2 ஜூலை, 2012

அமேஸிங் ஸ்பைடர்மேன்


நாமெல்லாம் அசடாக இருந்ததால்தான் சூப்பர் ஹீரோக்கள் தோன்றினார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு அசடு என்கிற நிலையில் இருந்து ஓரளவுக்கு பரிணமித்திருக்கிறோம். எதையும் தர்க்கத்தில் அடக்கி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். எனவே முன்புபோல ஹீரோ சிறகில்லாமல் வானத்தில் பறப்பார், விமானத்தையே அசால்ட்டாக தூக்குவார், அவரது கை துப்பாக்கி, கால் பீரங்கி என்றெல்லாம் டூமாங்கோலி வெளாட்டு விளையாட முடியாது என்பதை ஹாலிவுட்காரர்கள் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் கூட சூப்பர் ஹீரோவுக்கு தேவை இருக்கிறது.

ஏனெனில் நாம் இன்னும் பயந்தாங்கொள்ளிகளாகதான் இருக்கிறோம். ரோட்டில் எவராவது மயங்கி விழுந்துக் கிடந்தால் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே, “யாராவது சோடா எடுத்தாங்களேன்” என்று பதறிக்கொண்டுதான் இருக்கிறோம். அருகிலிருக்கும் கடைக்குப் போய் சோடா கொண்டுவந்து ஊற்றினால் போலிஸ், எஃப்.ஐ.ஆர், கோர்ட்டு என்று பிரச்சினை வருமோவென அச்சம். கொக்கரக்கோவென  நம்மை மாதிரி வெறுமனே கூவிக் கொண்டிருக்காமல் சோடா கொண்டு வருபவன் தான் சூப்பர்ஹீரோ. சுருக்கமாக சொன்னால் சாதா மனிதர்களின் இயலாமைக்கு சூப்பர் ஹீரோக்கள்தான் வடிகால்.

சூப்பர் ஹீரோவும் வேண்டும். லாஜிக் பிறழாமல் மக்கள் அவரை ஒப்புக்கொள்ளவும் வேண்டும். புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தி, அவரை மக்களுக்குப் பிடித்து தங்கள் கல்லாவை எப்போது ரொப்புவது என்று
கொலம்பியா பிக்சர்ஸ் யோசித்திருக்கிறது. ஏற்கனவே பிரபலமாகிவிட்ட ஒரு ஹீரோவுக்கு லாஜிக்கெல்லாம் ‘செட்’ செய்துப் பார்த்தால் என்ன? எனவேதான் ஸ்பைடர்மேனை ‘ரீபூட்’ செய்திருக்கிறார்கள்.

‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.

படத்தின் கதை என்ன?

இப்படி ஒரு கேள்வி கேட்டு, அடுத்த நாலு பாராவுக்கு கதை சொல்லி, நாலு படம் போட்டு இப்பதிவை தேத்தும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை என்பதால், படம் பார்த்து கதையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சும்மா ஒரு சிலந்தி கடித்துவிடுவதாலேயே ஒருவன் ஸ்பைடர்மேன் ஆகிவிட முடியாது என்கிற பேருண்மையை இத்தனைகாலம் மறைத்துவைத்திருந்த ஹாலிவுட்காரர்களை என்னதான் செய்யலாம். சாதாமேன் ஸ்பைடர்மேன் ஆவதிலிருந்து, அவனது கையில் இருந்து வலை எப்படி தோன்றுகிறது, அவனது உடையின் ஸ்பெஷல் என்ன என்பது வரை எல்லாப் பழியையும் அறிவியலின் தலையில் கட்டிவிட்டு, மரத்துப் போகும் ஊசி போட்டு வலிக்காத மாதிரி நைசாக காது குத்துகிறார்கள்.

