4 பிப்ரவரி, 2014

நேர்மையான பெண்மொழி

“நாப்கின் வாங்கவும் பணம் இன்றி நாதியற்றுப் போன நாட்களில்... நானும் பேசாம ஆம்பளப் புள்ளையா பொறந்திருக்கலாம் என நினைத்து அழுதிருக்கிறேன்... என் உள்ளாடைக் கிழிசலைப் போலவே, என் அப்பாவைப் பற்றிய ரகசியமும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது”

இந்த வரிகளை வாசித்து கடக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிடித்தது. ஓரிரவு தூக்கம் சிந்தனையிலேயே சிதறியது. ‘ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்’ என்பதெல்லாம் அலங்காரத்துக்கு சொன்னது அல்ல. அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் என்று எந்தப் பெண்ணைப் பற்றியுமே எந்த ஆணுக்கும் எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் நம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித காலத்தை குடும்பம், பள்ளி, கல்லூரி, பணியிடம், வெளியிடம் என்று பெண்களோடுதான் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் பெண்ணை பற்றி நமக்கு –அதாவது ஆண்களுக்கு- என்ன மாதிரியான புரிதல் இருக்கிறது?

தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ ஓரளவுக்கு தெளிவு கொடுக்கிறது. மனரீதியாக தானே தன்னை பெண்ணாக உணர்ந்தால்தான் அப்படிப்பட்ட ஒரு அற்புத நூலை வரலாறு, உளவியல், சமூகம் என்று அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதியிருக்க முடியும்.

அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, சித்தி, அத்தை என்று பிறந்ததிலிருந்தே நிறைய பெண்களின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போதும் என் வீட்டில் ஏழு பெண்கள், இரண்டே இரண்டு ஆண்கள்தான். பெட்டிகோட், நைட்டி, புடவை, பூ, குங்குமம், சாந்து, பொட்டு, சீப்பு, லிப்ஸ்டிக் முதலான மேக்கப் சாதனங்கள் என்று எப்போதும் என் வீட்டில் பெண்வாசனைதான் வீசிக்கொண்டிருக்கும். ஏராளமான அண்ணிகள் (சட்டென்று எண்ணிக்கையே சொல்லமுடியாத அளவுக்கு). கடந்த இருபத்தைந்து வருடங்களாக சீரான இடைவெளியில் அவ்வப்போது எங்கள் குடும்பத்துக்கு ஒரு வெளி பெண் வாழ வந்துக்கொண்டே இருக்கிறார். மொத்தமாக இவர்கள் அத்தனை பேரிடமும் சேர்த்து நான் இதுவரை நூறு வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். வெளி பெண்களிடம், சக மாணவிகளிடமெல்லாம் எப்படி பழக வேண்டும், பேசவேண்டும் என்றெல்லாம் கண்டிப்பான கட்டுப்பெட்டித்தனமான அறிவுரைகளோடு வளர்ந்திருக்கிறேன். வயதில் சிறிய பெண்களாக இருந்தாலும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. நேருக்கு நேராக கண்களை பார்த்து மட்டுமே பேசவேண்டும், தேவையற்ற அரட்டை கூடாது மாதிரி ஏகப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும். சிறுவயதில் கூட கல்லாங்கோலோ, தாயக்கட்டையோ அல்லது வேறு விளையாட்டோ விளையாடிக் கொண்டிருக்கும் அக்காக்களை குறிப்பிட்ட சில நாட்களில் தொட்டுப் பேசக்கூடாது என்பார்கள். அப்படி தெரியாமல் தொட்டுவிட்டால் உடனே போய் குளிக்க வேண்டும். ஏன் என்று கேட்டால் பல்லு மேலேயே நாலு போடுவார்கள். என்னை மாதிரிதான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஆண்களும். நகரங்களில் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பங்களில் வளர்ந்தவர்களின் பார்வை சற்று மாறுபட்டிருக்கலாம். இப்படியிருக்கையில் பெண்கள் குறித்து எங்களுக்கு என்ன exposure இருக்க முடியும்? மனைவியே கூட கணவனிடம் முழுமையாக தன்னுடைய பிரத்யேகப் பிரச்சினைகளை பேசுவது கிடையாது.

தங்கள் பிரச்சினைகளாக பெண்கள் இதுகாறும் எழுதியவை அவர்களது நிஜமான பிரச்சினைகளே அல்ல. அவர்களது உள்ளாடைக் கிழிசல் யாருக்கும் தெரியாததை போல, அவர்களும் அவர்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ஆணோ அவன் அன்று உள்ளாடை அணிய மறந்ததை கூட பெருமையாக நாலு பேரிடம் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டே சொல்கிறான். ஓரளவுக்கு நேர்மையான பெண்மொழி கடந்த கால் நூற்றாண்டுகளாக புதிய தலைமுறை பெண் படைப்பாளிகளிடமிருந்து தீவிரமான வீச்சில் வெளிப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் பலகீனமான குரலாக வெளிப்பட்டு, விரைவிலேயே அடக்கப்படும் நிலைதான் இருந்தது. அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பெண்ணியத்தை, ஆண்களும் சேர்ந்து ஆராதித்தார்கள். வழக்கமான முரணற்ற பாரதியார் பாட்டு வாதங்களும் பட்டிமன்றங்களும், கலகம் செய்ய வாய்ப்பில்லாத மேம்போக்கான எழுத்துகளும், பேச்சுகளுமாகதான் பெண்ணிய சடங்கு நம் மண்ணில் அரங்கேறியது. நம் பெண்கள் அவர்களுக்கு வசதியான மேக்ஸி, நைட்டி போன்ற ஆடைகளுக்கு மாறவே இருநூறு, முன்னூறு வருஷம் ஆகியிருக்கிறது. இன்றைய உடைப்பின் பெருமை தமிழக அளவில் திராவிட இயக்கங்களையும் (பெரியாரிய சிந்தனைகளின் நடைமுறையாக கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை அடிப்படையில்), தேசிய அளவில் பொதுவுடைமை இயக்கங்களையுமே (இண்டு இடுக்கு விடாத தீவிரப் பிரச்சாரம்) சாரும்.
இச்சூழலில்தான் சுமதிஸ்ரீ எழுதியிருக்கும் ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளரான இவர் பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பல களங்களில் செயல்படுகிறார். சினிமாவிலும் பாட்டு எழுதியிருக்கிறாராம். காந்திய மக்கள் இயக்கத்தில் மாநில அணி இலக்கியத்தலைவர்.

