25 மே, 2012

மூங்கில் இலை காடுகளே

மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

இரவு பத்து மணிக்கு மேலே எஃப்.எம். கேட்பவர்கள் நிச்சயம் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள். ‘நல்ல பாட்டாச்சே, ஆனா என்ன படம்னு தெரியலை’ என்றும் நினைத்திருப்பீர்கள். முப்பது வயதை கடந்து காதோர நரை ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்தப் படமும் தெரியும். இந்தப் பாடலுக்கு நடித்த நடிகரையும் தெரியும்.

எண்பதுகளில் வந்த லோ-பட்ஜெட் படங்களில், அதுவும் விசு படமாக இருந்தால் நிச்சயமாக திலீப் இருப்பார். காதலனாகவும், பணக்கார இளைஞனாகவும், பாந்தமான புருஷனாகவும்.. பெரிய வெரைட்டி ஏதுமில்லாத பாத்திரங்களில் நடித்தவர். சிவந்த நிறம். பிரவுன் கண்கள். மீசையை அழகாக திருத்தியிருப்பார். இவரது ஹேர்ஸ்டைல் சிறப்பானது. உடைகள் நாகரிகமாக இருக்கும்.

மாப்பிள்ளையில் சூப்பர் ஸ்டாருக்கு மச்சானாக காமெடியில் கலக்கினார். அதற்குப் பிறகு திடீரென்று காணோம். ஏதோ பிஸினஸ் செய்துக் கொண்டிருந்தார் என்று அவ்வப்போது சினிமா துணுக்குகளில் வாசித்திருக்கிறேன். கேஸ் ஏஜென்ஸி எடுத்திருப்பதாகவும், அதில் சினிமாவை விட அதிகம் சம்பாதிப்பதாகவும் செய்திகள் வரும்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால் தினகரன் வசந்தத்தில் இவரது பேட்டி வந்திருந்தது. படத்தைப் பார்த்ததுமே ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு பெருத்துப் போய் இருந்தார். அழகான அவரது ஹேர்ஸ்டைல் மிஸ்ஸிங். புருவம் கூட நரைத்திருந்தது. வடநாட்டு முதியவர் மாதிரியான தோற்றத்தில் இருந்தார். திமிர்த்தனமாக எதிர்த்துப் பேசும் பொண்டாட்டியை பளாரென்று அறையும் அந்த கோபக்கார இளைஞனை காணவே காணோம்.

உடல் உபாதையால் பெரும் சிரமத்தில் இருப்பதாக அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதும் அவர் பேச்சில் தெரிந்தது. மீண்டும் திரையுலகில் நுழைந்து செகண்ட் இன்னிங்ஸ் ஆட தயாராக இருப்பதாக நம்பிக்கையோடு சொல்லியிருந்தார்.

இன்று அதே தினகரனின் இணையத்தளத்தில் அவரது மரணச் செய்தியை வாசித்தபோது இனம்புரியாத துன்பமும், பீதியும் ஏற்படுகிறது. நம் கண்ணுக்கெதிரே மின்னி, மறைந்த நட்சத்திரங்களின் வாழ்வை ஏதோ ஓர் ஆர்வத்தில் தெரிந்து வைத்துக் கொள்கிறோம். அவர்களது ஏற்றம் நமக்கு மகிழ்ச்சியை அளித்ததோ இல்லையோ, இறக்கம் வருத்தத்தை நிச்சயம் தருகிறது. மரணம் கடுமையான துன்பத்தை ஏற்படுத்துகிறது. மரணம் குறித்த நியாயமான அச்சம், இதுபோன்ற மரணங்களை கேள்விப்படும்போது பன்மடங்கு அதிகரிக்கிறது.

முன்பாக பாண்டியன், முரளி போன்றவர்களின் மரணம் இம்மாதிரியான பீதியை கடுமையாக ஏற்படுத்தியது. போனவாரம் கூட யதேச்சையாக ஏதோ ஒரு டீக்கடையில் ‘துள்ளி எழுந்தது காற்று, சின்ன குயிலிசை கேட்டு’ கேட்டபோது, என்னையறியாமலேயே சிலதுளி கண்ணீர் சிந்தினேன். நாம் பார்த்து, பழகியிராதவர்களுக்கு அழுகிறோமென்றால் அவர்கள் நம்முடைய சிறுவயது நினைவடுக்குகளில் புதைந்துப் போனவர்கள் என்பதே காரணமாக இருக்கக்கூடும். நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

அடுத்தமுறை எங்காவது ‘மூங்கில் இலை காடுகளே’ கேட்கும்போதும் இதேபோல என் கண்களில் ஈரம் கசியும் என்பது நிச்சயம்.

