8 மே, 2012

வழக்கு எண் 18/9


எக்ஸலெண்ட்... படம் பற்றி இதைவிட வேறென்ன சொல்வது? பாராட்டுவது என்றால் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும், ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

குறைகளின்றி எந்த படைப்பையும் முழுமையாக உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கும் வாய்ப்பு இருந்தால், கடவுள் இருப்பதும் உண்மையாகிவிடும். வழக்கு எண்ணும் விதிவிலக்கல்ல. ஆசையாக பெற்றெடுத்த அழகான குழந்தைக்கே ‘திருஷ்டிப் பொட்டு’ வைத்துத்தானே அழகு பார்க்கிறோம். தனக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று நம்பியோ என்னவோ, நான்கைந்து படமாக எடுக்கவேண்டிய மொத்த சரக்குகளையும் அவசரமாக வழக்கு எண்ணில் வாரி இறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

டீனேஜ்களில் இருக்கும் விளிம்புநிலை சமூக இளைஞன் – இளம்பெண். அதற்கு நேரெதிர் நிலையில் இருக்கும் அதே வயதுகளில் பணக்கார பையன் – மேல்நடுத்தர வர்க்கத்து பள்ளி மாணவி. இயல்பாக இவர்களது சிலநாள் வாழ்வை படம்பிடித்துக் காட்டியிருப்பதின் மூலம் சமூகம் எவ்வளவு பெரிய இடைவெளிகளோடு நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரியவைக்கிறார் இயக்குனர்.

சாலையோர சாப்பாட்டுக் கடையில் வேலைபார்க்கும் வேலுவின் ரிஷிமூலத்தையெல்லாம் விலாவரியாக காட்டியிருப்பதில் ஆவண நெடி அதிகம். வேலு வடநாட்டு முறுக்குக் கம்பெனியில் வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் வழக்கு எண்ணின் கதைக்கு அனாவசியம். இதெல்லாம் படத்தின் நீளத்துக்கு மட்டுமே உதவும். அக்காட்சிகள் இல்லாமலேயே அப்பாத்திரத்தின் தன்மையை பார்வையாளன் பிடித்துக் கொள்வான்.

இரண்டாம் பாதி டீனேஜ் இன்பாச்சுவேஷன் காட்சிகள் பெரும்பாலும் மிகையாக நாடகத் தன்மையோடே நகர்கிறது. பணக்காரர்கள், போலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் கெட்டவர்களாகவேதான் இருந்துத் தொலைக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் கிட்டம் இருக்கிறதா? மாணவ சமூகத்தினரிடையே செல்போன் எத்தகைய கலாச்சார எதிர்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அக்கறையோடு அணுகியிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். அதே நேரம் செல்போனால் பாசிட்டிவ் விளைவுகளே இல்லை என்று இயக்குனர் நம் தலைமீது அடித்து சத்தியம் செய்கிறாரோ என்றும் அஞ்சத் தோன்றுகிறது.

அரசியல் – காவல்துறை – முதலாளிகள் இவர்களுக்கிடையே தொடர்புக்கண்ணியாக பணம் மட்டுமில்லை, சாதியும் இருக்கிறது என்பதை விளைவுகளை எண்ணாமல் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கும் பாலாஜி சக்திவேலின் துணிச்சலை கரகோஷம் எழுப்பி வரவேற்கலாம். இதே சாதியை தனது இரண்டாவது படமான ‘காதல்’-லிலும் வம்புக்கு இழுத்திருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. தென்மாவட்டங்களில் பாலாஜி சக்திவேலை குறிவைத்து போஸ்டர்கள் ஒட்டப்படலாம்.

பாடி மவுண்ட் ரிக் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளில் அதை பயன்படுத்தி இருப்பதாக தோன்றுகிறது. அக்காட்சிகள் ஏதோ ப்ளூ மேட் போட்டு எடுத்தமாதிரியாக ஒட்டாமல் பல்லிளிக்கிறது. பின்னணி இசை கொடுமை. இதைமாதிரி தீவிர கதையம்சமுள்ள படங்களை எடுத்துவிட்டு, நேராக இளையராஜாவிடம் போய்விடலாம். கண்ணீரை துடைத்துக்கொண்டே கலக்கலாக பின்னணி அமைத்துவிடுவார்.

