12 அக்டோபர், 2010

விதை புதுசு! விளைச்சல் அமோகம்!!

பிரகாஷ்சிங் ரகுவன்ஷி. ஒரு சிறு விவசாயி. வாரணாசிக்கு அருகில் தாண்டியா என்ற பகுதியைச் சார்ந்தவர். உத்தரப்பிரதேச மாநிலம். விதையை விதைத்தோமா, அறுவடை செய்தோமா என்றில்லாமல் பிரகாஷ்சிங்குக்கு ஒரு தேசிய இலட்சியம் இருந்தது. தான் பிறந்த நாடு உணவுப் பாதுகாப்போடு விளங்க வேண்டும். உணவு பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட இங்கே பறிபோகக் கூடாது.

சிறுவயதில் பிரகாஷ் ஒரு சூட்டிகையான மாணவன். கல்வியில், விளையாட்டில் அவர்தான் நெம்பர் ஒன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சலுக்கு மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட மருந்து அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அலர்ஜி ஏற்பட்டு உடல்முழுக்க ஏகப்பட்ட உபாதைகள். கிட்டத்தட்ட கண்பார்வை பறிபோயிற்று.

பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு ஓரளவுக்கு பார்வை திரும்பியது. ஆனாலும் இன்றும் கூட அவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்கிறார். "வலிகளோடு வாழ பழகிக் கொண்டேன்" என்கிறார் பிரகாஷ். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கண்கூசுகிறது என்பதால், எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார். வெயில் தலையில் படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. எனவே தலையை தொப்பி அல்லது துண்டு போட்டு மூடிக்கொண்டுதான் வீட்டை விட்டு வெளியே வரமுடியும்.

அப்போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரால் மீளவே முடியாது என்று எல்லோரும் நினைத்தார்கள். திரும்பவும் பள்ளிக்கு திரும்பமுடியாத அளவுக்கு உடல்நிலை மோசம்தான்.

பிரகாஷின் அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். சிறுவிவசாயியும் கூட. பள்ளிக்கு செல்ல முடியாத காலங்களில் அப்பாவின் விவசாய நிலத்துக்கு சென்று பொழுதை போக்குவார். இயற்கையை நேசிக்கும் மனம் அவருக்கு இயற்கையாகவே வாய்த்திருந்தது. பச்சை வயல்களை பார்ப்பதிலும், குளுமையான வாசனையான வயற்காற்றை ரசிப்பதிலும் பிரகாஷின் காலம் கழிந்தது.

அடிக்கடி வயலுக்கு சென்று வந்ததில் சில விஷயங்களை அவரால் அவதானிக்க முடிந்தது. ஆரம்பத்தில் செழிப்பாக வளரும் பயிரைக் கண்டு, விளைச்சலை அனுமானிக்க முடியும். ஆனால் எங்கோ தப்பு நடந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியாக விளைச்சல் என்னவோ சுமார்தான். தொடர்ச்சியாக இதை கவனித்து வந்ததில் பிரகாஷுக்கு விவசாயம் குறித்த ஆர்வம் அதிகரித்தது. பிரச்சினை விவசாயியின் உழைப்பிலோ, நிலத்திலோ இல்லை. விதைக்கப்படும் விதைகளில்தான் என்று கண்டறிந்தார்.

சோதனை முறையில் ஒரு சிறிய நிலத்தில் ஒரே பயிரின் பல்வேறு வகை விதைகளை விதைத்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு நல்ல விளைச்சலைக் கொடுக்கக்கூடிய விதைரகத்தை தானே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. விவசாயம் தொடர்பான கண்காட்சிகளில் பங்கு கொண்டார். நிறைய விஞ்ஞானிகளையும், வேளாண்மை தொடர்பான அரசு அதிகாரிகளையும் சந்தித்து விவசாயம் தொடர்பான தனது அறிவினை வளர்த்துக் கொண்டார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த பேராசிரியர் மகாதிம்சிங், புதுரக விதைகளை இவர் கண்டறிய பின்னணியில் இருந்து ஊக்குவித்து வந்தார். தான் கண்டறிந்த புதுவகை விதைகளுக்கு பெரும்பாலும் 'குத்ரத்' என்றே பெயர்வைத்தார் பிரகாஷ். இச்சொல்லுக்கு இயற்கை என்று பொருள். கரிஷ்மா என்ற பெயரையும் சில விதைரகங்களுக்கு சூட்டியிருக்கிறார்.

'குத்ரத்' வகை விதைகளின் சிறப்பு என்ன?