24 மே, 2012

பெட்ரோல், ஐ.பி.எல்

பெட்ரோல் விலை உயர்வு ஏன் என்று இன்றோ, நாளையோ மன்மோகன்சிங்கோ, ப.சிதம்பரமோ அல்லது யாரோ விளக்கம் அளிக்கப் போகிறார்கள். மம்தா, ஜெயலலிதா வழக்கம்போல எதிர்த்திருப்பார்கள். வைகோவின் அறச்சீற்ற எதிர்ப்பு நாளிதழ்களின் ஆறாம் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக வரும். எதிர்க்கிறாரா இல்லையா என்கிற குழப்பம் கலைஞரின் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பத்து பேர் கூடும் மாபெரும் அறப் போராட்டத்தை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தும். பூப்புனித நீராட்டு விழா மாதிரி இதெல்லாம் வழக்கமாக நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள்.

இருபத்து மூன்றாம் புலிகேசி பரம்பரையில் வந்த நமக்கு இந்த சடங்குகளில் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. அடுத்த முறை பெட்ரோல் போடும்போது மட்டும் இதற்கு காரணமானவர்களின் தாயின் கற்பை பழித்துவிட்டு, பிற்பாடு மறந்துபோய்விடுவோம். ஆனால் பெட்ரோல் விலை உயர்வு என்று கேள்விப்பட்டதுமே, ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தானுக்கு படையெடுத்த அமெரிக்கத் துருப்புகள் மாதிரி பெட்ரோல் பங்குக்கு படையெடுத்து பெட்ரோல் போடுபவர்களின் தாலியறுத்து, மொத்த பெட்ரோலையும் தீர்த்து ‘பெட்ரோல்’ ஸ்டாக் இல்லை என்று பங்க் ஓனரை போர்டு மாட்டவைத்து, பங்குகளின் வாசலில் நீண்ட க்யூவில் கசகசவென நின்று, சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கோயிந்தசாமிகளை பிடித்து குப்புறப் படுக்கவைத்து நாலு சாத்து சாத்தலாமா என்றுதான் ஆத்திரம் வருகிறது.
இரவு 12.01க்கு பெட்ரோல் ரூ.7.50 ஏறுகிறது என்றால், பதினோரு மணிக்கு போய் பெட்ரோல் போட்டு பணத்தைச் சேமித்து பங்களாவா கட்டிதொலைக்கப் போகிறார்கள். ஏழரை ரூபாய்க்கு ஒரு கிங்ஸும், சாந்தி பாக்கும் கூட கிடைக்காது என்று தெரியாத அறிவிலிகளா நம் மக்கள். மிஞ்சிப்போனால் ஒரு டூவீலரை கொண்டுபோய் மூன்று லிட்டர் போடுவார்களா. இருபத்து இரண்டு ரூபாய் பைசா மிச்சப்படுத்தி எலெக்‌ஷனில் நின்று வாக்காளர்களுக்கா துட்டு கொடுக்கப் போகிறார்கள். நம் ஜனங்களின் மிடில் க்ளாஸ் அற்பத்தனத்துக்கு ஓர் அளவேயில்லையா?

நம் சமகாலத்தில் நாம் பார்க்கும் மிகப்பெரிய அநியாயம் மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து அடிக்கும் கொள்ளையென்றால், அதற்கு நம் மக்கள் கொடுக்கும் உடனடி ரியாக்‌ஷன்தான் மிகப்பெரும் அபத்தம்.