எங்கள் குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்கப் போகிறது என்றால் “மங்கம்மா (எங்கள் குலதெய்வத்தின் பெயர்) வந்து நல்லபடியா பொறக்கணுமுன்னு வேண்டிக்குங்கப்பா” என்றுதான் பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்றாற்போல பெரும்பாலும் எங்கள் அண்ணன், தம்பிகளுக்கு பிறந்ததெல்லாம் மங்கம்மாக்கள்தான். எனக்கும் இரண்டு மங்கம்மா பிறந்திருக்கிறார்கள். இதற்காக யாரும் விசனம் கூட பட்டதில்லை. பெண் குழந்தை பிறந்தால் மகாலட்சுமி பிறந்ததாக மகிழும் ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. கள்ளிப்பால் எல்லாம் எங்கள் ஊரில் நூற்றாண்டுகளாக கேள்விப்படாத சமாச்சாரம். இதற்கு நேரெதிரானது சுமதிஸ்ரீயின் கதை.

ஆண்குழந்தை பிறக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் இருந்த சுமதிஸ்ரீயின் அப்பா, இவர் பிறந்ததால் ஒருமாதிரி விரக்திநிலையில் இவரை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். துரதிருஷ்டமாக அடுத்து பிறந்ததும் மகள்தான். எதற்கெடுத்தாலும் அடி. முதல் ரேங்க் எடுக்காதற்காக. சோறு குழைந்ததற்காக. தோழியை வீட்டுக்கு அழைத்து வந்ததற்காக. கவிதை எழுதியதற்காக. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுமதியை அடிக்க வேண்டும் அவ்வளவுதான். வயசுக்கு வந்தால் அடிக்க மாட்டார்கள் என்று ஏதோ சினிமாவில் டயலாக் கேட்டுவிட்டு, சீக்கிரமாக வரணும் என்று கடவுளை பிரார்த்திக்குமளவுக்கு கொடுமை.

ஒன்பது வயதிலேயே ஒரு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். திரும்ப பிடித்துவந்து முன்பைவிட மோசமாக சித்திரவதை. ஓரளவுக்கு வளர்ந்தபிறகு ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “நான் இல்லன்னா, உன்னால இப்படி ஒருவேளை சோறு திங்கமுடியுமா?” என்று சொல்லில் நெருப்பை கொட்ட, முழுமையாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஸ்பான்ஸர் பிடித்து கல்லூரியில் சேர்ந்து, கட்டணம் கட்டாததால் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டு, சாப்பிட பணம் கட்டாதவர்கள் பட்டியல் என்று மெஸ் போர்டில் பெயர் எழுதி அவமானப்பட்டு, நல்ல சாப்பாடு சாப்பிட ஒரு விருந்துக்கு சென்று அங்கிருந்தவர்கள் கேலி கிண்டலால் அழுதுக்கொண்டே ஓடி, பிற்பாடு வேலைக்கு சேர்ந்த இடத்துக்கு எல்லாம் சொந்த அப்பாவால் தாறுமாறாக புகார் சொல்லப்பட்டு, காதலித்து மணந்த கணவனின் புகுந்த வீட்டிலும் அப்பாவே வந்து பிரச்சினையென்று பராசக்தி கல்யாணியைவிட வாழ்க்கையின் ஓரத்துக்கு அதிவேகத்தில் ஓடியிருக்கிறார் சுமதிஸ்ரீ. பிற்பாடு ஓர் ஐடியல் அப்பா எப்படியிருக்க வேண்டும் என்று சுமதிஸ்ரீ எழுதிய ‘தகப்பன்சாமி’ என்கிற கவிதை அவருக்கு பலரிடம் பாராட்டும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. ஆனால் அந்த கவிதையின் ஒரு சொல்லில்கூட அவரது சொந்த அப்பா இல்லை.

