சில நாட்களுக்கு முன்பாக அந்த நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். "எல்லோரும் சரோஜாதேவி, சரோஜாதேவி என்று பேசிக்கொள்கிறார்களே? அப்படியென்றால் என்ன?"
எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. என்ன மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? நமக்கு முந்தைய ஒரு தலைமுறை பீடத்தில் ஏற்றிவைத்திருந்த உயர்ந்த மதிப்பீடுகளை, அதன் மதிப்பு புரியாமல் காலுக்கு கீழே போட்டு நசுக்குகிறோமே? எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி இது? இருப்பினும் பொறுமையாக அவருக்கு விளக்கி பதில் அனுப்பினேன்.
நெஞ்சின் அடியாழத்தில் புதைந்துப்போன நினைவோடையை மீண்டும் ஒருமுறை சலசலக்க வைத்தேன். தொண்ணூறுகளுக்கு முன்பான தலைமுறை எவ்வளவு சீரும், சிறப்போடும் வாழ்ந்திருக்கிறது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' வராத அக்காலத்திலேயே, அதற்கு மாற்றாக எவ்வளவு அச்சு ஊடகங்கள் அவர்களுக்கு தகவல்களை அள்ளித் தந்திருக்கிறது? விருந்து, மருதம், திரைச்சுவை, வெண்திரை, செக்ஸ் லைப், வாலிபம் என்று எத்தனை எத்தனை இதழ்கள்? எவ்வளவு கதைகள்? உயிர்ப்போடும், துடிப்போடும் வாழ்ந்த தமிழ் சமூகம், பாழாய்ப்போன உலகமயமாக்கலால் தனது பாரம்பரிய பாலியல் அடையாளங்களை இன்று இழந்துவருகிறது.
இன்றைய இளைஞன் பாலியல் புரிதலுக்காக இணையத்தை மேய்கிறான். பர்மாசந்தையில் குறுவட்டு வாங்குகிறான். இதைத்தவிர்த்து வேறென்ன வாய்ப்பு அவனுக்கு வழங்கப்படுகிறது? ஜோதி, பானு போன்ற திரையரங்குகளில் கூட இப்போது துண்டுப்படங்கள் போடப்படுவதில்லை. துண்டுக்குப் பேர் போன ஷகிலாவே, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அண்ணாசாலை சுரங்கப்பாதைக்கு அருகே 'சரோஜாதேவி' கிடைப்பதில்லை.
இணையத்திலும், குறுவட்டிலும் அப்பட்டமாக அனைத்தும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கு நம் மண்சார்ந்த தனித்தன்மை கிஞ்சித்தும் இல்லையே? கிளுகிளுப்புக்கு கூட அயல்நாடுகளை சார்ந்திருக்கும் அவலநிலை இன்றைய தமிழனுக்கு. அய்யகோ தமிழா. ஏனிப்படி தரம் தாழ்ந்தாய்? 'மண்சார்ந்த தனித்தன்மை' என்ற சொல், உங்களை குழப்பலாம். அது ஒன்றும் பெரிய காமசூத்திரமில்லை. "என் பெயர் ரமா. வயது 18. பார்ப்பதற்கு கடலோரக் கவிதைகள் ரேகா மாதிரி இருப்பேன்" என்று அந்தக் காலத்து 'மருதம்' கதைகள் தொடங்கும். இதற்கு நிகரான தமிழ்த்தன்மையை இன்றைய குறுவட்டுகளும், இணையமும் தருகிறதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்று நாற்பதைத் தாண்டியவர்களுக்கு, அவர்களின் இளமைப் பருவத்தில் கிடைத்த வீரியம், அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா? மாறாக எடுத்தவுடனேயே எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டிவிடும் அயல் கலாச்சாரம், நம் இளைஞர்களுக்கு முழுமையாக, படிப்படியாக கிடைக்கவேண்டிய கிளுகிளுப்பின் கிறுகிறுப்பை கிஞ்சித்தும் கிட்டாமல் செய்துவிடுகிறது. சிட்டுக்குருவி புகழ் டாக்டர் கூட செத்துப்போய் விட்டாராமே?
எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அக்காலத்தில் 'சரோஜா தேவி' தயார் ஆனது தெரியுமா?
