12 ஜூன், 2012

உலகம் சுற்றும் வாலிபன்


'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம். தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
 இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
 * இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
 * தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
 * லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
 * மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
 * சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
 * இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
 * வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை. சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
 * படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
 * "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
 * பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
 * தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
 * படத்தின் படப்பிடிப்பின் போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
 * படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
 * கடைசியாக ராஜூ கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு ஃப்ளைட்டில் ஏறும்போது லதா, சந்திரகலா இரண்டு ஃபிகர்களையும் ஓட்டிக்கொண்டு போவார். ராஜூவுக்கு திருமணம் ஆனது தெரியாமல் லதாவிடம் அவரது அண்ணி மஞ்சுளா செய்த சத்தியத்துக்காக துணைவியாராக ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை.

11 ஜூன், 2012

‘காதலி’ காவ்யா


லெட்டரை நீட்டியவன் ஜொள்ளை துடைத்துக்கொண்டே சொன்னான்.

“உடனே பதில் கொடுக்கணும்னு அவசியமில்லை காவ்யா. என் காதலை ஏத்துக்கிட்டேன்னா நாளைக்கு மஞ்சக்கலர் சுடிதார் போட்டுக்கிட்டு வா. புரிஞ்சுக்கறேன்”

மறுநாள் காவ்யா மஞ்சள் சுடிதார் போட்டிருந்தாள். ஆனால் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இவன் இன்னொருவன்.

“காவ்யா ஐ லவ் யூ”

மையமாக நாணத்தோடு சிரித்தவாறே நகர்ந்தாள். ‘எகிறிக் குதித்தேன், வானம் இடித்தது’ என்று பாடிக்கொண்டே துள்ளிக்கொண்டு சென்றான். அடுத்தடுத்து இவனைப் பார்க்கும்போதெல்லாம் அதேமாதிரி சிரித்து வைக்கிறாள். ஆனால் காதலிக்கிறாளா என்பதை மட்டும் சொல்லித் தொலைக்க மாட்டேன் என்கிறாள்.

இது மற்றுமொருவனின் கதை.

“டேய் எனக்கு வண்டி ஓட்டச் சொல்லித் தர்றியாடா...”



“சொல்லிக் கொடுக்கறேன். ஆனா நீ என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கணும்”

இதற்கும் அதே நாணச்சிரிப்பு.

இப்போதெல்லாம் காவ்யா ஹோண்டா ஆக்டிவாவில் அசுரவேகத்தில் பறக்கிறாள். வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுத்தவனோ, இவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பது தெரியாமல், கிருக்கல் அடித்துப்போய் ஃபாலோ செய்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு பெண்ணுக்கு அதிகபட்சம் எத்தனை காதல் கடிதம் வந்திருக்கும்? ஐந்து, பத்து, ஐம்பது.. ஒரு எண்ணிக்கைக்கு நூறு என்றுகூட வைத்துக் கொள்ளலாம். வயதுக்கு வந்த முதல் நாளிலிருந்து, தனது இருபத்தைந்தாவது பிறந்தநாள் வரை காவ்யாவுக்கு வந்த காதல் கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே நாலாயிரத்து எழுநூற்றி நாற்பத்தி ஐந்து. வாய்மொழியாக சொல்லப்பட்ட ‘ஐ லவ் யூ’க்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. சரியான தரவுகளோடு கூடிய ஆதாரங்கள் இல்லாததால் மட்டுமே கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு காவ்யாவின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

அவளுக்கு முதன்முதலாக காதல் கடிதம் கொடுத்தவன் அருணகிரி. விஜயகாந்த் ரசிகனான அவனது கடிதம் இவ்வாறு தொடங்கியது. ‘வானத்தைப் போல’ மனம் படைத்த ‘சின்னக் கவுண்டரான’ ‘ஹானஸ்ட் ராஜ்’ நான். உன் ‘ஊமை விழிகள்’ பேசும் காதல்மொழியால் ’சக்கரை தேவன்’ ஆனேன். ‘தர்ம தேவதை’யும் ‘நவக்கிரக நாயகி’யும் ஆன உன்னை...” – இப்படியே அச்சுபிச்சுவென ஏதோ எழுதித் தொலைத்திருந்தான். கடிதத்தைப் படித்ததுமே ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள். அந்த சிரிப்பை தனது காதலுக்கான பச்சைக்கொடியாக அவன் எடுத்துக் கொண்டான்.

