30 ஜூன், 2012

ஹோல்டன்

ஊருக்கு முதன்முதலாக பஸ் வந்த அந்த விநாயகர் சதுர்த்தி அன்றுதான் அந்த வார்த்தையை முதன்முதலாக கேட்டேன். “ஹோல்டன்”

ரெட்டைமாடி வீடு கட்டிய என்ஜினியர் ஸ்டைலாக வாயில் ப்ளூபேர்ட்ஸ் சிகரெட் வைத்தபடியே கையை நீட்டி உரக்கச் சொன்னார். அவர் சொல்லியிருக்கா விட்டாலும் எம்-11 என்கிற நாமகரணத்தைத் தாங்கிய அந்த சிறுபேருந்து ஹோல்டன்னாகியிருக்கும். ஏனெனில் அவர் கைகாட்டி நிறுத்திய இடம் தான் பேருந்து நிலையம். பொன்னியம்மன் கோயில் வாசலில் இருந்த அரச மரம். ஊர் முழுக்க திறந்தவெளிதான் என்றாலும் ‘லேண்ட்மார்க்’காக ஓர் இடத்தில் பேருந்து நின்றால்தான் அனைவருக்கும் வசதியென்று அந்த இடத்தை பேருந்து நிலையமாக ஊர்ப்பெருசுகள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

என்ஜினியர் எந்த நேரத்தில் ‘ஹோல்டான்’ சொன்னாரோ, எல்லாருக்கும் ‘ஹோல்டன்’ பைத்தியம் பிடித்துக் கொண்டது. “ஹோல்டன்” என்று கத்தினால் பேருந்தின் இயந்திரம் ஆட்டோமேடிக்காக நின்றுவிடும் என்று மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதை காதில் வாங்கி, டிரைவர் ப்ரேக்கை மிதித்தால்தான் வண்டி நிற்கும் எனுமளவுக்கு அப்போதெல்லாம் பொறியியல் அறிவு மக்களிடையே வளரவில்லை. சைதாப்பேட்டை அருகில் அப்போது ‘ஹால்டா’ என்றொரு தொழிற்சாலை இருந்தது. டைப்ரைட்டிங் மெஷின்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு ‘ஹால்டா’ என்று பெயர். மக்களுக்கோ அதுகுறித்த ‘ஓர்மை’ எதுவுமில்லை. ‘ஹோல்டன்’ என்கிற சொல் மருவியே, அப்பேருந்து நிலையத்துக்கு ‘ஹால்டா’ என்று பெயர்வைத்திருப்பதாக சாகும்வரை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

உண்மையை சொல்லப்போனால் பேருந்து என்கிற வாகனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை நாகரிகம் கூட எங்கள் மக்களிடம் அப்போது இல்லை. மடிப்பாக்கத்திலிருந்து சைதாப்பேட்டை சந்தைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் ஆடுகளை முன்பெல்லாம் நடத்தியே கொண்டு செல்வார்கள். பேருந்து வந்தபிறகு ஆட்டையும் வண்டியில் ஏற்றிச் சென்றாகவேண்டும் என்று அடம் பிடித்தார்கள். “கவருமெண்டு பஸ்ஸுதானே.. அதுபாட்டுக்கும் போவப்போவுது. ஆடு வந்தா உனக்கேன் எரியுது.. அதுவும் உயிர்தானே.. நீயா சுமக்கப் போற.. அது பாட்டுக்கும் ஓரமா நின்னுக்கிட்டு வந்துட்டுப் போவுது” என்று தர்க்கம் பேசினார்கள். கண்டக்டர்களுக்கு தாவூ தீர்ந்தது. ஆட்டுக்கும் டிக்கெட் போடவேண்டுமா என்பதுகுறித்த அறிவுறுத்தல் எதையும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் தராததால், ‘லக்கேஜ் டிக்கெட்’டாவது போடலாமென முயற்சித்த கண்டக்டர்களுக்கு எதிராக ஊரில் பெரும் போராட்டம் நடந்தது. “ஆட்டைப்போய் லக்கேஜ்னு எப்படி சொல்லமுடியும்? சூட்கேஸைதான் லக்கேஜ்னு சொல்லணும். இந்த கண்டக்டர்களுக்கு இங்கிலீஸ் கத்துக் கொடுக்குறதுக்குள்ளே நம்ம தாலியறுந்துடும் போல” என ஆடு கொண்டுச் செல்பவர்கள் புலம்பத் தொடங்கினார்கள். மனிதர்களை விட ஆடுகள் அதிகமாக பேருந்தில் பயணித்த காலக்கட்டம் அது. மடிப்பாக்கத்து ஆடுகள் சீட்டுகளில் வசதியாக – குறிப்பாக சன்னலோர சீட்டுகளில் – அமர்ந்து செல்வது வழக்கம். ஆடுகள் சிறுநீர் கழிப்பது, புழுக்கை போடுவது என்று ஏகத்துக்கும் அட்டகாசம்.