'கர்னாடகா பதிப்பகம், பெங்களூர்' என்று அச்சிடப்பட்டிருந்தாலும் எல்டாம்ஸ் ரோடிலும், ராயப்பேட்டையிலும்தான் சரோஜாதேவி பெரும்பாலும் அச்சிடப்பட்டது. சரோஜாதேவி என்ற பெயர் ஒன்றே போதும், தரம் எளிதில் விளங்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர் என்றில்லாமல், இவ்வணிகத்தில் ஈடுபட்டிருந்த பல பதிப்பாளர்களும் 'சரோஜா தேவி' என்கிற பெயரை, அவரவர் படைப்புகளை தாங்கிவந்த புத்தகங்களுக்கு சூட்டினார்கள்.
ஏன் இந்த குறிப்பிட்ட பெயர்? பானுமதி என்றோ, டி.ஆர்.ராஜகுமாரி என்றோ இந்த செவ்விலக்கியப் பிரதிகளுக்கு ஏன் பெயர் சூட்டப்படவில்லை?
ஹரிதாஸ் காலத்தில் பாலியல் வறட்சியால் வறண்டுப்போன சமூகம் நம் சமூகம். படத்துக்கு 60 பாட்டுகள் இருந்தாலும், முதிர் கன்னிகளான கதாநாயகிகள் ஒரே ஒரு அங்குலம் இடுப்பை கூட காட்டாமல் (காட்டியிருந்தாலும் சகித்திருக்காது) சவுதிஅரேபியாத் தனத்தோடு திரைகளில் இயக்கப்பட்டார்கள். இந்த வரலாற்று பாலியல் சோகம் போக்கப்பட்ட காலத்தின் குறியீடுதான் 'சரோஜாதேவி'.
பழுப்பு வண்ண காகிதம். தேவைப்பட்டால் இடையிடையே படங்கள். கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட அந்த நிழற்படங்களில் என்னென்ன சமாச்சாரங்கள் ஒழுங்காக தெரிகிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே, பல பாக்யராஜ்கள் அந்தக் காலத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டார்கள். 70களில் இருவண்ணத்தில் அச்சிடப்பட்ட அட்டைப்படங்கள். 80களின் இறுதியில் கவர்ச்சிகரமான வண்ண அட்டைகளும் மட்டமான வழுவழு கண்ணாடி லேமினேஷனில் போடப்பட்டது உண்டு.
கதைகளை எழுதியவர்கள் ஒரே ஆளா பலரா, யார் யாரென்பது 20ஆம் நூற்றாண்டின் விடைத்தெரியா கேள்விகளில் ஒன்று. நமக்குத் தெரிந்து பலரும் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு எழுதியவர்களில் சிலர் பிற்காலத்தில் சினிமாவில் கதையாசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும், பிரபல எழுத்தாளர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள். எல்டாம்ஸ் ரோடு அச்சகத்துக்குப் போய் விறுவிறுவென்று ஒரு நாற்பது பக்க நோட்டில் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தால் 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் சரக்கின் கிளுகிளுப்புத் தன்மைக்கு ஏற்றவாறு சன்மானம் கிடைக்குமாம். சுஜாதாவோ, பாலகுமாரனோ கூட அந்த காலத்தில் சம்பாதிக்காத பெருந்தொகையை சில சரோஜாதேவி எழுத்தாளர்கள் சம்பாதித்திருக்கிறார்கள்.
கதை பெரும்பாலும் பெண் எழுதுவதைப் போன்ற மொழிநடையில் இருக்கும். ஏனெனில் ஆண்களின் அனுபவங்களை வாசக ஆண்மனம் சகித்துக் கொள்ளாது. கதைக்கு எதுகை மோனையோடு கூடிய 'நச்'சென்ற தலைப்பு அவசியம். உதாரணம் : பாலைக் குடிச்சுக்கோ, பழத்தை உட்டுக்கோ.
