22 மார்ச், 2011

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்

தோழர் சுகுணா திவாகர் எழுதிய
பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா!

நாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)

பங்கேற்போர் :
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா
பத்திரிகையாளர் கஜேந்திரன்
பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஏற்புரை :
கவிஞர் சுகுணா திவாகர்

நன்றியுரை :
தோழர் கவின்மலர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
கருப்புப் பிரதிகள்

அனைவரும் வருக!

21 மார்ச், 2011

அதே இருபத்தியொன்று...

ஊழ்வினையில் நமக்கு நம்பிக்கையில்லை. அது பகுத்தறிவுக்கு எதிரானது. அதே நேரம் 'எல்லா வினைக்கும், இணையான எதிர்வினை உண்டு' என்கிற அறிவியல் கூற்றை நாம் நம்புகிறோம். இன்றைய மதிமுக பொதுச்செயலாளரும், கலைஞரின் முன்னாள் போர்ப்படைத் தளபதியுமான வைகோவும் இந்த கூற்றினை நம்பியே ஆகவேண்டும்.

2001ல் ஜெ. ஆட்சிக்கு வந்தார். கலைஞரை கைது செய்தார். வைகோவை கைது செய்தார். சுபவீயை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். இன்னும் ஏராளமானோரை தகுந்த காரணம் ஏதுமின்றி, வெறும் காழ்ப்புணர்வு காரணமாகவே கைது செய்தார். வைகோ கைது செய்யப்பட்ட காட்சி இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்புகையில், விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி மாதிரி கைது செய்யப்படுகிறார். போலிஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்ல "ஆணவக்காரியின் ஆட்சி ஒழிக" என்று கோஷமிட்டவாறே கம்பி போட்ட வாகனத்துக்குள் சென்றார்.

அகில இந்தியாவும் அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்க்க கலைஞர் மட்டுமே பதறினார். உடன்பிறப்பு ஆயிற்றே? ஆட்சியிலிருந்த பாஜகவோடு பொடாவில் முரண்பட்டார். திமுகவின் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கர்ஜித்தார்கள். வேலூர் சிறைக்கு நேராக சென்று வைகோவுக்கு ஆறுதலும் சொன்னார் கலைஞர். ஒருவழியாக 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வைகோ உள்ளிட்டவர்கள் வெளியில் வந்தார்கள். உள்ளே இருந்தபோது ஆதரவளித்த கலைஞருக்கு (நெடுமாறன் தவிர்த்து) நன்றியோடும் இருந்தார்கள். வைகோ, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.

இது பழைய கதை.

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்று அவர்களது கட்-அவுட்டுகள் மாநாட்டு முகப்பில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. திமுகவினருக்கு இயல்பாகவே வைகோ மீது பாசம் அதிகம் என்பதால் 'கலைஞரின் போர்வாளுக்கு'தான் வரவேற்பு தொண்டர்கள் மத்தியில் அதிகம். மாலை நடைபெறும் நிகழ்வில் வைகோ பங்கேற்பார் என்று அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மதிமுகவினரும் திரளாக வந்திருந்தனர்.

மாலை வைகோ வரவில்லை. மதிமுகவினர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். மாநாட்டு முகப்பில் திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது படம் ஒட்டிய சுவரொட்டிகளை நகரெங்கும் கிழித்து எறிந்தனர். ஏனெனில் அன்று மதியம் வைகோ, போயஸ் தோட்டம் சென்று அன்பு சகோதரியோடு 35 சீட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தை செய்திருந்தார் வைகோ.

திமுக கூட்டணியை விட்டு அவர் வெளியேற அப்போது சொன்ன காரணம் இருபத்தியொன்று.

ஆம். திமுக இருபத்தியொன்று சீட்டுகள் மட்டுமே தர முன்வந்ததால் அன்புச்சகோதரியோடு தேர்தலை சந்திக்க முடிவெடுத்ததாக சொன்னார் (திமுகவே அப்போது மொத்தமாக 132 சீட்டுகளில்தான் போட்டியிட்டது). இந்த அடாத முடிவினை மதிமுக தொண்டர்களை சுலபமாக ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடிந்தது. ஒரே ஒருவரை மட்டும் அவரால் சமாதானப்படுத்த இயலவில்லை. கலிங்கப்பட்டிக்கே நேராக சென்று அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் வைகோவை ஈன்றெடுத்த அன்னையார். மகனை வெஞ்சிறையில் போட்ட சீமாட்டியுடனேயே, அதே மகன் தேர்தல் களம் காண்பதை அந்த தாயுள்ளத்தால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

இதோ ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.