கோணைமூஞ்சி அருணகிரியின் கடிதத்துக்கே எந்த மறுப்பையும் காவ்யா சொல்லவில்லை என்கிற தைரியத்தில் பள்ளியில் படித்த அத்தனை பேரும் அவளுக்கு இதே ரீதியில் கடிதம் கொடுக்கத் தொடங்கினார்கள். அவளைவிட வயது குறைந்த பயல்கள் கூட காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.


எந்தக் காதலையும் காவ்யா வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நேரடி மறுப்பையும் யாருக்கும் சொன்னதில்லை. நம் காதலர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. கடிதம் கொடுத்தால் குறைந்தபட்சம் செருப்படியோ, கன்னத்தில் அறையோ இவளிடம் கிடைப்பதில்லை.

அவள் கல்லூரிக்கு சென்றபோதும், பிற்பாடு அலுவலகத்துக்குப் போனபோதும் கூட இதே ‘ட்ரெண்ட்’ தொடர்ந்தது. அவளுடன் பழகும் ஒவ்வொரு ஆணுமே, தன்னை காதலிப்பதாக உணர்த்தும் வகையில் தன் இயல்பை வேண்டுமென்றே மாற்றிக் கொண்டாள். நூற்றுக்கணக்கானோரை தன்னை சின்சியராக காதலிக்க வைத்த காவ்யாவுக்கு ஏனோ ஒருவனை கூட திருப்பிக் காதலிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் வந்ததேயில்லை.

போனவாரம் காவ்யாவுக்கு திருமணம் நடந்தது. ஜாதகம், பெயர் ராசி என்று எல்லாப் பொருத்தமும் சோதித்து வீட்டில் பார்த்து வைத்த ‘அரேஞ்ஜ்டு மேரேஜ்’. இப்போது ஊரில் குறைந்தது ஆயிரம் காதலர்களாவது ‘காதல்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி போல ‘ங்கை... ங்கை...’ என்று தலையில் குத்திக்கொண்டே சேது மாதிரி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

9 ஜூன், 2012

ஆபரேஷன் ப்ளாக்‌ஷீப்


“கமாண்டோ”

“யெஸ் கேப்டன்”

“முடிச்சிட்டியா?”

“பாவமாயிருக்கு”

“இந்த வேலைக்கு வந்துட்டு பாவம் புண்ணியமெல்லாம் பார்க்கணுமா?”

“கத்தற சத்தம் சகிச்சிக்க முடியலை”

“அதெல்லாம் அஞ்சு நிமிஷத்துலே முடிஞ்சிடும்”

“எனக்கு ரத்தத்தை பார்த்தா கொஞ்சம் அலர்ஜி கேப்டன்”

“யூ ஃபூல். ரத்தத்தை பார்க்குறதுதான் நமக்கு வேலையே”

“ஆனாலும் கேப்டன் கழுத்தை வெட்டினதுமே இளஞ்சூடா, வெளிர்சிவப்பா பீய்ச்சுற ரத்தத்தை பார்க்கும்போதெல்லாம் பீதியாகுது”


யூ பிளடி கமாண்டோ. என்னோட தேர்ட்டி இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸில் எவ்ளோவாட்டி இதே சீனை பார்த்திருப்பேன் தெரியுமா?”

“தட்ஸ் ஒய் யூ ஆர் கேப்டன். எனிவே, நான் உங்க ஆர்டருக்கு ஒபே பண்ணுறேன்”

“தலையை கெட்டியாப் பிடி”

“பிடிச்சுட்டேன்”

”கத்திய பாய்ச்சுறதுக்கு வாகான இடத்தை கழுத்திலே பார்த்து, ஒரே வெட்டு”

”வெட்டிட்டேன். ஓ காட்”

“கழுத்தை சரசரசரன்னு அறுத்து, தலையை தனியா வையி”

“முடிஞ்சது கேப்டன். ஆனா தலையில்லாத முண்டம் துடிக்குதே?”

