16 ஜூலை, 2012

பில்லா-2

பிரபாகரனை நேரில் போய் பார்த்துவிட்டு வந்தவர்கள்கூட இவ்வளவு தில்லாக தாம் இயக்கிய படங்களில் காட்சிகளை வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ராஜீவ்காந்தி கொலையை ‘இந்தியப் பார்வையில்’ படமாக்கிய குற்றப்பத்திரிகைக்கு கூட இங்கே தடைவிதிக்கப்பட்டது. ஆனால், பில்லா-2 படத்தின் டைட்டில் நேரடியாக ஈழத்தில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ அமைதிப்படையின் கொடூரங்களை பட்டியலிடுகிறது. இப்போது தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஓர் இனத்தின் நியாயமான வலியை கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வாயிலாக இரண்டரை, மூன்று நிமிடங்களில்  பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். “நாங்களெல்லாம் பாவமில்லையா?” என்று இதில் யாரும் இறைஞ்சவில்லை. டேவிட்பில்லாவின் சிறுவயதுக் காட்சிகள் என்கிற சாக்கில் ‘இதுதான் உண்மையில் நடந்தது’ என்று நெற்றியில் அடித்தாற்மாதிரி  நறுக்கென்று மவுனமொழியில் காட்சியாக்கி தருகிறார்கள். படம் பார்த்துவிட்டு ‘மொக்கை’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், பிலாக்கிலும் விமர்சனம் எழுதிய மொக்கைகள் எத்தனைபேர் இப்படத்தின் டைட்டிலை புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் அகதிமுகாம்களின் நிலை பற்றிய வர்ணனைகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றதாக தெரியவில்லை. லீனாமணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’ ஆவணப்படம் விதிவிலக்கு. ஓரளவுக்கு நந்தா, ராமேஸ்வரம் படங்களில் காட்சியாக்க முயற்சித்திருக்கிறார்கள் (வேறு சில படங்களும் இருக்கலாம், இவை நான் பார்த்தவை மட்டுமே). கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சபரி’யில்தான் அகதிமுகாம்களில் நம் அதிகாரிகளின் அத்துமீறல் நேரடியாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதுவும் கேப்டனின் ஹீரோயிஸத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான காட்சியாகவே அமைந்தது. படத்தின் தொடக்கத்தில் இரண்டு, மூன்று காட்சிகள்தான் என்றாலும் பில்லா-2வில் இது வலுவாக காட்டப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரே ஒரு காவல்துறை அதிகாரியைதான் காட்டியிருக்கிறார்கள். அகதிகளை நம் அதிகாரவர்க்கம் எதற்காகவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரநெடி ஏதுமின்றி இயல்பான முறையில் காட்டியிருக்கிறார்கள்.

இதற்காக பில்லா-2வை ஈழப்பிரச்சாரத் திரைப்படமாகவெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. முந்தைய அஜீத்தின் படவெளியீட்டின்போது ஈழத்தமிழர்களோடு அவருக்கு நேர்ந்த பிரச்னைக்கு பரிகாரமாககூட பார்க்கலாம். ஆனாலும், ‘சென்ஸாரில் தட்டிவிடுவார்களோ?’ என்றெல்லாம் அச்சப்படாமல் நேரடியாக சொல்ல நினைத்ததை நேர்மையாக சொல்லியிருப்பதற்காக பாராட்டலாம். ஒருவகையில் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் நியாயத்தை இந்தியத் திரைமொழியில் பேச பில்லா-2 பிள்ளையார்சுழி போட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

படத்தை முதல் நாள் முதல் காட்சி ப்ரீமியர் ரேட்டில் பார்த்த அணில் ரசிகர்கள் உடனடியாக எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், பிலாக், மொட்டைக் கடிதாசி என்று எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி, ‘படம் மொக்கை’ என்று பிரச்சாரம் செய்து, தம் கடமையை முடித்துக் கொண்டார்கள். இந்தப் பிரச்சாரம் வழக்கமாக அஜித்தின் எல்லாப் படங்களுக்கும் செய்யப்படுவதுதான். பில்லா-2 நிச்சயமாக ‘சுறா’வோ, ‘வில்லு’வோ அல்ல. அதே நேரம் பில்லா-1, மங்காத்தா அளவுக்கு கெத்துமில்லை. ஓரிருமுறை பார்க்கக்கூடிய படம்தான். அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கலாம். எந்த முன்முடிவுமின்றி பார்ப்பவர்களுக்கும் நல்ல படம் என்றே தோன்றும். சக்ரிடோலட்டிக்கு படமே எடுக்கத் தெரியவில்லை என்பவர்கள், தமிழில் இதற்கு முன்பாக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்கள் என்று எதை கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழின் ஒரு சராசரி இயக்குனரால் இப்படத்தின் தரத்தில் பாதியைக் கூட எட்டமுடியாது என்பதுதான் நிஜம். ப்ரீக்குவல் என்பதால் ஒருவேளை பில்லா-1ஐ விட அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்திருக்கலாம். ரசிகர்களும் கூட பில்லா-1க்கு முன்பாக நடக்கும் கதை என்கிற உணர்விலேயே படம் பார்த்தால், எவ்வளவு சுவாரஸ்யமாக முன்கதைச் சுருக்கத்தை சொல்கிறார்கள் என்பதை உணரலாம்.  அடுத்ததாக ஒருவேளை பில்லாவின் சீக்குவல் எடுக்கப்பட்டால் பங்களா கட்டி புகுந்து விளையாடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.