போட்டோ உதவி : தோழர் கவாஸ்கர்


*************************

ஐ.பி.எல். திட்டமிட்டு படமாக்கப்படும் ஒன்றரை மாத மெகாசீரியல் என்கிற மனோபாவத்துக்கு எப்போதோ வந்துவிட்டாலும், வாய் நமநமவெனும் போதெல்லாம் மாணிக்சந்த் போடுவதைப் போல ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல்.லுக்கு அடிக்ட் ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. இறுதிப் போட்டியும், அதற்கு முந்தையப் போட்டியும் சென்னையில் நடக்கிறது என்பதால் மற்ற அணிகள் போட்டி போட்டு கஷ்டப்பட்டு தோற்று, சென்னையை ஃபைனலுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்ததை காணும்போது, ‘அடடா.. இதுவல்லவா விளையாட்டு?’ என்று தோன்றுகிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சில சமயங்களில் மைதானத்தை தாண்டிய ஓரிரு சுவாரஸ்யங்கள் ஐ.பி.எல்.லை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மும்பை வீரர் போலார்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) சென்னை வீரர் பிராவோவுக்கு (இவரும் மேற்கிந்தியத் தீவுகள்தான்) முந்தாநாள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாராம். “மூட்டை கட்டிக்கொண்டு ரெடியாக இரு. நாளைய போட்டியில் சென்னை தோற்றதும் நீ விமானம் பிடித்து நம்மூருக்கு செல்லவேண்டும்”. பிராவோவுக்கு சமர்த்து போதாது. பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை.

மாறாக நேற்றையப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் போலார்டின் விக்கெட்டை பிராவோ வீழ்த்தினார். தலையை தொங்கப் போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த போலார்டிடம் பிராவோ நேரடியாக சொல்கிறார். “தம்பி, நேரா போய் மூட்டை முடிச்சுகளை ரெடி பண்ணு. இன்னிக்கு நைட்டே கூட நம்மூருக்கு ஃப்ளைட் பறக்குதாம்”. பீமன் சைஸில் இருக்கும் போலார்ட், அவருக்கு எதிரில் தத்தணூண்டாக தெரியும் பிராவோவை உடனடியாக ஒரு அப்பு அப்பியிருந்தால் இன்னும் ஆட்டம் களைகட்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக போலார்ட் ஹர்பஜன்சிங்கும் அல்ல. பிராவோ, வாயை மட்டுமே வைத்து கிரிக்கெட்டில் காலம் தள்ளும் ஸ்ரீசாந்துமல்ல.

22 மே, 2012

+2


+2 ரிசல்ட் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பரபரப்பை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அலுவலகத்தில் கணினி இருக்கும் எல்லோரது மேஜையும் காலையிலேயே பரபரப்பாக இருக்கும். அலுவலக உதவியாளர்களில் ஆரம்பித்து மேலதிகாரிகள் வரையும் கூட “என் மச்சினிச்சி எழுதியிருக்கா, இந்தாங்க நம்பர், பாஸ் பண்ணிட்டிருப்பா.. ஆனா மார்க் என்னன்னு பாருங்க” என்பார்கள். நான் +2 தேர்வெழுதியபோது இணையம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. மாலைமுரசு அல்லது மாலைமலர் சிறப்பு பதிவைப் பார்த்துதான் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய சூழலில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாருமே தேறிவிடுகிறார்கள். அப்போதெல்லாம் பத்துக்கு மூன்று பேர் அல்லது நாலு பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிடுவார்கள். மறுநாள் காலை தினத்தந்தி பார்த்தால் ”மாணவன் தற்கொலை - பெற்றோர் கதறல்!” ரீதியிலான செய்திகளை நிறைய பார்க்கமுடியும்.

பலவருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்புகிறார். அவர் நாலு, நாலரைக்கெல்லாம் எழுந்து கார்த்திகேயபுரம் பால் பூத்துக்கு சென்று பால் வாங்கிவருவது வழக்கம். நானோ ஏழரை, எட்டு மணிக்கு எழுந்து “அம்மா காப்பி ரெடியா?” என்று கேட்பேன்.

“சீக்கிரம் எழுந்திருடா. இன்னைக்கு உனக்கு ரிசல்ட் வருது!”

“ரிசல்ட் பதினொரு மணிக்கு தாம்பா வரும். கொஞ்ச நேரம் தூங்குறேனே?”

“ச்சீ.. இன்னைக்கு கூட இவனுக்கு தூக்கமா? புள்ளைய பெத்துக்கறதுக்கு பதிலா ஒரு தொல்லைய பெத்து வெச்சுருக்கேன்! எழுந்துர்றா.. கோயிலுக்கு போவணும்!”

