4 ஜூலை, 2011

பார்வை!


ஆட்டோவிலிருந்து இறங்கும்போது உச்சிவெயில் உண்மையாகவே மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பிளந்துவிட்ட மண்டையை ஈரக்கர்ச்சீப்பால் மூடினேன். சிகப்பான சென்ட்ரல் அடுப்பில் காணக்கிடைக்கும் தீக்கங்குகள் மாதிரி கனகனவென்றிருந்தது. கொடுத்ததை வாங்கிச் செல்லும் ஆட்டோ டிரைவர் வாய்ப்பது முன்னோர் எக்காலத்திலேயோ செய்த புண்ணியம். பயணச்சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினேன். இரண்டு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ். மணி ஒன்று நாற்பத்தி ஐந்து.

சரியான நடைமேடை கண்டறிந்து, என் பெட்டியை அடைவதற்குள் சட்டை வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. சன்னலோரத்தில் அமர்ந்தேன். லேசான காற்று வியர்வையால் நனைந்த உடல்மீது பட்டது இதமாக இருந்தது. திறந்திருந்த சன்னல் வழியாக பார்வையை ஓட்டினேன். இருப்புப் பாதையில் தேங்கியிருந்த அழுக்கு நீரை இரு காக்கைகள் அருந்திக் கொண்டிருந்தன. அலகால் நீரை உறிஞ்சி வானத்தைப் பார்த்து காக்கைகள் நீரருந்தும் பாணியே அழகுதான்.

என் பக்கத்தில் நாற்பது கூட்டல் வயதுடையவர் அமர்ந்தார். வெள்ளைச்சட்டை. கருப்பு கால்சட்டை. கையில் தினகரன். செய்தித்தாளைப் பிரித்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ராஜபக்‌ஷேவை போட்டுத் தள்ளணும் சார்”

“ஆமாங்க. டிவி பார்க்குறப்போவெல்லாம் மனசு பிசையுது” பதிலுக்கு பேசியாக வேண்டும். அதுதான் மரியாதை.

“நான் சந்திரசூடன்ங்க. கோயமுத்தூரு. மெட்ராஸ் ஹைகோர்ட்டுலே லாயரா இருக்கேன்” உடனடியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கைகொடுத்து என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

ரயில் கிளம்பப் போவதாக இந்தி, ஆங்கிலம், தமிழில் கொஞ்சம் சுமாரான பெண்குரலில் அறிவிப்பு கொடுத்தார்கள். இஞ்சின் பெட்டியிலிருந்து ஹாரன் சத்தம் கேட்டது. பெட்டி இருக்கைகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து இருக்க, எதிர் இருக்கை மட்டும் காலியாக இருந்தது கண்ணை உறுத்தியது.

அவசர அவசரமாக ஒரு பெரியவரும், இருபத்தெட்டு முதல் முப்பது வயது மதிக்கத்தவனும் வந்து அமர்ந்தார்கள். அந்த மதிக்கத்தக்கவன் பெரியவரின் மகனாக இருக்கக் கூடும். எனக்கென்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. சிலபேரை பார்த்ததுமே பிடித்துவிடும். பழகியவுடன் கசந்துவிடும்.

அவன் முகம் வெறிகொண்ட வேங்கையைப் போல இருந்தது. அவனது கண்கள் என்னை மிகவும் துன்புறுத்தியது. அவன் ஒரு சைக்கோ என்று உள்ளுணர்வு உறுத்தியது. இவனோடு பழகினாலும் இவனைப் பிடிக்காது என்று தோன்றியது. பெரியவர் வெள்ளைச் சட்டையும், வேட்டியும் கொஞ்சம் அழுக்காக அணிந்திருந்தார். அவனோ கசங்கிப்போன சட்டையும், சாயம்போன கால்சட்டையுமாக நாகரிகத்துக்கு தொடர்பில்லாதவனாக இருந்தான்.

பக்கத்திலிருந்த லாயரைப் பார்த்தேன். சகப்பயணியாக என்னை திருப்தியோடு பார்த்தவருக்கு எதிர் இருக்கை பயணிகள் அதிருப்தியை தந்திருக்கிறார்கள் என்பது பார்வையிலேயே தெரிந்தது.

பெரியவர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தார். ரயில் கிளம்பியது. காணாததை கண்டவன் மாதிரி அந்த பிஸ்கட்டை பிடுங்கி கடித்தான் அவன். பிஸ்கட் துணுக்கு சிதறியது. வாயெல்லாம் துகள்கள். நிமிர்ந்துப் பார்த்த எனக்கோ அருவருப்பாக இருந்தது. லாயருக்கும் அதேபோல இருந்திருக்க வேண்டும். ஒரு டவல் துண்டினை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தார். அனேகமாக தூங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஜன்னல் வழியாக காற்று ஜம்மென்று உள்நுழைந்தது. திடீரென்று அவன் உட்கார்ந்த நிலையில் குதித்தவாறே, “அப்பா.. அப்பா.. மரமெல்லாம் பச்சையா அழகாருக்குப்பா” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னான். பெரியவர் பதிலுக்கு “ம்” என்றார். ஒருவேளை மனநிலைப் பிறழ்ந்தவனோ?

“அப்பா அங்கே பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு!” குதூகலமான குரலில் கத்தினான். எரிச்சல் மண்டியது.

பக்கத்திலிருந்தவர் துயில் களைந்து காதுக்கு பக்கத்தில் வந்து சொன்னார். “க்ராக்கு பய சார்!”

திடீரென்று இருண்டதைப் போல தோன்றியது. சடசடவென்று மழைத்துளி விழுந்தது. வானம்தான் எவ்வளவு வேகமாக மாற்றத்துக்கு தயாராகிறது. ஜன்னலை மூட எழுந்தேன். அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பற்றி முறைத்தான். இச்சூழலில் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி, உட்கார்ந்தேன். பெரியவரைப் பார்த்தேன். கெஞ்சும் தொனியில் ஒரு பார்வை பார்த்தார்.

“அப்பா. மழை ஜோன்னு பெய்யுது. ஹைய்யா. ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா இருக்கு” என்னவோ மழையைப் பார்த்ததே இல்லை என்பது மாதிரி கத்தினான். பெட்டியில் இருந்த மற்றவர்கள் வித்தியாசமாக திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் பாவமான தொனியிலேயே அமர்ந்திருந்தார்.

