21 மே, 2012

ராட்டினம்



‘யதார்த்தம், விளிம்புநிலை’ ஆகிய இரண்டு சொற்களை தமிழகராதியில் இருந்து நீக்கினால்தான் தமிழ் சினிமா உருப்படும் என்று தோன்றுகிறது. யதார்த்தமாக எடுக்கிறோம் என்கிற பெயரில் வருடா வருடம் எடுக்கப்படும் தலா நாற்பது மொக்கைப்படங்களில் ஒன்றுதான் ராட்டினமும்.

சுப்பிரமணியபுரம் பாணியில் க்ளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட். அதற்கு முன்னால் ஒரு ஷாக். ஒரு யதார்த்த சினிமாவுக்கு இது போதுமென இயக்குனர் முடிவுகட்டி விட்டது பார்வையாளர்களின் துரதிருஷ்டம். இந்த ட்விஸ்ட்டையும், ஷாக்கையும் மட்டுமே தயாரிப்பாளரிடம் கதையாக சொல்லி ‘சான்ஸ்’ வாங்கிவிட்டிருப்பார் போலிருக்கிறது. ‘காதல்’ பார்த்துவிட்டு, அதை பீட் செய்யும்விதமாக ஒரு படைப்பை தரவேண்டும் என்கிற இயக்குனரின் ஆர்வம் நமக்கு புரிகிறது. அதற்காக காதலையேவா மறுபடியும் மோசமாக பிரதியெடுப்பது? அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, லொட்டு லொசுக்கு என்று பிழிந்துப் பிழிந்து டீனேஜ் காதலை படமாக்கிய நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களில் வந்த சப்பைக் காட்சிகளின் மொக்கைத் தொகுப்பாகவே ராட்டினம் இருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த டீமுமே ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளிலிருந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து இப்போதுதான் படமெடுக்கிறார்கள் போலிருக்கிறது. மொத்தமாக சொல்ல வேண்டுமானால் புளித்துப்போன பழங்கஞ்சி.

ஹீரோ லகுபரனுக்கு விஜயாக உருவெடுப்பதா, கார்த்தியாக உருவெடுப்பதா என்கிற குழப்பம் இருந்திருக்கிறது. நடிப்பென்றால் லிட்டருக்கு எவ்வளவு என்று கேட்கும் விஜயின் அசமஞ்சத்தனத்தை முகத்திலும், உடை மற்றும் தோற்றத்தில் கார்த்தியையும் ‘பிட்டு’ அடிக்கிறார். க்ளைமேக்ஸில் ஒரு ஃப்ரேம் போட்ட கண்ணாடியை மாட்டிக் கொண்டால் நடுத்தர வயது குடும்பஸ்தனாகிவிடலாம் என்று ஐடியா கொடுக்கும் காஸ்ட்யூமர்களின் அறிவே அறிவு.

ப்ளஸ் டூ படிக்கும் பெண்தான் வேண்டும் என்று தேடித்தேடி ஸ்வாதியை செலக்ட் செய்தாராம் இயக்குனர். ஹீரோவுக்கு சித்தி மாதிரி இருக்கிறார் ஹீரோயின். கொடுமை சாமி. வயசுக்கு வந்து பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிய பெண்களை எல்லாம் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு மாணவியாக நடிக்க வைக்கும் தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது இ.பி.கோ செக்‌ஷன் 304(2)-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு தொடர வேண்டும்.

படத்தின் இசையமைப்பாளர், அந்தக் காலத்தில் கே.வி.மகாதேவனிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றி அவருக்கு இப்போதுதான் சான்ஸ் கிடைத்திருக்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது. அடிக்கடி அவர் போடும் ‘தான்னன்னா’ மியூசிக்கில் தாவூ தீருகிறது.