வேண்டாவெறுப்பாக எழுந்தேன். குளித்து முடித்து அப்பாவின் சொல்படி பட்டை அடித்துக்கொண்டு தாத்தா - பாட்டி படம் முன்னால் நின்று பிரார்த்தனை செய்தேன். சாமி படங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அப்போதே எனக்குள் கடவுள் மறுப்பு சிந்தனை இருந்திருக்கிறது என்பதை நினைத்தால் இப்போது பெருமையாக இருக்கிறது. கல்யாண கந்தசாமி கோயிலுக்கு சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போனார் அப்பா.

“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.

நான் ஒழுங்காக எழுதி இருந்தால் பாஸ் செய்யப்போகிறேன். இதற்கு போய் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாரே அப்பா என்று கோபம் வந்தது. வேண்டா வெறுப்பாக நவக்கிரகங்களை அப்பாவோடு சுற்றினேன். கோயிலில் என்னைப் போல நிறைய மாணவர்களும், மாணவிகளும்.. என் அப்பாவைப் போல நிறைய அப்பாக்களும் வந்திருந்தார்கள். அன்றைக்கு கல்யாண கந்தசாமிக்கும், அர்ச்சனை செய்த அய்யருக்கும் நல்ல வசூல்.

வீட்டுக்கு திரும்பும் வழியில் மூர்த்தி எதிர்பட்டார். அவர் ஒரு ஈழத்தமிழர். எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தார். சிறுவயதில் எப்போதோ ஒருமுறை அவரிடம் ”பெரியவன் ஆகி பிரபாகரன் மாதிரி துப்பாக்கியெல்லாம் வெச்சுப்பேன், கெட்டவங்களை சுடுவேன்” என்று சொல்லியிருந்தேன். அதனால் அவருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.

“என்ன சார்? குமாருக்கு இன்னைக்கு ரிசல்ட்டா?” ஜாலியாக கேட்டார்.

“ஆமாம் மூர்த்தி. பையன் விளையாட்டுப் பையன் தான்னாலும், எப்படியாவது பாஸ் பண்ணிடுவான்!”

அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப். தமிழ், ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து காமர்ஸ், எகனாமிக்ஸ், மேத்ஸ், அக்கவுண்டன்ஸி சப்ஜெக்டுகள் இருந்தது. பத்தாவது வரை தமிழ்வழிக்கல்வி படித்திருந்த என்னை தேவையில்லாமல் +1 சேரும்போது ஆங்கிலவழிக்கு மாற்றியிருந்தார் அப்பா.

தமிழைப் பொறுத்தவரை எனக்கு பிரச்சினையில்லை. தமிழில் நான் தோல்வியடைந்தால் தான் அது அதிசயம். ஆங்கிலமும் பரவாயில்லை. காமர்ஸ், எகனாமிக்ஸ் இரண்டுமே கதை எழுதி சமாளித்துவிட்டேன். அக்கவுண்டன்ஸி பிட் அடித்திருந்தேன். மேத்ஸ் மட்டுமே எனக்கு பெருத்த சந்தேகத்தை விளைவித்தது, இரண்டு ஆண்டுகளாக மேத்ஸ் க்ளாஸ் அட்டெண்ட் செய்ததாக நினைவில்லை, ட்யூஷனும் வைத்துக்கொள்ளவில்லை. தேர்வெழுதும் போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆனந்தராஜ் ஒழுங்காக எழுதியிருந்தான் என்றால் நான் தேறிவிடுவேன், என்னைப் பார்த்து எழுதிய சிவராமனும் தேறிவிடுவான்.

எட்டு மணிக்கு அப்பா அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார். பதினொரு மணிக்காக நான் காத்திருக்க ஆரம்பித்தேன். மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு பதினொரு மணிக்கு மாலைமுரசு வந்துவிடும். ஆனால் பத்தரை மணிக்கே செயிண்ட்தாமஸ் மவுண்டுக்கு பேப்பர் வந்துவிடும். சைக்கிளை எடுத்துக்கொண்டு செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு சென்று பேப்பரை வாங்கிவிட தீர்மானித்தேன். உதவிக்கு பக்கத்து வீட்டு கோபாலையும் அழைத்துக் கொண்டேன்.