இந்தப் புத்தகங்களின் வினியோகம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு உலக ஆச்சரியம். மருதம், விருந்து போன்ற இடைபாலியல் நிலை இதழ்களை பேருந்துநிலைய பெட்டிக்கடைகளில் விற்கலாம். ஆனால் சரோஜாதேவி போன்ற நேரடி கலகப் புத்தகங்களை விற்பவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட நிலையிருந்தும், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் இவை விற்கப்பட்டிருக்கின்றன. வாசிக்கப்பட்டிருக்கின்றன. சரோஜாதேவி வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஏதோ ஒரு மர்ம வலைப்பின்னல் இருந்திருக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கூட அண்ணாசாலையில் பழைய சரோஜாதேவி புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. விலைதான் கொஞ்சம் அதிகம். 60 ரூபாய். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, "ஏதாவது காமிக்ஸ் புக் இருக்காண்ணா?" என்று கேட்டோமானால் கடைக்காரர் புரிந்துகொள்வார். "படம் போட்டு ஓணுமா இல்லைன்னா வெறும் கதையா?" என்பார். வெறும் கதை என்றால் சரோஜாதேவி. படம் போட்டவை ஃபாரின் கந்தாயங்கள். அவை விலை இன்னும் கொஞ்சம் கூடுதல்.
இப்போதும் அண்ணாசாலையில் கடைகள் இருக்கின்றன. வாலிப நிலா, சினிக்கூத்து, வண்ணத்திரைதான் விற்கிறார்கள். சரோஜாதேவி இலக்கிய உற்பத்தி தேக்கநிலை அடைந்து, இன்று கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. சரோஜாதேவி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது.
எது எப்படியோ. ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் காலத்திலும் வாசக அனுபவ அடிப்படையில் சரோஜாதேவியை, சபீதாபாபி வென்றுவிடவே முடியாது.
1 ஜனவரி, 2011
22 டிசம்பர், 2010
டிசம்பர் 26 - இன்னொரு சுனாமி
2004ல் வந்த சுனாமி மாதிரியில்லை இது. கொஞ்சம் நல்ல சுனாமி.
நண்பர்கள் நர்சிம், நிலாரசிகன், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆகியோரின் கவிதைத் தொகுதிகள் இந்த நாளில் உயிர்மை வெளியீடாக வெளியிடப்பட இருக்கின்றன.
நர்சிம் - தீக்கடல் - விலை ரூ.40
நிலாரசிகன் - வெயில் நின்ற மழை - விலை ரூ.50
பொன்.வாசுதேவன் - ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
என்னைப் பொறுத்தவரை 'கவிதை' என்றாலே கெட்டவார்த்தை. இருந்தாலும் நண்பர்கள் எழுதிய கவிதைகள் என்பதால் சகித்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை. நண்பர் சரவண கார்த்திகேயனின் சமீபத்திய கவிதை நூலான 'பரத்தை கூற்று' வாசித்ததில் இருந்து ஓரளவுக்கு கவிதை மீதான அலர்ஜி குறைந்திருக்கிறது. கவிஞர்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் கிடைப்பார்கள் என்று ஒரு கற்பிதம் இருக்கிறது. எனவே நானும் புதுவருடத்தில் கவிதை, கிவிதை எழுதலாமா என்று அபாயகரமாக யோசித்து வருகிறேன்.
நர்சிம்மின் இரண்டாவது நூல் இந்த 'தீக்கடல்'. முதலாவதாக அகநாழிகை வெளியீடாக வந்திருந்தது 'அய்யனார் கம்மா' சிறுகதைத் தொகுதி. ஆக்சுவலி, யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன். அய்யனார் கம்மா-வுக்கு முன்பாக நர்சிம்மின் கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியாக இருந்தது. அந்த புரொடக்ஷன் டீமில் சுறுசுறுப்புக்குப் பெயர்போன நானும், மாடசாமி என்கிற என்னுடைய நண்பரும் இன்வால்வ் ஆகியிருந்ததால் அம்முயற்சி குறைப்பிரசவமாக லே-அவுட்டோடு நின்றுவிட்டது. இதுபோல நர்சிம்மின் முதல் முயற்சி நின்றுபோனது தமிழிலக்கிய வாசகர்களுக்கு அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா என்பதை எல்லாம் வல்ல இலக்கியமாதா தான் முடிவு செய்யவேண்டும்.
நண்பர் நிலாரசிகனோடு எனக்கு பெரியளவில் பரிச்சயமில்லை. சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் அடிக்கடி பார்ப்போன். 'ஹாய்' சொல்லிக் கொள்வோம். நீண்டகாலமாக தமிழிணையத்தில் இயங்கி வருபவர். ஸ்விட்ச்சு போட்டால் பேன் சுற்றுவதைப் போல, சொடக்குப் போட்டதுமே கவிதைகளை கொட்டக்கூடிய ஆற்றல் பெற்ற கவிஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சில கவிதைத் தொகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு திரிசக்தி பதிப்பகத்தில் இவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.