ரயில்வேகத்தில் மழைத்துளி ஜன்னலுக்குள் புகுந்து என் சட்டையை நனைக்க, இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் ஜன்னலை மூட மீண்டும் எழுந்தேன்.

”ஜன்னலை மூடாதீங்க!” முரட்டுக்குரலில் சொன்னான். எரிச்சல் எல்லை மீறிப் போனது.

“ஏன் சார்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இவனை சேர்த்து சரி செய்யுறதை விட்டுட்டு, வயசான காலத்துலே இப்படி கஷ்டப்படறீங்க?” பெரியவரிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டேன். அவனது முகம் இருளடைந்தது. இதெல்லாம் மட்டும் புரியும்.

அவர் அமைதியாக சொன்னார்.

“தயவுசெஞ்சு தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க தம்பி. ஆஸ்பத்திரியிலிருந்து தான் வர்றோம். அவனுக்கு ஜூரம் வந்து பத்து வயசுலே பார்வை போயிடிச்சி. போனவாரம் தான் கண் தானம் மூலமா அவனுக்கு மறுபடியும் பார்வை கிடைச்சிருக்கு. மழையும், மரமும் அவனுக்கு புதுசாதான் தெரியும்”

ஜன்னலை மூடாமலேயே லேசாக அதிர்ச்சியடைந்து இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்து சீட்டுக்காரர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவன் எதுவும் நடக்காதது போல மீண்டும் மழையை ரசிக்க ஆரம்பித்தான். கடந்துச்சென்ற டீனேஜ் பெண் ஒருத்தியின் டீஷர்ட்டில் ”Don't Judge Too Soon” என்று எழுதியிருந்தது.



நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சல் சமாச்சாரத்தை தழுவி புனையப்பட்ட கதை.

(நன்றி : தினகரன் வசந்தம் - இக்கதையின் சுருக்கப்பட்ட ஒரு பக்க வடிவம் 03-07-2011 வசந்தம் இதழில் வெளிவந்திருக்கிறது)

2 ஜூலை, 2011

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

இந்த கேள்வியை நான் கேட்டுக் கொள்ளாத நாளே கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இல்லை.

சங்கர வித்யாலயாவில் எல்.கே.ஜி. சேர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவள் பூர்ணிமா. மாநிறம். பெரிய குண்டு பல்பு கண்கள். மை அப்பியிருப்பாள். புருவம் முடியும் இடத்திலிருந்து காதுக்கு மிக நெருக்கமாக ஒரு மைத்தீற்றல் ஓவியமாய் வரையப்பட்டிருக்கும். ஆனால் சரியான அராத்து. ஒருமுறை சண்டை போடும்போது கூராக தீட்டப்பட்டிருந்த பென்சிலை எடுத்து முகத்தில் கண்ணுக்கு அருகாக கீறிவிட்டாள். கேவிக்கேவி அழுதுக் கொண்டிருந்தவனை டீச்சர் கேட்டார். ”ஏண்டா அழுவுறே?”. ஏனோ அவளைப் போட்டுக் கொடுக்க வேண்டுமென்று அந்த வயதிலேயே தோன்றவில்லை. ஏதோ பொய் சொல்லி சமாளித்ததாக நினைவு. அழகான பெண், பிரம்படி படலாமா?

இப்போது அவளுக்கு பத்தாங்கிளாஸ் படிக்கும் பையனோ, பெண்ணோ இருக்கலாம். எங்கேயாவது காண நேர்ந்தால் அடையாளம் காணமுடியுமா தெரியவில்லை. ஆனால் அவளது கண்களை மட்டும் மறக்கவே முடியாது. எத்தனை லட்சம் பேருக்கு நடுவிலும், அவளது கண்களை பார்த்தால் உடனே கண்டறிந்துவிடுவேன். துரதிருஷ்டவசமாக பெண்களின் கண்களை பார்த்து பேச இன்றும் பயமாகவே இருக்கிறது (பூர்ணிமா பென்சிலால் கீறியதால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பால் இருக்கலாம்).

ஒண்ணாங்கிளாஸ் சபிதா, மூணாங்கிளாஸ் கவிதா, ஆறாங்கிளாஸ் குணசுந்தரி, எட்டாங்கிளாஸ் குமுதா, பத்தாங்கிளாஸ் அனுராதா, பண்ணிரெண்டாங் கிளாஸ் தமிழரசி என்று பள்ளிப் பருவம் முழுக்க பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார்கள் ஏராளமான அழகிகள்.

விரைவில் குழந்தை பெறப்போகும் நண்பர் ஒருவர் சொன்னார். “இதுவும் பொண்ணா பொறக்கணும்னு விரும்பறேன்”. அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. “எதுக்கு? ஒரு பையனாவது இருக்கட்டுமே?” என்று கேட்டதற்கு சொன்னார்.

“பொண்ணுன்னா நாம சாகறவரைக்கும் நமக்கு குழந்தையாவே தெரியும். பையன்னா சீக்கிரமாவே குழந்தை பொஸிஸனில் இருந்து பிரமோஷன் வாங்கிடுவான். சாவுறவரைக்கும் அவனோடு மல்லுக்கட்டி தினம்தினம் சாவணும். பொண்ணை வளர்த்து கட்டிக் கொடுக்குறதுதான் சார் இண்டரெஸ்டிங் டாஸ்க்கு. அதுவுமில்லாமே பொண்ணுன்னா கடைசிக்காலத்தில் பொறுப்பா பார்த்துக்கும். பசங்க அப்படியா? நானே என் அப்பன் ஆத்தாவுக்கு சோறு போடறதில்லை. ஆனா என் பொண்டாட்டி, அவளோட சம்பளத்துலே பாதியை அவங்க அப்பா அம்மாவுக்கு பொறுப்பா மாசாமாசம் கொடுத்திடறா”

இந்த தலைமுறையில் நிறைய பேர் இந்த நண்பரைப்போல யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்க்காலத்தில் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால், அபார்ஷன் மாதிரியான ஆபத்துகள் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. சரி இந்த மேட்டரை லூசில் விடுங்கள். நம் டாபிக்கே வேற.

