12 ஜூன், 2012

உலகம் சுற்றும் வாலிபன்


'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம். தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
 இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
 * இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
 * தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
 * லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
 * மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
 * சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
 * இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
 * வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை. சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
 * படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
 * "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
 * பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
 * தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
 * படத்தின் படப்பிடிப்பின் போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
 * படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
 * கடைசியாக ராஜூ கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு ஃப்ளைட்டில் ஏறும்போது லதா, சந்திரகலா இரண்டு ஃபிகர்களையும் ஓட்டிக்கொண்டு போவார். ராஜூவுக்கு திருமணம் ஆனது தெரியாமல் லதாவிடம் அவரது அண்ணி மஞ்சுளா செய்த சத்தியத்துக்காக துணைவியாராக ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை.

14 கருத்துகள்:

  1. பெயரில்லா6:09 PM, ஜூன் 12, 2012

    //நாடோடி மன்னன், அடிமைப்பெண்ணை தொடர்ந்து தலைவர் இயக்கிய மூன்றாவதும், கடைசியுமானதுமான படம்//
    தலைவர் இயக்கிய கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என் நினைக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. லக்கி, அடிமைப்பெண்ணை அதிகாரபூர்வமாக இயக்கியது கே.சங்கர் இல்லையோ ? இடையில் ஏதோ பிரச்சனை என்பதால் எம்.ஜி.ஆர் கொஞ்சம் இயக்கியதாக கேள்வி ..ஆனால் வாத்தியார் இயக்கிய இன்னொரு படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ..அதை விட்டுவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  3. யுவகிருஷ்ணா,

    அடிமைப் பெண் - இயக்குநர் கே.சங்கர்
    இல்ல்லையா?

    பதிலளிநீக்கு
  4. தலைவரே! நாடோடி மன்னனுக்குப் பிறகு உலகம் சுற்றும் வாலிபன், அப்புறம் அதாவது கடைசியா இயக்கியது 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' அடிமைப் பெண் அல்ல. அடிமைப் பெண்ணை இயக்கியது கே.சங்கர். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மூன்று படமும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பு. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில்லை!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா10:39 PM, ஜூன் 12, 2012

    அட்டகாசமான நடை எழுத்தில். பின்னிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:49 AM, ஜூன் 13, 2012

    ஆஜானுபாகுவான வில்லனை மக்கள் திலகம் தூக்கும் காட்சி...கிங் ஆப் பிட்னஸ். ரிக்சாக்காரன் முதல் சீன் ரிக்சா போட்டி, குப்பத்தில் நடக்கும் ரிக்சா ஸ்டன்ட் இரண்டிலும் டூப் இன்றி தலைவர் அசத்தி இருப்பார். என்றும் நம்பர் ஒன் மாஸ் ஹீரோ!!

    பதிலளிநீக்கு
  7. செம நக்கல்! தொடர்ந்து இது போல் எழுதவும்...!

    பதிலளிநீக்கு
  8. தோழர்களே!

    தலைவர் இயக்கிய படங்கள் குறித்த தவறான தகவலுக்கு மன்னிக்கவும். சரி செய்துவிட்டேன். இது மன்னிக்க முடியாத குற்றம்தான் என்றாலும் சக தலைவர் ரசிகன் என்கிற அடிப்படையில் கருணைகூர்ந்து மன்னிப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். சுட்டிக்காட்டிய தோழர்களுக்கு நன்றி.

    சிவகுமார்!

