12 ஏப்ரல், 2012

சிட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு?

அம்மாவைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, ‘உலக அன்னையர் தினம்’ கொண்டாடுவது நகரவாசியின் வழக்கமாகப் போய்விட்டது. அதே மாதிரிதான் சில நாட்களுக்கு முன்பாக கடந்துப்போனது ‘உலக சிட்டுக்குருவிகள் தினம்’.

“சிட்டுக்குருவியா.. அது எப்படி இருக்கும்?” என்று அப்பாவை, அம்மாவை கேட்கக்கூடிய ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான். நம் முற்றங்களிலும், வாசல்களிலும், தெருக்களிலும்.. எங்கெங்கு காணினும் காணப்படக்கூடிய மிகச்சிறிய பறவையினமாக சிட்டுக்குருவி இருந்தது. சாம்பலும், பிரவுனும் கலந்த அழகான இறக்கைகள். சிறிய முகம். துறுதுறுக்கும் கண்கள். குட்டியான அலகு. சுறுசுறுப்புக்கு பேர் போனவை இந்த குருவிகள். பெரும்பாலும் வீடுகளில் கூடுகட்டி வசிப்பதால் வீட்டுக்குருவிகள் என்றும் சொல்வார்கள். செல்லப்பறவையாக வளர்க்கப்பட்டதில்லை என்றாலும், அதிகாலையில் இக்குருவிகளின் சத்தம் கேட்டால்தான் நாளே நிம்மதியாக பலருக்கும் விடியும்.

துரதிருஷ்டவசமாக சிலகாலமாக இப்புள்ளினம் அருகிக்கொண்டே போகும் உயிரினம் ஆகிவிட்டது. காரணம்.. ஒன்றா, ரெண்டா? குறிப்பாக இதனால்தான் சிட்டுக்குருவிகள் மறைகின்றன என்று ஒரே காரணத்தை சுட்டிக் காட்ட முடியாது. ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் கதையில் ஆலிஸ் அப்படியே மறைவதைப் போல, மெதுவாக நம் கண் முன்னால் மறைந்துக்கொண்டே போகின்றன இந்த சுட்டிப் பறவைகள். இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகை ஒன்று சிட்டுக்குருவிகளின் மீது அக்கறை கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றும் உருப்படியான ஐடியா ஒன்றினை தருவபவருக்கு கோடிக்கணக்கில் பணம் பரிசாக வழங்குவதாக அறிவித்தது. இன்று வரை கேட்பாரின்றி கிடக்கிறது அந்த பரிசுப்பணம்.

நம் ஊர் சூழலில் சிட்டுக்குருவிகள் குறைந்துவருவதற்கு முதன்மையான மூன்று காரணங்களை பட்டியலிடுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஒன்று, பூச்சி மருந்துகள். ரசாயன பூச்சி மருந்துகளாலும், வேதியியல் உரங்களாலும் நிலம், நீர் அனைத்துமே மாசுபட்டு வருகின்றன. சிறு பூச்சிகளும், புழுக்களும் பறவையினங்களின் உணவு. அவை பூச்சி மருந்துகளால் கொல்லப்படும் சூழலில் பறவைகளுக்கு உணவுப்பஞ்சம் ஏற்படுகிறது. மேலும் தானியங்களிலும் பூச்சி மருந்துகளின் பாதிப்பு இருப்பதால், அவற்றை உண்ணும் பறவைகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்கும் தன்மையை இழக்கின்றன.

இரண்டு, ஓட்டு வீடுகள் குறைந்தது. முன்பு பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகளாக இருந்தன. அந்த ஓடுகளின் இடைவெளி குருவிகள் கூடுகட்டி வாழ ஏதுவாக அமைந்திருந்தது. ஓடுகள் குறைந்து, கான்க்ரீட் இல்லங்கள் அதிகமாக அதிகமாக குருவிகளுக்கான வாழ்விடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மூன்று, செல்போன் டவர்களின் கதிர்வீச்சு. கோவை சலிம் அலி பறவையியல் இயற்கை வரலாறு மையத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை சோதனை அடிப்படையில் நிரூபித்திருக்கிறார்கள். ஐம்பது முட்டைகளை கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமிடம் வைத்திருந்து பரிசோதித்ததில், எல்லா முட்டைகளின் கருக்களுமே சிதைக்கப்பட்டு விட்டன என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த நிலையை எல்லாம் பார்த்து, கதறிப் பதறிக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடந்துப்போன ’உலக சிட்டுக்குருவித் தினத்தை’ (மார்ச் 20) சாக்காக வைத்து, இப்பறவையினத்தை காக்கும் முயற்சிகளுக்கு மக்களிடம் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். சென்னை இயற்கையியலாளர் அமைப்பு (Madras Naturalists’ Society ) சிட்டுக்குருவிகள் குறித்த ஒரு மக்கள் கணக்கீட்டை நடத்தியது. மார்ச் 20 அன்று சிட்டுக்குருவிகளை பார்க்க நேர்பவர்கள் அதுகுறித்த சில விவரங்களை தங்களுக்கு ஃபேஸ்புக், மின்னஞ்சல், தொலைபேசி, கடிதம் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. சிறப்பாக சிட்டுக்குருவிகளை படமெடுத்து அனுப்புபவர்களுக்கும் பரிசும் உண்டு என்று அறிவித்தது.

ஆச்சரியகரமான வகையில் இந்த சிறு முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார் அவ்வமைப்பின் தலைவர் கே.வி.சுதாகர். “சென்னை நகரின் மையத்திலேயே, பல பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருப்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பகுதிகளில் எல்லாம், இன்னும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யவேண்டுமோ, நாம் அதை செய்ய முன்வரவேண்டும்” என்கிறார் இவர்.

கிட்டத்தட்ட ஐநூறு பேர் அன்றைய தினம் மட்டுமே சிட்டுக்குருவிகளை கண்டதாக மகிழ்ச்சியோடு தங்களிடம் தெரிவித்ததாக சொன்னார் சென்னை இயற்கையியலாளர் அமைப்பின் உறுப்பினர் காயத்ரி கிருஷ்ணா.

“சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுப்பதற்கான கணக்கெடுப்பு அல்ல இது. சென்னை நகரில் எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றன, இங்கே மட்டும் எப்படி அவற்றால் வாழமுடிகிறது, என்ன காரணமென்று தெரிந்துகொள்வதற்காக இதை அறிவித்தோம். பொதுவாக நடுத்தரக் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகமாக காணப்படுகின்றன. அரிசி மண்டிகள் இருக்கும் பகுதிகளிலும் நிறைய காணமுடிகிறது.