இதுபோன்ற கேங்ஸ்டர் படங்களுக்கு க்ரைம் அளவுக்கு செக்ஸும் ஒரு முக்கியமான அம்சம். பில்லா-1ல் நயன்தாரா, நமீதா என்று இந்த மேட்டர் அமர்க்களம். ஆனால் ஏனோ இப்படத்தில் ஏனோ ரொம்ப சைவமாக இருந்திருக்கிறார்கள். ஓங்குதாங்காக ரேஸ் குதிரை மாதிரி ப்ரூனோ அப்துல்லா இருக்கிறார். செம கட்டை என்று சொல்லமுடியாவிட்டாலும், சொல்லிக் கொள்ளும்படியாக ஓமணக் குட்டி இருக்கிறார். இருவரையும் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரிதான் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். அந்த பாலியல் விடுதி பாடல் காட்சியும் ஆகா, ஓகோவென்று இல்லை. ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்கிற திரைப்படத்தில் அபாரமாக எடுக்கப்பட்ட பாடல்காட்சி ஒன்றின், சுமார் பிரதியாகவே அப்பாட்டும் அமைந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் பில்டப் பாடல் நிச்சயமாக இதுவரை தமிழில் படமாக்கப்பட்ட மிகச்சிறப்பான பாடல் என்று சொல்லலாம். முழுக்க கிராஃபிக்ஸ், யுவன்ஷங்கரின் அதிரடி மியூசிக், நா.முத்துக்குமாரின் ஷார்ப் லிரிக்ஸ், அல்டிமேட் ஸ்டாரின் அதிரடி ஸ்டைல் என்று எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கும் பாட்டு இது. பில்லா-வின் தீம் மியூசிக் படத்தின் தொடக்கத்தில் எங்கும் வந்துவிடாத அளவுக்கு யுவன்ஷங்கர்ராஜா மிக ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார். டேவிட் பில்லா, டான் ஆகும் இடைவேளைக் காட்சியில்தான் (அதுவும் மெல்லியதாக) அந்த இசையைக் கொண்டு வருகிறார். அதுபோலவே பில்லா-1ல் வரும் இண்டர்போல் ஆபிஸர், ப்ரீக்குவலிலும் ஒரு காட்சியில் பில்லா சாதா ஆளாக இருக்கும்போது அவருக்கு அறிமுகமாகிறார். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தின் தொடர்ச்சி கெடாதவகையில், முன்கதையை கையாளுவது சாதாரணமான விஷயமல்ல. பில்லா-2 அவ்வகையில் பர்ஸ்ட் க்ளாஸில் தேறுகிறது.

படத்தின் வசனங்கள் ‘ஷார்ப்’ என்றாலும், ஓவர் புத்திசாலித்தனமோ என்றுகூட ஒருக்கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. பில்லாவின் உலகம் முட்டாள்கள் அற்றது என்று தோன்றுகிறது. ‘தல’ எதைப் பேசினாலும், அது ‘பஞ்ச்’ ஆகத்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனர், வசனகர்த்தாவிடம் கேட்டுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அக்கா செத்துப் போகும்போது சுடுகாட்டுக்கு வந்தும், ‘தல’ ஏதாவது பஞ்ச் வைத்துவிடுவாரோ என்று மனசு பதறுகிறது.

“இவர் சுட்டுக் கொண்டே இருக்கிறார், மற்றவர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றெல்லாம் படத்தை குறை சொல்பவர்கள், இதற்கு முன்பாக ஏதாவது சினிமா பார்த்திருக்கிறார்களா என்றே சந்தேகம் வருகிறது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் படமாக்கம், நடிகர்களின் ஃபெர்பாமன்ஸ், கேமிரா, எடிட்டிங் என்று தொழில்நுட்பரீதியாக சிறப்பான விருந்து பில்லா-2.

படம் மொக்கை. வேஸ்ட்டு. பில்லா இல்லை நல்லா என்றெல்லாம் எழுதினால் ஃபேஸ்புக்கிலும், பிளாக்கிலும் நூற்றி சொச்சம் ‘லைக்’, ’கமெண்டு’ எல்லாம் கிடைக்குமென்றாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ரிஸ்க் எடுத்து இதை சொல்கிறேன்.

அஜீத் ரசிகர்களுக்கு அட்டகாசம். ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விஷூவல் ட்ரீட். இந்த இரண்டு கேட்டகிரியிலும் இல்லாதவர்கள் பவர்ஸ்டாரின் ‘ஆனந்தத் தொல்லை’ ஆகஸ்ட்டில் வெளியாகும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதான்.

14 ஜூலை, 2012

Sorkam-1970/சொர்க்கம்1970/நடிகர் திலகத்தின் நட்டுக்குத்தலான படம்...


பில்லா-2 படத்தை நீங்கள் எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம். என்னால் அந்தப் படத்தை பார்க்க முடியாது. இயக்குனர் சக்ரா டொலாட்டி உங்கள் நண்பராக இருக்கலாம். அல்லது ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உங்களுடைய ஒன்றுவிட்ட மச்சானாக இருக்கலாம். அல்லது அஜித்குமார் உங்களுடைய வாசகநண்பராக கூட இருக்கலாம். இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு உங்களுடைய மலச்சிக்கல் கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய பிரச்சினையே வேறு.

நான் ஏன் பில்லாவை விட்டு விட்டு ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களுக்கு காரணம் சொல்லியே ஆகவேண்டும்.

ஏனெனில் எனக்கு இப்போது ’பில்லா’ டிக்கெட்டு கிடைக்கவில்லை. வாசக நண்பர் விஸ்வா போனமாசமே டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். நான், விஸ்வா, வாசக நண்பர் அதிஷா, வாசக நண்பர் சிவராமன், வாசக நண்பர் நாராயணன் ஆகியோர் போனோம். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்பதற்கு பதிலாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தப்பாக டைட்டில் போட்டார் தியேட்டர் ஆபரேட்மேன். அவருக்கு படமே போட தெரியவில்லை என்று கூறி டைட்டில் முடிவதற்கு முன்பாக எழுந்து வந்துவிட்டேன்.

நான் லோக்கல் என்பதால், லோக்கல் தியேட்டருக்குப் போய் முந்தாநாள் டிக்கெட் கேட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது என்று தியேட்டர் வாசலில் கடைவிரித்து பீடி, பான்பராக் விற்பவர் சொன்னார். ஒத்தா, என்ன படத்துக்குதான் டிக்கெட் கிடைக்கும் என்று இணையத்தில் தேடினேன். என் வாசக நண்பர் அதிஷா, மாம்பலம் சீனிவாசா தியேட்டரில் ‘சொர்க்கம்’ படத்துக்கு டிக்கெட் கிடைப்பதாக சொல்லி, அவரே ஆன்லைனில் ‘புக்’கும் செய்துவிட்டார். டிக்கெட் விலை ரூ.30 (பால்கனி) தான். ஆனால் பைக் பார்க்கிங் டோக்கன் ரூ.10 + ஆன்லைன் சர்வீஸ் சார்ஜ் ரூ.20 + குவார்ட்டர் நெப்போலியன் ரூ. 85 + அரை பாக்கெட் கிங்ஸ் ரூ.30 + நாலு மாணிக்சந்த் ரூ.24 என்று எக்ஸ்ட்ராவாக ரூ.169 செலவானது. ச்சீ.. நாய்களா.. பேய்களா.. குரங்குகளா.. சுண்டக்காய் எட்டணா.. சுமைக்கூலி எட்டு ரூபாயா?

