏன் குறிப்பாக நூலகம்?’ என்ற கேள்வியோடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்குள் நுழைந்தோம்.

பேரூராட்சி நிர்வாகத்திலிருக்கும் ஊத்தங்கரையின் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு போர்டு வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வூரின் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஊர்வளர்ச்சிக்கு அரசையே எதிர்பாராமல், நாமாகவே நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம், வாருங்கள் என்று மக்களை அழைக்கிறது அந்த போர்டு. வேறு சில தெருமுனைகளிலும் இதே போர்டை திரும்ப, திரும்ப பார்க்க முடிகிறது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி விசாலமான, தூய்மையான வளாகத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தூய்மையான பள்ளி என்று சான்றளிக்கப்பட்டு, யூனிசெஃப் அமைப்பின் தங்க மெடலை வென்றிருக்கிறது. 1957ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது.

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுவருவதால் அக்கம், பக்கம் ஊர்களில் இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதனால் மாணவர் எண்ணிக்கை அதிகமாகி மேனிலை வகுப்புகளில் ஒருவகுப்புக்கு தலா நூறு பேர் படிக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

நாற்பத்தி ஒன்பது ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளியில், ஆசிரியர் பணிக்கு ஐந்து காலியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் ஆங்கிலம், தமிழ் மொழி வகுப்புகளுக்கு இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து நடத்த வேண்டியிருக்கிறது. முன்னூறு மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பெடுப்பது என்பது கொஞ்சம் சோதனையான விஷயம்தான்.

ஆனாலும், சிறப்பான கற்பித்தலின் மூலமாக கடந்தாண்டு பத்தாம் வகுப்பில் எண்பத்தியெட்டு சதவிகிதமும், பண்ணிரண்டாம் வகுப்பில் எண்பத்தியிரண்டு சதவிகித தேர்ச்சியையும் எட்டியிருக்கிறோம் என்று பெருமிதப்படுகிறார் தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி.

இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் இதுவரை நான்கு முறை நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார்கள். இங்கே படித்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் அமெரிக்காவின் ஹார்வர்டு யுனிவர்சிட்டியிலும், இன்னொரு மாணவர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும் விஞ்ஞானிகளாகப் பணிபுரிகிறார்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இங்கே செயல்படும் இக்கழகம் மாவட்டத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றிருக்கிறது. கற்பித்தலில் ஆசிரியர்களும், கற்றுக்கொள்வதில் மாணவர்களும் சிறப்பாக செயல்படுவதால் பெருமைக்கு மேல் பெருமையாக வந்து சேர்கிறது ஊத்தங்கரை அரசுப் பள்ளிக்கு.

விளையாட்டிலும் மாணவர்கள் கில்லி. மாநில அளவிலான சிறப்பான பங்கேற்பு இருக்கிறது. நான்கு பேர் தேசிய அளவில் மாநிலத்துக்காக கோ-கோ விளையாடுகிறார்கள். கோ-கோவில் தமிழக அணிக்கு கேப்டனாக இருக்கும் ரஞ்சித்குமார், இப்பள்ளியில் +1 படிக்கிறார். இந்திய அளவில் முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்னர் கோ-கோவில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்திருப்பது இவரது தலைமையில்தான்.

இதுபோல ஏகப்பட்ட சிறப்புகள் அமைந்திருந்தாலும், சிறப்புக்கெல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் சுழல்வடிவ மின்னணு நூலகம் ஒன்றினை, ஒரு கோடி ரூபாய் செலவில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள். அனேகமாக இந்தியாவில் எந்த அரசுப்பள்ளியிலும் இவ்வளவு நவீன நூலகம் இருக்குமா என்பது சந்தேகமே.

பள்ளியின் பொன்விழாக் காலத்தின் போது ஒரு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது, இந்த மின்னணு நூலகம் அமைப்பது குறித்த யோசனைகள் வந்திருக்கிறது.

ஊத்தங்கரை பகுதியிலிருந்து ஏராளமான பொறியியலாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் உருவாகி வருகிறார்கள். ஆனால் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ்-கள் உருவாவதில்லை என்ற குறை இப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இருக்கிறது.