நெல், கோதுமை, காய்கறிகள் என்று எல்லாவகைகளுக்கும் புதுவகை விதைகளை பிரகாஷ் கண்டறிந்திருக்கிறார். இவற்றின் சிறப்பு அமோக விளைச்சல். உதாரணத்துக்கு ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் குத்ரத் நெல், 25 முதல் 30 குவிண்டால் வரை விளைச்சலை கொடுக்கும். கோதுமை விதை, 18 முதல் 20 குவிண்டால் வரையிலான விளைச்சலை தரும். சாதாரணமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளைவிட கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமான விளைச்சலை குத்ரத் தருகிறது. இத்தனைக்கும் ரசாயனக் கலப்பில்லாத முழுக்க இயற்கை விவசாய முறையிலான விதைகள் இவை. கோதுமையில் மட்டும் 80 ரகங்கள், நெல்லில் 25 ரகங்கள், இன்னமும் மற்ற விவசாயப் பொருட்கள் பலவற்றுக்கும் ஏராளமான விதைரகங்களை உருவாக்கியிருக்கிறார்.

கண்டுபிடிப்போடு முடிந்துவிடுவதில்லை பிரகாஷின் பணி. தான் கண்டறிந்த விதைகளை, 14 மாநிலங்களுக்கு பயணித்து சுமார் 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாகவே வழங்கியிருக்கிறார். பனாரஸுக்கு அருகிலிருக்கும் தனது 15 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை குறித்த பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு வழங்குகிறார். நம் பாரம்பரிய விதை வகைகளை பாதுகாப்பதும், பரவலாக்குவதும் அவரது முக்கிய நோக்கம்.

ஆகமதாபாத்தைச் சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் இவரது முயற்சிகளுக்கு பெரியளவில் ஒத்துழைப்பு தந்துவருகிறது. ஆராய்ச்சிகளுக்கு பணரீதியிலான உதவி மற்றும் நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளை சந்திக்க பயணவசதி என்று இந்நிறுவனம் இவருக்கு உதவிவருகிறது.

பிரகாஷ்சிங்குக்கு 3 மகன்கள், 3 மகள்கள். மகள்கள் அனைவரும் நன்கு படித்திருக்கிறார்கள். அப்பாவோடு சேர்ந்து விவசாய விழிப்புணர்வுப் பணிகளில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய அளவிலான கண்டுபிடிப்புகளுக்கான விருதினை இருமுறை வென்றிருக்கிறார். ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கலாமிடமும், ஒருமுறை தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டிலிடமும் இவ்விருதுகளை பெற்றார்.

ஒருமுறை புனேவுக்கு இவரது விதைரகங்களோடு விவசாயிகளை சந்திக்க சென்றார். அங்கிருந்த ஒரு விவசாயி, "ஷிர்டி சாயிபாபாவே உங்களை இங்கே எங்களை வாழவைக்க வரவழைத்தாக நினைக்கிறேன்" என்றாராம்.

"இதைவிட பெரிய பேறு எனக்கென்ன வேண்டும்" என்கிறார் பிரகாஷ்.

 
பிரகாஷ்சிங் கண்டறிந்த விதைரகங்களின் மாதிரியை (100 கிராம், 500 கிராம் பாக்கெட்டுகளில்), அவருக்கு கடிதம் எழுதி பெறலாம். அவரது முகவரி :
Praksh Singh Raghuvanshi 
Village Tadia, Post Jakhini, Dist. Varanasi, U.P. 
Mobile: 09956 941993
E-mail : kudaratraghuvanshi@hotmail.com.

(நன்றி : புதிய தலைமுறை)

11 அக்டோபர், 2010

என் கூட விளையாடேன்!

"ஆண்ட்டி. அனிதா இல்லையா?" - டீன் ஏன் பையனின் துள்ளல் குரல்.

"அவ மாடியிலே இருக்கா? ஏன் கூட விளையாட மாட்டியா?" நடுத்தர வயது ஆண்ட்டியின் கிறங்கடிக்கும் குரல்.

"ஆண்ட்டீ.. அது வந்து..."

"ஏன் எனக்கு வயசு ஆயிடிச்சின்னு நெனைக்கிறீயா? உனக்கு இன்வைட் அனுப்பினாதான் வந்து விளையாடுவியா? கம்மான்...."

"இனிமே யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் விளையாடலாம். லாகின் பண்ணுங்க ஐபிஐபிஓ.காம்" - அறிவிப்பாளரின் வாய்ஸ் ஓவரோடு அந்த 'ரேடியோ கமர்சியல்' முடிகிறது. ஒரு குறும்பான 'கிரியேட்டிவ்' என்றாலும், கேட்டவுடனேயே பெருசுகளுக்கு 'பக்'கென்றாகிறது. சிறுசுகளுக்கு 'பகீரென்று' பற்றிக் கொள்கிறது. நமக்கே கூட அந்த ஆண்ட்டியோடு விளையாடிப் பார்க்கலாமா என்று ஆசை தோன்றுகிறது.