“ஆமாம். அப்படித்தான் துடிக்கும் கமாண்டோ. கழுத்திலேருந்து வழியற ரத்தத்தை அப்படியே ஒரு பெரிய பாத்திரத்துலே புடிச்சி வையி”

“டன் கேப்டன்”

“அப்புறம் ரெண்டு காலையும் சேர்த்துப் புடிசி ஒரே சேர வெட்டு. ஒரே வெட்டு ரெண்டு துண்டு”

“முடிஞ்சது கேப்டன். இப்போ உடம்பில் எந்த அசைவுமில்லே”

“கொத்துக்கறி போடத் தெரியுமில்லே? பீஸ் பீஸா போடணும். கத்தியிலே தட்டுப்படற எலும்பையெல்லாம் தனியா பொறுக்கி வை கமாண்டோ”

“டன்டனா டன் கேப்டன்”

“இப்போ மொத்தமா எவ்ளோ கிலோ தேறும்?”

“பேக் பண்ணிட்டு, எடை போட்டுப் பார்க்கிறேன் கேப்டன்”

- படுமொக்கையாகப் போய்க் கொண்டிருக்கும் இந்த கதைக்கு முடிவு ஒன்றே ஒன்றுதான். அதுவும் நான்காம் லைனிலெயே நீங்கள் யூகித்துவிட்ட அதே படு த்ராபையான முடிவுதான். தலைப்பும் கூட அதைதான் குறியீடாக உணர்த்துகிறது. கேப்டன் கசாப்புக்கடை முதலாளி. கமாண்டோ கசாப்புக் கடையில் புதுசாக ஆடு வெட்ட சேர்ந்த பையன். ஓக்கே? சுபம்.

வேறு முடிவு ஒன்றையும் பரிசீலித்துப் பார்க்கலாம். இராணுவ கேப்டன், சித்திரவதைக் கூடத்தில் தனக்குக் கீழ் பணியாற்றும் கமாண்டோவுக்கு தொலைபேசியில் உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறான். வெட்டப்படுவன். எதிரிநாட்டுக்கு இராணுவ இரகசியங்களை விலைக்கு விற்றவன். இப்போது இந்தப் பின்னணியை மனதில் விஷூவலாக்கி ஓட்டிக்கொண்டே கதையைப் படித்துப் பாருங்கள். படுமொக்கையாக இருந்த கதை, ஒருவேளை சுமாரான மொக்கை ஆகியிருக்கலாம்.

6 ஜூன், 2012

தடையறத் தாக்க

விளிம்புநிலை மனிதர்களின் யதார்த்த வாழ்வை பதிவு செய்யும் உலக சினிமாவெல்லாம் இல்லை. ஹாலிவுட்டுக்கோ, பாலிவுட்டுக்கோ இணையாக தமிழ் திரைப்படங்களை தரமுயர்த்தும் முயற்சியும் நிச்சயமாக இல்லை. படம் பார்ப்பவர்கள் அசந்துப்போய் மூக்கின் மேல் விரலை வைக்கும் பிரும்மாண்ட காட்சிகளும் சத்தியமாக இல்லை. ஆனாலும் மிக முக்கியமான சினிமாவாக பரிணமித்திருக்கிறது தடையறத் தாக்க.

கடைசியாக தமிழில் வெளிவந்த ‘டைரக்டர்ஸ் மூவி’ எதுவென்று பெருமூளையையும், சிறுமூளையையும் ஒருங்கே சேர்த்து கசக்கி நினைவுகூர்ந்தாலும் எதுவும் சட்டென்று நினைவுக்கு தோன்றவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்தால் மெளனகுரு, நாடோடி, சுப்பிரமணியபுரம் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் சில படங்கள் நினைவுக்கு வருகிறது. தடையறத் தாக்க முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ் திருமேனியின் ஆளுமையை சார்ந்தே வந்திருக்கிறது. சரசரவென்று காட்சிகளையமைத்து பரபர வேகத்தில் தடதடவென பயணிக்கும் தடாலடி த்ரில்லர் எக்ஸ்பிரஸ்.