நான் ஏன் ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். டைட்டிலை பார்த்துவிட்டு ஏதாவது ‘பிட்டு’ இருக்குமென்று முதலில் நினைத்தேன். ஆனால் தியேட்டர் முன்னால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கே.ஆர்.விஜயா படம் இருந்ததால் ‘அட்டு’ தான் இருக்குமென்று தெரிந்துகொண்டேன்.

மனமார ஒத்துக்கறேன். கே.ஆர்.விஜயா சிக்கென்றுதான் இந்த வயதிலும் இருக்கிறார். 1970ல் காஞ்சிபுரத்தில் இந்தப் படத்தை என்னுடைய அப்பா பார்த்தபோதும் அப்படியேதான் இருந்திருக்கிறார். எனக்கு கே.ஆர்.விஜயாவை ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவர் கற்பகம் படத்தில் மன்னவனே அழலாமா என்று அழுதுக்கொண்டே பாடுவார்.

 = = = = = = = = = =

சொர்க்கம் படத்தின் ஓன்லைன் என்ன?

சிவாஜி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக் கொள்கிறார். இதனால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

 = = = = = = = = = = 

சொர்க்கம் படத்தின் கதை என்ன?

சிவாஜி ஒரு வேலையில்லா பட்டதாரி. ரொம்ப வெயில் அடித்ததால் அவர் வேப்பமரம் முன்பாக நிழலுக்கு உட்காருகிறார். அப்போது ஜிக் ஜிக்கென்று ஆட்டிக்கொண்டு டூபிஸில் ஒரு பெண் டேன்ஸ் ஆடுகிறார். சிவாஜி ‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’ என்று டி.எம்.எஸ். மாதிரி கஷ்டப்பட்டு மிமிக்ரி செய்து பாட்டு பாடுகிறார். பாட்டு முடியும் போது வேப்பமரத்தில் இருந்து வேப்பங்காய் விழுவதற்கு பதிலாக பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டுகிறது.

சிவாஜி பணக்காரர் ஆகிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே அவர் ஏழையாகி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக்கொள்ளும் படி காட்டுவது எடிட்டர் சரியாக வேலை பார்க்கவில்லை என்பதை காட்டுகிறது. பணக்காரர் ஆன சிவாஜி தண்ணி அடிக்கிறார். தம்மும் அடிக்கிறார். அது கே.ஆர்.விஜயாவுக்கு பிடிக்கவில்லை. சிவாஜி பேசாமல் கே.ஆர்.விஜயாவுக்கும் தம்மையும், சரக்கையும் பழக்கப்படுத்தி இருந்தால் கதை இண்டர்வெல்லிலேயே முடிந்துவிட்டிருக்கும்.

இரண்டாம் பாதியில் மனோகர் நல்லவனாக வருகிறார். திடீரென்று அவரே கெட்டவனாக மாறுகிறார். கடைசியில் மீண்டும் நல்லவனாக வருகிறார். ஒரு காட்சியில் நல்லவனும், கெட்டவனுமாக இரண்டு மனோகரும் ஒன்றாக வருகிறார்கள். இப்படி முன்னுக்கு பின் முரணாக நான் லைனராக எனக்கு பிடித்த ஹாலிவுட் இயக்குனர் கிரிஷ்டாபர் லோலன் மாதிரி படமெடுத்திருக்கிறார் இயக்குன நண்பர் டி.ஆர்.ராமண்ணா. வாசக நண்பர் அதிஷாவோ அப்படியில்லை, மனோகர் டபுள் ஆக்சன் என்று ஒரு புதிய கோணத்தை சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம். ஆகமொத்தம் நம் வாழ்க்கை முக்கோணம்.

படம் முடியும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு அழுகை வந்தது. ஏனென்றால் பாக்கெட்டில் வைத்திருந்த தம்மு பாக்கெட்டையும், மாணிக்சந்தையும் டிக்கெட் கிழிக்கும்போது செக்யூரிட்டி செக் செய்து பறித்துவிட்டான்.

  = = = = = = = = = =

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதன்முதலாக நடிகர் திலகம் தண்ணி அடிக்கிறார். சரக்கில் தண்ணி ஊற்றாமலேயே கல்பாக அடிக்கிறார். எனக்கெல்லாம் சோடாவோ, கோக்கோ இல்லாமல் சரக்கு அடிக்க முடியாது. சரக்கு அடித்ததும் காருக்கு வருகிறார். டிரைவர் ஏதோ சொல்லவருகிறார். உடனே “சொல்லாதே யாரும் கேட்டால்” என்று பாடுகிறார். டிரைவர் யாரிடமும் இவர் தண்ணியடித்ததை சொல்லவில்லை. நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவிடம் இதை சொல்லவில்லை. ஆனால் கே.ஆர்.விஜயா இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாக கண்டுபிடிக்கிறார். எப்படி என்பதுதான் சஸ்பென்ஸ். நானாக யூகித்துக்கொண்டேன். வாசனை வந்திருக்கும் கண்டுபிடித்திருப்பார் என்று.

நடிகர் திலகம் சிவாஜிக்கு இந்த படம் மைல்கல் என்பேன். ஏனெனில் இரண்டாம் பாதி முழுவதும் அவர் காரிலோ, டிரைனிலோ பயணம் செய்துக்கொண்டே இருக்கிறார்.

கேமிராமேன் அசத்தி இருக்கிறார். ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்’ பாட்டில் புடவை கட்டிக்கொண்டு கே.ஆர்.விஜயா பாட, மற்ற பெண்கள் எல்லோரும் என்ன டிரெஸ் என்பதே தெரியாத டிரெஸ் அணிந்து ஆட, சிவந்த கண்களோடு நடிகர் திலகம் நைசாக கே.ஆர்.விஜயாவுக்கு டிமிக்கி கொடுத்து பாலாஜியோடு போய் ஒரு ‘கட்டிங்’ விட்டு வர, அனைத்தையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் கேமிராமேன்.