ஏராளமான நூல்களும், தங்குதடையில்லா இணையவசதியும் கொண்ட நவீன நூலகம் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நிறைய மாணவர்களை இங்கிருந்து தயார் செய்யமுடியும் என்ற ஒரே காரணத்துக்காக செலவினைப் பற்றி கவலைப்படாமல் இந்நூல் நிலையத்தை உருவாக்க முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டார்கள்.

அரசுப்பள்ளிகளை வசதிபடைத்தவர்கள் தத்தெடுத்துக் கொண்டு, வேண்டிய வசதிகளை செய்துத்தரலாம் என்று ஏற்கனவே அரசு சொல்லியிருக்கிறது. இவ்வகையில் ஊத்தங்கரைப் பள்ளியை தத்தெடுத்திருப்பவர், அங்கிருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் வே.சந்திரசேகர். அவரது தலைமையின் கீழ் நூலகப் பணிகள் தொடங்கப்பட்டது. சந்திரசேகரும் தன் பங்காக முப்பது லட்சரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஊத்தங்கரையில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் இவரது பங்கு நிச்சயமுண்டு என்பதை ஊர்க்காரர்களிடம் பேசினால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பதால் ஊரே சேர்ந்து, அவரவர் பங்களிப்பை மனமுவந்து தந்து இந்நூலகத்தை கட்டியிருக்கிறது.

கண்ணை கவரும் சுழல்வடிவ கட்டிடம். எட்டுலட்ச ரூபாய்க்கு பதிமூன்றாயிரம் புத்தகங்களை வாங்கி வரிசையாக அடுக்கியிருக்கிறார்கள். முப்பது கணினிகள் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வசதியோடு பொருத்தப்பட்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஊத்தங்கரை பொதுமக்களும் இந்நூலகத்தை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் இலவசமாகவே நூல்களை மட்டுமன்றி இணையத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘UPSC - முயலகம்’ என்று தனியாக ஒரு அறையே உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சிவில் சர்வீஸுக்கு தயார் செய்யும் மாணவர்கள், எந்த தொந்தரவுமின்றி இங்கே படிக்கலாம். நூலகத்தில் சிவில் சர்வீஸுக்கு தயார் செய்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் தனி அடுக்கில் அடுக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் அறை நீளமாக, வசதியாக இருக்கிறது.

பாடுபட்டு உருவாக்கிய நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டாமா? அதற்காக பத்துலட்ச ரூபாய் மதிப்பில் வைப்புநிதி ஒன்றினையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு நூலகரை பணிக்கு அமர்த்தி இந்நிதியிலிருந்தே சம்பளமும் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

“எங்களை உருவாக்கிய பள்ளிக்கு நாங்கள் தந்த பொன்விழாப் பரிசு இந்த நூலகம்!” என்கிறார் முன்னாள் மாணவரான வி.செல்வராஜ். பெங்களூர் தொழிலதிபரான இவர் மட்டுமே நூலகம் அமைக்க இருபது லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார்.

தங்கள் ஊரில் இருந்து ஐ.ஏ.எஸ். / ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாக வேண்டும் என்ற கனவோடு ஊர்கூடி தேர் இழுக்கிறது. உன்னதமான முயற்சிகள் எதுவும் தோற்றதில்லை என்பது வரலாறு. கனவு நனவாக ஊத்தங்கரையை வாழ்த்துவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

’செம்மொழி மாநாடு - முதல்வர் கொடுத்த பறக்கும் முத்தம்’ என்ற தலைப்பில் மாநாடு குறித்த என்னுடைய 6 பக்க கட்டுரை, இன்று கடைகளில் விற்பனையாகும் (08 ஜூலை 2010 இதழ்) 'புதிய தலைமுறை' வார இதழில் வெளிவந்திருக்கிறது.

அரசியல் கலக்காமல் ஊடகங்களில் மாநாடு குறித்து வெளிவந்திருக்கும் ஒரே கட்டுரை அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். மாநாட்டில் இரண்டே இரண்டு இடத்தில் திமுக கொடி காணப்பட்டது என்று சகபத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதில் ஒரு கொடி வைத்திருந்தவரை நம் புகைப்படக் கலைஞர் படம்பிடித்திருந்தார். அப்படம் லே-அவுட்டிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

வலைப்பதிவில் கட்டுரையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லை. ஒருவாரம் கழித்து பதிந்தால் ‘ராஜீவ்காந்தி படுகொலை’ மாதிரி பழைய நியூஸ் ஆகிவிடும். எனவே படிக்க விரும்புபவர்கள் கடையில் வாங்கிப் படிக்கலாம்.