‘காக்க காக்க’ படத்தில் கவுதமிடம் உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர், கதையின் முக்கியமான விதையை அங்கிருந்தே எடுத்து, ‘தடையறத் தாக்க’வில் விளைச்சல் செய்திருக்கிறார். காக்க காக்க பாண்டியா-வுக்கும், அவருடைய அண்ணனுக்கும் அப்படியென்ன புனிதமான பாசப்பிணைப்பு என்று ஒரு சிறுகதையை எழுதிப் பார்த்திருப்பார் போல. நாயகனுக்கோ, நாயகிக்கோதான் உருக்கமான ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ இருப்பது நம் பண்பாடு. மாறாக வில்லன்களுக்கு அவ்வகையிலான ஓர் ஆச்சரிய ஃப்ளாஷ்பேக்கை முயற்சித்திருக்கிறார். நாயகன் பதினைந்து வயதில் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, அப்பாடக்கர் ஆவதையெல்லாம் அசால்ட்டாக வசனத்திலேயே கடந்துவிடுகிறார். நாயகன் – நாயகி சந்திப்பு, அவர்களுக்கிடையேயான ஊடல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாயகிக்கு நாயகன் மீது ஈர்ப்பு என்றெல்லாம் ’சீன்’ பண்ணாமல், நேரடியாக அவர்கள் காதலர்கள். நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறான் நாயகன் என்று படாலென்று படம் ஆரம்பிக்கிறது. கந்து வட்டி கொடுமையை எதிர்த்து மெசேஜ் சொல்கிறோம் என்றெல்லாம் கழுத்தறுக்காமல், தன் கதைக்கு தேவைப்பட்டது பயன்படுத்திக் கொண்டேன் என்கிற இயக்குனரின் நேர்மை பாராட்டத்தக்கது. சமூகத்தின் சகலப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வெண் திரையில் எதிர்ப்பார்ப்பதைவிட வேறென்ன பெரிய முட்டாள்த்தனம் இருந்துவிடப் போகிறது?

பதினைந்து, பதினாறு ஆண்டுகளாக அருண்விஜய் நடித்துக் கிழித்தவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கி குப்பையில் போடலாம். அவருடைய நிஜமான இன்னிங்ஸ் இப்போதுதான் துவங்குகிறது. இயக்குனரின் நடிகராக மிகச்சிறப்பான உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, அடுத்தடுத்து அவர் நடிக்கப்போகும் படங்களின் சப்ஜெக்ட்டை கவனமாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நாளைய திரைவானில் பளிச்சென மின்னும் நட்சத்திரமாகலாம். மாறாக மீண்டும் மசாலா, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று இளையதளபதியாகவோ அல்டிமேட் ஸ்டாராகவோ முயற்சித்தாலோ.. தன் தலையில் தானே மண்ணை போட்டுக் கொள்வதாகதான் பொருள்.

முதல் பாதியில் மட்டும் தேவையில்லாமல் இரண்டு பாடல்கள். இன்னமும் பாடல்களின்றி படமெடுக்க நம்மாட்கள் தயங்குவது புரிகிறது. ஒரு சுமாரான டூயட். ஓரளவுக்கு பரவாயில்லை என்கிற அளவில் ஒரு குத்துப்பாட்டு. குத்துப்பாட்டில் ஒன்றுக்கு, ரெண்டாக தலைசிறந்த இரண்டு நாட்டுக்கட்டைகளை உருட்டிவிட்டிருந்தாலும், சீக்கிரமா படத்தை காட்டுங்கப்பா என்கிற டென்ஷன்தான் பார்வையாளனுக்கு இருக்கிறது. ‘பெட்டிகோட்’டோடு நாயகியை பார்த்தும் நார்மலாக இருக்கும் நாயகன், அதனால் டென்ஷன் ஆகும் நாயகி. “அப்போ பார்த்தப்போ ஆண்ட்டி மாதிரி பேண்ட்டி போட்டிருந்தே” என்றுகூறி, ஏழு வண்ணங்களில் மாடர்ன் பட்டர்ஃப்ளை பேண்ட்டீஸ் பரிசாக வாங்கித்தரும் நாயகன். பிற்பாடு அவளுக்கு போன் போடும்போது “இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃப்ளை?” என்று விசாரிப்பது. தனியாக பெட்ரூமில் இருவரும் இருக்கும்போது, “பதினைஞ்சு நிமிசத்துக்கு யாரும் வரமாட்டாங்க. உனக்கு வேணும்னா அதுக்குள்ளே என்னை ரேப் பண்ணிக்கோ” என்று நாயகி, நாயகனிடம் சொல்வது. இவ்வாறாக ‘கல்ச்சுரல் ஷாக்’ காட்சிகள் கொஞ்சம் புதுசு. கொஞ்சம் விரசமாகவே தெரிந்தாலும், இவையெல்லாம் சமகாலத்தில் சகஜம் என்கிற யதார்த்தத்தை ஜீரணித்தே ஆகவேண்டியிருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மம்தா நாயகியாக. புற்றுநோயை வென்று உயிர்பிழைத்து, சிறுவயது காதலனை கைப்பிடித்து, கல்யாணத்துக்குப் பிறகு ‘தில்’லாக செகண்ட் இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார் என்று அவருடைய பர்சனல் ஸ்டோரியே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனல் சக்ஸஸ் ஸ்டோரியாக இருக்கிறது. மம்தாவின் ப்ரேவ் ஹார்ட்டுக்கு கிரேட் சல்யூட்.