பொன்.வாசுதேவனைப் பொறுத்தவரை என்ன சொல்வது? வழக்கறிஞர். அச்சகத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இலக்கியத்தோடு இருபதாண்டு பரிச்சயம் கொண்டவர். பத்திரிகையாளர். அகநாழிகை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர். இதுபோல எண்ணற்ற முகங்கள். சர்வநிச்சயமாக இவர் ஒரு சகலகலா வல்லவர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை'தான் இவருடைய முதல் நூல்.
கடைசியாக மச்சி சார்.
சில மாதங்களுக்கு முன்பாக ஒரு புது வலைப்பதிவர் வலைபதிய வந்திருந்தார். எடக்கு முடக்கான மொழியில் தீவிர இலக்கியம் பேசுபவராக இருந்ததால் ட்விட்டர், பிளாக் போன்ற தளங்களில் அவரோடு தொடர்பினை வளர்த்துக்கொண்டேன். சோம்பலான ஒரு ஞாயிறு மதியத்தில் போன் செய்தார். "நான் தாம்பா விமலாதித்த மாமல்லன் பேசுறேன்" என்று ஆரம்பித்தார். ஒரு மணிநேர உரையாடல். அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் காதுகளை விரியவைத்து கேட்டுக்கொண்டே இருந்தேன். முன்பின் தெரியாதவர்களிடம் - குறிப்பாக ஒரு ஞானசூனியத்திடம் - அன்னியோன்னியமான உரையாடலை ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நிகழ்த்த முடிகிறதென்றால் அது கின்னஸ் சாதனையை விட சிறப்பானது.
ஆரம்பத்தில் சார் போட்டு பேசினால் கோபப்படுவார். "யோவ் நானும் யூத்துதான். உங்க சாருவை விட பத்து வருஷம் யூத்து. மாமு, மச்சின்னே கூப்பிடு" என்றார். அவரது வேண்டுக்கோளுக்கிணங்க மச்சி என்று கூப்பிட்டாலும், மரியாதைக்காக 'சார்' போட்டு 'மச்சி சார்' என்று அழைக்கிறோம். இன்று தமிழிணையத்துக்கே செல்லமான 'மச்சி சார்' அவர்.
80களில் தொடங்கி, 90களின் மத்தி வரையிலும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக இயங்கிய இலக்கியவாதி அவர். 35 வயதிலேயே இலக்கியத்தில் இருந்து வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டார். அவரது இருபத்து சொச்சம் வயதுகளிலேயே அமரப்புகழை இலக்கியத்தில் பெற்றுவிட்டவர். அவர் எழுதுவதை நிறுத்தி பதினைந்து ஆண்டுகள் கழிந்தும் இன்றும் வாசகர்கள் 'விமலாதித்த மாமல்லன்' என்ற பெயரை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவரது புகழுக்கு சான்று. தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று யார் பட்டியலிட்டாலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர்' கட்டாயம் இடம்பெறும். இந்தக் கதையை விட சிறந்த கதைகளை இவர் எழுதியிருந்தாலும் கூட, சிங்கத்தை ஏனோ சிறுமிக்குள்ளேயே அடக்கி வைக்கிறார்கள்.
சுந்தரராமசாமி அவருக்கு உயிர். அதனால்தான் என்னவோ இன்று தனது தோற்றத்தையும் கூட 'சுரா' பாணியிலேயே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா வழியும் ரோமுக்கே என்பது மாதிரி என்ன பேசினாலும் கடைசியாக 'சுரா'வில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார். "எனக்கும், ராமசாமிக்கும் இடையிலே எவனையும் விடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு பி.எஸ்.வீரப்பா பாணியில் கடகடவென சிரிப்பார்.
மச்சி சார் இலக்கிய உலகத்துக்குள் தொபுக்கடீரென்று தவளைக்காய் குதி குதித்து, ஆமை மாதிரி அவசரப்படாமல் பொறுமையாய், ஆழத்தில் நீந்தி மிகச்சரியாக இவ்வருடத்தோடு முப்பதாண்டுகள் ஆகிறது. ஒரு நாவல் கூட எழுதியதில்லை. அவருக்குப் பிடித்த வடிவம் குறுநாவல். இரண்டு மூன்று குறுநாவல் எழுதியிருக்கிறார். மீதியெல்லாம் சிறுகதைகள். தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத சக்திகளில் ஒருவரான இவரது மொத்தப் படைப்புகள் மொத்தமே முப்பதுதான்.