நிற்க. இம்மாதிரியான 'ஆண்ட்டி ஃபோபியா ஆசை' உங்களுக்கு அடிக்கடி தோன்றுகிறதா?

இதை உளவியல் நிபுணர்கள் 'இடிபஸ் காம்ப்ளக்ஸ்' (Oedipus complex) என்கிறார்கள். இதனை ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் என்றும் சிலர் உச்சரிக்கிறார்கள். ஆங்கில எழுத்துகளை பார்க்கும்போது ஓடிபஸ்தான் சரியானதாக தோன்றுகிறது. ஆயினும் பேச்சுவழக்கில் இடிபஸ் என்பது இயல்பானதாக இருப்பதால், நாம் இடிபஸ்ஸையே இந்த கட்டுரைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பஸ்ஸில் ஆண்டிகளை இடிக்கும் இளைஞர்களுக்கும் இடி-பஸ் காம்ப்ளக்ஸ்தான் இருக்கிறது என்பதை சொல்லவே தேவையில்லை. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நாற்பதை தொட்ட நடிகை, தன் வயதில் பாதியே இருக்கும் ஒரு இளைய நடிகரை அவ்வப்போது ஈ.சி.ஆருக்கு வீக்கெண்டுகளில் அள்ளிக்கொண்டு போவதாக ஒரு கிசுகிசு வாசித்திருப்பீர்கள். அந்நடிகருக்கு இந்த காம்ப்ளக்ஸ்தான் இருந்திருக்கும்.

டீனேஜில் இருக்கும்போது ஏதோ ஒரு மாலைமதியில் வந்த கதையில் முதன்முறையாக இப்படி ஒரு உளவியல் நோயை கேள்விப்பட்டேன். ஏராளமான பெண் சகவாசத்தால், கிளி மாதிரி மனைவியை சரியாக கண்டுகொள்ளாத கணவன். கிளி தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 17 வயது பையனோடு அவ்வப்போது டென்னிஸ் விளையாடுகிறது. டென்னிஸ் போரடிக்கும்போது கேரம், செஸ்ஸென்று முன்னேறி செக்ஸ் விளையாடுமளவுக்கு கொண்டுபோய் விடுகிறது. கடைசியில் பிரச்சினை 'கொலை' ரேஞ்சுக்கு சென்று முடிவதாக க்ளைமேக்ஸ். எழுதியவர் எஸ்.பாலசுப்பிரமணியமென்று மங்கலாக நினைவு. அந்தக் கதையில்தான் இடிபஸ் காம்ப்ளக்ஸ் குறித்து ஒரு அத்தியாயத்தில் விலாவரியாக படித்த நினைவு.

சிக்மண்ட் ப்ராய்ட் இந்த உளவியல் பிரச்சினை குறித்த நெடிய ஆய்வினை, தகுந்த கேஸ் ஸ்டடிகளோடு மேற்கொண்டிருக்கிறார். மிகச்சுருக்கமாக 'தன்னைவிட வயது மூத்த பெண்கள் மீது ஏற்படும் பாலியல் ஆசை' என்று நாம் இடிபஸ் காம்ப்ளக்ஸை பொதுவானதாக வரையறை செய்துக் கொள்ளலாம். மேலைநாடுகளில் கொஞ்சம் பச்சையாக இதை விளக்குகிறார்கள். அதாவது அம்மா மீதான பாலியல் ஆசை. பெண்களைப் பொறுத்தவரை உல்டா. அப்பா மீதான.. இதை எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் என்கிறார்கள். விலங்குகளைப் பொறுத்தவரை இது சகஜமான, இயற்கையான மேட்டர்தான். 'ஆறாவது அறிவு' பெற்றுவிட்ட மனிதக்குலம் இதை இயற்கைக்கு மாறானதாகவே கருதுகிறது. இம்மாதிரியான ஆசை சர்வநிச்சயமாக ஒரு சமூகக் குற்றம். சட்டப்படி குற்றமா என்று தெரியவில்லை.

மேற்கண்ட பாராவை வாசிக்கும்போதே கொஞ்சம் அருவருப்பாக குமட்டுகிறது இல்லையா? முற்றிப்போன இடிபஸ் காம்ப்ளக்ஸ் நிலையில் நீங்கள் இல்லை என்று மகிழ்ச்சியடையலாம். ஆனால் 'இடிபஸால்' பீடிக்கப்பட்டவர்களுக்கு இது இயல்பான, இயற்கையான ஆசைதான். உதாரணத்துக்கு ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் போன்ற ஆசை கொண்டவர்களுக்கு ஓரினச்சேர்க்கைதான் இயல்பானது. எதிர்பால் காமம் என்பது அவர்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இப்படித்தான் நாம் உளவியல் பிரச்சினைகளை புரிந்துகொண்டாக வேண்டும்.