பையன்கள் எல்லாம் பச்சாக்களாக இருக்க, பெண்கள் மட்டும் ஏன் பேரழகிகளாக இருக்கிறார்கள்?

குட்டியில் குரங்கு கூட அழகுதான் என்பார்கள். பயல்களும் பிறக்கும்போது கொஞ்சம் சுமாராகதானிருக்கிறார்கள். பெற்றோர்களும் கொஞ்சக்கூடிய அளவுக்கு, அதிகபட்சம் மூணு, நாலு வயசு வரைக்கும் வளர்கிறார்கள். என்றைக்கு டவுசர் போட ஆரம்பிக்கிறான்களோ, அன்றிலிருந்து ‘பையன்’ ஆகிறார்கள். அதுவும் பதிமூன்று வயசு வாக்கில், பால்யப்பருவம் முற்றிலுமாக முடிந்து லேசாக மூக்குக்கு கீழே முடிவளரும் பருவத்தில் காண சகிக்க முடியாத தோற்றம். சிறுபையன்களாக இருந்தபோது பார்ப்பதற்கு புஷ்டியாக இருந்த பயல்கள் கூட பஞ்சத்தில் அடிபட்ட தோற்றத்தில் இருப்பார்கள் பதினெட்டு வயதில்.

மாறாக பெண்களோ பத்து வயதிலிருந்து இருபது வயதுக்குள்ளாக அவர்களது வாழ்நாளின் உச்சபட்ச பேரெழிலை எட்டுகிறார்கள். இந்த கூற்றிலிருந்து சில ஒல்லிக்குச்சிப் பெண்களை மட்டும் விலக்கிவிடலாம். முப்பது வயதுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக சதை போட்டு நாற்பது வயதில் கிளியோபாட்ராக்களாக வலம் வரும் அழகான ஆண்டிக்கள் அவர்கள்.

முதன்முதலாக காதலிக்கும்போது என்னுடைய வயது பதினாறு. அவளுக்கு வயது பதிமூன்றோ, பதினாலோ. ஒரு நெருக்கமான சந்தர்ப்பத்தில், சில இன்ச் கேப்பில் ஈரமான அவளது உதடுகளை காண நேர்ந்து, கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்டேன். பெண்களின் உதடை ஆரஞ்சுச் சுளையோடு ஒப்பிடும் கவிஞர்கள் பைத்தியக்காரர்கள். உண்மையில் இவர்களது உதட்டை ஒப்பிட்டுக் காட்டக்கூடிய அளவுக்கு எழில்வாய்ந்த பொருள் உலகிலேயே இல்லை. நாசி. நாசிக்கு கீழே கால் இஞ்ச் கேப். மேலுதடு. கீழுதடோடு இணையும் ஓரவாய். கீழுதடுக்கு கீழான முகவாய். ச்சே.. வாய்ப்பேயில்லை. உலகின் தலைசிறந்த ஓவியங்களான பெண்களை வரைந்த இயற்கைக்குதான் எவ்வளவு கற்பனைத்திறன், கவித்திறன்?

பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். கலைஞரின் படமோ, புரட்சித்தலைவி அல்லது புரட்சிப்புயல் அல்லது இளையதளபதி அல்லது செந்தமிழன் அல்லது தமிழகத்து பிரபாகரன் யாருடைய படமோ பிரதானமாக இருக்கும். சிறியதாக பாஸ்போர்ட் அளவில் மணமக்கள் படம் இடம்பெற்றிருக்கும். அடுத்தமுறை இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது உற்றுப் பாருங்கள். மணமகள் உலக அழகியாகவும், மணமகன் உலகமகா குரூபியாகவும் இருக்கும் யதார்த்த உண்மையை கண்டறிவீர்கள். உடனே உங்கள் திருமண ஆல்பத்தை கூட புரட்டிப் பார்த்து இந்த பேருண்மையை நீங்கள் உறுதி செய்துக் கொள்ளலாம். மணமகள் அழகு. மணமகன் சுமார் அல்லது சப்பை. ஏனிந்த நிலை?

சரி. திருமணத்தின் போதுதான் ‘பசங்க’ சுமார் ஆக இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு? குழந்தை பிறந்தவுடன் ஏற்கனவே அழகாக இருந்த பெண் மேலும் அழகு பெறுகிறாள். மாறாக பசங்களோ, கிழங்களாக மாறி முன் தலையிலோ, பின் தலையிலோ முடிகொட்டி, தொப்பை போட்டு ‘அவன் இவன்’ ஹைனஸ் மாதிரி ஆகிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் பசங்களுக்கு இருபதுகளின் இறுதியிலேயே வேறு நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.

நீங்கள் உலகை உற்றுப் பார்க்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பின், வெள்ளிக்கிழமை காலைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். சாலையெங்கும் சோலைதான். சித்தாளு ஃபிகரில் தொடங்கி, சீமாட்டி ஃபிகர் வரை சீயக்காயோ, சிக் ஷாம்போ போட்டு சுத்தபத்தமாக தலைகுளித்து, ஃப்ரீ ஹேர்ஸ்டைலில் பட்டாம்பூச்சி மாதிரி படபடக்கிறார்கள். மாறாக, பசங்களோ வீக்கெண்டு டாஸ்மாக் பார்ட்டியை நினைத்து, நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு விலங்கினம் மாதிரி திரிகிறார்கள்.

உலகில் தோன்றிய எந்த உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆணினம்தான் அழகு. ஆண் சிங்கத்துக்கு கம்பீரமான பிடரி இருக்கும். பெண் சிங்கம் ஷேவிங் செய்த டி.ராஜேந்தர் மாதிரி இருக்கும். ஆண் மயிலுக்குதான் தோகை. பெண் மயிலுக்கு அருக்காணி வால் ஸ்டைல். இப்படி நீங்கள் எந்த உயிரினத்தை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஆணினம் அழகில் கொள்ளை கொள்ளும். மாறாக பாழாய்ப்போன இந்த மனிதக் குலத்தில் மட்டும்தான் இந்த ஓரவஞ்சனையை இயற்கை நிகழ்த்திப் பார்த்திருக்கிறது.

என் அருமைக்குரிய ஆணினமே.. அழகை நினைத்து உரலை இடித்துக் கொள்வதுதான் ஆணினத்துக்கு விதிக்கப்பட்ட விதி. சரக்கெடு. மட்டையாகு.