தனிநபர்கள் நிறைய பேர் அட்டைப்பெட்டிகளால் குருவிகளுக்கு கூடு அமைத்து, தானியம் கொடுத்து வாழவைக்கிறார்கள் என்கிற நெகிழ்ச்சியான விஷயங்கள் நிறையவற்றை தெரிந்துகொண்டோம். அடுத்தபடியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை பெருக்குவது, துல்லியமான கணக்கீடு செய்வது, மக்களிடம் இவற்றை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாதிரியான பணிகளில் ஈடுபடுவோம்” என்றார்.

தனி நபர்களும், இம்மாதிரி தனியார் அமைப்புகளும் இயற்கையை காக்க வரிந்துக்கட்டிக் கொண்டு களமிறங்குகிறார்கள். வனத்துறை மாதிரி பெரிய கட்டமைப்பை வைத்திருக்கும் அரசாங்கமும் மனசு வைத்தால் சிட்டுக் குருவிகளை மட்டுமில்லாமல், அழிந்துவரும் பல்வேறு புள்ளினங்களையும் காக்கலாமே?


எக்ஸ்ட்ரா மேட்டர் :

சிட்டுக்குருவிகளுக்கு
இடம் கொடுங்கள்!

வீணாகும் அட்டைப்பெட்டிகளை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியாதீர்கள். அவற்றை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கூடு போன்ற அமைப்பில் பாதுகாப்பாக நிறுவுங்கள். நெல், அரிசி என்று தானியங்களை தினமும் இறையுங்கள். சிறிய கிண்ணத்தில் நீர் வையுங்கள். சிட்டுக்குருவி உங்கள் வீட்டிலும் வசிக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

11 ஏப்ரல், 2012

ஈ ரோஜுலோ ஆர்டினரி ரச்சா

என்னதான் மொக்கை ஃபிலிம் கிளப் மெம்பர்கள்தான் என்றாலும், தொடர்ச்சியாக அரவான், முப்பொழுதும் உன் கற்பனைகள், மூணு என்று அடுத்தடுத்து மொக்கைக்கே மொக்கை போடும் படங்களாக வரிசைகட்டிப் பார்த்து, நொந்துப்போன நெஞ்சுக்கு மசாஜூம் விதமாக தமிழ்ப்படங்களை தவிர்க்கும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது நமது கிளப். வருடத்தின் முதல் காலாண்டில் கிட்டத்தட்ட நாற்பது படங்கள் வெளியாகியும் ’கர்ணன்’ மட்டுமே அள்ளித் தந்திருக்கிறான். ‘அம்புலி’ கையை கடிக்கவில்லை. மற்ற படங்கள் எல்லாம் தயாரிப்பாளரின்/விநியோகஸ்தரின் தாலியறுத்து விட்டது என்பது கோலிவுட் ரிப்போர்ட்.

குறிப்பாக சிவராமன், நாராயணன் போன்ற லேட்டஸ்ட் செயல்வீர மெம்பர்களிடம் ‘ஒத்தவீடு போகலாமா?’ என்று கேட்டால், சோகம் தாங்காமல் தண்ணி போட்டுவிட்டு ‘பன்றிக்காய்ச்சல் பாஸூ’ என்று இரக்கமில்லாமல் மறுத்துவிடுகிறார்கள். இதையடுத்தே கிளப்பின் தலைவர் மொக்கை மற்றும் மொட்டை விஸ்வா தலைமையில் தெலுங்கு, மலையாள மொக்கைப் படங்களை மட்டுமே சில காலத்துக்கு பார்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அவ்வாறு மொக்கையென நினைத்துப் பார்த்து, எதிர்பாராவிதமாக சுமாராக இருந்து மெம்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படங்கள் சில...

ஈ ரோஜுலோ
தமிழில் ’காதலில் சொதப்புவது எப்படி?’ என்று ‘படமெடுத்து சொதப்புவது எப்படி?’ என பாடமெடுத்த டீம் பார்க்க வேண்டிய தெலுங்கு படமிது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட். இந்தப் படத்தை குட்டி ‘குஷி’ எனலாம். ஹீரோ, ஹீரோயினுக்கு இடையிலான ஈகோவை வைத்து திரைக்கதை குதிரையோட்டுகிறார்கள்.

கதைக்கென்றெல்லாம் ரொம்பவும் மெனக்கெடாமல் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார் இயக்குனர் மாருதி. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த டீமுமே புதுமுகங்கள். படம் பார்ப்பவர்கள், இரண்டேகால் மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு நிமிடத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரித்து விடுகிறார்கள். நீண்ட லத்தி வைத்திருக்கும் செக்யூரிட்டி, அந்த லத்தியை எப்போதும் எண்ணெய் போட்டு உருவிக் கொண்டிருக்கும் அசிஸ்டண்ட் என்று புதுமையான பாத்திரப் படைப்புகள். தெலுங்கு சென்ஸார் போர்ட் அதிகாரிகளுக்கு தாராள மனம். டபுள் மீனிங் டயலாக் என்றெல்லாம் மெனக்கெடாமல் டைரக்ட் மீனிங் டயலாக்குகளாக எழுதித்தள்ளிய வசனகர்த்தாவுக்கு ராயலசீமாவில் கோயில் கட்டலாம்.

ஹீரோயின் த்ரிஷாவின் அம்மா ஜாடையில், கொஞ்சம் பாவனாவின் பாடி லேங்குவேஜென்று செம க்யூட்டாக இருக்கிறார். ஹீரோவோ ஒத்தவீடு நாயகனைவிட ரொம்பவே சுமாராகவே இருக்கிறார். படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், அட்மாஸ்பியருக்கு வரும் சாதாரண ஃபிகர்கூட ரிச்கேர்ளாகவோ அல்லது சிறப்பான நாட்டுக் கட்டையாகவோ அமைந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடிக்கிறார்கள். ஆந்திர மல்டிப்ளக்ஸ் மைனர்களும், அமெரிக்க ஐரோப்பிய என்.ஆர்.ஐ.களும் திரும்பத் திரும்ப இந்தப் படத்தை ரசித்துக் கொண்டேயிருக்க, கோடிகளில் வசூல் பேய்மழையாய் கொட்டி தயாரிப்பாளரை குஷிப்படுத்தியிருக்கிறது. தீம் பாடலான ‘ரிங், ட்ரிங்’, படம் பார்த்து நீண்டநாளானாலும் நம் மனதில் ரிங்கிக் கொண்டும், ட்ரிங்கிக் கொண்டும் இருக்கும்.