இடிபஸ் என்ற பெயர் கிரேக்கப் புராணம் உலகுக்கு தத்தெடுத்து தந்தது. தந்தையைக் கொன்று தாயை மணந்தவனின் கதையில் வரும் கதாபாத்திரம். நம்மூர் விக்கிரமாதித்யன் கதைகளில் கூட இதுபோல ஒரு கதை உண்டு. அரசன் ஒருவன் நகர் உலா வரும்போது, அழகியப் பெண்ணைக் கண்டு காமுறுகிறான். இவனைக் கண்டதுமே அப்பெண்ணின் மார்பில் இருந்து பால் பீய்ச்சி அடிக்கிறது. அதைக்கண்டே அவள் தன்னுடைய தாய் என்பதாக உணர்வதாகப் போகும் கதை. பிள்ளையார் ஏன் பிரம்மச்சாரி என்பதற்கு ஊரில் ஒரு கதை சொல்லுவார்கள். தன் தாயைப் போலவே தாரம் வேண்டும் என்று தேடித்தேடி, கிடைக்காததால் அரசமரத்தடியில் போய் உட்கார்ந்துவிட்டார் என்பார்கள். இதெல்லாம் கூட ஒருவகையிலான இடிபஸ்தான்.

ரிப்போர்ட்டரிலோ, ஜூ.வி.யிலோ ஒரு தொடராக எழுதப்பட வேண்டிய மேட்டர் இதுவென்றாலும் அவசர அவசரமாக இக்கட்டுரையை முடிக்கிறேன். ஆக்சுவலி இன்று காலையில் நந்தனம் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருந்தேன். இடப்பக்கம் ஒரு சூப்பர் ஃபிகர் ஸ்கூட்டியில். இருபது வயதிருக்கலாம். ஸ்லீவ்லெஸ் கருப்பு சுரிதார் அணிந்திருந்தாள். எந்திரன் ஐஸ்வர்யாராயை மாதிரி இருந்த அவளை சைட் அடிப்பதை தவிர்த்துவிட்டு, வலதுப்பக்கமாக நின்றிருந்த சுமாரான ஆக்டிவா ஆண்டியை சைட் அடித்துக் கொண்டிருந்தேன். மூளையின் 'எண்டாக்ரீன்' சிஸ்டத்தில் ஏதாவது எர்ரர் ஆகிவிட்டதா அல்லது எனக்கு இடிபஸ் காம்ப்ளக்ஸ் வந்து தொலைத்துவிட்டதா என்ற அடிப்படை ஐயத்தின் விளைவே இந்தக் கட்டுரை.

ஆபிஸுக்கு வந்து சில இளைஞர்களிடம் விசாரித்துப் பார்த்தால், அவர்களும் என்னைப் போலவே 'ஆண்டி மேனியா'வால் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது. இது இயல்பானதுதான். தமிழ்ச் சமூக இளைய தலைமுறை 'இடிபஸ்' காம்ப்ளக்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் ஆயாக்கள் தெறமை காட்டியதாக இருந்தாலும் 'தமிழ் பிட் இருக்கா?'வென்ற ஆவலான கேள்வியோடு பர்மாபஜாரில் அலைந்துக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கை : தேவையான தரவுகள் எதையும் போதிய முறையில் ரெஃபர் செய்யாமல், அடாவடியாக எழுதப்பட்டது என்பதால் இந்தப் பத்தியில் நிறைய ஃபேக்சுவல் எர்ரர்ஸ் இருக்கலாம்.

7 அக்டோபர், 2010

மீண்டும் தாய் மடியில்...

தயவுசெய்து நம்புங்கள். மேக்கப் போட்டு தினமும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும்போது கீதாவுக்கு வயது 9. தினமும் அதிகாலை 2 மணி வரை பணிபுரிய வேண்டியிருக்கும். "அந்த வயதிலேயே வாழ்க்கை மீது எந்தப் பிடிப்பும் இல்லாமல், மரணம் சீக்கிரம் வராதா என்று எதிர்ப்பார்த்து வாழ்ந்த கொடுமையான நாட்கள் அவை" என்று இப்போது சொல்கிறார் கீதா.

அவர் செய்துக்கொண்டிருந்த தொழில் : பாலியல்.

நேபாளத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கீதாவுக்கு இப்போது வயது 26. தூரத்து உறவினர் ஒருவர் மூலமாக இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தரகர் ஒருவருக்கு 9 வயதில் விற்கப்பட்டார். கண்பார்வையற்ற அவரது தாயாரிடம், அவரது மகள் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக பொய் சொல்லப்பட்டிருந்தது.