27 ஜூன், 2011

மாரி பேசுகிறேன்!


அன்பான எல்லோருக்கும் வணக்கம்.

எனக்கு கடிதங்கள் வருவதில்லை. அதனாலேயே யாருக்காவது நானாவது கடிதம் எழுதணும்னு உங்களுக்கு எழுதறேன். எனக்கு கடிதம் எழுத நீ யார் என்று கேட்காதீர்கள். என்னை உங்கள் மகனாகவோ, தம்பியாகவோ நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடிதம் எழுதாமல் வேறு யாருக்குதான் நான் எழுத முடியும்? அதுவுமில்லாமல் என்னுடைய கதையை, உறவுகளான நீங்களே கேட்காவிட்டால், வேறு யார்தான் கேட்பார்கள்?

என் பெயர் மாரிச்செல்வம். மூக்கையூர் என்கிற கடலோர குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். வயது பதினைந்து. என் அப்பா முனியசாமி ஒரு மீனவர். யாராவது கடலுக்கு மீன் பிடிக்க போகும்போது, கூட ஒத்தாசைக்கு போவார். கூலி வாங்கிக் கொள்வார். மீன் பிடிக்க அப்பாவுக்கு சொந்தமாக படகு எல்லாம் கிடையாது.

அம்மா அப்பாவோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பம். ஐந்து மகள்கள், இரண்டு மகன்கள். நான்தான் கடைசி. அண்ணனுக்கும், நான்கு அக்காக்களுக்கும் எப்படியோ சிரமப்பட்டு திருமணம் முடித்துவிட்டார் அப்பா. இவ்வளவு பெரிய குடும்பத்தை கூலிவேலை செய்து காப்பாற்ற வேண்டுமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்?

அப்பாவுக்கு ரெண்டே ரெண்டு கனவு உண்டு. ஒன்று, சொந்தமாக ஒரு கட்டுமரம் வாங்கி மீன்பிடித் தொழில் செய்யவேண்டும். இரண்டு, தன் குடும்பத்தில் ஒருவராவது நல்ல படிப்பு படித்து, பெரிய வேலைக்குப் போகவேண்டும்.

எங்கள் ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் எட்டாவது வரை படித்தேன். உயர்நிலைப் பள்ளிக்கு வேறு ஊருக்கு போக வேண்டும். அதுவரை படிக்கவே PAD என்கிற அரசுசாரா அமைப்புதான் எனக்கு உதவிக்கிட்டிருந்தது. ஆமாங்க. Christian Children Fund of Canada (CCFC) என்கிற கிராமப்புற குழந்தைகள் உதவித்திட்டம் மூலமாதான் நான் படிச்சிக்கிட்டிருந்தேன். குடும்பச்சூழலை உணர்ந்து அப்பாவோடு மீன் பிடிக்க போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கு ரொம்ப கோபம்.

நல்லா படிச்சிக்கிட்டிருந்த பார்வதி அக்கா கூட எட்டாவதோட படிப்பை ஏறக்கட்ட வேண்டியதாயிடிச்சி. நானாவது நல்லா படிச்சி பெரிய அதிகாரியா வருவேன்னு அப்பா எம்மேலே நம்பிக்கையை வெச்சிக்கிட்டிருந்தாரு.

பெரிய அக்கா முருகேஸ்வரியோட ஊருக்குப் போயி தங்கி, அங்கிருந்து படிக்கிறதுக்கு அப்பா ஏற்பாடு பண்ணினார். முத்துப்பேட்டையில் அக்கா வீடு. பக்கத்தில் இருந்த வேலாயுதபுரம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். படிப்புலே கவனம் இருந்தாலும், குடும்பச் சூழல் என்னை வருத்திக்கிட்டே இருந்தது. குடும்ப வருமானத்துக்கு நானும் ஏதாவது செய்யணுமேன்னு மெனக்கெடுவேன்.

லீவு நாள்லே அம்மாவோடு கரிமூட்டம் அள்ளுற வேலைக்குப் போவேன். கரிமூட்டம்னா ரொம்ப பேருக்கு தெரியாது. நிறைய ஊர்லே செங்கல் சூளை போடுறது மாதிரி, எங்க ஊரு பக்கம் கருவேல மரங்களை எரித்து கரி போடுற தொழிலுக்கு பேரு கரிமூட்டம். அப்புறம் மாமா முனியனோட கடல்வேலைக்கும் அப்பப்போ போவேன். இது அக்காவுக்கு புடிக்காது. “படிக்குற புள்ளை படிப்புலேதான் கவனம் செலுத்தணும். வேலை, வெட்டிக்கு போயிக்கிட்டிருந்தா படிப்பு கெட்டுடும்”னு திட்டும்.

அக்கா பத்தி இங்கே சொல்லியே ஆவணும். முருகேஸ்வரி அக்காதான் எங்க குடும்பத்துலே மூத்தது. முனியன் மாமாவுக்கு கட்டிக் கொடுத்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. மத்த அக்காங்களுக்கு கல்யாணம் பண்ணுறதுலே தொடங்கி, அப்பாவோட குடும்பப் பாரத்தை இவங்களும் சேர்ந்து சுமந்தாங்க. இவங்களுக்கு மூணு பெண் குழந்தை. ஒரு ஆண் குழந்தை. என்னையும் இவங்களோட மகன் மாதிரியே பார்த்துக்கிட்டாங்க.