ஆர்டினரி
கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமா இண்டஸ்ட்ரியில் தமிழ் இண்டஸ்ட்ரியை விட உருப்படாமல் போய்விட்ட இண்டஸ்ட்ரி மலையாள ஃப்லிம் இண்டஸ்ட்ரி. மம்மூட்டியும், மோகன்லாலுமே கூட அடுத்தடுத்து பல்பு வாங்கிக் கொண்டிருக்க, திலீப் மட்டும் கொஞ்சம் ஸ்டடியாக இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களைப் பார்த்து மலையாள ஹீரோக்கள் கெட்டுப் போய்விட்டார்கள். ஐ மீன் கற்பிழந்து விட்டார்கள். புதியதலைமுறை ஹீரோக்கள் குத்துப்பாட்டு, ஃபைட் என்று கோமாளித்தனம் செய்ய, மரபார்ந்த மலையாள சினிமா ரசிகர்கள் கதகளி பார்க்க கிளம்பிவிட்டார்கள்.

இந்தச் சூழலில் மலையாள மண்ணின் அச்சு அசலான மீன் வாசனையோடு வந்திருக்கிறது ஆர்டினரி. மென்மையான பாத்திரங்கள், நட்பு- உறவு என்று பழைய கேரள விழுமியங்கள். வித்யாசாகரின் மெல்லிசை. கண்ணுக்கு குளிர்ச்சியான மலையாள லொகேஷன் என்று ஆர்டினரி மலையாள மூவி. ஆனால் எக்ஸ்ட்ரா ஆர்டினரி ரெஸ்பான்ஸாம்.

பிஜூ மேனன் டிரைவர். குஞ்சாகோ கோபன் கண்டக்டர். ஒரு மலை கிராமத்துக்கு அப் & டவுன் என்று ரெண்டே சிங்கிள் போகும் சொத்தையான ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி ஆர்டினரி பஸ். ஒரு ஹீரோயின். மேலும் சில கேரக்டர்கள். இடைவேளைக்கு முன்பாக ஒரு முடிச்சு. க்ளைமேக்ஸில் சுபம் என்று வழக்கமான சினிமா பாணிதான் சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. இதுவும் ஒரு மினிமம் பட்ஜெட் படம்தான். ஃபாரினுக்கெல்லாம் போய் மலையாள பாரம்பரிய உடையில் யாரும் ஹிப் ஹாப் ஆடவில்லை.

ஹீரோயின் ஷ்ரீதா பற்றி சொல்லாவிட்டால் நாக்கு அழுகிவிடும். பதினேழு வயதான இவர் நம் ராதாவின் பொண்ணு கார்த்திகா சாடையில் இருக்கிறார். இதுதான் முதல் படம். தூக்கலாக மேக்கப் போட்ட காட்சிகளில் பேரழகியாகவும், மேக்கப் குறைவான காட்சிகளில் ரொம்ப சுமார் ஃபிகராகவும் இருக்கிறார். நவ்யா மாதிரி மாநிறம். இவருக்கு கொடுத்த சம்பளத்தில் பாதியை, அவருக்கு ஐப்ரோ திருத்திய அழகுக் கலைஞருக்கு கொடுப்பதுதான் நியாயம்.

ரச்சா
அப்பா மெகா ஸ்டார். சித்தப்பா பவர் ஸ்டார். எனவே ராம்சரண் தேஜா மெகா பவர் ஸ்டார். படத்தில் இவரது சின்ன வயது கேரக்டர் ஓடும்போதுகூட, பக்கத்தில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பவர் எகிறுகிறது. மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களும் லோ-பட்ஜெட் என்றால், ரச்சா ஹை-பட்ஜெட் ஆக்‌ஷன் மசாலா.

ராம்சரணுக்கு ஒரு ராசி. அவரது படங்களுக்கு ரெண்டே ரெண்டு ரிசல்ட்தான். ஒன்று அட்டர் ஃப்ளாப். இரண்டு மெகா ஜிகா ஹிட். ரச்சா இரண்டாம் வகை. தெலுங்கு சினிமாவின் முந்தைய சாதனைகளான மகாதீரா, தூக்குடு, பிஸினஸ்மேனையெல்லாம் அசால்டாக முதல்வாரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது ரச்சா.

இத்தனைக்கும் ரொம்ப சுமாரான ஒருவரி கதை. எளிதில் அடுத்தக் காட்சியை யூகிக்க வைக்கும் பலவீனமான திரைக்கதை. இப்படியிருந்தும் ரச்சா ஏன் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால், அதை தெரிந்துக்கொள்ள தற்கால தெலுங்கு சினிமா பற்றிய பின்னணியும், கொஞ்சம் வரலாற்று அறிவும் அவசியம்.

மெகா ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் பிரஜாராஜ்யத்தை காங்கிரஸில் இணைத்தது தொடர்பாக கொஞ்சநாளாக கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் என்று ஆந்திர பத்திரிகைகள் பகிரங்கமாகவே கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றன. பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படமான ‘பாஞ்சா’வில் அண்ணனின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிரான பஞ்ச்களை கொஞ்சம் பலமாகவே வைத்திருந்தார் பவன் கல்யாண். ரசிகர்களின் மாபெரும் ஆதரவோடு ஓபனிங் சூப்பர் என்றாலும், மக்களின் பேராதரவு இல்லாமல் அடுத்தவாரங்களில் பாஞ்சா பஞ்சர் ஆனது. இச்சூழலில் சிரஞ்சீவியின் வாரிசு அவரது தம்பியா அல்லது மகனா என்கிற கேள்வி இயல்பாகவே ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கான பதில்தான் ரச்சா.

“என் அப்பனை ஏதாவது சொன்னா, மவனே எங்கிருந்தாலும் தேடி வந்து உதைப்பேன்”

“எனக்கு உயிரைப் பத்தி கவலையில்லை. என் அப்பாவோட ஆசையை நிறைவேத்த எதை வேணும்னாலும் செய்வேன்”

“மக்களோட ஆதரவு எங்களுக்கு இருக்கு. எதைப்பத்தியும் கவலை இல்லை”

இம்மாதிரி வசனங்கள் மெகாஸ்டாரின் மகன் வாயால் உச்சரிக்கப்படும்போது, அது ஆந்திர தியேட்டர்களில் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவது பெரிய ஆச்சரியமில்லை.