    //ஆஜானுபாகுவான வில்லனை மக்கள் திலகம் தூக்கும் காட்சி...கிங் ஆப் பிட்னஸ். //

    இந்தப் படத்தைவிட ‘அன்பே வா’வில் தலைவர் தடியர் ஒருவரை தூக்கியதுதான் சிறப்பான சாதனை. தலைவரை விட மூன்று மடங்கு எடை அதிகம் கொண்டவர் அவர். சண்டையே இல்லாத படம் என்பதால் இந்த ஸ்டண்ட் காட்சி அப்படத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. குஸ்தி பயின்றவர்கள் தம்மைவிட எடை அதிகமானவர்களை அனாயசமாக தூக்கியெறியும் டெக்னிக் தெரிந்து வைத்திருப்பார்கள். நம்ம வாத்யார் வெறும் வாத்யாரல்ல. குஸ்தி வாத்தியார்.

    //ரிக்சாக்காரன் முதல் சீன் ரிக்சா போட்டி, குப்பத்தில் நடக்கும் ரிக்சா ஸ்டன்ட் இரண்டிலும் டூப் இன்றி தலைவர் அசத்தி இருப்பார். என்றும் நம்பர் ஒன் மாஸ் ஹீரோ!!//

    இதைப்பற்றி தனியே ஒரு பதிவிடக்கூடிய லெவலுக்கு சரக்குகள் உண்டு.

    அறிஞர் அண்ணா மறைந்தவுடனே அவரது நினைவாக சென்னையின் அப்போதைய புறநகரில் ‘அண்ணா நகர்’ கலைஞரால் கட்டமைக்கப்பட்டது. அண்ணாவின் பாசத்துக்குரிய தம்பியான மக்கள் திலகம் உடனடியாக அந்த நகரை தமிழகம் முழுக்க பிரபலமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தின் முதல் காட்சியை அண்ணா நகரில் படமாக்கினார். இன்று சென்னை மாநகராட்சி இடிக்க அனுமதித்திருக்கும் ‘அண்ணா நுழைவு வாயில்’ அப்படத்தின் துவக்கத்தில் இடம்பெறுவதை நீங்கள் காணலாம்.

    இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டபோது, அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டாரான கிருஷ்ணா நடித்தார். என்னால் முடியாது என்று கூறி ரிக்‌ஷா ஓட்டும் காட்சியில் டூப் போட்டு எடுக்கச் சொன்னாராம். “உன்னைவிட இருமடங்கு வயதான மனிதரே அவரே ரிக்‌ஷா ஓட்டி, ரிக்‌ஷாவை தூக்கி ஸ்டண்ட் காட்சிகள் அமைத்து தமிழில் நடித்திருக்கிறார்” என்று ஸ்டண்ட் மாஸ்டர் சுட்டிக் காட்டியபோது, தலைவரின் ஃபிட்னஸ்ஸை எண்ணி கிருஷ்ணா மெய்சிலிர்த்துப் போனாராம்.

    பதிலளிநீக்கு
  9. உலகம் சுற்றும் வாலிபன்'. 1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55//
    இது நல்ல இருக்கு உண்மையிலே எம்ஜிர் (தலைவர் வேரு) படம் பிடிக்குமா ? :))))))

    பதிலளிநீக்கு
  10. லக்கி சார்,

    அந்த காலத்தில் சிவாஜி ரசிகர், எம் ஜி ஆர் ரசிகர் என்று மாணவர்கள் இரண்டு கோஷ்டியாய்ப் பிரிந்து கிடப்பார்கள். திருச்சியில் ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த என் நண்பன் அக்மார்க் சிவாஜி ரசிகன். 'உ.சு.வா எல்லாம் ஒரு படமா? மனுஷன் பார்ப்பானா?' என்று நண்பர்களிடம் சவால் விட்டு விட்டான். படமோ பல வாரங்கள் பிய்த்துக் கொண்டு போகிறது. ஒரு நாள் ரூம் மேட்டிடம் கே. ஆர். விஜயா நடித்த 'அன்னை அபிராமி' ( Black & White) பார்க்கப் போவதாய்ச் சொல்லி விட்டுத் தியேட்டரில் முக்காடு போட்டுக் கொண்டு உ. சு. வா. பார்த்து ரசித்து விட்டு வந்தான்! பின்னாளில் அவனே சொல்வான்
    " வாத்யார் ஒரு படம் எடுத்தார் பாருடா, அதுதான் படம்! ஒரு பாட்டு , ஒரு சண்டை, கொஞ்சம் ஊரைச் சுற்றிக் காட்றது, இதுதான் சக்சஸ் பார்முலா! "