சரியாக சொல்லப்போனால் இரண்டரை வருடங்களுக்கு இழுக்கப்பட வேண்டிய பாடாவதி மெகாசீரியல் ஒன்றினை இரண்டரை மணி நேரத்துக்கு எடிட்டி சாவடித்திருக்கிறார்கள். சாதாரண நடையில் வசனம் எழுதிவிட்டு, எல்லாவற்றுக்கும் பின்னால் ‘லே’ போட்டுவிட்டால் தூத்துக்குடி பாஷையாகிவிடும் போல. ‘லே’வுக்கு பதில் ‘லூ’ போட்டு டப்பிவிட்டால் தெலுங்கிலும் கல்லா கட்டலாம். வக்கீல் மாமா, திரேஸ்புரத்துக்காரி, ஹீரோவின் அண்ணி என்று சிலர் யதார்த்தமாக(!) இருக்கிறார்கள் என்று கஷ்டப்பட்டு தேடினால் மட்டுமே ஓரிரண்டு சமாச்சாரங்கள் படத்தை பாராட்ட கிடைக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை சாட்டை கொண்டு விளாசக்கூடாது என்பது குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் கொள்கை. குமுதத்தின் கொள்கைகளை முடிந்தவரை கடைப்பிடிப்பவன் என்றாலும் ரொம்ப ரொம்ப சுமாரான இந்தப் படத்தை மீடியாக்களும், இணையதள விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் ‘ஆஹா, ஓஹோ’வென அர்த்தமேயில்லாமல் தூக்கிவைத்து கொண்டாடுவதில் ஏற்படும் எரிச்சலில் இம்மாதிரி எழுத வேண்டியிருக்கிறது. அசட்டுத்தனமாக இருப்பதே நம்மூரில் அறிவுஜீவித்தனமாக பார்க்கப்படுகிறது. ஊன்னா தான்னா பரிந்துரைக்கும் படங்கள் என்றுமே உருப்படாது என்பதற்கு மீண்டும் நல்ல எடுத்துக்காட்டு.

8 கருத்துகள்:

  1. ந்த படத்த ஜெர்மனி பிலிம் festivalku செலக்ட் பண்ண அறிவாளி suhasini....

    பதிலளிநீக்கு
  2. அப்போ ஒரு ரெண்டரை மணி நேரத்த வேஸ்ட் பண்ண வேணாங்கறீங்க ஓக்கெ!!

    பதிலளிநீக்கு
  3. அளவுக்கு மீறிக் கடுப்பேத்திட்டாங்களா யுவர் ஆனர்?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா9:02 PM, மே 21, 2012

    அன்புள்ள யுவக்ருஷ்ணா,
    நீங்கள் ஒருவர் தான் உண்மையான விமர்சனம் எழுதி உள்ளீர்கள். பல பேர் படத்த பார்க்காமலே விமர்சனம் எழுதுறாங்க போல. தமிழ் சினிமாவில் கடந்த வருசமா வர்ற அதே கதையை வச்சுக்கிட்டு படத்த கொடுத்த அதுக்கு பேரு ஒலக படம், யதார்த்த படம்னு ஊளையிட்டுகொண்டு இருக்கிறார்கள்.
    by D.Shankar

    பதிலளிநீக்கு
  5. ஏன் இந்த கொலைவெறி.. மசாலா தெலுகு படத்துக்கு ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதிடுட்டு.. ஓரளவுக்கு ஓகே வ இருக்கற படத்தை இப்படி போட்டு ஓட்டனும்.. இதுல ஏதோ உள் குத்து இருக்கிற மாதிரி தெரிகிறது.. ந்ளல்ல இருந்தா சரி..

    பதிலளிநீக்கு
  6. என்ன யுவா

    எப்பவும் இந்த அளவு காட்டமா எழுத மாட்டீங்க... என்ன ஆச்சு...

    பதிலளிநீக்கு
  7. I love that comment.. Yadhaartham ... Vilimbunilai.... The pasanga .... aanaa onnaaa idhaye solli savadikiraanunga....

    பதிலளிநீக்கு