வாசிக்கும்போது நம்பமுடியாததாகவும், மிகையானதாகவும் தோன்றும். ஆனால் இதற்கெல்லாம் சாட்சியான மனிதர்கள் –குறிப்பாக சுமதியின் அப்பா- இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். நூலில் இடம்பெற்றிருக்கும் இந்த ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ மிகவும் அழுத்தமான, ஆழமான கட்டுரை. கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் பிரதிநிதியாக சுமதிஸ்ரீயின் வாழ்வியல் வாக்குமூலம். பச்சாதாபத்துக்காக சுயகழிவிரக்கம் தேடும் நோக்கிலான மிகைத்தன்மை இல்லாமல், இயல்பான பகிர்தலாக, நேருக்கு நேர் பேசும் நேரடி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பதிவு. சுமதிஸ்ரீ குறிப்பிடும் இச்சம்பவங்கள் கடந்த முப்பது வருடங்களுக்குள்ளாகதான் நடந்திருக்கிறது. ஏதோ குக்கிராமத்தில் பாமரக் குடும்பத்தில் நடந்த விஷயமுமில்லை. பட்டறிவும், பகுத்தறிவும் பெற்றவர்கள்கூட இப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று நம்புபவர்களும் நம்மூரில்தான் இருக்கிறார்கள். குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டதாலேயே தன்னுடைய ரத்தம் என்றும் பாராமல் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.

நூலின் மற்ற கட்டுரைகள் எல்லாமே the girl thing தான். பட்டுப்புடவை மீது மோகம், முதல் விமானப் பயணம், பள்ளி கல்லூரி கலாச்சார விழாக்களில் நடனம், வளைகாப்பு, சினிமாவில் பாடல் எழுதிய அனுபவம், தன்னுடைய குழந்தைக்கு கடிதம் என்று தான் கடந்துவந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

சுமதிஸ்ரீயின் எழுத்துகளில் வெளிப்படும் பெண்ணியம் முற்போக்கானது என்று சொல்ல மாட்டேன். நீயும் நானும் சமம்தானே, நீ தம் அடித்தால் நானும் அடிப்பேன், நீ தண்ணி அடித்தால் நானும் அடிப்பேன் என்கிற மாதிரி வகை அல்ல. பெண்ணடிமைத்தனத்தை ஒரு வடிவமாகவே அமைத்து வைத்திருக்கும் சமூக அமைப்பையே புரட்டி போடவேண்டும் என்கிற எண்ணங்கள் எதுவும் அவரது எழுத்தில் வெளிப்படுவதாகவும் தோன்றவில்லை. ஆனால் விதிக்கப்பட்ட சமூகத்தில் தன்னுடைய பங்கினை போராடி, சண்டை போட்டாவது வாங்கும் முனைப்பு அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது.

இந்நூலை வாசிக்கும் ஆண், பெண் குறித்த தன்னுடைய புரிதலை கொஞ்சம் மீளாய்வு செய்து அப்டேட் செய்துக்கொள்வான். பெண்கள் தங்களுடைய சக பயணியின் அனுபவங்களை வாசித்து, தங்களையும் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். சிந்தனையை கிளறும் சுவாரஸ்யமான, நேர்மையான எழுத்து. வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் சுமதிஸ்ரீ!
நூல் : என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்
எழுதியவர் : சுமதிஸ்ரீ
பக்கங்கள் : 96
விலை : ரூ.80
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600 002.
போன் : 044-42634283/84

29 ஜனவரி, 2014

நடுப்பக்கம்

‘ராணி’யைத் தவிர வேறெந்த பத்திரிகையும் தன்னை குடும்பப் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் குமுதம் நிஜமாகவே குடும்பப் பத்திரிகையாகதான் ஒரு காலத்தில் இருந்தது. எண்பதுகளின் குடும்பங்களை ‘குமுதம் குடும்பம்’ என்றே சொல்லலாம். குமுதம் வாங்காத குடும்பங்களே இல்லை என்ற நிலை. அட்டை டூ அட்டை பக்கா மிக்ஸர். லேசாக அரசியல். பல்சுவை அரசு பதில்கள். குழந்தைகளுக்கு ஆறு வித்தியாசங்கள். அவ்வப்போது சித்திரக் கதைகள். ஆன்மீக வாதிகளுக்கு பிரார்த்தனை க்ளப். இல்லத்தரசிகளுக்கு ஏராளமான சிறுகதைகள் மற்றும் தொடர்கதை. கன்னித்தீவு ரேஞ்சுக்கு எப்போதும் குமுதத்தில் ‘சாண்டில்யன்’. சினிமா நட்சத்திரங்களின் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி. கிசுகிசு. ‘லைட்ஸ் ஆன்’ வினோத் என்று எல்லாமே குமுதத்தில் இருக்கும்.

குறிப்பாக கதைகள். எல்லா genre (செக்ஸ் உட்பட) கதைகளும் வருமாறு இதழ் வடிவமைக்கப்படும். “நல்ல கதையை படிக்கும் வாசகன் அதை ‘நல்ல கதை’ என்று சொல்லக்கூடாது. ‘குமுதமான கதை’ என்று சொல்ல வேண்டும்” என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆணையிட்ட அளவுக்கு நிலைமை இருந்தது.