பத்தாவது பரிட்சை நெருங்கிட்டிருக்கு. தீவிரமா படிச்சிக்கிட்டிருந்தேன். அப்போதான் திடீருன்னு எங்க குடும்பத்துமேலே அந்த இடி விழுந்தது. ஆமாங்க, அப்பா செத்துப் போயிட்டாரு. அவருக்கு மூளையிலே கட்டி. ஆஸ்பத்திரியிலே எவ்வளவோ ட்ரீட்மெண்ட் எடுத்தும் பிரயோசனமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே எனக்கு படிப்பு தேவையான்னு திரும்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அம்மா சண்முகம்தான் என்னை தேத்தி மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனாங்க. அவங்களும் மகள் வீட்டுக்கே வந்து தங்கி விறகு வெட்டுறது, கரிமூட்டம் போடுறது, கூலிவேலைக்குப் போவுறதுன்னு அப்பாவோட குடும்பச் சுமையை முழுமையா சுமக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அம்மா, அக்கா, மாமான்னு என் சொந்தங்க ஆவலா எதிர்ப்பார்த்த பரிட்சையும் வந்துடிச்சி. முதல் ரெண்டு பரிட்சை எழுதிட்டு வந்தப்போ, அக்கா கேட்டுச்சி. “என்னா மாரி. எப்படிடா பரிட்சை எழுதறே”ன்னு. “நல்லாதான் எழுதிக்கிட்டிருக்கேன்”ன்னு சொல்லிட்டு, அக்கா முகத்தை பார்த்தேன். அக்காவோட முகம் ரொம்ப சோர்வா இருந்திச்சி. “உடம்பு சரியில்லை. நெஞ்செல்லாம் ஒரு மாதிரி கரிக்குது. கொஞ்ச நேரம் தூங்குறேன். நீ போய் படி”ன்னு சொல்லிட்டு போய் தூங்க ஆரம்பிச்சது. ஏற்கனவே ஒருவாட்டி அக்காவுக்கு ஹார்ட் ஆபரேஷன் வேற பண்ணியிருக்காங்க.

அன்னைக்கு நைட்டு மறுபடியும் அக்காவுக்கு நெஞ்சுவலி. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிக்கிட்டிருக்கோம். போற வழியிலேயே செத்துடிச்சி. கதறி அழுவறேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை?

“டேய். உன் அக்கா நீ நல்லா படிக்கணும்னுதான் ஆசைப்பட்டுது. நாளைக்கு பரிட்சைக்கு போய் படிடா”ன்னு மாமா என்னை தேத்தி அனுப்பறாரு. அன்னைக்கு நான் பரிட்சை எழுதிட்டு வந்தபிறகுதான் அக்காவோட இறுதிச்சடங்கையே மாமா தொடங்கினாரு. அம்மா மாதிரி என்னை வளர்த்த அக்கா சாவுக்கு பக்கத்துலே கூட இருக்க முடியாம பரிட்சை எழுதினேங்க.. இதே சோகத்தோடதான் அடுத்த ரெண்டு பரிட்சையையும் எழுதி முடிச்சேன்.

அப்பாவும் போயிட்டாரு, அக்காவும் போயிடிச்சி, எனக்கு வாழ்க்கையே வெறுத்திடிச்சி. அம்மாவோட உதவிக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். எல்லாத்தையும் கொஞ்சம், கொஞ்சமா மறக்கவும் ஆரம்பிச்சேன்.

பரிட்சை முடிவுகள் வந்த அன்னிக்கு, எனக்கு முடிவுகளை தெரிஞ்சுக்க எந்த ஆர்வமும் இல்லை. முதல்நாள் போட்ட கரிமூட்டத்துலே இருந்து நானும், அம்மாவும் கரி அள்ளிக்கிட்டிருந்தோம். “டேய் மாரி. உன்னைப் பார்க்க உன் ஸ்கூல் சிநேகிதங்க வந்திருக்காங்க”ன்னு அக்கா சொல்லிச்சி. வெளியே வந்துப் பார்த்தேன். “டேய் நீ தாண்டா ராமநாதபுரத்துலே டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்டு. 490 மார்க் வாங்கியிருக்கேடா”ன்னு சொல்லி கட்டி அணைச்சுக்கிட்டாங்க.

தமிழ் 95, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. அக்காவோட இறுதிச்சடங்கு அன்னைக்குதான் கணக்குப் பரிட்சை நடந்தது. அதுலே நூத்துக்கு நூறு வாங்கியிருக்கேன். என்னோட சேர்ந்து பரிட்சை எழுதின என்னோட அக்காமவ நிர்மலாவும் கூட 432 மார்க் வாங்கியிருக்கா.

அக்காவும், அப்பாவும் ஆசைப்பட்டமாதிரியே நல்ல மார்க் வாங்கியிருக்கேன். என்ன, அதைப் பார்க்கதான் அவங்க இல்லை. மாவட்டத்துலேயே முதலாவதுன்னு தெரிஞ்சதும் அம்மாவுக்கும், மாமாவுக்கும் ரொம்ப சந்தோஷம். இவங்களுக்கு இந்த சந்தோஷத்தைவிட பெருசா என்னாலே வேறு எதைக் கொடுத்துட முடியும்?

அடுத்து +1 படிக்கணும். PDA நிறுவனம்தான் இதுக்கும் உதவ முன்வந்திருக்காங்க. வறுமை, அப்பா-அக்கா மரணம்னு அடுத்தடுத்து சோகங்களையே சந்திச்சிக்கிட்டிருக்கிறதாலேயோ என்னவோ கொஞ்சநாளா எனக்கு தாங்கமுடியாத தலைவலி. உள்ளூர் டாக்டருங்கள்லாம் உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லப்பான்னு சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்லே ஒரு டாக்டர் கிட்டே காட்டுனப்போ, இருதயத்துலே ஏதோ பிரச்சினைன்னு சொல்றாரு. அறுவை சிகிச்சை செய்யணுமாம். அதையும் உடனே செய்ய முடியாதாம். 21 வயசுலேதான் செய்யணுமாம். பாருங்க சார். பட்ட காலிலேயே திரும்ப திரும்ப பட்டுக்கிட்டிருக்கு. என்னதான் வாழ்க்கையோ தெரியலை.

எது எப்படியோ, இவ்வளவு நேரம் என் கதையை பொறுமையா கேட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி. எவ்வளவு பெரிய சோகத்தையும் கல்வியாலேதான் என்னை மாதிரி மாணவர்கள் கடக்க முடியும் என்பதற்கு என்னோட கதைதான் நல்ல உதாரணம்.

என் மனசுலே இருந்த மொத்த பாரங்களையும், இந்த கடிதத்தில் கொட்டித் தீர்த்ததுலே மனசு ரொம்ப லேசாகியிருக்கு. அம்மாவும், மாமாவும்தான் எனக்காக கவலைப்பட்டுக்கிட்டிருக்காங்க. இனிமே நீங்களும் நான் நல்லாருக்கணும்னு நெனைப்பீங்க. உங்களோட ஆசியாலே, நான் நிச்சயம் நல்லா வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க.