இப்போதும் காரணம் அதே இருபத்தியொன்று.

அன்று கலைஞர் தருவதாக சொன்ன இருபத்தியொன்றை வைகோ உதாசீனம் செய்தார். இன்று புரட்சித்தலைவியிடம் அதே இருபத்தியொன்றை மட்டுமாவது தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை. கடைசிவரை காக்க வைத்து கழுத்தறுத்திருக்கிறார்.

இப்போதும் வைகோ கலிங்கப்பட்டிக்கு விரைகிறார், அன்னையின் திருமுகத்தை காண. ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு முன்பு அன்னையின் உள்ளத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதற்காகவும் இருக்கலாம்.

15 மார்ச், 2011

உலோகம்!


நூலின் பெயர் : உலோகம்

நூல் ஆசிரியர் : ஜெயமோகன்

விலை : ரூ.50

பக்கங்கள் : 216

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.



ஆங்கில 'த்ரில்லர்' நாவல்களின் தமிழ் மொழியாக்கத்தை (பெரும்பாலும் கண்ணதாசன் பதிப்பகம்) வாசிக்கும்போது, தமிழ் புனைவுலகின் 'த்ரில்' போதாமை குறித்த ஏக்கம் அடிவயிற்றிலிருந்து தொண்டைக்கு பந்தாய் கிளம்பும். ஒரு அகதா கிறிஸ்டியோ, ஜேம்ஸ் ஹேட்லி சேஸோ தமிழில் ஏன் உருவாகவில்லை என்ற கேள்வி இயல்பாய் எழும்பும்.

தமிழ் த்ரில்லர்களின் வடிவம் ரொம்ப சுலபமானது. ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் மகிழ்ச்சியான ஒரு நாளில் தொடங்கும் முதல் அத்தியாயத்தின் முடிவில் ஒரு கொலை. வழக்கை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரிப்பார். அல்லது ஒரு வக்கீல். இல்லையேல் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். அந்த நிபுணரின் உதவியாளர், பெருத்த மார்புகள் கொண்ட, ஆங்கில அசாதாரண வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் போட்ட பெண். இடையிடையே அசட்டு நகைச்சுவை. சில ஆக்‌ஷன் காட்சிகள். தேவைப்பட்டால் மேலும் சில கொலைகள். கொலையாளி யாரென்று, கடைசி அத்தியாயம் வரை யூகிக்க முடியாத நடை மட்டும் தமிழ் த்ரில் நாவல்களின் ஒரே சாதனை.

இந்த படா அலுப்பான வழக்கத்தை அனாயசமாக உடைத்தெறிந்திருக்கிறது ஜெயமோகனின் உலோகம்.

தமிழகத் தமிழனுக்கு தெரிந்த ஈழப்போர் பின்னணிக்கு ஒரே ஒரு பரிணாமம்தான். தமிழ்ப் போராளிகள் மாவீரர்கள். இலங்கை ராணுவத்தினர் முட்டாள்கள். இந்திய உளவுத்துறையினர் அடிமுட்டாள்கள். உண்மையோ, பொய்யோ. பலமாக நிறுவப்பட்டுவிட்ட இந்த கற்பிதத்துக்கு பின்னால் வேறு சில பரிணாமங்களும் இருக்கக்கூடும் இல்லையா? உதாரணத்துக்கு, போர் இயந்திரமாய் மாறிவிட்ட இயக்கத்துக்காரனுக்கும் காதல் இருக்கும், காமம் இருக்கும்.