1 ஜூலை, 2010

காமிக்ஸ் வடிவில் இலக்கியங்கள்!


செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளில் அரசும், தமிழார்வலர்களும் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிந்த நேரத்தில், சத்தமில்லாமல் செம்மொழி இலக்கியங்களை நடைமுறைத் தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது கிழக்கு பதிப்பகம்.

மாநாட்டையொட்டி சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை நாவல் வடிவிலும், குழந்தைகளுக்கான படக்கதை (காமிக்ஸ்) வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். அனேகமாக தமிழிலக்கியம் இந்த வடிவங்களில் வருவது இதுவே முதன்முறை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இந்த காப்பியங்களுக்கு உரைநூல்கள் ஏற்கனவே நிறைய உண்டு. உரைநூல்கள் பெரும்பாலும் பண்டித மொழியில், பாமரர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய நடையில் இல்லாததால் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் கிழக்கு பதிப்பகத்தார்.

இப்புதிய வடிவங்களால் சங்க இலக்கியத்தின் வீச்சு நீர்த்துப் போய் விடக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியோடு கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனை சந்தித்தோம்.

“உரைநூல்களற்ற சங்க இலக்கியங்கள் மிகவும் குறைவு. அவற்றின் அர்த்தம், கவித்துவம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரை எழுதுபவர்கள் மிக அடர்த்தியான மொழியில் எழுதியிருக்கிறார்கள். நம்முடைய சமகால வாசகர்களின் வாசிப்புக்கு இந்த அடர்த்தி இடையூறு செய்யும்.

பாரதியில் தொடங்கிய நவீன உரைநடை, பிற்காலத்தில் பத்திரிகைகளின் வளர்ச்சியால் எளிமை, அழகு, சுவாரஸ்யத்தோடு வளர்ந்தது. எனவே இந்த உரைநடை வசீகரம், பண்டித தமிழ் மற்றும் பழங்கால இலக்கியங்கள் மீதான வாசிப்பு ஆர்வத்தை வாசகர்களிடம் குறைத்துவிட்டது. இதையடுத்து தமிழிலக்கிய வாசிப்பு என்பது ஆர்வம் சார்ந்ததாக மாறிவிட்டது. கல்வி அடிப்படையில் பார்த்தாலும் கூட சில செய்யுள்களையும், இலக்கியத்தின் சில பகுதிகளையும் நாம் கட்டாயத்தின் அடிப்படையில்தான் மாணவப் பருவத்தில் வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் பண்டிதர்களின் கையில் இருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது பாமரர் வசம் வந்திருக்கிறது. இந்நிலையில் நம்முடைய பேரிலக்கியங்கள் கடுமை மொழி சார்ந்த பிரச்சினையால் சமகால, எதிர்கால வாசகர்களுக்கு கிட்டாமல் போய்விடக் கூடாது என்று யோசித்தோம். எனவே நாவல் வடிவில் காப்பியங்களை கொண்டுவருவது என்ற திட்டத்துக்கு வந்தோம். இதிகாசங்கள் குழந்தைகளுக்கு படக்கதைகளாக தரப்படுவதைப் போல இலக்கியங்களையும் தந்தால் என்ன என்றொரு கூடுதல் யோசனையும் வந்தது.

ஏற்கனவே நாவல் வடிவம் என்பது வாசிப்பவர்களுக்கு நன்கு பழகிய வடிவமாக இருக்கிறது. சமகாலத் தமிழில் அப்படியே மீண்டும் இலக்கியங்களை புத்தகங்களாக கொண்டு வந்திருக்கிறோம். எதையும் கூட்டவோ, குறைக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. எனவே இலக்கியம் நீர்த்துப் போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நம் மொழியின் முக்கியத்துவத்தையும், தொன்மையையும் உலகுக்கு உரத்துச் சொல்லும் வகையில் உலக செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மாநாட்டையொட்டி இந்நூல்களை வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமை கொள்கிறது.

இவற்றை வாசிப்பவர்கள் சுவையுணர்ந்து மேலதிக வாசிப்புக்கு மூலநூல்களை தேடிப்போகக் கூடிய வாசலை நாங்கள் திறந்துவைக்கிறோம்” என்றார்.