"தினமும் நிறைய வாடிக்கையாளர்கள். ஒத்துழைக்க மறுத்தால், எங்களை காசு கொடுத்து வாங்கியவர் ஆபாசமாக திட்டுவார். இரும்புத்தடி கொண்டு அடிப்பார். போதிய உணவில்லை. தூக்கமில்லை. ஐந்து ஆண்டுகள் அந்த நரகத்தில் வாழ்ந்தேன்" என்கிறார் கீதா. பதினான்கு வயதிருக்கும் போது ஒரு போலிஸ் அதிகாரியால் மீட்கப்பட்டு, காத்மாண்டுவில் இருக்கும் ஒரு மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார் இவர்.

இது கீதாவின் கதை மட்டுமல்ல. அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. நேபாளத்தில் இருந்து ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பெண்கள் வரை நைச்சியமாக ஏமாற்றப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாலியல் தொழில் செய்ய முறைகேடாக அனுப்பப்படுகிறார்கள்.

நேபாளக் கிராமங்களில் கல்வியறிவற்ற பெற்றோர்கள், தரகர்களால் ஏமாற்றப் படுகிறார்கள். தங்கள் மகள் வெளியூரில் நல்ல வேலை பார்த்து கைநிறைய சம்பாதிப்பதாக நம்பி ஏமாறுகிறார்கள். இந்த மனிதக் கடத்தல் தரகர்களுக்கு பல வருடங்களாக இது ஒரு நல்ல லாபம் தரத்தக்க தொழில்.

61 வயதான அனுராதா கொய்ராலா இந்த இழிதொழிலை ஒழித்துக் கட்டும் பணியில் தீவிரமாக இருக்கிறார். 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது 'மைத்தி – நேபாள்' அமைப்பு இதுவரை 12,000த்துக்கும் மேற்பட்ட நேபாளப் பெண்களை பாலியல் தொழில் படுகுழியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. காப்பாற்றப்பட்ட பெண்கள் பலரையும் அவரவர் பெற்றோர்வசம் ஒப்படைக்கிறது. ஆதரவில்லாத பெண்களுக்கு இவ்வமைப்பின் மறுவாழ்வு நிலையமே தஞ்சம்.

'மைத்தி' என்ற நேபாளச் சொல்லுக்கு 'தாய்' என்பது பொருள். எவ்வளவு பொருத்தமான பெயர் இல்லையா?

கொய்ராலாவின் சொந்தக் கதையும் சோகக்கதைதான். டீனேஜ் வயதில் ஒரு முறைகேடான உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இவர். அப்போது ஒரு ஆரம்பப்பள்ளியில் ஆங்கிலம் போதித்துக் கொண்டிருந்தார். தினம் தினம் அடி உதைதான். அந்த உறவிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து மூன்று முறை தோற்றார். யாரிடம் போய் இதையெல்லாம் புகார் தெரிவிப்பது, யார் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று திக்குத் தெரியாமல் தவித்தார்.

எப்படியோ அந்த உறவிடமிருந்து விடுதலை பெற்றபிறகு, அதுவரை தான் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய கடை தொடங்கினார். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களையே பணிக்கும் அமர்த்தினார்.

1990களின் தொடக்கத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கொய்ராலாவைத் தொடர்புகொள்ள 'மைத்தி' உருவானது. பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, தேவைப்பட்டால் சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவது, பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்களுக்கு மறுவாழ்வு என்று மைத்தி தனது செயற்பாடுகளை உருவாக்கிக் கொண்டது.

காவல் துறையினர் துணைகொண்டு பாலியல் விடுதிகளை சோதனை செய்து பெண்களை மீட்பது, இந்திய-நேபாள எல்லையில் ரோந்து மூலமாக நடக்கும் மனித வணிகத்தை தடுப்பது போன்ற பணிகளில் மைத்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பதினேழு ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று மைத்திக்கு கிளைகள் இந்தியாவிலும், நேபாளத்திலும் ஏராளமாக உண்டு. மறுவாழ்வு முகாம், காத்மாண்டுவில் மட்டுமே இருக்கிறது. நம்பிக்கை மொத்தத்தையும் இழந்து, நோய்கண்டு, சிறுகுழந்தைகளோடு அல்லது கர்ப்பமடைந்த நிலையில் என்று பாலியல் முகாமிலிருந்து வெளியே வரும் பெண்கள் பலரும் நிச்சயமற்ற எதிர்காலத்தோடு வாழ வழியின்றி நிர்க்கதியாக தவிக்கிறார்கள். குறிப்பாக மனரீதியாக உடைந்துப்போயிருக்கிறார்கள்.