பத்தேகால் மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன். அங்கிருந்த நியூஸ் பேப்பர் ஸ்டால் முன் பெரிய கூட்டம். ரஜினிபடத்தை முதல் நாள் பார்க்க க்யூவில் நிற்பதைப் போல டென்ஷன். பத்தரை மணிக்கு மாலைமலர் வந்தது. காசுகொடுத்து வாங்கிய பேப்பர் கசங்கி இருந்தது கொஞ்சம் கடுப்படித்தது. செங்கை-எம்.ஜி.ஆர் மாவட்ட முடிவுகளை பார்க்கத் தொடங்கினேன். என் ரெஜிஸ்டர் எண்ணை நினைவில் வைத்திருந்தாலும், பதட்டத்தில் மறந்துவிடுவேனோ என்று கையிலும் எழுதி வைத்திருந்தேன். கோபாலும் ஆர்வத்தோடு எண்களை பார்த்துக்கொண்டே வந்தான்.

ம்ஹூம்... என் எண் மட்டுமல்ல, என் எண்ணுக்கு அருகிலிருந்த பல எண்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தால் தானே தெரிவதற்கு? வாழ்க்கையிலே முதல் தடவையாக பெரிய தோல்வி. விளையாட்டில் கூட தோற்க விரும்பாத என் மனம் உடைந்து, கண்கள் கலங்கியது. அப்பா எப்படியும் ரிசல்ட் பார்த்திருப்பார். வீட்டுக்கு வந்து மிதிப்பாரா தெரியவில்லை. அப்பா அடிப்பாரோ இல்லையோ கண்டிப்பாக அம்மாவிடம் அடி உண்டு.

சோர்வாக சைக்கிளை மிதித்தேன். என்னைவிட கோபாலுக்கு தான் சோகம் அதிகமாக இருந்தது. வரும் வழியில் ஒரு சூப்பர் ஃபிகர் அவள் அம்மாவோடு எதிரில் வந்துகொண்டிருந்தாள். “தம்பி! ரிசல்ட்டு தானே? கொஞ்சம் பேப்பர் காட்டுப்பா!” என்று அத்தை (அழகான பெண்ணுக்கு அம்மாவெல்லாம் நமக்கு அத்தைதானே?) கேட்க, தாராளமாக பேப்பரை கொடுத்தேன். ஃபிகர் ஆர்வத்தோடு அது எண் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தது.

“அம்மா. நான் பாஸ் ஆயிட்டேன்!” குதூகலமாக அந்த ஃபிகர் சொல்ல, எனக்கு வெறுப்பாக இருந்தது. போலியாக சிரித்தேன்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ பாஸ் ஆயிட்டியா?” அத்தை கேட்க, ஃபிகர் எதிரில் என் கவுரவத்தை காத்துக் கொள்வதற்காக “பாஸ் ஆயிட்டேங்க..” என்று பொய் சொன்னேன்.

நான் ஃபெயில் ஆனது குறித்து கூட எனக்கு பதட்டமில்லை, என்னோடு ஒண்ணாம் வகுப்பில் இருந்து கூட படித்த செந்தில் பாஸ் ஆகியிருக்கக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிகொண்டேன். அவனுடைய எண் வேறு எனக்குத் தெரியாது. நேராக செந்தில் வீட்டுக்கு சைக்கிளை விட்டேன். நல்லவேளையாக வீட்டில் தான் இருந்தான்.

"மச்சான்.. பேப்பர் வந்துடிச்சாடா?” ஆர்வத்தோடு கேட்டான்.

“ம்ம்.. வந்துருச்சிடா.. உன் நம்பர் என்ன?”

“நானே பார்த்துக்கறேன். கொடுடா!” என்றான். அவனுடைய அம்மா எட்டிப் பார்த்தார்.

”கிருஷ்ணா.. நீ பாஸ் ஆயிட்டியாடா?” அம்மா நிலைமை புரியாமல் கேள்வி கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல், செந்தில் ரிசல்ட் என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையே பரவாயில்லை. செந்தில் தேடிக்கொண்டே இருந்தான். இருந்த எல்லாப் பக்கங்களையும் புரட்டி, புரட்டி தேடினான். திருவண்ணாமலை மாவட்ட தேர்வு முடிவுகளையெல்லாம் கூட தேடிப் பார்த்தான்.

“மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”

“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!