வெகுவிரைவில் ‘முத்தொள்ளாயிரம்’ நூலையும் கொண்டுவர இருக்கிறார்கள். சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் எளிமைப்படுத்தி வித்தியாச வடிவங்களில் கொண்டுவரும் முயற்சியில் கிழக்கு பதிப்பகம் முனைப்பாக இருக்கிறது.

30 ஜூன், 2010

டிபன் பாக்ஸ் ரொம்ப சின்னது!

நான் டவுசர் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் வந்த படமது. ஊர்முழுக்க ஏதோ ஒரு படத்தைப் பற்றி பேச்சு. எங்கள் ஏரியா இளைஞர்கள் அந்தப் படத்தைப் பார்க்க மவுண்ட்ரோட்டுக்கு தினமும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்தவர்கள் பரவசத்தோடு கண்கள் விரிய கண்டவர்களிடம் எல்லாம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு படம் இப்படிப்பட்ட சொல்லவியலா பரவச உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.

இப்போதும் கூட அப்படமோ, காட்சிகளோ தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் நாற்பதை தாண்டியவர்கள் அதே பரவசத்தோடு விழிகள் விரிய பார்ப்பதை காண்கிறேன். அவ்வியக்குனரின் அடுத்தப் படமும் அதே பரவச அலையை முன்பைவிட அதிக காத்திரத்தோடு ஏற்படுத்தியது. முதல் படம் கன்னிராசி. இரண்டாவது படம் ஆண்பாவம். டீனேஜுக்கு வந்த நேரத்தில் நானும் ஒரு படத்தைப் பார்த்து இதே பரவசத்தை அடைந்தேன், வைகாசி பொறந்தாச்சி. இளைஞன் ஆனபிறகு துள்ளுவதோ இளமை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் திரையில் கிடைத்த பரவசம் ‘களவாணி’. புதுமுக தொழில்நுட்பக்குழு, அவ்வளவாக பிரபலமில்லாத நாயகன் என்று, பெரிய பின்புலமோ, பலத்த எதிர்ப்பார்ப்போ இல்லாமல் அமைதியாக வெளிவந்து மனசை அள்ளித் திருடிச் செல்கிறான் இந்த களவாணி.

கதை ரொம்ப சாதாரணமானதுதான். ஒரு பொறுப்பற்ற வெட்டிப்பயல் ஒரு பெண்ணை காதலிக்கிறான். படத்தின் ஸ்பெஷல், தொய்வில்லாமல் பந்துக்கு பந்து ரன் அடித்துக் கொண்டேயிருக்கும் திரைக்கதைதான். கண்ணை உறுத்தாத இயல்பான ஒளிப்பதிவு. இசை மட்டும் மேன்மை நிலையை எட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்தி, மிகச்சரியாக துல்லியமாக ‘கோல்’ போட்டிருக்கிறது களவாணி படக்குழு.

“என்னடி உன்னோட டிஃபன் பாக்ஸ் இவ்ளோ சின்னதா இருக்கு?” (நிஜமாகவே கொஞ்சம் சின்னதுதான்)

“மாமா! நீ பாட்டுக்கு பாலிடாலை குடிச்சிட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்துக்கிட்டே. அத்தையை வெச்சி நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா?”

சென்சாரின் கண்ணில் மண்ணைத்தூவி வந்திருக்கும் டைரக்ட் மீனிங் வசனங்கள் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட எஃபெக்ட்டை தருகிறது. இளவட்டங்கள் விசிலடித்து விசிலடித்து, வாய் வீங்கிப்போய் கிடக்கிறார்கள்.

ஹீரோ விமலின் இயல்பு. ஹீரோயின் ஓவியாவின் அழகு. மற்ற பாத்திரங்களின் அசலான கிராமத்தனம் என்று இயக்குனருக்கு பலம் சேர்க்க நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். தஞ்சையை ஒட்டிய பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய சிறுநகரங்களிலும், ஒட்டியிருக்கும் கிராமங்களிலும் ஏற்பட்டிருக்கும் கலாச்சார அதிர்வுகள் மிக நுணுக்கமாக இயக்குனரால் அவதானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரீட்டாவின் திருவிழா டேன்ஸ் காட்சிகள் அட்டகாசம். கிராமப்படமென்றால் மிகைப்படுத்தப்பட்ட கிராமமொழியினை பாத்திரங்கள் பேசுவது தமிழ்ப்படங்களின் சாபக்கேடு. இப்படம் அதற்கு விதிவிலக்கு.