முப்பது ஆண்டுகள் ஓயாமல் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நாட்டிலும், மனிதர்களுக்கு போர் மட்டுமே வாழ்க்கையல்ல. ஜெயமோகன், 'உலோகம்' மூலமாக வாசகனுக்கு காட்ட விரும்பும் சித்திரம் இதுதான். 'ஈழப்போர் பின்னணியில் திகைப்பூட்டும் த்ரில்லர்' என்று அட்டை குறிப்பிட்டாலும், ஒரு போர்க்காட்சியைக் கூட சித்தரிக்காமல், போருக்கான த்ரில்லை தருகிறார் ஜெயமோகன். ஈழப்போர் வெறும் 'த்ரில்' மட்டும்தானா என்று அசட்டுத்தனமாக, அவசரமாக கேட்டுவிடாதீர்கள். 'த்ரில்'லும் உண்டு. உலோகம், த்ரில்லை தனக்கான கச்சாவாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. கூடுதலாக புலம்பெயர் வாழ்க்கையின் அவலமான நிதர்சனத்தை போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது.

சார்லஸ் (எ) சாந்தனின் சுயவாக்குமூலம் உலோகம். பலாலி போர்முனையில், அவனது தொடைக்குள் பாய்ந்த ஈயக்குண்டுதான் உலோகம். அவ்வப்போது தொடைத்தழும்பில் அந்த உலோகத்தை தடவிப் பார்த்துக் கொள்கிறான். அது அவனது உடலுக்குள் இருப்பதை விரும்புகிறானா, வெறுக்கிறானா என்பது முக்கியமில்லை. தன்னுடைய உடலுக்குள் ஒரு குண்டு இருப்பதை ஏற்றுக் கொள்கிறான். சாந்தன் அந்த ஈயக்குண்டை ஒத்தவன். இயக்கங்களுக்கும், இந்திய உளவுத்துறைக்கும் இடையில் ஈயக்குண்டினைப் போல அல்லாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு கொலை இயந்திரம். இந்த நிலையை அவன் விரும்பவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்கிறான்.

அங்காடித் தெரு மாதிரி உலோகமும் க்ளைமேக்ஸ் ஓபனிங். பொன்னம்பலத்தாரை போடுவதுதான் முதல் அத்தியாயம். எனவே, க்ளைமேக்ஸில் சாந்தன் பொன்னம்பலத்தாரை போடுகிறானா இல்லையாவென்று, இயல்பாக வாசகனுக்கு கிடைக்க வேண்டிய 'த்ரில்', 'மிஸ்' ஆவதுதான் மிகப்பெரிய குறை. எப்படி போடுகிறான் என்பதும் ஓபனிங்கிலேயே சொல்லியாகிவிட்டது. மீதிக்கதையை இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு விரிப்பது, படைப்பாளிக்கு மிகப்பெரிய சவால். ஜெயமோகன், இச்சவாலை அனாயசமாக வெற்றி கொள்கிறார்.

இயக்கங்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல் எழுதுகிறார். எனவே சாந்தன் எந்த இயக்கம் (probably LTTE), ஜார்ஜ் எந்த இயக்கமென்று வாசிக்கையில் குழப்பம் ஏற்படுகிறது. இயக்கம் மூலமாக இந்தியாவில் ஜார்ஜ் பயிற்சி பெற்று, தாயகம் திரும்புகிறான். அவனுடைய வயது நாவலில் இருபத்தி மூன்று. கதை நடைபெறும் காலம் 2004-05 என்று, கதையில் இடம்பெறும் சினிமாக்கள் (கில்லி, திருப்பாச்சி, etc) வாயிலாக அறிய முடிகிறது. 1991ல் ராஜீவ் கொலைக்குப் பிறகு ஏதேனும் ஈழப்போராளி அமைப்புகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்பட்டதா என்று உறுதியாக தெரியவில்லை. கதைக்களம் எண்பதுகளின் இறுதியாக குறிப்பிடப்பட்டிருந்தால், பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் செல்போன் போன்ற நவீன நாகரிக வஸ்துக்களை கதைக்குள் கொண்டுவந்திருக்க இயலாது. அதுபோலவே பொன்னம்பலத்தாரின் இயக்கம் எதுவென்றும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பொன்னம்பலத்தார் பாத்திரத்தை, வரதராஜபெருமாளில் இருந்து பிய்த்து எடுத்திருக்கிறார் ஆசிரியர் என்பதை மட்டும் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