சம்பத் வீட்டு ஆடுகளுக்குதான் பேருந்து வசதி கிடைத்தபிறகு ஏகத்துக்கும் குஷி. சம்பத் ஆடுகளோடு அதன் மொழியிலேயே பேசக்கூடிய வல்லமை பெற்றிருந்தார். ‘ம்ம்மேஏஏஏஏ’ என்று அவர் குரல் கொடுத்தால், ஆடுகளுக்கும் பதிலுக்கும் ‘ம்ம்மேஏஏஏய்’ என்று பதில் கொடுக்கும். “வயிறு நெறைஞ்சிடிச்சின்னு சொல்லுது. வீட்டுக்கு ஓட்டிட்டு போவணும்” என்று ட்ரான்ஸ்லேட் செய்து சொல்வார். சம்பத்தை ‘சம்பத்’ என்று யாராவது அழைத்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். ‘சம்பேஏஏய்ய்’ என்று அழைத்தால்தான் அவருக்கு தன்னை யாரோ அழைக்கிறார்கள் என்று சுயவுணர்வே ஏற்படும். அடிக்கடி “ஹோல்டன்” என்கிற சொல்லை அவர் உச்சரித்ததைக் கேட்ட அவரது ஆடுகளும், அதன் மொழியில் “மேஏஏஏய்யங்ன்” என்று ஒருவழியாக ஹோல்டானுக்கு இணையான உச்சரிப்பை உச்சரிக்கப் பழகின.

ஆடுகள் மட்டுமின்றி சம்பத்தின் வீட்டில் நான்கு எருமை மாடுகளும், மூன்று பசுமாடுகளும் இருந்தது. அவற்றில் ஓர் எருமைக்கு அன்று வயிற்றுப்போக்கு. மாட்டாஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல பேருந்துச் சேவையை நாடினார். நடத்துனர் மாட்டை வண்டியில் ஏற்றிச் செல்வதற்கு மறுப்புச் சொல்ல, “ஆடுகளை ஏத்திட்டுப் போற, மாடு அதைவிட கொஞ்சம் பெருசு. அதை ஏத்துனா உன் பஸ்ஸு குடை சாஞ்சுமா என்ன?” என்று அறிவியல்பூர்வமான கேள்வியை எழுப்பி, நடத்துனரின் வாயை அடைத்தார். துரதிருஷ்டவசமாக ஆடு மாதிரி துள்ளி பேருந்தின் படிக்கட்டில் ஏறுமளவுக்கு மாடுகளுக்கு சாமர்த்தியம் போதவில்லை. எனவே கடைசிவரை பேருந்தில் மடிப்பாக்கத்து மாடுகள் பயணிக்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை. அப்படி ஆகியிருந்தால் மாடுகளும் தம் மொழியில் “ம்மா..ய்யங்ன்” என்று ஹோல்டனுக்கு இணையாக உச்சரிக்கப் பழகியிருக்கும்.