போதாக்குறைக்கு மெகாஸ்டாரின் சூப்பர்ஹிட் பாடலான “வானா.. வானா”-வின் ரீமிக்ஸ் வேறு. இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரகதாபத்தை சிறப்பாக வெளிப்படுத்தி கேங்லீடரில் இப்பாடலுக்கு ஆடிய சிரஞ்சீவி, விஜயசாந்தி இருவருமே இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

கொஞ்சமும் நம்பவே முடியாத, காதுகளில் கி.மீ. கணக்கில் பூ சுற்றும் காட்சிகள் இருந்தாலும் ‘ரச்சா’ பார்ப்பது கொண்டாட்டமாகவே இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்தடுத்து தெலுங்கில் ஒருமுறை, தமிழில் இன்னொருமுறை இப்படத்தை மொக்கை ஃப்லிம் கிளப் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு பாடலில் தமன்னா வேகமாக தன் பாலினும் வெண்மையான, வடிவான தொப்புளை ‘ஷேக்’ செய்யும்போது ‘ஷாக்’ ஆகாத ரசிகமனங்களே இல்லை எனலாம். அதிலும் கடைசி பாடலில் உலகில் இருக்கும் அத்தனை வண்ணங்களையும் உடைகளிலும், ப்ராப்பெர்ட்டி செட்டுகளிலும் இறைத்திருக்கும் லாவகம்தான் தெலுங்கு சினிமாக்காரர்களின் பலமே. இப்பாடலில் வரும் ஒரு ஷாட்டில் ஸ்க்ரீனின் இருபுறமும் எக்ஸ்ட்ராஸ் எடுப்பாக திருமலை நாயக்கர் மகால் தூண் மாதிரி நிற்கும்போது ரசிகர்களின் விசிலில் திரை கிழிகிறது.

2 ஏப்ரல், 2012

பருவச்சீட்டு பயணிகள் சங்கம்

சென்னையைப் பற்றி வாசிக்கவோ, கேட்கவோ சலிக்கவே சலிக்காது. பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க சென்னையின் எல்லையிலிருக்கும் மடிப்பாக்கத்தில்தான். என்றாலும் இரண்டு தலைமுறைகளாகதான் சென்னை எங்களுக்கு அன்னை. அப்பா வழி தாத்தா காஞ்சிபுரத்துக்காரர். முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். இராணுவத்தில் ஓய்வுபெற்ற பிற்பாடு சென்னை மாகாண காவல்துறையின் குதிரைப்படையில் பணியாற்றினார். கொண்டித்தோப்பு போலிஸ் லேனில் குவார்ட்டர்ஸ். பெரியப்பாவில் தொடங்கி, அப்பாவரை பதிமூன்று பேரை அவர் பெற்று வளர்த்தது இங்கேதான்.

அப்பாவின் அம்மா வழி தாத்தா மடிப்பாக்கத்து வாசி. அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்காக கிராமங்களில் வரிவசூல் செய்துத்தரும் அஃபிஷியல் ஏஜெண்ட். ‘ஜமீன்தார்’ என்று ‘க்ளெய்ம்’ செய்துக்கொண்டு ஊரில் கும்மாளம் போட்ட பரம்பரை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என் பாட்டிக்கு சொந்த ஊர் என்பதால் எங்கள் குடும்பம் கடந்த தலைமுறையில் மடிப்பாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டது.

இப்போது சென்னை மாநகராட்சிக்குள் இணைந்துவிட்டாலும் மிகச்சரியாக இருபதாண்டுகளுக்கு முன்புவரை மடிப்பாக்கம் கிராமம்தான். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை கூட ஓரளவு கிராம அடையாளங்கள் மிச்சமிருந்தது. சைதாப்பேட்டை வரை பஸ்ஸில் போய்வருபவர்கள்கூட ‘பட்டிணத்துக்கு போயாறேன்’ என்று சொல்வார்கள். மவுண்ட்ரோடு போய் சினிமா பார்த்துவிட்டு வருவது ஒரு கவுரவமான சடங்காகவே அப்போது இருந்தது. இப்போதும் மடிப்பாக்கத்தின் பூர்வகுடிகள் யாரும் தங்களை சென்னைவாசி என்று சொல்லிக் கொள்வதில்லை. நானும்கூட வெளியூர்களுக்கு செல்லும்போது, “சென்னைக்கு பக்கத்துலே மடிப்பாக்கம்” என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எல்லா ஊர்க்காரர்களுக்கும் இருப்பதைப் போல ‘மெட்ராஸ்’ எனக்கும் வியப்பூட்டும் ஊர்தான், இப்போதும் கூட. எக்ஸிபிஷன், மியூசியம், பீச், கிண்டி பார்க், பிளானட்டோரியம், அலங்கார் தியேட்டர் என்று மெட்ராஸுடனான சுகமான சிறுவயது நினைவுகளை அசைபோடுவது சுகமான விஷயம்தான். சென்னைக்கு வெகு அருகில் வசிப்பவனையே தனக்கேயுரிய தனித்துவ அலட்டலால் மிரட்டும் இந்த நகரம், வெளியூர்க்காரர்களுக்கு என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

‘நம்ம சென்னை’ வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘சென்னையும் நானும்’ ஏற்படுத்தும் நாஸ்டால்ஜியா உணர்வுகள் அற்புதமானவை. ஞாநி, பிரபஞ்சன், மருது, நாசர், மாஃபா பாண்டியராஜன், வெற்றிமாறன் ஆகிய பிரபலங்கள் தங்கள் சென்னை அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாண்டியராஜனின் பேட்டியாக வருவது மட்டும் தேவையற்றத் திணிப்பாக – அவரது நிறுவனத்துக்கு விளம்பரமாக – புத்தகத்துக்கு திருஷ்டிப் படிகாரமாக அமைந்திருக்கிறது. சப்ஜெக்ட் தாண்டுகிறோமேவென்று சென்னையின் வளர்ச்சி குறித்து கொஞ்சமே கொஞ்சம் அகாடமிக்காக பேசியிருக்கிறார் பாண்டியராஜன்.

ஞாநி, நாசர் இருவருமே செங்கல்பட்டுக் காரர்கள். சென்னைக்கு அருகிலிருக்கும் பெரிய நகரைச் சேர்ந்தவர்கள். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இங்கே கோலோச்சிக்கொண்டிருந்த ‘நாடகம்’ அவர்களை இங்கே இழுத்து வந்திருக்குமென யூகிக்கிறேன்.

இந்நூலிலும் தன் வழக்கப்படி ஆற, அமர பொறுமையாக பேசும் ஞாநி தஞ்சாவூரில் பிறந்திருக்க வேண்டியவர். அடித்தட்டு மக்கள் நகரை விட்டு வெளியேற்றப்படும் போக்கினை கவலையோடு காண்கிறார். நடுத்தர வர்க்கம் மனச்சாட்சியை இழந்து வருவதை இதற்கு காரணமாக சுட்டிக் காட்டுகிறார். செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்து படித்துக் கொண்டிருந்த ஞாநி, பட்டப்படிப்பை முடித்ததும் முழுக்க சென்னைவாசியாகிறார். நகரைப் பற்றிப் பேசும் பேட்டியில் தன்னுடைய குடும்பப் பின்னணி மொத்தத்தையும் அழகாக நெருடல் இன்றி பேசியிருக்கிறார். சென்னையில் தன்னை கவர்ந்தவையாக பரந்து விரிந்த கடற்கரையையும், நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார்.