ஈழப்போராட்டத்தில் இந்திய உளவுத்துறையின் பங்கு என்கிற விஷயம் குறித்த நடுநிலையான பார்வையை தமிழ்ச்சூழலில் நாம் கண்டறிய இயலாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளைத் தவிர்த்துப் பார்த்தோமானால், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களால் அதிகம் மிகைப்படுத்தப்பட்ட விஷயம் இதுவாகதானிருக்கும். ஈழத்திலே கட்டெறும்பு ஒருவனை கடித்தால் கூட, அது இந்திய உளவுத்துறையான 'ரா'வின் வேலை எனுமளவுக்கு பிரச்சாரம் செய்யப்படுவதை இணையங்களிலே வாசிக்கலாம். ஜெயமோகன், 'ஜெய்ஹிந்த்' போடாமல், 'ரா'வின் பங்கை முடிந்தளவுக்கு நேர்மையாக, இந்நாவலில் சித்தரிக்க முனைகிறார் என்றே நம்பலாம். 'ரா' அமைப்பு, ஈழப்போராட்ட அமைப்புகளுக்கு இடையே, ஒப்புக்குச் சப்பாணி அமைப்புகளை உருவாக்கி, அமைப்புகளுக்குள் எவ்வகையான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறித்த ஒரு தெளிவான, நுட்பமான சித்திரம் உலோகம் வாயிலாக நமக்கு கிடைக்கிறது.

போர்ச்சூழலின் பக்கவிளைவாக உடைபடும் கலாச்சார விழுமியங்களையும், ரெஜினா பாத்திரம் மூலமாக கவலையோடு பதிவு செய்கிறார் ஜெயமோகன். குறிப்பாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற தமிழ்க்கலாச்சாரம் சூழல்கள் காரணமாக சீரழிவதை, ரெஜினா, வைஜயந்தி பாத்திரங்கள் மூலமாக எடுத்துக் காட்டுகிறார். முந்தையக் காட்சி ஒன்றினில் 'அண்ணை' என்று சாந்தனை அழைக்கும் ரெஜினா, பிற்பாடு தனது உடல்மொழி மூலம் அவனுக்கு உடல்சார்ந்த உறவுக்கு சமிக்ஞை கொடுக்கிறாள். பிறிதொரு சந்தர்ப்பத்தில், அடக்க முடியாத வேட்கையோடு முரட்டுத்தனமாக அவளது உடலை கையாளுகிறான் சாந்தன். இருவருக்குமே 'அண்ணை' நினைவில் இல்லை.

சாந்தனை, 'ரா' அலுவலகத்தில் செய்யும் வதைக்காட்சிகளின் சித்தரிப்பு வாசகனை வலிக்கச் செய்கிறது. பரபரப்பின் எல்லையை தொட்டு மீளுகிறோம். மிகக்கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் கடைசி இரண்டு அத்தியாயங்களின் பக்கங்களை 'திக் திக்' மனதோடுதான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

வன்முறையும், காமமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இரண்டும் ஏற்படுத்தும் கிளர்ச்சியும், உச்சமும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. சராசரி மனித உணர்ச்சிகளை வீழ்த்தி உலோகமாக வாழப் பழகிக்கொண்டவன், தவிர்க்க இயலா சந்தர்ப்பத்தில் வைஜயந்தி மீதான காமத்தில் மீண்டும் மனிதனாகிறான். இதன் விளைவாக சிக்கல்களுக்கு உள்ளாகிறான். சிக்கலில் மீண்டு எழுந்த மறுகணம், மீண்டும் உலோகம் ஆகிறான். துரோகங்களால் ஆன முடிச்சுகளும், முடிச்சுகளை சிக்கலின்றி அவிழ்ப்பதும் என்று மாறி மாறி எழுத்தில் விளையாடித் தள்ளியிருக்கிறார் ஜெயமோகன்.

நாவலின் உள்ளடக்கம் மட்டுமல்ல. தயாரிப்பும் சர்வதேசத் தரம். தங்க நிறத்தில் எம்போஸிங் செய்யப்பட்ட எழுத்தாளரின் பெயரோடு கூடிய அட்டை. புத்தகத்தின் அளவு. வடிவம். வரிகளுக்கு இடையேயான இடைவெளி என்று ஆங்கில நாவல்களின் தரத்தை, தனது முதல் முயற்சியிலேயே எட்டிப் பிடித்திருக்கிறது 'கிழக்கு த்ரில்லர்'. இந்நாவல் கிழக்கு த்ரில்லருக்கு செமத்தியான கிக் ஸ்டார்ட்.