இப்படியாக ஆரம்பக் காலக்கட்டங்களில் மனிதர்களைவிட அதிகமாக ஆடுகளை பயணிகளாக பெறும் பாக்கியம் எம்-11 டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் கிடைத்தது. செல்லப் பிராணிகளாக நாய் வளர்ப்பவர்கள் சிலர் இருந்தார்கள். நாய் என்றால் ராஜபாளையமோ, அல்சேஷனோ அல்ல. தெருநாய்தான். எஜமானர்களை எந்நிமிடமும் பிரியாத அந்நாய்கள் பேருந்துப் பயணத்தின் போதும் கூடவே சென்றாக வேண்டுமென அடம் பிடித்தன. டிவிக்காரரின் நாய் அம்மாதிரியான ஒரு பயணத்தின் போது, பேருந்தில் ஆக்ஸிலேட்டரை அமுக்கும்போது ஏற்படும் ‘விர்ர்ர்….’ சத்தத்தில் அதிர்ச்சியாகி, நடத்துனரை கடித்துவைத்த சம்பவமும் நடந்தது.

ஒருமுறை ராஜூ டிரைவர்தான் வண்டியை ஓட்டிவந்தார். இளவயசு என்பதால் கொஞ்சம் ‘டீக்’காக ட்ரெஸ் செய்து, பெண்கள் எதிர்ப்படும் போதெல்லாம் வசீகரமாக புன்னகைக்க முயற்சித்துக் கொண்டிருப்பார். கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ், கர்ச்சீப்பில் பவுடர் என்று காக்கிச்சட்டை போட்ட மைனர் அவர். பரங்கிமலை ரெயில்வே லெவல் கிராஸிங்கில் அன்று தாமதம் ஆகிவிட்டதால், ஒரு ‘சிங்கிள்’ பறிபோய், மேலதிகாரியிடம் ‘மெமோ’ வாங்கிவிடுவோமோ என்கிற அவசரத்தில் மிதி மிதியென மிதித்துக் கொண்டிருந்தார். கோழிப்பண்ணை திருப்பம் என்பது ஹேர்பின் வளைவுக்கு ஒப்பானது. கடினப்பட்டு திருப்பும்போது, “ஹோல்டான்” சத்தம் கேட்டது. எரிச்சலாக பிரேக்கை மிதித்தார்.

உள்ளூர் அரசியலில் வளர்ந்துவந்த நாகரத்தினம் நாயக்கர்தான் குரல் கொடுத்தவர். “சைதாப்பேட்டை நூர்ஜகான் தியேட்டருக்கு குடும்பத்தோட படம் பார்க்கப் போறேன். எம் பொண்டாட்டி சேலை கட்டிக்கிட்டிருக்கா. திரும்ப வர்றப்போ. இதே இடத்துலே ‘ஹோல்டான்’ பண்ணிட்டு, ஆரன் அடி” என்று கட்டளையிட்டார். அவசத்தில் சரி, சரியென தலையாட்டிய ராஜூ, திரும்ப வரும்போது அந்த குறிப்பிட்ட இடத்தில் ‘ஹோல்டான்’ செய்ய மறந்துவிட்டார். நாயக்கரின் மனைவியோ வெளியே செல்லும்போது கொஞ்சம் கவனமெடுத்து குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்தையாவது சேலை கட்டுவதில் செலவிடுவார். சைதாப்பேட்டை போய்விட்டு, திரும்பவரும்போதுதான் இந்த விஷயமே ராஜூவுக்கு நினைவுக்கு வந்தது. கோழிப்பண்ணை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரில் மாபெரும் கூட்டமொன்று சாலைமறியலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார். நாகரத்தினம் நாயக்கர் தலைமையில் ஏராளமானோர், தலைவரது ஹோல்டான் கோரிக்கைக்கு மதிப்பு தராத பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் எதேச்சாதிகார ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கு எதிராக திரண்டிருந்தனர். இந்தியெதிர்ப்புப் போருக்குப் பிறகாக எம் மக்கள் தமிழுணர்வோடு கலந்துகொண்ட மாபெரும் போராட்டம் அது. வந்து நின்ற பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொஞ்சம் காரசாரமாகி கைகலப்பு வரை சென்று, படுகாயமான நிலையில் ஓட்டுனரையும், நடத்துனரையும் காவல்துறையினர் மீட்டனர். பிற்பாடு ஸ்தலத்துக்கு வந்த பல்லவன் போக்குவரத்துத் துறையின் பிரதான அதிகாரிகள், மக்கள் ‘ஹோல்டான்’ கோரிக்கை வைக்கும்போதெல்லாம், அதை தவறாமல் தங்கள் ஊழியர்கள் நிறைவேற்றுவார்கள் என்று வாக்குறுதி தந்தனர்.