தியேட்டரில் பார்த்தாலும் கூட என்னவோ வீட்டில் அமர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குனர்’ பார்ப்பதைப் போன்ற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. நான்கைந்து குறும்படங்களை மொத்தமாக பார்த்ததைப் போன்ற அனுபவத்தை தருகிறது. சிக்கனமான படமாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம். வழக்கமான சினிமா ஃபீலிங் சுத்தமாக இல்லை. க்ளைமேக்ஸ் எண்டிங் பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா என்கிற பட்டிமன்றம் இன்னும் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சர்வநிச்சயமாக ‘வழக்கு எண் 18/9’ தமிழ் சினிமாவுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர். உப்புமா இயக்குனர்கள் இதை படுமோசமாக பிரதியெடுத்து அடுத்தடுத்து வெளியிடப்போகும் மொக்கைப் படங்களை நினைத்தால் இப்போதே வயித்தை கலக்குகிறது.

20 கருத்துகள்:

  1. சர்வ நிச்சயமாக இது ஒரு குறிப்பிடவேண்டிய படம்... ஆனால் ஆகச்சிறந்தப்படம் என ஏற்றுக்கொள்ள மனசு யோசிக்கிறதுதான்.. சரியான... நேர்மையான விமர்சனம் தோழர்

    பதிலளிநீக்கு
  2. இளையராஜாவிடம் போவதற்கு, இவர்களது ஈகோ இடம் கொடுப்பதில்லை யுவா.

    பதிலளிநீக்கு
  3. என்னய்யா விமர்சனம் இது


    தல சுத்துது . . .

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப லேட்டா சொல்றீங்க...நாங்கலாம் படம் பார்த்துட்டோமே

    பதிலளிநீக்கு
  5. படம் முடிந்ததும் கைதட்டி பாராட்டுவது அனிச்சையாக நடந்துவிட வேண்டும். அப்படி இந்தப் படத்திற்கு நடந்தது. அந்த வகையில் எனது மனதைக் கவர்ந்த படங்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  6. //உப்புமா இயக்குனர்கள் இதை படுமோசமாக பிரதியெடுத்து அடுத்தடுத்து வெளியிடப்போகும் மொக்கைப் படங்களை நினைத்தால் இப்போதே வயித்தை கலக்குகிறது.//

    இப்போதே வயித்தை கலக்குகிறது

    பதிலளிநீக்கு
  7. "குறைகளின்றி எந்த படைப்பையும் முழுமையாக உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கும் வாய்ப்பு இருந்தால், கடவுள் இருப்பதும் உண்மையாகிவிடும்."

    ஐயோ.... சாமி பிலோசொபி எல்லாம் பேசுது.....

    பதிலளிநீக்கு
  8. hello stop your film review. your review is very worst. I have seen this film last Friday at AGS OMR. ALL people from MNC WATCHED every one gave appaluse at climax. please stop your mokkai review.

    பதிலளிநீக்கு
  9. \\பணக்காரர்கள், போலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் கெட்டவர்களாகவேதான் இருந்துத் தொலைக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் கிட்டம் இருக்கிறதா?\\

    A.Raja, Nithayananda...ivanagallam nallavangannu solra kootam irukkunna..

    பதிலளிநீக்கு
  10. // பாடி மவுண்ட் ரிக் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளில் அதை பயன்படுத்தி இருப்பதாக தோன்றுகிறது. //

    அதே அதே... அதுக்கு பெயர் என்னன்னு தெரியாததால் என்னுடைய பதிவில் எழுதாமல் விட்டுவிட்டேன்...

    பதிலளிநீக்கு
  11. Thalaiva,
    Why this Kolaveri confusion in your review?

    பதிலளிநீக்கு
  12. எனக்கு மிகவும் படம் பிடித்துள்ளது. ஆரம்பக்காட்ச்ச்யில் காதல் படம் போல் இருக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுத்துள்ளார் என்று நினைத்தேன். நல்லவேளை இயக்குனர் அப்படி நினைக்கவில்லை என்பதை அடுத்தடுத்து வரும் காட்ச்சியில் சொல்லிவிட்டார்.

    ஆம் எல்லா அவலங்களையும் ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாலும் கடைசியில் படம் முடியும் தருவாயில் இன்றையசூல்நிலையை பார்க்க அது ஒரு கழுகு பார்வையாக அமைந்து விடுகிறது.

    ....