குமுதத்தில் எல்லாமே இருந்தாலும், அவர்களுக்கு ஒரு ‘சீக்ரட் வெப்பன்’ இருந்தது. ‘நடுப்பக்கம்’. குமுதத்தின் ‘இளமை இமேஜ்’ இந்த ஒரு பகுதியால்தான் கொடிகட்டிப் பறந்தது. எந்த ஒரு பத்திரிகையை வாங்கினாலும், அதில் முதலில் பார்க்க வேண்டிய பகுதி என்று ஒவ்வொரு வாசகருக்கும் ஏதோ ஒரு பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிலர் கார்ட்டூனை முதலில் பார்ப்பார்கள். தலையங்கம், தொடர்கதை, கடைசிப்பக்கம் என்று ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்துவமான ரசனை இருக்கும். சொல்லி வைத்தாற்போல குமுதம் வாசகர்கள் வாங்கியதுமே பிரித்துப் பார்ப்பது நடுப்பக்கத்தைதான். பெண்களும் கூட நடுப்பக்கத்தைதான் முதலில் பார்ப்பார்கள். நடுப்பக்க படத்துக்கு ஜாடிக்கேத்த மூடியாய் கச்சிதமாக எழுதப்பட்ட கமெண்டை படித்துவிட்டு, “நாசமாப் போறவன் இந்த குமுதம்காரன்” என்று வெளிப்படையாக திட்டுவார்கள். ஆனால் முகத்தில் கோபமோ, கடுகடுப்போ இருக்காது. நாணத்தால் முகம் சிவந்திருப்பார்கள். ஜெயப்ரதா ரேஞ்சுக்கு அழகாக இருந்த ரோகிணி அக்கா அம்மாதிரி முகம் சிவந்ததை நிறையமுறை பார்த்திருக்கிறேன்.

நான் குழந்தைப் பருவத்தில் குமுதத்தில் பொம்மை பார்க்க ஆரம்பித்து (பெரும்பாலும் சிலுக்கு, அனுராதா பொம்மைகள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்), ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்து வெகுவிரைவிலேயே –அதாவது எட்டு, ஒன்பது வயது வாக்கில்- நடுப்பக்கத்துக்கு வந்துவிட்டேன். அப்பா ஆன்மீகவாதியாக இருந்தாலும், முதலில் நடுப்பக்கத்தை தரிசித்துவிட்டுதான் ‘பிரார்த்தனை க்ளப்’புக்கே வருவார். தனக்கு போட்டியாக குடும்பத்தில் இன்னொருவனும் நடுப்பக்கத்தை ஆராதிப்பவனாக வளர்வது அவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த குமுதம் இதழில் நடுப்பக்கம் மட்டும் இல்லாமல் இருந்தது. தன்னுடைய அடையாளத்தை இழந்துநின்ற அந்த இதழ்களை வாசிக்கும் ஆர்வமே எனக்கு போய்விட்டது. ஆரம்பத்தில் குமுதமே நடுப்பக்கத்தை வாசகர்களின் பாசாங்கு கண்டனங்களுக்கு பயந்து நிறுத்திவிட்டதோ என்று நினைத்திருந்தேன். பிற்பாடு கால்குலேட் செய்து பார்த்ததில் பக்க எண் இடித்ததில், இது அப்பாவுடைய சதியென்று அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி உணர்ந்துகொண்டேன். அதனாலென்ன அக்கம் பக்கம் வீட்டு இதழ்களுக்குப் போய் குமுதத்தின் நடுப்பக்கத்தை வாசித்து, என் இலக்கிய அறிவு நாளொரு ‘மேனி’யும், பொழுதொரு நடிகையுமாக வளர ஆரம்பித்தது.

இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த ‘நடுப்பக்கம்’ எப்போதிலிருந்து குமுதத்தில் காணாமல் போனது என்று சரியாக நினைவில்லை. அந்த ‘சேவை’யை குமுதம் நிறுத்தியிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலை. இதனால் இளைஞர்களின் எழுச்சி தாமதப்பட்டு, புரட்சி தேவையில்லாமல் சில நூற்றாண்டுகள் தள்ளிபோடப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை. எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி?

இந்த வார குமுதம் நடுப்பக்கத்தை பார்த்தேன். என் மகள் தமிழ்மொழி போட்டோவை போட்டிருக்கிறார்கள். இப்படியே போனால் இன்னும் கொஞ்சநாளில் குமுதம், ‘பூந்தளிர்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘ரத்னபாலா’, ‘அம்புலிமாமா’, 'பாலர் மலர்’ ரேஞ்சுக்கு குழந்தைகள் இதழாக பரிணமித்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் என்னை ஆட்டிப் படைக்கிறது.

27 ஜனவரி, 2014

எக்ஸ்பிரஸ் வேக புத்தகம்

1992. மார்ச் மாத தொடக்கத்தில் தினத்தந்தியில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ரஜினி ஸ்டில்லோடு கவிதாலயாவின் அண்ணாமலை படம் பற்றிய அறிவிப்பு. இயக்கம் வசந்த்.

சல்மான்கான் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மார்ச் 9 அன்று சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. அங்கே காத்திருந்த கவிதாலயா மேனேஜர், நேராக அவரை பாலச்சந்தரிடம் அழைத்துச் செல்கிறார்.

“வசந்த் விலகிட்டான். அண்ணாமலையை நீ பண்ணு” பாலச்சந்தர் சொன்னபோது சுரேஷ்கிருஷ்ணாவால் நம்பவே முடியவில்லை. கையை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார். ரஜினி ரசிகராக இருந்தாலும் முன்பாக அவர் இரண்டு கமல் படங்களைதான் இயக்கியிருந்தார். தன்னை ஏன் எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

“ஜூன் ரிலீஸ்னு ப்ளான் பண்ணிட்டோம். தனிப்பட்ட காரணங்களாலே வசந்த் விலகிட்டான். கவிதாலயாவோட மானம் காப்பாத்தப் படணும். நாளை மறுநாள் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. போயஸ் கார்டன் போய் ரஜினியை பார்த்து பேசிடு”

தானாக வந்து பொறியில் மாட்டிக்கொண்டது அப்போதுதான் அவருக்கு புலப்படுகிறது. சூப்பர் ஸ்டாரை முதன்முதலாக இயக்கப் போகிறோம். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கியாக வேண்டும். எதையும் பேசவிடாமல் நூற்றி ஒன்பது ரூபாய் அட்வான்ஸை கையில் திணித்துவிட்டார் குருநாதர் கே.பி. அவரிடம் பதினாலு படங்கள் வேலை செய்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா.