சரி படத்துக்கு ஏதாவது திருஷ்டிபூசணிக்காய் உடைக்க வேண்டும் அல்லவா?

நான் 1992ல் பார்த்த தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் வயசானவராக இருந்தார். 1998ல் பார்த்த படையப்பா படத்தில் தேவர்மகனை விட ஆறுவயது கூடுதலாக இருந்தார். ஆனால் 2012ல் பார்க்கும் சொர்க்கம் படத்தில் மட்டும் முப்பது, முப்பத்தைந்து வயது வாலிபனாக வருகிறார். நியாயமாக பார்க்கப்போனால் படையப்பாவை விட 14 ஆண்டுகள் அதிகம் ஆன முதியவராக அல்லவா இருக்கவேண்டும்? இந்த லாஜிக்கை மட்டும் இயக்குனர் சரி செய்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும்.

 = = = = = = = = = = 

ஃபைனல் கிக் : படம் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியாது. உங்களுக்கு பிடிக்காதா என்றும் தெரியாது. பதிவு போடுவதற்காக பார்த்தே தீரவேண்டிய படம்.


11 ஜூலை, 2012

இந்த காதலுக்கு எத்தனை கோணம்?


சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து ஏதாவது ஒன்று இருக்கும்தானே? வேதாளம் சொன்ன கடைசிக் கதைக்கு விக்கிரமாதித்தனால் விடை சொல்ல முடியவில்லையாம். நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பஞ்சாயத்து ஒன்று அப்படிப்பட்டது. கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனரோ, கூடுதல் கமிஷனர்களோ மக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறுவது ஒரு சடங்கு. அந்த சடங்கின்படி நேற்று கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் புகார்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

பரங்கிமலையிலிருந்து ஓர் நடுத்தர வயது ஆள் புகார் கொடுக்க வந்திருந்தார்.

“என்ன பிரச்சினை?” கமிஷனர் கனிவாக கேட்டார்.

“என் கூட இருந்த பொண்ணை ஒருத்தன் தள்ளிக்கிட்டு போயிட்டான்”

“கூட இருந்த பொண்ணுன்னா.. மனைவியையா?”

“இல்லை. என் மனைவியை அவன் எப்பவோ தள்ளிக்கிட்டுப் போயிட்டான்”

“அப்போ உன் கூட இருந்த பொண்ணு”

“அவனோட மனைவி”

“புரியலை”

“நான் வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்த பொண்ணை அவளோட முன்னாள் கணவன் கூட்டிக்கிட்டுப் போயிட்டான். அவ இல்லாமே என்னாலே வாழ முடியாது. நீங்கதான் பெரிய மனசு பண்ணி எங்களை சேர்த்து வைக்கணும்”

கூடுதல் கமிஷனருக்கு ‘கிர்’ரடித்திருக்கிறது. கொஞ்சம் தெளிவாக பின்கதைச் சுருக்கத்தை எடுத்தியம்புமாறு அந்த மறத்தமிழனிடம் கெஞ்சியிருக்கிறார்.

பரங்கிமலையில் வசிக்கும் அவர் இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு திருமணம் ஆகியிருக்கிறது. மனைவியோடு இல்லறத்தில் இன்பமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென ‘இடி’ விழுந்தது பக்கத்துத் தெரு இளைஞர் ஒருவரால். இளைஞரின் கவர்ச்சியில் மயங்கிவிட்ட இவரது மனைவி அவரோடு ஓடிவிட்டார்.

இனிய இல்லறம் புயலாய் தடைபட்ட விரக்தியில் வாடிய நம் ஹீரோவின் வாழ்வில் மீண்டும் தென்றல் வீசத் தொடங்கியது. பக்கத்துத் தெரு பைங்கிளி ஒன்று இவருக்கு ஆறுதலாய் அமைந்தது. அது வேறு யாருமல்ல. இவருடைய மனைவியை தள்ளிக்கொண்ட சென்ற இளைஞரின் மனைவி. எனக்கு நீ துணை. உனக்கு நான் துணை என்று பாதிக்கப்பட்ட இருவரும் இணைந்து புது அத்தியாயம் எழுதத் தொடங்கினார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, மீண்டும் புயல். இவர் வேலைக்குச் சென்றிருக்கும் நேரத்தில், அதே இளைஞர் பூர்வாசிரம நினைவு வந்து அவ்வப்போது வந்துச் சென்றிருக்கிறார். பைங்கிளியும் தன் முன்னாள் கணவரின் கவர்ச்சிக்கு முன்பாக மதியிழந்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் இவரும் அவருடனேயே ஓட்டம் பிடித்தார்.

அடுத்தடுத்து இரண்டு துணைகளையும் ஒரே இளைஞரிடம் பறிகொடுத்த ஆற்றாமை தாங்காமல் உள்ளூர் பஞ்சாயத்து, போலிஸ் ஸ்டேஷன் என்று தனக்கு சாத்தியப்பட்ட எல்லா இடங்களுக்கும் சென்று தன் பிரச்னையை தீர்த்துவைக்குமாறு கோரியிருக்கிறார் நம் ஹீரோ. இவருடைய கதையை கேட்ட எல்லோருமே “நீ ஹாலிவுட்லே பொறந்திருக்க வேண்டிய ஆளு” என்று பாராட்டினார்களே தவிர, தீர்வுக்கு முன்வரவில்லை. கடைசியாகதான் கமிஷனர் ஆபிஸ் கதவைத் தட்டியிருக்கிறார்.

“இப்போ என்னய்யா பிரச்னை? உன் பொண்டாட்டியை உன் கூட சேர்த்து வைக்கணுமா?” கூடுதல் கமிஷனர் கொஞ்சம் டென்ஷனாகவே கேட்டிருக்கிறார்.

ஹீரோ உடனே மறுத்திருக்கிறார். தனக்கு தன்னுடைய மனைவி வேண்டாம். அவளைவிட அவனுடைய மனைவியைதான் பிடித்திருக்கிறது. அவளோடு மட்டும் சேர்த்துவைத்தால் போதுமென கேட்டுக் கொண்டார்.

கமிஷனர் ஆபிஸே கதிகலங்கிப் போய்விட்டது. நூற்றாண்டு கண்ட சென்னை ஆணையாளர் அலுவலகம் எத்தனையோ விசித்திர வழக்குகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. ஆனால் இப்படியொரு வழக்கு வருவது வரலாற்றில் இதுதான் முதன்முறை.

சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையாக திடீரென ஒரு சுவையான ட்விஸ்ட். ஹீரோ கமிஷனர் ஆபிஸுக்குப் போயிருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட வில்லன், வள்ளி தெய்வானை சமேதரராய் திடீரென்று ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். “அவருக்கு ஏதாவது ஒண்ணு வேணும்னா, இந்த ரெண்டுலே எது இஷ்டப்படுதோ அது அவராண்ட போய்க்கட்டும்” என்று பெருந்தன்மையும் காட்டியிருக்கிறார். ஆனால் ரெண்டுக்குமே ஹீரோவைவிட வில்லனைதான் ரொம்பவும் பிடித்திருக்கிறது. ரெண்டுமே அவரோடு போக இஷ்டப்படவில்லை. ஒற்றுமையாக வில்லனோடேயே உன்னதமாக வாழ விருப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கண்ணகிகள் இருப்பதால் இந்தியா இரண்டாயிரத்து இருபதுக்கு முன்பாகவே வல்லரசு ஆகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு இயல்பாகவே பிறக்கிறது.

ஆனால், நம் ஹீரோவோ தீர்வு கிடைக்காமல் இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று ஒற்றைக்காலில் தவம் நின்றார். முக்கோணக் காதலை கேள்விப்பட்டிருக்கிறார் கூடுதல் கமிஷனர். நான்கு பேர் பங்கு கொண்டிருக்கும் இந்த விசித்திரமான காதலுக்கு எத்தனை கோணங்கள் என்று புரியாமல் தாவூ தீர்ந்துப்போய் டரியல் ஆகிவிட்டவர், இந்தப் பஞ்சாயத்துக்கு நான் தீர்ப்பினை சொல்லுவதைவிட, பரங்கிமலை உதவி கமிஷனர் தீர்வு சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது அவருடைய ஏரியா என்று நைஸாக பாலை அந்த சைடு ஒரு தட்டு தட்டிவிட்டார்.

இன்று விடிகாலையிலேயே தினகரன் நாளிதழில் இச்செய்தியை வாசித்த பரங்கிமலை உதவி கமிஷனர், கூடங்குளத்துக்கு அந்தப்பக்கமாக எங்காவது தண்ணியில்லாத காட்டில் போஸ்டிங் கிடைக்குமாவென்று டிரான்ஸ்பருக்கு அலைந்துக் கொண்டிருப்பதாக பராபரியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 ஜூலை, 2012

ராட்சஷன்


இந்தளவுக்கு நெஞ்சை நாக்கால் தடவ வேண்டுமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையை படித்து முடித்ததும் எழாது. ஏனெனில் கமர்ஷியல் சினிமாவை சுவாசிப்பவர்கள் அனைவரும் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்து மாதக் கணக்கில் அலுப்பில்லாமல் பேசவே செய்வார்கள்.

உலகிலேயே தொடர்ந்து 3வது  ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கப் போகிறவர், இவர் மட்டும்தான். அதனால்தான் விலை போகக் கூடிய நட்சத்திரங்கள் இல்லாத போதும் இவர் இயக்கி வரும் ‘ஈகா’ தெலுங்கு படத்துக்கு ரூ.30 கோடி வரை செலவிட்டிருக்கிறார்கள்.

எப்படியும் ‘ஈகா’வின் தமிழ் வடிவமான ‘நான் ஈ’ குறித்து அப்படம் வெளியாகும் தருணத்தில் இதே ‘தினகரன் வெள்ளி மலரி’ல் செய்தி வரத்தான் போகிறது. ஸோ, படம் குறித்த விவரங்களை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஓவர் டூ ராஜமவுலி.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரெய்ச்சூரில் பிறந்த இவர், வளர்ந்தது, படித்தது எல்லாம் ராஜமுந்திரி அருகிலுள்ள கோவூரில். ஆனால், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. அப்பா, விஜயேந்திர பிரசாத், தெலுங்கு படங்களுக்கு கதாசிரியராக இருந்ததால் இயல்பாகவே சினிமா மீது இவருக்கு நாட்டம் பிறந்தது. குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 1985ல் பூஜை போடப்பட்ட ‘லார்ட் கிருஷ்ணா’ படத்துக்கு இவரது அப்பாதான் கதாசிரியர். இயக்கம், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தந்தையும் இவரது மாமாவுமான ஷிவதத்தா. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் படம் நின்று விட்டது. 
பின்னர் ஒரு வருடம் வரை படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்விடம் உதவியாளராக பணிபுரிந்து விட்டு ஏவிஎம் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு தன் அப்பாவிடமே 7 வருடங்கள் வரை உதவியாளராக இருந்தார். இந்த காலகட்டங்களில் சென்னையில்தான் ராஜமவுலி வசித்தார்.

அப்பாவுடன் சேர்ந்து சினிமாக்களுக்கு கதை எழுத ஆரம்பித்த இவர், தன் அப்பாவின் சார்பாக பல இயக்குநர்களிடம் கதை சொல்லியிருக்கிறார். அவை தெலுங்கில் திரைப்படமாகவும் வெளி வந்திருக்கின்றன. ஆனால், இவர் மனதில் உருவான கற்பனையின் எல்லையைக் கூட அப்படங்கள் தொடவில்லை.

இந்த வருத்தமே வெறியான போது சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இவரது குடும்பம் முடிவு செய்தது. இவரது அப்பாதான் இயக்கம். ஆனால், ‘அர்த்தாங்கி’ என்னும் அந்தப் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கடன் சுமை. இதை அடைக்க வேண்டுமென்றால் ராப்பகலாக உழைக்க வேண்டும். அதற்கு சென்னையை விட, ஹைதராபாத்தான் சரியான இடம்.