உலோகம் - சாகஸ எழுத்தின் உச்சம்!

14 மார்ச், 2011

அமெரிக்கா வேண்டாம்.. அவினாசி போதும்!

நாம் வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்தபோது, அவரை சந்திக்க ஊர்ப்பெரியவர்கள் சிலரும் நம்மோடு காத்திருந்தார்கள். அவர் வணக்கம் கூறியவாரே வந்தார்.

"வணக்கம் அம்மா. கோயில் நன்கொடை விஷயமா பார்க்க வந்தோம்!" பெரியவர்களில் ஒருவர் மெதுவாக ஆரம்பித்தார்.

அவசரமாக அவர் இடைமறித்து, "கோயில்களுக்கு நன்கொடை தராமல் இருப்பதை கொள்கையாகவே வெச்சுருக்கேன். உங்க ஊர் பள்ளிக்கு எது வேணும்னாலும் கேளுங்க. அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு கிடைக்குமோ வாங்கித் தருகிறேன். பத்தலைன்னா என் சொந்தக் காசையும் கூட செலவளிக்கிறேன்" என்று நாகரிகமாக மறுக்கிறார்.

அவர், அவினாசி ஒன்றியத்தலைவி சாந்திபாபு. கோவை மண்டலத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் முக்கியமானவர். வயது 32. உள்ளாட்சி மன்றங்களில் மைக்கும், நாற்காலிகளும் பறக்க, சூடாக சபைக்கூட்டங்கள் நடக்கும் காலமிது. சாந்திபாபு தலைமை வகிக்கும் ஒன்றியக்குழு கூட்டங்களில் இதுவரை ஒரு சலசலப்பு கூட எழுந்ததில்லை. "அவ்வளவு பாந்தமா அம்மா கூட்டத்தை நடத்துவாங்க" என்று சிலிர்க்கிறார் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

சாந்தியின் சொந்த ஊர் அவிநாசி அருகில் நம்பியாம்பாளையம். நடுத்தரக் குடும்பம். படிப்பில் கில்லி. +2வில் பள்ளியில் முதலிடம். பின்னர் கம்ப்யூட்டர் அறிவியலில் பி.ஈ. பட்டம் பெற்றார். தூரத்து உறவினரான பாபுவை காதலித்து வந்தார் சாந்தி. பி.ஈ. படித்த பெண்ணை, +2 படித்த பாபுவுக்கு கொடுக்க பெற்றோருக்கு விருப்பமில்லை. நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு இருவீட்டார் சம்மதத்தோடு காதல் வென்றது. 'உங்கள் மகள் பி.ஈ. தானே.. என்னுடைய மனைவி எம்.ஈ-யாக இருக்கவேண்டும்' என்று வைராக்கியத்தோடு, மனைவியை மேற்படிப்பு படிக்கவைத்தார் பாபு. தனியார் பொறியியற் கல்லூரி ஒன்றில் அப்போது விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சாந்தி பாபு.

எம்.ஈ (சாஃப்ட்வேர் என்ஜீனியரிங்) இறுதியாண்டு படிக்கும்போது சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினை சமர்ப்பிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இவரது ஆய்வுக்கட்டுரையை கண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, மூன்று லட்ச ரூபாய் சம்பளத்துக்கு தங்கள் நிறுவனத்துக்கு பணிபுரியவருமாறு இவரை அழைத்தது. "அமெரிக்கா வேண்டாம். என்னுடைய அவினாசியே போதும்" என்று வாசல்தேடி வந்த வாய்ப்பை கம்பீரமாக மறுத்தார் சாந்திபாபு.