    ஹி ஹி ! அப்புறம் பொண்ணுங்கள கரெக்ட் பண்றதுக்கு எல்லாக்காலங்களிலும் அதே டெக்னிக் தான் கைகொடுக்கும் போலிருக்கு. நான் சொல்றது மோகன் நடித்த ''விதி'' பட காட்ச்சிகளை! ;-)

    பதிலளிநீக்கு
  13. திட்டச்சேரி ச முருகவேல்12:48 PM, மே 09, 2012

    யுவா! நீங்கள் ஆரம்பத்திலும் , இறுதியிலும் பாராட்டுகிறீர்கள், ஆனால் இடையில் இந்த செம நக்கலடிதிருக்க வேண்டியதில்லை, தவிர்த்திருக்கலாம். இந்த படம் மிக அருமையான படம், சில குறைகளிருப்பின் மிக சிறந்த படமாகவே தோன்றுகிறது. இந்த படத்தில் எவ்வளவோ Positive விசயங்களை சொல்லியிருக்கிறார், , இந்த மாதிரி போலிசும், அரசியல்வாதிகளும், கல்வியதிபர்களும், இன்னமும் இப்படியும் இருக்கத்தானே செய்கிறார்கள், இந்த கதையின் மைய கருத்தே செல்போனை பற்றியதெனும் போது, அந்த கருத்தில் குறை கண்டுபிடிதிருப்பதும் கொஞ்சம் அதிகமே. இந்த கதையை ஆவண படமாக எடுக்காமல், விறுவிறுப்பாகவும் எடுத்திருக்கும் பாலாஜி சக்திவேலை பாராட்டுவோம், அது தான் அவரின் அடுத்த நல்ல படைப்பிற்கு நாம் கொடுக்கும் அட்வான்ஸ். நன்றி - திட்டச்சேரி ச முருகவேல், ஆழ்வார்பேட்டை.

    பதிலளிநீக்கு
  14. தோழர்களே!


    படம் எக்சலெண்ட் என்று தானே சொல்லியிருக்கிறேன். ஏனிந்த கொலைவெறி? :-(

    பிரசுரிக்க முடியாத கமெண்டுகள் அயர்ச்சியடைய செய்கின்றன...

    பதிலளிநீக்கு
  15. Hey man,
    First learn to write a review with comman sense.Stop your mindless reviews atleast from now.

    பதிலளிநீக்கு
  16. சிந்திப்பவன்7:35 AM, மே 10, 2012

    இளைய கிருட்டினரே,

    நான் இதுவரை (இந்த படத்தைப்பற்றி)படித்த விமரிசனங்களில் உங்களுடையது #1.பார்த்த பிறகு உங்கள் எண்ணமே எனக்கும் தோன்றியது.அதாவது இது ஒரு நல்ல Documentary என்று.
    மிக சிறந்த நேர்மையான விமரிசனம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அண்ணே ரொம்ப வித்தியாசமா விமர்சனம் எழுதணும்னு எழுதனமாதிரி இருக்கு. மத்தபடி நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா5:34 AM, மே 15, 2012

    worst and waste review...how you and athisha...same wavelength...not good..

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா9:10 PM, மே 20, 2012

    படம் பார்த்ததும் பாராட்ட ஆசைப்பட்டிருக்கீங்க. ஆனா, வழக்கமா ராஜாவை ரிலீஸ் பண்ணதுக்கு சந்தோஷப்பட்டு பதிவு எழுதுற மாதிரி முடியாம, உங்களோட விமர்சிப்பு எல்லையை மீறிய படம் என்பது போஸ்ட் எழுத ஆரம்பித்ததும் தெரிந்திருக்கும் போல. என்ன பண்றதுன்னு தெரியாம என்னென்னவோ சொல்ல ட்ரை பண்ணி சொதப்பியிருக்கீங்க.

    யுவா..எப்பவும் போல விஜயகாந்த், திராவிட கழகம் போன்ற ஜல்லியடிப்பு போஸ்ட் போடுறதோட நிறுத்திக்கிறது உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது.

    இந்த படத்தை பார்த்துட்டு சொதப்பலாக ரிலீஸ் ஆகப்போகும் படங்களைவிட, உங்களை மாதிரி ஆட்கள் போடுற பதிவுகளை நினைத்தால் இன்னும் வயிற்றை கலக்குகிறது.

    படம் எக்சலன்ட் என்று ஒரே வரியில் முடித்திருக்கலாம்.

    இதை எப்படியும் பப்ளிஷ் பண்ண மாட்டீங்க :)

    பதிலளிநீக்கு