எனவே, ஹைதராபாத்துக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. கங்காராஜு தனது இரண்டாவது படத்தை இயக்க அப்போது முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். ஆனால், அந்தப் படம் தொடக்கத்திலேயே நின்றுவிட்டது. இதன் பின்னர், பழம்பெரும் தெலுங்கு இயக்குநரான கே.ராகவேந்திரராவ்விடம் கடைசி உதவியாளராக சேர்ந்தார். அப்போது சின்னத்திரை தொடர்களை அதிகமும் கே.ராகவேந்திரராவ் இயக்கி வந்த நேரம். ‘சாந்தி நிவாசம்’ உட்பட எண்ணற்ற மெகா தொடர்களில் உதவி இயக்குநராக, ஷெட்யூல் டைரக்டராக, செகண்ட் யூனிட் இயக்குநராக பணிபுரிந்தார். இவரது அசுர உழைப்பை பார்த்து ராகவேந்திரராவ் சூட்டிய பெயர்தான், ‘ராட்சஷன்’.
என்றாலும் சீனியர் உதவியாளர்களுக்கு கிடைத்த மரியாதையும், அங்கீகாரமும் இவருக்கு கே.ராகவேந்திரராவ்விடம் கிடைக்கவில்லை. மெல்ல மெல்ல சினிமா தயாரித்ததால் ஏற்பட்ட கடன் அடைந்தது.

இந்தநேரத்தில்தான் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், எழுதி தயாரித்தார். உண்மையில் அவரது ஃபர்ஸ்ட் அசிஸ்ட்டெண்ட் ஆன வர முடாபள்ளிதான், இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் இயக்கி வந்த சின்னத்திரை தொடர் ஒன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால், சினிமா வாய்ப்பு ராஜமவுலிக்கு கிடைத்தது.

கதை, திரைக்கதை, வசனம் உட்பட சகலத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. ஆனாலும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’, கே.ராகவேந்திரராவ் பெயரை தாங்கியே வந்தது. அத்துடன் டைரக்ஷன் மேற்பார்வை என்றும் அவர் பெயர் பொறிக்கப்பட்டது. இதனால் படம் பம்பர் ஹிட் அடித்தபோதும், ராஜமவுலிக்கு எந்த கிரெடிட்டும் கிடைக்கவில்லை.

ஆனால், கே.ராகவேந்திரராவுக்கு இவரது திறமையும், அசுர உழைப்பும் புரிந்தது. தனது மகன் சூர்ய பிரகாஷை வைத்து ஃபேன்டஸி படம் ஒன்றை இயக்க இவரை ஒப்பந்தம் செய்தார். போறாத வேளை... சூர்ய பிரகாஷ் நடித்த முதல் படமான ‘நீத்தோ’ அட்டர் ப்ளாப். எனவே உருவாக்கத்திலேயே ராஜமவுலியின் இரண்டாவது வாய்ப்பு நசுங்கியது.
ஊரெல்லாம் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், இயக்கியதாக பேச்சிருந்ததால் இவரை நம்பி படம் தர யாரும் முன்வரவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வாய்ப்புக்காக போராடினார்.

அந்த சமயத்தில்தான் ‘விஎம்சி பேனர்’ என்னும் தயாரிப்பு நிறுவனம், ஜூனியர் என்டிஆரை வைத்து ‘கொரடு’ என்னும் படத்தை தொடங்கியிருந்தது. ஆனால், படம் வளரவில்லை. பின்னர் உதயசங்கர் இயக்கத்தில் அதே புராஜக்டை ஆரம்பித்தார்கள். அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் வழியாக தயாரிப்பாளரை சந்தித்து ஒரு கதையை சொன்னார், ராஜமவுலி. அனைவருக்கும் அந்த நெரேஷன் பிடித்திருந்தது. அப்படி உருவான படம்தான், பல ரிக்கார்டுகளை முறியடித்த ‘சிம்மாத்ரி’. உண்மையில் பி.கோபால் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பதாக இருந்த சப்ஜெக்ட் அது.

இந்தப் பட வெற்றிக்கு பிறகுதான் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை ராஜமவுலி இயக்கினார் என்பதையே உலகம் ஒப்புக் கொண்டது! மூன்றாவதாக இந்தியாவில் யாருக்குமே அறிமுகமாகாத ரெக்பி விளையாட்டை மையமாக வைத்து ‘சை’ படத்தை இயக்கினார். படம் ஹிட் என்பதுடன் உலகளவில் ரெக்பி விளையாட்டை துல்லியமாக காண்பித்த மூன்றே படங்களில் இதுவே முதன்மையானது என்ற பெருமையையும் பெற்றது.

இந்தப் படத்தின் போதுதான் தனது ஒளிப்பதிவாளரை ராஜமவுலி கண்டு பிடித்தார். அவர்தான், செந்தில்குமார். ஆந்திராவில் செட்டில் ஆன தமிழ் குடும்பத்தை சேர்ந்த அவர், பூனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ‘அய்தே’ அவரது முதல் படம்.

ராஜமவுலியின் தொடர் வெற்றிக்கு காரணம், டீம் ஒர்க்தான். ஆரம்பத்தில் யாரிடம் உதவியாளராக இருந்தாரோ அந்த கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்தான் இன்று வரை இவரது அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பாளர். இசை, எம்.எம்.கீரவாணி என்கிற மரகதமணி. கலை ஆர்.ரவீந்தர். ஒளிப்பதிவு, செந்தில்குமார். இந்த காம்பினேஷனை இவர் மாற்றியதேயில்லை.

ப்ரீ புரொடக்ஷன் நிலையிலேயே தனது குழுவுடன் அமர்ந்து காட்சிகள் அனைத்துக்கும் ஷாட் பிரித்து விடுவார். எந்தெந்த ஷாட்டுக்கு என்னென்ன கேமரா, லென்ஸ் வேண்டும், ஜிம்மி ஜிப்பா அல்லது சாதாரண கேமராவா; ஆர்ட் டைரக்டர் என்ன செய்ய வேண்டும்; எந்த இடத்தில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்... என சகல விஷயங்களையும் அந்தந்த இலாக்காவுடன் பேசி தீர்மானித்து விடுவார். இதனால் இவரது குழுவை சேர்ந்த அனைவருக்கும் அனைத்தும் அத்துப்படி ஆகிவிடும்.