இண்டர்வெல்லுக்கு பிறகு டைரக்டாக க்ளைமேக்ஸ். ரத்தம் தெறிக்கும் ஓவர் வயலன்ஸ்தான் என்றாலும், கதைக்கு தேவைப்படும் அளவிலேயேதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வில்லன்களையும், அடியாட்களையும் எப்படியெல்லாம் போட்டுப் புரட்டியெடுக்கிறார் என்று விலாவரியாக ‘டைம்பாஸ்’ செய்யாமல் சட்டுபுட்டென்று எடிட்டி இருப்பதில் படக்குழுவின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. கடைசிக் காட்சியில் அருண்விஜய் சட்டையைக் கிழித்துக் கொண்டு சிக்ஸ்பேக் காட்டுவாரோ என்கிற அச்சப்பந்து வயிற்றில் இருந்து வேகமாக தொண்டையை நோக்கி எழுகிறது. நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லை. இயல்பாக படமெடுப்பது என்பதே இப்போதெல்லாம் வித்தியாசமாக தெரிய ஆரம்பித்துவிட்டது நம் தலைவிதி.

தடையறத் தாக்க தவறாமல் பார்க்க

5 ஜூன், 2012

டாக்டர் வாத்தியார்


“நல்லா இருக்கீங்களா?” ரொம்பநாள் கழித்து பார்ப்பவர்கள் உங்களை கேட்கும் முதல் கேள்வி இது. நீங்கள் நன்றாகவே இல்லையென்றாலும் “நல்லாருக்கேன்” என்றுதான் சம்பிரதாயமாக சொல்வீர்கள்.

சுந்தரம் வாத்தியார் இந்த சம்பிரதாயங்களை கட்டுடைப்பவர். எப்போது யார் கேட்டாலும், “பி.பி. எகிறிடிச்சி. சுகர் கண்ட்ரோல்ல இல்லை. பாதத்தை எடுத்தே வைக்க முடியலை. தலைவலி உசுரு போவுது. ராவுலே நெஞ்சு படபடன்னு அடிச்சிக்குது. தூக்கமே இல்லை. காய்ச்சல். சளி. இருமல்” என்று ஏதோ ஒரு சுகவீனத்தை கண்டிப்பாக சொல்லுவார். இவரைப்போய் ஏன்தான் நலம் விசாரித்தோமோ என்று கேட்டவர் நொந்துக் கொள்வார்.