மதுரையைச் சேர்ந்த டிராட்ஸ்கி மருது சென்னை ஓவியக்கல்லூரியில் படிப்பதற்காக சென்னை வாசியானவர். மந்தைவெளி செயிண்ட் மேரிஸ் ரோடு தாண்டி இன்றைய ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் விவசாயம் நடந்து வந்ததாக தன் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். கபாலி தியேட்டர் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது என்று அவர் சொல்லுவதை இன்றைய சென்னைவாசிகள் நம்புவது கடினம். அன்றைய மூர் மார்க்கெட் குறித்த மருதுவின் விவரணைகள் சுவாரஸ்யமானவை. கலைஞர்களுக்கான பொதுவான வெளியற்ற நகரமாக சென்னையை இவர் பார்க்கிறார். கலிபோர்னியாவில் உள்ள கல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தை மனதில் வைத்து எண்பதுகள்ன் இறுதியில் அரசாங்கத்திடம் ஒரு யோசனையை இவர் முன்வைத்திருக்கிறார். ஒரே வளாகத்துக்குள் ஏழு விதமான கலைகளையும் கற்றுத்தரும் திட்டமிது. ஒப்புக்கொண்ட அன்றைய திமுக அரசு 1991ல் கவிழ்ந்ததால், இந்த கலைப்பல்கலைக்கழக யோசனை கிடப்பில் போடப்பட்டுவிட்டதாம்.

நாசர் எழுபதுகளில் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். ரயிலில் மாம்பலம் நிலையத்தில் இறங்கி, வேர்க்கடலை கொரித்தப்படியே ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், ஜி.என்.செட்டி சாலை வழியாக மவுண்ட்ரோடுக்கு நடந்து வருவாராம். அப்போதைய சென்னை முழுக்க நடந்தே கடந்துவிடும் பரப்பளவில் இருந்ததாக சொல்கிறார். ஜி.என்.செட்டி சாலையில் இருந்த வீட்டில் நச்சினார்க்கினிய சிவன், வண்டார்குழலி என்று பெயர்ப்பலகை இருந்ததை நினைவுகூர்கிறார். இத்தனை ஆண்டுகளில் சென்னை வளரவில்லை, மாறியிருக்கிறது என்பது நாசரின் வாதம். சென்னை அழகியலை விற்று, குப்பையை வாங்கி வீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இவரின் வருத்தம்.

நூலின் மிக சுவாரஸ்யமான பேட்டியாக வெற்றிமாறனின் பேட்டியைச் சொல்லலாம். பிறந்தது கடலூராக இருந்தாலும் சிறுபிராயத்தை பெரும்பாலும் சென்னையில் கழித்திருக்கிறார். மேல்நிலை படிக்கும்போது உறவினர் வீட்டில் ஏற்பட்ட ஏதோ பிரச்சினையால் பள்ளி நண்பணின் வீட்டில் தங்கிப் படித்த இவரது அனுபவம் அபாரம். தங்கள் மகனோடு, வேறு யாரோ ஒரு பிள்ளையையும் மகனாக வளர்த்த அந்த குடும்பத்தின் அன்பு, இதுவரை இலக்கியமோ, சினிமாவோ நமக்கு காட்டிய அன்புகளையெல்லாம் விட பேரன்பு. சென்னையின் அடையாளமான டீக்கடைகளைப் பற்றி இப்புத்தகத்தில் விலாவரியாக பேசியிருப்பவர் இவர் மட்டும்தான். சென்னையைக் கெடுப்பவர்கள் எல்லாருமே வெளியூரிலிருந்து வருபவர்கள் என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார். சென்னையின் மீது மற்றவர்களால் வைக்கப்படும் புகார்களை இவர் கோபத்தோடு பார்க்கிறார். நமது கழிவுகளை சுமக்கும் கூவத்தை எப்படி இளக்காரமாகப் பேசமுடியும் என்று கேட்கிறார். ‘வடசென்னைதான் அசல் சென்னை’ என்பது வெற்றிமாறனின் வாதம்.

சென்னை குறித்த பிரபஞ்சனின் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிரபஞ்சனின் கட்டுரை நன்றாக இருக்கிறது என்று சொல்வது க்ளிஷேவாகிவிடும். அவரோடு மேன்ஷனில் தங்கியிருந்த வெளியூர்க்காரர் ஒருவரிடம் பிரபஞ்சன் கேட்டாராம்.

“ஊருக்கு போவதே இல்லையா?”

“எதுக்கு? இதுவும் ஊர்தானே?”

சென்னையை நேசிப்பவனாக என்னை நெகிழவைத்த வரிகள் இவை. சென்னையை ஊராக சென்னைவாசி உட்பட யாருமே மதிப்பிடுவதில்லை என்பதுதான் உண்மை. இங்கு எல்லாமே இருந்தும், எதுவுமே இல்லாதது மாதிரி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது வாடிக்கையாகி விட்டது. கோயமுத்தூர் மாதிரி வருமா, மதுரை மாதிரி வருமாவென்று புலம்பிக் கொண்டேயிருப்பவர்கள் கோயமுத்தூருக்கோ, மதுரைக்கோ போனால் ஒரே வாரத்தில் தெறித்துக்கொண்டு சென்னைக்கு ஓடிவருகிறார்கள். இங்கு எதுவுமே சரியில்லை என்பவர்கள்தான் இங்கேயே நிரந்தமாக வசிக்க வழிவகை செய்துக் கொள்கிறார்கள்.

சினிமாக்களில் காட்டப்படுவது போல எல்.ஐ.சி.யோ, சென்ட்ரலோ மாதிரி சென்னைக்கென்று எதுவும் தனித்துவமான பொதுப்பிம்பம் உருவாகியிருப்பதாகத் இந்நூலை வாசிக்கும்போது தோன்றவில்லை. இந்நகரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு மனச்சித்திரத்தை இந்நகரம் வழங்குகிறது. நாசருக்கு தேவிபாரடைஸ் தியேட்டரில் இருந்த சிவப்பிந்திய சிலையும், அலங்காரத் தண்ணீர் ஊற்றும் சென்னையாகத் தோன்றுகிறது. இதுபோல ஒவ்வொருவருக்கும் சென்னை என்றால் ஏதோ ஒரு அடையாளம். மற்ற நகரங்களை மனதுக்குள் நினைத்தாலே நச்சென்று ஒரு லேண்ட்மார்க் மூளைக்குள் பல்ப் அடிக்கும். சென்னைக்கு நிறைய லேண்ட்மார்க்குகள். ஆனால் எதுவும் பொதுப்பிம்பம் உருவாக்கக்கூடிய அளவுக்கு ‘பளிச்’சென்று இல்லை.