“என்னாலே முடியும் சார். நான் செய்யறேன்” என்று தன்னம்பிக்கையோடு சொல்லிவிட்டு, ரஜினியை காண கிளம்பினார்.

இது அண்ணாமலையின் கதை மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சாதனை சிகரமான ‘பாட்ஷா’வுக்கும் ‘அ’ன்னா போடப்பட்டது இங்கேதான். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாத உயரத்தில் இருக்கும் நடிகர் ஒருவரை, கிட்டத்தில் பார்த்து பேசி அவரை புரிந்துகொண்டு அவர் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதை பாட்ஷாவின் திரைக்கதை வேகத்தில் எழுதியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரோடு மூத்தப் பத்திரிகையாளர் மாலதி ரங்கராஜனும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் மு.மாறனின் தமிழாக்கத்தில் ‘பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.

மூன்று மாத கால குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் அண்ணாமலையின் தரம் என்னவென்பதை இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் இன்றும் உணரமுடிகிறது. நம்மை இன்றும் வசீகரிக்கும் பல காட்சிகளின் பின்னணியை விலாவரியாக விவரித்திருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

குறிப்பாக அண்ணாமலையின் ‘கடவுளே கடவுளே’ பாம்பு காட்சி. ரஜினியின் மீது ஏறிய பாம்புக்கு வாய் தைக்கப்படவில்லையாம். இது படப்பிடிப்பில் ரஜினி, சுரேஷ்கிருஷ்ணா யாருக்குமே தெரியாது. பாம்பை கொண்டுவந்தவரின் கவனக்குறைவால் இது நேர்ந்திருக்கிறது.

சரத்பாபுவிடமும், ராதாரவியிடமும் சவால் விட்டு தொடை தட்டும் காட்சிக்கு வித்தியாசமான டிராலிஷாட் அமைத்திருந்தார். பொதுவாக ட்ராலி நேர்க்கோட்டிலோ அல்லது ரவுண்டிலோ டிராவல் செய்யும். மாறாக இக்காட்சிக்கு முக்கோண வடிவில் ஏற்பாடு செய்திருந்தார் சுரேஷ்கிருஷ்ணா. ரஜினிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி இது எப்படி திரையில் தெரியப்போகிறது என்பது தெரியாது. ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் இணைந்து சாதனை படைத்த காட்சி இது. கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பல படிகள் நாம் முன்னேறிவிட்டாலும் இன்றும் இந்த காட்சி தரும் அனுபவம் அலாதியானது.

அண்ணாமலை தயாரானபோதே சுரேஷ்கிருஷ்ணாவோடு அடுத்தும் படம் செய்யவேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். அதுதான் ‘பாட்ஷா’. அவர் சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துவிட்டிருக்கிறது. ஆனால் அதிரடியான அண்ணாமலையை செய்துவிட்டு, அதற்கடுத்து அதைவிட அதிரடியான ‘பாட்ஷா’ என்று இருவரின் கூட்டணியில் வந்தால் சரியாக இருக்காது என்று ரஜினி நினைக்கிறார். dilute செய்வதற்காக ஒரு படம் நாம பண்ணலாம் என்று காமெடி சப்ஜெக்டாக வீராவை கொண்டுவருகிறார். தன்னுடைய படங்கள் என்னமாதிரி வரிசையில் அமையவேண்டும் என்று ரஜினி மெனக்கெட்டிருக்கிறார்.

அண்ணாமலை மாதிரியில்லாமல் வீரா செய்யும்போது ரஜினியோடு சில கருத்துவேறுபாடுகள் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு தோன்றுகிறது. அடிப்படையில் அவருக்கு கதையே பிடிக்கவில்லை. தெலுங்கு ‘அல்லரி மொகுடு’வை தமிழுக்கு கொண்டுவந்தால் சரியாக வராது என்று நினைக்கிறார். ரஜினிக்கு அந்த ஸ்க்ரிப்டில் முழு நம்பிக்கை இருந்தது. இளையராஜா முதலில் போட்ட ட்யூன்களில் ஏதோ குறைகிறது என்பதில் தொடங்கி, பாடல் காட்சிகளுக்கு யோசித்த ஐடியா வரை சுரேஷ்கிருஷ்ணாவுக்கு நிறைய சங்கடங்கள். அதையெல்லாம் எப்படி ரஜினியின் உதவியோடு தாண்டி வெற்றிப்படமாக எடுத்தார் என்பதை எந்த ‘சென்சாரும்’ இல்லாமல், திறந்த புத்தகமாய் எழுதியிருக்கிறார்.