    தேவி பாரடைஸில் படம் வெளி வந்த போது, சென்னை மாநகராட்சியில் சுவரொட்டி வரியை திடீரென்று ஏற்றி விட்டனர் (அரசியல் காரணம் என்பார்கள்!) . எனவே, போஸ்டரே ஒட்டாமல் 'Word of Mouth' மூலமாகவே முதல் சில வாரங்களில் சூடு பிடித்தது. படம் வரும் முன், வெளி நாட்டில் எடுத்த பிலிம் எல்லாம் சரியாக விழவில்லை என்று ஒரு வதந்தி இருந்தது. அமரர் மதுரை முத்து (பின்னாளில் அ .தி.மு.க.வில் இணைந்து விட்டவர் ) சவால் விட்டதுண்டு. 'உ.சு.வா. வெற்றிகரமாக வெளி வந்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்!' . படம் வெளியான பிறகு அவர் சொன்னார் " படம் சினிமாஸ்கோப்பில் வெளி வந்தால் என்றுதான் நான் சொன்னேன்" . இது எப்படி இருக்கு?
    பெரியவர் ஆர். எம். வீ . குமுதத்தில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'எம். ஜி. ஆர். யார்?' தொடர் கிடைத்தால் படித்துப் பாருங்கள். சந்திரகலா, லதா, மஞ்சுளா ஆகிய மூன்று ஹீரோயின்களின் தேர்வு பற்றியும் சுவாரஸ்யமாக எழுதியிருப்பார். மேலும், படத்துக்கு பைனான்ஸ் செய்யும் போது மறைந்த ஏ. வி.எம் அவர்கள் படத்தில் சில காட்சிகளாவது ஜப்பானில் 'Expo 70' பொருட்காட்சியில் எடுக்கப் பட வேண்டும் என்பதை ஒரு ஷரத்தாகவே ஒப்பந்த்தத்தில் போட்டிருந்தார். ஆரம்ப ஏற்பாடுகளுக்காக முதலில் ஜப்பானில் போய் இறங்கியிருந்த அமரர் மணியன் ' என் கையில் தொகை குறைந்து கொண்டே வருகிறது. உடனே குழுவினரை அழைத்து வரவும்' என்று எம். ஜி. ஆருக்குத் தந்தி மேல் தந்தியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவை இரண்டும்தான் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்குக் காரணம் என்கிறார் ஆர். எம். வீ.

    தமிழ்ப் பாட்டுக்கு (பச்சைக்கிளி, முத்துச்சரம்) ஒரு தாய்லாந்து நடிகை (மீடா ருங்க்ராத்) அருமையாக வாயசைத்ததை விகடன் பாராட்டியிருந்தது!

    நன்றி!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.in

    பதிலளிநீக்கு
  11. K.V. Balasubramanian7:18 PM, ஜூன் 13, 2012

    யுவக்ருஷ்ணா அவர்களே பாடல்கள் எழுதியவர்களில் வாலியின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். கண்ணதாசன் "அவள் ஒரு நவரச நாடகம்", "லில்லி மலருக்குக் கொண்டாட்டம்” "உலகம்... உலகம்" ஆகிய பாடல்களையும், வாலி "பச்சைக்கிளி முத்துச்சரம்", "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ", "பன்சாயி..." ஆகிய பாடல்களையும், புலமைப்பித்தன் "சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலையும், "நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாட புலவர் வேதாவும் எழுதினர் என்று நினைக்கிறேன். சரிதானே ?
    கு.வை.பா. மணியன்

    பதிலளிநீக்கு