'விமலாதித்த மாமல்லன் கதைகள் - முழுத்தொகுப்பு', 30 படைப்புகளும், 300க்கும் மேற்பட்ட பக்கங்களில், ரூ.180/- விலையில் அதே டிச. 26ல், அதே விழாவில் வெளியிடப்படுகிறது. சுனாமியைக் கொண்டாட இதுவும் ஒரு காரணம். விமலாதித்த மாமல்லனின் இந்தத் தொகுப்பு நிச்சயம் பல விருதுகளை அள்ளிக் குவிக்க தகுதியானது. ஆனால் விருதுகளுக்குப் பின்னாலான அரசியல் அவருக்கு தெரியாது என்பதால், வாசகர்கள்தான் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
விழாவில் சிறப்புரை ஆற்ற இருப்பவர்கள் : அழகிய பெரியவன், சுகுமாரன், மணா, இந்திரன், ஜே.பி.சாணக்யா, ந.முருகேச பாண்டியன், ஷாஜி, சுப்ரபாரதி மணியன், அ.ராமசாமி, ந.முத்துக்குமார், பவா.செல்லத்துரை, ஸ்ரீநேசன்
நாள் : 26-12-2010, ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.30 மணி
இடம் : தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலகம், எல்.எல்.ஏ. பில்டிங்,
735, அண்ணா சாலை, சென்னை.
735, அண்ணா சாலை, சென்னை.
குறிப்பு : முன்னதாக 25-12-2010 அன்று மாலை இதே அரங்கில் மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இருக்கிறது. சாரு இம்முறை பேசப்போகிறார். எந்தப் புத்தகத்தையும் கிழிக்காமல் சினிமா, அரசியல், இலக்கியத் தளங்களில் நடைபெறும் ஊழல்களை கிழிக்க இருக்கிறார். பல கனவான்களின் (கணவன்களின் அல்ல) முகமூடியை டார் டாராக கிழித்தெறியப் போகிறார்.
21 டிசம்பர், 2010
பேரறிஞர் அண்ணா குறித்த நூல் வெளியீடு!
இடம் :
தேவநேயப் பாவணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை.
தேவநேயப் பாவணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை.
நாள் :
24-12-2010
வெள்ளிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு
24-12-2010
வெள்ளிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு
வரவேற்புரை :
என்.அசோகன்,
முதன்மை ஆசிரியர், தி சண்டே இண்டியன்
என்.அசோகன்,
முதன்மை ஆசிரியர், தி சண்டே இண்டியன்
நூல் வெளியீடு, தலைமை :
மானமிகு கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
மானமிகு கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
நூல் பெறுதல், சிறப்புரை :
தொல். திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்
ஜி. விஸ்வநாதன்
வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
தமிழச்சி தங்கபாண்டியன்,
கவிஞர்
கவிஞர்
நன்றியுரை :
சுந்தரபுத்தன்,
செய்தியாளர், தி சண்டே இண்டியன்
சுந்தரபுத்தன்,
செய்தியாளர், தி சண்டே இண்டியன்
20 டிசம்பர், 2010
நாகவல்லி!
நாகவல்லி அந்த வகை. பொன் வைத்த இடத்தில் பூ வைத்தமாதிரி சூப்பர்ஸ்டார் கேரக்டருக்கு வெங்கடேஷ். ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்காவென்று கிடைத்த ஆட்களைப் போட்டு ஒருமாதிரியாக படத்தை தேத்திவிட்டார் இயக்குனர். பி.வாசுவுக்கு சமகாலப் போக்கில் படங்களை எடுக்க முடியவில்லையே தவிர, சந்திரமுகியை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பக்காவாக ரீமேக்க முடியுமென்று தோன்றுகிறது.
வெங்கடேஷ், ரஜினியை மேனரிஸம், உடையலங்காரம் என்று எல்லாவிதத்திலும் 'பிட்' அடித்திருக்கிறார். இருந்தாலும் சூப்பர்ஸ்டாரின் கம்பீரமும், வேகமும், ஸ்டைலும் வந்துவிடுமா என்ன? இரண்டாம் பாதியில் வரும் நெகட்டிவ் கேரக்டரில் அசத்துகிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் டேன்ஸ். என்னதானிருந்தாலும் சந்திரமுகி ரஜினியை ரசித்தவர்களுக்கு, வெங்கடேஷை பார்க்க கொஞ்சம் பாவமாகதானிருக்கிறது. வேட்டையனைப் பார்த்துவிட்டு வெங்கடேஷைப் பார்க்க கொஞ்சம் காமெடியாகவும் இருக்கிறது.