“செந்திலு! என்னாடா ஆச்சி?” செந்தில் அம்மா கேட்டார்.

“பார்த்துக்கிட்டே இருக்கேம்மா!”

“எத்தனை தடவை பார்த்தாலும் நம்பர் இருந்தாதானேடா தெரியும்?”

செந்திலுக்கு சொல்ல விடையேதும் இல்லை. எங்கள் வகுப்பில் இருந்த இருபத்தாறு பேர்களில் பத்தொன்பது பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவித்தது. பரவாயில்லை மெஜாரிட்டி எங்கள் பக்கம் தான்.

ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.

21 மே, 2012

ராட்டினம்



‘யதார்த்தம், விளிம்புநிலை’ ஆகிய இரண்டு சொற்களை தமிழகராதியில் இருந்து நீக்கினால்தான் தமிழ் சினிமா உருப்படும் என்று தோன்றுகிறது. யதார்த்தமாக எடுக்கிறோம் என்கிற பெயரில் வருடா வருடம் எடுக்கப்படும் தலா நாற்பது மொக்கைப்படங்களில் ஒன்றுதான் ராட்டினமும்.

சுப்பிரமணியபுரம் பாணியில் க்ளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட். அதற்கு முன்னால் ஒரு ஷாக். ஒரு யதார்த்த சினிமாவுக்கு இது போதுமென இயக்குனர் முடிவுகட்டி விட்டது பார்வையாளர்களின் துரதிருஷ்டம். இந்த ட்விஸ்ட்டையும், ஷாக்கையும் மட்டுமே தயாரிப்பாளரிடம் கதையாக சொல்லி ‘சான்ஸ்’ வாங்கிவிட்டிருப்பார் போலிருக்கிறது. ‘காதல்’ பார்த்துவிட்டு, அதை பீட் செய்யும்விதமாக ஒரு படைப்பை தரவேண்டும் என்கிற இயக்குனரின் ஆர்வம் நமக்கு புரிகிறது. அதற்காக காதலையேவா மறுபடியும் மோசமாக பிரதியெடுப்பது? அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, லொட்டு லொசுக்கு என்று பிழிந்துப் பிழிந்து டீனேஜ் காதலை படமாக்கிய நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களில் வந்த சப்பைக் காட்சிகளின் மொக்கைத் தொகுப்பாகவே ராட்டினம் இருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த டீமுமே ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளிலிருந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து இப்போதுதான் படமெடுக்கிறார்கள் போலிருக்கிறது. மொத்தமாக சொல்ல வேண்டுமானால் புளித்துப்போன பழங்கஞ்சி.

ஹீரோ லகுபரனுக்கு விஜயாக உருவெடுப்பதா, கார்த்தியாக உருவெடுப்பதா என்கிற குழப்பம் இருந்திருக்கிறது. நடிப்பென்றால் லிட்டருக்கு எவ்வளவு என்று கேட்கும் விஜயின் அசமஞ்சத்தனத்தை முகத்திலும், உடை மற்றும் தோற்றத்தில் கார்த்தியையும் ‘பிட்டு’ அடிக்கிறார். க்ளைமேக்ஸில் ஒரு ஃப்ரேம் போட்ட கண்ணாடியை மாட்டிக் கொண்டால் நடுத்தர வயது குடும்பஸ்தனாகிவிடலாம் என்று ஐடியா கொடுக்கும் காஸ்ட்யூமர்களின் அறிவே அறிவு.

ப்ளஸ் டூ படிக்கும் பெண்தான் வேண்டும் என்று தேடித்தேடி ஸ்வாதியை செலக்ட் செய்தாராம் இயக்குனர். ஹீரோவுக்கு சித்தி மாதிரி இருக்கிறார் ஹீரோயின். கொடுமை சாமி. வயசுக்கு வந்து பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிய பெண்களை எல்லாம் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு மாணவியாக நடிக்க வைக்கும் தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது இ.பி.கோ செக்‌ஷன் 304(2)-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு தொடர வேண்டும்.

படத்தின் இசையமைப்பாளர், அந்தக் காலத்தில் கே.வி.மகாதேவனிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றி அவருக்கு இப்போதுதான் சான்ஸ் கிடைத்திருக்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது. அடிக்கடி அவர் போடும் ‘தான்னன்னா’ மியூசிக்கில் தாவூ தீருகிறது.