இதுபோல மறுவாழ்வு மையத்துக்கு வரும் பெண்களிடம் மைத்தி ஒரு கேள்வியையும் கேட்பதில்லை. அவர்கள் சரியான மனநிலைக்கு வரும் வரை காத்திருக்கிறது. அவர்கள் பாடலாம், ஆடலாம், நடக்கலாம், யாரிடமாவது பேசலாம். மொத்தத்தில் கூண்டில் வளர்க்கப்பட்ட கிளி, சிறகு விரித்து வானத்தில் பறப்பதற்கு ஒப்பான சுதந்திரத்தை மைத்தியில் பெறலாம். ஒரு தாய் தனது குழந்தை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாளோ, அதுபோன்றுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும், சிந்திக்க வேண்டும் என்று மைத்தி விரும்புகிறது.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களையும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவில்லாத குழந்தைகளையும்கூட மைத்தி ஏற்றுக் கொள்கிறது. "யார் வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம். யாரையுமே வேண்டாமென்று என்னால் சொல்லவே முடியாது" என்கிறார் அனுராதா கொய்ராலா.

பழைய துயர வாழ்க்கையில் இருந்து மீட்கப்படுவதோடு யாருடைய துயரமும் முடிந்துவிடுவதில்லை. அவர்களுக்கு மறுவாழ்வு தருவது என்பது மீட்பினை விடவும் சிரமமான காரியம். மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை, பழைய தொழிலில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டரீதியிலான அறிவுரை மற்றும் கோர்ட் நடைமுறைகள் என்று அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மீட்கப்படும் பெண்களில் சிலரை மட்டுமே அவர்களது குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் இதர பாலியல் நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலை பரிதாபமானது. இவர்களுக்காகவே ஒரு சிறப்பு முகாம் மைத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்று இங்கே கிட்டத்தட்ட 400 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மறுவாழ்வு வழங்கப்படுகிறது. நிறைய ஆசிரியர்களும், மருத்துவர்களும், பணியாளர்களும் இவர்களுக்கு சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். இங்கே பணிபுரியும் பணியாளர்களில் பலரும் 'மறுவாழ்வு' பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க இருந்து, இன்று மைத்திக்கு குவிந்துவரும் நிதியால் இவ்வமைப்பு இயங்க முடிகிறது.

'மறுவாழ்வு பெற்ற பெண்கள் ஒவ்வொருவரும், பொருளாதாரரீதியாக தத்தமது சொந்தக் காலில் நிற்கவேண்டும்' என்பதையே இவ்வமைப்பு தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறது. இங்கு வரும் பெண்கள் எந்தத் துறையில் பணியாற்ற விரும்புகிறார்களோ, அந்தத் துறையில் போதுமான பயிற்சியளித்து, வேலைவாய்ப்பினை பெற உதவுகிறார்கள். ஒரு பெண் பொருளாதாரரீதியாக நிமிர்ந்து நின்றாலே, அவளது கடந்த காலம் என்னவென்பதை எல்லாம் சமூகம் நோண்டிப் பார்ப்பதில்லை.

அனுராதா கொய்ராலாவும், மறுவாழ்வு வாழும் சுமார் ஐம்பது பெண்களும் அடிக்கடி சமூகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். பாலியல் கடத்தல் குறித்து நகர்ப்புற விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி இந்திய – நேபாள் எல்லையில் ரோந்து நடத்தி, கடத்தப்படும் குழந்தைகளில்.. ஒரு நாளைக்கு நான்கு பேரையாவது மீட்கிறார்கள்.

"இந்த கடத்தல் தொழிலை தடுக்கும் பெண்கள் அனைவருமே முன்பு கடத்தப்பட்டவர்கள். அவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் என்ன பாடு படுவார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். நான் சொல்லாமலேயே இந்தப் பணியை மனமுவந்து அவர்கள் செய்கிறார்கள்" என்று பெருமிதப்படுகிறார் கொய்ராலா.

கொய்ராலாவின் சமூகப் பணிகளுக்காக உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிருக்கிறார். சி.என்.என். இணையத்தளம், ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக இவரது பெயரை முன்மொழிந்திருக்கிறது. பட்டங்கள், பதவிகள் இவற்றைப் பற்றிய உவப்பு எதுவுமின்றி தொடர்கிறது கொய்ராலாவின் சேவை.