அம்புலிமாமா கதைதான் என்பதால் லாஜிக் ஓட்டைகளை மன்னித்து விட்டுவிடலாம். இருந்தாலும் சில ஓட்டைகள் ஓஸோன் ஓட்டை மாதிரி அடைக்கவே முடியாத லெவலுக்கு ரொம்ப பெருசு. சாமியார் வரும் காட்சிகளையும், பேசும் வசனங்களையும் கண்டால் பகுத்தறிவுவாதிகளுக்கு பி.பி. எகிறி, அப்போலாவில் போய் அட்மிட் ஆகவேண்டியதுதான்.
அருந்ததியில் அட்டகாசப்படுத்தியதால் 'சந்திரமுகி' கேரக்டர் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. அவரது அழகான அம்சமான சுழி கொண்ட வெண்ணிலவின் நிறம் கொண்ட பளீர் தொப்புளைத் தவிர்த்து வேறெதுவும் கவரும் அம்சம் இல்லை. அவரது காதலராக வரும் குணசேகரனை எங்கே போய் தேடிப் பிடித்தார்களோ தெரியவில்லை. செம த்ராபை.
க்ளைமேக்ஸுக்கு முந்திய அரைமணிநேரப் படம் திடுக் திருப்பங்களால் அசுரவேகம். இந்திரா சவுந்தர்ராஜன் கதை மாதிரி சற்றும் எதிர்பாராத 'கேரக்டர்' ஒன்று திடுமென்று உள்நுழைந்து படம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறது. அதே பழைய சந்திரமுகி டெக்னிக்தான் என்றாலும், இதற்காகவே இலக்கில்லாமல் முதல் பாதியை ஓட்டிய பி.வாசுவை மன்னித்துவிடலாம்.
ஒருவேளை இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தால், பழைய சந்திரமுகியின் சாதனையை சர்வசாதாரணமாக முறியடித்திருக்கலாம். இருந்தாலும் ஓக்கே. நாகவல்லி நாராசமான படமல்ல. இரண்டரை மணி நேரம் களைப்படையாமல் சுவாரஸ்யமாக பார்க்க முடிகிறது.
நாகவல்லி - சந்திரமுகி ரிப்பீட்டேய்!
18 டிசம்பர், 2010
சாரு நிவேதிதாவின் தேகம்!
நிச்சயமாக இது முழுக்க 'வதை'யைப் பற்றிய நாவல்தான். நாவலின் தொடக்கம் உடல் வதை குறித்ததாக இருக்கிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் மூலமாக 'மனவதை' குறித்த சித்தரிப்புகளுக்கு மாறிவிடுகிறது. வதையும், அதன் விளைவான வாதையும் நேர்க்கோட்டில் சொல்லப்படாமல் முன்னுக்குப் பின்னாக நான்லீனியராக சொல்லப்படுகிறது. வழக்கமான சாருவின் 'கொண்டாட்டம்' இதிலும் உண்டு. ஒரு விஷயத்தை ஒருவன் கொண்டாடும்போது, அதே விஷயம் இன்னொருவனை வதைப்படுத்துகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி அல்லது பட்டர்ஃப்ளை விளைவு அல்லது ஏதோ ஒரு கருமம்.
புரொபஷனல் கில்லர் மாதிரி, நாயகன் தர்மா புரொபஷனல் டார்ச்சர். 'நாய்' பாஸ்கருக்காக வேலை பார்க்கிறான். இந்த வேலையை தர்மா ஏன் விரும்பி ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் உன்னிப்போடு முழுவீச்சில் செய்கிறான்? பிளாஷ்பேக். சமூகத்தால் 'டார்ச்சர்' செய்யப்பட்டவன் தர்மா. டிரான்ஸ்ஜெண்டராக, ஜிகிலோவாக, ஜேப்படித்திருடனாக, அடியாளாக, எழுத்தாளனாக.. எப்படி எப்படியோ வதைப்பட்டிருக்கிறான். மற்றவர்களை வதைத்திருக்கிறான். எக்சிஸ்டென்ஷியலிஸமும், ஃபேன்ஸி பனியனும் சூர்யாதான் தேகத்தின் தர்மா. பாத்திரம் மட்டுமல்ல. பல சித்தரிப்புகளும் கூட (குறிப்பாக மலம் அள்ளும் பிளாஷ்பேக்) ஏற்கனவே சாருவின் படைப்புகளில் பலமுறை வாசித்ததுதான். எனவே ஒரு புதிய நாவலை வாசிக்கும் அனுபவம் கைகூடவில்லை.