சூப்பர்ஹீரோ ஒரு மக்கள் காவலன். மக்கள் அவனைக் கொண்டாடினாலும் அவனது தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது என்றெல்லாம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விதிகளை எல்லாம் தூக்கி குப்பைக் கூடையில் தைரியமாக கடாசியிருக்கிறார் இயக்குனர். புது ஸ்பைடர் மேன் சலிக்க, சலிக்க காதலிக்கிறார். காலில் குண்டு பாய்ந்தால், முள் குத்தினால் தூக்கி எறிந்துவிட்டு ஓடுவதைப் போல குண்டை பிய்த்துப் போட்டுவிட்டு ஓடுவது சூப்பர் ஹீரோத்தனம். புது ஸ்பைடர் மேன் அப்படியல்ல. நொண்டிக்கொண்டே ஓடுபவரால் வில்லனின் அராஜகத்தை தடுக்க முடியாது என்கிற நிலையில், மற்றவர்களின் உதவியோடு வில்லனை முறியடிக்கிறார். எல்லாப் புகழும் ஹீரோவுக்கே என்கிற நிலை இனி இல்லை. செத்துப்போனவருக்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை, அட்சரம் பிசகாமல் கடைப்பிடிக்கும் தூய்மைவாதத்துக்கெல்லாம் முடிவு கட்டிவிடுகிறார் ஸ்பைடர்மேன். அவர் ஸ்பைடர்மேனாக இருந்தாலும் சாதாரண ஆசாபாசங்களுக்கு உட்பட்டவராக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அநியாயத்துக்கு ஃபீல் குட் எஃபெக்ட். வில்லன் கூட எம்.ஜி.ஆர் படத்தின் நம்பியார், அசோகன், மனோகர் கணக்காக திருந்தி நல்லவர் ஆகிவிடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஹீரோயின் கொள்ளை அழகு. கோல்ட் ஹேர், லைட் க்ளிவேஜ் என்று அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அபாரம். மற்றபடி எடிட்டர் நன்றாக எடிட் செய்திருக்கிறார். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கேமிராமேன் சூப்பராக படம் பிடித்திருக்கிறார். அனிமேஷன் வெகுசிறப்பாக அமைத்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்‌ஷன் அபாரம். வழக்கமான ஒரு சூப்பர் ஹிட் சினிமா விமர்சனத்தில் இன்னும் வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென நினைக்கிறீர்களோ, அத்தனையையும் நீங்களே ஃபில்-அப் செய்து வாசித்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டர். பழைய பாடாவதி சூப்பர் ஹீரோக்களை எல்லாம் தூசு தட்டி, மீண்டும் தர்க்கரீதியாக ரீபூட்டி நிறுவ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மார்க் வெப். சிலந்தி மனிதன் குறித்த படத்தை இயக்கும் இயக்குனரின் பெயரிலும் ‘வெப்’ அமைந்து இருப்பது யதேச்சையான சுவாரஸ்யமாகவே இருக்கக்கூடும். இதையெல்லாம் யாராவது மெனக்கெட்டு ‘மேட்ச்’ செய்திருப்பார்களா என்ன?

10 கருத்துகள்:

  1. தோழர்,
    ஈரோட்டில் இந்த படத்தை ரிலீஸ் ஆன அன்று தேவி அபிராமி தியேட்டரில் பார்த்த துர்பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.

    கிட்டதட்ட 25 நிமிடங்களை தியேட்டர்காரர்களே எடிட்டராக மாறி (மனசுக்குள் ஆளுக்கொரு லெனின்- V.T.விஜயன் என்று நினைப்பு) கட் செய்து காட்டினார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ஹீரோவை சிலந்தி கடிக்கும் அந்த முக்கியமான காட்சியுமே கூட வெட்டப்பட்டதுதான்.

    காமிக்ஸ் தொடரில் வந்த கதையை அப்படியே வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து இருந்தாலும்,படம் என்னவோ சுமாராகவே தோன்றியது. இன்றோ நாளைக்கோ சென்னையில் ஆங்கிலத்தில் பார்த்து விட்டு என்னுடைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. படத்தின் கதை என்ன?

    இப்படி ஒரு கேள்வி கேட்டு, அடுத்த நாலு பாராவுக்கு கதை சொல்லி, நாலு படம் போட்டு இப்பதிவை தேத்தும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை என்பதால், படம் பார்த்து கதையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

    ஹா ஹா ஹா செமை பஞ்ச் லக்கி.. சிரிச்சிக்கிட்டு இருக்கேன்

    பதிலளிநீக்கு
  3. Stupid Review.. Its better to avoid writings such reviews.. If you dont know have sufficient knowledge on something.. Accept it and move on..

    பதிலளிநீக்கு
  4. அவெஞ்சர்ஸ் போன்ற படங்களை பொதுவாக கொலைவெறியொடு விமர்சிக்கும், வெறுக்கும் எனக்கே பார்க்கத்தூண்டுவதாக இருக்கு விமர்சனம்..

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்ஹீரோ படங்களை கொலவெறியோடு அனுகும் எனக்கே பார்க்கனும்ன்னு தோணவைக்கும் எழுத்து..

    பதிலளிநீக்கு
  6. லக்கி கோல்ட் ஹேர் என்று சொல்லக்கூடாது அதை ப்ளாண்ட் என்று சொல்ல வேண்டும்.:)

    பதிலளிநீக்கு
  7. Author always writes rambling reviews. Is not able to convey his thoughts in crisp manner.
    Instead of writing blah blah blah on all things under the sun, time for author to take a break.

    Wonder when was the last time author did some readings.

    பதிலளிநீக்கு