சென்னையில் திருவிழாக்கள் மிகக்குறைவு. கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர், திருப்பதி குடை மாதிரி ஒரு சிலவற்றை யோசித்துதான் சொல்லமுடியும். மாறாக வருடாவருடம் பொங்கலுக்கு தீவுத்திடலில் நடக்கும் எக்ஸிபிஷனை நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் திருவிழாவாக குறிப்பிடலாம். எண்பதுகளில் செல்வாக்கோடு (போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ் விடுமளவுக்கு) இருந்த இந்த விழா, இன்றளவுக்கும் ஓரளவுக்கு சிறப்பாகவே மூன்றுமாத காலத்துக்கு நடக்கிறது. முன்பெல்லாம் காணும் பொங்கலுக்கு மாட்டு வண்டி கட்டி பீச்சுக்கு வரும் வழக்கம்தான் இப்போது சுத்தமாக வழக்கொழிந்துப் போய்விட்டது. பழைய படங்களில் காணக்கிடைக்கும் சென்னையை பார்க்க இப்போது ஏக்கமாக இருக்கிறது. வளர்ச்சியோ, மாற்றமோ.. இரண்டாயிரங்களுக்குப் பிறகு.. குறிப்பாக ஐ.டி. தலைமுறை உருவானபிறகே சென்னை தன்னுடைய பிரத்யேக அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது என்பது என்னுடைய அவதானிப்பு.

புத்தகத்தில் மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் ஞாநி சொன்னது. ஞாநியின் தந்தை சென்னையில் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணா இவரது கல்லூரித் தோழர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் செங்கல்பட்டில் இருந்து நகருக்கு சீசன் டிக்கெட் எடுத்து ரயிலில் வரும் வழக்கம் கொண்டவர் என்பதால் ‘சீசன் டிக்கெட் பயணிகள் சங்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் (ஞாநிக்கே அப்பாவாச்சே?). ஆண்டுதோறும் செங்கல்பட்டில் இந்த சங்கத்தின் ஆண்டுவிழாவுக்கு அண்ணா, ராஜாஜி, காமராஜர் மாதிரி ஆட்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள். ஒருமுறை கலைஞர் வந்திருக்கிறார். ஆங்கிலத்தில் சங்கத்தின் பெயர் இருப்பதைக் கண்டவர் கவர்ச்சிகரமாக தமிழில் மாற்றிவைத்த பெயர்தான் இந்த கட்டுரையின் தலைப்பு.


நூல் : சென்னையும் நானும் (பிரபலங்கள் பார்வையில் சென்னை)

பக்கங்கள் : 80, விலை : ரூ.40

வெளியீடு : நம்ம சென்னை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
B-1, கீழ்த்தளம், ஆர்.ஈ. அப்பார்ட்மெண்ட்ஸ்,
70, ஆரிய கவுடர் சாலை, மேற்கு மாம்பலம்,
சென்னை-600 033. போன் : 044-24718501
மின்னஞ்சல் : nammachennai@gmail.com

31 மார்ச், 2012

மனநோயோடு மல்யுத்தம்!


அகிலேஷ்வர் சகாய். வயது 50. டெல்லிக்கு அருகில் குர்கானில் செயல்படும் ஒரு பெரிய நிறுவனத்தின் போக்குவரத்து தொடர்பான பிரிவின் இயக்குனர். நிறுவனத்தின் மிக முக்கியமான கை. அவருடைய ஒவ்வொரு நிமிடமும் பல்லாயிரம் ரூபாய்கள் மதிப்பு வாய்ந்தது. எப்போது பார்த்தாலும் பிசினஸ் மீட்டிங். விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அகிலேஷ்வர் ஒரு செயின் ஸ்மோக்கர். ஆறாவது விரலாய் சிகரெட் புகைந்துக் கொண்டேயிருக்கும். சிகரெட்டின் தீமையை நன்கு அறிந்திருந்தும், “நான் ஓய்வே இல்லாதவன். நொடிக்கு நான்கு முறை கோபப்படும் மனிதன். இதனால்தான் சிகரெட் பழக்கம்” என்று புன்னகைக்கிறார். ஏழு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார். தீவிரமான மனநோயோடு ஒரு நிறுவனத்தின் உயர்பதவியில் பணிபுரிபவர், அனேகமாக இவர் ஒருவர் மட்டுமாகதான் இருப்பார்.

அடுத்த ஒரு பத்தியினை கொஞ்சம் லேசாக கற்பனை செய்துப் பாருங்கள்.

உங்களை நாளை காலை தன்னோடு வாக்கிங் அழைத்துச் செல்ல பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருக்கிறார். மறுநாள் மதிய உணவு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன். அதற்கு அடுத்த நாள் மாலையில் பிரான்ஸ் அதிபர் சர்கோஸியுடன் பாரிஸ் நகரை வலம் வரவேண்டும். இடையில் இங்கிலாந்து ராணி வேறு சந்திப்புக்கு நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். உலகநாடுகளின் அதிபர்களும், தலைவர்களும் உங்களை சந்திக்க, பேச, பழக ஒற்றைக்காலால் தவம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

புன்னகையோடு படித்திருப்பீர்கள். கற்பனைக்கு நன்றாகத்தான் இருக்கிறது, இதெல்லாம் நடக்கிற காரியமா என்று யதார்த்தமாக யோசித்துவிட்டு, அடுத்தப் பத்திக்கு நகர்ந்து விட்டீர்கள் இல்லையா?

அகிலேஷ்வருக்கு இந்த இடத்தில் தான் பிரச்சினை. இதுமாதிரியான அதீத கற்பனை அவரது உள்ளத்தில் தோன்றும். அந்த கற்பனை உண்மையென்று நினைத்து, அது தொடர்பான முயற்சிகளில் மூழ்கிவிடுவார். அதாவது நிஜமாகவே நாளை காலை மன்மோகன் சிங்கோடு வாக்கிங் போகவேண்டுமென்று நினைத்துக் கொண்டு, டிராவல் ஏஜென்ஸியில் டெல்லிக்கு பிளைட் டிக்கெட் புக் செய்துவிடுவார். டெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு... அங்கிருந்து பாரிஸுக்கு...

பின்னர் இதெல்லாம் நடக்காதபோது அவருக்கு ஏற்படும் மனச்சோர்வுக்கு எல்லையே இருக்காது.

நினைத்துப் பார்க்கவே விபரீதமாக இல்லை?