சாரு சித்தரித்திருக்கும் பிரான்ஸ் செலின் பாத்திரம் ஓர் அற்புதம். செலின் - தர்மா தொடர்புடைய அத்தியாயங்களில் என்ன வதை இருக்கமுடியும், கவிதையான ரொமான்ஸ்தானே பிரதானமாக இருக்கிறது என்று முதல் வாசிப்பில் தோன்றியது. குறிப்பிட்ட அந்த சில அத்தியாயங்களை மீள்வாசித்ததில் செலின், தர்மாவை செய்யும் ரிமோட் டார்ச்சர் பளிச்சிடுகிறது. தன்னை ஆண் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பெரிய வதையாக என்ன இருக்க முடியும்? பாலியல்ரீதியாக ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியாததுதான். செலின் அந்த வதையை தர்மாவுக்கு செய்கிறாள். அவளது உடல் தர்மாவுக்கு 'எழுச்சி'யை ஏற்படுத்துவதில்லை. வேறு வகை பாலியல் உத்திகளால் அவளை திருப்திபடுத்த நினைக்கிறான் தர்மா. அதற்கு செலின் ஒப்புக்கொள்வதில்லை. குற்றவுணர்ச்சியால் குன்றிப்போகும் தர்மாவின் வாழ்வில் இருந்து திடீரென்று காணாமல் போகிறாள் செலின்.
முதல் நூறு பக்கங்கள் நிச்சயமாக சுவாரஸ்யம். அடுத்த 80 பக்கங்கள்தான் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போகிறது. நண்பர்கள், நண்பிகள். நண்பிகளின் நண்பர்கள். மது, மாது, மங்கை, மயக்கம், இத்யாதி, இத்யாதி.
செலினால் தனக்கு கிடைத்த வதைகளை நேஹாவுக்கு தருகிறான் தர்மா. நேஹா தர்மாவுக்கு எழுதும் காம-காதல் ரசம் சொட்டும் ஈ-மெயில்கள் அச்சு அசல் காமரூபக் கதைகள். தர்மாவின் 'புறக்கணிப்பு' என்ற வதையால், மனம் பிறழ்கிறாள் நேஹா. அந்த அத்தியாயம்தான் நாவலின் ஹைலைட். கத்தியின்றி, ரத்தமின்றி உச்சபட்ச வாதையை தரும் வதை. சீரோ டிகிரியின் முதல் அத்தியாயத்துக்கு இணையான கிளாசிக் ரைட்டிங். அவ்ளோதான். அவசர அவசரமாக நாவல் முடிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை.
காமரூபக் கதைகள் தவிர்த்து, சாருவின் வேறு எந்த நாவலையும் விட சிறப்பாக 'தேகம்' வந்துவிடவில்லை. அதே நேரத்தில் ராஸலீலாவுக்குப் பிறகு கொஞ்சம் சவசவ என்று (சில சிறுகதைகள் தவிர்த்து) புனைவு எழுதிக்கொண்டிருந்த சாரு மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வர 'தேகம்' உதவியிருக்கிறது. இந்த ஃபார்ம் அடுத்து அவர் எழுதவிருக்கும் நாவல்களை மாஸ்டர்பீஸ்களாக மாற்ற உதவும். அவரது பழைய சாதனைகளை அவரே மீண்டும் முறியடிக்க வேண்டும் என்பதுதான், அவரது வாசகர்களின் விருப்பம்.
ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்ட முதல் நாளே அரங்கில் 65,000/- ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக கேள்விப்பட்டேன். நிச்சயமாக சாரு தமிழ் இலக்கியத்தின் பெஸ்ட் செல்லராக மாறிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் 'தேகம்' நிச்சயமாக அவரது மற்ற நூல்களை விட அதிகம் விற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற நூல்களை விட எந்த விதத்திலும் 'தேகம்' சிறந்ததில்லை.
நூல் : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)