என்றும் உங்கள் அன்புள்ள
மாரிச்செல்வம்
முக்கையூர் கிராமம்,
கடலாடி ஒன்றியம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

(நன்றி : புதிய தலைமுறை கல்வி மற்றும் பத்ரி)

மாரிச்செல்வத்துக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்கள் feedback@puthiyathalaimurai.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது தொடர்பு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

25 ஜூன், 2011

தோழர்கள்



கே.கே.நகரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் நடந்த நிகழ்ச்சி அது. ஒரு அதிதீவிர இடதுசாரி முற்போக்கு புரட்சித் தோழர், இன்னொரு ‘சாதாதோழரை சந்தித்தார்.

“வணக்கம் தோழர். முதல் தடவையா சந்திக்கிறோம். நீங்க இப்படி இருப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை

வணக்கம் தோழர். நான் எப்படி இருப்பீன்னு எதிர்ப்பார்த்தீங்க?

“உங்களோட பிலாக் ப்ரொஃபைல் போட்டோவில் ஜம்முன்னு தொப்பியெல்லாம் போட்டுக்கிட்டு, தாடியெல்லாம் வெச்சுக்கிட்டு சூப்பரா இருந்தீங்க. நேர்லே ரொம்ப சுமாரா இருக்கீங்களே?


நாற்பதை தொட்ட
சாதாதோழர் கொஞ்சம் தொப்பையும், கிப்பையுமாக மொக்கையாகதானிருப்பார். ஆனாலும் புரட்சித்தோழர் நேர்ப்பேச்சில் திடீரென சூட்டுக்கொட்டையாய் சுட்டுவிட, குழம்பிப் போனார்.

“அது சின்ன வயசுலே எடுத்த போட்டோ தோழர்
என்று சொல்லி சமாளித்தார்.

“அதானே பார்த்தேன். சின்ன வயசுலே நல்லா இருந்திருக்கீங்க

இவ்வகையாக சம்பாஷணை முடிந்தது.

சொல்ல மறந்துவிட்டோமே? நம் ‘சாதாதோழரின் ப்ரொஃபைல் போட்டோவில் இருந்தவர் தோழர் சேகுவேரா. புரட்சித் தோழரோ இன்னமும், சின்ன வயசில் சாதா தோழர் சுருட்டெல்லாம் பிடித்துக் கொண்டிருந்தவர் என்று ‘சீரியஸாகநம்பிக் கொண்டிருக்கிறார்.

 ‘ஒயிட் நைட்ஸ்எழுதிய தஸ்தாவேஸ்கி இருந்திருந்தால், இச்சம்பவத்தை கேள்விப்பட்டு தூக்கு மாட்டி செத்திருப்பார்.


* - * - * - * - * - *


இவர் இன்னொரு தீவிர இடதுசாரி புரட்சித் தோழர். இந்துத்துவா சொம்பு தூக்கி அலையும் ஜெயமோகனை டவுசர் அவிழ்த்து ஓடவிட தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்.

வகையாக சிக்கியது ‘அவன் இவன்

முதல் நாள் முதல் காட்சியே படத்தை பார்த்தார். படம் பார்த்த எஃபெக்டில் நேராக கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தார். மூளையை கசக்கி யோசித்து ஒரு டைட்டிலை வைத்தார். அவன் இவன் – ஜெயமோகனின் கிழிந்த முகத்திரை!

வேகவேகமாக பதிவினை தட்டச்சினார். பாலாவின் ஆணாதிக்கத் திமிர், ஜெயமோகனின் முகம் சுளிக்க வைக்கும், காது கூச வைக்கும் வசனங்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு என்று கலந்துக்கட்டி புரட்சிகர திரைவிமர்சனத்தை வலைப்பதிவில் பதிவிட்டு விட்டார்.

முதல் பின்னூட்டமே படத்துக்கு வசனம் ஜெயமோகன் அல்ல, எஸ்.ரா என்று சுட்டிக் காட்டுகிறது. உடனே தோழர் ஜெயமோகன் என்று தட்டச்சிய இடத்தையெல்லாம் Find போட்டு கண்டுபிடித்து, எஸ்.ரா என்று மாற்றிவிடுகிறார். கோழி குருடா இருந்தாலென்ன, செவிடா இருந்தாலென்ன, ருசியாக இருந்தால் சரிதான் என்பது தோழரின் நிலைப்பாடு. தலைப்பும்  ‘எஸ்.ரா.வின் கிழிந்த முகத்திரைஆனது. ஒருவழியாக யாருடைய முகத்திரையாவது கிழிக்க வேண்டும் என்கிற தோழரின் ஆவலும் பூர்த்தியானது.

அந்த தவறுக்கு தோழர் கொடுத்த விளக்கம்தான் சூப்பர். டைப் அடிக்கும்போது தவறுதலாக எஸ்.ரா என்பது ஜெயமோகன் ஆகிவிட்டதாம். டைப் அடிப்பவர்களே! நீங்களே சொல்லுங்கள். எஸ்.ரா என்று தட்டச்சும் போது, அது ஜெயமோகன் என்று மாற ஒரு சதவிகிதமாவது ஆவது வாய்ப்பு இருக்கிறதா?


* - * - * - * - * - *


இந்த புரட்சித் தோழர் ஆரம்பத்தில் சினிமா, கினிமாவென்றுதான் ஏதோ காமாசோமாவாக எழுதிக் கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஓவர் நைட்டில் புரட்சிக்காரராய் மாறிப்போனார். எதை செய்தாலும் அதை ‘புரட்சியாகவே செய்ய நிரம்பவும் மெனக்கெட்டார்.

எந்த லெவலுக்கு என்றால்...