‘பாட்ஷா’ எடுத்தபோது, சூப்பர் ஸ்டாரை கம்பத்தில் வைத்து அடிக்கும் காட்சிக்கு தயாரிப்பாளர் ஆர்.எம்.வீ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினியை வைத்துதான் இந்தப் பிரச்சினையையும் இயக்குனர் கன்வின்ஸ் செய்திருக்கிறார். படம் எடுக்கும்போதே ரஜினிக்கும், சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் தெரிந்துவிட்டது. இதுதான் தங்கள் வாழ்க்கையின் ‘மாஸ்டர் பீஸ்’ என்று. பாட்ஷா தயாரிப்பில் இருந்தபோது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருவரும் ‘பாட்ஷா’வாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

பல சிரமங்களை தாண்டி படம் தயார். அன்று மாலை ஆர்.எம்.வீ பார்க்க இருக்கிறார். அதற்கு முன்பாக காலையில் ரஜினி பார்க்கிறார். இரண்டாம் பாதி சரியாக வரவில்லை என்று ரஜினிக்கு தோன்றுகிறது. கையைப் பிசைந்துக் கொண்டிருந்தவருக்கு கை கொடுத்தார் சுரேஷ்கிருஷ்ணா. அவசர அவசரமாக இரண்டாம் பாதியில் பல காட்சிகளை வெட்டி, சில எஃபெக்ட்டுகளை சேர்த்து ஆர்.எம்.வீ.க்கு போட்டு காட்டுகிறார். எடிட்டிங் டேபிளில் தயாரான படம் பாட்ஷா என்கிறார் அதன் இயக்குனர். புத்தகத்தின் க்ளைமேக்ஸான இந்த பகுதி பாட்ஷாவின் க்ளைமேக்ஸுக்கு நிகரான பரபரப்பு கொண்டது.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னுடைய காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இயக்குனரில் தொடங்கி மேக்கப் அசிஸ்டண்டுகள், லைட்டிங் பாய்கள் அனைவரோடும் பேசி தயாராகி நடிக்கும் ரஜினியின் பண்பினை பல பக்கங்களில் விவரித்திருக்கிறார். ரஜினி ஓய்வுக்கு கேரவன் பயன்படுத்துவதில்லையாம். காட்சி இடைவேளைகளில் ஏதாவது பெஞ்சில் படுத்தபடியே, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணியை போட்டு (வெளிச்சம் பாதிக்காமல் இருக்க) அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு மனதுக்குள்ளாகவே ரிகர்சல் பார்ப்பாராம். ரஜினியின் ஒர்க்ஸ்டைல் என்னவென்பதை அக்குவேறு ஆணிவேராக அலசியிருக்கிறார்.

பொதுவாக ரஜினியை பற்றி மக்களிடம் இப்படியொரு எண்ணம் இருக்கிறது. அவர் நடிப்பைத் தவிர்த்து வேறெதிலும் ஆர்வம் காட்ட மாட்டார். மாறாக கமல் ஒரு படத்தின் அத்தனை நிலைகளிலும் உழைப்பார் என்று. சுரேஷ்கிருஷ்ணாவின் இந்த புத்தகம் அதற்கு நேரெதிரான பிம்பத்தை உருவாக்குகிறது. படத்தின் ஒன்லைனரில் தொடங்கி பாடல்கள், இசை, காட்சிகள், வசனங்கள் என்று அனைத்துக்குமே ரஜினி மெனக்கெடுகிறார். படப்பிடிப்பில் காட்சியின் தாக்கத்தை மனதில் கொண்டு இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஐடியாவும் கொடுப்பதுண்டு. கதைக்கு மாறாக காட்சிகள் எடுக்கப்பட்டால் அது ஏன், எதற்கென்று கேட்டு தனக்கு திருப்தி தராவிட்டால் அதுகுறித்த ஆட்சேபணைகளையும் தெரிவிப்பார். ஷூட்டிங் தாமதப்பட்டு தயாரிப்பாளருக்கு பணநஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இதனால் பகலில் பாடல் காட்சிகள், இரவில் சண்டைக் காட்சிகள் என்று இருபத்து நான்கு மணி நேரம் உழைக்கவும் அவர் எப்போதும் தயாராகதான் இருந்திருக்கிறார்.

நூலின் பலவீனம் அதன் தலைப்புதான். மூன்று படங்களில் ரஜினியுடனான சுரேஷ்கிருஷ்ணாவின் அனுபவங்கள்தான் இப்புத்தகம். ஆனால் பாட்ஷா குறித்து மட்டுமே என்கிற மனோபாவத்துடன் தான் நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். “எப்படா பாட்ஷா வரும்” என்று ஆவலாக பக்கங்களை புரட்ட புரட்ட அண்ணாமலையும், வீராவும் சலிக்கிறார்கள். நூற்றி எண்பது பக்கங்கள் தாண்டியபிறகுதான் பாட்ஷா வருகிறார்.

தன்னோடு பணியாற்றிய ஒரு நடிகரை குறித்து இம்மாதிரி ஓர் இயக்குனர் புத்தகம் எழுதுவது அற்புதமான விஷயம். முன்பு தமிழில் இருந்த இந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. உலகம் சுற்றும் வாலிபன் எப்படி உருவானது என்று எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் இயக்குனர்கள் சிலர் (ப.நீலகண்டன் மாதிரியானவர்கள்) அவரைப் பற்றி பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். சிவாஜி பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது (ஆரூர்தாஸ் எழுதிய புத்தகங்கள் முக்கியமானவை). சுரேஷ்கிருஷ்ணா மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இதேபோல பேசும்படம், அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் படங்களையொட்டி கமலைப்பற்றி சிங்கீதம் எழுதினால் நன்றாக இருக்கும். கமலே எழுதினால் அது இலக்கியமாகிவிடும், வாசிக்க சகிக்காது.

பாட்ஷாவும் நானும் : புனைவுக்கு நிகரான சாகஸம்!