நிஜமாகவே சுந்தரம் வாத்தியார் கொஞ்சம் உடல்நலிவானவர்தான். அவரது ஐம்பது கிலோ உடம்பில் இல்லாத வியாதிகளே இல்லை எனலாம். எய்ட்ஸைத் தவிர எல்லா வியாதியும் உண்டு. ஒருமுறை இவரை பரிசோதித்த அசோக் டாக்டரே அசந்துப்போனார். “இவ்ளோ வியாதிகளை வெச்சுக்கிட்டு நீங்க உசுரோட இருக்குறதே பெரிய சாதனை வாத்தியாரே!” என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்தார். வாத்தியாரின் வீட்டில் அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு மெடிக்கல் ஷாப்பே உண்டு. டாக்டர் பரிந்துரைக்கும்அலோபதி மருந்துகள் மட்டுமின்றி, நாட்டு மருந்துகளையும் தானே விசாரித்துத் தெரிந்துக்கொண்டு, தனக்கானதை கண்டுபிடித்து பயன்படுத்துவார் வாத்தியார்.

வாழ்க்கை முழுக்க தன் உடலையே பரிசோதனைக் கருவியாக்கி விளையாடிக் கொண்டிருப்பதால், வாத்தியாருக்கு எந்த நோய்க்கு என்ன மருந்து, என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் கன்னாபின்னாவென்று அத்துபடி. எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே ஒரு டாக்டருக்குரிய அறிவு அவருக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது.

தெருமுனை பிள்ளையார் கோயில் அர்ச்சகருக்கு ஒருமுறை தீராத இருமல். எத்தனையோ முறை டாக்டரிடம் போயும் வருடக் கணக்கில் சரியாகவில்லை. யதேச்சையாக இதைக்கேள்விப்பட்ட வாத்தியார், அர்ச்சகர் கேட்காமலேயே இலவச மருத்துவ ஆலோசனையாக ஏதோ நாட்டு மருந்து பரிந்துரைத்தார். ‘ஒருமுறை முயற்சித்துதான் பார்ப்போமே’ என்று அர்ச்சகர் முயற்சிக்க, அதிசயமாய் ஒரே வாரத்தில் அவருடைய பிரச்சினை தீர்ந்தது. கோயிலுக்கு வருபவர்களிடமெல்லாம் அவர் சொல்லி, சொல்லி மாய.. வாத்தியாரின் புகழ் மின்சாரவேகத்தில் ஊருக்குள் பரவியது.

‘மூட்டுவலி’ புகழ் மாமிகள் சிலர் வாத்தியாரிடம் தங்களது நிரந்தரமான இப்பிரச்சினைக்கு தீர்வு உண்டா என்று ஆலோசனை கேட்டார்கள். ஊட்டியிலிருந்து ஏதோ ஒரு தைலத்தை வரவழைத்து அம்மாமிகளுக்கு வழங்கினார் வாத்தியார். என்னே ஆச்சரியம்? தாங்கித் தாங்கி நடந்துக் கொண்டிருந்த மாமிகள் இப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி மாதிரி கம்பீர நடை போட்டு, குளத்திலிருந்து தண்ணீர் பிடித்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஊரில் குழந்தைகளுக்கு காய்ச்சல் தொடங்கி, வாலிப-வயோதிக அன்பர்களின் ரகசியப் பிரச்சினை வரை ‘டீல்’ செய்யத் தொடங்கிவிட்டதால் வாத்தியாரை யாரும் இப்போது வெறுமனே வாத்தியார் என்று அழைப்பதில்லை. அடைமொழி கொடுத்து ‘டாக்டர் வாத்தியார்’ என்று அசத்தலாக அழைக்கிறார்கள். தன்னுடைய மருத்துவ ஆலோசனைகளுக்கு ‘பீஸ்’ எதுவும் அவர் வாங்குவதில்லை என்பதால், ஊர்மக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு.

வாத்தியாரின் இந்த திடீர் அவதாரத்தால் சைட் எஃபெக்ட் ஒன்றும் உண்டு. ஊரில் ஆஸ்பத்திரி வைத்திருந்த ஒரே டாக்டரான அசோக்கின் கிளினிக் நோயாளிகளின் வருகையின்றி, வருமானமில்லாமல் ஈயடித்துப் போனது. ஊரில் அவரது பிழைப்பு கேள்விக்குறியானது. வாடகை கொடுக்கக்கூட வக்கற்ற நிலைக்குப் போய்விட்ட டாக்டர், பேசாமல் வாத்தியாரிடம் கம்பவுண்டராக வேலைக்கு சேர்ந்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக கேள்வி.