ஒருமுறை இப்படித்தான். திடீரென்று தன்னுடைய வங்கியின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கு தொலைபேசினார் அகிலேஷ்வர். தனக்கு உடனடியாக மூன்று லட்ச ரூபாய் லோன் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். அடுத்த நான்கு நாட்களிலேயே மூன்று லட்ச ரூபாயை எதற்காக செலவழிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் செலவழித்து விட்டார். என்னென்ன செலவழித்தோம் என்று அவருக்கு நினைவேயில்லை. அதன் பின்னர் அவர் தனது மணிபர்ஸில் ஐம்பது ரூபாய்க்கு மேல் வைத்துக் கொள்வதே இல்லை.

இது எந்தமாதிரியான பிரச்சினை? ஸ்க்ஸோப்ரீனியா மாதிரி வாயில் நுழையாத எண்ணற்ற மனநோய்களில் ஒன்று பிபோலர் டிஸார்டர் (Bipolar Disorder). இந்த நோய் இருப்பவர் பணித்திறன் குன்றியிருப்பார். குடிக்காமலேயே குடித்தவரைப் போல நடந்து கொள்வார். அல்லது ஏடாகூடாமாக சிந்திப்பார். ஆரம்பத்திலேயே தகுந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், மிக மோசமான விளைவுகளுக்கு இந்நோய் இட்டுச்செல்லும்.

இயல்பான மனநிலையை மாற்றியமைப்பது தான் இந்நோயின் மோசமான ஒரு தாக்குதலாக சொல்லலாம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் மிகவும் சோகமாக மனம் உணரும். தூங்க வேண்டும் என்ற மனநிலை வரவே வராது (Insomnia). தூக்கமின்மையால் தன்னம்பிக்கை குறையும். நாளுக்கு நாள் இனம் தெரியாத குற்றவுணர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும். இறுதியாக தற்கொலை எண்ணம் வலுப்பெறும்.

அகிலேஷ்வர் சகாய்க்கு ஏன் இந்நோய் வந்தது என்று குறிப்பாகச் சொல்லமுடியவில்லை. அவருடைய கடந்தகால பணிகளும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

தன்னுடைய இருபதாவது வயதில் சகாய், டெலிகிராப் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இரவுகளில் பணி. பகலில் படிப்பு. படிப்பு முடிந்தவுடன் தேசிய வங்கி ஒன்றில் பணியாற்றினார். 1991லிருந்து 1997 வரை கொங்கன் ரயில்வேக்காக அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. பணப்பரிமாற்றத்துக்கு பொறுப்பாக இருந்ததால் ஒரு நாளைக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரங்கள் வரை அவர் உறக்கமின்றி பணியாற்ற வேண்டியிருந்தது. பணியாற்றிய நிறுவனங்களில் எல்லாம் வேலை பார்ப்பதில் இவர் சூரப்புலி என்றே பெயர் வாங்கினார்.

மிகச்சரியாக இதே காலக்கட்டத்தில் தான் அவருக்கு மனநோய் உருவாகியிருக்கும் என்று தெரிகிறது. வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தில் இணைந்திருந்தார். வேலை பார்ப்பது அவருக்கு கசந்த காலக்கட்டம் இது. இவரது வாழ்க்கையை மனநோய் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருந்தது. தூக்கம் என்பதே அரிதாகிவிட்டது. சோம்பல், சோர்வு. வாழ்வதே நரகம்.

நண்பர்கள் சிலரின் ஆலோசனையின் பேரில் மனநல மருத்துவர்களை தொடர்பு கொண்டார். மருத்துவர்கள் உதவியால் தனக்கு பிபோலர் டிஸார்டர் இருப்பதை கண்டுகொண்டார். இந்நோய் மூளையின் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கிறது. நம்மில் நூற்றில் ஒருவர் கடுமையாகவும், நான்கு பேர் மிதமாகவும் இதே மனநோயால் பாதிக்கப்படுகிறோம். இந்நோயின் தாக்கத்தை குறைக்க வீரியமான மருந்துகள் தேவைப்படும்.

இந்தியாவில் பெரிய நிறுவனங்களில் உயர்பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மட்டத்தில், அனேகமாக இந்நோய் கண்டறியப்பட்டிருப்பது சகாய் விஷயத்தில் தான். பலருக்கும் இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பெரிய பெயருடன் இருப்பவர்கள் மனநோய்க்கு மருத்துவம் பார்ப்பதை வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. தமக்கு மனநோய் இருப்பதாக மருத்துவரால் சொல்லப்பட்டாலும், அதை ஒத்துக்கொள்ள பெரிய மனிதர்களின் ஈகோ இடம் தருவதில்லை என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து முதல் பத்து சதவிகிதம் பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதாகவும், அவர்களில் 90 சதவிகிதம் பேர், இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது சகாய் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வினாயக் சாட்டர்ஜி, இவரது மனநோய் குறித்து தெரிந்தே பணிக்கு சேர்த்தார். சகாயை இந்நிறுவனம் குழந்தை மாதிரி பார்த்துக் கொள்கிறது என்று சொன்னால் மிகையாகவே தெரியும். ஆனால் அப்படித்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.

“அவர் அடிக்கடி கோபப்படுவார். திடீரென விடுப்பு எடுப்பார். அதெல்லாம் எங்களுக்கு பிரச்சினையில்லை. அலுவலகத்தைப் பொறுத்தவரை அவர் வைரம். வைரத்தை யாராவது வேண்டாமென்று சொல்லுவார்களா?” என்று சொல்லி சிரிக்கிறார்கள் சக அலுவலர்கள். சகாய் வேலை பார்க்கிறாரா என்பதைவிட ஒழுங்காக தூங்குகிறாரா என்பதை உறுதி செய்துக் கொள்கிறது அவரது நிறுவனம். ஏனெனில் உறக்கம்தான் பல பிரச்சினைகளுக்கும் தீர்வான ஒரே மருந்து.

“இப்போது எனக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக நிவாரணம். எவ்வளவு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரியாது. வாரத்தில் ஏதாவது ஒருநாள் மறந்துபோய், நான் மருந்து உட்கொள்ளாவிட்டாலும் கூட பழைய நிலைக்கு போய்விடக் கூடிய ஆபத்து எப்போதும் இருக்கிறது. மனநோயை தனிமனிதனாக வெல்வது என்பது சாத்தியமற்றது. சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் யாரும், எதையும் வென்று விடமுடியாது!” என்று பணிவாக சொல்கிறார் சகாய்.


நிறுவனங்களின் கடமை!

இன்றைய பரபரப்பான சூழலில் நம்மில் பலருக்கும், நாம் அறியாமலேயே மனம் தொடர்பான நோய்கள் இருக்கக்கூடும். உடல் தொடர்பான நோய்களைப் போன்று வெளிப்படையான அறிகுறிகள் தென்படாததால் நாம் இயல்பாக இருப்பதாகவே நம்பி தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை.