நூல் : பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்
எழுதியவர்கள் : சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன்
பக்கங்கள் : 264
விலை : ரூ.125
வெளியீடு : வெஸ்ட்லேண்ட் லிமிடெட்
இணையத்தில் வாங்க : டிஸ்கவரி புக் பேலஸ் இணையத்தளம்

22 ஜனவரி, 2014

அதிகாரத்துக்கு அலாரம்!

‘ஆம் ஆத்மி’ மீது இப்போது வரை எனக்கு பெரிய நம்பிக்கை எதுவும் வந்துவிடவில்லை. அன்னாஹசாரே அளவுக்கு இல்லையென்றாலும் கேஜ்ரிவாலும் எனக்கு சொல்லிக்கொள்ளக் கூடியவகையில் எண்டெர்டெயினராகதான் தெரிகிறார். அதிலும் தினகரனில் கேஜ்ரிவால் குறித்த செய்திகளை போடும்போதெல்லாம் குளிருக்கு அவர் தலைக்கு மப்ளர் சுற்றிய படத்தை மட்டுமே பயன்படுத்துவதை பார்க்கும்போதெல்லாம் குபீர் சிரிப்பு வருகிறது.

ஆனால், கேஜ்ரிவாலை இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் நம்புகிறார்கள். வேறு வழியில்லாமல் ‘நமோ’ கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது குல்லாவுக்கு சலாம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். கேஜ்ரிவாலின் படத்தை அட்டையில் போட்டால் பத்திரிகை விற்கிறது. இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை.

ஆனால், கேஜ்ரிவால் டில்லியில் போலிசாருக்கு எதிராக நடத்திய ‘தர்ணா’ அவர்மீது எனக்கு பெரிய மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இராணுவமும், காவல்துறையும் இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டின் அடிப்படைப் பண்புக்கு சவால் விடும் அதிகார கூலிகளாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது காவல்துறையின் அராஜக நடவடிக்கைகளை எதிர்கொண்ட கட்சிகள் கூட, அதிகாரத்துக்கு வந்ததுமே அத்துறையின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமலோ, அல்லது மேலும் கூடுதலாக ஆட்டம் போடவே அனுமதிக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. எடுத்துக்காட்டுக்கு திமுகவை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே காவல்துறையால் படுமோசமாக வேட்டையாடப்பட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்து திமுகவினர்தான். இந்தியெதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம், ஜெயலலிதாவின் 91-96, 2001-06 காலக்கட்டங்களில் சராசரி திமுககாரனில் தொடங்கி திமுக தலைவர் வரை மிக மோசமாக மனிதநேயம் சற்றுமின்றி தமிழ்நாடு காவல்துறையால் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஐந்து முறை ஆட்சிக்கு வந்த கலைஞரே கூட இத்துறைக்கு கடிவாளம் போடநினைத்ததில்லை என்பதுதான் அரசியல்முரண்.

அன்னா ஹசாரேவின் போராட்டங்களின் போது காவல்துறையின் அடக்குமுறைகளை நேரடியாக சந்தித்தவர் கேஜ்ரிவால். அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தின் போதும் இத்துறை எப்படிப்பட்ட அதிகாரபோதையில் இயங்குகிறது என்பதை நேரடியாகவே அறிந்திருப்பார்.

தொடர்கதையாகி விட்ட டெல்லியின் பாலியல் குற்றங்களை தடுக்கத் தவறியதாக டெல்லி காவல்துறையை எண்ணுகிறார். சட்ட அமைச்சரே களமிறங்கி சிலரை சுட்டிக் காட்டியும் டெல்லி காவல்துறை கையை கட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில், கேஜ்ரிவால் தன்னுடைய இமேஜை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தர்ணாவில் குதித்தது இந்திய சரித்திரத்தின் குறிப்பிடத்தக்க சம்பவமாக எண்ணத் தோன்றுகிறது. முதன்முறையாக ஓர் ஆட்சியாளர் இந்த அதிகாரப் பூனைகளுக்கு மணி கட்ட நினைக்கிறார். அதிகாரத்துக்கு எதிராக அலாரம் அடித்திருக்கிறார். அதிகார ருசி கண்டுவிட்ட காங்கிரஸும், பாஜகவும் பதறுவது இதனால்தான். மீடியாவும் சட்டென்று கேஜ்ரிவாலை விமர்சித்து தலையங்கங்களும், கிண்டலான செய்திகளும் எழுதிக் குவிக்கிறது.

கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை அறம், ஆட்சியியல், லொட்டு லொசுக்கு காரணங்களை காட்டி ஆயிரம் நொட்டு சொல்லலாம். விளம்பரத்துக்கு செய்கிறார் என்று சுலபமாக விமர்சித்துவிட்டு போகலாம். அதிகாரத்துக்கு வந்த ஒருவர் அதிகாரத்துக்கு எதிராக போராடுகிறார் என்கிறவகையில் இவ்விவகாரத்தில் கேஜ்ரிவாலை ஆதரிப்பதே சாமானிய மனிதர்களுக்கான நல்ல சாய்ஸ். இராணுவம், காவல்துறை போன்றவை ஆட்சிக்கு வருபவர்களுக்கு வாலாட்டும் வகையில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படவும், நேர்மையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும் படவேண்டும். ஜனநாயக நாட்டில் வசிக்கும் சராசரி குடிமகன் மிலிட்டரிக்காரரையும், போலிஸ்காரரையும் கண்டு அச்சப்படும் நிலை மாறவேண்டும். குறிப்பிட்ட இப்பிரச்சினை தொடர்பான கேஜ்ரிவாலின் போராட்டம் முழுவெற்றியை அடையாவிட்டாலும், பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே நாட்டுக்கு நல்லது.