சரியாக சொல்லப்போனால் இரண்டரை வருடங்களுக்கு இழுக்கப்பட வேண்டிய பாடாவதி மெகாசீரியல் ஒன்றினை இரண்டரை மணி நேரத்துக்கு எடிட்டி சாவடித்திருக்கிறார்கள். சாதாரண நடையில் வசனம் எழுதிவிட்டு, எல்லாவற்றுக்கும் பின்னால் ‘லே’ போட்டுவிட்டால் தூத்துக்குடி பாஷையாகிவிடும் போல. ‘லே’வுக்கு பதில் ‘லூ’ போட்டு டப்பிவிட்டால் தெலுங்கிலும் கல்லா கட்டலாம். வக்கீல் மாமா, திரேஸ்புரத்துக்காரி, ஹீரோவின் அண்ணி என்று சிலர் யதார்த்தமாக(!) இருக்கிறார்கள் என்று கஷ்டப்பட்டு தேடினால் மட்டுமே ஓரிரண்டு சமாச்சாரங்கள் படத்தை பாராட்ட கிடைக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை சாட்டை கொண்டு விளாசக்கூடாது என்பது குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் கொள்கை. குமுதத்தின் கொள்கைகளை முடிந்தவரை கடைப்பிடிப்பவன் என்றாலும் ரொம்ப ரொம்ப சுமாரான இந்தப் படத்தை மீடியாக்களும், இணையதள விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் ‘ஆஹா, ஓஹோ’வென அர்த்தமேயில்லாமல் தூக்கிவைத்து கொண்டாடுவதில் ஏற்படும் எரிச்சலில் இம்மாதிரி எழுத வேண்டியிருக்கிறது. அசட்டுத்தனமாக இருப்பதே நம்மூரில் அறிவுஜீவித்தனமாக பார்க்கப்படுகிறது. ஊன்னா தான்னா பரிந்துரைக்கும் படங்கள் என்றுமே உருப்படாது என்பதற்கு மீண்டும் நல்ல எடுத்துக்காட்டு.

18 மே, 2012

கலகலப்பு


தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர்.சி-க்கு சினிமாவில் இருந்த மவுசு இன்றைக்கும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே ஒரு ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை இட்டுச்சென்ற உயரம் அப்படியானது. அடுத்தடுத்து வந்த மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களெல்லாம் ‘சுந்தர்.சி’ என்கிற பிராண்டுக்காகவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. என் சமவயதுள்ள தோழர்களுக்கு சுந்தர்.சி நடிக்க வருவதற்கு முன்பே ஹீரோ. அவர் இயக்கிய இருபத்தைந்து படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். ‘அருணாச்சலம்’ மட்டுமே சுந்தர்.சி-க்கு திருஷ்டிப்படிகாரம் என்பது என் எண்ணம்.

இத்தனை ஆண்டுகளில் சுந்தர்.சி கொஞ்சமும் மாறவேயில்லை என்பது கலகலப்பு பார்க்கும்போது தெரிகிறது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கொஞ்சம்கூட வளரவில்லை என்றும் சொல்லலாம். அதே உருட்டுக்கட்டை, அதே சேஸிங், அதே லாஜிக்லெஸ் சீன்கள், அதே வசன-வார்த்தைக் குழப்பங்கள்... உள்ளத்தை அள்ளித்தா பார்முலாவில் இத்தனைப் படம் எடுத்தும் இன்னும் அலுக்காமல், அதையே தொடர்ச்சியாக, ஆர்வமாக அவர் எடுத்துக் கொண்டிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.

‘கலகலப்பு’ 1996ல் வெளியான படத்தை பார்ப்பதைப் போன்ற உணர்வினைக் கொடுக்கிறது. இடைபட்ட ஆண்டுகளில் தமிழ் திரையுலகம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதையுமே இயக்குனர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விமர்சனமாக சொல்லவேண்டும் என்றால் சுந்தர்.சி அப்டேட்டாக இல்லை. ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில்குமாரும் அதேகாலத்து தொழில்நுட்பத்தில் முடங்கிவிட்டார் போல. படத்தின் எடிட்டர் கழுவப்பட்ட நெகட்டிவ்களை கத்திரிக்கோலால் வெட்டி, செலபன் டேப் ஒட்டி எடிட்டியிருப்பார் போலிருக்கிறது. இசையும் தொண்ணூறுகளின் இசைதான். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்ததும் காலயந்திரத்தில் பயணித்து பதினைந்து ஆண்டுகள் முன்பாக போய்விட்டது மாதிரி ஃபீலிங்.