சமயங்களில் இவரது குழுவுக்குள் சண்டை வருவதும் உண்டு. ‘எமதொங்கா’வில் அப்படி கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் முட்டி மோதிக் கொண்டார்கள். எமலோகம் செட்டை அற்புதமாக ஆர்.ரவீந்தர் போட்டிருந்தார். ஆனால், செந்தில்குமார் டல் லைட்டிங் கொடுத்திருந்தார். இப்படி செய்தால் ரசிகனுக்கு, தான் அமைத்த செட் போய் சேராது என்பது ரவீந்தரின் வாதம். பிரகாசமான லைட்டிங் கொடுத்தால் ஷேடோ விழும் என்பது செந்தில்குமாரின் நியாயம். அப்போது பலூன் லைட்டிங் நடைமுறைக்கு வரவில்லை. இந்த வாக்குவாதத்தை அடுத்துதான் அந்த டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டது. யெஸ், வீட்டில் எரியும் பல்புகளை செந்தில்குமார் கூடுதலாக பயன்படுத்தினார். இதனால் நகைகளும் ‘டால்’ அடித்தன. ரவீந்தரின் உழைப்பும் ரசிகர்களுக்கு தெரிந்தது. ஷேடோவும் விழவில்லை.

இப்படி ராஜமவுலி கொடுத்த சுதந்திரத்தால் வளர்ந்ததால்தான் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இந்தியாவின் டாப் மோஸ்ட் சிஜி பட ஒளிப்பதிவாளராக கொண்டாடப்படுகிறார். ‘எமதொங்கா’, ‘அருந்ததி’, ‘மகதீரா’ என அவர் பேர் சொல்லும் படைப்புகள் ஏராளம்.

அந்தவகையில் ‘ஈகா’வும் சரிபாதி சிஜி ஒர்க் உள்ள படம்தான். சொல்லப் போனால் ராஜமவுலியின் கனவுப் படம் இது. ஆனால், இந்தக் கனவை உடனடியாக இவர் நடைமுறைப்படுத்தவில்லை.

தனது நான்காவது படமான ‘சத்ரபதி’யில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் சிஜி ஒர்க்கை பயன்படுத்தினார். சுறாவுடன் நாயகன் பிரபாஸ் சண்டை போடும் காட்சி அது. திரையில் அது சரியாக வரவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அந்தளவுக்குதான் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என சமாதானம் அடைந்திருக்கலாம்.

அப்படி தேற்றிக் கொள்ள ராஜமவுலி விரும்பவில்லை. ஆர்ட் டைரக்டரில் ஆரம்பித்து, ஒளிப்பதிவாளர் வரை சகலரும் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கல்லூரி மாணவன் போல் தானும் கசடற கற்றார். அதற்கான பலனை தனது அடுத்தப் படமான ‘எமதொங்கா’வில் அறுவடை செய்தார்.

எமனது அரண்மனை அந்தரத்தில் தொங்கும். முகப்பு எருமை முகத்துடன் கம்பீரமாக இருக்கும். குறிப்பாக பாசக் கயிறை பறிகொடுத்த எமன் (மோகன் பாபு), மீண்டும் அக்கயிற்றை ஜூனியர் என்டிஆரிடமிருந்து கைப்பற்றியதும் அந்த எருமை முகம் சிலிர்த்து எழும். அட்டகாசமான சிஜி ஒர்க் அது. குறிப்பாக மறைந்த என்டிஆர் தனது பேரனுடன் டான்ஸ் ஆடும் காட்சி... செம.

இதனையடுத்து ‘விக்கிரமார்க்குடு’வை இயக்கினார். பம்பர் ஹிட். பின்னர் ‘மகதீரா’வை பிரமாண்டமாக இயக்கினார். படம், ஆல் டைம் ரிக்கார்ட். தான்,உட்பட, தனது குழுவை சேர்ந்த அனைவரும் தயாராகி விட்டார்கள். இனி கனவுப்படமான ‘ஈகா’வுக்கு போகலாம் என முடிவு செய்தார். ஆனால், இதுவரை மாஸ் நடிகர்களின் படங்களைதான் இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். ‘ஈகா’வுக்கு பெரிய நட்சத்திரங்கள் தேவையில்லை. சின்ன நட்சத்திரங்கள் போதும். எனில், அதிகம் அறியப்படாத நடிகர்களை வைத்து தன்னால் வெற்றிப் படத்தை கொடுக்க முடியுமா? பரிசோதிக்க முடிவு செய்தார். காமெடியன் சுனிலை கதையின் நாயகனாக்கி ‘மரியாத ராமண்ணா’வை இயக்கினார். படம், ப்ளாக் பஸ்டர்.

ரைட். இனி, ‘ஈகா’தான் என்று களத்தில் இறங்கி விட்டார். நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இது வில்லனுக்கு பிடிக்கவில்லை. எனவே நாயகனை கொன்று விடுகிறான். இறந்த நாயகன் ஈயாக பிறக்கிறான். வில்லனை பழி வாங்குகிறான். இதுதான் ‘ஈகா’வின் கதை. ஆனால், ஈயின் மொத்த ஆயுட்காலமே 21நாட்கள்தான். அதற்குள் சர்வ வல்லமை படைத்த மனிதனை அதனால் எப்படி பழி வாங்க முடியும்? இதைத்தான் பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளும், படம் முழுக்க நூலாக ஓடும் சென்டிமெண்ட்டும், வலுவான ப்ளாஷ்பேக்கும் ராஜமவுலியின் அடையாளங்கள். இந்த ஏரியாவில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக் பவர் ஃபுல்லாக இருக்கும். சுருக்கமாக சொல்வதெனில் மாஸ் படங்களிலும் ஃபெர்பக்ஷனை கொண்டு வர முடியும் என்று காட்டியவர், இவர்தான். அதனால்தான் ‘தேவ் டி’ படம் வழியாக உலகெங்கும் புகழ் பெற்ற அனுராக் காஷ்யப், ‘ஈகா’வின் டிரெய்லரை எவரெஸ்ட் உயரத்துக்கு தனது டுவிட்டர் தளத்தில் புகழ்ந்திருக்கிறார்.

நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் டெக்னீஷியன்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ராஜமவுலியின் ‘ஈகா’வுக்காக இந்தியாவே ரத்தின கம்பளம் விரித்து காத்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கிடைத்திருக்கும் உச்சபட்ச மரியாதை இது.
 
ஒன்று மட்டும் நிச்சயம். ஜூன் மாதம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் அதிரப் போகிறது. சாதாரண ஈ, ஒட்டு மொத்த திரையுலகையும் புரட்டிப் போடப் போகிறது. அனைத்து ஸ்டார் நடிகர்களையும் விட, இயக்குநரே உயர்ந்தவர் என்பது நிரூபணமாகப் போகிறது.