கட்டுரையின் தொடக்கத்தில் வந்த கீதாவை மீட்டு, மறுவாழ்வு வழங்கியிருப்பது மைத்தியே. இப்போது மைத்தியின் சமூக விழிப்புணர்வு முகாம்களில் கீதா ஒரு முக்கியமான பொறுப்பினை வகிக்கிறார். "தொலைந்துப் போன என் வாழ்வினை எனக்கு திரும்பப் பெற்றுத் தந்திருப்பவர் அனுராதா. மிச்சமிருக்கும் வாழ்வினை என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்காக வாழ்வேன்" என்று உருக்கமாக சொல்கிறார்.

மற்றவர்களுக்காக வாழ்வதுதானே வாழ்வு?

5 அக்டோபர், 2010

திராவிட இயக்க கருவூலம்!


நமக்கெல்லாம் ஏதாவது குறிப்பெடுக்க வேண்டுமென்றால், அருகிலிருக்கும் உள்ளூர் நூலகத்துக்கு உடனே ஓடுவோம். முதல்வரும், அமைச்சர்களும் எங்கே போகிறார்கள்?

வேறெங்கு? திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேராசிரியர் ஆய்வக நூல் நிலையத்துக்குதான். திமுக அறக்கட்டளையால் இலவசமாக நடத்தப்படும் இந்த நூல் நிலையம் 1987ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. எல்லோரையுமே உள்ளே அனுமதித்து விடுவதில்லை. நிஜமாகவே ஏதோ குறிப்புக்காகவோ, ஆய்வுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் அவசரக் காரியங்களுக்கோ தேவைப்படுகிறது என்பதை விசாரித்து அறிந்துவிட்டே உள்ளே விடுகிறார்கள்.

பொதுவாக ஆய்வு மாணவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் உதவும் நோக்கத்தில் இந்நூலகம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்களும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சமூகம், இலக்கியம், வாழ்வியல் தொடர்பான நூல்கள் தோராயமாக 35,000 இருக்கிறது. அந்த காலத்து திராவிட நாடு, காஞ்சி, மன்றம், தென்றல் முதலான திராவிட இயக்க ஊடகங்களின் மொத்த இதழ்த் தொகுப்புகள் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. தி ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகிய நாளேடுகளின் கடந்த முப்பதாண்டுகால முழு செய்தித்தாள்களும் இங்கே கிடைக்கும்.

திராவிட இயக்கநூல்களே பெருமளவு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையடுத்து தமிழ், தமிழர் வாழ்வியல் தொடர்பான பண்டைய நூல்கள் ஏராளம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் எழுதிய நூல்களும், அவர்கள் தொடர்பாக மற்றவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் தனித்தனி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கின்றன.

நல்ல வசதியான பெரிய அரங்கு. அமர்ந்து குறிப்பெடுத்துக்கொள்ள வாகாக சிறப்பானமுறையில் மேஜை நாற்காலிகள் என்று வசதி செய்யப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ஆய்வக நூல் நிலையத்துக்குள் நுழைந்தால் தமிழகத்தின் எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றுக்குள் பிரவேசிக்கலாம்.

4 அக்டோபர், 2010

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

உலகம் போற்றும் உத்தம பாரதம் புண்ணியபூமிதான் என்பதை மீண்டுமொரு முறை அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. மாட்சிமை பொருந்திய இந்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு மூன்றில் இரண்டு பங்கு நியாயமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய இருவரில் தரம்வீர் ஷர்மா மற்றும் சுதிர் அகர்வால் இருவரும் புண்ணிய மதத்தைச் சார்ந்தவர்கள். மீதியிருக்கும் ஒருவரான சிக்பத் உல்லா கான் மட்டும் முல்லா மதத்தைச் சார்ந்தவர். நாட்டை ஆளும் அண்டோமேனியாவின் மிஷினரி மதத்தைச் சார்ந்தவர் யாரும் இந்த குழுவில் இல்லை என்பதே ஹிந்துக்களுக்கு ஆறுதலான ஒரு விஷயம்.