சிலர் பின்னூட்டம் போடும் போது, கடைசியாக தங்கள் பெயரோடு பின்னூட்டம் இடுவார்கள். ‘அன்புடன் டோண்டு ராகவன் என்பது மாதிரி. நம் தோழர் இப்படி பின்னூட்டம் இடம் ஆரம்பித்தார். “இப்படிக்கு தோழர் ஃபயர்லுக்கு

எங்காவது அநீதியைக் கண்டு உன் நெஞ்சு கொதித்தால், நீயும் என் தோழன் என்பார் சே. இணையம் முழுக்க நடக்கும் அநீதிகளை கண்டு மனம் வெதும்பிப் போனதாலேயோ என்னவோ, நம் தோழர் ஃபயர்லுக்கு தன்னைத்தானே கூட தோழர் என்றே அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோயிலில் அர்ச்சனை செய்ய அய்யர் பெயரை கேட்கும்போது கூட ‘தோழர்என்கிற ஃப்ரீபிக்ஸோடுதான் தன் பெயரை தோழர் சொல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


* - * - * - * - * - *


இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதங்கள்.

இதுபோல இன்னும் ஏராளமான தீவிர இடதுசாரி மொக்கைகளை உருவாக்கியிருக்கிறது வினவு இணையத்தளம். மக்கள் கலை இலக்கிய கழகம் என்கிற அமைப்பின் செயல்பாடுகளின் மீது ஏராளமானோர் வைத்திருந்த மரியாதை, அபிமானம் எல்லாவற்றையும் காலி செய்வதற்கென்றே வினவு இணையத்தளம் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது.

ஒருவன் நாத்திகனாக வாழ்வதுதான் உலகிலேயே மிகக்கடினமான செயல். முழுக்க போர்த்திய ஊரில், நிர்வாணமாய் அலைவது மாதிரி. அதைவிட கடினம், தீவிர கம்யூனிஸ்டாக இருப்பது. இதை உணர்ந்திருப்பதாலேயே, கம்யூனிஸம் பற்றிய சரியான புரிதல் கொண்ட பலரும் கூட மனசுக்குள்ளாக மட்டுமே கம்யூனிஸ்ட்டாக வலம் வருகிறார்கள். சில பேர் சமரசம் செய்துக்கொள்ளாத வாழ்க்கைச் சூழல் அமையும்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக தீவிர கம்யூனிஸ்டுகளின் இணைய செயல்பாடுகள், மேற்கண்ட தோழர்களை போல மேனாமினுக்கி கம்யூனிஸ்ட்களை உருவாக்கித் தொலைக்கிறது. கம்யூனிஸ்ட், நக்சல்பாரி என்று சொல்லிக் கொள்வது இவர்களுக்கு சேகுவேரா டீஷர்ட் போடுவது மாதிரி ஒரு Passion. இவர்களில் யாரும் போலிஸிடம் தடியடி பட்டவர்கள் அல்ல. தடியடி படுபவர்களை வேடிக்கை பார்ப்பவர்கள்.

அரசு இயந்திரம் என்றேனும் இவர்களை நெருங்கும் என்று தெரிந்தால், டீ ஷர்ட்டை தலைக்கு மேலே கையை தூக்கி அவிழ்த்துப் போடுவதைப் போல, கம்யூனிஸத்தை அவிழ்த்துப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

பதிவுலகத்தைப் பற்றி நிறைய எழுதினால் ஹிட்ஸ் கிடைக்கும் என்பதற்காக, ஒரு ப்ளூ ஃப்லிம் எழுத்தாளரை, பிராக்ஸியாக எழுதவைத்து பதிவுகள் வெளியிட்டு வருகிறது வினவு. இப்படிப்பட்டவர்களால், ஒரே ஒரு உருப்படியான கம்யூனிஸ்ட்டையாவது இணையத்தில் உருவாக்க முடிந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

22 ஜூன், 2011

இன்டர்நெட் ரோமியோ!


இப்போதெல்லாம் தோழர் டமாரு குமாரு ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டான். பார்க்கும் ஃபிகர்களை எல்லாம் தன்னுடைய ஃபிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியாகவும் உருவெடுத்துவிட்டான். சகாக்களின் ஃபிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவனுக்கு வாய்த்திருந்தது. வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் 'ஏ'ய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளன் நம்ம டமாரு. காதல் திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாலும் டமாருக்கு ஏனோ சைட் அடிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவேயில்லை.

இளைஞர்கள் பலரும் ‘சாட், சாட்’ என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட டமாருவுக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆர்.கே. மட் ரோடில் இருந்த டமாருவின் நண்பன் விஜி ஒரு பிரவுசிங் சென்டர் வைத்திருந்தான். டமார் குமாருக்கு ஓரளவுக்கு இங்கிலீஷ் தெரியும், ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீ காண்ட்ராக்ட் எடுத்திருந்ததால் ஓரளவுக்கு ஆங்கிலப் பரிச்சயம் ஏற்பட்டிருதது. முன்பு போலில்லாமல் இப்போது டமாரு கொஞ்சம் டீசன்ட் வேறு ஆகிவிட்டிருந்தான். விஜி கடைக்கு அவ்வப்போது சென்று சாட்டிங் செய்ய கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் டமாரிடம் சாட்டிங்கில் மாட்டியதில் நிறையப் பேர் அமெரிக்க ஃபிகர்களாக இருந்தார்கள். வெள்ளைத் தோல் மீது பிறப்பிலேயே குமாருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் கொஞ்ச நாள் சாட் செய்ததுமே டமாரு கேட்கும் ஒரு கோரிக்கையை (அது ஒரு மோசமான ஆங்கில நாலெழுத்து கோரிக்கை) கண்டு காரித்துப்பி அனுப்பி விடுவார்கள் வெள்ளைக்கார ஃபிகர்கள். நாம இருக்கறதோ மெட்ராஸ்? அமெரிக்காவில் இருக்குற பிகர்களிடம் போயி ஜொள்ளுவிடுவதால் என்ன பயன்? என்று திடீரென்று டமாருவுக்கு ஒருநாள் பகுத்தறிவு ஏற்பட்டது.

இதனால் டமார் குமாரின் பார்வை இந்திய ஃபிகர்கள் மீது திரும்பியது. ஆனாலும் மாட்டணுமே? ஒரு நாள் தோழர் டமாரு மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டான்.

‘என்ன மேட்டர்?’ விஜி வினவினான்.