சந்தேகமேயில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது இன்று வெறும் பெயரல்ல. அது, இந்திய மாஸ் சினிமாவின் விலை மதிப்பற்ற பிராண்ட் நேம்.

- கே.என்.சிவராமன்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர் 
27.04.2012)

5 ஜூலை, 2012

பிழியப் பிழிய காதல்!


ஒரு கோடைக்காலத்தில், அவன் அவளை சந்திக்கிறான். மஞ்சள் வண்ண மழை ஆடையில் தேவதையைப் போல வசீகரிக்கிறாள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்கிறாள். இருவரும் பள்ளி மாணவர்கள். அவனுக்கு அடுத்த இருக்கையில் அவள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்வது அவளது வழக்கம்.

“நான் வேற்றுக் கிரகத்தைச் சார்ந்தவள். என்னைத் தொடுபவர்கள் எல்லாம் மறைந்து விடுவார்கள் என்பது நான் பிறந்தபோதே பிறப்பிக்கப்பட்ட சாபம். என்னை முதலில் தொட்ட என் தாய் இறந்துவிட்டாள். சில காலத்துக்குப் பிறகு என் தந்தையும் மறைந்தார்!”

மற்ற குழந்தைகள் அவளைத் தொட அஞ்சுகிறார்கள். அவனுக்கு மட்டும் அவளைத் தொட்டுப் பேச ஆசை. மழை பொழிந்த ஒரு மாலையில், மழைக்கு ஒதுங்கிய இடத்தில் முதன்முறையாக அவளை அணைத்தமாதிரியாக உட்காருகிறான். மறுநாள் அவனுக்கு பயங்கரக் காய்ச்சல். அதன்பிறகு அவளை எங்குமே காணவில்லை. மாயமாக மறைந்து விடுகிறாள்.

கால ஓட்டத்தில் ஆண்டுகள் காணாமல் போக, அவள் மீண்டும் அவனை தொடர்பு கொள்கிறாள். இம்முறை அவன் கட்டிளங்காளை. அவளோ காண்பவர் காதலிக்கும் கன்னியாக்குமரி. அவனும் மாறவில்லை, அவளும் மாறவில்லை. அவளது பொய்களும் மாறவேயில்லை. வேற்றுக்கிரவாசிகள் குறித்து இம்முறை அதிகம் பேசுகிறாள். தான் பூமியைச் சார்ந்தவள் அல்ல என்று அடித்துப் பேசுகிறாள். அவனுக்கு நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. காதலில் விழுந்தவன் பகுத்தறிவையெல்லாம் சேடு கடையில் அடமானம் வைக்கவேண்டியதுதான்.

அவள் தவிர்க்க தவிர்க்க, இவன் தவிக்கிறான். அவள் மீதான தன் காதலை ஒவ்வொரு நொடியிலும் வெளிப்படுத்துகிறான். காதல் தேவன் ஆசிர்வதித்த ஒரு காலைப்பொழுதில் அவள் உணர்ச்சிமேலிட அவன் உதட்டோடு, தன் உதட்டைப் பதிக்கிறாள். மறுநாளே அவன் மீண்டும் காய்ச்சலில் விழ, மீண்டும் அவள், அவன் வாழ்க்கையில் இருந்து காற்றைப் போல காணாமல் போகிறாள்.

எட்டு ஆண்டுகள் கழிந்தநிலையில் அவனே எதிர்பாராத நொடியில் அவள் மீண்டும் அவனை காண்கிறாள். இம்முறை, அவளுடனான அவனது தூரத்தை இராணுவக் கட்டுப்பாட்டோடு வலியுறுத்துகிறாள். முந்தைய முறைகள் போலல்லாது, அவனிடம் சொல்லிவிட்டே விலகுகிறாள்.

இவன் நெருங்க, நெருங்க அவள் ஏன் விலகிக்கொண்டே செல்கிறாள் என்பதற்கு ஒரு தமிழ்சினிமாத்தன ட்விஸ்ட் வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் இணைகிறார்களா என்பது காதல் கோட்டை பாணியிலான பரபரப்புக் காட்சிகளின் ஊடாக சொல்லப்படுகிறது. காதல் விஷயத்தில் தமிழன், கொரியன் வேறுபாடின்றி உலகில் அனைவருமே முட்டாப்பயல்கள் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் காட்சிகள் அவை. ஷங்கர் படப்பாணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஐந்து நிமிட பிளாஷ்பேக் ஒன்றும் கச்சிதம். கமர்சியல் கலவை கலக்கலாக காக்டெயிலப்பட்ட காவியம்.

’பிட்டு’களுக்கு ஏராளமான வாய்ப்புகள். கொரியப்படமாக இருந்தும் ஒரு ‘க்ளிவேஜ்’ கூட காட்டாமல் படத்தை இயக்கியிருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியம் பளிச்சிடுகிறது. நம்மூர் நாளைய ஷங்கர்கள் உருவ வாகாக ஏகப்பட்ட சீன்கள், குறிப்பாக வசனங்கள்.

படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் உண்மையிலேயே ஜோடி என்பதால், நம்மூர் சூர்யா-ஜோதிகா, ’காக்க காக்க’ படத்தில் வெளிப்படுத்திய நெருக்கமான காதல் கெமிஸ்ட்ரியை இப்படத்திலும் காணமுடிகிறது. இறுதிக்காட்சியில் காதலை வெறுப்பவர்களையும் கண்ணீர்விடச் செய்யும் வசனங்கள். காதல் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கிறது.

பனிபொழியும் நடு இரவில், அவளை அவன் அணைத்தவாறே பேசுகிறான்.

“குளிராக இருக்கிறதா?”

“நீ அணைத்துக் கொண்டிருப்பதால் இதமான சூட்டை உணர்கிறேன். உனக்கு?”

“உன்னை அணைத்துக் கொண்டிருப்பதால் கனன்று கொண்டிருக்கும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதாய் உணர்கிறேன்”

காதல், சூடான வெப்பமாய் இருவருக்குள்ளும் பரவுகிறது. இச்சூழலிலேயே பரபரப்பான இறுதிக்காட்சியும் தொடங்குகிறது. அவளைத் தொட்ட போதெல்லாம் அவனுக்குப் பிரச்சினை. இம்முறை?


படம் : லவ் ஃபோபியா
மொழி : கொரியன்
இயக்குனர் : Kang Ji-Eun
படம் வெளியான ஆண்டு : 2006