படத்தின் கதையை ஒட்டியே வரும் காமெடி டிராக் விலாநோக சிரிக்க வைக்கிறது. சமீபத்தில் இதுபோல வயிறுகுலுங்க சிரித்து நிரம்ப நாளாகிறது. அபூர்வசகோதரர்கள், ஜனகராஜூக்கு எப்படி ஒரு உயரத்தைக் கொடுத்ததோ, அதைப்போல கஞ்சாகருப்புவுக்கு சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு கிடைத்திருக்கும் இன்னொரு மாஸ்டர்பீஸ் களவாணி.

படைப்பு அடிப்படையில் எல்லாவகையிலும் வென்றிருக்கும் இப்படம், வசூல்ரீதியாகவும் வெல்லுவது இன்றைய தமிழ் சினிமா சூழலுக்கு மிகவும் முக்கியமானது. பட்ஜெட் காரணமாக போதுமான விளம்பரம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் சிறுபடமிது. படம் பார்த்தவர்கள் வாய்மொழியாக பரப்புரை செய்துதான் பரவலாக்க வேண்டும். சினிமா ஆர்வலர்களின் கடமையும் கூட இது.

களவாணி - குமுதத்தனமான குறும்புப் படம்!

29 ஜூன், 2010

மே 18

இருதினங்களுக்கு முன்பு தமிழ்தேசிய நண்பரொருவர் என்னுடைய தமிழுணர்வு குறைபாடு குறித்து தொலைபேசியில் காரசாரமாக நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தார். செம்மொழி மாநாட்டுக்கு நான் சென்றிருந்தது குறித்து அவருக்கு வருத்தம். தொழில்நிமித்தமாக போகவேண்டியிருந்தது என்று நான் சப்பைக்கட்டு கட்டினாலும், புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் ஏசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக, நான் தமிழுணர்வற்றவன் என்று நிரூபிக்க “இந்த மே 18 அன்றைக்கு என்னடா செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்றினையும் கேட்டார். கடந்த 2009ல் அதே தினத்தில் ஈழத்தில் கொத்து கொத்தாய் மனிதப் படுகொலை நிகழ்ந்ததையும், வெட்டப்பட்ட முகம் ஒன்று பிரபாகரன் என்று காட்டப்பட்டதையும் நினைவுறுத்தி, அந்நாளை நான் நினைவில் கொண்டிருந்தேனா என்று அறிவது அவரது நோக்கம். ”நினைவில்லை, பிறகு சொல்கிறேன்” என்று அப்போதைக்கு சமாளித்துவிட்டு லைனை ‘கட்’ செய்தேன்.

இந்த ஆண்டு மே 18 அன்று நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன்? யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. பின்னர் டயரியைப் புரட்டிப் பார்த்தபோது நிஜமாகவே கொஞ்சம் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. அன்று வெளியாகியிருந்த புதுப்படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஈவ்னிங் ஷோ பார்த்திருக்கிறேன். இரண்டரை மணி நேரம் வயிறுகுலுங்கச் சிரித்திருக்கிறேன். நண்பரின் பார்வையில் நான் தமிழுணர்வற்றவன் என்று பார்க்கப்பட நிஜமாகவே நியாயமான காரணம் இருக்கிறது என்றுதான் உணர்கிறேன்.

இப்போது என்னுடைய முறை. வேறு சில நெருங்கிய நண்பர்களுக்கு போன் போட்டு, “கடந்த மே 18 அன்று என்ன செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழுணர்வு நிறைந்த தமிழர்கள் குறித்த ஒரு சின்ன கணிப்புக்காக. என்ன கொடுமை? பலரும் அதே நாளில் அதே படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். இதில் ஓரிரு ஈழத்தமிழர்களும், புலி ஆதரவாளர்களும் கூட அடக்கம். படம் பார்க்காத ஒரு சிலரும் வேறு ஏதோ கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் மூழ்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

எனக்கு இது வரை ஒரே ஒரு ‘ஒரிஜினல் உணர்வாளன்’ கூட கிடைக்கவில்லை. எப்படியாவது ஒரு தமிழுணர்வாளராவது மாட்ட மாட்டாரா? அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். ப்ளீஸ் நீங்களாவது கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன். “கடந்த மே 18 அன்று நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்?”