காலம் கொசுவர்த்தி சுற்றி, அதுபாட்டுக்கும் விரைந்தோடியது. எங்கள் ஊரில் நிறைய மாணவர்கள் நங்கநல்லூருக்கும், ஆலந்தூருக்கும் போய் +1, +2 என்று மேற்படிப்பு படிக்க ஆரம்பித்தார்கள். ‘ஹோல்டன்’ என்று சொல்லப்படுவது ஆங்கில உச்சரிப்புப் பிழை என்பதை கண்டறிந்தார்கள். ‘ஹோல்ட் ஆன்’ என்று பிரித்து, மொழியைச் சிதைக்காமல் தெளிவாக உச்சரிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் தமிழார்வலரான கனகசபா செட்டியார் மட்டும், வடமொழிகலந்த ‘ஹோ’வை புறக்கணிக்கத் தொடங்கினார். இந்த காலக்கட்டத்தில் ஒத்தையடிப் பாதையாக இருந்த மடிப்பாக்கம்-வேளச்சேரி சாலை சீர்படுத்தப்பட்டு, 51-ஈ என்கிற புதியத்தடம் உருவாகி போக்குவரத்துப் புரட்சி மடிப்பாக்கத்தில் ஏற்பட்டிருந்தது. வேளச்சேரி விஜயநகருக்கும், கைவேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் இரவுவேளைகளில் கனகசபா வண்டியை நிறுத்துவார். “ஓல் டன்” என்ற ஓங்காரமான அவரது அலறலைக் கேட்டு, ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே ‘கீர்’ குறைத்துவிடுவார் வேம்புலி டிரைவர். பஸ் மெதுவாக அவருக்கு அருகில் வரும்போது, தாவி ஏறியவாரே மீண்டும் ஒருமுறை “ஓல் டன்” என்று கொஞ்சம் குறைந்த டெசிபலில் சொல்லுவார். கண்டக்டர் செல்வமும் அவரைப் பார்த்து மர்மமாக புன்னகைத்தவாறே, “டன் டன்.. டனா டன்” என்பார். கனகசபா அவரைப் பார்த்து வெட்கமாகச் சிரித்தபடியே, ஐம்பது காசு எடுத்து நீட்டி டிக்கெட் வாங்குவார். சைதாப்பேட்டையிலிருந்து கடைசி சிங்கிள் இரவு 8.40 வண்டியில் வழக்கமாக நடைபெறும் சம்பவமிது.

கனகசபா செட்டியார் காலமாகி நான்கு ஆண்டுகள் கழித்துதான் செல்வம் ஒருமுறை அந்த ரகசியத்தை எங்களிடம் சொன்னார். “விசயநகர் ஓரத்துலே குளத்தங்கரையை மடக்கிப்போட்டு செட்டியார் ஒரு குடிசை போட்டிருந்தாரு. ஒரு மாதிரி பொண்ணை, ஆந்திராவிலேருந்து தள்ளிக்கிட்டு வந்து வப்பாட்டியா அங்கிட்டு வெச்சிருந்தாரு”. செல்வத்தின் ‘டன் டன்.. டனா டன்-னு’க்கும், பதிலுக்கு செட்டியாரின் வெட்கச் சிரிப்புக்கும் அர்த்தம் அப்போதுதான் காலம் கடந்துப் புரிந்தது.