அமெரிக்க வாய்ப்பை மறுத்தவருக்கு அவினாசி வாய்ப்பு கேட்காமலேயே கிடைத்தது. சொந்த ஊரான நம்பியாண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் நின்று வென்றார். இது அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. பின்னர் அவினாசி ஊராட்சி ஒன்றியத் தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருநூற்று இருபத்தியாறு குக்கிராமங்கள் அடங்கிய முப்பத்தியோரு ஊராட்சி மன்றங்களை இப்போது நிர்வகித்து வருகிறார் சாந்திபாபு. இப்பதவிக்கு வரும்போது இவரது வயது இருபத்தி எட்டு. இந்தியாவிலேயே இவ்வளவு இளம்வயதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவியாக பதவியேற்றது இவர் மட்டும்தான்.

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், சத்துணவுக்கூடம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம், கூட்டுறவு அங்காடி, நியாயவிலைக்கடை என்று எங்காவது திடீரென அதிரடி விசிட் அடித்து சோதனை செய்வது இவரது வழக்கம். கையும் களவுமாக சிலர் மாட்டியதும் உண்டு. 'இல்லாதவருக்கு இலவச கைப்பேசி' என்றொரு திட்டத்தினை மத்திய அரசு அமலாக்கி வருகிறது தெரியுமா? தமிழகத்திலேயே அவினாசி ஒன்றியத்தில்தான் முதன்முறையாக இது அமலுக்கு வந்திருக்கிறது. அவினாசி ஒன்றியக்குழு கட்டிடம் சுமார் ஒன்றரைக் கோடி செலவில் கட்டப்பட்டு வருவதும் இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. தொழில் கடன், கல்விக் கடன் என்று தன்னை நாடி வரும் ஒன்றிய மக்களுக்கு சாந்திபாபு ஒரு கலங்கரை விளக்கம்.

சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பாக உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார்.

தன்னுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்து அடிக்கடி அறிவுறுத்துகிறார். மாணவ மாணவியருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவரோடு சேர்ந்து, தன்னுடைய உடலையும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக தந்திருக்கிறார்.

திறம்பட செயல்படும் இவரைப்பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றவர்களிடம் விசாரித்துப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் சாந்திபாபுவின் கல்வி பின்புலம் தெரிய வந்திருக்கிறது. கற்ற கல்வி வீணாகக்கூடாது என்று அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர், விரிவுரையாளர் பணியையும் தொடரவேண்டும் என்று சாந்திபாபுவைக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கருமத்தம்பட்டியிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். இளங்கலை கம்ப்யூட்டர் அறிவியல் மாணவர்களுக்கு 'டேட்டா மைனிங்' பாடம் நடத்தி வருகிறார்.

குடும்பத்தலைவி, பஞ்சாயத்து யூனியன் தலைவி, கல்லூரி விரிவுரையாளர், மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆலோசகர் – இத்தனை பொறுப்புகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள் சாந்தி?

"இது மட்டுமல்ல. டேட்டா மைனிங் துறையில் பி.எச்.டி. முடித்து டாக்டர் பட்டமும் பெற இருக்கிறேன். காலையில்தானே கல்லூரி? மாலை சும்மாதானே இருக்கிறது. மாலை மட்டுமல்ல. சனி, ஞாயிறு வாரயிறுதிகளும் எனக்கு விடுமுறைதான். இவ்வளவு நேரம் கிடைக்கிறதே? இந்தப் பணிகளை செய்ய இது போதாதா? உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு இன்னும் கூட நிறைய நேரம் மீதமிருக்கிறது" என்று சொல்லி சிரிக்கிறார்.

சாந்தி – பாபு தம்பதியினருக்கு இரண்டு வயதில் கலைநிதி என்று ஒரு மகன் உண்டு. திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் கூட்டுக் குடும்பம்தான். சாந்திபாபுவின் வெற்றி ரகசியம் இப்போது புரிகிறதா? கணவரின் - புகுந்த வீட்டின் ஆதரவு இருந்தால், எந்த மருமகளும் ஊருக்கே தலைவி ஆகலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

11 மார்ச், 2011

புரட்சி பாரதம்!