"விஜி, சாட்டிங்ல மெட்ராஸ்லேயே ஒரு ஃபிகர் மாட்டிக்கிச்சி’’

‘‘இன்னா சொல்றே டமாரு. உன் ஏஜுக்கும், முகத்துக்கும் இதெல்லாம் ஓவராத் தெரியலை’’

‘‘இன்னாடா ஒனக்கு மட்டும் மாட்டிக்கிட்டா ......................... இருப்பியா?" (கோடிட்ட இடத்தில் ஆக்சுவலாக இடம் பெற்றது ஒரு மோசமான தமிழ் வார்த்தை. நாகரிகம் கருதி தனிக்கை செய்திருக்கிறேன்)’’

‘‘அப்புறம் ஒன் இஷ்டம்டா குமாரு. ஆனாலும் ஒனக்கு கொழந்தை, குட்டின்னு இருக்கு. பாத்துக்கோ’’

விஜியின் ஆலோசனையை எல்லாம் கேட்கும் நிலையில் டமாரு இல்லை. சாட்டிங் பைத்தியம் முத்திவிட்டிருந்தது.

அவள் பெயர் நந்தினி. வயது பத்தொன்பதாம். சாட்டிங்கில் பசங்களை மடக்கும் ஃபிகர்கள் எல்லோருக்குமே பத்தொன்பது வயதாக இருப்பது ஒரு ஆச்சரியகரமான ஒற்றுமை. சென்னையின் நுழைவாயிலில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாளாம். டமாரு தினமும் 4 மணிநேரமாவது நந்தினியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டான். ஒரு நாள் அவள் பிரவுசிங் சென்டருக்கு கீழிருந்த துணிக்கடைக்கு வருவதாகச் சொன்னாள். டமாரு ரொம்பவும் பரபரப்பாகி விட்டான்.

அன்று அவனுக்கு முக்கியமான வேலை இருந்தது. அவனது மனைவி கருவுற்றிருந்தாள். கன்சல்டேஷனுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. நந்தினியைச் சந்திக்க இயலாத சூழ்நிலை. எனவே விஜியிடம் ஒரு கோரிக்கை வைத்தான். ‘‘பச்சைத் தாவணியில் அவள் அக்காவோட வருவா. எப்படி இருக்கிறான்னு மட்டும் பார்த்து வைச்சுக்கோ. அவ இன்னால்லாம் செய்றான்னு நோட் பண்ணிக்கோ. மறுநாள் நான் சாட்டிங் பண்றப்போ அவளை நானே மறைஞ்சு நின்னு பார்த்தா மாதிரி ஃபிலிம் காட்டிக்கிறேன்’’ என்றான். விஜியும் பெரிய மனது வைத்து நண்பருக்காகச் சம்மதித்தான். இருந்தாலும் போயும் போயும் டமாருக்கு ஒரு ஃபிகர் சாட்டிங்கில் செட் ஆன வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது.

அன்றிரவு டமாருவை செல்லில் பிடித்து நந்தினியின் உடல்வாகு, அவள் பேசும் ஸ்டைல், அவளது அக்கா குண்டாக இருந்தது, அவர்கள் வாங்கிய சுடிதார் கலர் போன்ற விவரங்களை விஜி சொன்னான். அவன் காலத்தாற் செய்த அந்த உதவிக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தழுதழுத்துச் சொன்னான் டமாரு. நாட்கள் கடந்தன. டமாருவின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. லேசாக முன் மண்டையில் விழுந்த வழுக்கையை மறைக்கும் விதத்தில் தலைவார ஆரம்பித்தான். சைடில் இருந்த நரைமுடியை மறைக்க ‘டை’ அடித்தான். டைட்டாக ‘டக்-இன்’ செய்ய ஆரம்பித்தான். அப்போதுதான் தொப்பை தெரியாதாம்.

ஒரு நாள் சாட் செய்துக் கொண்டிருந்தபோது ‘‘நாகேஸ்வரராவ் பார்க்கில் சந்திக்க விருப்பமா?’’ என்று நந்தினியிடம் கேட்டிருக்கிறான் டமாரு. நந்தினியோ ‘‘பார்க்குக்கு எல்லாம் வர முடியாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சாயுங்காலம் 6 மணிக்கு வர்றேன். பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறாள். டகாரு காத்திருந்தான். வெள்ளியும் வந்தது. மாலை 5 மணிக்கே பரபரப்பாகி விட்டான். வேர்க்க விறுவிறுக்க விஜியின் பிரவுசிங் சென்டருக்கு வந்தவன் ஃபேர் அண்டு லவ்லியும், பவுடரும் போட்டுக்கொண்டான். ஃபுல் மேக்கப்பில் டமாரு ஆஜர். சுமார் 2 மணிநேரம் கழித்து சோர்வாக வந்து சேர்ந்தான்.

‘‘என்ன டமாரு ஒர்க் அவுட் ஆயிடிச்சா?’’

‘‘அவளைப் பார்த்தேன் மாமு. ஆனாப் பேசலை’’

‘‘ஏன்டா?’’

"பாத்ததும் வயசைத் கண்டுபிடிச்சுட்டான்னா, அப்புறம் சாட்டிங்க்ல கூட வராமப் போயிட்டான்னா என்ன செய்ய?"

ஆனால் விதி யாரை விட்டது? நந்தினி குமாரை விடவில்லை. அவளது நச்சரிப்பாள் மெரீனாவின் கூட்டமற்ற இருண்ட முன்னிரவொன்றில் ஒருநாள் இருவரும் சந்தித்தார்கள். கிட்டத்தட்ட தன் உருவத்துக்கு சுடிதார் போட்டுவிட்டதைப் போன்றதொரு தோற்றத்துடன் இருந்த நந்தினியைக் கண்டு டமாரு 'டமால்' ஆனான். தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் அளவுக்கு அவன் மனம் விசாலமாக இல்லை.

விஜியுடன் அன்று இரவு டாஸ்மாக்கில் விடிய, விடிய கச்சேரி. விடிந்ததும் எழுந்து நேராக விஜி கடைக்கு வந்தான் குமாரு. யாஹூவின் சென்னை சாட்ரூம்.

"Hi"

"Hi"

"ASL Pls?" (Age, Sex, Location)

"I am kumaru 22/M/Chennai. Your ASL?"

"I am Bhuvana 19/F/Chennai"

புவனாவின் பூர்வீக புனைப்பெயர் 'நந்தினி' என்கிறது யாஹூ சாட் ஹிஸ்ட்ரி.

(நன்றி : யூத்ஃபுல் விகடன்)