இப்போது ஊர் என்றே எங்கள் ஊரை சொல்லமுடியாது. மக்கள் நாகரிகம் ஆகிவிட்டார்கள். ஆடு, மாடெல்லாம் அபூர்வப் பிராணிகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் பேருந்து என்பது மனிதர்கள் மட்டுமே பயணிக்க, அரசாங்கத்தால் கருணையோடு செய்யப்படும் ஏற்பாடு என்பதை உணர்ந்துவிட்டார்கள். ‘ஹோல்டன்’ ‘ஹோல்ட் ஆன்’ போன்ற குரல்களை இப்போது கேட்க முடிவதில்லை. அந்த கலாச்சாரத்தை கடைப்பிடித்தவர்கள் கிட்டத்தட்ட எல்லோரும் இறந்துவிட்டார்கள். அல்லது மீதி பேர் நாகரிகமாகி விட்டார்கள். பேருந்தை கைகாட்டி நிறுத்தும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று தோன்றுகிறது. பேருந்து என்பது பேருந்து நிலையங்களில் நிற்கும். எனவே அங்கு சென்றுதான் ஏறவேண்டும் என்கிற ஒழுங்கியல்தன்மை எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

போனவாரம் எம்-45ல் தி.நகருக்குப் போய்க் கொண்டிருந்தேன். விஜயநகரை நெருங்கும்போது கரகாட்டக்காரன் செந்திலுக்கு ஏற்பட்ட அதே டவுட்டு எனக்கும் ஏற்பட்டது. “கனகசபை செட்டியார் வெச்சிருந்த ‘வைப்’பை இப்போ யாரு வெச்சிக்கிட்டிருப்பாங்க?”

14 கருத்துகள்:

  1. அந்த வைப்புக்கும் வயசாகியிருக்குமே!

    ஹால்டா கம்பெனி டைப்ரைட்டர் உதிரி பாகங்கள் மட்டுமல்ல. ஹால்டா (Halda) என்ற பெயரில் டைப்ரைட்டர்களும் தயாரித்த பெரியதொரு கம்பெனி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல ரைட்டிங் யுவா...

    பதிலளிநீக்கு
  3. கிழவிகளையும் உமது புறம் கூறல் விட்டுவைப்பதில்லையா?
    (போய் கூட சேர்ந்திருக்கலாம்.)

    பதிலளிநீக்கு
  4. திருநெல்வேலிப் பக்கம் யாரும் ஹோல்டான் சொல்லி வண்டியை நிறுத்தியதை பார்த்ததில்லை. எனவே முதன் முதலில் ஜெயகாந்தன் கதையில் படித்தவுடனே இந்த வார்த்தை பிடித்துப் போனது. ஆனால் சென்னை வந்த பிறகும் யாரும் சொல்லிக் கேட்டதில்லை!

    பதிலளிநீக்கு
  5. சிந்திப்பவன்10:02 AM, ஜூலை 02, 2012

    ரொம்ப அருமை..மிகவும் ரசித்து படித்தேன்..இவை நிகழ்ந்தேறியது எந்த வருடம்?

    பதிலளிநீக்கு
  6. லக்கி சார்,

    கூகிளில் தேடினால் கீழ்க்கண்ட தகவல் கிடைக்கிறது.

    The Rayala Corporation (P) Ltd. manufactured Halda typewriters in India with materials imported from Sweden.

    இயக்குனர் ஷங்கரும் ஆரம்ப காலத்தில் ஹால்டாவில் தான் பணியாற்றியதாகப் பல முறை சொல்லியிருக்கிறார்.

    நன்றி!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.in

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.... உங்க எழுத்து நடை நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. அருமையான நடை, வளம். சொல் பாங்கு. திடீர்ச் சிரிப்பு, தகவல் கொட்டல் என எத்தனை மேஜிக் உன் கைகளில். விரைவில் வெளிநாடுகள் பல சென்று, அந்த அனுபவத்தை எழுது ராஜா. கிருஷ்ணா வாழ்க.

    பதிலளிநீக்கு