20 ஜனவரி, 2014

ஜில்லா : பொது மன்னிப்பு

‘ஜில்லா’ பற்றிய முந்தைய பதிவு. இதை வாசித்துவிட்டு, இப்பதிவை வாசிப்பது நலம். இல்லாவிட்டால் close செய்துவிட்டு செல்வது அதைவிட நலம்.

இரவு வேளைகளில் மல்லிகைப்பூ வாசத்தை முகர்ந்துவிட்டால், சராசரித் தமிழன் காமவெறி மூடுக்கு ‘செட்’ ஆகிவிடுவான். அதைப்போலவே சினிமா ரசிகர்களுக்கு ‘ஃபெஸ்டிவல் மூட்’ என்று ஒன்றிருக்கிறது. தமிழில் இதை சரியாக புரிந்துக்கொண்ட நடிகர்கள் எம்.ஜி.ஆரும், ரஜினியும். இவர்களது பெரும்பாலான படங்கள் நூறு நாள், வெள்ளிவிழா கண்டது பொங்கல், முன்பு தமிழ்ப்புத்தாண்டாக இருந்த ஏப்ரல் 14 மற்றும் தீபாவளி தினங்களில் வெளியான திரைப்படங்களில்தான். கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாட தகுதியான படங்களாக பார்த்து இறக்குவது ஒரு கலை. அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் பெற்ற கமல்ஹாசனுக்கு இன்றுவரை கைவராத கலை. எம்.ஜி.ஆராகவும், ரஜினியாகவும் ஆக விரும்பும் இளைய தளபதி அவர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம். முன்பாக இதே பொங்கல் திருநாளில் திருப்பாச்சி, போக்கிரி என்று அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள் கூட அவருக்கு இந்த உள்ளொளி தரிசனத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பது அவலம்தான்.

ஒரு வழியாக ‘ஜில்லா’ பார்த்துவிட்டோம். முந்தைய ‘தலைவா’வை விட ஒரு மொக்கைப்படத்தை இளைய தளபதி கொடுத்துவிட முடியுமா என்று நாம் வியந்துக் கொண்டிருந்த வேளையில், அதைவிட சூப்பர் மொக்கையையே என்னால் தரமுடியுமென்று தன்னுடைய ‘கெத்’தை நிரூபித்து சாதனை புரிந்திருக்கிறார். முன்பு ‘ஆதி’யில் ஏற்பட்ட அதே விபத்துதான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ‘திருஷ்யம்’ கொடுத்த மோகன்லால் திருஷ்டி கழித்துக் கொண்டிருக்கிறார். ‘தளபதி’ ரேஞ்சு படமென்று கதை சொல்லி, இளைய தளபதியின் கேரியர் படகை கவிழ்த்துவிட்டார் இயக்குனர் நேசன். இந்த படம் ஏன் மொக்கை என்று விளக்குவதற்கு ஆயிரத்து இருநூறு பக்கங்கள் தேவைப்படும் என்பதால், இந்த மொக்கைப் பதிவையே வாசிக்கும் தைரியம் கொண்டவர்கள் ஒரு முறை ‘ஜில்லா’வை தரிசித்து தனிப்பட்ட தெளிவுக்கு வந்துவிடலாம்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. காஜல், இளைய தளபதியை நோக்கி சொல்கிறார். “உன் மூஞ்சியையே இப்போ கண்ணாடியில் பார்த்தால் உனக்கு பிடிக்காது”. அப்படியெனில் படம் பார்ப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமாரான ஒரு கதையை ஜில்லாவின் கதையென்று நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த கட்டுரையை வாசித்த லட்சக்கணக்கானவர்கள், “பரவாயில்லை மாதிரிதான் இருக்கும் போலயே” என்று முதல்நாளே போய் படம் பார்த்திருக்கிறார்கள். அவ்வாறு பார்த்து, அதன் காரணத்தால் மனம் பிறழ்ந்துப்போய் ஆயிரக்கணக்கானவர்கள் உளவியல் சிகிச்சை பெற்றுக்கொள்ள நாம் காரணமாகி விட்டோம். அதற்காக லக்கிலுக் ஆன்லைன் தளத்தை வாசிப்பவர்களிடம் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோருகிறோம். இனிமேல் மொக்கையா இருக்குமென்று நாம் யூகிக்கும் திரைப்படங்களுக்கு, படுமொக்கையான கதையையே முன்கூட்டி எழுதுகிறோம் என்று சத்தியப் பிரமாணம் செய்கிறோம்.

கடைசியாக, ஜில்லாவுக்கும் பிரஸ்தானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் யாரேனும் கையைப் பிடித்து இழுக்க நினைத்தால் ரெண்டு படத்தையும் பேக் டூ பேக்காக டிவிடியில் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்காக மீண்டும் மீண்டும் நானே தற்கொலை முயற்சியில் ஈடுபடவேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதில் நியாயமே இல்லை. நீங்களும் தற்கொலைக்கு முனையலாம். உங்களாலும் முடியுமென்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஒரு ரீமேக்கை ரீமேக் மாதிரி தெரியாமல் படம் எடுப்பதில் மட்டும் இயக்குனர் நேசன் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். ஜெயம் ராஜா இவரிடம் இந்த பாடத்தை மட்டும் டியூஷன் படிக்கலாம்.