நீங்கள் வழக்கமாக செய்தித்தாள் படிக்கிறவராக இருந்தால்.. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக இந்தப் பெயரை வாசித்திருப்பீர்கள். 'புரட்சி பாரதம்'. "திமுக கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் விலகல்!" என்று சிங்கிள் காலத்திலோ, டபுள் காலத்திலோ நிச்சயம் வாசித்திருப்பீர்கள். தேர்தல் பரபரப்பு மிகுந்த இந்த சூழலில் கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகுவது என்பது மக்களுக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ தந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 'புரட்சி பாரதம்' விவகாரத்தில் இதில் ஓர் உணர்ச்சி கூட யாருக்குமே ஏற்படவில்லை. இக்கட்சி தங்கள் கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிடுவது குறித்து கலைஞருக்காவது தெரிந்திருக்குமா என்றுகூட தெரியவில்லை.

1991ல் அம்மா ஆட்சிக்கு வந்த காலக்கட்டத்தில் அரக்கோணம் பக்கமாக போய்வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். வாழப்பாடியார், வீரப்பாண்டியார் ஸ்டைலில் "மூர்த்தியார்" என்ற பெயர் சுவர்களில் மெகா சைஸில் எழுதப்பட்டிருக்கும். இந்த 'யார்' என முடியும் பெயர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. ஊர் பெயரை மையப்படுத்தி பெயர் வைத்திருப்பர்களுக்குதான் இந்த 'யார்' அந்தஸ்து கிடைக்கும். உதாரணம் மதுராந்தகத்தார். முதன் முதலாக தனது பெயருக்குப் பின்னால் 'யார்' சேர்த்து கூடுதல் மரியாதையை ஏற்படுத்திக் கொண்டவர் பூவை மூர்த்தியார்தான். இவர் ஏன் பூவையார் என்று போட்டுக் கொள்ளாமல், மூர்த்தியார் என்று போட்டுக் கொள்கிறார் என்று அப்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இப்போது சுவரொட்டிகளில் 'ராசாத்தியார்' லெவலுக்கு வந்துவிட்டதால், அது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தெரியவில்லை.

பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து விஸ்வரூபமாக வடமாவட்டங்களில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. 'அந்த' சாதிக்காரர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றதுமே, அப்பகுதியில் பெரும்பான்மையானவர்களாக வசித்து வந்த தலித் மக்கள், தங்களுக்கும் ஒரு அமைப்பினை எதிர்நோக்கி இருந்தார்கள். தங்களுக்குள் ஒரு தலைவன் தோன்ற மாட்டானா என்று ஏங்கிப் போய் கிடந்தார்கள். அம்மக்களது விருப்பத்தைப் புரிந்துகொண்டு திடீரென்ற களத்தில் குதித்தவர் பூவை மூர்த்தியார். புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல். எப்போதும் கோட்டு, சூட்டு போட்டு ஜம்மென்றிருப்பார். அரசியலுக்கு வாகான, களையான கருப்பு முகம்.

94 அல்லது 95 என்று நினைவு. புரட்சியாளர் பூவை மூர்த்தியார் தனது 'புரட்சி பாரதம்' கட்சியினை பெரும் கூட்டம் கூட்டி, அரக்கோணத்தில் துவக்கினார். துவக்கி வைத்தவர் புண்ணியவதி புரட்சித்தலைவி என்று சொன்னால் நீங்கள் இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். பா.ம.க.வுக்கு 'செக்' வைக்க அம்மாவுக்கு கிடைத்த ஆயுதம் புரட்சி பாரதம். பொதுவாகவே இன்றுவரை தலித் மக்களின் விருப்பத்துக்குரிய கட்சியாக அதிமுகதான் இருக்கிறது. எனவே புரட்சி பாரதத்தை, புரட்சித்தலைவி ஆதரவோடு மூர்த்தியார் தொடங்கியது பொருத்தமானதுதான். திமுக, அதிமுக கட்சிகளே இங்கில்லையோ என்று நினைக்குமளவுக்கு அரக்கோணம் சுற்று வட்டார கிராமங்களில் புரட்சி பாரதத்தின் நீலக்கொடி பறந்தது.