குறிப்பாக விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பத்திரிகையாளர்கள், பி.பி.ஓ பணியாளர்கள் போன்றவர்கள் காலக்கெடுவுக்குள் (Deadline) பணியை முடிக்க, தூக்கத்தைத் துறந்து பணியாற்றுபவர்களுக்கு மனச்சோர்வு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் பணித்திறன் குறைந்து இவர்களுக்கு அலுவலகத்திலும் கெட்ட பெயர். பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இல்லாது, அலுவலக டென்ஷனை வீட்டிலும் ‘வள்’ளென்று காட்டுவார்கள். சில நாட்களிலேயே சமூகத்தோடு ஒன்றமுடியாமல் தங்களை தாங்களே தனித்துக் கொள்வார்கள்.

தங்கள் ஊழியர்கள் ஒழுங்காக உணவு உட்கொள்கிறார்களா என்று கேண்டீனெல்லாம் அமைத்து அக்கறையோடு பார்த்துக் கொள்ளும் நிறுவனங்கள், அவர்கள் உறங்கினார்களா, பணிச்சுமை ஊழியர்களுக்குள் சமமாக பகிர்ந்துக் கொள்ளப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

30 மார்ச், 2012

மாசி

“சார்! பர்ஸ்ட் சீனிலேயே நாலு பேரை போட்டுத் தள்ளுறீங்க. நீங்க ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். வேட்டையாடு விளையாடு பாட்டு மாதிரி உங்களுக்கு ஒரு தீம் சாங்கும் உண்டு. பாட்டு ஃபுல்லா போடு போடுன்னு எல்லா ரவுடிகளையும் போட்டுக்கினே இருக்கீங்க”

”இண்டரெஸ்டிங். மேலே சொல்லுங்க”

“மெட்ராஸ்லே ரெண்டு ரவுடி க்ரூப். ஒரு க்ரூப்புக்கு மினிஸ்டர் சப்போர்ட். இன்னொரு க்ரூப்புக்கு மும்பையிலேருந்து ரவுடியிஸம் ஆபரேட் பண்ணுற டான் சப்போர்ட். ரெண்டு க்ரூப்பு ஆளுங்க எல்லாத்தையும் என்கவுண்டர்லே போடறீங்க. கடைசியிலே வில்லன்களையும்”

“நல்லாருக்கு சார். இண்டியன் சினிமாவிலேயே இப்படியொரு கதையோட படம் வந்ததில்லை. ஆனா ஹீரோயினே இல்லையே?”

சுதாரித்தபடி, “இருக்காங்க சார். பர்ஸ்ட் சீன்லேயே நெத்தியிலே குண்டு பாய்ஞ்சு செத்துடறாங்க”

“அவங்களையும் நான் தான் போட்டுடறேனா?”

“நியாயமா நீங்கதான் போடணும். ஆனா வில்லன்கள் போடுறமாதிரி வித்தியாசமா எடுக்கிறோம் சார்”

“பர்ஸ்ட் சீன்லேயே ஹீரோயின் அவுட்டுன்னா.. டூயட்டு, ஃபாரின் சாங்குக்கு எல்லாம் ஸ்கோப்பே இல்லையே பாஸ்?”

“அதெல்லாம் ட்ரீம்லே வெச்சுக்கலாம் சார்”

இப்படியாகதான் அர்ஜூன் சாரிடம் இயக்குனர் கிச்சா சார் கதை சொல்லியிருப்பார். ‘வெற்றிவிழா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மூணையும் கலந்துக்கட்டி கலக்கறோம் சார்’ என்று விறுவிறுப்பாக்கி ஆக்‌ஷன் கிங்கை ஒப்புக்கொள்ள வைத்திருப்பார்.

படத்தில் அர்ஜூன் தன்னைத்தானே போட்டுக்கொள்ளவில்லை என்பதைத் தவிர்த்து, ஓரமாய் ஒண்ணுக்கு இருப்பவனை கூட போட்டுத் தள்ளும் ‘கொலவெறி’ என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறார். என்கவுண்டர் என்கொயரிக்கு வரும் மேலதிகாரிகளின் வாயில் லாலிபாப் வைக்காததுதான் ஒரே குறை. படத்தில் அ.மார்க்ஸ் நடிக்கவில்லை என்பதால் ‘மனித உரிமை’ என்கிற பேச்சுக்கே இடமில்லை.

இப்படியாக போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு சோதனை வருகிறது. கமிஷனர் வில்லனின் ஆள் என்று வித்தியாசமான பாத்திர படைப்பு. எனவே நேர்மையான போலிஸ் அதிகாரியான அர்ஜூன் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளே தள்ளுகிறார்கள். அங்கிருந்து இன்னொரு வில்லனுக்கு அடியாளாக செயல்பட்டு, வெளியே வந்து, தன் பழியை துடைத்து, தன் மீது பழி போட்டவர்களையும் போட்டு கடைசியில் தனக்கு பழிதீர்க்க உதவிய வில்லனையும் போட்டு… ஒட்டுமொத்தமாக இரண்டரை மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேரையாவது ராஜபக்‌ஷே பாணியில் போடுகிறார் அர்ஜூன்.

ஹீரோயின் நாலஞ்சு சீனுக்குதான் என்பதால் இருப்பதிலேயே மொக்கை ஃபிகராக பார்த்து புக் செய்திருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாமல் ‘பிட்’டாக உரித்துக் காட்டப்படும் ஆரம்பக் குளியலறைக் காட்சியால் கூட அவரால் ரசிகர்களுக்கு ‘மூட்’ இன்க்ரீஸ் செய்யமுடியவில்லை என்பதுதான் பரிதாபம்.

ஆக்‌ஷன் கிங் கன்னச் சதைகளெல்லாம் தொங்கிப்போய், குள்ளமாக, ஏடாகூடமான உடல்வாகோடு பரிதாபமாக இருக்கிறார். கூலிங் கிளாஸ் மட்டும் இல்லையென்றால், நடிப்பையே விட்டுவிட வேண்டிய சூழல் வந்துவிடும். வித்தியாசமான வில்லன் அல்லது குணச்சித்திர அப்பா கேரக்டர்களை இனிமேலாவது இவர் பரிசீலிக்கலாம்.

ரிட்டையர்ட் ஆகிப்போன வில்லன்களான பொன்னம்பலம், சலீம்கவுஸ் ஆகியோரை மீண்டும் கொண்டு வந்திருப்பதை வைத்தே யூகிக்கலாம் இது ரொம்ப ‘நறுக்’கான பட்ஜெட் படமென்று. விளங்காத பயல்களை பெற்ற அப்பாக்கள் சொல்வார்களே “இந்த தறுதலை பொறப்பான்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு நைட் ஷோ போயிருக்கலாம்”. அப்படிக்கூட போகமுடியாத படமிது :-(