ஆனால், இந்தப் பிரச்சினை எதுவுமே ‘கலகலப்பின்’ கலகலப்பை குறைக்கவில்லை. சுந்தர்.சி-யின் படங்கள் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆவதைப் போல ரொம்ப ஸ்லோவாகவே ஆரம்பிக்கும். நான்கைந்து காட்சிகளுக்குப் பிறகு பிடிக்கும் சூடு, அப்படியே பிக்கப்பாகி க்ளைமேக்ஸில் பிரமாதமாக வெடிக்கும். கலகலப்பும் அந்த ஃபார்முலாவுக்கு விதிவிலக்கல்ல. படம் முழுக்க காரணமேயில்லாமல் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துவிட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ‘ஏன் சிரித்தோம், அப்படி என்ன பிரமாதமான காமெடி?’ என்று தோன்றுகிறது. அதனாலென்ன? ரெண்டு மணிநேரம் வாய்விட்டு சிரித்திருக்கிறோமில்லையா? டிக்கெட்டுக்கு கொடுத்த காசு கண்டிப்பாக செரிக்கும்.

படத்தில் எல்லா சமாச்சாரங்களுமே எல்லாமே அவுட் ஆஃப் பேஷன் என்றாலும், ‘நங்’கென்று புதுசாக ஒரு ‘மேட்டரை’ இறக்கியிருப்பதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. சுடிதாரிலும், தாவணியிலும் டீசண்ட் ஃபிகராகவே செட்டில் ஆகிவிட்ட அஞ்சலியை பிரமாதமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் காட்டன் புடவையில் வந்தாலும் கூட செம்ம நாட்டுக் கட்டையாகவே தெரிகிறார். இதுவரை எந்த இயக்குனரும் படம்பிடித்திராத லொக்கேஷனான அஞ்சலியின் பேரெழில் தொப்புளை, வாஸ்கோடகாமா கணக்காக கண்டுபிடித்து படமாக்கியிருப்பதில் சபாஷ் வாங்குகிறார் சுந்தர்.சி. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலுமே முக்கால் சாண் இறக்கியே கொசுவம் வைத்திருக்கிறார் அஞ்சலி. இவரது தொப்புள் இயற்கையான தொப்புள்தானா அல்லது கூடுதல் கவர்ச்சிக்காக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்களா என்கிற குழப்பம் இந்த நொடி வரை எனக்கு நீடிக்கிறது.

அஞ்சலியின் கவர்ச்சி பாராட்டப்பட வேண்டியது என்றால் ஓவியாவின் கவர்ச்சி கண்டிக்கப்பட வேண்டியது. சில காட்சிகளில் அவரது முகம் அழகாக இருக்கிறது. பல காட்சிகளில் ரொம்பவே சுமாராக இருக்கிறார். சாமுத்ரிகா லட்சணம், காமசூத்ரா லட்சணம் என்று எந்த லட்சணத்தின்படி பார்த்தாலும் இப்படியொரு உடல்வாகு ஒரு பெண்ணுக்கு அமைய வாய்ப்பேயில்லை. அவ்வளவு பூஞ்சையான உடம்புக்கும், உடைந்துவிடும் மாதிரி ஒல்லியான இடைக்கும் எப்படி அவ்வளவு பெரிய...? so confusing.

சந்தானம் அலுக்கிறார். விரைவில் அடுத்த விவேக் ஆகிவிடக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதுபோலவே விமலும் கூட முன்பு எல்லா பாரதிராஜா படங்களிலும் இடம்பெறும் ராஜா என்கிற நடிகர் போல் ஆகிவிடுவார் எனத்தெரிகிறது. இன்னொரு ஹீரோவான சிவா அநியாயம். கம்மி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டதைப் போல ஏனோ, தானோவென்று நடித்திருக்கிறார்.


யோசித்துப் பார்த்தால் இது மொக்கைப்படம். ஆனாலும் இன்னொரு முறை தியேட்டருக்குப் போய் பார்க்கத் தோன்றுகிறது.