ஷர்மா மற்றும் அகர்வால் இருவரும் ஸ்ரீராமரின் பிறப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட கட்டடத்தின் முக்கியமான பகுதியில்தான் தசரதபிரானின் அரண்மனை இருந்ததாகவும், குறிப்பாக மசூதியின் முக்கியமான கோபுர மாடம் இருந்தப் பகுதியில்தான் ஸ்ரீராமர் அவதரித்ததாகவும் தங்களது தீர்ப்பில் உறுதியாக சொல்லியிருக்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து மாநிலம், உலகுக்கு தத்து தந்திருக்கும் உலகப்புகழ் தங்கத்தாரகை வழக்கம்போல தீர்ப்பினை வரவேற்று ஹிந்து மக்களின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறார். அகிலம் காக்கும் அம்மா கரசேவைக்கு செங்கல் அனுப்பி வைத்தவர் ஆயிற்றே? அவரிடமிருந்து மாற்று விமர்சனம் வந்திருந்தால்தான் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும். ஸ்ரீமான் அத்வானி, ஸ்ரீமான் நரேந்திரமோடி வரிசையில் ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துமக்களுக்கு அபிமான தலைவராக புரட்சித்தலைவி தங்கத்தாரகை அவர்கள்தான் விளங்குகிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அம்மாவின் அறிவுப்பூர்வமான அறிக்கை விடுத்திருக்கும் விளைவு தமிழ் ஹிந்துச்சூழலில் மிக முக்கியமானது. முன்னாள் திம்மிக்களாக விளங்கிய ஸ்ரீமான் கோபாலசாமி, ஸ்ரீமான் நெடுமாறன் ஆகியோர் இத்தீர்ப்பு குறித்து கிஞ்சித்தும் வாய்திறந்துவிட முடியாதபடி புரட்சித்தலைவியின் அறிக்கை அவர்களது வாயை திருநூல் கொண்டு கட்டிப்போட்டிருக்கிறது. உளறலுக்குப் பெயர்போன கம்யூனிஸ்டுகளும் கூட அம்மாவின் புண்ணியக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வழக்கமான உளறலை உளறித்தள்ளாமல் வாய்மூடி மவுனிகளாக மாறினார்கள். நம்மூர் தேசியத் திராவிட திம்மிக்கும் வேறு வழியில்லை, தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

"ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?" என்று முன்பு எள்ளிநகையாடிய மூத்த திராவிடத் திம்மி இப்போது எங்கேபோய் தன் முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் இப்போது ஹிந்துமக்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இன்றியமையாத கேள்வியாக இருக்கிறது. மாட்சிமை பொருந்திய நீதிபதிகளே ஸ்ரீராமர் பதினேழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அயோத்தியில் அவதரித்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக அவர்களிடம் சாட்சியாக தசரதபிரானின் திருமனைவியர்க்கு பிரசவம் பார்த்த கூனிக்கிழவி வழங்கிய பிறப்புச் சான்றிதழ், நம் தரப்பு வழக்கறிஞர்கள் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்று தீர்ப்பினைக் கண்ட திருக்கணத்திலேயே உணர்ந்தோம்.

தீர்ப்பினை ஜீரணிக்க இயலாத தீயசக்தியான மூத்தத் திம்மி இப்போது ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமர் பிறந்ததையே உறுதிப்படுத்திவிட்டார்கள் ஆரியர்கள். வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் மறைந்ததை உறுதிப்படுத்த திராவிடர்களிடம் ஆவணங்கள் இல்லையே என்று புலம்பித் தள்ளியிருக்கிறது. மூத்தத் திம்மிக்கு இது முதல் அடி. அடுத்த அடியை மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றம் இன்னும் சில காலத்தில் வழங்க இருக்கிறது. ஸ்ரீராமர் தலைமையில் ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுக்ரீவர் மற்றும் ஸ்ரீவானரப்படையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர்கள் பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமேஸ்வரத்திலிருந்து, ஸ்ரீஇலங்கைக்கு கட்டிய பாலம் குறித்தான வழக்கில் இந்த ஸ்ரீத்தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஸ்ரீராமர் பிறந்ததையே ஆதாரப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக, ஆவணப்பூர்வமாக நிரூபித்தவர்கள் ஹிந்துஸ்தானத்தின் புனித எண்பது கோடி ஹிந்துக்கள். ஸ்ரீராமர் பாலம் கட்டியதையா நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைவார்கள். ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்ன பட்டம் வாங்கினார்? என்பதையெல்லாம் ஸ்ரீ ஹிந்துக்களின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆவணங்கள் மூலமாக நிரூபிப்பார்கள். அப்போது மூத்தத்திம்மியின் தீயக்கேள்விகளுக்கு திருவிடை கிடைக்கும். ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட உதவிய அணிலும் கூட நீதிப்படியேறி சாட்சி சொல்லத்தான் போகிறது. ஸ்ரீராமரின் பாலத்தை இடித்த மூத்தத் திம்மியே, அப்பாலத்தை வானரங்கள் துணைகொண்டு மீண்டும் கட்டிக் கொடுத்தாக வேண்டுமென்று தீர்ப்பு வரத்தான் போகிறது. அந்நாள்தான் ஹிந்துஸ்தானத்தின் எண்பதுகோடி ஹிந்துக்களின் வரலாற்றில் பொன்னாள்.

ஸ்ரீராமர் வானரங்கள் துணைகொண்டு பாலம் கட்டியபோது எடுத்த வண்ணப்படத்தை இங்கேயே பிரசுரித்திருக்கிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீதிநிலைநாட்டப்படுவது உறுதி. இறுதிவெற்றி ஸ்ரீராமருக்கே!