96 தேர்தலில் புரட்சி பாரதம் ஆதரித்த அதிமுக படுதோல்வி அடைந்தது. ஏனெனில் அப்பகுதியில் பா.ம.க.வுக்கு இணையான செல்வாக்கு பெற்றிருந்த ஜெகத்ரட்சகன் திமுக அணியில் நின்றார். மாநில அளவில் வீசிய அதிமுக எதிர்ப்பலையும் முக்கியமான காரணம். இந்த தோல்விக்குப் பிறகு புரட்சி பாரதத்தின் 'மவுசு' கொஞ்சம் ஸ்ருதி குறைந்தே காணப்பட்டது. இடையில் 98-99 பாராளுமன்றத் தேர்தல்களில் பா.ம.க.வின் செல்வாக்கும் அசுரபலம் பெற்றது. ஜெகத்ரட்சகனும் திமுகவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

இதற்கிடையே பூவை மூர்த்தியாரின் தொழில்கள் குறித்து வெவ்வேறு விதமான பேச்சுகளும் கெட்டவிதமாக நிலவ ஆரம்பித்தன. குறிப்பாக சென்னையின் ஒரு பிரபலமான 'சாதி' பிரமுகரோடு இணைந்து, பெட்ரோல் கலப்படத் தொழிலில் அவர் கொடிகட்டிப் பறந்ததாக செய்திகள். 'கட்டைப் பஞ்சாயத்து' இன்னொரு முக்கியத் தொழில். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி புள்ளிகளே பூவையாருக்கு அஞ்சும் காலமும் இருந்தது.

இதெல்லாம் மூர்த்தியாரின் திடீர் மரணம் வரை நீடித்தது. ஒரு நாள் காலை செய்தித்தாளை திறந்துப் பார்த்தபோது, மூர்த்தியார் மாரடைப்பில் காலமாகி விட்டதாக அறிந்துகொள்ள முடிந்தது. புரட்சி பாரதத்தின் அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரது தம்பி ஜெகன். தனது பெயரை ஜெகன் மூர்த்தியார் என்று மாற்றிக்கொண்டு, அண்ணன் பாணியில் அரசியல் நடத்த தொடங்கினார். ஒரே ஒரு வித்தியாசம், அண்ணன் அதிமுக ஆதரவாளர். தம்பி, திமுக ஆதரவாளர்.

கடந்த 2006 தேர்தலில், அரக்கோணம் தொகுதி, திமுக கூட்டணியில் புரட்சி பாரதத்துக்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெகன் மூர்த்தியார், சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கலைஞர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி புள்ளி (வயது 21 அல்லது 22 இருக்கும்) கொச்சையான முறையில் ஜெ.வைத் திட்டியதை (அது பேயி, பிசாசு, யாருக்கும் அடங்காது. ஓட்டு போட்டீங்கன்னா செத்தீங்க) கலைஞர் மேடையில் பலமாக சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், அதை சரியாக ஜெகன் மூர்த்தியார் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இடையில் இப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பா.ம.க.வின் வேலு, தன் பெயரை வலுவாக தொகுதியில் நிலைநாட்டி இருக்கிறார். குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்திருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று புரட்சி பாரதம், ஒரு காலி பெருங்காய டப்பா.

இந்த தேர்தலிலும் தனக்கு திமுக கூட்டணியில் சீட்டு கிடைக்குமென்று ஜெகன் நம்பிக் கொண்டிருந்தார். அத்தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுக்கும் எண்ணம் திமுகவுக்கு இருப்பதாக தெரிகிறது. அல்லது ஜெகனை நிறுத்தினால் வெல்ல வாய்ப்பில்லை என்றும் திமுக தலைமை உணர்ந்திருக்கலாம். திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் பேசிவிட்டு வெளியே வந்த ஜெகன் இறுக்கமாகவே இருந்திருக்கிறார்.

இப்போது தெளிவாக அறிவித்து விட்டார். "புரட்சி பாரதம், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்"

எனக்குத் தெரிந்து, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் இரண்டுதான். ஒன்று பா.ஜ.க. மற்றொன்று புரட்சி பாரதம். டெபாசிட் தேறுவதே கடினம் என்று தெரிந்தும், சுயமரியாதையோடு தனித்து நின்று அக்னிப்பரிட்சை மேற்கொள்ளவிருக்கும் இக்கட்சிகளை ஒரு வகையில் பாராட்டலாம். மற்றொரு வகையில் பரிதாபப் படலாம்.